Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர் வளர்த்தேனே

Featured Replies

  • தொடங்கியவர்

உயிர் வளர்த்தேனே 51: உயிரின் நிறம் பச்சை!

 

 
shutterstock25706113

தமிழகத்து மக்களின் அளப்பரிய கொடுப்பினை என்னவென்று கேட்டால், என் முதல் தேர்வு கீரை வகைகள்தான். நான் புதுச்சேரியை ஒட்டிய கிராமப்புறத்தில் வசிக்கிறவன். அவ்வப்போதைய உடல், மனநிலைக்கு ஏற்ப வல்லாரை தொடங்கி வெள்ளைக் கரிசலாங்கண்ணிவரை தேவைப்படும் கீரையை ஒரு கூறு பத்து ரூபாய்க்கு வாங்கி வந்துவிடுவேன். இதன் சத்து மதிப்பைக் கணக்கிட்டால் நிச்சயம் பலநூறு, ஆயிரம் பெறும்.

ஒரு கூறை வாங்கிக்கொண்டிருக்கும்போது, குழந்தைகள் போட்டியிட்டு ‘எனக்கு’ என்று கை நீட்டித் திணறடிக்குமே, அதுபோல் தளதளவென்ற இன்னொரு வகை நம்மை ஏக்கத்துடன் பார்க்கும். வேறென்ன செய்ய, அன்றைக்குச் சமைக்க வாய்க்கிறதோ இல்லையோ ‘நீயும் என் செல்லம்தான்’ என்று வாரியணைத்துக்கொண்டு வந்துவிடுவேன்.

அதிலும் எங்கள் பகுதியில் கலவைக் கீரை என்று தானாக வளர்ந்த காட்டுக் கீரையில் ஒரு பத்து வகையைக் கூட்டி தாராளமான கூறாக வைத்திருப்பார் கீரை விற்கும் பாட்டி. இனாமாகப் பறித்து வந்ததால், அந்தக் கூறில் அவரது மன விசாலம் தெரியும். சருமம் வற்றிக் கருத்து வாடிய அந்தக் கீரைக்கார அம்மையை அவரது தாராளத்துக்கு மரியாதை செய்யும் விதமாக ‘கீரைக்காரி’ என்பதைவிடக் ‘கீரைக்காரர்’ என்று விளிப்பதே பொருத்தமாகும்.

 

shutterstock636962302
பார்த்தால் வாங்க வைக்கும்

காய்கறி வாங்கப் போனால் தேவைக்கு வாங்குவதற்கு மாறாகப் பார்வைக்குக் கவர்ச்சியாக இருப்பவற்றையும் வாங்கிவிடுவது என்னுடைய பழக்கம். கூடுதலாக வாங்கிய கீரையைப் பார்த்து எனது இல்லாள் ‘எதுக்கு சும்மா வாங்கியாந்து குமிக்கிறிங்க’ என்று கீரையின் குளிர்ச்சிக்கு மாறாக, வெப்பக் கேள்வி எழுப்புவார். சட்டென்று அன்றைக்குக் காண வாய்க்கிற நண்பரின் பேரைச் சொல்லி, அவருக்கு என்று சமாளித்து இதற்காகவே ஒரு நடை சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்ப்பித்துவிடுவேன். சில நேரங்களில் கொத்துக்கீரையை 150 கிலோ மீட்டர் பயணித்து சென்னைவரையிலும் கொண்டுவருவதும் உண்டு!

சந்தைப் பக்கம் போகாத நேரத்தில் எனக்குக் கலவைக் கீரைதான் வேண்டும் என்று ஒட்டாரம் பிடித்தால், நினைத்த மாத்திரத்தில் மாடியை விட்டுக் கீழிறங்கிச் சென்று நான்குக்கு 60 அடி என்கிற அளவில் எங்கள் வீட்டு உரிமையாளர் படு கஞ்சத்தனமாக விட்டுவைத்த தோட்டப் பரப்பில் ஐந்தாறு வகையான கீரையை இல்லாள் பறித்துவந்து சமைத்துக் கொடுப்பார்.

