Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 2009 இற்குப் பின்னான ஐந்து ஆண்டுகளில் உலகும் ஈழத் தமிழ்ச் சமூகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே 2009 இற்குப் பின்னான ஐந்து ஆண்டுகளில் உலகும் ஈழத் தமிழ்ச் சமூகம்

31 மே 2014

செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக் காலம் முழுவதும் அந்நியரால் அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமாணமோ மாறாது மொழியும் இனமும் காக்கப்பட்டே வரலாறு நகர்ந்து வந்துள்ளது. அவ்வாறே 2009 இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர் கொள்ளத் தலைப்பட்டனர். ஆனால் தமிழின அழிப்பு கேட்பாரின்றித் தொடர்கின்றது.

தமிழர்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கிய இலங்கை அரசு, அவர்களின் உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்திரித்து உலக அனுசரணையினைப் பெற்றது; ஈற்றில் பாரிய இனப்படுகொலையினை நிகழ்த்தி 150000 தமிழ் மக்களை 2 வருட காலத்தில் கொன்று விட்டு, அவர்களை நினைவு கூரத் தடை விதித்தது. இந்த அவமதிக்கும் காட்சியினை உலகம் 5 வருடங்களாகக் கண்டும் வாழாதிருக்கின்றது. இலங்கையின் வட கிழக்குப் பிரதேசத்தில் ஈழத் தமிழர் தமது பாரம்பரிய பூமியில் சுயாட்சி நிறுவ எடுத்து முயற்சிகளுக்கு சர்வதேச அனுசரணையுடன் முள்ளிவாய்க்கால் படுகொலையைப் புரிந்து தற்காலிக முற்றுப் புள்ளி வைத்தது பௌத்த சிங்கள அரசு.

தாம் செய்த அட்டூழியங்களினையும் அதர்மத்தினையும் ஏற்று உணராத அரசுடனோ அல்லது அவ்வரசு சார்ந்த இனத்துடனோ நல்லிணக்கம் என்பது சாத்தியமற்றது. அது மயானத்தில் நிலவும் மௌனத்திற்குச் சமமானது. இதனையே இலங்கை அரசு கடந்த காலங்களில் சிங்களவர்களின் யுத்த வெற்றி விழாவாக கொண்டாடியது. ஆனால் ஐந்தாவது வருடம் சமாதான வெற்றி விழாவாகக் கொண்டாகின்றது.

இன்று இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் இராணுவ அடக்கு முறை, பௌத்த மேலாதிக்கம், அரசியல் அடக்கு முறை, சிங்கள மயமாக்கல், நிர்வாக அடக்கு முறை என்பனவற்றினால் மிகவும் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்குக் கிழக்கில் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தின் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு இலங்கை சுதந்திரமடைந்த பின் சிங்களக் குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்பட்டு விட்டது. இதனைக் கல்லோயாத் திட்டத்தில் இருந்து அண்மைய மேய்ச்சல் நிலக் குடியேற்றங்கள் வளர அவதானிக்கலாம். அதே போல் வடமாகாணத்திலும் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் உயர் பாதுகாப்பு வலயம், இராணுவ பாதுகாப்புத் தேவை எனக் காரணம் கூறி பல பிரதேசங்கள் தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டுள்ளன. இவையாவும் தமிழர்களை வடகிழக்கிலிருந்து வேரோடு அகற்றும் நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியே.

