Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறிபோகும் நம்பிக்கை

Featured Replies

பறிபோகும் நம்பிக்கை

Ranil-maithree-a2a252786eef055439e2b235008afcb3ba391ddd.jpg

 

நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக் கொள்கின்ற மைத்திரிபால சிறிசேன- –ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம், இரண்டு ஆண்டுகாலப் பதவிக்காலத்தில் உச்சக்கட்ட சவால்களை எதிர்கொண்டிருக்கிறது.

யாருடைய ஆதரவுடன் இந்த அரசாங்கம் ஆட்சியில் ஏற்றப்பட்டதோ, அவர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது. முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டவை எவையெல்லாம் தவறு என்று சொல்லிக் கொண்டார்களோ அதையெல்லாம் தான் இந்த அரசாங்கமும் செய்கின்றது.

இதுதான் அரசாங்கத்தின் இப்போதைய பரிதாப நிலைக்குக் காரணம்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற போது, நல்லாட்சி எண்ணக்கரு தொடர்பாக மிகப்பெரியளவிலான எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது.

அதற்கு முன்னதாக அதிகம் கவர்ச்சியுள்ள ஒரு அரசியல் தலைவராக இல்லாத மைத்திரிபால சிறிசேன, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மாற்றத்துக்கான ஒரு அடையாளமாகவும், மதிப்புக்குரிய ஒரு தலைவராகவும், திடீரென எழுச்சி பெற்றார்.

அந்த நிலைக்குக் காரணம், நல்லாட்சி பற்றிய அவரது வாக்குறுதியே ஆகும். ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தையே அவரிடம் அதிகமான மக்கள் எதிர்பார்த்தனர்.

அதைவிட முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள், குற்றச்செயல்கள் குறித்து நியாயமான விசாரணைகள் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் காணப்பட்டது.

தேர்தல் காலங்களில், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளாலும் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளில் இவை அடங்கியிருந்தன.

ஆனால், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை நடத்தும் விடயத்தில் இந்த அரசாங்கம் இரண்டு தவறுகளை இழைத்திருக்கிறது.

முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள், முறைகேடுகள், குற்றச்செயல்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட வில்லை.

அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆயிரக்கணக்கான கோடி ரூபா மோசடிகள் இடம்பெற்றதாக கூறிய அரசாங்கத்தினால், எத்தனை குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்திருக்கிறது. எத்தனை பேருக்கு எதிராக உரிய ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

குற்றச்சாட்டுகளை சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்துவதும், ஒரு சில வாரங்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவதும், பின்னர் பிணையில் வெளியே வருவதும் முன்னைய ஆட்சியில் இருந்தவர்களுக்கு வழக்கமான விடயமாகி விட்டது.

அவர்களும் அதனைப் பொருட்படுத்துவதில்லை, பொதுமக்களும் இப்போது இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

காரணம், குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுபவர்கள், அடுத்தடுத்த வாரங்களில் வெளியே வந்து விடுவார்கள். அவர்களுக்கு வெளிநாடு செல்லும் தடை விதிக்கப்பட்டாலும் ஏதேதோ காரணங்களை தேடிப்பிடித்து நீதிமன்றில் முன்வைத்து, வெளிநாடு செல்லும் அனுமதியையும் பெற்று விடுகிறார்கள்.

ஆக, முன்னைய ஆட்சிக்காலத்து மோசடிகள், ஊழல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எல்லாமே நிரூபிக்க முடியாதவையாக மாறி வருவதாகவே தோன்றுகிறது. முறையான விசாரணை நடத்தப்படாமை தான், அரசாங்கத்தின் மீது மக்கள் சந்தேகம் கொள்ளும் நிலையை ஏற்படுத்தியது.

டுபாய் வங்கியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபா வைப்புச் செய்யப்பட்ட குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, அந்தப் பணம் மீள எடுக்கப்பட்டு விட்டதாகவும், அந்த விசாரணைகளுக்கு உதவ குறிப்பிட்ட வங்கி மறுப்புத் தெரிவித்து விட்டதாகவும் அண்மையில் கூறியிருந்தார்.

அந்த விசாரணைகளை இனி முன்னெடுக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டது, சாதாரண விடயமல்ல. ஆயிரக்கணக்கான கோடி ரூபா என்பது யாராலும், நினைத்துப் பார்க்க முடியாத விடயம்.

அதனை எவரேனும் திருடியிருந்தாலோ மோசடி செய்திருந்தாலோ, எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை என்று சாட்டு கூறிவிட்டு நகர்ந்து போக முடியாது.

ஒன்றில் குற்றச்சாட்டு தவறானதாக இருக்க வேண்டும். அல்லது குற்றச்சாட்டை நிரூபிக்க அதற்கான ஆதாரங்களைக் கண்டறிய அரசாங்கம் விரும்பவில்லை என்று கருத வேண்டும்.

முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல்கள் பற்றி கடந்த ஆண்டு துவக்கத்தில் அமைச்சர்கள் பக்கம் பக்கமாக செய்திகளைக் கொடுத்தார்கள்.

அந்த முறைகேடுகள் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம் எல்லாமே பூச்சியமாகத் தான் இருக்கிறது. அவ்வாறாயின் இந்த விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா என்ற சந்தேகம் எழுவது இயல்பு.

