Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண நேர முடிவினால் சிதைந்து போன வாழ்வு

Featured Replies

இளமைக்காலத்தில் கனவுகளுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், சில சமயங்களில் இக்காலப்பகுதியில் எழும் அற்ப ஆசைகளுக்கும். உணர்வுகளுக்கும் அடிபணிந்து எடுக்கும் முடிவுகள் பலரின் கனவுகளைச் சிதைத்து, எப்படியெல்லாமோ வாழவைத்து விடுகின்றன.

ஒரு வேளை அந்த நேரத்தில் அவர்கள் நன்கு ஆராய்ந்து, சிந்தித்து சரியானதொரு முடிவினை எடுத்திருந்தால் வாழ்வின் கனவுகளையும், உறவுகளையும் தொலைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்காது.

அந்த வகையில் சிறைச்சாலைச் கதவுகளுக்கு முன்னால் தான் கருவில் சுமந்து பெற்றெடுத்த மகனைக் காண வேண்டும், அவனைக் கட்டித்தழுவி சுக, துக்கங்களை அறிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன் கால் கடுக்கக் காத்திருந்தாள் சுது நோனா.

நாம் அவருடன் கதைக்க முற்பட்ட போது விரக்தி கலந்த வார்த்தைகளுடன் தனது வாழ்க்கை அனுபவங்களை எம்மோடு பகிர்ந்துகொண்டார்.

வாழ்க்கை என்னும் பாதையில் நான் திசைமாறிய பறவை. நான் உண்மையில் எப்படியெல்லாமோ செல்வ செழிப்புடன் வாழ்ந்திருக்க வேண்டிய ஒருத்தி. ஆனால், அற்ப உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த ஒரு நிமிடத்தில் நான் எடுத்த முடிவு என்னை எங்கோ எப்படியெல்லாமோ வாழ வைத்துவிட்டது.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கிராமத்தில் தான். என்னுடைய குடும்பத்தில் நான் இரண்டாவது பிள்ளை . எனக்கு தமையனொருவரும். தங்கையும் இருந்தார்கள். தந்தை கமத்தொழில் திணைக்களத்தில் தொழில் புரிந்தார். அதனால் சிறுவயது முதலே எந்தவொரு குறையுமில்லாமல் தான் வளர்ந்தோம்.

நான் இளமைக்காலத்தில் அழகாக இருப்பேன். பல இளைஞர்கள் என்னைத் திருமணம் செய்துகொள்ள தவம் இருந்தார்கள். ஆனால், அவர்கள் ஒருவர் மீதும் எனக்கு விருப்பம் ஏற்படவில்லை. நான் க.பொ.த.ப. சாதாரண தர பரீட்சை எழுதிய கையோடு பாடசாலைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

பெற்றோரும் என்னை உயர்தரத்தை தொடர சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. இந்நிலையில் அண்ணா உயர்தரத்தைத் தொடர்ந்து கொழும்புக்கு தொழிலுக்காகச் சென்று அங்கேயே திருமணம் செய்து குடியேறினார்.

அதன்பின்னர் அண்ணிக்கு நாங்கள் கிராமத்தவர்கள் என்று பெரிதாக விருப்பமிருக்கவில்லை. அதனால் நாங்களும் அங்கு செல்லவில்லை. இந்நிலையில் தங்கை உயர்தரத்தைத் தொடர, நான் அம்மாவுடன் வீட்டிலிருந்தேன்.

அக்காலப்பகுதியில் தான் மாமாவின் கடையில் வேலைசெய்யும் அன்டனின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அப்போது எனக்கு 20 வயது இருக்கும்.அன்டனும் பார்க்க கம்பீரமான தோற்றத்துடனும்,இளமையுடனும் காட்சியளித்தான்.

எனவே, நாளடைவில் நாங்கள் இருவரும் காதல் வானில் சிறகடித்து பறக்க ஆரம்பித்தோம். இதனிடையே எங்களுடைய காதல் விவகாரம் எனது அம்மாவுக்குத் தெரியவர, 'எந்த ஜாதி, என்ன குலம், பெற்றோர் யார் என்ற எதுவுமே தெரியாத ஒருவனை நீ திருமணம் முடிக்க போகின்றாயா? முதலில் அதை விட்டு விடு 'என என்னைத் திட்டினாள்.

