Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் பாரிய நகர்வுக்காக வடகில் நடத்தப்படும் தாக்குதல்!

Featured Replies

கிழக்கில் பாரிய நகர்வுக்காக வடகில் நடத்தப்படும் தாக்குதல்!

-விதுரன்-

கிழக்கில் பாரிய தாக்குதலைத் தொடுக்க முன்னர் வடக்கில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கிழக்கில் தங்களின் முழுக் கவனமும் திசை திருப்பப்பட்டிருக்கையில் விடுதலைப் புலிகள் வடக்கில் பாரிய தாக்குல்களைத் தொடுத்து விடலாமென்ற அச்சத்திலேயே தற்போது வடக்கில் புலிகளின் நிலைகள் மீதான தாக்குதலை படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கிழக்கை புலிகள் வசமிருந்து முழுமையாக விடுவித்து விடவேண்டுமென்பதில் அரசும் படையினரும் அக்கறை கொண்டுள்ளனர். தற்போதைய மோசமான அரசியல் சூழ்நிலையிலிருந்து விடுபட ஜனாதிபதி மகிந்தவுக்கு இராணுவ வெற்றிகள் அதிகம் தேவைப்படுகிறது.

நாட்டின் முன்னைய தலைவர்கள் எல்லோரும் புலிகளிடம் அடிபணிந்தனர் என்ற நிலையை மாற்றியமைத்து இராணுவ ரீதியில் புலிகளை தோற்கடித்த தலைவரென்ற பெருமையை பெற்றுவிட வேண்டுமென்றும் மகிந்த ராஜபக்‌ஷ ஆர்வம் காட்டுகிறார். இதனால்தான் போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையிலும் சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தத்தின் மத்தியிலும் இராணுவ நடவடிக்கையை அவர் தீவிரப்படுத்தி வருகிறார்.

எதிர்க்கட்சிகளை பிரித்து எம்.பி.க்களை தன்வசப்படுத்தி தனது ஆட்சியை எந்தளவுக்கு பலப்படுத்துகிறாரோ அந்தளவிற்கு எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தி அந்தக் கட்சிகளை சின்னாபின்னமாக்கி அவற்றை தனது காலடியில் விழவைத்து தனது காரியத்தை சாதிக்க ஜனாதிபதி மகிந்த முயல்கிறார்.

அண்மைக் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியை அவர் எந்தளவிற்கு பிளவுபடுத்தி அதிலிருந்து பலரை தன்வசப்படுத்தினாரென்பது இதற்கு நல்ல உதாரணம். இதைவிட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் பிளவுபடுத்தியும் பலவீனப்படுத்தியும் அவற்றை தனது காலடியில் விழவைத்து, தான் விரும்பியவற்றை சாதிக்க ஜனாதிபதி முயல்கிறார்.

இதன்மூலம் தனது ஆட்சி அதிகாரத்தைப் பெரிதும் பலப்படுத்துவதுடன் எதிர்க் கட்சிகளை தனது விருப்பம் போல் செயல்பட வைக்கவும் முயல்கிறார். அத்துடன், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்திலிருந்து இன்று ஐ.தே.க. வை அகற்றி அவ்விடத்தில் ஜே.வி.பி.யை அமர்த்தவும் ஜனாதிபதியால் முடியுமென்ற நிலையே உள்ளது.

தற்போது பாராளுமன்றத்தில் ஐ.தே.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 43. ஜே.வி.பி. உறுப்பினர்களின் எண்ணிக்கை 38. இதனால் ஐ.தே.க.விலிருந்து மேலும் ஐவரை பதவி ஆசைகாட்டி அரசுடன் இணைத்துக் கொண்டு விட்டால் பாராளுமன்றத்தில் ஐ.தே.க.வின் பலம் மேலும் குறைந்துவிட ஜே.வி.பி. பிரதான எதிர்க்கட்சியாகி விடும்.

இன்று நாட்டில் ஒவ்வொரு கட்சியினதும் தலைவிதியை நிர்ணயிப்பது போல் வடக்கு - கிழக்கில் எதிர்க்கால அரசியல் நிலைமைகளையும் தன்னால் நிர்ணயிக்க முடியுமென ஜனாதிபதி மகிந்த நம்புகிறார்.

புலிகளை இராணுவ ரீதியில் மிகவும் பலவீனப்படுத்தி கிழக்கிலிருந்து அவர்களை அப்புறப்படுத்திவிடுவதன் மூலம் வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தை புலிகளிடமிருந்து இல்லாது செய்துவிடலாமெனவும் கருதுகின்றார்.

