Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன செய்யப் போகிறார்..?

Featured Replies

மிஸ்டர் கழுகு: என்ன செய்யப் போகிறார்..?

 
 

 

p2b.jpg“ ‘முதல்வர் மீது கவர்னர் கோபம்?’ எனக் கடந்த இதழில் சொல்லியிருந்தேன். அதற்குள் புதிய கவர்னர் வந்துவிட்டாரே?” என்றபடியே வந்து அமர்ந்தார், கழுகார்.

“கவர்னர் மாற்றத்தில் என்ன நடந்ததாம்?”

“அதுபற்றி கடந்த இதழில் விரிவாகச் சொல்லியிருந்தேனே! முதல்வர் எடப்பாடிக்கும் கவர்னருக்கும் ஒத்துப்போகவில்லை. அதுபற்றி, எடப்பாடி டெல்லியில் தொடர்ந்து குறைபட்டுக்கொண்டே இருந்தார். மேலும், ‘அவர், லேசாக சசிகலா குடும்பத்துடனும் இணக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்’  எனச் செய்திகள் கிளம்பின. இந்த நேரத்தில், மகாராஷ்ட்ராவில் சிவசேனாவால் ஏகப்பட்ட பிரச்னை. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான், ‘மகராஷ்ட்ராவை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்’ என வித்யாசாகர் ராவிடம் சொல்லிவிட்டார்கள். தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார்.”

“புதிய ஆளுநரின் பின்னணி என்ன?”

“பன்வாரிலாலின் வரலாறு, அதிரி புதிரி ரகமாக உள்ளது. ஆரம்பத்தில் பார்வர்டு பிளாக் கட்சியிலிருந்து, பிறகு தனிக்கட்சி ஆரம்பித்து, காங்கிரஸ் கட்சிக்குப் போய், அதன்பிறகு பி.ஜே.பி-க்கு வந்து, மீண்டும் காங்கிரஸில் அடைக்கலமாகி, அதன்பிறகு மீண்டும் பி.ஜே.பி-யில் தஞ்சமடைந்தார்.”

“பன்வாரிலால் வருகையால் தமிழக அரசியலில் மாற்றம் இருக்குமா?”

“அதிரடியான மாற்றங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான வேலைகளில் சுணக்கம் எதுவும் இருக்காது. முழுமையான ஆதரவு இல்லை என்றாலும், அவருக்குக் குடைச்சல்கள் இருக்காது. நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய வழக்கு, தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் பற்றிய வழக்கு ஆகியவை சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளன. தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருந்தாலும், மற்றொரு தரப்பு உச்ச நீதிமன்றம் செல்லும். அதில் தீர்ப்பு வரும்வரை, புதிய கவர்னருக்குப் பெரிதாக எந்த வேலையும் இருக்காது.”

“இரட்டை இலை விவகாரம் என்ன ஆனது?”

pc.jpg

“தேர்தல் ஆணையத்தில் கடும் சிக்கலில் உள்ளது. முன்னுக்குப்பின் முரணாக ஓ.பி.எஸ்., எடப்பாடி மற்றும் தினகரன் அணியினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். முதலில் மனுத்தாக்கல் செய்த ஓ.பி.எஸ் அணி, தங்களுக்குத்தான் இரட்டை இலை என்று குறிப்பிட்டு ஆவணங்களைத் தாக்கல் செய்தது. அப்போது, தினகரனும் எடப்பாடியும் ஒற்றுமையாக இருந்ததால், இருவர் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் பன்னீருக்கு எதிராக இருந்தன. ஆனால், பன்னீரும் எடப்பாடியும் சேர்ந்துவிட்ட பிறகு, அதைத் திரும்பப்பெற்றுவிட்டனர். தற்போது தினகரன் அணி தனியாக ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. இதில், வேறு மாதிரியான விவரங்கள் உள்ளன. அதனால், அக்டோபர் 6-ம் தேதி இரண்டு தரப்பையும் அழைத்து, நேருக்கு நேர் விசாரணை நடத்த உள்ளது தேர்தல் ஆணையம். அதிலும் எந்த முடிவும் எடுக்கமாட்டார்களாம். அதனால், இப்போதைக்கு இரண்டு தரப்புக்கும் இரட்டை இலை கிடைக்காதாம்”

“டெல்லியில் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் செல்வாக்கு இருக்கிறதே...?”

