Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்டிப்பார்த்தது புதிய கட்சி

Featured Replies

எட்டிப்பார்த்தது புதிய கட்சி

 

ரொபட் அன்டனி 

 

நாட்டின் அரசியல் களமானது தொடர்ச்சியாக சூடுபிடித்துக் கொண்டே போகிறது. என்றும் இல்லாதவாறு அரசியல் காய்நகர்த்தல்கள் அதிகரித்துச் செல்கின்றன. விசேடமாக மஹிந்த அணியினரின் புதிய கட்சி விவகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மிகவும் பரபரப்பாக முடுக்கிவிட்டுள்ளமை உள்ளிட்ட நகர்வுகளை காணமுடிகிறது.

மஹிந்த அணியினர் கடந்த 20 மாதங்களாகவே புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பான சமிக்ஞைகளை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது மஹிந்த அணியின் முக்கியஸ்தரான முன்னாள் வெ ளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் புதுக்கட்சியை ஆரம்பித்திருக்கிறார்.

அதாவது எமது ஸ்ரீ லங்கா சுதந்திர முன்னணி என்று பதிவு செய்யப்பட்டிருந்த கட்சியானது தற்போது இலங்கை பொதுஜன முன்னணி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தக் கட்சிதான் மஹிந்த அணியினரின் எதிர்கால அரசியல் கட்சியாக உருவெடுக்கப்போவதாக எதிர்பார்க்கப்படுவதுடன் பலராலும் எதிர்வு கூறப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அணியினர் தொடர்ச்சியாக தனித்து இயங்கி வருகின்றனர். அதாவது கடந்த பாராளுமன்றத்திலும் தற்போதைய பாராளுமன்றத்திலும் மஹிந்த அணியினர் இவ்வாறு சுயாதீனமாக செயற்படுவதுடன் அரச எதிர்ப்புப் போக்கையும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப்போவதாக மஹிந்த அணியினரால் தொடர்ச்சியாக கூறப்பட்டு வந்தபோதிலும் தற்போதுதான் அது நடைமுறையில் இடம்பெறுவதற்கான சமிக்ஞை வெளிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ""எமது பொதுஜன முன்னணி"" தான் ஒன்றிணைந்த எதிரணியினர் என அழைக்கப்படும் மஹிந்த அணியினரின் உத்தியோகபூர்வ கட்சியாக அமையும் என அந்த அணியின் முக்கியஸ்தர் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.

அதன்படி இலங்கை பொதுஜன முன்னணியே மஹிந்த அணியினரின் புதிய அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்பது தற்போது தெளிவாகியிருக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமை யிலான அணியினர் மிகப்பெரியதொரு தீர்மானத்தை எடுத்திருக்கின்றனர். ஆனால் இது எந்தளவு தூரம் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கையின் அரசியல் வரலாற்றை பொறுத்தவரை பிரதான அரசியல் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்த வரலாற்றுப் பதிவுகள் வெற்றி பெறாத நிலையினையே கொண்டுள்ளன. 1990 களில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரபலமான முக்கியஸ்தர்கள் விலகிச் சென்று புதிய கட்சியை ஆரம்பித்தனர். ஆனால் அது வெற்றியை நோக்கி நகரவில்லை.

2006 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மங்கள தரப்பினர் விலகிச் சென்று புதிய கட்சியினை ஆரம்பித்தனர். எனினும் அந்தக் கட்சியும் கலைக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு அரசியலில் குதித்த முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார். எனினும் இறுதியில் அந்தக் கட்சியும் கலைக்கப்பட்டது. இவ்வாறு புதிய கட்சிகள் ஆரம்பிக்கப்பட்ட வரலாறானது அந்தளவு சாதகமானதாக இல்லை என்பது இங்கு புரிகிறது.

இந்நிலையில் 1956 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து எஸ்.டப்ள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அதிரடியாக விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார். அந்தக் கட்சி வெற்றிவாகை சூடி சாதனை படைத்தது. இது மட்டுமே இந்த விடயத்தில் விதி விலக்காக இருக்கின்றது.

