Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம் - சாந்தி சச்சிதானந்தம்

Featured Replies

sunrise_CI.jpg

 

கிராமப் பெண்கள் சிலருடனான ஒரு கூட்டத்தில் ஒரு தடவை நான் கலந்து கொண்டிருந்தபோது அங்கு கலந்துரையாடல் மிகக் கடினமாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அது ஓர் விதவைகள் சங்கம். அரசாங்கத்தின் மூலம் வாழ்வாதாரத்திற்கான பல உதவிகளை அங்கிருந்தவர்கள்  பெற்றிருந்தார்கள். ஆனாலும் வாழ்வாதாரத்திற்கான உதவிகள் தேவையென கிளிப்பிள்ளை போன்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். முன்பு கிடைத்த உதவிகளை அசட்டையாகக் கைவிட்டதுபோல் தோன்றியது. அவர்கள் மாற்று வழிகளைத் தேடுவதற்கான பல கருத்துக்களை நாம் மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தோம். அதற்கெல்லாம் உற்சாகமாகப் பதிலளிக்கின்ற நிலைமையில் கூட அவர்களிருக்கவில்லை. ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்கான பதிலைப் பெறுவதற்கு பல தடவைகள் சிறு சிறு கேள்விகளினால் நோண்ட வேண்டியிருந்தது. கடைசியில் ஏதோவொரு உணர்வு தோன்றவே 'நீங்கள் காலையில் சாப்பிட்டா வந்தீர்கள்?' என்று கேட்டேன். அங்கிருந்தவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் காலையுணவு உண்ணாமல் கூட்டத்திற்கு வந்திருந்தது தெரியவந்தது. இவர்களுடைய சோர்வுக்கும் அசட்டைத் தன்மைக்கும், அவர்கள் உண்கின்ற முறைகளுக்கும் இடையில் ஏதாவது தொடர்பிருக்கக் கூடுமோவென்கின்ற ஒளிவிளக்கு அப்பொழுதுதான் எனது மூளைக்குள் பற்றியெரிந்தது. அதன் பிறகு எங்கு போனாலும் மக்கள் சாப்பிடும் விதங்களையும் அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களையும் ஆராயத் தொடங்கினேன். நான் சேகரித்த தகவல்கள் எனது சமூகத்தின் எதிhகாலம் எப்படி ஆகப்போகின்றதோவென்கின்ற பெருங் கவலையை எனக்கு ஏற்படுத்தியது.

அனேகமான தாய்மார்கள் காலையுணவு உண்பதில்லை. காலைச் சாப்பாடு சமைப்பது மிக அரிதாகும். பிள்ளைகளுக்கு மட்டும் கடைக்குப் போய் பன், சீனி பன் போன்றவற்றை வாங்கிக்கொடுப்பார்கள். அவர்களுக்கு டிப்பிடிப் பக்கெட் வாங்கிக் கொடுத்து பாடசாலைக்கு அனுப்புகின்ற தாய்மார்களும் உண்டு. சோடாக்களும் கிராமப்புறங்களில் அதிகம் குடிக்கப்படும் பானங்களாகும். இம்மாதிரியான உணவுகளும் பானங்களும் சிறிய அளவில் உட்கொள்ளப்பட்டாலும் பசியைப் போக்குகின்றன, விலை ஒப்பீட்டில் குறைந்தன, ருசியானவை, சமைக்கும் வேலையைக் குறைக்கின்றன, அதிகளவு மாச்சத்தைத் தருவதனால் உடனடியாக உடலுக்குத் தேவைப்படும் சக்தியைக்கொடுத்து ஒரு உற்சாக உணர்வினை ஏற்படுத்துகின்றன போன்ற பல காரணிகள் இந்த வழக்கத்தில் தொழிற்படக் கண்டோம். 'சிவத்த அரிசிமாவில் பிட்டு அவித்தால் என்ட பிள்ளை தின்னாமல் வீட்டை விட்டுப் போய் விடுகின்றான்' என்கிறாள் ஒரு தாய். சில குடும்பங்கள் நாளொன்றுக்கு ஒரு முறை மட்டுமே சமைக்கின்றன. வைத்தியர்கள் பெண்கள் மத்தியில் அனேமியா மலிந்து விட்டது எனக் குழறுகின்றனர்.இம்மாதிரிப் பிரச்சினைகளை எல்லாம் மனதில் கொண்டு அவற்றை மேலும் விளங்கிக் கொள்ளும் முகமாக திருகோணமலை மூதூர் பிரிவில் மக்களின் உணவு மற்றும் போசாக்கு உட்கொள்ளும் அளவுகள் பற்றி ஒரு ஆய்வினைச் செய்தோம். உணவு சமைக்கும் மற்றும் உட்கொள்ளும் முறைகள் பற்றிய அறிவு, உணவினை வாங்குவதற்கு குடும்பத்திற்குள் இருக்கும் வளங்கள் இவையெல்லாம் ஆராயப்பட்டு அக்குடும்பங்களின் உணவு தொடர்பான ஸ்திர நிலை அறியப்பட்டது. இதன்படி மூதூர்ப் பிரிவில் 57வீதமான குடும்பங்களில் உணவுப் பாதுகாப்பு இல்லையென்கின்ற தகவல் எமக்குக் கிடைத்தது.

