Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அங்கோர் வாட் அதிசயங்கள்

Featured Replies

கொரியாவிலிருந்து சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து அங்கோர்வாட் கோயில்கள் இருக்கும் சயாம்ரீப் போவது எங்கள் திட்டம். சயாம் ரீப் கம்போடியாவிலுள்ள ஒரு சிறு நகரம். ஆனால் அன்று அந்த விமானம் ஏதோ காரணத்தால் ரத்து செய்யப் பட்டது. அதனால் நாங்கள் சிங்கப்பூரில் ஒரு நாள் தங்க வேண்டியதாகி விட்டது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ஸிலிருந்து, எங்களுக்குத் தங்குவதற்கு ஹோட்டல், அங்கு செல்ல, வர டாக்ஸி, உணவு எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

கம்போடியாவில் இருக்க வேண்டிய மூன்று நாட்களில் ஒன்று வீணாகி விட்டதே என்ற வருத்தத்துடன் மறுநாள் சயாம்ரீப் சென்று சேர்ந்தோம்.

சயாம்ரீப் அதன் அருகிலுள்ள அங்கோர்வாட் கோயிலால் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகி விட்டது. விமான நிலையம் நமது பழைய மதுரை விமான நிலையம் போல் இருக்கிறது.

விமான நிலையத்திலிருந்து நாங்கள் தங்கிய அனந்த்ரா ரிசார்ட்டிற்கு எங்களை அழைத்துச் செல்ல காருடன் வந்திருந்தனர். குனிந்து, நம்மைப்போல் வணக்கம் சொல்லி, தண்ணீர், முகம் துடைக்கத் துண்டு, தாமரை மலர்கள் கொடுத்து அழைத்துச் சென்றனர்.

கம்போடியா தென் கிழக்கு ஆசியாவில் பர்மா - தற்போது மியான்மார் - அதை அடுத்து அமைந்துள்ள ஒரு சிறிய நாடு. இதன் கிழக்கில் வியட்நாமும், மேற்கில் தாய்லாந்தும், வடக்கில் லாவோஸும், தெற்கில் தாய்லாந்து கடலும் அமைந்துள்ளன.

கம்போடிய மக்கள் மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். இடுங்கிய கண்கள், சப்பை மூக்குடன், ஒல்லியாக இருக்கின்றனர் .கொரிய மக்களின் தள தளப்பு இவர்களிடம் இல்லை. மக்கள் பெரும்பாலும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்.

siem reap area

கம்போடியா ஏழ்மையில் தவிக்கும் நாடு. பிரான்சின் ஆதிக்கத்தில் 1863 முதல் இருந்து 1953 வரை இருந்து பின்பு சுதந்திரம் பெற்று இருக்கிறது. அதன் பின் நடந்த வியட்னாம் போரினாலும், உள்நாட்டுப் போரினாலும் மிகவும் நலிவுற்று இருக்கிறது.

சயாம்ரீப் சுற்றுலாத் தலமாக இருப்பதால் எல்லா இடங்களிலும் சிறிது ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் இருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளிடம் நினைவுப் பொருட்கள் விற்க வரும் சிறு பிள்ளைகள் கூட சில வார்த்தைகள் ஆங்கிலம் பேசுகின்றனர். அவர்களில் சிலர் நான் வைத்திருந்த பொட்டைப் பார்த்து "பிந்தி "என்று கேட்டு வாங்கிக் கொண்டனர்.

அவர்களது நாணயம் ரியால். 4000 ரியால் ஒரு டாலர் ஆகும். ரியாலுக்கு மதிப்பே இல்லை. சயாமரீப் முழுவதும் டாலர் தான் புழக்கத்தில் இருக்கிறது. எல்லாக் கோயில்களையும் பார்க்க ஒரு நாளைக்கு 20 டாலர், மூன்று நாட்களுக்கு 40 டாலர் என்று வாங்குகின்றனர்.

அங்கு சுற்றிப் பார்க்க டாக்ஸிகளும், பைக், ஸ்கூட்டர்களும், டொக்டொக் என்ற வண்டிகளும் உண்டு. டொக்டொக் என்பது பைக், ஸ்கூட்டரின் பின்னால் இணைக்கப்பட்டுள்ள ஒரு வண்டி ஆகும். உட்காருமிடம் நம்மூர் ஆட்டோ போல் இருக்கிறது. இரு சக்கர வாகனத்தின் பின்னே நம்மூர் தள்ளுவண்டிகள் போல் கடைகளையும் இணைத்துக் கொள்கின்றனர்.

நாஙகள் மாலையில் தான் போய்ச் சேர்ந்ததால், சற்று நேரம் கடைத் தெருவைப் பார்த்து விட்டு, "அப்சரா ஷோ" என்னும் நடன நிகழ்ச்சியுடன் கூடிய "பூபே" சாப்பிடச் சென்றோம். பலப்பல அசைவ உணவுப் பொருட்கள் இருந்தன. எங்களால் சாப்பிட முடிந்தன சிலவே. எக்பிளாண்ட்(ஒருவித கத்தரிக்காய்), காரட், வாழைப்பழம் முதலியவற்றைப் பஜ்ஜி போல் செய்திருந்தனர்.

combodia apsara dance

அங்குள்ள கோயில்களிளெல்லாம் "அப்சரா" என்னும் தேவ கன்னிகைகளின் புடைப்புச்சிற்பங்கள் நிறைய உண்டு. அந்த அலங்காரங்களுடன் பெண்கள் ஆடும் நாட்டிய நிகழ்ச்சி, மீனவப் பெண்களும் ஆண்களும் ஆடும் ஒரு காதல் நடனம், மற்றும் சில நடனங்கள் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாக "அப்சரா நடனம்" என்ற பெயரில் பல ஹோட்டல்களிலும் அந்த நிகழ்ச்சி சாப்பாடுடன் நடக்கிறது.

