Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனுமு கொறடு...

Featured Replies

 
 

இனுமு கொறடு...

 

‘‘ஒரேய் ஸ்ரீதர்! தோ ஒஸ்தானு. எக்கட... ஆ விசறக்கோலு! (விசிறிக்கம்பு) அப்படியே மண்டைல போட்டேனா பாரு...’’ அடிக்க வரும் சின்ன அம்மம்மாவிடமிருந்து தப்பித்து ஓடுவோம் நானும் தம்பி விஜயராகவனும். அம்மாவின் சித்தி அவள். அடுக்களையிலேயே கிடப்பவள். சமையல், பாத்திரம் அலம்புவது, துணி துவைப்பது, மாவாட்டுவது, மாடியில் வடாம் பிழிவது என எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள்.
8.jpg
எங்கள் பாட்டியின் தங்கையான அவளுக்கு வேறு யாரும் கிடையாது. நாகப்பட்டினம் ரயில்வேயில் இருந்த கணவர் அப்பாய் நாயுடு மாரடைப்பால் இளம் வயதிலேயே இறந்துவிட, சின்ன அம்மம்மா தன் அக்காவுடன் சேர்ந்து கடைசிவரை இருந்துவிட்டாள். காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடும் அவளுக்கு நாள் முழுக்க ஓய்வு ஒழிச்சலே கிடையாது.

வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு க்ரைப் வாட்டர் கொடுப்பது, குடல் இறங்கிவிட்டால் விளக்கெண்ணெயில் வயிற்றை நீவி சரிசெய்துவிடுவது எல்லாம் அவள்தான். பிறந்த குழந்தைகளை அவளுக்கு மட்டுமே குளிப்பாட்டத் தெரியும். மணையில் உட்கார்ந்து முழங்கால் வரை புடவையை இழுத்துவிட்டுக் கொண்டு குழந்தையை காலில் குப்புறப் படுக்க வைத்து தண்ணீர் விடுவது, கடைசியில் குதிகால்களைப் பிடித்து தலைகீழாக குழந்தையைத் தூக்கி உதறுவது, நெஞ்சு சளி அடைத்து அவஸ்தைப்படும் குழந்தையின் வாயில் தன் வாயை வைத்து ஊதி சளியை மூக்கு வழியே வெளியே எடுப்பது போன்ற சாகசங்கள் செய்வாள்.
 
காலையில் அடுப்பில் இட்லி வெந்து கொண்டிருக்க சடசடவென அம்மியில் தேங்காய் பொட்டுக்கடலை பச்சை மிளகாயை அவள் அரைக்கும்போதே சட்னி மணம் ஊரையே தூக்கும். அடுத்து கருவேப்பிலை தாளித்துக்கொட்டுவது காற்றில் பறந்து நம் மூக்கை துளைக்கும். மாலையில் குழந்தைகள் பசியென்று அவள் முன் போய் நின்றால் போதும்.

சட்டென அரிசி மாவை வெந்நீரில் கிண்டி இறக்கி, கை விரல்களால் சிறு கயிறுகளாக உருட்டி அரை இஞ்ச் துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு பால், வெல்லம், தேங்காய், ஏலக்காய் சேர்த்து, ‘‘ஒரேய் பில்லலா! ஒச்சி கூச்சண்டி!’’ என கூவி அழைத்து பட்டாசாலையில் வரிசையாக அலுமினிய தட்டுகளில் ஊற்றி குழந்தைகள் வரிசையாக உட்கார்ந்து சாப்பிடும் பால் கொழுக்கட்டை அருகில் பீட்சாவும் பர்கரும் வரவே முடியாது.

சிடுசிடுவென எல்லோரையும் விரட்டிக்கொண்டே இருந்தாலும் தங்கமான மனது. அவள் ஒருநாள் உடம்புக்கு முடியாமல் படுத்துவிட்டாலும் வீடே நாறிவிடும். வீட்டு வேலை செய்தே ஓய்ந்துபோன ஒடிசலான தேகம். கண்களில் எப்போதும் தெரியும் அசதி. இருக்கும் நாலைந்து புடவைகளையே மாற்றி மாற்றி கட்டுவாள்.