“இரட்டை இலையை எடப்பாடிக்குக் கொடுப்பதால், டெல்லிக்கு என்ன லாபம்?  உள்ளாட்சித் தேர்தல் வந்து... அதில் அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி ஏற்பட்டால், இரட்டை இலையைப் பெற்றுத் தரலாம். அப்படிக் கொடுத்தால் பி.ஜே.பி-க்கு லாபம். ஆனால், தற்போது அப்படி எந்தச் சூழலும் இல்லையே! தற்போது அ.தி.மு.க பலவீனமாக உள்ளது. தேவையில்லாமல் இந்த நேரத்தில் இரட்டை இலையை யாராவது ஒருவருக்குக் கொடுத்தால், அவர் தரப்பில் அ.தி.மு.க உயிர் பெறும் வாய்ப்பு அதிகம். அதன்மூலம் அ.தி.மு.க-வில் ஒற்றுமை ஏற்படும். அது பி.ஜே.பி-க்குச் சாதகமில்லாத சூழலை உருவாக்கும். அதனால், இரட்டை இலைச் சின்னம் முடங்கியே இருக்க வேண்டும் என டெல்லி கருதுகிறது.”
 
“தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு ஆவணங்களையெல்லாம் கொடுத்ததே?”

“ஆம். அவர்கள் அ.தி.மு.க அம்மா அணி சார்பில், தாங்கள் நியமித்துள்ள 27 மாவட்டச் செயலாளர்கள் பற்றிய ஆவணங்களையும் மற்ற உறுப்பினர்கள் தொடர்பான ஆவணங்களையும் கொடுத்துள்ளனர். அதுபோல, இன்னும் 28 மாவட்டங்களுக்கு நியமிக்கப்போகிற பொறுப்பாளர்கள்பற்றிய விவரங்களையும் கொடுத்துள்ளனர். அதோடு ஆள்பலம் என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் தற்போது எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. ஏனென்றால், இரட்டை இலை முடக்கப்பட்ட நடவடிக்கை, ‘ஆள் பலம் என்ற அடிப்படையில் செய்யப்படவில்லை. அதனால், இரட்டை இலையை ஒப்படைக்கும் நடவடிக்கையும் அப்படி இருக்கக்கூடாது’ என வலியுறுத்தி உள்ளனர்.”

“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்?”

“அ.தி.மு.க-விலிருந்து பன்னீர்செல்வம் பிரிந்துபோனபோது, அவருடன் 11 எம்.எல்.ஏ-க்கள் மட்டும்தான் போனார்கள். அதுபோல், எம்.பி-க்களிலும் 11 பேர்தான் போனார்கள். கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களில் ஐந்து சதவிகிதம் பேர்தான் பன்னீர்செல்வம் பக்கம் இருந்தார்கள். அப்போது, 35-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள், 120-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களை வைத்திருந்த சசிகலா அணி அ.தி.மு.க-வைப் பொருட்படுத்தாமல், இரட்டை இலையை முடக்கியது தேர்தல் ஆணையம். அதாவது, மிகப் பலவீனமான பன்னீர்செல்வம் தரப்பிலுள்ள நியாயத்தைக் கேட்டு இரட்டை இலையைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. தற்போது, ‘அதே நிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். ஆட்சி அதிகாரம் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் கையில் இருப்பதால், அவர்கள் பக்கம் கட்சி இருப்பதுபோல அர்த்தமாகாது. ஆட்சி அதிகாரம் போனால், அவர்கள் பக்கம் யாரும் இருக்கமாட்டார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டே, இரட்டை இலையை ஒப்படைக்கும் நடவடிக்கை இருக்க வேண்டும்’ என தினகரன் அணி வலியுறுத்தியுள்ளது.”

