Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

தனி மனித மாற்றமும், ஒரு சிரிய குழந்தை சிரிப்பும்...! - #WorldPeaceDay #2minRead

international-world-peace-day-text-on-sa

“படைகொண்டு அமைதியை ஏற்படுத்த முடியாது. நல்லுணர்வால் மட்டுமே அமைதியைப் பெற முடியும்” என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். போர் இல்லாத, பகைமை இல்லாத நிலையைக் குறிப்பதுதான் அமைதி. உலக அளவிலான நிரந்தர அமைதி காக்கும் பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 

சாதி, மதம், இனம், மொழி எனச் சின்ன வயதில் இருந்தே படித்து வளரும் நாம், ஏனோ பள்ளி, கல்லூரிக் காலங்களைக் கடக்கும்போது அதை மறந்துவிடுகிறோம். விவரம் தெரியாத வயதில் நமக்குப் பிடித்தவர்களை யாரேனும் துன்பப்படுத்தினால் கோபப்பட்டு எதிர்ப்போம். ஆனால், வளர்ந்த பிறகு அது நணபனுக்காக இருந்தது சமூகத்துக்காகவும், நாட்டுக்காகவும் மாறிவிடுகிறது. சிறுவயது முதல் இன்றுவரை நாம், என் நண்பன், என் சொந்தம், என் சமூகம், என் நாடு என மட்டுமே பார்க்கிறோம். அதில், நமக்குச் சொந்தமானவற்றுக்குப் பிரச்னை ஏற்பட்டால் சிறிதும் யோசிக்காமல், துன்பம் ஏற்படுத்துபவர்களை எதிர்ப்போம்.

நாம் பல இடங்களில் சுயநலவாதிகளாகவே வாழத் தொடங்கிவிட்டோம். உலக அளவில் பிரச்னை என்றால், நாட்டுக்காகப் September-21.jpgபோராடுவோம். நாட்டுக்குள் பிரச்னை என்றால் நம்முடைய மாநிலத்துகாகப் போராடுவோம். மாநிலத்தில் பிரச்னை என்றால் மாவட்டத்துக்காகவும், மாவட்ட பிரச்னை என்றால் ஊருக்காகவும் போராடுவோம். இதில் நமக்குச் சொந்தமான இடம், பொருள், மக்களுக்காக மட்டுமே யோசிக்கும் நாம் சுயநலவாதிகள்தானே?

தெருக்களில் சின்ன இடப்பிரச்னைக்காக ஆரம்பிக்கும் வன்முறைகள், உலக அளவில் நாடுகளைக் கைப்பற்ற நடக்கிறது. நடக்கும் போராட்டங்களில் முடிவை மட்டுமே மனதில்வைத்துப் போராடுகிறோம். ஆனால், அந்தப் போராட்டங்களில் நாம் இழக்கும் மக்களைப் பற்றியோ, அவர் குடும்பங்கள் பற்றியோ சிறிதும் யோசிப்பது இல்லை. நடக்கும் வன்முறைகள் அனைத்தும் போராடுபவர்களின் வலிமையைப் பரிசோதிப்பதாகவே இருக்கிறது. போராட்டங்களின் முடிவில், யாரோ ஒருவர்தான் வெற்றியைச் சந்திப்பர். மற்றவரின் நிலை பற்றி நாம் கவலைகொள்வதே இல்லை. கடந்த ஒரு வருடத்தில் நமது அமைதியை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் தெரியுமா?

பல வருடங்களாக சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருக்கிறது. கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக்களை அழிக்க அதிபர் பஷீர், ராணுவத்தைப் பயன்படுத்தி வருகிறார். ராணுவத்தை எதிர்த்துக் கிளர்ச்சிக் குழுவினரும் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்தனர். இந்தப் போரில் லட்சக்கணக்கானவர்கள் கலவரத்தில் இறந்திருக்கிறார்கள். பல லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்துள்ளனர். ஒருவர் அதிபராக, நாட்டு மக்களுக்குள் பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள். இதன் விளைவு, குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை உயிரை இழந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலும் வன்முறைகள் முடிந்தபாடில்லை. இன்னும் எத்தனை அய்லான்களை நாம் இழக்க நேரிடுமோ தெரியாது?

2015-09-02T144254Z-408854314-GF100001902

இது உலகின் ஏதோ ஒரு பகுதியில் நடக்கும் விஷயமல்ல, இங்கே தமிழ்நாட்டில் காவிரி நதிநீருக்காக நடத்தும் போராட்டம் பல வருடங்களாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இரு மாநிலங்களிலும் பிரச்னைகள், வன்முறைகள் தலைதூக்கி வருகின்றன. கர்நாடகாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பேருந்துகளை எரித்து சாம்பல் ஆக்கினர். தமிழ் பேசும் மக்களையும் அடித்துத் துன்புறுத்தினர். இயற்கைக்குச் சொந்தமான நீரை மற்ற மாநிலத்துக்கு பகிர இத்தனை வன்முறை தேவையா?

இந்தியாவில் பல இடங்களில் சாதிக் கலவரங்கள், ஆணவக் கொலைகள், பாலியல் வன்முறைகள் என நம் அமைதியை தினம்தினம் இழந்து வருகிறோம். காஷ்மீரில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதலால் தமிழக ராணுவ வீரர் இறக்கிறார். அமைதி ஒரு நாட்டையே பாதிக்கிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கின்றன. ஓர் ஆய்வில், கடந்த ஆண்டில் மட்டும் 34 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன எனச் சொல்லப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பெண்கள் 6 முதல் 60 வயது வரை இருக்கின்றனர். மத்தியப் பிரதேசத்தில்தான் அதிக பாலியல் வன்முறைகள் நடக்கின்றன எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

தமிழகத்திலும் தொடர்ந்து பெண்களுக்கு எதிராகப் பல வன்முறைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ‘ஒருதலை காதல்’ என்ற பெயரில் ஆண்கள் செய்யும் கொலைகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இருவரும் சேர்ந்தே முடிவு செய்ய வேண்டிய ஒரு விஷயத்தில், ஒருவர் மட்டும் தனித்து முடிவெடுத்து நடத்தும் வன்முறை ஒரு நல்ல தீர்வாகுமா?

unity.jpg

உலகிலோ, நாட்டிலோ, மாநிலத்திலோ நடக்கும் பிரச்னை, அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா? நமக்கு நடந்தால்தான் அது பிரச்னையா? தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாளில் பார்க்கும், படிக்கும் விஷயம், யாருக்கோ எங்கோ நடக்கிறது என அதைக் கடந்துசெல்கிறீர்களா? எந்த ஒரு பிரச்னையும் நம்மைப் பாதிக்காதவரை அதைப் பற்றி நாம் பெரிதாகப் பொருட்படுத்துவதே இல்லை. நாளை யாருக்கோ நடக்கும் வன்முறை நமக்கோ, நம்மைச் சேர்ந்தவருக்கோ நடக்கலாம். அப்போது நம்முடைய இனவெறியோ, சமூகவெறியோ வெளியே வரக்கூடும். 

 

நமக்கோ நம்மைச் சேர்ந்தவருக்கோ நடக்கும் பிரச்னைகளை வன்முறையின்றித் தீர்க்க, வழிதேட முயற்சித்தாலே நாட்டில் தானாக அமைதி ஏற்படும். தனிமனித மாற்றம்தான் ஒரு சமூகத்தின் நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும். மாற்றத்தை நம்மில் இருந்து தொடங்குவோம். அடுத்த தலைமுறைக்கு அமைதியான உலகை பரிசளிப்போம்.

அமைதியான உலகுக்கு வழிவகுப்போம்!

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ்

 

 
juik_3017607f.jpg
 

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் அறிஞரும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் (Heike Kamerlingh Onnes) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*நெதர்லாந்து, குரோனின்ஜென் என்ற ஊரில் பிறந்தார் (1853). தனிப்பட்ட முறையில் கிரேக்கம், லத்தீன் மொழிகளைக் கற்றார்.

*குரோனின்ஜென் பல்கலைக் கழகத்தில் பயின்றார். அப்போது உட்க்ரெட் பல்கலைக்கழகம் நடத்தியக் கட்டுரைப் போட்டியில் ஆவி அடர்த்தி (vapor density) குறித்து கட்டுரை எழுதி முதல் பரிசு வென்றார். பட்டம் பெற்ற பின் 1871-ல் ஜெர்மனியில் உள்ள ஹெய்டல்பர்க் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார்.

*மேலும் ஜெர்மன் இயற்பியலாளர் ராபர்ட் கிர்க்கார்ப் மற்றும் சிலரின் ஆய்வுக்கூடங்களின் உதவியாளராகப் பணிபுரிந்தார். சில காரணங்களால் ஊருக்குத் திரும்பிய இவர், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்று 1878-ல் முதுகலைப் பட்டம் பெற்றார். ‘நியு ப்ரூஃப்ஸ் ஃபார் தி ரொடேஷன் ஆஃப் தி எர்த்’ என்ற ஆய்வுக் கட்டுரை எழுதி 1879-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

*1881-ல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ‘ஜெனரல் தியரி ஆஃப் தி நேச்சர் ஆஃப் ஃப்ளுயிட்ஸ்’ (பாய்பொருட்கள்) ‘ஃபிரம் தி பெர்ஸ்பெக்டிவ் ஆஃப் கைனடிக் தியரி’ என்ற கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். பாய்பொருள்களின் பருமன், அழுத்தம், வெப்பநிலை ஆகியவற்றின் சரியான அளவீடுகளை அறிய வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்.

*தாழ்வெப்பநிலையியல் குறித்து ஆராய்ச்சிகள் மற்றும் பொருட்களின் தாழ்ந்த வெப்பநிலைகளை அறிவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டார். 1882-ல் லெய்டன் பல்கலைக்கழகத்தில் சோதனை இயற்பியல் துறையின் பேராசிரியராகவும் அங்குள்ள ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

*திரவங்கள் தவிர, ஆக்சிஜன் ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட வாயுக்களை தாழ்ந்த வெப்பநிலைக்கு உட்படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டார். மூனிச்சில் இதே ஆய்வில் ஈடுபட்டு வந்த கார்ல் லிண்டே என்ற விஞ்ஞானி ஜூல் தாம்சன் விளைவின் (Joule-Thomson effect) அடிப்படையில் வாயுவைத் திரவமாக்கும் கருவியை உருவாக்கியிருந்தார். இந்த இருவரின் முறைகளை ஒருங்கிணைத்து இவர் புதிய முறை ஒன்றை உருவாக்கினார்.

