Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூக வலையில் சிக்கிக்கொள்ளாமல் வாழ்வது எப்படி?

Featured Replies

ஒருவரை நாம் பார்த்துப் பழகிய சில நிமிடங்களிலேயே கேட்பது, ‘‘ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கா?”... ‘‘வாட்ஸ் அப் நம்பர் தர முடியுமா?” என்பதுதான். செல்போனில் வாட்ஸ் அப் இல்லை என்றாலோ, ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் இல்லை என்றாலோ, அவர்களை ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் நாம் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் இருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம்முடைய தகுதி, ஸ்டேட்டஸ் இருக்கும் என மற்றவர்கள் நினைக்கும்படி இவை நம் வாழ்க்கையில் ஓர் அங்கம் ஆகிவிட்டன. சமூக வலைதளங்களால் பல நன்மைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் தீமைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன, குறிப்பாகப் பெண்களுக்கு.

சேலம் சந்தித்த கொடுமை!
சேலத்தில் வினுப்ரியா என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரது முகத்தை நிர்வாணப் படத்துடன் சேர்த்து மார்ஃபிங் (Morphing) செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுவிட்டார்கள். அதுபற்றி போலீஸில் புகார் செய்தும், உரிய நேரத்தில் நடவடிக்கை இல்லை. அவமானம் தாங்காமல் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார். வினுப்ரியாவுக்கு மட்டுமல்ல, நாட்டில் பலருக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

ஃபேஸ்புக் சிநேகிதம்!
வேலூரில் படித்த ஒரு பெண், சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஃபேஸ்புக் அவருக்குப் புதிது. அதில், அவருக்கு ஓர் இளைஞருடன் நட்பு ஏற்பட்டு, அவர்கள் இருவரும் சாட்டிங் செய்ய ஆரம்பித்தனர். பிறகு, நேரில் சந்தித்தப் பின்பு நெருக்கம் அதிகமானது. திருமணம் பற்றிப் பேச ஆரம்பித்தபோது அந்த இளைஞன் சரியான பதில் அளிக்கவில்லை. சந்தேகம் அடைந்து அந்த இளைஞரைப் பற்றி விசாரித்தபோது, ஃபேஸ்புக் மூலமாகப் பல பெண்களிடம் அவர் பழகுவது தெரியவந்தது.

காவு வாங்கிய வீடியோ கால்!
தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்துவந்த ஒரு பெண், தன் கணவரைப் பிரிந்து இருந்தார். ஃபேஸ்புக்கில் அவர் சோகமாகவும், தன் தனிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் பதிவுகள், படங்கள் ஷேர் செய்வதுமாக இருந்திருக்கிறார். அந்தப் பதிவுகளைப் பார்த்த ஒருவர், அந்தப் பெண்ணுடன் பேசத்  தொடங்கினர். வீடியோ சாட்டிங்கில் ஒருவரை ஒருவர் வர்ணித்துக்கொள்வதும், ஆபாசப் பேச்சுகளும் அதிகமாகின. சில மாதங்களில் அந்தப் பெண்ணின் கணவர் அவருடன் சேர்ந்து வாழ நினைப்பதாகக் கூறியுள்ளார். இவரும் அதை ஏற்று ஒன்றாக வாழத் தொடங்கினார். அதன் பிறகு, ஃபேஸ்புக் நண்பரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால், இருவரும் நட்பாகப் பேசிய காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை உன் கணவருக்கு அனுப்பிவிடுவேன் என அந்த ஆசாமி மிரட்டி இருக்கிறார். இந்த விஷயத்தை அவளால் கணவரிடம் சொல்ல முடியாமல் தவித்தார். கடைசியில் அந்தப் பெண், மனநிலை பாதிக்கப்பட்டார்.

பணம் பறிக்க ஃபேஸ்புக்!
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ். அவருக்கு ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணிடம் இருந்துவந்த ரெக்வஸ்ட்டை ஏற்றுக்கொண்டார். பிறகு அந்தப் பெண்ணே இவரிடம் பேசத் தொடங்கியுள்ளார். சில நாட்களில், தனக்கு யாரும் இல்லை எனவும், உங்களைத் திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று ஹரீஷிடம் கூறியுள்ளார். அந்தப் பெண் மீதான பரிதாபத்தில் ஹரிஷும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளார். உடனே அந்தப் பெண், தனக்கு மூன்று லட்சம் ரூபாய் கடன் உள்ளது என்றும், அந்தக் கடனை அடைத்துவிட்டால் திருமணம் செய்யலாம் எனவும் கூறியுள்ளார். ஹரிஷும் பணம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்ததால் சந்தேகம் வந்து அவரின் மொபைல் நம்பரை டிராக் செய்தபோது, அந்தப் பெண் கொடுத்திருந்தது போலி முகவரி என்பதும், இதுபோல அந்தப் பெண், பல ஆண்களை ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

நல்லதில் நடக்கும் தீமைகள்!
சமூக வலைதளம் என்பது மிகப் பெரிய பொக்கிஷம். அதை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். தனித்தனித் தீவுகளாகப் பிரிந்துகிடக்கும் மனிதச் சமூகம் குழுக்களாக இணைய, அடித்தளம் அமைப்பவை சமூக வலைதளங்கள். எத்தனையோ பிரச்னைகள் சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் வெளிச்சத்துக்கு வருகின்றன. அதே சமூக வலைதளங்களால் தான் பலரும் தங்கள் வாழ்க்கையை, எதிர்காலத்தை இழக்கிறார்கள்.