எனினும், என்னுடைய வயதும், அன்டனின் மேலிருந்த காதலும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது . நான் அம்மாவை விட அன்டனை நம்பினேன். நாளடைவில் எங்களுடைய காதல் விவகாரம் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் தெரியவர, மாமா அவனை கடையிலிருந்து போகச் சொன்னார். அன்டன் அவனுடைய ஊருக்கே சென்றுவிட்டான்.

அதன்பின்னர் என்னுடைய வாழ்வே இருள் அடைந்தது போல இருந்தது. நான் அன்டனின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தனிமையில் அழுது புலம்பினேன்.ஒருநாள் திடீரென அன்டன் என்னைத் தேடிவந்து 'நீ விரும்பினால் என்னுடன் வரலாம். நான் உன்னை திருமணம் செய்துக்கொள்கின்றேன் என்று கூறினான்.

நானும் அன்றிரவே உடுப்புகளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி அன்டனுடன் சென்றேன். அன்டன் என்னை அவனுடைய வீட்டுக்கு அழைத்துச்சென்றான்.அது பலகையினால் ஆன சிறிய வீடு. அடிப்படை வசதிகள் எதுவுமே இருக்கவில்லை. அதில் தான் அன்டனின் தாய், சகோதரிகள் எல்லோரும் இருந்தார்கள்.

நாங்கள் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் போது, வீட்டுக்குள் இருளாகவே இருந்தது. அப்போது அன்டனின் தாய் குப்பிவிளக்கு ஒன்றைக் கையில் ஏந்தியவாறே என் அருகில் வந்து பார்த்தவாறே, அன்டனை நோக்கி, இவள் யார்? என்று கேட்டார். அதற்கு அன்டன், 'இவள் தான் சுது நோனா' என்று பதிலளித்தான்.

அதற்கு அன்டனின் தாய் "ஓ.... இவளை எனக்குத் தா "என்று கேட்டார். அதற்கு அன்டன் , இவள் பயப்படுவாள் அம்மா இவளை விட்டுவிடுங்கள்" எனப் பதிலளித்தான். எனக்கு ஆரம்பத்தில் ஏன் அவர் அப்படிக் கேட்டார், அன்டன் ஏன் அவ்வாறு பதிலளித்தான் என்றெல்லாம் புரியவில்லை. ஆனால், அன்டன் என்னிடமிருந்து எதையோ மறைக்கின்றான் என்ற சந்தேகம் மட்டும் எனக்குள் எழுந்தது.

அதன்பின் மூன்று நாட்கள் நான் அங்கிருந்தேன். அன்டனை தவிர யாருமே என்னுடன் பேசவில்லை. ஒருநாள் மறுபடியும் அன்டனின் தாய் அன்டனிடம் வந்து "நீ உன்னுடைய மனுஷியை பத்திரமாக வைத்துக்கொள் சரியா? ஆனால், நீ இல்லாத நேரம் நான் அவளை எடுத்துக்கொள்வேன்" என கூறிச்சென்றார்.

அன்டன் அதற்கு எதுவுமே பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டான். அதன்பின் விடியும் வரை அன்டன் வீட்டுக்கு வரவே இல்லை. என் வாழ்க்கையிலும் அதற்கு பிறகு வசந்தகாலமே வரவே இல்லை.அன்றிரவு வீட்டில் தனியாகவிருந்த என்னை அனைவருமாக சேர்ந்து வயதான ஒருவனிடம் பணத்துக்குக்காக விற்றார்கள்.

நான் செய்வதறியாது தவித்தேன். வேறுவழியின்றி எல்லாக் கஷ்டங்களையும் அனுபவித்தேன். அப்போது தான் அன்டன் என்பவன் யார் என்பதை நான் அறிந்துக்கொண்டேன்.