*இதன்படி வாயுக்களைத் திரவமாக்கக் கூடிய ஆக்சிஜனை திரவமாக்கும் முறையில் இவர் வெற்றிகண்டார். 1911-ல் பாதரசம், வெள்ளீயம், காரீயம் உள்ளிட்ட தூய்மையான உலோகங்களின் மீள்தன்மை, மிகைக்கடத்தல் திறன் (superconductivity) ஆகியன குறித்தும் ஆராய்ந்தார்.

*1908-ல் வெப்பநிலையை ஒரு டிகிரிக்கும் குறைவாக்கும் கருவி ஒன்றை வடிவமைத்தார். தாழ்ந்த வெப்பநிலையில் உள்ள பொருட்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காகவும் அதன் மூலம் திரவ ஹீலியம் தயாரிக்க வழிவகுத்ததற்காகவும் 1913-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். சந்திரனின் உள்ள ஒரு குழிப் பகுதிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.

*மத்யூக்கி பதக்கம், ராம்ஃபோர்ட் பதக்கம், பவும்கார்டன் பரிசு, ஃபிராங்க் ளின் பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றுள்ளார். பெர்லின் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இவரை சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

*ஆராய்ச்சிகள், ஆசிரியப் பணி இவற்றோடு சமூகப் பொறுப்பும் கொண்டிருந்தார். இயற்பியல் துறைக்கு மகத்தான பங்களிப்புகளை வழங்கிய ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் 1926-ம் ஆண்டு 72-வது வயதில் மறைந்தார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

14330140_10155010003194578_7047720870545

  • தொடங்கியவர்

 

துள்ளிக்குதிக்கும் புள்ளி மான்

இங்கிலாந்தின் தென்கடலோரம் அதிகாலையில் தனது நாயை நடத்திச் டேவ் மாட், இந்த துள்ளிக்குதிக்கும் மானை படம்பிடித்தார். ப்ரவுன் சீ தீவில் இருந்த இந்த ஜப்பானிய சிகா இன மான், கடலில் நீந்தி டார்சட் கரைக்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

  • தொடங்கியவர்

14333593_1135136253201734_79673514453540

முத்திரை பதித்த நட்சத்திர நடிகை, முன்னாள் முன்னணி கதாநாயகி, இப்போதும் குணச்சித்திர நடிப்பில் மற்றும் சின்னத்திரையில் கலக்கும் நடிகை ராதிகாவின் பிறந்த நாள்

  • தொடங்கியவர்

பூச்சிகள் உலகம்: உலகின் ஆபத்தான ங்கொய்ய்... ங்கொய்ய்...

 

 
 
kosu_3017611f.jpg
 

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மனிதர்கள் இறப்புக்குக் காரணமாகும் உயிரினம் எது தெரியுமா? சிங்கம் புலி போன்ற விலங்குகளோ, சுறா, திமிங்கலம் போன்ற கடல் வாழ் உயிரிகளோ, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களோ கிடையாது. அளவில் மிகவும் சிறிய கொசுதான் அந்த ஆபத்தான உயிரினம்!

மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு எனப் பல்வேறு காய்ச்சல்களைப் பரப்பும் கொசுவிடமிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுவும் மழைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆபத்தான உயிரினம் மட்டுமல்ல, அறிந்துகொள்ள பல்வேறு சுவாரசியங்களைக் கொண்டிருப்பவை இந்தக் கொசுக்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோமா?

டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து பூமியில் இருக்கும் பழமையான உயிரினங்களில் ஒன்று கொசு.

# சுமார் 3,000-க்கும் மேற்பட்ட கொசு இனங்கள் உலகம் முழுக்க வாழ்கின்றன. இவற்றில் குறிப்பிட்ட இனக் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைப் பாதிக்கின்றன.

# பெண் கொசு மட்டுமே மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. கொசுக்கள் நீர்ப்பரப்பில் முட்டையிட்டு தனது இனத்தைப் பெருக்கும். அதனாலேயே நமது வசிப்பிடத்தைச் சுற்றி நீர் தேங்காது கவனித்துக்கொள்கிறோம்.

# பெண் கொசு தனது முட்டைகளை உருவாக்கத் தேவையான புரதச் சத்துக்காக மனித ரத்தத்தை உறிஞ்சுகின்றன.

# ஆண் கொசுக்கள் பெரிய தொந்தரவு செய்வதில்லை. தமக்குத் தேவையான உணவைத் தாவரங்களிடமிருந்து ஆண் கொசுக்கள் பெறுகின்றன.

# ஆணைவிடப் பெண் கொசுவுக்குப் பல மடங்கு ஆயுள் அதிகம். பெண் கொசு ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் இடும். இதுவே கொசுக்களின் எண்ணிக்கை வேகமாகப் பெருகக் காரணம்.

# கொசு நம் தோலுக்குள் துளையிட்டு ரத்தம் உறிஞ்சுவதையே கொசு கடிப்பதாக சொல்கிறோம். உண்மையில் கொசுவுக்குப் பல் போன்ற உறுப்புகள் இல்லை. ஊசி போன்ற குழல் ஒன்றைச் செலுத்தி ரத்தத்தை உறிஞ்சுகிறது.

# அப்படி உறிஞ்சும்போது உமிழ்நீரை நம் உடலில் கொசு செலுத்துகிறது. இதுவே நமக்கு அந்த இடத்தில் அரிப்புக்கும் தடிப்புக்கும் காரணமாகிறது.

# மனிதர்களிடமிருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் உடல் வெப்பத்தைத் தனது உணர்நீட்சி மூலம் பல அடி தொலைவிலிருந்தும் கொசுக்களால் அடையாளம் காண முடியும்.

# கொசு நம்மைச் சுற்றிப் பறக்கும்போது ‘ங்கொய்ய்’ என்று எரிச்சலூட்டுமே, அந்த ஒலி கொசுவின் இறக்கைகளிலிருந்து வருகிறது. விநாடிக்குப் பல நூறு தடவைகள் என அப்போதைய வேகத்தைப் பொறுத்துத் தனது இறக்கைகளைக் கொசு விசிறிப் பறக்கும். கொசுக்கள் முன் பின்னாகவும், பக்கவாட்டிலும், மேல் கீழ் என பல திசைகளில் பறக்கக் கூடியவை.

# சராசரியாக 2.5 மில்லி கிராம் எடையே உள்ள கொசு, தனது எடையைப்போல 2 மடங்குக்கும் அதிகமான ரத்தத்தை மனிதரிடமிருந்து உறிஞ்சும்.

மிகக் குறைவான எடை காரணமாக, வேகமான காற்று கொசுவுக்கு இடைஞ்சலாகும். இதனாலேயே கொசு விரட்டிகளைவிட மின் விசிறி, நம்மைக் கொசுக்களிடமிருந்து பாதுகாக்கிறது.

tamil.thehindu.

  • தொடங்கியவர்
 

வரலாற்றில் இன்று......

செப்டெம்பர் - 22

 

1499 : சுவிட்ஸர்லாந்து தனி நாடா கியது.

 

1692 : ஐக்கிய அமெரிக்காவில் சூனி யக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர்.

 

813iraq.jpg1784 : அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் ரஷ்யா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.

 

1908 : பல்கேரியா சுதந்திரப் பிரகட னம் செய்தது.

 

1914 : ஜேர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணியளவில் தமிழகத்தின் சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.

 

1934 : பிரிட்டனின் வேல்ஸ் பிராந்தியத்தில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.

 

1941 : யுக்ரைனின் வின்னிட்சியா நகரில்  நாஸி ஜேர்மனியரினால் 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர். 

 

1944 : இரண்டாம் உலகப் போரில் ரஷ்ய இராணுவம் எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரினுள் நுழைந்தது.

 

1960 : மாலி கூட்டமைப்பில் இருந்து செனகல் விலகியதை அடுத்து சூடானியக் குடியரசு மாலி எனப் பெயர் மாற்றம் பெற்றது.

 

813swiss.jpg1965 : இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.

 

1970 : மலேஷியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியை விட்டு விலகினார்.

 

1975 : ஐக்கிய அமெரிக்காவின் ஜனா திபதி ஜெரால்ட் ஃபோர்ட் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

 

1980 : ஈரான் மீது  ஈராக் படை யெடுத்து. இதன் மூலம் ஆரம்பமான போர் 8 வருடங்கள் நீடித்தது.

 

1993 : ஜோர்ஜியாவின் பயணிகள் விமானம் ஒன்று சுகுமி என்ற இடத்தில் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.

 

1993 : அமெரிக்காவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர்.

 

1995 : யாழ். நாகர்கோயில் பாடசாலை மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 30 சிறார்கள் கொல்லப்பட்டனர்.

 

1997 : அல்ஜீரியாவில் 200 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 

2013 : பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலால் சுமார் 75 பேர் கொல்லப்பட்டனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உங்களுக்குள்ளும் இருக்கிறான் ஒரு தலைவன்! #MorningMotivation

CHESS-PIECES_LEADERSHIP.jpg

உங்களுக்கு தலைவனாகும் ஆசை இருக்கிறதா...? 

நிதானமாக யோசியுங்கள். யோசித்தீர்களா? 

இப்பொழுது இன்னொரு கேள்வி 'எல்லோரையும் விட கடுமையாகத்தான் உழைக்கிறோம். ஆனால் எங்கே தவறு செய்கிறோம்.. எது நம்மிடம் இல்லை?' என்பது போன்ற கேள்விகள் உங்களைத் துரத்தி இருக்கிறதா இதோ இந்த குறிப்புகள் உங்களுக்காகத் தான்.

1. ஒரு தலைவனின் அடிப்படைக் குணமே ஒரு குழுவை எப்போதும் நல்ல முறையில் வழிநடத்திச் செல்வதுதான். அப்படியான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் பொழுது அதை சரியான முறையில் செய்திருக்கிறீர்களா? செய்திருந்தால், ஒரு தலைவன் அங்கேயே வெளிப்பட்டிருப்பான்.

2. உங்கள் அலுவலகத்திலோ அல்லது நண்பர்களில் ஒருவருக்கோ ஏதேனும் அவசரத் தருணத்தில் அவர் திட்டமிட்ட வேலையை சரியாக செய்ய முடியாமல் போகிறது. அந்த வேலையை நீங்களாகவே கேட்டு செய்து கொடுத்து இருக்கிறீர்களா? தலைவனின் பண்பு தலைமை தாங்குவது மட்டும்தான் என்றில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு அவ்வப்போது உதவி, அவர்களை நல்ல நிலையில் வைத்துக்கொள்வதும் தான். அதே நேரத்தில் அவர்களாகவே செய்து முடியக்கூடிய வேலைகளை, அவர்களைக் கொண்டே செய்ய வைக்க வேண்டும்.