வடக்குக்கிழக்கு பொது நிர்வாக சேவைகளும் இராணுவ புலானய்வு அதிகாரிகளால் அதாவது இளைப்பாறிய இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. வெளிப்படையான அரசியல் நடத்தக் கூடிய சூழல் வடகிழக்கில் இல்லை. ஒன்றில் இலங்கை அரசின் பின்புலத்தில் அரசியல் நடத்த வேண்டும். அன்றேல் இந்திய அரசின் பின்புலத்தில் அரசியல் நடத்த வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை தமிழ்மக்கள் தமிழ்த் தேசியத்தின் அரசியல் சக்தியாகக் கருதுகின்ற நிலை மாற்றமடையத் தொடங்கியுள்ளது!!!. அதில் உள்ள முக்கிய தலைவர்கள் தமிழர்களின் நலனினை அடகுவைத்து இலங்கையரசைப் பாதுகாக்கும் நம்பிக்கைத் துரோகிகளாக உள்ளமையும் மக்களுக்கு தெரியும். இவர்களைக் கால ஓட்டத்தின் திசையில் எதிர்கொள்ள மக்கள் மௌனம் காக்கின்றனர். துப்பாக்கியுடன் உள்ள எதிரியினை விட நயவஞ்சக அரசியல்வாதியின் நிழல் ஆபத்தானது என்ற நிலையிலேயே தமிழ் மக்கள் உள்ளனர்.

தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனில் இலங்கையில் நடைபெற்றது தமிழ் இனஅழிப்பு என்பதனை இந்தியப் பாராளுமன்றமும், ஐநாவும் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். தொடர்ச்சியான இனஅழிப்பிற்கு ஆளாகி வரும் தமிழ்ச்சமூகத்தினை எவ்வாறு மீட்டெடுக்கலாம் என்பது குறித்து மானிடத்தின் பால் கரிசனையுள்ளவர்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைப் பற்றி சிந்திக்கவேயில்லை.

தமிழரைப் பயங்கரவாதியாக்கும் அணுகு முறையினை இந்த உலகம் தவிர்க்க வேண்டும். சிங்கள மக்களும் தமிழின அழிவின் ஆழத்தினை உணர வேண்டும். கடல் கோள் வந்த போது என்னருகில் இருந்த சிங்களப் பெண் மருத்துவ நிபுணர் கூறினார் 'ஐயோ யாழ்ப்பாணம் முழுவதும் அழிந்தால் நல்லது. ஒரு பிரச்சினையும் இல்லை' என்று. இது 2004 இல். அதேபோல் 2014 இல் சிங்கள மருத்து நிபுணர் ஒருவர் என்னிடம் கூறினார் 'யப்பானில் அணுகுண்டு போட்டு அமைதி ஏற்பட்டது. அதேபோல் வன்னியில் எவ்வளவு மக்கள் அழிந்தாலும் காரியமில்லை எமக்கு அமைதி ஏற்பட்டு விட்டது' இவை சிங்கள மருத்துவ நிபுணர்களால் எமக்குக் கூறப்பட்டவை. எனவே சாமானிய சிங்கள மக்களின் மனநிலை எவ்வாறானது என்பதனை ஆராய வேண்டிய தேவை இல்லாமற் போகின்றது.

புலிகளை பயங்கரவாதிகளாகப் பார்க்கும் உலகம் சமாதானப் பேச்சு வார்தையில் அவர்களை முடக்கியே 2008-2009 இல் தமிழின அழிப்பினைச் செய்தது. இதன் தொடர்ச்சியாகவே வடகிழக்கில் சிங்கள மயமாதல்களும் பௌத்த விகாரைகள் அமைத்தலும் வரலாற்றுக் திரிபுகளும் தற்போது நிகழ்கின்றன.

மத்திய வங்கிக் குண்டு வெடிப்பினை உலகம் பாரிய பயங்கரவாதத் தாக்குதலாக கருதுகின்றது. ஆனால் அன்றைய காலத்தில் யாழ் குடாநாட்டில் மக்கள் மீது பாரிய இராணுவ நடவடிக்கைகள் நிகழ்ந்து பொதுமக்கள் மருத்துவ வசதிகள், தொடர்பாடல் வசதிகள் இல்லாத சூழலிலேயே இச்சம்பவம் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் அனுபவங்கள், தமிழருக்கு யாழ்குடா நாட்டில் ஏற்படாது இருக்க, மத்திய வங்கித் தாக்குதல் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. அன்றேல் முள்ளிவாய்க்கால் போன்று யாழ்குடாநாட்டிலும் இலட்சக்கணக்கான மக்கள் அன்று அழிக்கப்பட்டு இருப்பர்.