அண்மையில், ஒரு முறைகேடு குறித்த விசாரணைகளுக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷவும், முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

ஊழல் விசாரணைகளில் மாத்திரமன்றி, படுகொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட படையினர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

ஜனாதிபதியின் இந்த உரைக்குப் பின்னர், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கிலும், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கிலும், சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை வழங்கப்பட்டது.

இது ஜனாதிபதியின் பகிரங்கமான உரை ஏற்படுத்திய மறைமுகமான அழுத்தத்தின் விளைவு என்றே கூறலாம்.

 இல்லாவிடின், பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள், ஜனாதிபதியின் உரை இடம்பெற்ற சில நாட்களிலேயே பிணையில் வெளியே வரும் வாய்ப்பை பெற்றிருக்க முடியாது.

இதைவிட, முன்னைய அரசாங்கத்தின் ஊழல்கள், முறைகேடுகளை கண்டறிந்து குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்துவோம் என்றும், ஊழலற்ற நல்லாட்சியை கொடுப்போம் என்றும் கூறிக் கொண்டு பதவிக்கு வந்த தற்போதைய அரசாங்கமே, பாரிய மோசடிக்குத் துணைபோன குற்றச்சாட்டை எதிர்கொண்டிருப்பது தான் முக்கியமான விடயம்.

மத்திய வங்கி பிணை முறி மோசடியில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற கோப் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பலத்த எதிர்ப்புகளையும் மீறி மத்திய வங்கி ஆளுனராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மகேந்திரன் இன்று, அவரது மருமகனின் நிறுவனம், ஆயிரக்கணக்கான கோடி ரூபா இலாபத்தைப் பெறும் முறைகேடுகளுக்கு துணைபோனவராக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்.

இவரை நியமித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன. முன்னைய அரசாங்கத்தில் பதவி வகித்தவர்கள், தமது முறைகேடுகள், ஊழல்கள் குறித்த விசாரணைகளை முடக்குவதற்கு இந்த விவகாரத்தை தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

தற்போதைய அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை தீவிரப்படுத்தினால் கடந்த கால முறைகேடுகள், தொடர்பான விசாரணைகள் முடங்கிப் போகும் என்றும், மக்களும் அதனை மறந்து விடுவார்கள் என்றும் கூட்டு எதிரணியினர் கணக்குப் போட்டிருக்கக் கூடும்.

எவ்வாறாயினும் ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி பற்றிய எதிர்பார்ப்புகளுடன் ஆட்சியில் ஏற்றப்பட்ட அரசாங்கமும் இப்போது ஊழல், முறைகேடுகளுக்குத் துணைபோன அரசாங்கமாகவே பெயரை எடுத்திருக்கிறது.

இது அரசாங்கம் மீதான நம்பகத்தன்மைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்தவர்களை கடும் எரிச்சலடைய வைத்திருக்கிறது.

இலங்கை மன்றக் கல்லூரியில், படைத்தளபதிகளை நீதிமன்றத்தில் நிறுத்தியதற்கு எதிராகவும், கொலைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட படையினரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி நிகழ்த்திய உரை, புரவெசி பலய போன்ற சிவில் சமூக அமைப்புகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவைப் பதவிக்குக் கொண்டு வருவதில், சிவில் சமூக அமைப்புகளின் பங்கு மிகப் பெரியது.

அதிகம் ஜனவசியம் இல்லாத ஒரு அரசியல்வாதியாகவே இருந்த மைத்திரிபால சிறிசேனவை, ஐ.தே.க.வும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்,வேறு சில உதிரிக்கட்சிகளும் இணைந்து பொதுவேட்பாளராக நிறுத்தியதால் தான் அவர் வெற்றி பெற்றார் என்று கூற முடியாது.

முன்னைய ஆட்சியின் முறைகேடுகள், ஊழல்களை சிவில் சமூகம் அம்பலப்படுத்தியதும், ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வர மாற்றம் அவசியம் என்று சிவில் அமைப்புகள் பிரசாரம் செய்ததும், மைத்திரிபால சிறிசேனவுக்கு சாதகமாக அமைந்தது.

மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக, சிவில் சமூகம் நேரடியாகவே களமிறங்கியது. அப்படிப்பட்ட சிவில் சமூக அமைப்புகள், அரசாங்கத்தின் மீதும், ஜனாதிபதியின் மீதும் நம்பிக்கை இழந்திருக்கின்றன.

அதுபோலவே, மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு காரணமாக இருந்த தமிழ் மக்களும் தமது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கத்திலும் ஏமாற்றத்திலும் உள்ளனர்.

மீள்குடியமர்வு, காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போனோர் விவகாரம், சிங்கள மயமாக்கல் உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் இந்த அரசாங்கத்தின் காலத்திலும் தீர்க்கப்படாமல் இழுபறிப்படுகின்றன.

இத்தகைய நிலையில், ஜனாதிபதி மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையும், வசீகரமும் கணிசமாகவே குறைந்து விட்டது.மொத்தத்தில் இப்போதைய அரசாங்கம் யாரின் மூலம் ஆட்சிக்கு வந்ததோ அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றத் தவறிவிட்டது. இது அவர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

அதற்குக் காரணம், கொடுத்த வாக்குறுதியை அவர்கள் காப்பாற்றத் தவறியமை தான்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-06#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.