3. உங்கள் குழுவுக்கு தொடர்ந்து தோல்விகள். உங்களிடம் அதற்கான காரணம் கேட்கப்படுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? காரணங்களைச் அடுக்குவீர்களா, அல்லது அதற்கான தீர்வுகளோடும் செல்வீர்களா? தீர்வுகளோடும் செல்பவராக இருந்தால் நிர்வாகத்தின் முதல் சாய்ஸ் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

4. நீங்கள் அதிகமாக கோபப்படுபவரா? யாரேனும் சிறு தவறு செய்து விட்டால் கூட, அவர்களை கடுமையாகத் திட்டி நல்வழிப்படுத்த வேண்டும் என நினைப்பவரா. அப்படி ஒரு குணம் உங்களிடம் இருந்தால் அதை இப்பொழுதிலிருந்தே மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

5. ஒரு தலைவனுக்கு தன் குழுவை வழிநடத்திச் செல்வதைப்பற்றி தெரிந்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல உங்கள் இலக்குகளைப் பற்றி தெரிந்து கொண்டிருப்பதும் ரொம்ப முக்கியம். இலக்கில்லாமல் பயணிப்பது தலைவனுக்கு அழகல்ல!

6. "எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே செல்லும்" என்பதைப்போல எப்படியும் வெற்றி கிடைத்து விடும்.. இவ்வளவு பேர் கடினமாக உழைக்கிறோமே என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் ஒரு தலைவன் சரியாகத் திட்டமிட்டு வேலைகளை பிரித்துக் கொடுப்பவனாக இருக்க வேண்டும்.

7. எப்பொழுதும் தனியாக முடிவெடுப்பவராக அல்லாமல். தன் குழுவினரின் கருத்துகளையும் கேட்டறிந்து நல்ல தீர்வுகளை முன்னெடுப்பவரே நல்ல தலைவனாக உருவெடுக்கிறான்.         ‘

நீங்கள் தொண்டனா, தலைவனா?’ என்ற கேள்வி உங்களிடம் கேட்கப்படுகிறது. இரண்டு சாய்ஸ்கள் , முடிவு உங்கள் கையில். இந்த இறுதி வரிகளை படிக்கும் முன்பு நீங்கள் முடிவெடுத்திருந்தால்..

யெஸ் பாஸ்...!  உங்களுக்குள்ளும் ஒரு தலைவன் இருக்கிறான்!  

vikatan

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

p94a.jpg

அப்பாவின் அழைப்பு

நடமாடும் தொலைபேசிகள்
அறிமுகமாகும் முன்னரே இறந்துபோன அப்பா
நேற்றென் கனவில் தொலைபேசினார்
புகையிலைப் பொருட்களின் தடை பற்றி அறியாத அவர்
இரண்டு சிசர்ஸ் வாங்கிவரச் சொன்னார்
வெளிநாட்டு ரகங்களும் வெகுஇயல்பாய்ப் புழங்கும்
அரசு மதுபானக்கடைகள் குறித்து அறிந்திராத அவர்
`கால் பாட்டில் நெப்போலியன் கிடைக்குமா?’ என்றார்
நாய்களுக்கான பிரத்தியேக உணவுகளை அறிந்திராத அவர்
தெருமுனை செட்டியார் கடையில்
டைகருக்கு ஒரு பாக்கெட் வர்க்கி வாங்கிவரப் பணிக்கிறார்
பின்னிரவு வரை அவருக்கு கால் பிடித்துக்கொண்டே
அமர்ந்தபடியே உறங்கிப்போகும் அம்மா
இப்போது சர்க்கரை நோயில் அவதிப்படுவதை அறியாத அவர்
`அம்மாவுக்குப் பிடித்த தேநீர்ப்பொடிப் பொட்டலம்’ என்கிறார்
அப்படியே எனக்கு விருப்பமான வாழைச்சீப்பை
வாங்கிக்கொள்ளும்படி சொல்லும்போதே
கனவு கலைந்து இணைப்பு துண்டித்தது.
எப்போதும் நான் உறங்கிய பின்னரே வீடு வரும் நீங்கள்
எனக்குப் பிடித்த வாழைப்பழங்களை
எனது தலையணையருகே வைத்துச்செல்ல,
பின்னாளில் அம்மா சொன்னதுபோல்
நான் பல்கூட துலக்காமல் உண்ண
அதை மட்டுமாவது நீங்கள்தானப்பா வாங்கி வரவேண்டுமென
அவரிடம் பதிலுரைக்க வேண்டும்
நான்காம் தலைமுறையோ
ஐந்தாம் தலைமுறையோ
இறந்தவர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்
நெட்வொர்க் எதுவென விளம்பரம் வரும் வரையோ
இன்னொரு கனவில் அவரே தொடர்புகொள்ளும் வரையோ
நான் காத்திருக்கத்தான் வேண்டும்.

- கே.ஸ்டாலின்


அதே பறவை

குளத்து நீர் மேல்
தாழப் பறக்கும் பறவையைப்
பின்தொடர்கிறது
குளத்துக்குள்ளிருந்து
அதே பறவை.

 - ஸ்ரீராம்

எரியும் பசி

முப்போக விளைச்சளற்ற
பஞ்சபூமி என் நிலம்
ஆடி மழை ஏமாற்ற
ஐப்பசி மழைக்குப் பின்னே
நிலம் சமைப்போம்.
`தானியம் வித்த காசு
கடனடைத்ததுபோக எஞ்சுவது
பால்டாய் வாங்கத்தான்’ என்னும்
காட்டேரித் தாத்தனின் சாயல்
இந்த சிக்னலில் பிச்சை எடுத்தவருக்கு.
மாநகரின் வேகத்தை முடக்கிய
சிவப்பு விளக்குகள்
வயிற்றின் பசியை நினைவூட்டி எரிகின்றன.

- தி.காவிரி நாடன்

கலப்பு

குறுக்கிலும் நெடுக்கிலும்
முறையற்று வளர்ந்திருக்கும் கிளைகள் மீது
சீராய்த்தான் வளர்ந்திருக்கின்றன
இலைகள்.

 - ஸ்ரீராம்

vikatan

  • தொடங்கியவர்
அன்பை விதைப்பது இலகுவான ஒன்றுதான்
 
 

article_1474518587-%5D%5B%5D.jpgமனதில் கலவரம் உடையோர் பிறரையும் கலவரப் படுத்துகின்றார்கள். இதனைச் சிலர் தெரிந்தே செய்வதுண்டு.  

நான் கலங்கிப் போய் இருக்கின்றேன். ஏனையவர்கள் சும்மா சந்தோசமாக இருப்பதா? என்கின்ற அடாத எண்ண வலையில் புகுந்துஇ பலரைக் குழப்பிப் பந்தாடுவதனை நாங்கள் சதா கண்டு வருவதுண்டு.   

நல்ல நிலையில் இருக்கும்போதும் எவருக்கும் உதவி புரியாமல் இறுமாப்புடன் வாழுபவர்கள்இ தாங்கள் கெட்டு நொந்த பின்னரும் கூட, பிறரைப் பழிவாங்குவது சமூகத்தின் மீதான காழ்ப்பின் உச்சநிலைதான்!  

மனதின் கனிவை எவராலும் ஏற்படுத்த முடியும். அன்பை விதைப்பது இலகுவான ஒன்றுதான். ஒவ்வொருவரும் அதனை உளமார வரவேற்பீர்களாக! அன்பை ஸ்பரியுங்கள்! ஆயிரம் மலர்கள் உள்ளத்தில் மலரும்.  

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

திகில் கதை...

14344731_1437994469550293_18849649949349

 

அது ஒரு மலைப் பிரதேசம். நல்ல இருட்டு நேரம். கடுமையான மழை. சூசை பஸ் ஸ்டாப்பில் சிக்கிக்கொண்டிருந்தார். யாருமே சாலையில் நடமாடவில்லை. பஸ் ஒன்றும் வருவதாகத் தெரியவில்லை.

ஏதாவது கார் வந்தால் லிஃப்ட் கேட்டு போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஒரு கார் மெதுவாக ஊர்ந்து வந்தது பஸ் ஸ்டாப் அருகில் நின்றது.
சூசைக்கு யோசிக்க நேரம் இல்லை. கார் கதவைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்து உட்கார்ந்தார். கார் மீண்டும் மெதுவாக நகர ஆரம்பித்தது.

அப்பொழுதுதான் சூசை கவனித்தார், டிரைவர் சீட்டில் யாருமே இல்லை. ஆனால் கார் நகர்ந்துகொண்டே இருக்கிறது. சசூசைக்கு பயம் தலையிலிருந்து கால்வரை ஊசி போட்டது.
சாலையில் 90 டிகிரி திருப்பம். எதிரே கிடுகிடு பள்ளம். நாம் நிச்சயம் காரோடு சமாதி. செத்தோம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் காரின் ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஒரு கை உள்ளே நீண்டு ஸ்டீரிங்க் வீலை திருப்பியது.

பயத்தின் உச்சத்துக்கு சென்ற சூசைக்கு, கார் கதவைத் திறந்து வெளியே குதித்தார். கொஞ்ச தூரத்தில் இரு ஹோட்டல் தெரிந்தது. ஒரே ஓட்டமாக அங்கே சென்றார்.

“ஒரு கார் டிரைவர் இல்லாமல் வந்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு பிசாசு வேலைதான். ரொம்ப பயமா இருக்கு” என்று ஹிஸ்டீரியா வந்தது போல கத்தினார்.

ஹோட்டலில் இருந்தவர்கள் எல்லாம் எழுந்து போய் வெளியே எட்டிப்பார்த்தனர். அந்த கார் மெதுவாக வந்து ஹோட்டலுக்கு முன்னால் நின்றது.

அதன் பின் பக்கத்திலிருந்து வெளிப்பட்ட இரண்டு மனிதர்கள் கருப்பு ரெயின் கோட்டொடு உள்ளே நுழைந்தனர்.

அவர்களில் ஒருவன் சூசையை சுட்டிக்காட்டி, “இந்த ஆளுதான். ரிப்பேரான காரை நாம மழையில தள்ளிகிட்டு வரும்போது உள்ளே ஏறி உக்காந்தவன்” என்றான்.

 
  • தொடங்கியவர்

‘மை டியர் அந்தரங்கமே..!’ அன்றே சொன்னார் சுஜாதா! #DearDiaryDay

Diaries.jpg

இன்றைக்கு செப்டம்பர் 22. #DearDiaryDay. 

இப்படி ஒரு நாள் இருக்கிறதென்று தெரியாத காலகட்டங்களில் எல்லாம் டைரி எழுதிக் கொண்டிருந்தேன். 