 

வாடாத தழையும் உயிரே

நடைப் பயிற்சிக்குச் செல்லும் இடங்களிலும் முடக்கத்தான், மணத் தக்காளி, சாரநத்தி, கோவைக் கொடி, குப்பைமேனி இன்னும் பெயரறியாக் கீரைகள் ஐந்தாறு வகையைப் பறித்து வந்துவிடுவேன்.

வாங்கச் சந்தர்ப்பம் இல்லாத நேரங்களிலும் கடை பரப்பியிருக்கும் அரிய வகைக் கீரைகளைக் கண்டால் கடந்து செல்ல முடிவதில்லை. விலை கேட்பதுபோல நின்று நான்கைந்து இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாற்றை நிதானமாக உள் இறக்குகிற பழக்கம் உண்டு.

இருசக்கர வாகனத்தில் நகரத்தைவிட்டு வெளியில் செல்ல நேர்கிறபோது சாலை நெரிசலில் பிதுங்கி மண் தரைக்கு வண்டி போனதும் கீரைகளின் தலைமீது ஓடும்படி நேர்ந்துவிடும். அந்த நேரத்தில் மனது கிடந்து ‘அய்யோ அய்யோ’என்று அரற்றிக்கொண்டே போகும். வாடாத தழையும் ஒரு உயிர்தானே.

ரத்தம், நிறத்தில் சிவப்பாக இருந்தாலும் வழக்கில் ‘பச்சை ரத்தம்’ என்றே சொல்கிறோம். உயிர்த் துடிப்பு மிகுந்த குழந்தையைப் ‘பச்சைக் குழந்தை’ என்கிறோம். உயிரின், உதிரத்தின் பச்சை வடிவம் கீரை. பசலைக் கீரைக் கொடிபோல என் மனமெங்கும் படர்ந்து செல்லும் கீரைக்கும் எனக்குமான பந்தத்தை மட்டுமே ஒரு புதினம் அளவுக்குக் கனமான பக்கங்களில் எழுதிக்கொண்டு போகலாம்.

 

காரச் சுவை தேவை

இங்கு ஒரு உடலியல் ரகசியம் சொல்கிறேன். நாம் எத்தகைய நகர நெருக்கடிகளில் வாழ்ந்தாலும் சரி. சூரிய ஒளி படுகிற இடத்தில் நான்கைந்து தொட்டிகளை வைத்து துளசி, ஓம(கற்பூர)வல்லி, புதினா, வெற்றிலை, குப்பைமேனி ஆகியவற்றை எப்போதும் வளர்த்து வாருங்கள்.

உடல்ரீதியாக எவ்விதமான நெருக்கடிக்கும் பதறிப் போய் மருத்துவமனைக்கு ஓட வேண்டியதில்லை. மேற்படி இலைகளில் வகைக்கு நான்கைந்தாகப் பறித்து ஐந்தாறு மிளகுடன் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்து ஒரு குவளை நீரில் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டிக் குடித்தால் போதும். உடனடியாக ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிவிடலாம். என்னைப் பொறுத்தவரை அதற்குப் பின்னர் மருத்துவமே தேவையில்லை. மற்றபடி அவரவர் விருப்பம்.

மேற்குறிப்பிட்ட தழைகள் அனைத்தும் காரத்தன்மையுள்ளவை. நாம் அறுசுவை என்று கூறினாலும் நம் உடல் ஆக இறுதியாகப் புளிப்பு, காரம் என்ற இரண்டு கூறுகளால் சதை மற்றும் உயிரின் வடிவங்களாகக் கட்டப்பட்டுள்ளது. காரம் என்பது உயிரின் சுவை வடிவம். உயிருக்கு நெருக்கடி வருகிறபோது கார ஆற்றல் கொடுத்தால், உடல் உடனடியாக நெருக்கடியில் இருந்து மீண்டு விடும். என் உணவறிவுக்கு எட்டியவரை நம் அளவுக்குக் கீ்ரையைப் பாவிக்கிறவர்கள் சீனர்கள் தாம். கீரையைத் துவட்டலாகவும் பயன்படுத்துவார்கள் என்றாலும் பெருமளவு சூப்பாகவே ஏற்பதுதான் அவர்கள் வழக்கம்.

