Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையிடம் அமெரிக்கா எதனை எதிர்பார்க்கிறது?

Featured Replies

இலங்கையிடம் அமெரிக்கா எதனை எதிர்பார்க்கிறது?

02sama-dc197d47610ef9e11f457bf55d351a048e4022d3.jpg

 

“உயிர்களைக் காப்பாற்றுவதில், இலங்கை ஆயுதப்படைகள் நிபுணத்துவத்தையும், அக்கறையையும் காண்பித்தனர். இந்த அவசர சூழ்நிலைகளில் அவர்கள் வழங்கிய உதவிகள் ஆழமாகப் பாராட்டப்பட வேண்டியது.”

இவ்வாறு இலங்கைக் கடற்படை மற்றும் விமானப்படைக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார், அட்மிரல் ஹரி பி ஹரிஸ். இவர் 70 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி.

கடந்தவாரம், கொழும்பில் கோல்பேஸ் விடுதியில் நடந்த காலி கலந்துரையாடல் எனப்படும், கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போது தான் அட்மிரல் ஹரி பி. ஹரிஸ் இவ்வாறு கூறியிருந்தார்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி, இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை மட்டுப்படுத்தி வைத்திருந்த – பொருளாதார சலுகைகளை தடுத்து வைத்திருந்த- போரின் போதும், போருக்குப் பின்னரும் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்து மூன்று தீர்மானங்களை முன்மொழிந்த அமெரிக்காவின், ஒரு முக்கியமான படைத்தளபதியே, இலங்கைப் படையினருக்கு இந்தப் பாராட்டை வெளியிட்டிருக்கிறார்.

இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் மரணத்துக்கு காரணமானதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். ஆயுதப்படைகள், உயிர்களைக் காப்பாற்றுவதில் அக்கறையும், நிபுணத்துவமும் கொண்டவர்கள் என்று அமெரிக்கத் தளபதியால் புகழாரம் சூட்டப்படும் நிலை இப்போது வந்திருக்கிறது.

அவ்வாறாயின், போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறப்பட்டு, அதுசார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டதா- அல்லது ஆயுதப்படைகள் மீதான குற்றச்சாட்டுகள் தான் பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதா?

இரண்டுமே இல்லை. ஆனால், இலங்கை ஆயுதப்படைகளை மனித உரிமை மீறல் காரணங்களை காட்டி ஒதுக்கி வைத்திருந்த அமெரிக்காவே, இப்போது, அவர்களைப் பாராட்டுகிறது, தேடித்தேடி ஓடிவந்த பயிற்சிகளையும் கொடுக்கிறது. அரசியல் சூழ்நிலைகளும், பூகோள அரசியல் நலன்களும் ஏற்படுத்தியிருக்கின்ற மாற்றமே இது.

அட்மிரல் ஹரிஸ், இலங்கை ஆயுதப்படைகளை பாராட்டியமைக்கு காரணமாக, இரண்டு முக்கியமான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த இரண்டு சம்பவங்களின் போதும், அமெரிக்க கடற்படை மாலுமிகளின் உயிர்களை இலங்கைப் படையினர் காப்பாற்றியுள்ளனர்.

ஒரு சம்பவம், கடந்த செப்ரெம்பர் மாதம், 30ஆம் திகதி இடம்பெற்றது. இலங்கைக்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்த யு.எஸ்.எஸ். ஹொப்பர் (USS Hopper) என்ற ஏவுகணை நாசகாரிக் கப்பலின் மாலுமி ஒருவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது.

விமான மூலம் மீட்கும் வசதிகள் இல்லாததாலும், அருகில் அமெரிக்கத் தளங்கள் ஏதும் இல்லாததாலும், இலங்கை அரசாங்கத்திடம் உதவி கோரப்பட்டது.

உடனடியாகவே, அமெரிக்க நாசகாரி, இலங்கை கடல் எல்லைக்குள் வர அனுமதி அளிக்கப்பட்டது. அவசரமாக இலங்கை கடற்படைப் படகுகள் மூலம் மீட்கப்பட்ட அமெரிக்க மாலுமி கொழும்பு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.

அதுபோல மீண்டும் ஒரு சம்பவம், அட்மிரல் ஹரிஸ் கொழும்பு வருவதற்கு முதல் நாள், இடம்பெற்றது. யு.எஸ்.எஸ். மாகின் ஐலன்ட் (USS Makin Island) என்ற ஈரூடகத் தாக்குதல் கப்பல் இந்தியப் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஒரு மாலுமிக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது.

உடனடியாக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியுடன், அந்த மாலுமி கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டார்.

இந்த இரண்டு அமெரிக்க மாலுமிகளின் உயிர்களையும் காப்பாற்றிய நெகிழ்ச்சிதான், இலங்கையின் ஆயுதப்படைகள் மீது அமெரிக்கத் தளபதிக்கு ஏற்பட்ட உயர் அபிமானத்துக்குக் காரணமாகும்.

இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம், உயர் நிபுணத்துவத் தேர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள போதிலும், மனித உரிமைகள் விடயத்தில் இன்னமும் மோசமான நிலையிலேயே இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

அதனால்தான், சர்வதேச அரங்கில் இன்னமும், இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் ஜெனீவாவில் நடந்த சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் கூட்டத்தொடரில், இலங்கை குறித்த ஆய்வுகள் இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கூட இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள் கடுமையான அழுத்தங்களுக்கும், கேள்விகளுக்கும் முகம் கொடுக்க நேரிட்டது.

கைதுகள், சித்திரவதைகள், உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள் விளக்கமளித்த போதும், ஐ.நா நிபுணர்களை அவர்களால் திருப்திப்படுத்த முடியவில்லை.

அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்த, அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸ், இந்த அமர்வில் ஐ.நா நிபுணர்களின் கடுமையான கேள்விகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

போரின் இறுதிக்கட்டத்தில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக, அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆனால், பிரதி பொலிஸ்மா அதிபர் சிசிர மென்டிஸ், அதற்கு எந்தப் பதிலையும் கூற முடியாமல் இருந்தார். அரச குழுவுக்குத் தலைமை தாங்கிய, சட்டமா அதிபர், தான் தலையிட்டு, ஐ.நா. நிபுணர்களின் கேள்விகளில் இருந்து அவரைக் காப்பாற்ற வேண்டியிருந்தது.

ஐ.நா. நிபுணர்களின் கேள்விகளுக்கு விரிவான பதிலை எழுத்து மூலம் தருவதாக கூறி அரசாங்கக் குழு தப்பித்துக் கொழும்பு வந்தது.

அந்த ஆய்வுக் கூட்டத்தொடரின் முடிவில் கருத்து வெளியிட்ட சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் தலைவரான, ஜே.மொட்விக், அமர்வு முடியும் நேரம் நெருங்குவதால், பிரதி பொலிஸ்மா அதிபர் மென்டிசிடம் வாக்குமூலம் பெற முடியாதுள்ளது. இது கவலை தருகிறது. ஆனாலும், பதிலளிக்கப்படாத கேள்விகளு பதில்களை எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருந்தார்.

இது அந்தக் கூட்டத்தொடரில் நடந்த ஒரு சம்பவம்.

அமெரிக்கா போன்ற நாடுகளினது தளபதிகளையும், அதிகாரிகளையும் திருப்திப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், துறைசார்ந்த நிபுணர்களை திருப்திப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியிருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டியிருந்தது.

இது மாத்திரம் தான் என்றில்லை, ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றுவதற்கு இலங்கைப் படையினரை அனுப்புவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் முறைகள் குறித்தும், இந்த கூட்டத்தொடரில் அரசாங்க பிரதிநிதிகளிடம் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

இலங்கைப் படையினரை அதிகளவில் ஐ.நா. அமைதிப்படையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று புதிய அரசாங்கம் கோரிக்கை விடுத்த போது, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது,

மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்படாதவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. அதற்கான ஒரு ஆய்வு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்திருந்தார்.

இதற்கு அமைவாக உள்ளக வெளியக ஆய்வுகளை மேற்கொள்ளும் பொறிமுறையை அரசாங்கம் உருவாக்கியிருப்பதாக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. கூட்டத்தொடரில், ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதி சமந்த ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

மூன்றடுக்கு ஆய்வுப் பொறிமுறையின் மூலமே ஐ.நா அமைதிப்படைக்கு இலங்கைப்படைகள் அனுப்பப்படுவதாக அவர் கூறியிருந்தார்.

முதல் அடுக்கில், இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறையின் மூலம் தனிப்பட்ட தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

அதற்குப் பின்னர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.

மூன்றாவதாக, அந்தப் பட்டியல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு, அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது என்ற தகவலை, சமந்த ஜயசூரிய வெளியிட்டார்.

இலங்கைப் படையினர் இந்தளவுக்கு கண்காணிப்புக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தப்படுவதற்குக் காரணம், கடந்தகால மீறல் சம்பவங்கள் தான்.

அந்தக் கறையிலிருந்து இன்னமும் இலங்கைப் படையினர் காப்பாற்றப்படவில்லை. மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குற்றமிழைத்தவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே, அரசபடைகளால் இந்தக் கறைகளில இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இப்போது அமெரிக்கா தனது நலன்களை அடைவதற்காக, இலங்கைப் படையினருக்கு பயிற்சிகளை அளிக்கிறது. வசதிகளை கொடுக்கிறது. நல்ல பாராட்டும் அளிக்கிறது.

இதற்குக் காரணம் என்னவென்றால், இலங்கையின் பூகோள அமைவிடம்.

இந்தியப் பெருங்கடல் அமெரிக்காவுக்கு முக்கியமானது, இலங்கையும் அமெரிக்காவுக்கு முக்கியமானது, அதுபோலவே, அமெரிக்காவும் இலங்கைக்கு முக்கியமானததாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று அட்மிரல் ஹரிஸ் தனது உரையின் ஒரு கட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கருத்தில் இருந்தே, அமெரிக்காவும், அட்மிரல் ஹரிசும் இலங்கையிடம் எதனை எதிர்பார்க்கின்றனர் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-04#page-7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.