“ஜெயலலிதா மரணம் விசாரணைக் கமிஷன் விவகாரம் எப்படியிருக்கிறது?”

“விசாரணைக் கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி, விசாரணையைத் தொடங்குவதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கும் நிலையில், மு.க.ஸ்டாலின் கடுமையான கேள்விகளை எழுப்பியிருந்தார். அதுபோல, தினகரன் தரப்பும் எழுப்பியுள்ளது. இந்தக் கேள்விகள், ஆட்டத்தின் போக்கையே வேறு திசையில் கொண்டுபோகின்றன. இதுவரை சசிகலா குடும்பத்துக்கு எதிராக இருந்த விசாரணைக் கமிஷன், தற்போது முழுமையாக பன்னீருக்கு எதிராக திரும்புகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.”

“எதற்காக?!”

“ஜெயலலிதாவைப் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் பார்த்ததாக அப்போது சொன்னார்கள். இப்போது, ‘அக்டோபர் 1-ம் தேதிக்கு மேல் சசிகலாவும் தேவைப்பட்ட நேரத்தில் மட்டுமே ஜெயலலிதாவைப் பார்த்தார்’ என்கிறார் தினகரன். ‘அப்படியானால் தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தேர்தலில் இரட்டை இலை சின்னம் பெறுவதற்கான ஃபார்ம் பி-யில் ஜெயலலிதா கைநாட்டு வைத்தது எப்படி? ஜெயலலிதா அப்போது சுயநினைவுடன் இருந்தாரா? சுயநினைவு இல்லாமல் அவர் வைத்த கைநாட்டு செல்லுமா?’ என்றெல்லாம் கேள்விகளை ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.”

p2a.jpg

“தினகரன் தரப்பு என்ன கேட்கிறது?”

“ஓ.பன்னீர்செல்வம் 12.10.2016 அன்று, முதலமைச்சரின் இலாக்காக்களைப் பெற்றுக்கொண்டபோது, ‘என்மீது முழுமையான நம்பிக்கை வைத்து, முதல்வர் ஜெயலலிதாவே அவருடைய இலாக்காக்களை என்னிடம் சுயநினைவுடன் ஒப்படைத்தார்’ என்று கவர்னரிடம் கொடுத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகுதான் முதல்வரின் இலாக்காக்களை  பன்னீரிடம் கவர்னர் ஒப்படைத்தார். இப்போது, ‘ஜெயலலிதாவை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. அவருடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது...’ என்று  அதே பன்னீர்செல்வம் தரப்பும் சொல்கிறது. அப்படியானால், பன்னீர்செல்வம் பொய் சொல்லி, கவர்னரை ஏமாற்றி, முதல்வரின் இலாக்காக்களைப் பெற்றுக்கொண்டாரா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இதுதான் பன்னீருக்குச் சிக்கலை ஏற்படுத்துமாம்.”

“ஓகோ!”

“ஜெயலலிதாவின்  இலாக்காக்களை பன்னீர் பெற்றுக் கொண்டதுபோல, ஜெயலலிதா இறந்த அன்று இரவே, அவர் முதல்வர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.  அப்போதெல்லாம் சொல்லாமல், 2017 பிப்ரவரிக்குப் பிறகுதான் அவர், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் எனப் பேச ஆரம்பிக்கிறார். அப்படியானால், எந்தக் கட்டாயத்தின்பேரில் அப்படிச் செயல்பட்டார் என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு அவருக்குத்தான் இருக்கிறது. அதனால், இந்த விசாரணைக் கமிஷன் பன்னீர்செல்வத்துக்குத்தான் சிக்கலாக இருக்கும். எல்லாம் எடப்பாடியின் யுக்தி!”

“அப்படியானால், அ.தி.மு.க-வில் அணிகள் இணைந்தது எல்லாம் மேல்பூச்சுதான் போல.”