 

காஸ்ட்ரோ சாப்பிட்ட கீரை

கீரையை இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்சிச் சாறு வடித்துக் குடித்துவந்தால் வாழ்நாள் முழுமைக்கும் நமக்கு மருந்து என்ற ஒன்று தேவையே இல்லை.

கீரைச் சாறு (சூப்) மலக்கட்டை இளக்குகிறது. அதன் உயிர்ச்சத்து சிறுநீரகங்களுக்கு ஆற்றலை வழங்கி சிறுநீரைப் பிரிப்பதன் மூலம் உடலில் தேங்கியுள்ள தீய நீரை வடித்தெடுத்து விடுகிறது.

முப்பது வயதைக் கடந்த இருபாலரும் மாதம் ஒருமுறை கீரைச் சாறு மட்டுமே குடிக்கும் விரதம் இருந்தால்போதும், நோய்கள் மலிந்த நம் காலத்தில் எந்த நோய் குறித்தும் அஞ்ச வேண்டியதில்லை. தற்கால டெங்கு அச்சத்துக்கும் ஆளாக வேண்டியதில்லை.

shutterstock399705868

தனது விரல் நகக் கண் அளவிலான நாட்டின் அதிபர் இறந்துவிட்டார் என்று முன்பொரு காலத்தில் வதந்தி பரப்பி அகமகிழ்ந்துகொண்டிருந்தது அமெரிக்கா. அந்த அளவுக்கு மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பிய கியூப மக்கள் தலைவர் காலஞ்சென்ற பிடல் காஸ்ட்ரோ தன் வாழ்நாளின் இறுதி மூன்று ஆண்டுகளாக நாள் தவறாமல் செய்தது என்ன தெரியுமா?

இந்தியாவிலிருந்து தருவித்து வளர்த்த முருங்கை மரத்தின் தழையை சூப்பாக வடித்துக் குடித்துவந்ததுதான். தான் குடித்ததோடு தன் நாட்டினரின் ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திலும் முருங்கை வளர்க்கச் செய்தார்.

‘முருங்கை மரம் வீக்கு. ஆனால், இலை ரொம்ப ஸ்ட்ராங்கு”. விலையில் மலிந்த, இலகுவில் கிடைக்கிற முருங்கைக் கீரைச் சாறைக் காலையில் காபி, டீக்குப் பதிலாக அன்றாடம் குடித்தால்போதும். பலரும் விக்கிரமாதித்தனின் வேதாளம்போல முருங்கை மரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடுவார்கள்.

 