அரசியல் தீர்வு தொடர்பான சமாதான முயற்சிகளில் இன்னமும் புலிகளைப் பங்காளியாகவே அரசு கருதுவதாகக் கூறிவருவதன் மூலம், கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக விரட்டிவிட்டால் அரசியல் தீர்வு தொடர்பான சமாதான முயற்சிகளில் வேறு பங்காளிகளும் சேர்த்துக் கொள்ளப்படுவரென்பதை அரசு மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது. இதற்காகவே, கிழக்கில் தங்களுக்கேற்ப அரசு ஆயுதக் குழுக்களை உருவாக்கி அவர்களை அரசியல்மயப்படுத்தும் தீவிர முயற்சியிலும் இறங்கியுள்ளது.

கிழக்கிலிருந்து புலிகள் முற்றாக வெளியேற்றப்பட்டுவிட்டால் கிழக்கு மக்களின் பிரதிநிதிகள் புலிகளல்ல. அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அந்தப் பகுதியில் உருவாகியுள்ள குழுக்களுடனேயே பேச வேண்டுமென்று கூறிவிடுவதே ஜனாதிபதி மகிந்தவின் திட்டமாகும்.

தெற்கில் அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தி அவற்றிலிருந்து உறுப்பினர்களை தன்வசப்படுத்தி அந்தக் கட்சிகளை மிகவும் பலவீனப்படுத்தி தன்னை எதிர்க்க கட்சிகளே இல்லையென்றதொரு நிலையை எப்படி அரசியலரங்கில் உருவாக்கியுள்ளாரோ அதேபோன்றே யுத்த களத்திலும் இதுபோன்ற உபாயத்தை புலிகள் மீது கடைப்பிடிக்க ஜனாதிபதி முயல்கிறார்.

ஆனாலும், அரசியல்களம் போன்றதல்ல யுத்தமுனை. கரணம் தப்பினால் மரணமென்பதைத் தெரிந்தும் அவர் புலிகளுடன் மோதி வருகின்றார். அண்மைக் காலங்களில் கிழக்கில் கிடைத்த சில வெற்றிகள் அவரை மேலும், மேலும் தூண்டி பாரிய வெற்றிகளுக்கான ஆசையை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த வெற்றிகள் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் புதிய பங்காளிகளையும் சேர்ப்பதன் மூலம் தமிழர் பிரச்சினையை மேலும் குழப்பி இழுத்தடித்து தங்கள் விருப்பத்திற்கேற்ப அரைகுறைத் தீர்வை முன்வைத்துவிடலாமெனவும் ஜனாதிபதி கருதுவதாகவே தோன்றுகிறது.

இதனால்தான் நாட்டின் 59 ஆவது சுதந்திர தினத்தை அவர், முப்படைகளதும் படைபலத்தை காண்பிக்குமொரு விழாவாகக் காட்ட முற்பட்டுள்ளார். அத்துடன், சுதந்திரதினத்திற்கு முதல்நாள் வாகரைக்கும் சென்ற ஜனாதிபதி மகிந்த, சுதந்திர தினத்தை வாகரையைக் கைப்பற்றிய வெற்றிவிழாவாகவும் கொண்டாடியுள்ளார்.

இதன்மூலம் கிழக்கை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கத்துடன் அவரிருப்பது தெளிவாகத் தெரிந்தது. அத்துடன், கிழக்கை முழுமையாக கைப்பற்றும் இறுதி நடவடிக்கையை ஆரம்பிக்கும்போது புலிகள் வடக்கில் பாரிய தாக்குதல்களைத் தொடுக்கலாமென்ற அச்சமும் படைத் தரப்புக்குள்ளது. இதனால் மட்டக்களப்பில் புலிகள் வசமுள்ள பகுதிகளை நோக்கி பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கும் அதேநேரம், வடக்கில் புலிகள் பாரிய தாக்குதல்களை தொடுக்க முடியாதவாறு அவர்களை முடக்குவதும் படைத்தரப்பின் நோக்கமாகும்.

இதனால்தான் கடந்த ஒரு வாரமாக வடக்கில் விமானப் படையினர் புலிகளின் நிலைகள் மீது பாரிய தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர். குறிப்பாக, யாழ்.குடாநாட்டில் கிளாலி, முகமாலை மற்றும் வடமராட்சி கிழக்கில் புலிகளின் முன்னரங்க காவல் நிலைகள் மீது தொடர்ச்சியாக கடும் விமானத் தாக்குதலும் பலத்த ஷெல் தாக்குதலும் நடைபெற்று வருகின்றன.