“ஆம். தனியாகச் செயல்படும் தினகரன் அணி, அணிக்குள் அணியாகச் செயல்படும் எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் அணி என மூன்று அணிகள் இருக்கின்றன. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் ‘ஆபரேஷன் தமிழ்நாடு’ என்ற திட்டப்படி, தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளில் அ.தி.மு.க-வைத் தற்போதைக்குப் பலவீனப்படுத்திவிட்டனர். இனி தி.மு.கதான். அதற்கான வேலைகளும் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கிய பிறகு, அந்த வேலைகள் வேகம் பிடிக்கும்.”

“பி.ஜே.பி-யின் திட்டம் என்ன? கமல்ஹாசனா?”

“இல்லை. கமலை அவர்கள் இன்னும் நம்பவில்லை. அவர் எப்போது வேண்டுமானாலும் மாற்றிப் பேசுவார். அதுபோல, ரஜினியின் ரசிகர்கள் செல்வாக்குக்கு முன்னால் கமலின் பிரபல்யம் ஒன்றுமில்லை என பி.ஜே.பி கருதுகிறது. அதனால், இப்போதும் அவர்கள் சாய்ஸ் ரஜினிதான். அதேநேரத்தில், ரஜினியை அமைதியாக இருக்கச் சொல்லியிருப்பதும் பி.ஜே.பி-தான். நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன், ரஜினியை வேகப்படுத்தி தங்களைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்துவார்கள்.”

“அப்படியானால் கமலுடன் ரஜினி இணையமாட்டாரா?”

“கமலுடன் ரஜினி இணையமாட்டார். ஆனால், ஒரு கட்டத்தில் ரஜினியுடன் போய் கமல்தான் இணைவார் என்கிறார்கள் டெல்லியில். கமலுடன் ரஜினி இணையமாட்டார் என்பதை ரஜினியே சூசகமாக சிவாஜி மணிமண்டபம் விழாவில் சொல்லிவிட்டார். அதேபோல், ‘ரஜினியுடன் எப்போது வேண்டுமானாலும் இணைவேன்’ என்பதை பிக்பாஸில் கமலும் சூசகமாகப் பேசியுள்ளார் ‘நான் உங்களோடு(மக்களோடு) வருகிறேன். இல்லை, உனக்கு இந்த வேலை சரிப்படாது... அதனால், நீ போய்விடு என்று நீங்கள் சொன்னால் போய்விடுகிறேன். அல்லது எங்களுக்காக வேறு ஒருவர் இருக்கிறார். அவருக்குப் போய் நீ உதவி செய் என்று சொன்னால், அதையும் செய்யத் தயார்’ எனக் குறிப்பிட்டார் கமல். அதனால், நாளைக்கு ரஜினி வேகமெடுக்க நேரிடும்போது, கமல் அவரே போய் ரஜினியுடன் இணைந்துகொள்வார் என்கிறார்கள்.”

“தே.மு.தி.க பொதுக்குழுவில் விசேஷம் ஏதும் உண்டா?”

p2.jpg

“காரைக்குடியில் நடந்த தே.மு.தி.க-வின் 13-வது பொதுக்குழுவில், கட்சி நிர்வாகிகள் யாரும் செல்போன் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. விஜயகாந்த் உடல்நிலை கருதி, பிரேமலதாவுக்குக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்படும் எனக் கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, தே.மு.தி.க-வின் இளைஞர் அணிச் செயலாளராக இருக்கும் சுதீஷுக்குக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவைத் தலைவராக அழகாபுரம் மோகன்ராஜ், பொருளாளராக டாக்டர்.இளங்கோவன், துணைச் செயலாளர்களாக  இந்திரா, ஏ.ஆர்.இளங்கோவன், பார்த்தசாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவராக இருந்த விஜயகாந்த் நிரந்தரப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கே எல்லா அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் தற்போதைய அரசியல்  சூழ்நிலை, உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதித்துள்ளனர். அதில் கருத்துவேறுபாடு கொண்ட கட்சி நிர்வாகிகள் சிலர், ஆத்திரத்தில் அடையாள அட்டைகளைக் கிழித்தெறிந்துவிட்டு வெளியேறினர்.”