இன்று ஆயுத முனையில் எல்லாவற்றையும் செய்யலாம் என்ற மனோபலம் சிங்கள மக்களிடம் ஏற்பட்டு விட்டது. இவற்றிற்கு எதிராக கருத்துக் கூறுவதற்குத் தடையாகப் பாரிய இராணுவ அச்சுறுத்தல்கள் உள்ளன.

தமிழ்ப் பிரதேசத்தில் இராணுவ சிப்பாய்கள் செய்யும் அடாவடிகளுக்கு நீதி இல்லை. ஆனால் அவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து, காவல்துறை மீது கை வைக்கும் போது உடனடி மரண தண்டனை விதிக்கும் நிலைமையில் தற்போதைய சமாதானத்தின் வெற்றி உள்ளது.

பல இராணுவ வீரர்கள், மற்றும் இனவாதத்தினைத் தூண்டும் அரசியல் வாதிகள் மற்றும் பௌத்த பிக்குகள் மனநோயாளிகளாகவும், போதைப் பொருள் உபயோகிப்பவர்களாவும், சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இதனை இலங்கை மருத்துவ உலகமோ அல்லது மனித உரிமை மேம்பாட்டாளார்களோ கருத்தில் எடுக்கவில்லை. பயங்கரவாதம் அழிக்கபட்டு விட்டது என்றும் சமாதானம் ஏற்பட்டு விட்டது என்றும் மார்தட்டுகின்றனர். ஆனால் போதைப்பொருள் பாவனையும், பாதாள உலக நடவடிக்கைளும் உண்மைப் பயங்கரவாதமாக உருவெடுத்துள்ளது. விடுதலைப் புலிகளை அழிக்க ஒன்றைக்காலில் நின்ற பாரத அரசு, இன்று தனது தென்கோடியில் கண்ணிற்கு மையிட்டவாறு பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவலைக் கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

புதிய இந்திய அரசு, தமிழகத்தில் உள்ள சுமார் 2 இலட்சம் ஈழ அகதிகளை மீளக் குடியேற்றுவதிலும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல் படுத்தி மீளவும் இந்திய இராணுவத்தினை அனுப்புதிலும் கவனம் செலுத்தின் ஈழத் தமிழரின் பாதுகாப்பினை மாத்திரமின்றி இந்தியாவின் பிராந்திய வல்லரசு நிலையினையும் உறுதிப்படுத்தலாம். அவ்வாறு அமையின் தமிழர்கள் தம்மிடம் உள்ள ஏக்க நிலையினை துறப்பர்.

தற்போது நடைபெறும் சிங்களக் குடியிருப்புக்கள், நில அபகரிப்புக்கள், இராணுவ ஆதிக்கம் என்பனவற்றை எதிர்கொள்ள இந்திய அரசின் பாதுகாப்பு தமிழ் மக்களுக்கு அவசியமாக உள்ளது. ஏனெனில் பாதுகாப்பு காரணங்களைக் கூறியே இலங்கை அரசு சட்டம் முதல் நிர்வாகம் வரை தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு தடையாக உள்ளது.

முட்டாள்களிடம் இருந்து நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அதே போல காலம் கடந்த நீதி என்பது அநீதிக்குச் சமன். இதனை கடந்த 5 ஆண்டுகளில் முற்று முழுதாக ஈழத்தமிழர் அறிந்து விட்டனர்.