இறைச்சியின் தளர்ந்த வடிவம்

கீரை எதுவானாலும் அதை இறைச்சியின் தளர்ந்த வடிவம் என்றும், இறைச்சியைக் கீரையின் அடர் வடிவம் என்றும் கூறுவேன். மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, சுண்ணம் போன்ற நுண் தாதுச் சத்துகள் அனைத்தையும் ஒருசேரப் பெற்ற எளிய உணவான, உயிர்ப் பண்பு மிகுந்த கீரையை வாரத்தில் ஓரிரு முறையேனும் உண்பதைப் பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கீரை, சத்துக்களை அடர்த்தியாகக் கொண்டிருப்பதால் பொறியல் என்ற துவட்டலாகச் சமைப்பதற்குப் பதிலாகப் பருப்பு அல்லது தேங்காயுடன் கடைந்து உண்பதே சிறந்தது. நிறையப் புளி, மிளகாய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பதின்மம் கடந்து முப்பது வயதுக்கு உட்பட்ட இளம் வயதினர் மட்டுமே உண்ணத் தகுந்தது புளிச்ச கீரை என்று நாம் வழங்கும் ஆந்திரத்து கோங்குரா. சிலர் சமைத்த கீரையையும் சோற்றையும் மிக்ஸியில் இட்டு அரைத்துக் குழந்தைகளுக்கு வம்படியாக ஊட்டுகின்றனர். இது மிகப் பெரிய வன்முறை. பத்து வயதுக்கு உட்பட்ட வயிற்றால் கீரையை எளிதாகச் செரிக்க இயலாது. அதேபோல் வயதில் முதிர்ந்தவர்களுக்கும் சாறு வடித்து தேக்கரண்டியால் அருந்தச் செய்வதே சரி. நோயில் தளர்ந்து செரிமானத் திறன் இழந்தவர்கள் கீரையைத் தவிர்க்க வேண்டும்.

எந்தக் கீரையானாலும் ஐந்தாறு இலைகளை அரைமூடித் தேங்காயுடன் சேர்த்து அரைத்து வடிகட்டிக் குடித்தால், கீரையின் சத்துகள் முழுமையாகக் கிடைப்பதுடன் ஒருநேர உணவையே முடித்துக்கொள்ளலாம். நம் மண்ணில் வளரும் ஒவ்வொரு கீரையின் மகாத்மியத்தையும் சொல்ல தனியே ஒரு தொடர் வேண்டும்.

 

கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்

http://tamil.thehindu.com/general/health/article19608222.ece

  • 2 weeks later...
  • Replies 52
  • Views 13.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உயிர் வளர்த்தேனே 52: ஒவ்வொரு கவளத்தையும் உணர்ந்து சுவைப்போம்!

 

 
shutterstock243442945

காய்கள், கிழங்குகள் பற்றி இன்னமும் நாம் பேசவில்லை. நடுத்தர வருமானமுள்ளவர்கள் சமைக்கும் உணவு வகைகளில் வெங்காயம், தக்காளி தவிர மேலும் ஒன்றிரண்டு காய்கள், கிழங்குகள் இடம்பெறுவது பெரும் கொடுப்பினை.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, சிக்கிம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் தமிழகம் அளவுக்குப் பல்வேறு விதமான காய், கிழங்கு பயன்பாடு இல்லை என்றே கருதுகிறேன். மித வெப்பமண்டலப் பகுதியான நம் நிலத்தில் அத்தனை வகை காய் கிழங்குகள் பயிராகிக் கைக்கெட்டும் தொலைவிலேயே கிடைத்து விடுகின்றன.

 

ஆதி வேட்கை

வெங்காயம், தக்காளி, ஒரு காய் இருந்தால்போதும் இவற்றை மட்டுமே வைத்து துளி மசால் அல்லது மிளகாய் சேர்த்து அற்புதமான கூட்டு அல்லது பொரியல் அல்லது குழம்பு அல்லது பெயரிட முடியாத ஒரு பண்டத்தை நம் இல்லத்தரசிகள் படைத்தருளி விடுவார்கள்.

தக்காளி புளிப்பு, வெங்காயம் காரம். இரண்டுமே சதைப் பற்றானவை என்பதால் சொத சொதவென குழம்பு கிடைத்து விடுகிறது. அத்துடன் கூடவே ஒரு காய் அல்லது கிழங்கு கிடைத்தால் கடித்துண்ண ஒரு நிறைவு கிடைக்கிறது.

நம் உடலின் மரபணுவில் ஆதி வேட்டைக் கூறு மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. எனவே, நார்த்தன்மை மிகுந்த இறைச்சி போன்ற ஒன்றைக் கடித்து உண்டால்தான் நிறைவு கிடைக்கிறது. எதுவும் இல்லாமல் போனால் பொரித்த அப்பளம், வற்றலாவது இருக்க வேண்டும். இப்போது தொடங்கிவிட்ட கார்காலத்தில் மொறுமொறுப்பான ஒரு பண்டம் இருந்தால்தான் உண்பதற்கு வாய் ஒத்துழைக்கும்.