எனக்கு டைரி எழுதுவதென்றால் கொள்ளைப் ப்ரியம். எனக்கே எனக்குப் பிடித்த பிடிக்காத விஷயங்களை எழுதுவதற்கானது என்பதோடு  டைரி என்பது அந்தரங்கமானது என்பது தரும் குட்டி ரகசியத்தன்மையும் டைரி எழுதும் ஆவலை சின்ன வயதிலேயே எனக்குள் விதைத்திருந்தது. காசு கொடுத்து டைரி வாங்குவதென்பதெல்லாம் நடக்கவே நடக்காது. ‘அஞ்சாங்க்ளாஸ் படிக்கற உனக்கெதுக்கு டைரி?’ என்பார்கள். மாமாவுக்கோ,  அப்பாவுக்கோ கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருப்பேன். ம்ஹும். 

எனக்கும் டைரிக்குமான முதல் பந்தம் எப்போதென்று மூளைக்குள் விரல் விட்டுத் துழாவினாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. 80களின் இறுதியில் என்று வைத்துக் கொள்ளலாம். காலையில் கோயிலுக்குப் போய், பிறகு பள்ளிக்கூடத்துக்குப் போய் மாலையில் வீட்டுக்கு வந்து படித்துவிட்டு மீண்டும் கோயிலுக்குச் சென்று, வீடு வந்து சாப்பிட்டுவிட்டு உறங்குபவனின் டைரியில் எழுத என்ன இருக்கும்? பெரிய மாமா வீட்டுக்கு வந்தது, சித்தப்பா வீட்டுக்கு நாங்கள் போனது என்று போரடிக்கிற சமாச்சாரங்கள்தான். ஆனால் அவற்றை எழுதுவதில் ஒரு சந்தோஷம் இருந்தது, ‘நாளைக்கு என் சரிதையை எழுதப்போகிறவனுக்கு இதெல்லாம் எத்தனை பெரிய சொத்தாக இருக்கும் தெரியுமா?’ என்ற மிதப்போடுதான் எழுதிக் கொண்டிருந்தேன்.  

கொஞ்சம் கொஞ்சமாக காசு திருடி காமிக்ஸ் வாங்குவது, ஸ்கூல் முடிந்து பசங்களோடு சுற்றிவிட்டு வீட்டுக்கு லேட்டாக வருவது, (ஒரு மணிநேரம் ஸ்கூல்லயே படிக்கச் சொல்லிட்டாங்க மாமா) போன்றவைகள் சேரும்போது டைரியின் எழுத்துகள் பொய்முகமூடி அணிந்து கொள்ள ஆரம்பித்தன. 

வாசகர் கடிதம், துணுக்குகள், கதைகள், கவிதைகள் என்று நான் எழுத ஆரம்பித்தது 91க்குப் பிறகு. அந்தக் காலங்கள் என் டைரிகளின் பொற்காலம் எனலாம். தோன்றும் ஐடியாக்கள் எல்லாம் அங்கங்கே இடம்பெறும், முதலில் கதையை டைரியில் எழுதிவிட்டு, பிறகு அதை லீகல் பேப்பர் வாங்கி எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். இரண்டாவது முறை எழுதும்போது எழுத்து மெருகேறியது. இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதுகிறானே பாவம் என்று நினைக்காமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அதெல்லாமுமே - கதை அனுப்பிய தேதி - பத்திரிகை - திரும்பி வந்த தேதி - என் டைரிக்குறிப்பில்தான் இடம்பெற்றன. இந்தக் காலகட்டத்தில், பொதுவான விஷயங்களை எழுத ஒரு டைரியும், வாழ்க்கைக் குறிப்பு (சிரித்தீர்களா என்ன?) எழுத ஒரு டைரியும் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

Dear%20Diary%20Day.jpg

தளபதி படம் வந்த சமயம். சென்னைக்கு உறவினர் வீட்டுக்குச் சென்ற எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி கிடைத்தது. GV Films சார்பில் அளிக்கப்பட்ட ஒரு டைரி கிடைத்தது. அதில் ஒவ்வொரு பக்கத்திலும் வாட்டர் மார்க்கில் தளபதி என்று ப்ரிண்ட் செய்யப்பட்டிருக்கும். அதே ஃபாண்டில். பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். ஒரு பக்கம்கூட அதில் விடாமல் கிறுக்கித் தள்ளியிருக்கிறேன்.

இந்தக் கட்டுரை எழுத  ஆரம்பத்ததில் இருந்து இப்போதுவரை பத்து முறைக்கும் மேல் தேடியும் அந்த டைரியை மட்டும் காணவில்லை. 

அதைத் தேடப்போய் ஒவ்வொரு டைரியையும் புரட்டிப் பார்த்ததில் பல விஷயங்கள் புலப்பட்டன.

வேலைக்குச் சேர்ந்த புதிதில், ‘மேனேஜர் அதைச் சொன்னார், இதைச் சொன்னார், அவர் எப்படி இப்படி என்னைப் பேசலாம்’ போன்ற டைரி ஈஸ் மை ஃப்ரெண்ட் மனோபாவமே இருந்திருக்கிறது. இட்லி சாப்பிட்ட கணக்கு, பயணம் செய்த கணக்கு என்று அக்கவுண்ட் எழுதியிருக்கிறேன். கேட்க ஆளில்லாத தைரியத்தில் கவிதை என்ற பெயரில் ஏதேதோ கிறுக்கியிருக்கிறேன். பார்த்த சினிமாக்களையும் குறிப்பிட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் விமர்சனம் செய்ய வேண்டும் என்ற அரிப்பு இருந்ததில்லை என்பது டைரியைப் படிக்கும்போது தெளிவாகத் தெரிகிறது. ரோஜாவுக்கு ‘Every Indian Must See' என்கிற ஒற்றைவரி மட்டுமே பத்துக்கும் மேற்பட்ட டைரிகளைப் புரட்டியதில் கண்ட ஒரே விமர்சனம்.

ஏதோ ஒரு டைரியில் கோடு வேர்டில் என்னமோ எழுதியிருக்கிறேன். அது என்ன என்பதை இப்போது டீகோட் செய்யத் தெரியவில்லை. விருப்பமும் இல்லை. ஆதாரமாக அது ஏதேனும் அந்தரங்கமாகத்தான் இருக்கவேண்டும் என்பதும், என் அந்தரங்கத்தை நானே தெரிந்துகொண்டு ‘ச்சே!’ என்று நானே என்னை நினைத்துவிடுவேனோ என்பதும் காரணமாக இருக்கலாம். 

Today I must went to CBE என்றெழுதி ஆங்கிலத்துக்கு என்னாலான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறேன். அலுவக வேலையாய்ப் பயணம் செய்து வந்த என்னை ‘ஏன் லேட்.. வழில எங்காச்சும் போனியா?’ என்று கேட்ட ஒரு முதலாளியைக் கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறேன். திட்டெல்ல்லாமே ஸ்டார் போடப்பட்டு, சென்சார் செய்துதான் எழுதியிருக்கிறேன். அப்பவே....!

நிறைய கதைகள், கவிதைகள் எழுதிப் பார்த்திருக்கிறேன். ஒரு டைரியில் தொடர்கதை எழுதி, 9 அத்தியாயங்களுக்குப் பிறகு நானே ‘நல்லால்லை’ என்று எழுதி, ஒன்றாம் அத்தியாயத்திலிருந்து மீண்டும் எழுதியிருக்கிறேன். 

ஒரு கட்டத்தில் தேதி எழுதப்பட்ட டைரிகளை விட, ஃபைவ் சப்ஜெக்ட் நோட்டுகள் என்னைக் கவர அதை வாங்கி எழுத ஆரம்பித்திருக்கிறேன்.  பிடித்த ஜோக்குகளை வெட்டி ஒட்டியிருக்கிறேன். கதைகளைக் குறித்து வைத்திருக்கிறேன். கவிதைகளை அப்படியே பிரதி எடுத்து எழுதியிருக்கிறேன். 

இந்த டைரிகள் பற்றிய குறிப்பில் மிகமுக்கியமாகச் சொல்லவேண்டிய சம்பவம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டுரையின் முக்கியமான கட்டம் இதுதான்.

DearDiaryDay.jpg

ஆரம்பத்தில், என் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை தொடர்போல எழுதிக் கொண்டிருந்தேன் அல்லவா. அது தனி டைரிகளாகச் சேர்ந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு பத்தியின் ஆரம்ப வரிகள் நீல வண்ணத்தில் எழுதினால், அந்தப் பத்தியின் பிற வரிகள் முழுவதும் கருப்பில் எழுதப்பட்டிருக்கும். அடுத்த பத்தி, முதல் வரி கருப்பில் ஆரம்பித்து பிற வரிகள் நீலத்தில் இருக்கும். கையெழுத்து அழகாக இருக்கும். செய்த சில பல சில்லறைத்தனங்கள் உட்பட எல்லாமே இருக்கும். தேதி வாரியாக என்றெல்லாம் இல்லாமல் ஒரு நாளைக்கு மூன்று பக்கங்கள், சில நாட்களில் வெறும் நாலு வரிகள் என்று இருக்கும். 

எழுதி எழுதி ஆறேழு டைரிகள் அப்படி சேர்ந்துவிட்டன.  அப்போது ஒரு யோகா மையத்தில், சேர்ந்திருந்தேன். அடுத்த கட்டமாக ஒரு க்ளாஸ் இருக்கிறதென்று சேர விருப்பப்பட்டவர்களில் நானும் பெயர் கொடுத்திருந்தேன். ஒரு மாதம் கழித்து அந்த வகுப்பு ஆரம்பம் என்றார்கள். ஏழு நாள் வகுப்பு என்றார்கள். சேர்ந்தவர்களையெல்லாம் உட்கார வைத்து ஒரு சுபயோக சுபதினத்தில்  ‘உங்கள் வாழ்க்கையில் இதுவரை நிகழ்ந்தவற்றையெல்லாம் எழுதிக்கொண்டு வரவேண்டும். யாரும் படிக்க மாட்டோம். உங்களைப் படிக்கச் சொல்லவும் மாட்டோம். வெளிப்படையாக எழுதுங்கள்’ என்றார்கள். எல்லாரும் ‘என்னாது! எல்லாத்தையுமா?’, ‘ஒரு பேப்பர்ல எழுதினா போதுமா?’, ‘எத்தனை பக்கம் எழுதணும்’ என்றெல்லாம் சந்தேகம் கேட்க ஆரம்பிக்க, ‘எங்ககிட்டயேவா!’ என்கிற மிதப்பில் பின்னணியில் பிஜியெம் ஒலிக்க நடந்து வெளியே வந்தேன் நான். 