' உலகிலேயே மிகச் சிறந்த நஞ்சினை உருவாக்க வேண்டுமென்றால் எதை எதையெல்லாம் கருத்தில் கொள்வீர்கள்? அது சாப்பிடுபவர்களால் விரும்பி உண்ணப்படுவதாக இருக்க வேண்டும். ஒரு போதைப் பொருள் போல அதனை திருப்பித் திருப்பி உண்பதற்கு (யனனiஉவiஎந) ஆசையைக் கிளப்ப வேண்டும். நீண்ட காலத்தினூடாக சிறுகச் சிறுக கொல்ல வேண்டும்.. அப்படி யோசித்து ஒரு நஞ்சினை உருவாக்கினால் அதுதான் வெள்ளைச் சீனி வெள்ளைக் கோதுமை மாவாக இருக்கும்..' என்று கூறுகின்றார் ஒரு பிரபல உணவு நிபுணர். வெள்ளைக் கோதுமை மா  வெள்ளைச் சீனி ஏற்படுத்துகின்ற பாதிப்புக்களைப் பற்றி அறிவதற்கு இணையத் தளங்களைத் தட்டிப் பாருங்கள் தலை சுற்றிவிடும். மூட்டு வாதம், நீரிழிவு நோய், விழிப்படல சவ்வு வளர்ச்சி, எலும்பு பலவீனமாதல், இருதயக் கோளாறுகள் என இன்று நாங்கள் பொதுவாகக் கேள்விப்படுகின்ற சகல நோய்களுக்கும் இவையிரண்டுமே காரணமாவதைக் காணலாம். சகல உயிர்ச்சத்துக்களும் கொல்லப்பட்டு வெறும் காபோவைதரேட்டுப் பசையாக இவை இருப்பது மட்டுமன்றி அவற்றை வெள்ளை நிறமாகவும் மென்மையானதாகவும் மாற்றுவதற்காக சுத்திகரிக்கும்போது சேர்க்கப்படுகின்ற இரசாயனப் பதார்த்தங்களுமே இத்தீமையினை உருவாக்குகின்றன. இவற்றைச் சமிபாடடையச் செய்வதற்கே கல்சியம் முதலான பல உயிர்ச்சத்துக்களை எமது உடல் விரயம் செய்ய வேண்டியிருக்கின்றதாம். போதாக்குறைக்கு எமது உடலை அமிலத் தன்மையாக மாற்றுகின்றன. புற்றுநோய்க்கலங்கள் விருத்தியடைவதற்கு அமிலத்தன்மை மிகவும் சாதகமானதாகும். தினந்தினம் பாண்,பன், பேஸ்ரி, ரோல், பற்றீஸ், கேக், ரொட்டி என அதனைத்தானே நாம் விரும்பிச் சாப்பிடுகின்றோம்? ஒவ்வொரு சோடாப் பானத்திலும்  ஒவ்வொரு தேனீர்க் கோப்பையிலும் எவ்வளவு சீனியைக் கரைத்துக் குடிக்கின்றோம்? அது இல்லாமல் சாப்பிடவே முடியாது என்கின்ற நிலைமைக்கு எம்மை இட்டுச் சென்றிருக்கின்றது. அந்த நிபுணர் நஞ்சு என்று கூறியது சாலப்பொருத்தம்தான்.