தீபாவளி மற்றும் விசேஷங்களுக்கு தாத்தா பாட்டி வீட்டில்தான் எல்லோரும் குடும்பத்தினருடன் கூடுவோம். சின்ன அம்மம்மாதான் முன் நின்று பண்டிகையை நடத்துவாள். சித்தி என்றாலும் மாமாக்கள், அம்மா எல்லோரும் அவளை அதட்டுவது வழக்கம். எதாவது பிரச்னை செய்து சரியாக வாங்கிக்கட்டிக் கொள்வாள்.

ஒருமுறை பொங்கல் பண்டிகையன்று குழந்தைகளை விரட்டி அவள் ஏதோ சொல்லி என் மாமாக்கள் அவளை உலுப்பியெடுக்க, சமையலறையில் உட்கார்ந்து ஓவென ஒரே அழுகை. ‘‘எல்லாரும் நல்லா என்னை திட்டுங்க... நேனு ஏமி சேஸ்துனு! நாக்கு யெவரு லேது. அனாதைதானே நானு! அந்த பிச்சாளு அப்பவே அவங்க வீட்டு வேலைக்கு வந்து இருந்துக்கச் சொன்னார்...

அவங்க வீட்டு சோத்தை தின்னு காலங்கழிச்சிருப்பேன்...’’ என புலம்ப, சின்ன குழந்தைகளான நானும் அத்தைப் பெண்களும் அவளை சமாதானம் செய்ய முயன்றோம். நாகை ரயில்வேயில் கணவர் அப்பாய்க்கு மேலே இருந்த சூப்பர்வைசர் பிச்சாளுவிடம் சின்ன அம்மம்மாவிற்கு மிகுந்த மரியாதை. கணவருக்கும் பிச்சாளு தான் எல்லாமே. அவரைக் கேட்காமல் எதுவுமே செய்யமாட்டார்.

குழந்தை பாக்கியம் இல்லாததால் அப்பாய் மறுமணம் செய்து கொள்வதாக முடிவு செய்ய, அழுது புலம்பியபடி உடனே பிச்சாளுவிடம் ஓடினாள். ‘‘ரெண்டே வருஷத்துல குழந்தை இல்லேங்கறதுக்காக இவளை விட்டுட்டு வேறு கல்யாணம் செய்யணுங்கறியே! நீயெல்லாம் மனுசனா...’’ என பிச்சாளு தட்டிக்கேட்டும் அப்பாய் மாறவில்லை.

ஒரு நாள் மனைவியை வீட்டை விட்டே வெளியேற்றினார். தினமும் சாயங்காலம் வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவிற்கு சின்ன அம்மம்மா போவது வழக்கம். ரயில்வே ஒர்க் ஷாப் விட்டு மாலை அங்கே காரப்பொறி சாப்பிட அப்பாய் நாயுடு வருவதுண்டு. பார்க் பென்சில் உட்கார்ந்திருக்கும் கணவரின் காலடியில் அமர்ந்து கெஞ்சி அழுவது வழக்கமாம்.

இறுக்கமான முகத்துடன் காரப்பொரியைச் சாப்பிட்டுவிட்டு அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் அப்பாய் போன நாட்கள் பல. ‘‘போரா நுவ்வு! அந்த மகமாயி உன்ன வாரிக்கிட்டுதான் போவா!’’ என சாபமிட்டு அவள் வீடு திரும்பினாலும் அடுத்த வாரம் அல்லது நாள் மறுபடியும் பார்க் போய் கெஞ்சி அழுவாள்.

ஒருநாள் ரயில்வே ஒர்க்‌ஷாப்பில் இருந்து வெளியே வரும்போது அப்பாயின் பையை செக்யூரிடி ஆபீசர் சோதனை செய்து இரும்பு கொறடு ஒன்று இருப்பதைக் கண்டு உடனே அவரை தற்காலிக வேலை நீக்கம் செய்தார்கள். ‘‘ஐயைய்யோ! ஆய்ன தொங்கவாடு காது... திருட மாட்டாருங்க... ஆய்னக்கு எந்துக்கு இனுமு கொறடு!’’ என பிச்சாளு வீட்டில் போய் சின்ன அம்மம்மா அழுது கெஞ்சியும், அவரால் ஒன்றும்  செய்ய முடியவில்லை.