அன்றிலிருந்து ஆரம்பித்து, க்ளாஸ் ஆரம்பிக்கிற ஒரு மாத இடைவெளியில் விட்டது தொட்டது எல்லாமாக மேலும் இரண்டு டைரிகளில் எழுதித்தள்ளினேன்.  மேலும் ஒரு பாதி எழுதப்பட்ட டைரியை எடுத்துக் கொண்டு அந்த வகுப்புக்குப் போனேன். கையில் ஏழோ, எட்டோ டைரிகள்.

உள்ளே போகும்போது, ’ஹலோ.. தம்பி... அவங்கவங்க டைரியை மட்டும்தான் எடுத்துட்டு வரணும்’ என்று சொன்ன தன்னார்வலரிடம் ஸ்டைலாக ‘இதெல்லாமே என்னுதுதான்’ என்றேன். முதல்நாள் கீழே அமர்ந்து முன்னால் வைக்கப்பட்டிருந்த என் டைரிகளைப் பார்த்தபடியேதான் க்ளாஸ் எடுத்தார் ஒருவர். பக்கத்தில் அமர்ந்திருந்தவர், என் டைரிகளைப் பார்த்துவிட்டு கொண்டுவந்த எண்பது பக்க நோட்டை மறைத்துக் கொண்டார். 

‘அடுத்த ஏழு நாட்களுக்கும் இடைவேளைகளின்போதும், இரவு வேளையிலும் நீங்கள் எழுதலாம். தினமும் எழுதியவற்றைக் கொண்டு வரவேண்டியதில்லை. ஏழாவது நாள் நாங்கள் சொல்லும்போது கொண்டு வந்தால் போதும்’ என்றார்கள். ‘இனி எழுதறதுக்கு எனக்கு ஒண்ணுமே இல்லையேடா’ என்று தோன்ற அதையே விலாவாரியாக, ‘ஏன் எனக்கு எழுத ஒன்றுமில்லை’ என்று டைரி முழுக்க எழுத ஆரம்பித்தேன். 

அந்த  ஏழாவது நாள் வந்தது. மாலை நேரம். எல்லாரும் பேப்பர்களும், குட்டி டைரிகளுமாக நிற்க நான் மட்டும் சுமக்க முடியாமல் எட்டு, ஒன்பது டைரிகளை வைத்துக் கொண்டு கெத்தா.. ஸ்டைலா நின்றுகொண்டிருந்தேன்.  ‘படிக்க மாட்டோம்.. படிக்கச் சொல்ல மாட்டோம்’ என்ற வாக்குறுதி கொடுத்திருந்தார்கள் என்பதால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. 70, 80  பேர்கள் இருந்த வகுப்பில், ‘நம் வாழ்க்கை என்றால் என்ன... இந்த ஏழுநாள் வகுப்பிற்குப் பிறகு நாம் இனி வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் பிரசங்கித்துக் கொண்டிருந்தார் வகுப்பெடுக்கும் ஸ்வாமி. 

கொஞ்சநேரம் கழித்து, அந்தப் பெரிய அறையிலிருந்து வலதுபுற வாசல் வழியாக எல்லாரும் வந்து வெட்டவெளியில் ஒன்றுகூடச் சொன்னார். எல்லாரும் வெளியேற ஆரம்பிக்க, இந்த டைரிகளைச் சுமந்துகொண்டு போக கொஞ்சம் தாமதமாகவே, நான் கொஞ்சம் பின்னால் சென்று சேர்ந்தேன். பெரிய வட்டமாக எல்லாரும் நின்றிருக்க நடுவில் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. வகுப்பெடுத்த ஸ்வாமி, என்னமோ சொல்லிக்கொண்டிருந்தது மெல்லிசாகக் கேட்க, நான் எட்டி எட்டிப் பார்த்தேன்.

சிறிதுநேரத்தில் டம் டமார் டம் டமார் என்று ட்ரம்ஸ் ஒலி கேட்க ஆரம்பிக்க, ஆஹோ ஓஹோ என்று ஆளாளுக்கு கத்திக் கொண்டே குதிக்க ஆரம்பித்தார்கள். அந்த 80 பக்க நோட் ஆசாமி என்முன் வந்து, போங்க போங்க.. முன்னால போங்க என்று நமுட்டுச் சிரிப்புடன் சொல்லி என்னைத் தள்ளிவிட்டார்.

Diary%20Day.jpg

என்னவென்றே தெரியாமல் முன்னேறிச் சென்ற எனக்கு கண்கள் படாரென்று கூசியது.  பத்தடிக்கு பத்தடி சைஸ் பெரிய குழியில் தீ கனன்று கொண்டிருக்க எல்லாரும் அவர்கள் எழுதி வந்ததை அதில் வீசியெறிந்து கொண்டிருந்தார்கள். ‘அடேய்களா... என் சரிதையை எழுதப்போறவன் பாவம்டா.... இவ்ளோ தகவல்கள் அவனுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லையேடா’ என்று நான் கத்தியது யாருக்கும் கேட்கவில்லை. அந்த டம் டமாருக்கு நடுவில் உரத்த குரலில் கணீரென்று ‘இன்றிலிருந்து நீங்கள் புதிய மனிதர். பழையதைக் களைந்து விட்டீர்கள்’ என்று கத்திக் கொண்டிருந்தார் அந்த க்ளாஸெடுத்த ஸ்வாமி. எண்பது பக்க நோட் ஆசாமி வேறு, ‘நீ அதுக்குள்ள போடலைன்னா விடமாட்டேண்டி’ என்பதுபோல என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். தயங்கிய தருணத்தில் உடனிருந்த ஒருவர், ’இரண்டு கையிலயும் இத்தனை நோட்டுக்களைப் பிடிச்சிருக்கார்... எப்படித் துக்கிப் போடுவார் பாவம்..’ என்று எனக்கு உதவ நினைத்து, ஒவ்வொன்றாய் உள்ளே போட்டார். கடைசி நான்கைந்தை நானே போட்டுக்கறேன் போய்யா என்று தூக்கித் தீயில் போட்டேன். 

இப்படியாக என் வாழ்க்கை வரலாறு முழுவதும் அதில் போக, மிச்சம் மீதி ஓட்டைக் கணக்குகள்தான் படங்களில் நீங்கள் பார்ப்பது. 
எனது முதல் சிறுகதைத் தொகுப்புக்கு பட்டர்ஃப்ளை எஃபெக்ட் என்ற பெயர் வைக்கத்தான் ஆசைப்பட்டேன். அல்லது அதில் இருந்த மற்றொரு சிறுகதையாக ஜெனிஃபர் என்று வைக்கலாம் என்று இருந்தேன். ஆனால் ‘டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்’ எப்படியோ செலக்ட் ஆனதும் எதேச்சையானதுதான் என்றாலும் இந்த நாளில் ‘பார்த்தீர்களா... எனக்கும் டைரிக்குமான பந்தத்தை?’ என்று பீற்றிக் கொள்ளவாவது அது உதவுகிறது.

இப்போழுது எல்லாருக்குமான டைரியாய் ஃபேஸ்புக் திகழ்கிறது. அவற்றில் எழுதும் ‘மோர்க்குழம்பு சாப்ட்டேன், மோகினி சீரியல் பார்த்தேன்’ களைத் தனியாக தேதி வாரியாகத் தொகுத்து வந்தீர்களானால் அதுதான் டைரி. என்ன, யாரையாவது திட்டினால் கேஸ்போட்டு உள்ளே வைத்துவிடும் அபாயம் இருக்கிறது. நாமாக எழுதும் யாரும் பார்க்காத டைரிக்கு செக்‌ஷன் 66A பாயாது என்பதால் பயப்படத் தேவையில்லை.

டைரி என்னும் நண்பனிடத்தில் நாம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டிருக்கும்போது, அடிப்படையாக நமக்குள் இருக்கும் பொறாமை, வஞ்சகம், பழி தீர்த்தலுக்கெல்லாம் ஒரு வடிகால் இருந்தது. இப்போது ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று எல்லார் முன்னிலையிலும் அதைச் செய்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். அல்லது அதற்கென்றே ஒரு தோழமை வாய்த்திருப்பதால் எழுதும் பழக்கம் வழக்கொழிந்துவிட்டது.   

டைரி எழுதுவதில் ஆதார நியதியான அந்தரங்கம் என்பது இப்போதெல்லாம் அடியோடு இல்லையோ என்று நினைக்கத்தோன்றுகிறது. யாருக்கும் அவருக்கான தனி ரகசியம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்றாகிவிட்டதால் டைரி எழுதும் ஆவல் பெரும்பாலும் எவருக்கும் இல்லை. இருப்பவர்களுக்கும் உப்பு, புளி சமாச்சாரங்களோ நாட்டுக்கு சேதி சொல்லும் வகையறா எழுத்துகளோதான் டைரியில் இருக்கும். 

அது டைரி அல்ல. 

வாத்தியார் சுஜாதா சொன்னதுதான். ‘என்ன எழுதுவது என்பதை விட, யாருக்காக எழுதுவது என்று தீர்மானிக்க முடியாமல் ஒவ்வொரு வருடமும், இந்த வருடமும் டைரி எழுதுவதில்லை என்பதையே எழுத வேண்டியிருக்கும். ஆனால், ‘இவ்ளோதூரம் பீற்றிக் கொண்டாயிற்று.. போனாப்போகுது நீயும் ஒரு கருத்து சொல்லேன்’ என்று என்னைக் கேட்டால் ‘டைரி எழுதுங்கள்’ என்பேன். என்னவாவது. எதையாவது. சிலபல வருடங்களுக்குப் பிறகு அசைபோடும் நண்பனாக அது இருக்கும். முடிந்தவரை நல்ல விஷயங்கள் இருப்பது நலம். யாருக்காகவும் அல்ல.. உங்களுக்காக.

vikatan

  • தொடங்கியவர்

சென்னையை கிடுகிடுக்கச் செய்த எமகாதக ‘எம்டன்’!

சென்னையின் தூக்கம் தொலைத்த எமகாதக ‘எம்டன்’ - அது என்ன நிகழ்வு தெரியுமா?

Incrociatore_corazzato_Garibaldi.jpg

’எம்டன் வந்துட்டான்’ என்று கிராமப்புறங்களில் சொலவடை ஒன்று உண்டு. தந்திரசாலிகளைத், திறமைசாலிகளை, அதிகமாகக் கோபப்படுபவர்களை, எதிர்பாராத நேரத்தில் உட்புகுந்து சண்டையைக் கிளப்பிவிட்டு பூகம்பத்தை உண்டாக்குபவர்களை இந்தப் பெயரைச் சொல்லி செல்லமாக அழைப்பார்கள் கிராமத்துப் பெரியவர்கள். அந்த வார்த்தை எதிலிருந்து பிறந்தது என்று யாரேனும் யோசித்திருப்பீர்களா?