 

புலம்பெயர்ந்த கத்திரிக்காய்

'இங்கிலிஷ் காய்கள்' என்று பொதுவாக அறியப்படுகிற கேரட், பீன்ஸ், கோஸ், காலி பிளவர் மட்டுமல்ல, பெரும்பாலான மற்ற காய்களும் அயல் இறக்குமதிதான்.

நாம் மிக மலினமாகக் கருதும், வார்த்தைக்கு வார்த்தை 'இதென்ன கத்திரிக்காய் வியாபாரமா?' என்று சொல்லிக்கொள்கிற; விழுந்தால், புரண்டால், தடுக்கினால் நம்மை அணைத்துச் செல்கிற கத்திரிக்காய்கூட நம் காய் இல்லை. தென்னமெரிக்க நாடான பிரேசிலில் இருந்துவந்து, பூர்வகுடிபோல நம்முள் இரண்டறக் கலந்துவிட்டது.

மெலிதான காரல் சுவையும், வழுவழுப்பான சதைப்பற்றும் கொண்ட இந்தக் கத்திரிக்காயில் முழுவெள்ளை, முழுப்பச்சை, அப்பன் வாங்கித் தந்த ரிப்பன் கலரில் அடர்ஊதா, உருண்டை, நீலம், முட்டை வடிவம் எனப் பத்துக்கும் மேற்பட்ட வகைகளைக் காண முடியும். ஈரப் பதத்துடன் தளதளப்பாக மின்னும் கத்திரிக்காய்கள் காணக் கிடைத்தால் ஓரிரு நிமிடங்கள் நின்று அவற்றைக் காதலுடன் பார்க்காமல் கடக்க முடிவதில்லை என்னால்.

 

கோசுமல்லிக் கூட்டணி

நமது தாய்மார்களை விட்டால் கத்திரிக்காய்க்கு நூறு வகையான வேஷங்கட்டி விதவிதமாக ஜொலிப்பேற்றி அதன் அடையாளத்தையே மறக்கடித்து விடுவார்கள். வெண்ணெய் போன்ற சதைப்பற்றும் மினுமினுப்பும், அதை என்ன செய்தாலும் ஈடுகொடுக்கும்.

ஐந்தாறு இளம் முற்றல் கத்திரிக்காயை எடுத்து முழுதாக மண் சட்டியில் இட்டு, இளஞ்சூட்டில் கடலை எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சிறிதளவு விட்டுப் புரட்டிப் புரட்டி விடவேண்டும். தோல் வற்றி, கருகல் புகைக் கிளம்பும் பக்குவத்தில் எடுத்து ஆற வைக்க வேண்டும்.

வெங்காயம், கடுகு, சீரகம், காய்ந்த மிளகாயில் இரண்டு சேர்த்து தாளிப்பிட்டு வெங்காயம் சுருளுவதற்கு முன்பாக ஆறின கத்திரிக்காயை உடைத்துத் தாளிப்புடன் சேர்த்துச் சிறிதளவு நீர் விட்டுக் கொதிக்கவிட வேண்டும். மூன்று பல் பூண்டை உரித்துப் போட்டுவிட்டு கொஞ்சமாகப் புளிக் கரைசல் சேர்த்து வாசம் போகக் கொதித்த பின்னர், எடுத்துக் கடைந்தால் கலவை வெண்ணெய்போலத் திரண்டு வரும். நார்த்தன்மையும், இளங்கசப்பும், காரல் சுவையும் உடைய இந்தக் கடைசலை செட்டிநாட்டில் கோசுமல்லி என்பார்கள். இட்லி, தோசை, சோறு எதனுடனும் கூசாமல் கூட்டணி வைத்துக்கொள்ளும் இந்தக் கோசுமல்லி.

