Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

மிஸ்டர் கழுகு: தோப்பு 2.0

 
 

 

‘‘பேரையும் கேட்க வேண்டாம், ஊரையும் கேட்க வேண்டாம். கட்சியை மட்டும் சொல்கிறேன். அந்தப் பெண் பிரமுகர், பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர். சென்னையில் மட்டுமல்ல, டெல்லி வரை செல்வாக்கு உள்ளவர். அவரை மையப்படுத்தி எழும் குற்றச்சாட்டுகளைப் பார்த்து பி.ஜே.பி தலைமையே மலைத்துப் போயுள்ளதாம்” என்ற பீடிகை போட்டார் கழுகார். உள்ளே வந்ததும் புதிரோடு ஆரம்பிக்கிறாரே என்று அமைதியாக இருந்தோம்!

p44b.jpg‘‘சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் எலெக்ட்ரானிக் நிறுவனத்தை அந்த வி.ஐ.பி-யின் தம்பி தலைமைப் பொறுப்பில் இருந்து நடத்தினார். அந்த நிறுவனம், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் 60.92 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டதாக சி.பி.ஐ-க்கு அந்த வங்கியே புகார் கொடுத்தது. ஜனவரி மாதம் அந்த நிறுவனத்தின் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவுசெய்து இருக்கிறது. சி.பி.ஐ விசாரணை வளையத்துக்குள் அந்த நிறுவனம் வந்தவுடன், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அந்த வி.ஐ.பி-யின் தம்பி வெளிநாடு தப்பிச் சென்று விட்டாராம்.’’

‘‘சரி... அதற்கும் அந்த வி.ஐ.பி-க்கும் என்ன சம்பந்தம்?’’

‘‘அந்த நிறுவனத்தின் பங்குகளை அந்த வி.ஐ.பி, அவரின் கணவர், வி.ஐ.பி-யின் தம்பி மூவரும்தான் வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். கட்சியில் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, அவர்களின் குடும்ப நிறுவனத்துக்கு மத்திய அரசின் புராஜெக்ட் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.  இப்போது அந்த நிறுவனத்தின் மீதே சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளதால், அந்த வி.ஐ.பி தம்பதி அதிர்ச்சி அடைந்துள்ளதாம். வழக்கைத் தவிர்க்க கடும் முயற்சி எடுத்தும் பலன் இல்லாமல் போய்விட்டதால், இப்போது மேற்கொண்டு அந்த வழக்கில் தன்னைச் சேர்க்காமல் இருக்கவும் முயற்சி மேற்கொள்கிறாராம். அவரோடு ஏற்கெனவே நெருக்கமாக இருந்த மூன்று மத்திய அமைச்சர்களும் ‘எங்களால் எதையும் செய்ய முடியாது’ எனக் கையை விரித்துவிட்டார்களாம்.’’

‘’சி.பி.ஐ போட்டுள்ள வழக்கில் அந்த வி.ஐ.பி பெயர் இருக்கிறதா?’’

‘‘இப்போது அவர்கள் குடும்பத்தினர் பெயர் இல்லை. நிறுவனத்தைக் குறிப்பிட்டு, ‘பெயர் தெரியாத சிலர்’ என்றுதான் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளார்கள். சி.பி.ஐ விசாரணையில் இறங்கும்போது நிச்சயமாக இவர்களுக்குச் சிக்கல் வரும் என்கிறார்கள். இந்த விவகாரத்தை ப.சிதம்பரம் டீம் கையில் எடுத்து தமிழக பி.ஜே.பி தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்க ரெடியாகி வருகிறது’’ என்று சொல்லி பெருமூச்சுவிட்ட கழுகாரிடம்,  ‘‘கடந்த 16-ம் தேதி அ.தி.மு.க வட்டாரம் மிகுந்த பரபரப்புடன் இருந்ததே?” என்றோம்.

p44c.jpg

‘‘ஒன்றல்ல, இரண்டு பரபரப்புகள் அன்று நிகழ்ந்தன. ஒன்று, எம்.எல்.ஏ-க்கள் விடுதியில்... மற்றொன்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில். எம்.எல்.ஏ ஹாஸ்டலில், முன்னாள் அமைச்சர்களான தோப்பு வெங்கடாசலம், செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் ரகசிய ஆலோசனை நடத்தினார்கள். ‘கடந்த ஒரு வருடமாக பல தொகுதிகளில் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. அந்தக் குறையைப் போக்கி ஒவ்வொரு ஆளும்கட்சி எம்.எல்.ஏ தொகுதியிலும் கட்சி நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்... அமைச்சர்களுக்குள் ஒற்றுமை இல்லை; அதைச் சரிசெய்ய மொத்தமாக எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும், கட்சியின் நிகழ்கால-எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை உடனடியாக வரையறுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்... கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்து வைத்திருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நிறைய விஷயங்களைப் பேசி இருக்கிறார்கள்.”

‘‘எல்லாமே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான விஷயங்கள் போல இருக்கின்றனவே?”