நாங்கள் தங்கிய ஹோட்டலும் நல்ல வசதியாக இருந்தது. படுக்கை அலங்காரம் எல்லாம் மிக நேர்த்தியாக இருந்தது. மறுநாள் ஐந்து மணிக்கெல்லாம் அங்கோர்வாட் கோயிலில் சூரிய உதயம் காணச் செல்ல வேண்டும் என்ற நினைவுடன் தூங்கச் சென்றோம்.

 

http://keetru.com/index.php/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/27593-2014-12-29-01-29-34

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஆதவன்....! முடிந்தவரை படங்களையும் இணையுங்கள்....!

  • தொடங்கியவர்

அங்கோர் வாட் பெரிய கோயில்

கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவுடன் கம்போடியாவுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. காம்புஜராஜா என்ற இந்திய அரசன் கம்போடியா சென்று, மேரோ என்ற பெண்னை மணந்து, இருவரும் இணைந்து அரசாட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. காம்புஜராஜா என்ற பெயரிலிருந்து 'கம்பூசியா' (kampuchea) என்றாகி தற்போது கம்போடியா ஆகி இருக்கிறது. இவர்களின் வழிவந்தவர்களே "கெமிர்" என்ற அரச குடும்பத்தினர் என்று கூறப்படுகிறது.

angkor-wat-temple

கவுண்டின்யா என்ற அரசன், தான் கண்ட கனவின் படி கம்போடியா சென்று, சோமா என்ற பெண்ணை மணந்து, அரசாட்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

அது எப்படியோ தெரியவில்லை. ஆனால் இந்தியாவிலிருந்து இந்து மதம், இந்துக்கடவுளர்கள், இந்தியக் கலைகள், புத்த மதம் எல்லாம் கம்போடியா சென்றிருக்கின்றன. இந்தியா சீனாவை இணைத்த சில்க் ரூட்டில் கம்போடியா இருந்ததால் நம் நாட்டுடன் வாணிகம் இருந்திருக்கிறது. வணிகர்கள் மூலமும் இந்து மதம், புத்த மதம், இந்தியக்கலைகள் அங்கு சென்றிருக்கின்றன.

கி பி 802ல் இரண்டாம் ஜெயவர்மன் என்ற அரசன் தாய்லாந்து, பர்மா, மற்ற நாடுகளின் பல பகுதிகளை வென்று, வங்கக் கடல் வரை "கெமிர்" என்ற பலமிக்க அரசை நிறுவியிருக்கிறான். இந்தக் கெமிர் அரசு ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரை சிறப்புடன் இருந்திருக்கிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

ஜெயவர்மன், சூரிய வர்மன், ராஜேந்திர வர்மன், உதயாதித்ய வர்மன் போன்ற அரசர்களின் பெயர்கள், நம் தமிழகத்து அரசர்கள் பெயர் போலவே இருக்கின்றன. சில இடங்களில் உள்ள கல்வெட்டுக்களின் எழுத்துக்கள் பல்லவர்களின் எழுத்துக்கள் போன்று இருக்கின்றன என்று கூறப்படுகிறது. நம் மன்னர்கள் குறிப்பாக ராஜேந்திர சோழன் படையெடுத்து வென்றபோது கட்டினாரா என்று தெரியவில்லை.

இவையெல்லாம் அங்கோர் வாட் பற்றி வலைத்தளத்தில் கண்டறிந்த செய்திகள். இந்தச் செய்திகள் எல்லாம் மனதில் உந்த, உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலைக் காண மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன்.

சுமார் 500 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப் பெரிய கோயில். 1113_1160க்குள் இரண்டாம் சூரியவர்மன் என்ற கெமிர் மன்னரால் அங்கோர் வாட் நகரமும், விஷ்ணுவுக்காக மிகப் பெரிய இந்தக் கோயிலும் கட்டப்பட்ட பொழுது அந்தப் பகுதி மிகச் செழிப்புடன் இருந்திருக்க வேண்டும். மதச்சார்புடன் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களுள் உலகில் இதுவே மிகப் பெரியது. அந்நகரத்தில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வாழ்ந்தனர். தொழிற் புரட்சிக்கு முன் இருந்த நகரங்களில் இதுவே மிகப் பெரியது.

அங்கோர் வாட் என்ற பெயர் "nagara vata" என்ற சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து வந்திருக்கிறது. இதன் பொருள் கோயில் நகரம் என்பதாகும்.

முற்றிலும் கற்களால் கட்டப்பட்டு, நம் சோழர் காலக் கோயிலைப் போல இருந்த அக்கோயில் மேற்கு பார்த்த வண்ணம் இருக்கிறது. சூரிய உதயத்தின் போது சூரியன் கோயிலின் பின் எழுவது பார்க்கப் பரவசமாயிருக்கும் காட்சி என்று கூறப்பட்டதால் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஆனால் அன்று மேகமூட்டமாய் இருந்ததால் சூரிய உதயம் காண முடியவில்லை. சற்று மேலே சென்றபின் தான் எட்டிப் பார்த்தான்.


