Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எடப்பாடி Vs பன்னீர்... தர்மயுத்தம் 2.0

Featured Replies

எடப்பாடி Vs பன்னீர்... தர்மயுத்தம் 2.0

 

கஸ்ட் 21-ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், இணைந்த கைகளாக பழனிசாமியும் பன்னீரும் காட்சி கொடுத்தனர். அக்டோபர் 14-ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் இருவரும் முகத்தைத் திருப்பிக்கொண்டு மேடையில் உட்கார்ந்திருந்தனர். ‘இணைந்து செயல்படுவோம் என்று சொன்னவர்களிடையே இடைவெளி அப்பட்டமாகத் தெரிகிறது’ என்று செய்திகள் கசிய... என்ன நடக்கிறது என்று அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம்.

இணைப்புக்கு முன் எழுந்த நெருக்கடி!

‘அணிகள் இணையவேண்டும்’ என பன்னீருக்கு டெல்லி மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்தாலும், அதைத் தாண்டி அவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடியும் ஒரு காரணம் என்கிறார்கள். தர்மயுத்தம் ஆரம்பித்தபிறகு கரன்சி கரைந்துகொண்டே வந்ததை அவர்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில், இணைப்பு நடந்துவிட்டால், தனது இருப்பைத் தக்க வைப்பதற்கு எடப்பாடியுடன் தனியாக தர்மயுத்தம் நடத்தவேண்டி வரும் என்பதையும் பன்னீர் உணர்ந்திருந்தார். அந்த மறைமுக யுத்தம்தான் இப்போது நடந்துவருகிறது. இணைப்புக்கு முன்பே எடப்பாடி தரப்பினர், தங்கள் பலத்தைத் தற்காத்துக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்து செயல்பட்டனர். அதற்கு ஏற்றபடியே பன்னீர் அணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், பன்னீர் அணியிலோ, இணைவது தொடர்பாக  பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்தனர். இணைப்புக்கு ஓகே சொல்லும்முன்பு தன் ஆதரவாளர்களுக்கு வேண்டியவை பற்றிய எந்தத் திட்டமிடலுமே இல்லாமல் சம்மதித்து விட்டார் பன்னீர். சிலர் பன்னீரிடம் இதுகுறித்து எச்சரிக்கை செய்தபோது, “இணைப்புக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லியுள்ளார். 

p2.jpg

ராஜதந்திரியான பழனிசாமி!

அணிகள் இணைந்துவிட்டால் தனது முதல்வர் நாற்காலி ஸ்திரமாகிவிடும் என்பதை உணர்ந்து செயல்பட்டார் எடப்பாடி. ‘முதல்வர் பதவி எடப்பாடிக்கு, பொதுச்செயலாளர் பதவி பன்னீருக்கு’ என்றுதான் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்கள். ஆனால், ‘‘பொதுச்செயலாளர் பதவியே வேண்டாம். ஒருங்கிணைப்பாளர் பதவியைப் பன்னீருக்குக் கொடுத்துவிடலாம். இணை ஒருங்கிணைப்பாளராக நான் இருந்துகொள்கிறேன்’’ என்றார் எடப்பாடி. கட்சியில் ஒருங்கிணைப்பாளருக்கு உள்ள எல்லா அதிகாரங்களும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் உண்டு எனத் தீர்மானம் நிறைவேற்றியபோதே கட்சியில் பன்னீரின் அதிகாரம், எடப்பாடிக்கும் பகிரப்பட்டுவிட்டது. ‘துணை முதல்வருக்கு, முதல்வருக்கான அதிகாரங்கள் இல்லை. ஒரு கேபினட் அமைச்சர் என்பதைத் தாண்டிய எதுவுமில்லை’ என்பதை பன்னீர் தரப்பு உணரவில்லை. இதனால் கட்சியிலும், ஆட்சியிலும் ஒருசேர அதிகாரம் பொருந்தியவராக பழனிசாமி உருவெடுத்தார். இதை லேட்டாகவே உணர்ந்த பன்னீர், ‘ஒருங்கிணைப்பாளராக இருந்தும் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறோம்’ என்று வருந்துகிறார்.

பன்னீருக்கு இறங்கு முகம்.. பழனிசாமிக்கு ஏறுமுகம்!

தர்மயுத்தம் என பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபோது, அ.தி.மு.க-வில் மட்டுமல்ல... பொதுவெளியிலும் பன்னீருக்கு என ஒரு செல்வாக்கு கிடைத்தது. ‘சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும், ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும்’ என்ற அவரின் தர்மயுத்த கோஷங்களுக்கு ஆதரவு கிராஃப் ஏறியது. ஆனால், எடப்பாடி அணியுடன் அவர் இணைந்தபிறகு,  பொதுவெளியில் மட்டுமல்ல... அ.தி.மு.க-வினர் மத்தியிலும் பன்னீருக்கு இறங்குமுகம் ஏற்பட்டது.