எச்சரிக்கை... எச்சரிக்கை!
சமூக வலைதளங்களால் ஒரு பெண் பாதிக்கப்பட்டதும், இந்தச் சமூகம் அந்தப் பெண்ணைத்தான் குறை சொல்கிறது. ‘பொம்பளப் பிள்ளைன்னா அடக்கமா இருக்கணும்? இவளுக்கு எதுக்கு ஃபேஸ்புக்? அதுல எதுக்கு இவளோட போட்டோவைப் போடணும்? ஆம்பளைப் பசங்களோட இவளுக்கு என்ன ஃப்ரெண்ட்ஷிப்?’ என்று கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்கள். தெருவில் ஈவ்டீசிங் செய்கிறார்கள் என்பதற்காகப் பள்ளிக்கூடம் போகக் கூடாது என்பார்களா? கோயிலுக்குப் போகும்போது கிண்டல் செய்கிறார்கள் என்பதற்காகக் கோயிலுக்குப் போகக் கூடாது என்பார்களா? எத்தனையோ பிரச்னைகள் இருக்கும்போது, சமூக வலைதளத்தை மட்டும் குறை சொல்வதில் நியாயம் இல்லை. புதிதாக எது வந்தாலும் குறைசொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். ஒரு காலத்தில் சுடிதாருக்கும் ஜீன்ஸுக்கும் நைட்டிக்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது. உடை என்ன வடிவமாக இருந்தாலும் பரவாயில்லை, அது ஆபாசமாகத்தான் இருக்கக் கூடாது என்கிற அளவுக்கு சமூகம் இன்று மாறி இருக்கிறது.

‘பகிர வேண்டாம்!’
இந்தப் பிரச்னை குறித்து பத்திரிகையாளர் கவிதா முரளிதரனிடம் கேட்டதற்கு, ‘‘ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், தெரியாத நபர்களிடம் தேவை இல்லாமல் சாட்டிங் செய்யக் கூடாது. அங்கிருந்துதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. உங்கள் புகைப்படத்தை உங்களுக்கு நம்பிக்கையான ஒருவருக்கு நீங்கள் அனுப்பினாலும் கூட, அவரது கவனக்குறைவின் காரணமாக அவரிடம் இருந்து வேறு யாருக்கோ உங்கள் புகைப்படம் போய்விட வாய்ப்பு உள்ளது. எனவே, அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆபாசப் புகைப்படங்கள் கொண்ட இணைப்புகள் வந்தால் அதனுள் போக வேண்டாம். தங்கள் குடும்பத்தினரின் புகைப்படங்களைத் தேவையில்லாமல் பதிவிட வேண்டாம். தெரியாத நபர்களின் புகைப்படங்களுக்கு லைக் கொடுக்க வேண்டாம்” என்றார்.

தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
சமூக வலைதளங்கள் மூலமாக பிரச்னை ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி வழக்கறிஞர் அஜிதாவிடம் கேட்டபோது, ‘‘சமூக வலைதளங்களில் யார் ஒருவர் பாதிக்கப்பட்டாலும், முதலில் காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். நடந்த எல்லாவற்றையும் சொல்வதன் மூலம் அதற்கான தீர்வும் நடவடிக்கையும் உடனடியாக எடுக்கப்படும். தொழில்நுட்பம் புதிதாக வரும்போது, அதன் மூலமாக ஏற்படும் பிரச்னைகளைக் களைவதற்கான சட்டங்களைப் பற்றி அரசும், காவல் துறையும் அறிந்திருக்க வேண்டும். தொழில்நுட்பங்கள் சார்ந்த விழிப்பு உணர்வு காவல் துறைக்கு வழங்கப்பட வேண்டும்.

கணினி தொழில்நுட்பச் சட்டம் 2000-ன்படி, ஒருவர் மற்றொருவரை அவமானப்படுத்தினால், அநாகரிகமாகவும் கேவலமாகவும் சித்தரித்து வெளியிட்டால், ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு அது ஒரு தண்டனைக்குரிய குற்றம்” என்றார்.

சமூக வலைதளங்களைச் சுமுகமாகப் பயன்படுத்துவது நம் கையில்தான் இருக்கிறது - சு.நந்தினி

அந்தரங்கம் அறிய வேண்டாம்!
வாட்ஸ் அப்பில் அஜி என்பவர் அனுப்பி இருக்கும் விழிப்பு உணர்வுக் குறிப்புகள்!