குடாநாட்டுக்குள் புலிகள் பாரிய தாக்குதலை ஆரம்பித்து விடலாமென்ற அச்சத்தில் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீதும் ஆட்லறி மற்றும் மோட்டார் நிலைகள் மீதும் அவர்கள் ஒன்றுகூடும் முகாம்கள் மீதும் தொடர்ச்சியாக பலத்த தாக்குதல்களைத் தொடுத்து பாரிய தாக்குதலுக்கான ஏற்பாடுகளைத் தடுப்பதன் மூலம் உடனடியாக குடாநாட்டுக்கு புலிகளால் ஏற்படும் பாரிய அச்சுறுத்தலை தடுத்து நிறுத்திவிட வேண்டுமென்பதே படையினரின் திட்டமாகும்.

கிழக்கில் பாரிய தாக்குதலைப் படையினர் ஆரம்பிக்கும் போது வடக்கில் புலிகள் பாரிய தாக்குதல் எதனையும் உடனடியாகத் தொடுக்க முடியாதளவுக்கு அவர்களது ஏற்பாடுகளை சீர்குலைக்கும் நோக்கிலேயே வடக்கில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக `கிபிர்' மற்றும் `மிக்' விமானங்கள் கடும் தாக்குதலைத் தொடுக்க இராணுவ முகாம்களிலிருந்து முகமாலை முதல் பளை வரையான பகுதிகளை நோக்கி பலத்த ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிழக்கில் தற்போது கடற்புலிகளின் அச்சுறுத்தல் பெரும்பாலும் குறைந்து விட்டதாகக் கருதும் கடற்படையினர், தற்போது தங்கள் முழுக் கவனத்தையும் வடக்கில் செலுத்துகின்றனர். இதனால்தான் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாயிருந்த பருத்தித்துறை துறைமுகத்தை தற்போது காங்கேசன்துறைக்கும் பலாலிக்கும் இடையில் மயிலிட்டிக்கு மாற்றி அங்கு இறங்குதுறை அமைத்துள்ளனர்.

இதைவிட கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் குடாநாட்டில் புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்த போது கடற்புலிகளின் தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. புலிகளின் இந்த முற்றுகை சுமார் இருவாரம் நீடித்த நிலையில் பின்னர் முடிவுக்கு வந்தது. அப்போது புலிகளால் கிளாலி, எழுதுமட்டுவாள் பகுதிகளில் தங்கள் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்துச் செல்ல முடியாததே, அவர்களால் குடாநாட்டினுள் நுழைய முடியாது போனதற்கு காரணமெனக் கருதும் படைத்தரப்பு தற்போதும் கிளாலி, எழுதுமட்டுவாள் முன்னரங்க நிலைகளை, மேலும், மேலும் பலப்படுத்தி வருகின்றது.

இதற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புலிகளின் நிலைகள் மீதே தினமும் விமானப் படை விமானங்கள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அத்துடன், இம்முறை புலிகள் குடாநாட்டின் மீது பாரிய தாக்குதலைத் தொடுத்தால் அதில் கடற்புலிகளின் பங்களிப்பு மிக அதிகமாயிருக்குமென படைத்தரப்பு கருதுகிறது.

அதேநேரம், வடக்கில் கடற்பைடயினரை விட கடற்புலிகள் மிகவும் பலமான நிலையிலிருப்பதை அரசும் படைத்தரப்பும் உணர்ந்துள்ளன. வடக்கே கடற்பரப்பில் நடைபெறும் கடும் சமர்களில் விமானப் படையினரும் பங்கேற்றாலும் அவர்களால் ஒருபோதும் கடற்புலிகளுக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலாயிருக்க முடிந்ததில்லை.

கடற்படையினருக்கு கடற்புலிகள் பேரச்சுறுத்தலாயிருக்கையில் கடற்சமரில் கடற்படையினருக்கு விமானப் படையினராலும் உதவ முடியாதது படையினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருவதால், கடற்புலிகளை கடலில் சந்திப்பதை விட அவர்களை தரையில் சந்திக்கவே விமானப் படை விரும்புகிறது. இதனால்தான் கடற்புலிகளின் தளங்களெனக் கூறி தினமும் முல்லைத்தீவு கரையோரத்தில் விமானப் படையினர் பலத்த தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