கோயிலைச் சுற்றி 5 கிமீ சுற்றளவுள்ள அகழி உள்ளது. இதன் ஆழம் 13 அடி. பெரிய கோயிலின் அடித்தளத்தைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர் மிகவும் உயரமாகவோ, குறைந்தோ போகாமல் பாதுகாக்கவும் இது உதவுகிறது. 53 மில்லியன் கன அடி மணலைத் தோண்டி எடுத்து, பல ஆயிரம் மக்கள் உழைப்பினால் இது தோண்டப்பட்டிருக்கிறது.

அகழிக்கு முன்னால் பாதுகாப்பிற்காக சிங்கங்களின் சிலைகள் உள்ளன. ஐந்து தலைநாகமும் அதன் நீளமான உடலும் கைப்பிடிச் சுவராக அமைக்கப்பட்டுள்ளன. அகழியைத் தாண்டி, உள்ளே சற்று தூரம் சென்றபின் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது.

apsara statueதூரத்தில் இருந்து பார்த்தால் தஞ்சைக் கோயில் சுற்று மண்டபம் போல் தூண்களுடன் தெரிகிறது. உயரமான பீடத்தின் மேல் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் உள்ள கோயில் சுற்றுச்சுவர் முழுவதும் நீளமாக, பெரியளவில் இராமாயண, மகாபாரத இதிகாசக் காட்சிகள், பாற்கடல் கடைவது போன்றவை ஓவியம் போன்று, சிறிதளவு புடைத்த சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. போர்களத்தில விபீஷணன், லட்சுமணனுடன் இரரமன், இராவணனுடன் போருக்கு நிற்பது, அனுமன் சஞ்சீவி மலையுடன் வருவது எல்லாம் தெளிவாகத் தெரிந்தது. ஒவ்வொன்றையும் நின்று நிதானமாகப் பார்க்க நேரம் தான் இல்லை.

மாபெரும் கோயில் அது. அடுத்த தளத்தில் நூலகம் என்று சில கல்கட்டடங்கள் காட்டப்படுகினறன. ஆங்காங்கே அப்சரா சிற்பங்கள், அலங்காரக் கற்பலகணிகள் இருக்கின்றன. சுமார் 1800 அப்சரா சிற்பங்களும், அவற்றில் சுமார் 300விதமான தலை அலங்காரங்கள் இருக்கின்றனவாம். சில இடங்களில புத்தர் சிற்பங்கள் வைக்கப்பட்டு தற்பொழுதும் வழிபாடு நடந்து வருகிறது.

இரண்டாம் தளத்தைக் கடந்து நடுப்பகுதிக்கு வந்தால் அங்கு தான் 200 அடிக்கு மேல் உயரம் உள்ள நடுக் கோபுரமும், அதைச் சுற்றி 4 சிறிய கோபுரங்களும் உள்ளன. தஞ்சைக் கோயில் விமானம் "தட்சிண மேரு" என்று கூறப்படுவதைப் போல் இதுவும் "மேரு மலை" - கடவுளின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. இங்கிருந்து கடவுளும், அவரது பிரதிநிதியாக அரசர், தேவராஜாவாக இருந்து ஆட்சி நடத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்த மேல் தளத்திற்கு செங்குத்தான படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அங்கு ஏறிச் சென்று சுற்றிப் பார்த்தால் கோவிலும் அதைச் சுற்றிலுமுள்ள மரங்களும் மிக அழகாக இருக்கிறது. இங்கு பெரிய கற் கோபுரத்தின் அடியில் மூலவராக விஷ்ணு எட்டு கரங்களுடன் இருக்கிறார். காஞ்சிக் கோயில்களிலும் விஷ்ணுவுக்கு எட்டு கரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவின் திசை மேற்கு என்பதால் மேற்கு நோக்கிக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோயில் மேற்கு நோக்கி இருப்பதை வைத்து இக்கோயில் மன்னன் இறந்த பின், அவனது அஸ்தியை வைக்கும் இடமாகவும் கட்டப்பட்டிருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

கோயில் முழுவதும் கற்களைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருக்கிறது. உட்பகுதி "லேட்டரைட் "(laterite) எனப்படும் எரிமலைக் கற்களாலும், மேற்பகுதி செதுக்குவதற்கு வசதியாக மணற்கற்களாலும்(sandstones) கட்டப்பட்டிருக்கிறது. அங்கிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள குலன் (kulen hills) மலையிலிருந்து நதி வழியாகக் கற்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.

பெரும்பாலான கற்களில் துளைகள் காணப்படுகின்றன. அவற்றில் மரக் கொம்புகள் செருகி தூக்கியோ இழுத்தோ உபயோகித்திருக்கிறார்கள். கற்களைச் சேர்க்க சாந்தோ, மண்ணோ பூசவில்லை. ஒன்றை ஒன்று தேய்த்தே நேர்த்தியாக இடைவெளி இல்லாமல் சேர்த்திருக்கிறார்கள். நவீன கருவிகள் இல்லாமல் உடல் உழைப்பை மட்டுமே பயன்படுத்தி இவ்வாறெல்லாம் செய்தது விந்தை தான்.

