Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கொட்டியான்னா சுட்டுத்தள்ளு" - தமிழர்களின் சோகச்சுவடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கொட்டியான்னா சுட்டுத்தள்ளு" - இலங்கைத் தமிழர்களின் சோகச்சுவடுகள்

‘‘சிங்கள பாஷையில ‘கொட்டியான்’னா புலின்னு அர்த்தம். சிங்களர்களுக்குத் தமிழன்னா குழந்தையானாலும், கர்ப்பிணியானாலும், அரசாங்க உத்தியோகஸ்தனானாலும் கொட்டியான்தான். ராத்திரியில வண்டியில நெம்பர் பிளேட்டைக் கழட்டி வச்சுட்டு, முகத்தைத் துணியால மறைச்சுக்கிட்டு வருவாங்க. அப்புறம் சடசட சப்தம்தான். துப்பாக்கிக் குண்டுகளுக்குச் சாக வேண்டியதுதான். அதில் மிஞ்சினதுதான் இந்த உசிருகள்!’’ _ இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வரும் இடங்களிலெல்லாம் புதுப்புது சோகச் சுவடுகளைப் பதிய வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி மண்டபம் முகாமிலிருந்து அனுப்பப்பட்ட 380 அகதிகள், கடந்த சனியன்று அதிகாலை கோவைக்கு வந்து சேர்ந்தனர். ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரத்தெட்டு துயரங்கள்; பயங்கர அனுபவங்கள். அதில் ஓர் இளைஞர் குமுறலுடன் வெளிப்படுத்தியதுதான் மேற்சொன்ன வரிகள்.

திரிகோணமலை மலையிலிருந்து பெருமாள் கௌரிநாதன் வந்து 46 நாட்களாயிற்று. அப்பகுதியில் அனைத்து வீட்டு வாசல்களிலும் கடற்படை சிங்களவர்கள் வெறியாட்டம்தான் அதிகமாம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இரண்டிரண்டு பேர் நிற்கின்றனர். வெளியே எங்கே போவதானாலும் அவர்களிடம் சொல்லவேண்டும். திரும்ப வரும் நேரத்தையும் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்ன நேரத்திற்கு வரத் தவறினால், குடும்பத்தில் மீதியுள்ளவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. ஆகஸ்டு மாதம் முதல் தேதி இரவோடு இரவாகப் புறப்பட்டு, படகு மூலம் குடும்பத்தோடு இங்கே தப்பி வந்தவர்தான். மண்டபத்தில் தங்கின நாட்களில் சாப்பாட்டிற்கு எந்தவொரு பிரச்னையுமில்லையாம். ஆனால், அங்கே இடம்தான் போதவில்லையாம். வெறும் 3,000 குடும்பங்கள் குடியிருக்கும் பகுதியில் 10,000 குடும்பங்கள் இருந்தால் நிலைமை என்னத்துக்காகும்?

“சுனாமியிலிருந்து கூட நாங்கள் ஆறு மாதத்தில் மீண்டு வந்து விட்டோம். அமெரிக்காவிலிருந்து தொண்டு நிறுவனங்கள் வந்து எங்களுக்குப் பணமும் கொடுத்து, வீடுகளும் கட்டிக் கொடுத்தாங்க. அந்த வேலைய ஆறு மாசத்துலயே முடிச்சுட்டாங்க. அதுலதான் குடியுமிருந்தோம். அந்த அமெரிக்கத் தொண்டு நிறுவனங்கள், அடுத்ததா எங்களுக்குக் கடல் தொழிலுக்கு ஏற்ற வலை, படகுகள் எல்லாம் கொடுக்கறதாச் சொல்லி அதுவும் தயாராயிடுச்சு. அதுக்குள்ளேதான் யுத்தம் வந்துடுச்சு. அந்த வலை, படகுகளைக் கூட வாங்க முடியலை. இதுல கொடுமை என்னன்னா, அமெரிக்காவிலிருந்து வர்ற தொண்டு நிறுவன ஆட்களே, இந்த யுத்தத்தைப் பார்த்து அவங்க நாட்டுக்குத் திரும்பிப்போயிட்டாங்க. அதுல ஒரு அமெரிக்கப் பெண்ணு செத்தும் போச்சு. அதுக்கப்புறம் அங்கே எங்களுக்கென்ன பாதுகாப்பு இருக்கு? ‘‘திரிகோணமலையில் மட்டும் இன்னும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக வரத் தயார் நிலையில் உள்ளனர். அவர்களெல்லாம் மண்டபம் வந்தால், அந்த இடம் தாங்குமான்னு தெரியலை! கழிப்பிடம், குளியல் வசதி அறவே இல்லை’’ என்றார் பெருமாள் கௌரிநாதன்.