இன்று உலகம் தமிழின அழிப்பு நடைபெற்றமைக்கு பல்வேறு கணனித் தரவுகளை வைத்துள்ளது. அவற்றில் யுத்தம் நிகழ்ந்த முறை, பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த பாதுகாப்பு வலயங்கள், வைத்தியசாலைகள் மீது ஏறிகணை மற்றும் விமானக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்ட செய்மதிப் படங்கள், சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் அதிர்வுப் பதிவுகள், தமிழ் மக்களை அழிப்பதற்காகக் கடனாகவும் அன்பளிப்பாகவும் கொடுக்கப்பட்ட ஆயுத உபகரணங்கள், அவற்றினை செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகள், இராசதந்திர உதவிகள், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள், தமிழ் மக்கள் கொல்லப்பட்ட காட்சிகள், கைது, சித்திரவதை, பாலியல் கொடுமை இவை யாவற்றுக்கும் மேலாக இறந்தவர்களின் உண்மையான புள்ளி விபரங்கள் இவையாவும் சருவதேசத்திடம் உள்ளது. இவை இன அழிப்பினை சுட்டி நிற்கின்றன.

இவற்றிற்கும் மேலாக மூன்று இலட்சம் மக்களின் சுவாசப் பாதையில் இரசாயன நுண் உலோக பதார்த்தங்களின் தாக்கம் நிரந்தர ஆதாரமாகத் தேங்கி உள்ளது. மேலும் இவர்களின் குருதியில் இப்பதார்த்தங்களால் வாழ்தகவைக் குறைக்கும் நச்சு பதார்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனை Genocidal Factors எனலாம். இதனால் அவர்களின் உடலில் இயற்கையாகக் காணப்படும் Co enzyme Q இன் அளவு குறைவாகக் காணப்படும். இது இன அழிபிற்கு ஒரு உயிர் வாழும் ஆதாரமாகும்.

அடுத்து நாம் 2003 தொடக்கம் 2009 வரை பிறந்த குழந்தைகளில், வன்னியல் பாரிய வெடிப்புச் சத்தங்களால் மூளை நரம்புகளின் இயற்கையான பரம்பல் பாதிக்கப்பட்டு நிரந்தர மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளமையை அவதானித்துள்ளோம். இதனை நவீன மருத்துவ ஆய்வுமுறைகளால் நிரூபிக்கலாம். இதுவும் ஓர் உயிர் வாழும் மருத்துவ உதாரணமாகும். மேலும் முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பியவர்களின் உடலில் உள்ள எறிகனைச் சிதறல்கள், தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுவீச்சின் சிதறல்கள் என்பனவும் உயிர்வாழும் ஆதாரங்களாகும்(living genocidal bio makers). இவற்றைவிட ஏற்பட்ட உளத்தாக்கங்களும் சமூக உள மாற்றங்களும் தமிழ்ச் சமூகத்தை பாரிய சமூகப் பெறுமான வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது.

இராணுவ அடக்கு முறையின் மூலம் முழு இலங்கையையும் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தொடர்ந்து கட்டுப்படுத்த நினைக்கும் அரசுக்கு புலிகளின் மீள் உருவாக்கம் என்ற நாடகம் தேவையாக உள்ளது. இதனால் சிறையில் உள்ள அப்பாவித் தமிழ் இளைஞர்களும் அவர்களது உறவினர்களும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் அயோக்கியத்தனமான செயலாகும். எனவே மாபெரும் அழிவுகளை 2009 இல் சந்தித்த தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் அழிவுகளை ஏற்படுத்துவற்காக இந்த வக்கிரயுக்தி கையாளப்படுகின்றது.

இந்நிலையில் தமிழ் மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐநா அமைதிப்படையினையோ அலலது இந்தி படையினையோ உதவுமாறு கோர வேண்டும். இதற்று இராசதந்திர ரீதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலமே இலங்கையில் நீடித்த சமாதானத்தினை உறுதிப்படுத்தலாம்.

இன்று பூகோளமயமட்ட அரசு (Global Government) மற்றும் இலத்திரனியல் அரசு (e-government) போன்ற மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழலே உள்ளது. அந்நிலையில் தமிழர்கள் கல்வியறிவிலும் தொழில் நுட்ப அறிவிலும் சிறந்த இடத்தினை பெற முயற்சிக்க வேண்டும்.

- சமாதானத்திற்கான தமிழ் மருத்துவர்கள்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/107639/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.