விமானப் படைக்கு புதிதாக மேலும் மூன்று `கிபிர்' களும் நான்கு `மிக்' விமானங்களும் தருவிக்கப்பட்டு அவர்களது பலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்மைக்கால மோதல்களில் புலிகள் ஒருபோதும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தவில்லை. பலதடவைகள் வடக்கில் விமானப் படையினர் மோசமான தாக்குதல்களை நடத்தியும் புலிகள் அவற்றை தாக்காதது தொடர்ந்தும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடற்புலிகளை எதிர்கொள்ள கடற்படையினர் எப்படித் தயங்குகிறார்களோ அவ்வாறே விமானப் படையினரை எதிர்கொள்ள புலிகள் தயங்குவதாக படைத்தரப்பு கருதுகிறது. இது படைத்தரப்பின் மனோநிலையை மேலும் அதிகரித்து வருகிறது. விமானப் படையை எதிர்க்க முடியாத நிலையிலேயே புலிகள் களமிறங்குவதாக படைத்தரப்பு நினைக்கிறது.

கிழக்கில் மூதூர் கிழக்கு மற்றும் வாகரைப் பகுதியில் கிடைத்த வெற்றிகள் போன்று மட்டக்களப்பிலும் வெற்றி கிடைத்துவிடுமென படைத்தரப்பு கருதுகிறது. ஆட்பற்றாக்குறை பெருமளவு இருக்கையில் கிழக்கில் தொடர்ந்தும் அகலக்கால் வைக்க அரசு முயல்கிறது. மூதூர் கிழக்கிலும், வாகரைப் பகுதியிலும் தற்காப்புச் சமரில் ஈடுபட்டு அங்கிருந்து விலகியது போல் மட்டக்களப்பில் புலிகள் விலகமாட்டார்களென்பது மிகத் தெளிவு.

இதனால் அங்கு ஆழமறியாது படையினர் காலைவிடப் போகிறார்களென்பதும் தெரிகிறது. சம்பூர், வாகரையைப் போலன்றி புலிகள் மிக மோசமான பதிலடி கொடுத்தால் கிழக்கு தொடர்பாக இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த பிரசாரங்கள் முடிவுக்கு வந்துவிடும். அத்துடன், அவ்வாறானதொரு மோசமான பதிலடி மேலும் தொடரும் வாய்ப்பையும் ஏற்படுத்திவிடலாம்.

கிழக்கில் பாரிய தாக்குதலை தொடுப்பதற்கும் புலிகளின் கவனத்தை திசைதிருப்புவதற்குமே தற்போது வடக்கில் பலத்த தாக்குதலை படையினர் நடத்தி வருகின்றனர். வாகரையை முற்றுகையிட்ட போது உணவுப் பொருட்களும் மருத்துவ உதவிகளும் படையினரால் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டன. இதனை சர்வதேச சமூகமே வன்மையாகக் கண்டித்திருந்தது.

இதுபோன்றதொரு நிலை இன்று யாழ்.குடாநாட்டிலும் நிலவுகிறது. அங்கு இப்போதும் உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. குடாநாட்டில் பாரிய மோதல்கள் வெடிக்கலாமென அங்குள்ள மக்களுக்கும் தெரிந்தாலும் அவர்களால் உணவுப் பொருட்களை களஞ்சிப்படுத்த முடியாதளவிற்கு அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

குடாநாட்டின் மீது புலிகள் முற்றுகையை ஆரம்பித்தால் அங்கு அனைத்து போக்குவரத்துகளும் நின்றுவிடும். இதனால் ஓரிரு தினங்களிலேயே அங்கு பாரிய உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். அவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தி அதற்கான பொறுப்பை புலிகள் மீது சுமத்தவே அரசும் படைத்தரப்பும் முயலுமெனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால்தான் குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதை அரசு மட்டுப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இனி எங்கு போர் வெடித்தாலும் அது நாட்டில் பேரழிவையே ஏற்படுத்தும். மூதூர் கிழக்கு மற்றும் வாகரை போன்று இனி மட்டக்களப்பில் புலிகள் விலகிச் செல்லமாட்டார்கள். அங்கு பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பல அரசியல் வெற்றிகளைப் பெற அரசு முனைவதால் மட்டக்களப்பு மீதான பாரிய தாக்குதல்கள் விரைவில் ஆரம்பமாகும் சாத்தியங்களுண்டு.

தெற்கில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடியிலிருந்து விடுபடவும் ஜனாதிபதிக்கு உடனடி இராணுவ வெற்றிகள் தேவைப்படுகின்றன. கட்சிக்குள் தோன்றியுள்ள எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று அமைச்சர்களைப் பதவி நீக்கியதால் எழுந்த நெருக்கடியை ஜனாதிபதியால் உடனடியாக சமாளிக்க முடியாது போய்விட்டது.