 பண்டாரநாயக்க சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த அரசியல் சூழலானது மிகவும் வித்தியாசமானதாகும். அதாவது அக்காலத்தில் பிரதான கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் மற்றுமொரு கட்சி உருவானதுடன் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதற்கு அப்போதைய சூழல் சாதகமாக அமைந்தது.

ஆனால் அதன் பின்னர் பிரதான கட்சியிலிருந்து விலகி புதிய கட்சிகள் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் காணப்பட்ட அரசியல் சூழலானது வித்தியாசமானதாகும். அந்த வகையில் தற்போது எவ்வாறான நிலைமை உள்ளது என்பதனை தேடிப்பார்க்க வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக தற்போதைய நிலைமையில் நாட்டு மக்களுக்கு புதிய கட்சி ஒன்று அவசியமாக இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. எனவே இது தொடர்பில் ஆராயப்படவேண்டும். தற்போதைய நிலைமையில் புதிய அரசாங்கம் பதவியேற்று 20 மாதங்கள் கடந்துள்ளன. அரசாங்கம் தற்போதுதான் தனது வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

எனவே உடனடியாகவே மக்கள் மற்றுமொரு கட்சியை அங்கீகரிப்பார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது. தற்போது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் அடுத்த வருடத்தில் மூன்று அல்லது நான்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

அந்தவகையில் அவ்வாறு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களை இலக்கு வைத்து மஹிந்த அணியினர் இவ்வாறு புதிய கட்சியை ஆரம்பித்திருக்கலாம். இந்நிலையில் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார்.

அதாவது ""புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் தலைவராக யார் செயற்படப் போகின்றார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நாட்டு மக்கள் புத்திசாலிகள். எனவே அவர்கள் புதிய கட்சியின் தலைவராக வரப்போகின்றவர் யார் என்பதை நன்றாக புரிந்து கொள்வார்கள். இது ஒருபெரிய இரகசியம் அல்ல. மஹிந்த ராஜபக் ஷ நாடுமுழுவதும் சந்திப்புக்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மக்கள் உடனடியாக அனைத்தையும் புரிந்து கொண்டு எமது பக்கம் வருவார்கள். விரைவில் புதிய கட்சி தொடர்பான அனைத்து விடயங்களும் மக்களுக்கு அறிவிக்கப்படும். புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் ஆதரவாளர்கள் எம்மை தொடர்பு கொண்டு விசாரிக்கின்றனர். நாங்கள் சரியான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்""

இவ்வாறு மஹிந்த அணியின் முக்கியஸ்தர் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்கிறார்.

தேர்தலொன்று அறிவிக்கப்படாத நிலையில் தற்போது இவ்வாறு மஹிந்த அணியினரால் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது உடனடியாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டால் புதுக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட விவகாரமானது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

 மஹிந்த தரப்பினரால் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டமையானது எக் காரணம் கொண்டும் ஐக்கிய தேசியக் கட்சியினை பாதிப்பதாக அமையாது. மாறாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு பாரிய தாக்கம் ஏற்படும் என கருதப்படுகிறது. அதனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.

கடந்த வியாழக்கிழமை மஹரகமவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஆதரவாளர்கள் மத்தியில் ஊக்குவிப்பு பிரசார வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்தது. சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். அதன்படி புதிய கட்சியை எதிர்கொள்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தயாராகியுள்ளமை தெளிவாகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரை பொறுத்தவரையில் மஹிந்த அணியினர் புதிய கட்சியை ஆரம்பிக்காமல் இருப்பதை ஊக்குவித்து வந்தனர். விசேடமாக மஹிந்த அணியினர் புதிய கட்சியை ஆரம்பித்தால் என்ன நடக்கும் என சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களிடம் ஊடகவியலாளர்கள் வினவுகின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் மஹிந்த அணியினர் புதுக் கட்சி ஆரம்பிக்கமாட்டார்கள் என்றே கூறிவந்தனர்.