கோயிலின் கூரைப்பகுதி, கோபுரப்பகுதியில் கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, உட்கூடு இருப்பது போல் அமைத்திருக்கிறார்கள். தஞ்சை மற்றும் சோழர் கால விமானங்கள், கோபுரங்கள் கற்களால் உட்கூடு உள்ளபடி தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது கோபுரத்தின் கீழே இருந்து அண்ணாந்து பார்த்தால் மேற்பகுதி வரை தெரியும்.

முதலில் விஷ்ணு கோயிலாகக் கட்டப்பட்டது, மன்னர்கள் புத்த மதத்திற்கு மாறிய போது கோயிலும் மஹாயான புத்தக் கோயிலாக மாற்றப் பட்டது. சைவத்திற்குரிய லிங்கம், ஆவுடையாரும் சில இடங்களில் காணப் படுகின்றன. பின் 14ம் நூற்றாண்டில் இலஙகையிலிருந்து வந்த தேரவாத புத்த மதத்தைச் (theravada buddhism)சார்ந்த கோயிலாகத் தற்போது இருக்கிறது.

9ம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை சிறப்புடன் இந்தப் பகுதி இருந்து வந்திருக்கிறது. அதன் பின் தாய்லாந்துடன் போர் மற்றும் பல காரணங்களால் தலைநகர் நாம்பென்னிற்கு மாற்றப் பட்டிருக்கிறது. அதன்பின் அங்கோர்வாட் நகரின் முக்கியத்துவம் குறைந்து உள்ளூர் மக்கள் மட்டுமே அறிந்த இடமாகக் கோயில் மாறியிருக்கிறது. 1900களில் பிரெஞ்சுக்காரர்கள் இக் கலைப் பொக்கிஷத்தைக் கண்டறிந்து, உலகிற்கு அறிவிக்கும் வரையில் மரங்கள் வளர்ந்து, சிதைவுற்ற நிலையில் இருந்திருக்கிறது.

பிரெஞ்சுக்காரர்கள் கோயிலை பழைய பாணி மாறாமல் சீரமைத்து இருக்கிறார்கள். வியட்நாம் போரையும் உள்நாட்டுப் போரையும் தாங்கி கோயில் நிமிர்ந்து நிற்கிறது. இப்பொழுதும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இப்பிரமாண்டத்தைப் பார்க்க வருகிறார்கள். மேற்கத்திய மக்களைக் காட்டிலும் ஜப்பான், கொரியா, சீனா போன்ற கீழை நாட்டு மக்கள் அதிகம் வருகின்றனர். பலவிதப் படப்பிடிப்புக் கருவிகளுடன் வந்து படம் எடுக்கின்றனர். நாங்கள் சென்றிருந்த போது ஒருவர், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பிளேன் மாதிரி ஒரு கருவியில் காமிராவை வைத்து மேற்பகுதியிலிருந்து கோவிலைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

angkor wat temple

தமிழகத்திலிருந்து சென்ற ஒரு மன்னனால் தமிழக முறையில் கட்டப்பட்ட ஒரு கோயில், இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள பிரமாண்ட இந்துக்கோயில் என்றெல்லாம் இதைப் பார்க்க மிகுந்த ஆவலுடன் சென்றிருந்தேன். கோவிலின் தூண்களுடன் கூடிய நீண்ட பிரகாரம் தஞ்சைக் கோயிலை ஒத்திருந்தாலும், கோபுரங்கள் அகலமாக இல்லாமல் குறுகலாக, உயரமாக பூரி கோயில், மற்ற சில வட இந்தியக் கோயில்கள் போல், ஆனால் கல்லினால் கட்டப் பட்டிருந்தன.

மேலும் அங்கு புடைப்புச் சிற்பங்கள் தவிர, நமது கோயில்களில் இருக்கும் முழுமையான சிற்பங்கள் இல்லை. ஆனால் இந்தியாவின் தாக்கம் நிறைய இருப்பது தெளிவாகத் தெரிந்தது. இந்திய பாணியுடன், அங்கு நிலவிய முறை, அதன் அண்டை நாடான சயாம் போன்ற நாடுகளின் பாணி எல்லாம் சேர்ந்து ஒரு மாபெரும் கோயிலாக உருவாகி இருக்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே நமது நாட்டின் புகழ், பெருமை, கலை, கலாச்சாரம் கடல் கடந்து சென்று பரவி நம் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து, மகிழ்வுடன் அடுத்த கோயிலுக்குச் சென்றோம்.

 

http://keetru.com/index.php/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/27621-2015-01-02-06-56-44

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க சுவராசியமாக உள்ளது, பகிர்விற்கு நன்றி ஆதவன். tkqe4fh-smiley-two-thumbs-up_175028.gif

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அங்கோர் வாட் அதிசயங்கள் - ஆயிரம் லிங்கங்கள் பதித்த ஆறு

9ம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை அங்கோர் வாட்டைச் சுற்றிலும் கெமிர் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்து இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

அவற்றில் முக்கியமானது என்று (river of thousand lingas) சொல்லப்படும், ஆயிரம் லிங்கங்கள் பதிக்கப் பெற்ற ஆற்றுப் பகுதியாகும். அங்கோர்வாட்டிற்கு வடகிழக்குப் பகுதியில் குலன் மலைப்பகுதி (kulen hills) உள்ளது. அந்தப் பகுதி மரங்கள், செடிகள் அடர்ந்த காட்டுப் பகுதியாக, நம்மூர் குற்றாலம், கொடைக்கானல் போல் உள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மண் ரோடு தான்.