  • ஃபேஸ்புக்கில் தங்களின் தொலைபேசி எண், மின் அஞ்சல் முகவரி, பிறந்த தேதி, சொந்த ஊர், படித்த கல்லூரி போன்ற தகவல்களைப் பதிவிடாமல் இருப்பது நல்லது.
  • பதின்பருவப் பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளை எந்த நேரமும் செல்போனை நோண்டிக்கொண்டே இருந்தால் அவர்களைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
  • அறிமுகம் இல்லாதவர்களிடம் நமது அந்தரங்க விஷயங்கள், குடும்பப் பிரச்னைகள் பற்றிப் பகிர்ந்துகொள்ளாதீர்கள். அதேபோல் பிறரிடம் அவர்களின் அந்தரங்கத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்யாதீர்கள்.
  • free recharge # என்று லிங்க் வந்தால் அதை உதாசீனப்படுத்திவிடுங்கள். இல்லையென்றால், உங்கள் மொபைலில் உள்ள புகைப்படங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் எடுத்துவிடுவார்கள்.
  • தனியார் பிரவுசிங் சென்டர்களில் உங்களது ஃபேஸ்புக், இமெயில் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் அல்லது உங்கள் புகைப்படங்கள், பயணச் சீட்டு, சான்றிதழ்கள் போன்றவற்றைப் பதிவிறக்கம் செய்தால், அவற்றை அந்தக் கணினியில் இருந்து நீக்கிவிட்டோமா என்பதனை நன்கு உறுதி செய்துகொண்டு வெளியே வாருங்கள்.
  • ஃபேக் ஐ.டி-கள்... ஜாக்கிரதை!

ஃபேஸ்புக் மூலமாக ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், அதுபோன்ற பிரச்னைகளில் சிக்காமல் தவிர்ப்பதற்கும் மனநல மருத்துவர் சுனைனா வழங்கும் ஆலோசனைகள்:

  • ‘‘மொபைல் போனில் ஒரு அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்யும்போது, போனில் உள்ள விவரங்கள், புகைப்படங்கள், தொடர்பு எண்கள் என அனைத்தும் அந்தக் கம்பெனியில் பதிவுசெய்யப்படும். இதுகுறித்த விளக்கம், விவரப் பட்டியலில் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும். அதைப் படித்துவிட்டு அந்த அப்ளிகேஷன்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
  • சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பதிவிடுவதால் அவற்றை எடுத்து மார்ஃபிங் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பதிவிடும்போது அவற்றை யார் பார்க்கலாம் என ஆப்ஷனைத் தேர்வு செய்யலாம்.
  • சமூக வலைதளங்களில் ஏராளமான போலி கணக்குகள் (Fake IDs) உள்ளன. எனவே, ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் வந்தால், நன்கு தெரிந்தவர்களாக இருந்தால் மட்டும் ஏற்பது நல்லது.
  • நாம் ஓர் இடத்துக்குப் போவதற்கு முன்பாக எங்கு போகிறோம் என்று சமூக வலைதளங்களில் பதிவிடுவது அல்லது போன இடத்தில் இருந்து புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவது போன்றவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • சமூக வலைதளங்களின் மூலமாக ஒருவரின் விவரங்களைப் பெறவோ, அவர்களைப் பின்தொடரவோ முடிகிறது. அது சிலரைத் துன்புறுத்தவும் வழிவகுக்கிறது. அதுவே, ஒருவரின் குற்றத்தைக் கண்டுபிடிக்க காவல் துறைக்கு உதவியாகவும் உள்ளது.
  • வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்கள் அறிந்துகொள்ளவும், ஆபத்தான மற்றும் இடர்பாடான நேரங்களில் பிறருக்கு உதவி செய்யவும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுகின்றன.’’

அப்பாவுக்குப் போன ஆபாசப் படம்!
சமூக வலைதளம் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கும் இது பிரச்னையாகத்தான் அமைகிறது. கல்லூரி மாணவி ஒருவர், தனது காதலனுக்கு நிர்வாண வீடியோ ஒன்றை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி இருக்கிறார். அது தவறுதலாக அவருடைய அப்பாவின் வாட்ஸ் அப் நம்பருக்கு ஷேர் ஆகிவிட்டது. அதைப் பார்த்து அதிர்ந்த அவர், இந்தப் பெண்ணை அழைத்துக் கண்டித்துவிட்டு, அந்த வீடியோ பதிவை டெலிட் செய்துள்ளார். அப்போது அது அவரது நண்பர்கள் குரூப்பில் ஷேர் ஆகிவிட்டது. அதனால், நண்பர்கள் வட்டாரத்தில் அவர் அவமானங்களைச் சந்தித்தார். இதனால் அப்பா, மகள் பந்தமே பாதிப்புக்கு உள்ளானது.

http://www.vikatan.com/juniorvikatan/2016-jul-13/investigation/121035-how-we-secure-our-self-from-social-media.art

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பை நல்ல வழியிலும் பயன்படுத்தலாம்.. தீய வழிக்கும் பயன்படுத்தலாம்...

அதேபோல் தான் எதுவும் சமூக வலையும்.

பயன்படுத்திற நாம் தெளிவா எதற்குப் பயன்படுத்திறம் என்பதில் தெளிவா அவதானமா இருந்தா சமூக வலையும் ஒரு பயனுள்ள கருவியே ஆகும். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.