தனி அணியாக இருந்தபோது பன்னீர் பக்கம் தொண்டர்கள் அதிகம் இருந்தனர், நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பக்கம் இருந்தனர். அணிகள் இணைப்புக்குப் பிறகு அந்த நிர்வாகிகளின்கீழ் பன்னீர் ஆதரவாளர்கள் வந்ததால், பல மாவட்டங்களில் அவர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் கட்சி நிர்வாகிகள். கட்சியின் அதிகாரமட்ட வரிசைப்படி, ஒருங்கிணைப்பாளருக்குக் கீழ்தான் இணை ஒருங்கிணைப்பாளர் வருவார். ஆனால், கட்சி போஸ்டர்களில் பழனிசாமிக்குக் கீழேதான் பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறுகிறது.

அணிகள் இணைப்புக்குப் பிறகு பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் ஆகிய இருவரும் அமைச்சர் பதவி பெற்றுள்ளார்கள். பன்னீர் பின்னால் அணிவகுத்த மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், நத்தம் விசுவநாதன் போன்றவர்களுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. அவர்களுக்குக் கட்சிப் பதவியைக்கூட பன்னீரால் வாங்கமுடியவில்லை. பொதுக்குழுவின் தீர்மானத்துக்கு எதிராக பன்னீர் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி ‘கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் தேவையில்லை. பொதுச்செயலாளர் பதவிதான் வேண்டும்’ எனத் தேர்தல் ஆணையத்தின் கதவைத் தட்டினார். ‘எடப்பாடியின் தனி ஆவர்த்தனத்துக்கு செக் வைக்கும் உத்தியே இது’ என்கிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள்.

டம்மி துணை முதல்வர்!

‘மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீருக்குத் துணை முதல்வர் பதவியைக்கூட எடப்பாடி அணியினர் அலங்காரப் பதவியாகத்தான் கொடுத்துள்ளார்கள்’ என்கிறார்கள் பன்னீரின் ஆதரவாளர்கள். மரபுப்படி முதல்வர் பதவிக்கு அடுத்த நிலையில் துணை முதல்வர் இருக்கவேண்டும். ஆனால், ‘எடப்பாடிக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட துணை முதல்வருக்குக் கொடுக்கப்படவில்லை’ எனச் சக அமைச்சர்களே ஒப்புக்கொள்கின்றனர்.  

மரியாதையும் இல்லை... மேடையும் இல்லை!

அணிகள் இணைந்த பிறகு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் முதல்வருக்கு அடுத்த இடத்தில் பன்னீர்செல்வத்துக்கு மரியாதை வழங்கப்பட்டது. ஆனால், கரூரில் நடைபெற்ற விழா மேடையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்யும் நிகழ்வில் முதல்வருக்கு அடுத்து பத்து அமைச்சர்கள் வரிசையாக மரியாதை செய்தபிறகே பன்னீர்செல்வம் அழைக்கப்பட்டார். இதனால் பன்னீர் அப்செட்டானாலும், அதை வெளிக்காட்டவில்லை. புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கான பத்திரிகை விளம்பரங்களில் பன்னீர்செல்வம் படமே இல்லை. பன்னீரின் டெல்லி வீசிட்டுக்குப் பிறகு புதுக்கோட்டை விழாவில் பன்னீருக்கும் கட் அவுட் வைத்து, கொஞ்சம் சமாளித்தார்கள்.

‘கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு விழாவில் துணை முதல்வர் என்ற முறையில் பன்னீருக்கு உரிய மரியாதை தரப்படவில்லை’ என அவரது ஆதரவாளர்கள் புலம்புகிறார்கள்.  அமைச்சர்களோடு அமைச்சராக மேடைக்குக் கீழேதான் அவர் அமர்ந்தார். ‘‘துணை முதல்வருக்கு மேடையில் இருக்கை போடவேண்டும் என்று புரோட்டோகால் இல்லை’’ என விளக்கம் சொன்ன அதிகாரிகள்,  ‘துணை முதல்வர் எங்கே அமர வேண்டும் என்பதை  முதல்வரிடம் ஒப்புதல் பெற்றே எடுக்கப்பட்டது’ என்றார்கள்.