River of Thousand Lingas

அம் மலைப் பகுதியிலிருந்து, சயாம்ரீப என்ற ஆற்றின் துணை ஆறான ஸ்டங் என்ற ஆறு வருகிறது. மலையில் காட்டுப் பகுதியில் இந்த ஆறு ஓடி வரும் வழியில் தண்ணீருக்கு அடியில், மணற்பாறைகளில் வரிசையாக லிங்கம் செதுக்கப் பட்டிருக்கிறது. சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு ஒரே மாதிரி லிங்கங்கள், சில பெரிய லிங்கங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. சதுரமாக ஆவுடையாரும், அதற்குள் வட்டமாக லிங்கமும் இருக்கின்றன. அதைப் பார்த்ததும் எனக்கு குற்றாலத்தில், பெரிய அருவியில் பாறைகளில் லிங்கங்கள் செதுக்கப்பட்டிருப்பது தான் நினைவுக்கு வந்தது.

மற்றும் லட்சுமி, அனந்த சயனன், பிரம்மாவுடன் சயன நிலையில் விஷ்ணுவின் உருவம் தண்ணீர் ஓடும் வழிகளிலும், ஆற்றின் கரைகளிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் சென்ற சமயம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததால் உமா சகித சிவன், இராமர், அனுமான் மற்றும் மிருகங்கள் சிற்பங்களைப் பார்க்க முடியவில்லை.

இச் சிற்பங்கள் 11-12ஆம் நூற்றாண்டில் முதலாம் சூரிய வர்மன் காலத்திலிருந்து இரண்டாம் உதயாதித்ய வர்மன் காலம் வரை, அப்பகுதியில் வாழ்ந்த துறவிகளால் செதுக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.

"எதற்காக இப்படி ஆற்றுப் படுகையில் செதுக்கினர் தெரியுமா? கங்கையைப் போல் தண்ணீரைப் புனிதப்படுத்த" என்று எங்கள் வழிகாட்டி கூறினார். லிங்கங்கள் வழியே பாயும் ஆறு, பின்னர் ஓர் அருவியாக விழுகிறது. அதில் மக்கள் குளிக்கின்றனர். புனிதப்படுத்தப்பட்ட ஆறு, நாட்டின் வழியே பாய்ந்து, வயல்களில் நெல் உற்பத்தியைப் பெருக்கி, நாட்டையும் புனிதப் படுத்தி, வளப்படுத்துவதாக அம்மக்கள் நம்புகின்றனர்.

kulen falls

அருவியின் அருகிலுள்ள பெரிய மரங்களிலிருந்து, பெரிய ஊஞ்சல்கள் போல் கூடை நாற்காலிகள், பிளாஸ்டிக் செடி, பூ அலங்காரங்களுடன் தொங்க விட்டிருக்கிறார்கள். அருவியின் பின்னணியுடன் அங்கு அமர்ந்து, தலையில் மலர் வளையத்துடன் புகைப்படம் எடுப்பது பறப்பது போல் இருந்தது.

அருவிக்குச் செல்லும் வழி சற்று சிரமமாக இருந்தாலும், சென்று, குளித்து மகிழ்ந்தோம். ஆற்றின் அருகில் மக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க, சாப்பிட சிறு சிறு மரக்கூடாரங்கள் - அடிப்பகுதி தரையிலிருந்து சற்று மேலே இருக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள். சிறு சிறு கடைகளும் இருந்தன. அங்கே ஒரு பாட்டி வாழைப்பழத்தைச் சாதத்தின் உள்ளே வைத்து சுட்டுக் கொடுத்தார். நன்றாகவே இருந்தது.

அங்கிருந்து சற்று தூரம் மலையில் சென்று சிறிது தூரம் படியில் ஏறிச் சென்றால் ஒரு சிவன் கோயில் இருந்தது. நெற்றிக் கண்ணுடன், கையில் சங்கு சக்கரத்துடன் சிவன் நின்ற நிலையில் இருந்தார். எதனால் அப்படி என்று தெரியவில்லை. அந்தப் பகுதியில் முதலில் இருந்த தலைநகரின் பெயர் ஹரிஹராலயா என்று வழிகாட்டி சொன்னார். அதற்கும் சிவனின் தோற்றத்திற்கும் சம்பந்தம் உண்டா என்று தெரியவில்லை. சிலை பழையதாக இல்லாமல் சமீப காலத்தியதாகவே இருந்தது. சிவலிங்கமும் இருந்தது. தண்ணீர் ஊற்றி நாமே அபிசேகமும் செய்யலாம்.

படியில் மேலே சென்றால் ஒரு பாறையின் உச்சிப் பகுதியில், படுத்த நிலையில் பெரிய புத்தர்சிலை இருக்கிறது. எப்படித்தான் ஒரு உருண்டைப் பாறையின் உச்சியில செதுக்கினார்களோ தெரியவில்லை. அந்த இடத்தைச் சுற்றி மலர்ந்த செண்பகப் பூக்களுடன், வாசமாக மரங்கள் இருந்து ரம்மியமாக இருந்தது.