இவர்கள் வசிக்கும் திரிகோணமலை, சுனாமியாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பகுதி. “சுனாமியால் எங்களின் சொந்த பந்தங்கள் பாதிப்பேரைக் கடல் கொண்டு போய் விட்டது. மீதிப்பேர் இப்படி அகதிகளாய் வர வேண்டியிருக்கிறது. பேசாமல் கடலோடவே நாங்களும் போயிருக்கலாம்!’’ என்று புழுங்கினார் போனேலிங்கம் என்பவர்.

இவர் அங்குள்ள அரசுப் பாடசாலையில் அலுவலகப் பணியாளர். 12,000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாராம். இரண்டு குழந்தைகள். இப்போது தனது குழந்தைகளுடனும், நிறைமாத கர்ப்பிணி மனைவியுடனும் அகதியாகப் படகேறியிருக்கிறார். அவர் மனைவி சித்ராதேவி, “மண்டபம் முகாம்ல மாத்திரை மட்டும் கொடுத்தாங்க. தடுப்பு மருந்து (தடுப்பூசி) எதுவும் போடலை. இங்கேயாவது போடுவாங்களா?’’ என்று கேட்டது மனதுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.

இவர்களெல்லாம் மண்டபம் முகாமிலிருந்து கோவை வந்த பின்பு, வேறொரு அவலமும் அரங்கேறியது. இவர்கள் மண்டபம் முகாமிலிருந்து வெள்ளியன்று மாலை, ஆறு அரசுப் பேருந்துகளில் அனுப்பப்பட்டுள்ளனர். பேருந்துகள் கோவை நகரப் பகுதியில் உள்ள காமராஜபுரம் மாநகராட்சி திருமண மண்டபத்திற்குக் காலையிலேயே வந்து சேர்ந்து விட்டன. மண்டபத்தில் புறப்படும் போது, வழியில் சாப்பிடுவதற்காக அங்குள்ளவர்கள் பார்சல் சாப்பாடு கட்டிக் கொடுத்தனராம். அவையெல்லாம் கெட்டுப்போகவே, வெளியே எறிந்து விட்டனராம்.

இங்கே வந்த பின்போ, இவர்களின் உணவு விஷயத்திலும் சரி, குளியல் விஷயத்திலும் அதிகாரிகள் அக்கறையே செலுத்தவில்லை. குடிநீர் லாரியே மதியம் 2.00 மணிக்குத்தான் வந்தது. குழந்தைகள் பசி, பசி என்று அலற, அதிகாரிகள் இவர்களைக் கணக்கெடுப்பதிலும், அடையாள அட்டை வழங்குவதிலுமே குறியாய் இருந்தனர். அதைப்பார்த்து, இவர்களைப் பார்க்க வந்த பெரியார் தி.க காரர்களும், ம.தி.மு.க பிரமுகர்களும் தங்கள் சார்பாக சாப்பாடு வாங்கித்தர ஏற்பாடு செய்தனர். ஆனால், அதையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் பலரும் கொந்தளித்து விட்டனர். அதன் விளைவு? அவர்களுக்குக் கடைசியில் பிஸ்கட் மட்டும் வாங்கித்தர அனுமதி கிடைத்தது. மாலையில்தான் அவர்களுக்குச் சாப்பாடே தரப்பட்டிருக்கிறது.

கோவை வந்த அகதிகளில் 140 ஆண்கள், 132 பெண்கள், 54 ஆண், 54 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இன்னமும் வகை பிரிக்கப்பட்டு, பொள்ளாச்சி, உடுமலை, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் என வெவ்வேறு அகதிகள் முகாம்களுக்கு அனுப்பப்பட உள்ளனராம். இதையட்டியும் அகதிகளுக்குள் பல சோகக் குமைச்சல்கள்.

“மண்டப முகாம்லயும் இப்படித்தான் அவங்களாக லிஸ்ட் தயார் பண்ணி திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, கோவைன்னு ஒட்டினாங்க. அவங்க சொன்ன இடத்துக்குப் போக மறுக்கறவங்களை போலீஸ்ல புடிச்சுக் கொடுத்து, ‘ நீ விடுதலைப்புலியா? அவங்க உளவாளியா?’ன்னு மிரட்டின சம்பவமும் நடந்தது. அதனாலதான் நாங்கள், விருப்பமில்லாட்டியும் கூட அவங்க சொன்ன இடத்துக்குப் போறோம். இப்ப இங்கே வந்திருக்கோம். இனி அடுத்தது எங்கேயோ!’’ என்று ஒரு சிலர் நம்மிடமே நெஞ்சுருகச் சொன்னபோது, உண்மையிலேயே அதிர்ந்து போனோம்.

அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது மனிதாபிமானம் என்றால், அவர்களை அலைக்கழிக்காமல் இருப்பதும் மனிதாபிமானம்தானே! அரசு இதிலும் அக்கறை காட்ட வேண்டும்.

.

-குமுதம் ரிப்போர்ட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.