’எம்டன்’ என்றால் எமதர்மனின் சுருக்கம் என்று கதையடித்து விடுபவர்களும் உண்டு. ஆனால், உண்மையில் எம்டன் என்பது ஒரு வேற்றுமொழிப் பெயர்.  இன்னும் சொல்லப்போனால், சென்னையை போர் பயத்தில் தத்தளிக்க வைத்து, ஆட்டிவைத்த ஜெர்மானியக் கப்பல் ஒன்றின் பெயர்தான் ‘எம்டன்’. எனினும், எம்டனையும் எமன் என்றே அழைக்கலாம். அந்தக் கப்பல் செய்த வேலைகள் அப்படிப்பட்டவை. 

அது 1914 ஆம் ஆண்டு...உலகப்போர் மும்முரமாக தொடங்கி நடந்துகொண்டிருந்த சமயம். மூன்று மாதங்கள் போரின் நிழலிலேயே கரைந்து விட்டது. இதையெல்லாம் அறியாத சென்னையோ ஆங்கிலேயரின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்தது. இரவின் பிடியில் சலனமற்று தூங்கிக் கொண்டிருந்தது அன்றைய மதராஸ்...இன்றைய சென்னை. அன்று செப்டம்பர் 22 ஆம் தேதி. இரவின் இருளைக் கிழித்துக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றக் கட்டிடத்தின் மீது அமைந்திருந்த கலங்கரை விளக்கம் மட்டும் மெல்லிய ஒளியை சுற்றுமுற்றும் பாய்ச்சிக் கொண்டிருந்தது. 

மின்சார பயன்பாடு இல்லாத காலமது என்பதால் சிம்னி விளக்கின் ஒளியில் சென்னைவாசிகள் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இரவு சரியாக 9.30 மணியளவில் அந்த எமகாதக எம்டன், கலங்கரை விளக்கத்தின் ஒளியில் மெதுவாக வங்காள விரிகுடாவில், 2,250 நாட்டிகல் தொலைவில் முற்றுகையிட்டு நின்றது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட எதிரி நாட்டுப் போர்க்கப்பல்களை மூழ்கடித்து, நீருக்கு இரையாக்கியிருந்தது எம்டன். 20க்கும் மேற்பட்ட பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்த எம்டனின் கேப்டன், போர்த்திறனிலும், தொழில்நுட்பங்களிலும் சிறந்து விளங்கிய வான்முல்லர். 

தமிழகத்தையே ஆட்டிப் படைத்த ஆங்கிலேயர்களின் கண்களில் அந்த நள்ளிரவில் விரலை விட்டு ஆட்டத் தொடங்கியது எம்டன். எம்டனில் இருந்து கணநேரத்தில் புறப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பீரங்கிக் குண்டுகள் மதராஸின் மீது மழையாய்ப் பொழிந்தது. இரவு உணவில் லயித்திருந்த பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகள் சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதல் சூடு பிடித்தது. 

கண்ணிமைக்கும் நேரத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் வீழ்ந்து வெடித்தது எம்டன் ஏவிய குண்டுகள். சென்னையின் பல இடங்கள் தீயின் நாக்குகள் தழுவிய நிலையில் கொழுந்து விட்டு எரிந்தன. ஆங்கிலேயருக்குச் சொந்தமான பர்மியக் கம்பெனி எண்ணெய்க் கப்பல்கள் தீக்கிரையாகி கடலினுள் அமிழ்ந்தன. ஆங்கிலேயர்களுடன், சென்னை மக்களும் அன்று தூக்கத்தைத் தொலைத்தனர். 

அதே ஆண்டு, நவம்பர் மாதம் 9ம் தேதி, ஆஸ்திரேலிய கப்பலான ‘சிட்னி’ தன்னுடைய வலுவான பீரங்கிகளால் தாக்கி மூழ்கடித்தது. பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்களின் பாதுகாப்பையும் மீறி, ஆங்கிலேயர்கள் எதிர்ப்பார்த்திருக்காத தருணத்தில் தாக்குதல் நடத்திய எம்டனின் துணிச்சலும், தந்திரமும் அந்தக் கப்பல் சென்றபிறகும் கூட அதன் பெயரை தமிழகத்தில் நிலைத்திருக்க வைத்தது. இன்றுடன், எம்டன் கப்பல் சென்னையைத் தாக்கி 102 வருடங்கள் ஆகிறது. இனி எங்கேனும் ‘எம்டன்’ என்கிற வார்த்தையைக் கேட்டால் இந்த வரலாறு உங்களுக்கு ஞாபகம் வரும்தானே?!

vikatan

  • தொடங்கியவர்

 

உடும்பு படையெடுப்பு

பாங்காக் லும்பினி பூங்காவை உடும்புகள் கைப்பற்றி உள்ளன. தற்போது, சுமார் 400 உடும்புகள் அங்கு உள்ளன.

  • தொடங்கியவர்

14370368_1136104629771563_28252578124307

அற்புதமான அமர கானங்கள் பாடிய, என்றும் நினைவில் நிற்கும் இனிய பாடல்கள் பாடிய குரலுக்குச் சொந்தக்காரரான காலஞ்சென்ற பழம்பெரும் பின்னணிப்பாடகர் P.B.ஸ்ரீனிவாசின் பிறந்தநாள்.

"காலங்களில் அவள் வசந்தம்" எத்தனை காலம் கடந்தும் மறந்து போகுமா?

 

  • தொடங்கியவர்

14358879_1136105819771444_28815606177014

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் எட் ஜொய்சின் பிறந்தநாள்.
இவர் சில வருடங்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடியிருந்தார்.
Happy Birthday Ed Joyce

 
  • தொடங்கியவர்

அம்மாவின் கனவை நினைவேற்ற, பேக்கரி நடத்தும் 8 வயது சிறுவன்

Julen1.jpg

"ரெண்டு பப்ஸ் கொடுங்கண்ணா?" என்று பேக்கரிக்குள் நுழையும்போதே குரல் கொடுப்பதுதான் நமது வழக்கம். அங்கு இருப்பவருக்கு நம்மை விட வயதில் அதிகமா, குறைவா என்றெல்லாம் யோசிப்பதில்லை. ஆனால் அமெரிக்காவின் கலிஃபோரினியாவில் உள்ள ஒரு பேக்கரிக்குச் செல்பவர்களை க்யூட்டான சின்னஞ்சிறு குரல் வரவேற்கிறது.

அந்தக் குரல் எட்டு வயது ஜலென் பெய்லிக்கு உடையது. வீட்டிலேயே கல்வி கற்றுவரும் ஜலென், சமீபத்தில் அம்மாவின் உதவியுடன்  பேக்கரியைத் தொடங்கி தானே உணவுப் பொருட்களையும் தயாரித்து விற்கும் செய்திதான் நகரின் முக்கியப் பேச்சே. 'ஜலென்ஸ் பேக்கரி' என்ற பெயரில் தொடங்கியிருக்கும் தன் கடைக்குத் தேவையான கேக்ஸ், குக்கீஸ், சாக்லெட்ஸ், சிப்ஸ் எனப் பலவகை உணவுப் பொருட்களை, தானே தயரித்துவிடுகிறார்.

விளையாடியே நேரத்தை கழிக்கும் பருவத்தில் ஜலெனுக்கு எப்படி வந்த ஐடியா?

Julen2.jpg

'' நாங்கள் வாடகை வீட்டிலேயே வசித்துவருகிறோம். அம்மாவுக்கு எப்படியாவது சொந்த வீடு வாங்கவேன்டும் என்பதுதான் கனவு. வீடு வாங்க நிறைய பணம் வேண்டும் இல்லையா? அதனால்தான் இப்போதிலிருந்தே அதற்கான முயற்சியைத் தொடங்கிவிட்டேன். நிச்சயம் அம்மாவின் கனவை நிறைவேற்றுவேன்'' எனச் சொல்லி வியக்க வைக்கிறார் ஜலென்,

நிறைய வேலைகள் இருக்க பேக்கரியைத் தொடங்கியது ஏன் என்று அவரின் அம்மா ஷர்ஹோன்டா மஹனிடம் (Sharhonda Mahan) கேட்டால்,

''சிறுவயதில் இருந்தே ஜலெனுக்கு சமையல் என்றால் பிடிக்கும். அதனால் கடந்த இரண்டு வருடங்களாக பட்டர் பிஸ்கெட்ஸ், பிரெட், கேக்ஸ், சிப்ஸ் போன்ற பேக்கரி ஐட்டம்ஸ்களைத் தயார் செய்வதைக் கற்றுகொடுத்து வந்தேன். அதைச் சுலபமாக கற்றுக்கொண்ட ஜெலன், தானாகவே தயாரிக்கும் அளவுக்கு நம்பிக்கை வந்ததும் பேக்கரி கடையை ஆரம்பிக்க தீர்மானித்தோம்'' என்கிறார்.

Julen3A.jpg 

உணவுப் பொருட்களைத் தயாரிப்பது சின்ன பையன் தானே என்று லேசாக எடைப் போட்டு விடாதீர்கள். ஜலென் தயாரிக்கும்  பேக்கரி ஐட்டம்ஸ் தரமானதாகவும் ருசியாகவும் இருப்பதால் ஜலென்ஸ் பேக்கரிக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதுடன், சுகாதாரத் துறையும் பாராட்டி, அனுமதி வழங்கியுள்ளது.

jalensbakery.com என்ற பெயரில் இனையதளத்தையும் தொடங்கியுள்ளார் ஜலென். அதிலும் ஆர்டர்கள் குவிகின்றன. அவற்றை டெலிவரி செய்ய அம்மா உதவுகிறார். ஜலென்ஸ் பேக்கரி என்ற பெயர்கொண்ட டி-ஷர்ட்களை விற்று வருவது கூடுதலான விஷயம்.

ஜலெனின் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

vikatan

  • தொடங்கியவர்

14370047_1136105433104816_40739173119961

இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரராக விளங்கிய, டெஸ்ட் போட்டிகளில் பிரகாசித்த திலான் சமரவீரவின் பிறந்தநாள்.
Happy Birthday Thilan Samaraweera

  • தொடங்கியவர்

மின்காந்தவியல்,மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த ஆங்கிலேய விஞ்ஞானியான
மைக்கேல் பரடே பிறந்த நாள்.

14450001_1136103309771695_18147016590672

பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே.

மைக்கேல் பரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியலின் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.

  • தொடங்கியவர்

14370285_1136104169771609_74672606792235

நியூ சீலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான மார்ட்டின் குரோவின் பிறந்தநாள்.