 

வாய்தா கேட்கும் வாயுத்தொல்லை

பத்து நாளைக்குக்கூட வாடாமல் சமர்த்துப் பிள்ளையாக அமர்ந்திருக்கும் உருளைக் கிழங்கு கிடைப்பதால், நம் பொழுது இந்த மட்டிலும் தொல்லை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

உருளைக் கிழங்கு… காய்க்குக் காய், கிழங்குக்குக் கிழங்கு, இறைச்சிக்கு இறைச்சி! கறிமசால் போட்டுத் தாராளமாக எண்ணெய்விட்டுப் புரட்டி எடுத்து உண்டால், இறைச்சி உண்ட திருப்தி தரும் கிழங்கு.

கைக்கும், மெய்க்கும், கட்டுப்படியான விலைக்கும் ஈடுகொடுக்கும் நமது நேசத்துக்குரிய உருளைக்கிழங்கு மீது வாயு என்று வாய்க்கு வாய் அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்கள் நாற்பது வயதைக் கடந்தவர்கள். அப்படியே சுமத்தினாலும் அதை விட்டு வைக்கிறார்களா என்றால் இல்லை. தெரிந்து இரண்டு வாயும், தெரியாமல் நான்கு வாயும் உண்டுவிட்டு அதைக் கரித்துக் கொட்டுகிறார்கள்.

உருளைக் கிழங்கைத் தோலுடன் நன்றாக அவித்து ஆற வைத்து, தோல் நீக்கி உடைத்து மசிக்க வேண்டும். கனமான இரும்பு வாணலியில் தாராளமாக வெண்ணெய்விட்டு இளகியதும் சிறிதளவு இஞ்சி, பூண்டுத் தொக்குப் போட்டுப் புரட்டிவிட்டு, அரை தேக்கரண்டி மிளகு சீரகப் பொடி போட்டு மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுப் புரட்டி எடுக்க வேண்டும். இதை உண்டால் எந்த வயதினரும், அதைக் கொண்டா கொண்டா என்று கொண்டாடுவார்கள். அதன்மீது பழி சுமத்தியவர்கள்கூட குற்றவுணர்வில் வருத்தப்படுவார்கள். வாயுத் தொல்லை வாய்தா வாங்கிக்கொண்டு ஓடிப் போய்விடும்.

இதேபோல, அவ்வளவாகப் பயன்பாட்டில் இல்லாத சேப்பங்கிழங்கு எனப்படும் வழுவழுப்பான கிழங்கும், நார்த்தன்மை மிகுந்த கருணைக் கிழங்கும் நமது உடல் நலனுக்குப் பெரிதும் நன்மை பயக்கக் கூடியவை.

 

சுவைத்து உண்கிறோமா?

நமது உணவின் நன்மை தீமை என்கிற குணங்கள் இரண்டுமே உணவில் இருந்து வருபவை அல்ல. உண்பவரின் உடலுக்குள் முன்னரே சேமிக்கப்பட்டக் கூறுகள்தான் அவற்றைத் தீர்மானிக்கின்றன. முன்னர் உண்ட உணவு செரித்ததா இல்லையா என்பதை உணராமல், பசியின் அளவறியாமல் கிடைக்கிற நேரத்துக்குக் கிடைக்கிற உணவை சுவைக்கு அடிமைப்பட்டு உண்டு வைப்பதே நோய்கள் அனைத்துக்கும் மூலகாரணம்.

அற்றான் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடி துய்க்குமாறு

- என்கிறார் நமது வள்ளுவப் பாட்டன். உங்கள் நாவுக்குப் பிடித்த உணவைப் போதும் போதும் என்று மறுத்தே உண்ணுங்கள் என்கிறார். நம்மில் பலர் இதுதான் கடைசிக் கவளம் என்று ஆவேசத்துடன் உண்கிற பழக்கத்துக்கு ஆளாகி இருப்பதால், மிகவும் பிடித்த உணவையும் தியாகம் செய்ய வேண்டிய உடல்நிலைக்கு ஒருநாள் வலிந்து தள்ளப்பட்டு விடுகிறோம்.