“ம்”

“கூட்டத்தில் வழக்கம்போல மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, நீட் தேர்வுக்கு ஒரு வருடம் விலக்கு வாங்கித் தருவதாகச் சொல்லிச் சொல்லி மாணவர்களை ஏமாற்றிய  மாநில அரசைப் பொதுக்குழு கண்டித்தது.  ‘அறிக்கை முதல்வராக’ எடப்பாடி பழனிசாமி  இருக்கிறார். மக்கள் புரட்சி ஏற்பட்டு ஆட்சியாளர்கள் துரத்தப்படுவதற்குமுன், எடப்பாடி அரசு தாமாகவே வெளியேற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.”

“விஜயகாந்த், பிரேமலதா என்ன பேசினார்கள்?”

“ ‘தமிழகத்துக்குப் புதிய  கவர்னர் வந்திருக்கிறார்; இன்னும் நான்கு நாள்களில் எடப்பாடி ஆட்சிக் கவிழ்ந்துவிடும்’ என்றார் விஜயகாந்த். எதை வைத்து விஜயகாந்த் இப்படிப் பேசினார் எனப் பலரும் குழம்பிப் போனார்கள். ‘ஜெயலலிதா மறைவுக்குப்பின் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகப் பேசுகின்றனர். ஆனால், ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது நேருக்கு நேர் எதிர்த்துப் பேசியவர் விஜயகாந்த். நமது கட்சியில் 30 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அதை ஒரு கோடியாக ஆக்க வேண்டும். ஒரு மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். கட்சியினர் தேர்தலுக்குத் தயாராகுங்கள்’ என்றார் பிரேமலதா உற்சாகத்துடன். கட்சியின் முக்கிய நிர்வாகிகளெல்லாம் கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு வெளியேறிவிட்ட நிலையில் கட்சியைக் கரை சேர்க்கும் முயற்சியைக் கையிலெடுத்திருக்கிறார்கள்’ என்றபடியே ஜூட் விட்டார் கழுகார்.

படம்: சாய் தர்மராஜ்


களத்துக்குப் போகும் கவர்னர்!

‘ச
ர்ஜிகல் ஸ்ட்ரைக்’ போல யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராத நபர்களை முக்கியப் பொறுப்புக்கு நியமிப்பது மோடி அரசின் வழக்கமாக இருந்துவருகிறது. அப்படித்தான் பன்வாரிலால் புரோகித் தமிழக கவர்னராகி இருக்கிறார்.

2016, ஆகஸ்ட் மாதத்தில் தமிழக கவர்னர் ரோசய்யாவின் பதவிக்காலம் முடிந்தது. அதே நேரத்தில், அசாம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டவர், பன்வாரிலால் புரோகித். ஓராண்டுக்கு மேலாக பொறுப்பு கவர்னர் இருந்துவந்த நிலையில், இப்போது பன்வாரிலால் கவர்னராக வந்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்தபோதே அயோத்தி கரசேவையில் பங்கேற்ற சர்ச்சைக்குரிய அரசியல்வாதி இவர். ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் இருக்கும் நாக்பூரைச் சேர்ந்தவர்.

கவர்னராக இருந்தாலும், வெறுமனே சம்பிரதாய நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்காமல், களத்துக்குப் போகும் வழக்கத்தை அசாமில் இவர் ஏற்படுத்தினார். சமீபத்தில், வெள்ளத்தில் அசாம் தவித்தபோது, பல மாவட்டங்களுக்கு விசிட் அடித்தவர், வெள்ளத்தில் மூழ்கிய குடிசைகளில் நுழைந்து குறைகேட்டார். அதன்பிறகு, தனியாகச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து வெள்ளம் குறித்து விளக்கம் தந்து நிதிகேட்டார். இது, மாநிலத்தை ஆளும் பி.ஜே.பி அரசுக்குச் சங்கடத்தைத் தந்தது. அவர்கள் டெல்லி தலைமையில் புகார் செய்தனர்.

‘இவ்வளவு ஆக்டிவாக இருக்கும் கவர்னர் தமிழ்நாட்டுக்குத்தான் சரிப்படுவார்’ என இங்கே அனுப்பிவிட்டார்கள்.

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.