‘‘மேலதிகாரி கறாரான மனுஷன். நின்ன என்கொயரி பெட்டேரு... ஆய்னக்கு பணி போயிந்தி...’’ என பிச்சாளு வந்து சொல்ல ஓவென அழுது பிலாக்கணம் பிடித்தாள். அப்புறம் அப்பாய் பார்க் வருவதும் நின்று போக, வேலை போன கவலையில் கையிலும் காசில்லாமல் பித்துப்பிடித்தவர் போல இருந்தார்.

ஒரு நாள் அப்பாய்க்கு உடம்பு சுகமில்லை என தகவல் வர சின்ன அம்மம்மா அவர் வீட்டிற்கு ஓடினாள். வாசல் கதவு பூட்டியிருக்க அவள் திரும்பும்போது பிச்சாளு எதிரே ஓடி வந்து ‘‘ஆய்னக்கு ரொம்மு நொப்பி (நெஞ்சு வலி)... ஆஸ்பத்ரீல உண்ட்டாடு...’’ என சொல்ல அலறியபடி அங்கே ஓடினாள்.

அதற்குள் எல்லாம் முடிந்து போனது. ‘‘பாழாப்போன அந்த ரெண்டாங்கல்யாணம் பண்ற நெனப்பு வந்தது. மனுஷிக்கி... பணி போயிந்தி... நா பாவ உசுருனி போயிந்தே! அந்த சமயபுரம் மகமாயி அவர கூட்டிக்கிட்டாளே...’’ என அழுது ஆர்ப்பாட்டம் செய்த சின்ன அம்மம்மாவை பிச்சாளுவும் அவரது மனைவியும் சமாதானம் செய்ய முயன்றார்கள்.

அடுத்த சில நாட்களில் பிச்சாளு மேலதிகாரியைக் கெஞ்சி அப்பாய் நாயுடுவிற்கு சேர வேண்டிய பணத்தை வாங்கிக் கொடுத்தபோது சின்ன அம்மம்மா, ‘‘ரூப்பாயலு ஒத்து பிச்சாளு! நூவே பெட்டுக்கோ...’’ என சொல்லி புத்திர சம்பத்து உள்ள அவர் கையில் பணத்தை திணித்ததும், மனமில்லாமல் தயங்கியபடி கண்ணீருடன் பிச்சாளு அதை வாங்கிக்கொண்டதும், இருபதே வயது இளம் விதவையாக சின்ன அம்மம்மா தன் அக்கா வீட்டிற்கு வந்து சேர்ந்ததும்... நடந்து முடிந்த சம்பவங்கள்.

நீண்ட பெருமூச்சுடன் தன் கதையை சின்ன அம்மம்மா சொல்லி முடித்தபோது வாக்கிலியில் பொங்கல் பானையின் அடியிலிருந்த விறகில் நெருப்பு அணைந்து சாம்பல் பூத்திருந்தது. கதையைக் கேட்டு எதிரே இருந்த என் அத்தை பெண்கள் கோட்டீஸ்வரியும் ரேவதியும் அழுதார்கள்.

‘‘ச்சே! அப்பாய் தாத்தா சாகாமெ இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்ல?’’ என கோட்டீஸ்வரி கேட்க, மெல்ல விசும்பத் தொடங்கினாள் சின்ன அம்மம்மா. ‘‘நாக்கு காவாலெ... நேஞ்சேசின தப்புக்கு!’’ என அவள் கதற எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘‘தப்பா? நுவ்வு ஏமி தப்பு சேஸ்திவி?’’

‘‘ஆ கொறடு... இனுமு கொறடு... இரும்பு கொறடை அவர் பையில் போட்டதே நாந்தான்... ஆ பார்க் பெஞ்சுலோ!’’ பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். ‘‘ரெயில்வே வேலை போச்சுன்னா கைல காசில்லாமெ ரெண்டாங் கல்யாணத்தை நிறுத்திடுவார்னு நெனைச்சேன். ஆனா, அவரு உசுரையே நிறுத்திட்டேனே!’’ தலையில் அடித்துக் கொண்டாள்.

அதிர்ச்சியில் உறைந்து போய்... மெதுவாக அவளைக் கேட்டோம்.. ‘‘ஆ இனுமு கொறடு நீக்கு எக்கட தொறக்கிந்தி?’’ முந்தானையால் மூக்கை துடைத்த பின் சன்னமாக பதில் வந்தது. ‘‘பிச்சாளு இன்ட்டிலோ..!’’

http://www.kungumam.co.in

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்குது....! சின்ன அம்மம்மாவுக்கு இது பொருந்துது....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.