நாம் பிறந்த நிமிடத்தில் நமக்கான உணவை இயற்கை அன்னை எடுத்து வைத்துவிடுகிறாள். சிறிது சிறிதாக உண்டு நெடிய வாழ்நாள் முழுமைக்கும் அதை எடுத்துச் செல்வதையும், அவசர அவசரமாக அளவுக்கு அதிகமாக உண்டு வாழ்நாளை விரைவிலேயே முடித்துக்கொள்வதையும் நம் பொறுப்புக்கே அவள் விட்டுவிட்டாள்.

சுவையான உணவை உண்ண விரும்புகிறோம். ஆனால் சுவைத்து உண்கிறோமா என்றால் இல்லை. அடுத்த கவளத்தை உண்கிற ஆவேசத்தில் வாயில் உள்ள உணவைச் சுவைப்பதில்லை. கன்வேயரில் வைத்துத் தள்ளுவதுபோல தொண்டையில் வைத்து, இரைப்பையை நோக்கி உந்தி விடுகிறோம்.

இரைப்பையில் இல்லை பற்கள். பற்கள் உள்ள வாயில் உணவை அரைத்துவிட்டால் மென் உறுப்பான இரைப்பையின் வேலை எளிதாகி விடும். வாயில் மெல்லுகிற போதுதான் சுவையுணர்வு நாவில் நின்று நர்த்தனமாடும்.

சுவைக்கச் சுவைக்க உடலின் உயிர்த் தேவை முழுமையாக நிறைவடையும். தேவை நிறைவுற்றால் அளவு தானாகவே குறையும். உணவின் அளவு குறைந்தால் உடலின் செரிமான ஆற்றல் வீணாகாமல், நம் வாழ்நாளை அது நீடிக்கச் செய்யும். வாழ்கிற நாள் முழுமைக்கும் நலனை வழங்கும்.

நம் உயிர் வளரும்!

பெரு விருந்து களித்த நிறைவு

சமைத்துச் சுவைத்த சுவை உடலின் செல்தோறும் பரவும் அனுபவத்தையே 'உயிர் வளர்த்தேனே' தொடரில் கடந்த ஓராண்டாகப் பகிர்ந்துகொண்டேன். சுவைத்தலைப் போலவே, சுவைத்தலைப் பகிர்ந்துகொள்வதும்கூட ஒரு இன்ப அனுபவம் என்பதில் சந்தேகமில்லை. அதைத் துய்க்க வாய்ப்பளித்த வாசகர்களுக்கு நன்றிகளைப் பரிமாறுகிறேன்.

உடலியல் நுட்பத்தை அறியும் பொருட்டு உணவின் மீதான நுகர்வு ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டுவிட்டேன். ஆனாலும் ஒவ்வொரு வாரமும் இத்தொடர் எழுதி முடித்த பிறகு பெரு விருந்து களித்த நிறைவெய்தினேன்.

இந்தத் தொடர்ஓட்டத்தைத் தொய்வில்லாமல் முன்னெடுத்துச் சென்றது வாசகர்களே. ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கானோர் என்னுடன் மின்னஞ்சல்கள், தொலைபேசியில் உரையாடிவருகின்றனர். இத்தொடர் புதிய நட்புறவுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

- போப்பு

(நிறைந்தது)

http://tamil.thehindu.com/general/health/article19645994.ece

  • கருத்துக்கள உறவுகள்

நலம் தரும் நயமான கட்டுரை....  நறுக்கென்று முடிந்ததில் சிறிது வருத்தம்தான்.ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.பகிர்ந்தவருக்கு நன்றி.....!  tw_blush: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.