இடம் பார்க்க அழகாக இருந்தாலும் அந்த இடத்தில் வசதிகள் அதிகம் இல்லை. அங்கு சில கடைகளில் அரை டாலருக்கு, அவர்கள் நாணயமான ரியால் கட்டுகள் விற்கிறார்கள். எதற்காக என்றால் அங்கே கோயில் செல்லும் வழியில் படியில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள், சிறு பிள்ளைகளுக்குப் போடுவதற்காக. நம்மூரில் சில்லறை வாங்குவது போல் டாலருக்கு ரியாலை விற்கிறார்கள். பயணிகளும் அவர்கள் மேல் பரிதாபப்பட்டோ, அவர்கள் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காகவோ வாங்கிப் போடுகிறார்கள்.

சயாம்ரீப்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக பெரிய பெரிய ஹோட்டல்களைப் பார்த்த நமககு சாதாரண மக்களின் நிலை மிகவும் கஷ்டமாக இருந்தது.

சுற்றுலாப் பயணிகளுக்காக ஹெலிகாப்டரில் கோயிலைச் சுற்றிப் பார்த்தல், பலூனில் பறப்பது, யானை மேல் செல்வது எல்லாம் உண்டு. மற்றும் ஜிப் வயர் ரைடு (zip wire ride) என்னும் காட்டிற்குள் கம்பியில் தொங்கிக் கொண்டு செல்வதும் உண்டு. எங்கள் மகள், மருமகன், பேரன்கள் சென்று நன்றாக இருந்ததாகச் சொன்னார்கள்.

நம் நாட்டிலிருந்து எவ்வளவோ தூரத்தில் கடல் கடந்து இருக்கும் ஒரு நாட்டில், அதுவும் காட்டுப் பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட லிங்கங்கள் செதுக்கியிருக்கிறார்கள் என்றால் நமது மன்னர்கள் எவ்வளவு சமயப்பற்று பிடித்தவர்களாக இருந்திருக்க வேண்டும்! அவ்வளவு தூரம் செல்லவேண்டுமென்றால் நமது நாடு எவ்வளவு வளமாக, பலம் மிக்கதாக இருந்திருக்க வேண்டும்.! நினைக்கவே வியப்பாக இருக்கிறதல்லவா!!!

 

http://keetru.com/index.php/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/27666-2015-01-09-04-00-06

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஆண்ட மன்னர்கள் சிவலிங்க பூஜை செய்து வந்திருக்கிறார்கள் 
இவர்களுடைய அரசு அமைப்பு சிவலிங்கங்களை வைத்தே வடிமைக்க பட்டிருக்கிறது 

இப்போதும் பல விடயம் காடுகளில் இருக்கிறது 
ரகசியமாக கம்போடிய அரசு பாதுகாத்து வருகிறது 

சில இடங்களை இப்போது பார்க்க விடுகிறார்கள்.

கிந்தியா இது பற்றி வாய் திறப்பதில்லை காரணம் 
இந்து மதத்தில் சிவ பூஜை முக்கியமில்லை.

இது சைவ சமயத்துடன் நெருக்கமுடையது.
கிண்டபோனால் தமிழர்களுக்கு பெருமை வந்துவிடும் என்ற அச்சம்.

யாழில் தமிழன் குரங்கிற்கு அனுமான் என்று பெயர் வைத்து பால் ஊற்றுவது என்பதை 
நவீனம் என்று நம்பி மூலைக்கு மூலை செய்கிறான்!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அங்கோர் வாட் அதிசயங்கள் - பேயான் கோயில்

ஆயிரம் லிங்கங்களையும், அவற்றின் மேல் பாய்ந்த ஆற்றையும் பார்த்த திருப்தியுடன் மற்ற கோயில்களைப் பார்க்கப் புறப்பட்டோம்.

அங்கே மன்னர்கள் மட்டுமல்ல, மக்களும் பல கோயில்கள் கட்டியிருக்கின்றனர். அவற்றில் 10ஆம் நூற்றாண்டில் அந்தணர் ஒருவரால் கட்டப்பட்ட ஒரு கோயிலை வழியில் பார்த்தோம். அக்கோயில் முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. மூன்று கருவறைகள் இருந்தன. அவற்றில் ஒன்றில், புடைப்புச்சிற்பமாக, சிவன் நெற்றிக் கண்ணுடன் நின்ற நிலையில் இருந்தார். ஒருபுறம் சங்கு சக்கரத்துடன் திருமால் நிற்க, எதிர்ப்புறம் ஒரு பெண் தெய்வம் நின்ற நிலையில் இருந்தனர். லட்சுமி என்று வழிகாட்டி சொன்னார். அந்தக் கோயிலின் முன்புறம் சமஸ்கிருதக் கல்வெட்டு என்று காட்டினர். ஆனால் அந்த எழுத்துக்கள் பழைய தமிழ் எழுத்துக்கள் போல் எங்களுக்குத் தோன்றியது.

Bayon temple

பொதுப்படையாக இந்தியா என்றும், சமஸ்கிருதம் என்றும் சொல்லி விடுகிறார்களோ, குறிப்பாகத் தமிழ், தமிழர்களைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லையோ என்று தோன்றியது. ஆராய்ச்சியாளர்கள் தான் அறிந்து சொல்ல வேண்டும்.

அதன்பின் நாங்கள் பார்த்தது அமைதியான புன்னகைக்கும் முகங்களைக் கொண்ட பேயான் கோயில் (Bayon temple).