புற்றுநோயோடு போராடி வந்தாலும் எந்த நேரமும் சிரித்த முகத்தோடு இளைய வீரர்களுக்கு தன்னால் இயன்ற அறிவுரைகளை வழங்கி வந்த க்ரோ கடந்த மார்ச் மாதம் காலமாகியிருந்தார்.

Happy Birthday Martin Crowe

  • தொடங்கியவர்

உலகின் டாப்- 10 அதிவேக சாலைகள்: சிறப்புத் தொகுப்பு

 

      உலகின் அதிவேக பொது பயன்பாட்டு விரைவு சாலையான ஜெர்மனியின் ஆட்டோபான் பற்றிய செய்தியை படித்திருப்பீர்கள். உலக மோட்டார் வாகன பிரியர்களின் புண்ணிய பூமியமாக கருதும் இந்த சாலையில் ஓட்டிப் பார்ப்பதை தங்களது வாழ்க்கையில் லட்சியமாக சிலர் கொண்டுள்ளனர்.

அதுசரி, உலகிலேயே ஆட்டோபான் மட்டும்தான் அதிவிரைவு சாலையா. இதுபோன்று வேறு சாலைகள் இல்லையா என்று கேட்பவர்களுக்காக பிரபலமான உலகின் டாப்- 10 அதிவிரைவு சாலைகளை இந்த செய்தித் தொகுப்பில் தொகுத்துள்ளோம்.

10-1404974941-fastest-roads-01.jpg

 

த்ரில்லை வழங்கும் சாலைகள்

உலகின் அதிவேக டாப்- 10 சாலைகளின் விபரத்தை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

 

10. ஸ்லோவாக்கியா

10-1404974949-fastest-roads-02.jpg

ஸ்லோவாக்கியா நாட்டின் விரைவு சாலைகளில் மணிக்கு 130 கிமீ வேகத்திற்கு மேல் செல்வதற்கான கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளன. ஆனால், இந்த சாலையில் 56 கிமீ வேகத்தில் செல்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட வேகம். மேலும், இந்த சாலைகளில் இருக்கும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போலீசாரின் சோதனை சாவடிகள் குறித்து ரேடியோ மூலம் தகவல்கள் வழங்கப்படுகின்றன. மேலும், சாலை எச்சரிக்கை குறியீடுகளை வைத்தும் வேகக்கட்டுப்பாடுகளை தெரிந்துகொள்ளலாம்.

 

9.ஐக்கிய அரபு அமீரகம்

10-1404974956-fastest-roads-03.jpg

 ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் காரை ஓட்டுவதற்கு அனுமதியுண்டு. இந்த சாலைகளில் 140 கிமீ வேகம் வரை ஓட்டினாலும் அபராதம் உள்ளிட்ட தொந்தரவுகள் இல்லை. பாலைவனப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சாலைகள் மிகச்சிறப்பான கட்டமைப்பை கொண்டது. அதேபோன்று, விதி முறையை மீறுபவர்களையும் போலீசார் எளிதாக பிடித்துவிடுவதற்கான வசதிகளை வைத்துள்ளனர். புகாட்டி காரில் செல்கிறோமே, யார் நம்மை பிடிக்க முடியும் என்று சென்றீர்கள் என்றால் பின்னாலேயே போலீசாரும் ஒரு புகாட்டி காரில் விரட்டி வந்துவிடுவர் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

 

8.ஆஸ்திரேலியா

10-1404974965-fastest-roads-04.jpg

ஆஸ்திரேலியாவின் விரைவு நெடுஞ்சாலைகளில் 130 கிமீ வேகம் வரை செல்ல முடியும். சமீபத்தில்தான் இந்த வேகக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அங்குள்ள சில சாலைகள் மிகச் சிறந்த கட்டமைப்பையும், மிக குறைவான போக்குவரத்து நெரிசலையும் கொண்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அந்த சாலைகளில் தங்களது கார்களை ஓட்டி வேகத்தை அனுபவித்து பார்க்கலாம்.

7.அமெரிக்கா

10-1404974973-fastest-roads-05.jpg

 

அரிஸோனாவின் ரூட் 79 விரைவு சாலை வாகன ஓட்டிகளுக்கு மிகச்சிறப்பான சாலையாக கூறலாம். மணிக்கு 145 கிமீ வரை எளிதாக செல்லலாம். ஆனால், இந்த சாலையில் 140 கிமீ வேகத்தில் செல்வதற்கு அனுமதி இல்லை.

 

6. நியூசிலாந்து

10-1404974980-fastest-roads-06.jpg

நியூசிலாந்து விரைவு சாலைகளில் அதிவேக சாதனை முயற்சிகளும் நடந்துள்ளன. அந்த அளவு மிகச்சிறப்பான கட்டமைப்பை கொண்டவை. குறிப்பாக, கூடிஸ் சாலை வேக விரும்பிகளுக்கான சொர்க்க புரியாக இருக்கின்றது. கடந்த 1996ம் ஆண்டு இந்த சாலையில் ஒவன் எவான்ஸ் அதிவேக சாதனை புரிந்தபோது பெரும் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். மணிக்கு 348.23 கிமீ வேகத்தை தொட்டு அவர் சாதனை படைத்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

 

5. இத்தாலி

10-1404974993-fastest-roads-07.jpg

இத்தாலியின் மிலன் மற்றும் ரோம் நகரங்களை இணைக்கும் ஏ1 அதிவிரைவு நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளின் மிக விருப்பமான நெடுஞ்சாலைகளில் ஒன்று. இந்த சாலையில் 150 கிமீ வேகம் வரை செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. ஃபெராரி, லம்போர்கினியின் பிறந்த புண்ணிய பூமியில் இந்த சாலை அவசியமானதே.

 

4.நர்பர்க்ரிங்

10-1404975003-fastest-roads-08.jpg

ஜெர்மனியின் கார் பந்தய களமான நர்பர்க்ரிங் அதிவேக பிரியர்களின் வேடந்தாங்கலாக விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த ரேஸ் டிராக்கில் அதிவேகத்துக்கு மட்டுமல்ல ஆபத்துக்களும் நிறைந்தது. விபத்து இல்லாத நாளே இல்லை எனும் அளவுக்கு மிக அபாயகரமான வளைவுகளுடன் கார் பிரியர்களை கவர்ந்து வருகிறது.

 

3.ஐல் ஆஃப் மேன்

10-1404975012-fastest-roads-09.jpg

இந்த நகரிலுள்ள நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாடு எதுவும் கிடையாது. எனவே, இங்குள்ள வாகன ஓட்டிகள் வேகத்திலேயே மூழ்கி திளைக்கின்றனர். ஆண்டுதோறும் மோட்டார்சைக்கிள் பந்தயமும் நடக்கிறது.

 

2. போலந்து

10-1404975021-fastest-roads-10.jpg

ஆட்டோஸ்ட்ரேடா என்ற போலந்து நாட்டு விரைவு நெடுஞ்சாலைகளில் மணிக்கு 140 கிமீ வேகம் வரை செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. ஆட்டோபான் போன்றே இந்த விரைவு சாலைகளும் வாகன ஓட்டிகளை மிகவும் கவர்ந்த ஒன்று.

10-1404975027-fastest-roads-11.jpg

1.ஜெர்மனி

உலகின் நம்பர்- 1 அதிவேக சாலையாக ஜெர்மனியின் ஆட்டோபான் நெடுஞ்சாலைகள் குறிப்பிடப்படுகின்றன. இந்த சாலையில் மணிக்கு 130 கிமீ வேகம் பரிந்துரைக்கப்பட்ட அளவாக உள்ளது. ஆனால், அதைவிட வேகத்தில் செல்வது இங்கு வழக்கம். இதனாலேயே உலக அதிவேக பிரியர்களின் இலக்காக ஆட்டோபான் சாலைகள் இருக்கின்றன. கடந்த 1968ம் ஆண்டு இந்த சாலையில் மணிக்கு 432.59 கிமீ வேகத்தில் சென்ற மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ125 கார் தற்போது அதிவேக சாதனையாக இருக்கிறது.

10-1404975036-fastest-roads-12.jpg

 பானவெல் சால்ட் ஃப்ளாட்ஸ் அமெரிக்காவில் உள்ள பானவெல் சால்ட் ஃப்ளாட்ஸ் பகுதியில் ஒழுங்குப்படுத்தப்பட்ட சாலை அமைப்பு எதுவும் இல்லை. ஆனால், உலகின் அதிவேக சாதனை முயற்சிகள் இங்கு ஏராளமாக நடத்தப்படுகின்றன. பரந்துபட்ட சமதள பகுதியில் முடிந்தவரை வேகத்தை ஓட்டிப் பார்க்கக்கூடிய இடமாக விளங்குகிறது.

http://tamil.drivespark.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கும் ஏமாளிகள் பலருண்டு
 
 

article_1473735879-i78o8p.jpgதங்களது வாழ்க்கையை ஸ்திரமாக்கிக் கொள்ள எதுவிதமான பிரயத்தனங்களையும் செய்யாமல் ஏதாவது பெரிய அதிர்ஷ்டம் கிட்டுமென எதிர்பார்த்தே காலத்தைக் கரைக்கும் ஏமாளிகள் பலருண்டு.

இத்தகைய நபர்கள், மதுபோதையில் இருப்பவர்களை விட, சோம்பல் எனும் போதையில் வாழும் மோசமான வாழ்வை ஏற்பவர்களுமாவர்.

அநேகர், தமது வேதனத்தில் ஒரு பெரும் தொகைக்கு அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்களை வாங்கிவிடுவதுமுண்டு.

எந்த அனுகூலமும் வந்தால் வரட்டும். வாழும் காலத்தை வீணாக்காமல் உழைப்பதே மேலானது என எண்ணும் மனப்பக்குவத்தை உணர்ந்தால், அதிர்ஷ்டத்தின் மீதான மோகம் வரவே வராது.

மெய்வருந்தி உழைப்பதே மேலான இலாபத்தை நல்கும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று 

செப்டெம்பர் - 23

 

1529 : ஒட்­டோமான் பேர­ரசர் முதலாம் சுலைமான் ஆஸ்­தி­ரி­யாவின் வியென்னா மீது படை­யெ­டுத்தார்.

 

1641 : ஒரு பில்­லியன் அமெ­ரிக்க டாலர் பெறு­ம­தி­யான பொருட்­க­ளுடன் 'த மேர்ச்சண்ட் ரோயல்' என்ற கப்பல் மூழ்­கி­யது.

 

814National-Museum-of-Natural-History,-C1799 : இலங்­கையில் அரச ஆணைப்­படி சித்­தி­ர­வதை மற்றும் கொடூ­ர­மான தண்­ட­னைகள் நிறுத்­தப்­பட்­டன. மத சுதந்­திரம் அமு­லுக்கு வந்­தது.