'உணவே மருந்தாகும்..' என்றனர் நம்முன்னோர்கள். இயற்கை வழங்கிய கொடை எமக்குக் கிடைக்கும் உணவு வகைகளாகும். அதனை அதன் இயற்கை நிலையிலேயே நாம் உட்கொண்டோமென்றால்  அது எமக்கு அருமருந்தாகின்றது. சாப்பிடத் தெரியாமல் சாப்பிடுவதனால்தான் வறுமை எம்மைச் சூழுகின்றதே தவிர வறுமையினால் சாப்பிட முடியாமல் நாங்கள் இருக்கவில்லை என்கின்ற முடிவுக்கே எமது ஆய்வாளர்கள் வரவேண்டியதாகி விட்டது. சரியான முறைகளில் எமது மக்கள் உணவுண்டு வந்திருந்தார்களெனில் இன்னமும் உற்சாகமாகவும் விழிப்புணர்வுடனும் நோயின் உபாதைகளின்றி நிறைந்த முன்னேற்றத்துடன் அவர்கள் வாழ்ந்திருப்பார்கள்.   நகர்ப்புறங்களில்கூட இது மாதிரியான கதைதான். இன்று எத்தனை பேர் வீடுகளில் சமைக்கின்றார்கள். எல்லோருக்கும் கடைச் சாப்பாடுதான் தஞ்சம். அது எவ்வளவு சுத்தமாகத் தயாரிக்கப்படுகின்றது, என்னவிதமான எண்ணெய் கொழுப்பு வகைகளை சமைப்பதற்குப் பயன்படுத்துகின்றார்கள் என்பதைப் பற்றிய ஒரு அக்கறைகூடக் கிடையாது. கடையில் சாப்பிட வேண்டாம் என இங்கு சொல்ல வரவில்லை. அதனையே வாடிக்கையாகக் கொள்ள வேண்டாம் என்கின்றோம். அதிலும் சுத்தமாக உணவு தயாரிக்கப்படும் இடங்களை ஆராய்ந்து நாட வேண்டியதும் அவசியமாகின்றது.  இக்காரணங்கள் யாவும் சேர்ந்தே மக்கள் மத்தியில் போசாக்குணவு பற்றிய விழிப்புணர்வினை எற்படுத்தும் ஒரு இயக்கத்தினை உருவாக்க வேண்டும் என்கின்ற குறிக்கோள் மனதில் தோன்றியது.