அதுமட்டுமின்றி, அந்த வீட்டிலிருந்தவர்கள் யாரும் அன்டனின் உறவுக்காரர்கள் இல்லை என்பதையும் அறிந்து கொண்டேன். எனினும், அதற்கு பிறகும் என்னை அறியாமலே அன்டனை நம்பி திரிந்தேன்.

அன்டன் என்னிடம் எல்லா உண்மைகளையும் கூறி சமாதானம் செய்து வேறொரு வீட்டை வாடகைக்கு வாங்கி கூட்டிச்சென்றான்.அங்கு சில காலம் என்னுடன் அன்பாகவும் இருந்தான். எனினும் கையில் காசு இல்லை, தொழிலில்லை என்றவுடன் மறுபடியும் என்னை அவனுடைய நண்பர்களிடம் விற்று பணம் உழைக்க ஆரம்பித்தான்.

அதுமட்டுமின்றி ,தினம் அவனுடைய அடி உதைகளால் என் உடலை புண்படுத்தினான்.இவ்வாறு சித்திரவதைகளுக்கு நடுவில் என்னுடைய குடும்ப சக்கரம் நகர்ந்தது. நான் கருவுற்று ஒரு ஆண்மகனைப் பெற்றெடுத்தேன்.

அதன்பின் என்னுடைய உலகமே என்னுடைய மகன் தான். நான் அவனுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன். மகனும் வளர்ந்து பெரியவனானான்.அவன் கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எழுதிய கையோடு தொழிலுக்கு சென்றான். அது எனக்கு சற்று நிம்மதியை அளித்தது.

எனினும், அன்டன் மகன் முன்பாகவே என்னை அடித்து துன்புறுத்துவது மகனுக்கு பிடிக்கவில்லை . பல சமயங்களில் மகன் அன்டனை அடிக்க முற்படுவான். பிறகு நானே மகனின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்று இருவரையும் சமாதானப்படுத்தி விலகிவிடுவேன்.

இது இவ்வாறிருக்க மகன் திருமணம் முடித்து தனியாக சென்றுவிட்டான். எனக்கு அது கவலையாகவிருந்த போதிலும் மகனாவது சந்தோஷமாக இருக்கின்றான் என்ற நிம்மதியிருந்தது. எனினும், அந்த நிம்மதி வெகுநாட்கள் எனக்கு நீடிக்கவில்லை.

ஒருநாள் மகனும், மருமகளும் என்னை பார்க்க வீட்டுக்கு வந்திருந்த போது அன்டன் என்னை காலால் உதைத்து கீழே தள்ளினான். அப்போது அதை மகனால் பொறுத்துக்கொள்ள முடியாமல் அன்டனை பிடித்து மகனும் தள்ளிவிட அன்டன் நிலத்தில் விழுந்தான். விழுந்த அதிர்ச்சியில் அன்டனின் தலையிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. உடனே நாங்கள் அன்டனை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றோம். எனினும் ,சிகிச்சை பலனிற்று அன்டன் உயிரிழந்தான்.

இறுதியில் என் மகன் கொலைகாரன் என்ற பட்டத்துடன் சிறையில் அடைக்கப்பட்டான். இரு வருடங்கள் ஆகப் போகின்றது இன்னும் விசாரணை விசாரணையென்று காலத்தை இழுத்தடித்துக்கொண்டிருக்கின்றார்களே தவிர அவனுக்கு இன்னும் விடிவென்று வரவில்லை.

மகனின் வழக்கை வாதாடும் சட்டத்தரணி எதேச்சையாக நடந்த சம்பவம் என்பதால் மகனை இன்னும் சில நாட்களில் விடுதலையாக்கி விடுவார்கள் என்றே கூறுகின்றார்.

நானும் அந்த நம்பிக்கையில் தான் இன்னும் வாழ்கின்றேன்". இவ்வாறு விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தவாறே தன் வாழ்க்கைக் கதையை கூறி விடைபெற்றுச் சென்றாள் சுது நோனா.

http://www.tamilwin.com/living/01/110169

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.