 

1821 : கிரேக்க சுதந்­திரப் போரின்­போது, திரிப்­பொ­லீத்­சாவை கிரேக்­கர்கள் தாக்கி 30,000 துருக்­கி­யரைக் கொன்­றனர்.

 

1846 : நெப்­டியூன் கோள், பிரெஞ்சு வானி­ய­லாளர் உர்­பெயின் ஜோசப் மற்றும் பிரித்­தா­னிய வானி­ய­லாளர் ஜோன் அடம்ஸ் ஆகி­யோரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 

1868 : புவெர்ட்டோ ரிக்­கோவில் ஸ்பானிய ஆட்­சி­யா­ள­ருக்­கெ­தி­ராக கிளர்ச்சி ஆரம்­ப­மா­னது.

 

1889 : நின்­டெண்டோ கம்­பனி ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1905 : நோர்வே, சுவீடன் ஒன்­றி­யத்தை கலைப்­ப­தற்­கான உடன்­ப­டிக்­கையில் இரு நாடு­களும் கையெ­ழுத்­திட்­டன.

 

1932 : ஹிஜாஸ் மற்றும் நெஜிட் ஆகிய இராச்­சி­யங்கள் சவூதி அரே­பியா என்ற பெயரில் ஒன்­றி­ணைந்­தன.

 

1941 : ஜேர்­ம­னிய நாஸி­களின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்­சு­வாயுக் கொலைகள் முதற்­த­ட­வை­யாகப் பரி­சோ­திக்­கப்­பட்­டன.

 

1965 : 1965 ஆம் ஆண்டின் இந்­திய, பாகிஸ்தான் போர் முடி­வுக்கு வந்­தது.

 

814saudija-map.jpg1966 : நாசாவின் சேர்­வெயர் – 2 விண்­கலம் சந்­தி­ரனின் கோர்ப்­ப­னிக்கஸ் என்ற இடத்தில் மோதி­யது.

 

1983 :  மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லையில் சிறை­வைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் அர­சியல் கைதிகள் சிறையை உடைத்துத் தப்­பித்­தனர்.

 

1983 : பாகிஸ்­தானின் கராச்­சி­யி­லி­ருந்து புறப்­பட்ட கல்வ் எயார் விமா­ன­மொன்று அபு­தா­பியை நெருங்­கி­ய­போது குண்­டு­வெ­டிப்­புக்­குள்­ளா­னதால் அதில் பயணம் செய்த 117 பேரும் உயி­ரி­ழந்­தனர்.

 

1986 : இலங்கை, கொழும்பில் தேசிய இயற்கை வர­லாற்று நூதனசாலை பொது­மக்­க­ளுக்குத் திறந்து விடப்பட்டது.

 

2002 : மொஸிலா ஃபயர்பொக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது.

 

2004 : ஹெயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 1,070 பேர் கொல்லப்பட்டனர்.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14355042_1136666146382078_32906057261716

ஐநா மனித உரிமைகள் ஆணையாளராகக் கடமையாற்றியதன் மூலம் உலகம் முழுதும் பரிச்சயமானவரும், இலங்கை மக்களுடன் நெருங்கியவருமான நவநீதம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம்.

இவர் தென்னாபிரிக்காவைச்சேர்ந்த நீதிபதி ஆவார். இவர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் 2003 ம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பணியாற்றி வந்திருக்கிறார்.

  • தொடங்கியவர்

வாயால் டேபிள் டென்னிஸ் விளையாடும் வீரர்..! பாராலிம்பிக் ஆச்சரியம்

pups.jpg

ஒலிம்பிக், பாராலிம்பிக்கைத் தொடர்ந்து பப்பிஸ் ஒலிம்பிக்கும்  முடிவடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியும் பாராலிம்பிக்கின் கடைசி தினத்தில் செல்ல நாய்களுக்கான ஒலிம்பிக் போட்டியும் நடைபெறுவது வழக்கம். ஒலிம்பிக் போட்டி போல,  பாராலிம்பிக் இந்தியாவில் பரவலாக ஒளிபரப்பப்படவில்லை. ஆனால் உண்மையில், ஒலிம்பிக்கை விட பாராலிம்பிக்கில்தான் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களும் அதிசயிக்க வேண்டிய ஆச்சரியங்களும் காத்திருந்தன.

pups%201.jpg

இந்த பாராலிம்பிக்கில் பார்வையற்றோருக்கான கால்பந்துப் போட்டியில் ஈரான் மொராக்கோ அணிகள் மோதின. ஈரான் வீரர் பெசாத் நான்கு மொராக்கோ வீரர்களை அசாத்தியமாக கடந்து கோல் அடிக்க,மெஸ்சி , ரொனால்டோ தோத்தாங்க போங்க. பார்வை இருந்தாலே கூட நான்கு பேரை கடத்திச் சென்று கோல் அடிப்பது குதிரைக் கொம்பு. ஆனால் பெசாத் தனி ஆளாக பந்தை கடத்திச் சென்று கோல் அடித்து மிரட்டிவிட்டார்.

வாயால வம்பு பேசி நாம் நேரத்தை வீணடிப்போம் நாம். ஈரானைச் சேர்ந்த இப்ராஹிம் ஹமோட்டாவுக்கு பத்து வயதில் விபத்தில் சிக்கி கைகள் பறிபோயின. சுருண்டு விடவில்லை. புலம்பிக் கொண்டிருக்கவில்லை. வாயால் டேபிள் டென்னிஸ் விளையாடப் பழகினார். டேபிள் டென்னிசோ படு ஸ்பீட் கேம். அதுல கையில்லாம எப்படினு நினைக்காதீங்க . வாயால் டேபிள் டென்னிஸ் விளையாடுவது இப்ராஹிமுக்கு கை வந்த கலை.  அப்போ சர்வீஸ் எப்படி போடுவார்னு யோசிக்காதீங்க. டோவால் பந்தை உயரேப் போட்டு வாயால் சர்வீஸ் அடிக்கிறார். பந்து டேபிளில் பட்டுத் தெரிக்கிறது. அத்தனை வேகம். படு ஸ்பீடான டேபிள் டென்னிசை விளையாடுவதற்கு எத்தனை முயற்சியும் எத்தகைய பயிற்சியும் எடுத்திருக்க வேண்டும். பல ஆண்டு கால முயற்சிக்கு பின்னரே இப்ராஹிமால் வாயால் டேபிள் டென்னிஸ் விளையாட முடிந்தது. ''நாம் விரும்பும் செயலை நிகழ்த்திக் காட்ட எந்த வித சமரசத்தையும் செய்து கொள்ளக் கூடாது. சமரசம் செய்து கொள்ளாமல் போராடினாலே வெற்றி வசமாகும்'' என்கிறார் இப்ராஹிம். இப்ராஹிம் டேபிள் டென்னிஸ் விளையாடும் யு டியூப் வீடியோ பயங்கர ஹிட். 

 

 

 

ரியோ பாராலிம்பிக்கில் உலகின் இரண்டாவது உயரமான மனிதரும் பங்கேற்றிருந்தார். அவரது பெயர் மார்டெஸா. ஈரானைச் சேர்ந்தவர். உயரம் 8 அடி ஒரு இஞ்ச்.  'அக்ரோமோளி ' என்ற ஹார்மோன் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டவர். இவரது வலது கால் இடது காலை விட 6 இஞ்ச் உயரம் கம்மியாக இருக்கும். அதனால், மெர்டஸாவால் சரியாக நடக்க முடியாது. ஊன்றுகோள் உதவியுடன்தான் நடப்பார். சும்மா அமர்ந்திருந்தாலே மனிதர் 6 அடிக்கு இருப்பார். இவர் தான் வாலிபால் ஹீரோ.

வில்வித்தையில் அசர வைத்தவர் மத் ஸ்டட்ஸ்மேன் என்ற ஆர்ம்லெஸ் ஆர்ச்சர். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டட்ஸ்மேன் கடந்த லண்டன் பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ரியோவில் பதக்கம் வெல்லவில்லையென்றாலும் இவர் அம்பு எய்வதை பார்க்கவே அரங்கத்தில் கூட்டம் அலை மோதியது. வலது காலால் வில்லைத் தூக்கி நாடியால் அம்பை எய்கிறார். 283.59 மீட்டர் தொலைவுக்கு அம்பு எய்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். இவரது இந்த சாதனை இன்று வரை கை உள்ளவர்களாலேயே கூட முறியடிக்கப்படவில்லை.

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி பார்முலா ஒன் வீரர் அலெக்ஸ் ஸனார்டி கொடூர விபத்தில் சிக்கினார். இத்தாலியைச் சேந்த் இவர் யூரோ ஸ்பீடுவேயில் இருந்து காருடன் தூக்கி எறியப்பட்டார். விபத்தில் அலெக்சின் உடலில் இருந்து 3 லிட்டர் ரத்தம் வெளியேறி விட்டது. அவரது இதயம் 7 முறை நின்று நின்று இயங்கியது. எனினும் மருத்துவர்கள் கடும் முயற்சி எடுத்து அவரைக் காப்பற்றி விட்டனர். விபத்தில் இரு கால்களும் இழந்து விட்டார். ஆனால், வீட்டில் முடங்கிக் கிடக்கவில்லை. கையால் சைக்கிள் ஓட்டத் தொடங்கினார். ரியோ பாராலிம்பிக்கில் தான் விபத்தில் சிக்கிய அதே தேதியில் அதாவது செப்டம்பர் 15ம் தேதி பாரா சைக்கிளிங்கில் அலெக்ஸ் தங்கம் வென்றது அனைவரையும் நெகிழ வைத்தது.

உங்களுக்கு உசேன் போல்ட்டைத் தெரியும். 100 மீட்டர் சாம்பியன். உலகின் மிக வேகமான மனிதர். பாராலிம்பிக்ல உசேன் போல்ட் யார் எனத் தெரியுமா?. அயர்லாந்தைச் சேர்ந்த ஜேசன் ஸ்மித் என்பவர்தான் பாராலிம்பிக்கின் சிறுத்தை. இவரும் உசேன் போல்ட் போல தொடர்ச்சியாக 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்று முறை தங்கம் வென்றுள்ளார். பெய்ஜிங், லண்டன் ரியோ என ஜேசன் ஸ்மித்தின் தங்க வேட்டைத் தொடர்ந்தது. கியூபா வீராங்கனை ஓமாரா டுரான்ட் மகளிருக்கான 100 மீட்டரில் தங்கம் வென்றார். இவர் பார்வைக் குறைபாடு உள்ளவர்.

ஒலிம்பிக் வீரர்களைக் காட்டிலும் பாராலிம்பிக் வீரர்களிடம் இருந்துதான் நாம் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்றேத் தோன்றுகிறது!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.