மூன்று முறை முதல்வராக இருந்து கோட்டையில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய பன்னீர்செல்வத்துக்கு, பழனிசாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்வதே நெருடலான விஷயம்தான். மதுபான விலை உயர்வு குறித்து நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ‘பன்னீர்செல்வத்துக்கு முதல்வருக்கு அருகிலேயே மையமாக இருக்கை போடலாமா’ என்று முதல்வர் அலுவலகத்தில் கேட்டுள்ளார்கள். ஆனால், ‘அமைச்சர்களின் வரிசையிலே அவருக்கு இருக்கை ஒதுக்குங்கள்’ என்று உத்தரவு வந்துள்ளது. முதல்வரின் அறையில் பல நேரங்களில் மூத்த அமைச்சர்களோடு அவசர ஆலோசனைகள் நடத்துவார் முதல்வர். அப்போது செங்கோட்டையன், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி போன்ற அமைச்சர்கள் முதல்வரின் கேபினில் இருப்பார்கள். ஆனால், துணை முதல்வரை முதல்வரின் அலுவலகத்தில் பார்ப்பதே அரிது. ‘‘துணை முதல்வர் அவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை மட்டும் கவனித்தால் போதும் என்று அதிகாரிகளிடம் சிலமுறை சொல்லியுள்ளார் முதல்வர்’’ என இதற்குக் காரணம் என்கிறார்கள்.

முதல்வரின் அலுவலகத்தில் ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உண்டு. ஆனால், துணை முதல்வருக்கு அவர் விரும்பிய அதிகாரியைக்கூட நியமிக்கவில்லை எடப்பாடி. சாமர்த்தியமாக, தமிழ் தெரியாத வெளி மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரியையே நியமனம் செய்துள்ளார். அது மட்டுமில்லை... ‘‘துணை முதல்வரின் அலுவலகத்திலிருந்து வரும் அனைத்து கோப்புகளும் தன்னுடைய பார்வைக்கு வந்தபிறகே செல்லவேண்டும் என்று முதல்வர் எழுதப்படாத உத்தரவு ஒன்றைப் போட்டிருக்கிறார். சில அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று பன்னீர் தரப்பு சில தினங்களுக்கு முன்பு வைத்த கோரிக்கையைக்கூட முதல்வர் கண்டுகொள்ளவில்லை. பன்னீருக்கும் இப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கும் பல விஷயங்களில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பன்னீர் எடப்பாடியிடம் புகார் சொன்னபோது, ‘அவர் டெல்லி அப்பாயின்ட்மென்ட். என்னால் எதுவும் செய்ய முடியாது’ எனக் கையை விரித்துவிட்டார்’ எனக் கொதிக்கிறார்கள் பன்னீர் தரப்பினர்.

இப்படி தொடர் மனவருத்தங்களால் அப்செட்டாகித்தான் பன்னீர் டெல்லி பயணப்பட்டுள்ளார். ‘‘எடப்பாடியை டெல்லி மேலிடம் ஆதரித்தாலும், பன்னீருக்கான செல்வாக்கு டெல்லியில் இன்னும் குறையவில்லை. அந்த நம்பிக்கையில்தான் இப்போது மௌன யுத்தத்தை எடப்பாடிக்கு எதிராக பன்னீர் ஆரம்பித்து இருக்கிறார்’’ என்கிறார், பன்னீருக்கு நெருக்கமான எம்.எல்.ஏ ஒருவர்.

இது பின்னால் இருப்பவர்களின் பிரச்னை!

பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே புகைச்சல் இருப்பதாகச் சொல்லப்படுவதை ஒருதரப்பு மறுக்கவும் செய்கிறது. ‘‘இருவருக்குமிடையே எந்தப் பிரச்னையுமில்லை. அணிகள் இணைப்பின்போது வலுவான இரண்டு துறைகள் பன்னீர் வசம் கொடுக்கப்பட்டன. வீட்டுவசதி வாரியத்திலும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திலும் இப்போது நடைபெற்று வரும் ஒப்பந்தப்புள்ளிகளையும் கொள்கை முடிவுகளையும் பார்த்தாலே இருவருக்கும் இடையே நல்ல உறவு இருப்பது புரியும். பிரச்னை பன்னீருக்கும் பழனிசாமிக்கும் இடையே அல்ல, பன்னீர் பின்னால் நின்றவர்களுக்கும், பழனிசாமிக்கு நிழலாக இருப்பவர்களுக்கும்தான். பாண்டியராஜனுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத துறை வழங்கப்பட்டதே எடப்பாடியின் கண்ணசைவில்தான். பன்னீர் பின்னால் போனவர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டு பன்னீரைத் தனிமைப்படுத்தும் முயற்சிதான் இது’’ என்று அர்த்தத்தோடு சொல்கிறார்கள் அவர்கள்.

இந்த நிழல் யுத்தம் எப்போது வெளிச்சத்துக்கு வரும்?

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.