‘‘அப்படித்தான் சொல்கிறார்கள். ‘எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்க, நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும்?’ என்று இவர்களில் சிலர் கேட்டார்களாம். ‘இப்படி எல்லாம் நாம் பேசுவது எடப்பாடி காதுக்குப் போக வேண்டும்’ என்றார்களாம். இந்த விவகாரங்களை இதுவரை தனித்தனியாகப் பேசி வந்துள்ளார்கள். இப்போது மொத்தமாகக் கூடி விவாதிக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் இரண்டு வித்தியாசமான கோரிக்கைகளும் விவாதிக்கப்
பட்டன.”

‘‘என்னவாம்?”

‘‘தாங்கள் பேசியது பற்றி ஒரு எம்.எல்.ஏ சொன்னதை அதே வார்த்தைகளில் சொல்கிறேன். ‘அம்மா இருந்தவரை அமைச்சர்கள் மற்றும் கார்டனுக்கான கமிஷன் தொகை 11 சதவிகிதம் என்று இருந்தது. அதன்பிறகு அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள் பங்கு எல்லாம் சேர்த்து டீலிங் மற்றும் கான்ட்ராக்டுகள் 30 சதவிகித கமிஷனில் முடியும். ஆனால், தற்போது அமைச்சரவை கமிஷன் மட்டும் 15 சதவிகிதம் கேட்கிறார்கள். அதன்பிறகு அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள் கமிஷன் எல்லாம் கொடுத்தால், அது 40 சதவிகிதம் வரை போய்விடுகிறது. அதனால் யாரும் கான்ட்ராக்டுகளை எடுப்பதற்கே துணிவதில்லை. அப்படித்தான் தற்போது முட்டை, மணல் கான்ட்ராக்டுகள் இன்னும் முடியாமல் இருக்கின்றன. கமிஷன் தொகையைக் குறைக்க வேண்டும். கான்ட்ராக்டுகளை துரிதப்படுத்த வேண்டும். அப்போதுதான் எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் பயன்பெறுவார்கள். கட்சியை நடத்த முடியும்’ என்று விவாதிக்கப்பட்டதாம்.”

‘‘இன்னொரு வித்தியாசமான கோரிக்கை என்ன?”

‘‘இளவரசியின் மகன் விவேக்கை மையப்படுத்தி கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கைதான். தனி அணியாகப் பிரிந்து போன ஓ. பன்னீர்செல்வத்துக்கு நாளுக்கு நாள் கூட்டம் குறைந்துகொண்டே வருகிறது. இப்போது அந்த அணியில் பழைய சுறுசுறுப்பும் வேகமும் இல்லை. சேலத்தில் பன்னீர்செல்வம் நடத்திய கூட்டத்துக்கே, மதுரையில் இருந்து ஆட்களைக் காசு கொடுத்து அழைத்துப்போனார்களாம். அந்த அளவில்தான் பன்னீர்செல்வம் அணியின் நிலைமை தற்போது உள்ளது. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக நடத்தப்படும் போராட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்குக் கூட்டம் கூடினாலும், அவருடைய எதிர்காலம் சாசுவதமாக இல்லை. அந்தளவுக்கு வழக்குகளில் தினகரன் சிக்கி உள்ளார். அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டுமானால், சசிகலா குடும்பத்தில் இருந்து ஒருவர் கண்டிப்பாக முக்கியப் பொறுப்பில் இருக்க வேண்டும். அவர், எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாதவராக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற சாய்ஸ் விவேக் ஜெயராமன்தான். ‘விவேக்கை இப்போதே கட்சிக்குள் இழுத்து வந்தால், இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பிறகும் கட்சியைக் காப்பாற்றலாம்’ என்று தோப்பு வெங்கடாசலம் வலியுறுத்தி உள்ளார். இதை கரூர் செந்தில் பாலாஜி ஆமோதித்தாராம். இளவரசி குடும்பத்தோடு செந்தில்பாலாஜிக்கு எப்போதும் நெருக்கம் உண்டு. மற்ற எம்.எல்.ஏ-க்களும் இதற்கு ஒத்து ஊதியதாகச் சொல்லப்படுகிறது!”

p44a.jpg

‘‘இதற்கு எடப்பாடி தரப்பு என்ன சொல்கிறது?”

‘‘தோப்பு வெங்கடாசலம் கூட்டம் நடந்த அதே 16-ம் தேதி மாலையில் அ.தி.மு.க அமைச்சர்களின் கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் தோப்பு வெங்கடாசலம் எழுப்பும் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. ‘அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அமைதியாகிவிடுவார்’ என்று சிலர் வலியுறுத்தி உள்ளனர். ‘இப்போது அவருக்குக் கொடுத்தால், அடுத்து செந்தில்பாலாஜி ஒரு கூட்டத்தைக் கூட்டி பதவி கேட்பார். பழனியப்பன் தனக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்பார். அதனால், இப்போதைக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். தோப்பு வெங்கடாசலத்திடம் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தி அவரை ஆஃப் செய்யும் வேலையைப் பாருங்கள்’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் எடப்பாடி. அதுபோல் ‘சசிகலா குடும்பத்தினரைக் கட்சியில் அனுமதிப்பது பற்றி எந்த முடிவையும் வெளிப்படையாக எடுக்கும் நிலையிலோ, அறிவிக்கும் நிலையிலோ நாம் இப்போது இல்லை’ என்று மட்டும் பேசி உள்ளனர். ‘தினகரன் பற்றி யாரும் எந்தக் கருத்தும் சொல்லக்கூடாது’ என்றும் எடப்பாடி கட்டளை போட்டுள்ளாராம்.”