பதவி நீக்கப்பட்ட அநுரா பண்டாரநாயக்கவை அடுத்த ஓரிரு தினங்களில் சமாளித்து பதவி வழங்கியதன் மூலம், தான் எடுத்த முடிவைக் கூட தன்னால் உறுதியாகக் கையாள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி நன்குணர்ந்திருப்பார்.

இதேபோன்றே வடக்கு, கிழக்கு பிரச்சினை தொடர்பாக அவர் அடுத்தடுத்து எடுத்துவரும் முடிவுகள் நாடு பிரிவினையை நோக்கி வேகமாகச் செல்வதை காட்டுவதாக எதிர்க்கட்சிகளே கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இது இனிவரும் நாட்களில் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தப் போவதையும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

போர்நிறுத்த உடன்பாட்டுக்கு மாறாக பாரிய யுத்தம், வடக்கு - கிழக்கு பிரிப்பு, கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக வெளியேற்றல் என்பன போன்ற நடவடிக்கைகளெல்லாம் உடனடியாகப் பலனளித்துள்ளது போல் தென்படலாம். ஆனால், இது நீண்டகாலத்திற்கு, எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தப் போகிறது.

கிழக்கில் படைகள் தொடர்ந்தும் பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகையில் புலிகள் ஏன் தொடர்ந்தும் மௌனம் காக்கிறார்களென்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனாலும், தெற்கில் புலிகளின் பலம் குறித்து மிக மோசமான பிரசாரமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. படையினரின் மனோபலத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்தப் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதனால் புலிகள் திடீரெனப் பாரிய தாக்குதல்களைத் தொடுத்து அல்லது பதில் தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்திவிட்டால் தெற்கு ஆடிப் போய்விடும். தமிழர்களின் பலம் குறித்த மாயை தகர்க்கப்பட்டு விடும். பேச்சுவார்த்தை மேசையில் பேரம் பேசும் பலம் குறித்து கேள்வியெழும் என்பதையெல்லாம் இவர்கள் உணரும் நாள் வெகு தூரத்திலில்லை என்பது தெளிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதா,

செய்திகளை எங்கே சுட்டீர்கள் என்றும் கொஞ்சம் போடுங்களேன்?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதா,

செய்திகளை எங்கே சுட்டீர்கள் என்றும் கொஞ்சம் போடுங்களேன்?!

பண்டிதர், விதுரன் தினக்குரல் எல்லோ. அவர் சும்மா சத்த வெடி அடிக்கிரார். பயப்படாதையுங்கோ.

  • தொடங்கியவர்

கவிதா,

செய்திகளை எங்கே சுட்டீர்கள் என்றும் கொஞ்சம் போடுங்களேன்?!

நான் என்னம் ஒருதரையும் சுடவில்லை சுட்டால் சொல்லுவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் என்னம் ஒருதரையும் சுடவில்லை சுட்டால் சொல்லுவன்

ஆக்களைச் சுட்டால் சொல்லாதேங்கோ

செய்திகளை சுட்டால் சொல்லுங்கோ!!

"கிழக்கில் மூதூர் கிழக்கு மற்றும் வாகரைப் பகுதியில் கிடைத்த வெற்றிகள் போன்று மட்டக்களப்பிலும் வெற்றி கிடைத்துவிடுமென படைத்தரப்பு கருதுகிறது. ஆட்பற்றாக்குறை பெருமளவு இருக்கையில் கிழக்கில் தொடர்ந்தும் அகலக்கால் வைக்க அரசு முயல்கிறது. மூதூர் கிழக்கிலும்இ வாகரைப் பகுதியிலும் தற்காப்புச் சமரில் ஈடுபட்டு அங்கிருந்து விலகியது போல் மட்டக்களப்பில் புலிகள் விலகமாட்டார்களென்பது மிகத் தெளிவு. "

இது விதுரன் ஆய்வின் முடிவுகளில் ஒன்று. ஆய்வுகளுக்குட்பட்டவர்களாக விடுதலைப்புலிகளை

மட்டுப்படுத்த முடியாது. அவர்களை ஆய்வுகளின் மூலம் மதிப்பிடக் கூடியவர்களாகவிருந்தால்

எப்போதோ அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆகவே பின்வாங்குவார்கள் பின்வாங்கமாட்டார்கள்

என்றெல்லாம் எதிர்வு கூறமுடியாது.

வடக்கில் பாரிய நகர்வுக்காக கிழக்கில் நடத்தப்படும் தாக்குதல் என திருத்திக் கூறலாமோ? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.