அங்கோர் வாட் நகரத்தை நிறுவிய 100 ஆண்டுகளுக்குப் பிறகு 12, 13ம் நூற்றாண்டில் ஏழாம் ஜெயவர்மன் என்ற மன்னன் தனது வெற்றியின் அடையாளமாக "அங்கோர் தாம்" (angkor thom) என்ற நகரத்தையும், நடுவில் ஒரு புத்தக் கோயிலையும் நிறுவியிருக்கிறான். நகரத்தின் நான்கு வாயில்களிலிருந்தும் நடுவில் இருக்கும் கோயிலுக்குள் செல்லும் வகையில் அமைக்கப் பட்டிருக்கிறது.

கிழக்கு வாசலின் முன்புறம் பாதையின் இருபுறமும், ஒருபுறம் தேவர்களும், மறுபுறம் அசுரர்களும் பாம்பைப் பிடித்துக் கொண்டு நிற்கும் பெரிய பெரிய சிலைகள் உள்ளன.

இவற்றைத் தாண்டி மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் சென்றால் கோவிலை அடையலாம். அகழியோ, மதிற் சுவரோ, முதற் பகுதிகளுக்கு மேற்கூரையோ இல்லை. நேராக கோபுரங்களும் அவற்றின் மேல் பக்கத்திற்கு ஒன்றாகப் பெரிய முகங்கள் நம்மைப் பார்த்து அமைதியாகப் புன்னகைப்பதைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்.

உயரமான முதல் நிலையில் சுவர் முழுவதுமாக நீண்ட, பெரிய புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் குதிரைப்படை, யானைப்படைகளுடன் அரசர் படையெடுத்துச் செல்வது, கடற்போர், கடைத்தெருக் காட்சிகள், வீடுகள், சீனத்து வணிகர்கள், படகுகள், மீனவர்கள், கோழிச் சண்டை போன்ற அன்றாட நிகழ்ச்சிகள் பலப்பல சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. அங்கோர் வாட் சிற்பங்களை விடச் சற்று ஆழமாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன.

இதைத் தாண்டி உள்ளே செல்லும் வழியில் தாமரையின் மேல் நடனமாடுவது போன்ற பல நிலைகளில் அப்சரா சிற்பங்கள் உள்ளன. நூலகங்களும் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.

உள்ளே அமைந்துள்ள உயரமான மூன்றாவது நிலையில்தான் சுமார் 50 கோபுரங்களும் அதில் சுமார் 200முகங்களும் உள்ளன. முகங்கள் போதிசத்துவரையும், அவரது பிரதிநிதியான அரசரையும் குறிப்பதாக இருக்கிறது. அரசரின் முகத்தை ஒட்டியே புத்தரின் முகமும் அமைக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

அகலமான நெற்றி, நெற்றியின் மேல் கிரீடம், கீழ்நோக்கிய கண்களுடன் அகலமான மூக்கு, தடித்த உதடுகள் மேல் நோக்கி மடிந்து, அமைதி நிறைந்த புன்னகைக்கும் முகமாக உள்ளது. இது போல சுற்றிச் சுற்றி முகங்கள்தான்.

Bayon temple

நடுவில் உள்ள கோபுரத்தின் கீழ் நாகக் குடையுடன் தியான நிலையில் புத்தர் சீலை இருந்ததாகக் கூறப்படுகிறது. ஏழாம் ஜெயவர்மனுக்குப் பின் வந்த எட்டாம் ஜெயவர்மன் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருந்ததால் கோவிலில் புத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்துச் சின்னங்கள் சேர்க்கப் பட்டன.

கருவறையிலிருந்த புத்தர் சிலையும் உடைக்கப்பட்டு அருகிலிருந்த கிணற்றில் போடப்பட்டது. 1933 ஆம் ஆண்டு நடந்த சீரமைப்புப் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கோயிலின் கற்கள் கிடந்த பகுதியில், கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சிறிய சிறிய கோபுரங்களைப் போல் வைக்கப்பட்டு இருந்தன. அவை என்னவென்று கேட்ட பொழுது உள்ளூர் மக்களின் பிரார்த்தனை, வேண்டுதல்கள் என்று கூறினார். எல்லா இடங்களிலும் வேண்டுதல்கள் விதவிதமாக இருக்கத்தான் செய்கின்றன.

இந்தப் பகுதிகள் 16ஆம் நூற்றாண்டிலிருந்து முற்றிலும் கைவிடப்பட்டு மரங்கள் அடர்ந்து இருந்தது. 20ம் நூற்றாண்டில் தான் பிரஞ்சுக்காரர்களால் கண்டு பிடிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டு வருகிறது.

பேயான் கோயிலை அடுத்து, சற்று தூரத்தில் அந்தக் கோயிலைக் கட்டிய அரசனுடைய அரண்மனை மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. அதன் முன்னால் "எலிபெண்ட் டெரஸ் "(elephant terrace) எனப்படும் படைகளை, பொது நிகழ்ச்சிகளைப் பார்வையிடும் இடம் உள்ளது. இது சுமார் பத்து அடி உயர மேடையில் அமைந்துள்ளது. அவற்றின் பக்கவாட்டில் பெரிய யானைகள், கருடன்கள் இவற்றின் புடைப்புச் சிற்பங்கள் மேடையைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய இடம் இது. ஒரு கருடன் காலின் அடிப் பகுதியில் ஐந்து தலைப் பாம்பின் தலை இருக்க வாலைக் கையால் தலைக்கு மேல் பிடித்திருப்பதைப் போல் அமைக்கப் பட்டுள்ளது.