‘‘இந்த நேரத்தில் நடராசன் தனியாக எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கத்தைப் பாராட்டினாரே, அதற்கு என்ன காரணமாம்?”

‘‘நடராசன் எப்போதும் ஒரு மாய மான். அவர் திடீரென்று எடப்பாடி அரசாங்கத்தைப் பாராட்டுகிறார் என்றால், ‘இந்த அரசாங்கமும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது’ என்று யாருக்கோ சொல்ல முற்படுகிறார். அவ்வளவுதான். அது பி.ஜே.பி-க்கான சிக்னலாக இருக்கலாம். தி.மு.க-வுக்காக இருக்கலாம். பன்னீர்செல்வம் அணிக்காக இருக்கலாம்... அல்லது, எடப்பாடிக்கே கூட இருக்கலாம். அவர் ஏன் சொன்னார்... எதற்கு சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ள, இனிமேல் நடக்கும் அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.”

‘‘பன்னீர் அணி என்ன நிலையில் இருக்கிறது?”

‘‘பேச்சுவார்த்தைக்குத் தொடர்ந்து இரண்டு தரப்பிலும் தடை விழுகிறது. அமைச்சர்கள் ஜெயக்குமாரும் திண்டுக்கல் சீனிவாசனும் வெளிப்படையாகப் பேசினாலும், குறிப்பாக தங்கமணியும், வேலுமணியும்தான் ‘இரண்டு அணிகளும் சேரக்கூடாது’ என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர். இந்த நேரத்தில், ‘யாரை நம்பி தனியாகப் பிரிந்தோமோ... அவர்களும் நம்மைக் கைகழுவி விடுகிறார்கள்’ என பன்னீர் அணி கொஞ்சம் உதறலில் இருக்கிறது. ‘நம்மிடம் தற்போது இருப்பவர்களை வைத்துக்கொண்டு, நம் தலைமையில் இயங்கும் அணியைப் பலப்படுத்துவோம்’ என்பதுதான் பன்னீர் அணியின் தற்போதைய திட்டம். ஏற்கெனவே, மாவட்டவாரியாக பொதுக்கூட்டம் நடத்தும் பன்னீர் அணி, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மன்றங்கள் அமைக்கவும் முடிவெடுத்துள்ளது. முதல்கட்டமாக ஆர்.கே. நகரில் 13 மன்றங்களைத் தொடங்க உள்ளது. இதேபோல், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் மன்றங்கள் அமைப்பதுதான் இப்போதைக்கு ஓ.பி.எஸ் அணியின் திட்டம். வெள்ளிக்கிழமை டெல்லி செல்லும் பன்னீர்செல்வம், அதன்பிறகு தனது யுக்திகளை மாற்றக்கூடும்.” 

p44.jpg

‘‘ரஜினியை மிரட்டத்தான் ப.சிதம்பரம் மகன் வீட்டில் ரெய்டு நடந்தது என்று கராத்தே தியாகராஜன் சொல்லி உள்ளாரே... இது என்ன கதை?”

‘‘ரஜினி பெயரைப் பயன்படுத்தி ஏதாவது ஆதாயம் அடைய விரும்புவது, தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக நடப்பதுதானே. கராத்தே தியாகராஜன் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று அவர் தரப்பிலேயே விசாரித்தோம். ‘ரஜினியைத் தங்கள் வசப்படுத்த பி.ஜே.பி பலமுறை முயன்றது. அவர் அதற்கு ஒத்து வரவில்லை. அப்படியானால் தனிக்கட்சி ஆரம்பித்து, ஆதரவை வழங்குங்கள்’ என்ற ரீதியில் மறைமுகமாக நெருக்கடி கொடுத்து வந்தது. எதற்கும் ரஜினி பிடிகொடுக்கவில்லை. ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான் லதா ரஜினிகாந்துக்கு ஆஸ்தான சட்ட ஆலோசகர். இருவருக்கும் பல ஆண்டுகாலம் நெருக்கமான நட்பு உண்டு. ‘பி.ஜே.பி சாயத்தோடு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ரஜினி ஈடுபட வேண்டாம். அப்படிச் செய்தால், அது தோல்வியில்தான் முடியும்’ என்று எடுத்துச் சொல்லி மனம் மாற்றும் வேலையில் ஈடுபட்டாராம் நளினி. இந்தத் தகவலை அறிந்த பி.ஜே.பி தரப்பு கடும் டென்ஷன் ஆனாதாம். இதுவும் ரெய்டுக்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது” என்றபடி பறந்தார் கழுகார்.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.