போசாக்குணவு உட்கொள்ளுவது பற்றி நான்கு செய்திகள் உண்டு. முதலாவது செய்தியானது, சத்தான உணவைச் சாப்பிடுவதற்கு அதிகம் செலவு செய்து மெனக்கெடத்; தேவையில்லை என்பதாகும். எமது உடலுக்குத் தேவையான மாச்சத்து, புரதம், விட்டமின்கள், கனிப்பொருட்கள் ஆகியன அடங்கிய நிறையுணவினை ஒரு கோப்பை உணவாகத் தயாரிக்கலாம். அதனைத் தயாரிப்பதற்கு அரை மணிக்கு மேல் நேரம் செலவிடத் தேவையில்லை. அதற்காகும் செலவு ஆளொன்றுக்கு ரூ30 மட்டுமே. ஒரு சோடாப் போத்தல் அல்லது ஒரு டிப்பிடிப் பக்கெட் எத்தனை விலை என்று இதனுடன் ஒப்பிட்டுக் கணித்துப் பார்த்துக்கொள்ளலாம். அடுத்த செய்தியானது வித்தியாசமான உணவுப்பொருட்களை அன்றாடம் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். பழங்கள், காய்கறிகள், வௌ;வேறு தானியங்கள், வௌ;வேறு  வகையான பருப்புப் பயறு வகைகள் ஆகியன அன்றாட உணவில் அடங்குவதை நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். ஒரு முறை கடையில் நான் குரக்கன் மாவை வாங்கிக் கொண்டிருந்தபோது அங்கு அருகில் வந்த நண்பரொருவர் 'என்ன டயபடீஸா?' என்றார். இதென்னடா, நாங்கள் நீரிழிவு நோய் வந்தால்தான் குரக்கன் மாவைச் சாப்பிட வேண்டுமா? குரக்கன், சோளம்,வரகு, சாமை, கொள்ளு எனப் பலவிதமான உணவு வகைகள் இருந்தும் நாம் இவற்றை உண்பதற்கு எத்தனிப்பதேயில்லை. இன்று அவற்றில் பல வகைகளைப் பயிரிடுவதையும் நிறுத்திக்கொண்டு விட்டார்கள். மூன்றாவது செய்தியானது, உணவைத் தயாரிக்கும் முறைகளின் விஞ்ஞானத்தினையும் நாம் அறியவேண்டும் என்பதாகும். பல சத்துக்கள் அடுப்பில் போட்டுக் காய்ச்சுவதாலேயே அழிந்து விடுகின்றன. சிலகுறிப்பிட்ட பதார்த்தங்களுடன் வேறு பதார்த்தங்களைச் சேர்ப்பதனால் அப்பதார்த்தங்களில் இருக்கக்கூடிய இரும்பு போன்ற சத்துக்களை எமது உடல் உறிஞ்சுவதற்கு ஏதுவாகின்றது. நான்காவதாக, எப்பொழுது எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றியதாகும். காலைச் சாப்பாட்டின் முக்கியத்துவம், இடையிடையே சிற்றுண்டிகள் சாப்பிடுவதன் நன்மைகள், பச்சையாக உண்கின்ற உணவுகள் வெறு வயிற்றில் சமைத்த உணவிலும் வேறாக உண்ண வேண்டிய அவசியம் என இச்செய்திகள் போகின்றன.

இம்முக்கியமான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு எமது சமூகமே அணிதிரள வேண்டியது அவசியமாகின்றது. போசாக்காக உணவுண்பது பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டு அதனை ஏனையோர்க்கும் கற்றுத்தர முன்வரவேண்டும். அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உணவுப் பயன் கொடுக்கும் பயிர்கள் பொதுவில் நாட்டப்பட வேண்டும். இன்று ஒரு வறிய குடும்பத்திற்கு சமைக்க உணவில்லையா? பேசாமல் வீதியோரமாக வளர்ந்திருக்கும் ஏதேனும் பயிரை ஆய்ந்துகொண்டு போய்ச் சமைக்கக்கூடிய வசதியினை இது வழங்கும். கீரை வகைகள், முருங்கை போன்ற மரங்கள், மற்றும் உணவுச் செடிவகைகள் இவற்றிலடங்கும். இதற்கு கிராம அபிவிருத்திச் சங்கங்கள் உதவ முன்வரலாம். பன்முகத்தன்மை வாய்ந்த பயிர்ச்செய்கைகளில் எமது விவசாயிகள் ஈடுபடுவது ஊக்குவிக்கப்படவேண்டும். நகர்ப்புறங்களில்கூட போசாக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் அமைப்புக்களைத் தோற்றுவித்து அவற்றின் மூலம் பொதுவிடங்களில் பிரசாரங்கள் மூலமும் ஊடகங்கள் மூலமும் மக்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ளலாம். அரசாங்கம் போசாக்கு விழிப்புணர்விற்கான பல பயனுள்ள திட்டங்களைச் செயற்படுத்துகின்றது. சுகாதார அமைச்சின் அத்திட்டங்களின் உதவிகளையும் நாம் பெற்றுக்கொள்ளலாம். சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம் என்பதுபோல ஆரோக்கியமான தேசமாக நாம் இருந்தால்தான் தற்சார்பு மிக்க சமூகமாக நாம் உருவாகலாம் என்பதை மறக்கக்கூடாது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113113/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.