மேடையின் முன்புறம் மிகப் பரந்த இடம் உள்ளது. அதைத் தாண்டி தூரத்தில் சிதிலமடைந்த கோபுரங்கள் போன்ற அமைப்பு மருத்துவ மனைகள் என்று கூறப்பட்டது.

இந்த இடங்கள் முழுவதும் மரங்கள் அடர்ந்து மறைந்து இருந்தது. தற்போது சீரமைத்து வருகிறார்கள்.

இதையடுத்து 'டா ப்ராம்' பகுதியைப் பார்த்தோம். அது அடுத்த பகுதியில்...

 

http://keetru.com/index.php/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/27747-2015-01-26-05-23-03

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அங்கோர்வாட் அதிசயங்கள் - டா ப்ராம்

ta prohm

அடுத்து நாங்கள் சென்றது, ஏஞ்சலினா ஜோலி நடித்த "லாரா கிராப்ட்" படம் எடுக்கப்பட்டதால் பிரபலமடைந்த டா ப்ராம் (Ta Prahm) என்னும் இடமாகும். இது அங்கோர்தாம் நகர், பேயான் கோயிலைக் கட்டிய ஏழாம் ஜெயவர்மன் கட்டிய ராஜ விகாரம் என்னும் மஹாயான புத்த மதத்தைச் சேர்ந்த மடாலயமும் கலாசாலையும் ஆகும்.

அந்த அரசன் தன தாயார், சகோதரர், குரு நினைவாகக் கட்டியது. கருவறையில் உள்ள முக்கிய கடவுளான "ப்ரஜ்னப்ரமித்தா" மன்னரின் தாயார் சாயலில் அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. அந்த அறையில் சுவரில் பல துளைகள் உள்ளன. அதில் முன்பு தங்கமும், பல விலையுயர்ந்த கற்களும் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த மடாலயத்தில் 18 பெரிய குருமார்களும், 614 நடனக் கலைஞர்களும் அடங்கிய 12500 மக்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுக்க 8 லட்சம் மக்கள் இருந்த கிராமங்கள் சுற்றி இருந்திருக்கின்றன. ஆனால் தற்போது இருப்பதோ மரங்கள் மேவிய கட்டடங்களும், பாசி படிந்த பெரிய கற்களுமே.

இந்தக் கோயிலின் சிறப்பம்சம் - கோயில் கண்டு பிடிக்கப்பட்ட போது, மரங்கள் கற்கட்டடங்களின் மீதும், கற்கோபுரங்களின் மீதும் வளர்ந்த நிலையில் இருந்ததை அப்படியே வைத்திருப்பது தான். பெரிய பெரிய மரங்கள் தங்கள் வேர்களைக் கொண்டு கற்கட்டடங்களின் மேல் படர்ந்து நிற்பதே ஆச்சரியமான விஷயம். மரங்கள் கற்கோபுரங்களின் மேல் வளர்ந்து இருக்கும் சில இடங்களில் அருகில் நின்று படம் எடுக்கவும் வகை செய்திருக்கிறார்கள். மரங்கள் நிற்கும் கட்டடங்களுக்கு மரம், இரும்புத் தூண்கள் நிறுத்தி பாதுகாப்பும் செய்திருக்கிறார்கள்.

ta prohm

மனித முயற்சியின் மேல் இயற்கை மேவி நிற்கும் இந்த இடம் தான் பார்வையாளர்களை அதிகம் ஈர்க்கிறது.

இந்த இடத்தை இருந்தபடியே சீரமைக்கும் நம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, அப்சரா நிறுவனத்துடன் (authority for the protection and management of angkorwat and the region of siamreap) சேர்ந்து பணியாற்றி இருக்கிறது.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு செழிப்புடன் இருந்து, பின் செல்வாக்கிழந்து, இயற்கையால் சிதிலமடைந்து இன்று கண்டுபிடிக்கப்பட்ட பல இடங்கள், அதிலும் நம் கலை, கலாச்சாரத்துடன் தொடர்பு கொண்ட இடங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் சயாம்ரீப்பிலிருந்து கிளம்பினோம்.

அங்கிருந்து சிங்கப்பூர் வந்து, எனக்கு மிகவும் பிடித்த இடமான சிங்கப்பூர் ஷங்கி விமான நிலையத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு சென்னை வந்து சேர்ந்தோம்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம் நாட்டில் பல நூறு வருடங்கள் பெருமை வாய்ந்த எத்தனை இடங்கள் இருக்கின்றன! அவற்றில் எத்தனை இடங்களை மற்றவர்களைக் கவரும் வண்ணம் பராமரித்து வைத்து இருக்கிறோம்! நம் அடுத்த தலைமுறையினரும் நம் பழமையை அறிந்து போற்றுவதற்கு என்ன செய்திருக்கிறோம்? என்றெல்லாம் நினைத்தால் சற்று சிரமமாகத்தான் இருக்கிறது.

நமது பராம்பரிய இடங்களைப் பற்றிய பெருமைகளை நம் மக்கள் அனைவரும் அறியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த இடங்களை மற்ற நாட்டினரும், ஏன் முதலில் நாமும் பார்த்து ரசிக்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.

(முற்றும்)

 

http://keetru.com/index.php/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-83/27816-2015-02-04-04-22-57

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.