அதுமட்டுமன்றி மஹிந்த அணியினர் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் தனித்து கூட்டங்களை நடத்தியபோதும் அது தொடர்பில் அவர்களுக்கு எதிராக எவ்விதமான ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் சுதந்திரக் கட்சி முன்னெடுக்கவில்லை. தொடர்ச்சியாக மஹிந்த அணியினரை சுதந்திரக் கட்சிக்குள் இணைத்துக் கொள்ளும் பாரிய முயற்சிகளையே சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னெடுத்து வந்தனர்.

அதாவது மஹிந்த அணியினர் எவ்வாறான அரசியல் கூட்டங்களை நடத்தியபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்விதமான ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக கடந்த மே மாதம் முதலாம் திகதி மஹிந்த அணியினர் தனியாக மே தினக் கூட்டத்தை நடத்தியமையானது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

அதன் பின்னர் மஹிந்த அணியினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எவ்விதமான ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக குருணாகலில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் சம்மேளனக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய கட்சியை ஆரம்பிக்க முயற்சிக்கின்றவர்கள் அதனைக் கைவிட்டு சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என அறைகூவல் விடுத்திருந்தார்.

காரணம் மஹிந்த புதிய கட்சியை ஆரம்பித்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே தாக்கம் ஏற்படும் என்றும் சுதந்திரக் கட்சி நன்றாக அறிந்து வைத்திருக்கின்றது. இந்நிலையில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களை பெற்று தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலிருக்கின்ற சுதந்திரக் கட்சி மஹிந்த அணியினரையும் இணைத்துக் கொண்டு பயணத்தை தொடர முயற்சிக்கிறது.

ஆனால் மஹிந்த அணியினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகினால் மட்டுமே சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. எனவே முரண்பாடு நிலைமையொன்று தொடரும் தன்மையே காணப்படுகின்றது.

காரணம் தேசிய அரசாங்கத்திலிருந்து உடனடியாக விலகிவிடும் எண்ணம் சுதந்திரக் கட்சிக்கு தற்போதைக்கு இல்லை என்றே தோன்றுகிறது. காரணம் இந்த அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்டது. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கின்ற தற்போதைய அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியினர் இடம்பெற வேண்டும் என அவர் கருதுகிறார்.

அதனால் சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து உடனடியாக விலகிவிடும் என்று எதிர்பார்க்க முடியாது.

இதேவேளை புதிய கட்சி விவகாரம் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதாவது ""ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது விழுந்து விழுந்து எழும் கட்சியாகும். எனவே புதிய கட்சியமைப்பதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வீழ்த்த முடியாது.

ஏனெனில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டப்ளியூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவின் புதல்வி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கட்சியொன்றை ஆரம்பித்தார். அத்துடன் அநுர பண்டாரநாயக்க கட்சியிலிருந்து வெளியேறி வேறு குழுவுடன் இணைந்து செயற்பட்டார். ஸ்தாபகரின் மருமகனும் புதிய கட்சி ஆரம்பித்தார். அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்சிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இணைந்து கொண்டனர்.

இறுதியில் என்ன நடந்தது? 1994 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையை ஏற்று தாங்கள் அமைத்த கட்சிகளை கலைத்துவிட்டு அனைவரும் இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணியை உருவாக்கினர். எனவே எவ்விதமான சவால்கள் வந்தாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சீர்குலைத்துவிட முடியாது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது"" இவ்வாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜீ.எல். பீரிஸ் அமைத்துள்ள கட்சிதான் மஹிந்த அணியின் கட்சியா? அவ்வாறாயின் புதிய கட்சிக்கு என்ன நடக்கும்? எதிர்வரும் தேர்தல்களில் மும்முனைப் போட்டி நிலவுமா? போன்ற கேள்விகளுக்கு பதில்தேட சிறிது காலம் காத்திருக்கவேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-11-05#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.