Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்பார்ப்பை நசுக்கியதா நல்லாட்சி?

Featured Replies

எதிர்பார்ப்பை நசுக்கியதா நல்லாட்சி?
 

இலங்கை வரலாற்றில், சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மறக்க முடியாத, கறை படிந்த வரலாற்றைக் கொண்டவையாகும்.   

‘வரலாறு திரும்புகிறது’ என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், வரலாற்றின் பொற்காலங்கள் ஒரு போதும் திரும்புவதில்லை. என்றாலும், மோசமான நிகழ்வுகள் அவ்வப்போது திரும்பத்தான் செய்கின்றன.   

image_a2be59fea3.jpg

அந்த வகையில், இலங்கையின் சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் பாகுபாடுகளும் தாக்குதல்களும், மீள இடம்பெறுவதில்லை என்று கூறப்படுகின்ற போதிலும், அண்மைக் காலமாக, முஸ்லிம்களை குறிவைக்கும் வன்முறைகள், வேறு கதை சொல்கின்றன.

முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில், அளுத்கம, பேருவளை சம்பவங்கள், அநேகமானோரின் மனதில் இன்னும் காணப்படுகின்றன. எனினும், வரலாற்றில், பல இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றுள்ளன என்பது சிலருக்குத் தெரிந்தும், மறந்துபோன உண்மைகளாகும்.   

இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைச் சம்பவங்களில் பெரும்பாலானவை, சில்லறையான சம்பவங்களைப் பின்னணியாகவும் காரணமாகவும் கொண்டிருப்பதைக் காணலாம்.   

இந்நிலையில், கடந்த வௌ்ளிக்கிழமை (17) மாலை, காலி பிரதேசத்தில் கிந்தோட்டை - விதானகம, சபுகம பிரதேசங்களில் உள்ள இரு இனப் பிரிவினர்களுக்கு இடையிலான கலவரமொன்று இடம்பெற்றது. சாதாரணமான ஒரு விபத்துச் சம்பவத்திலிருந்து இந்தக் கலவரம் ஏற்பட்டுள்ளது என்று கூறினால், எம்மில் பலர் இதை நம்பாமல் கூட போகலாம்.  

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலி, கிந்தோட்ட, ஹப்புகொட பகுதியில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, பெண் ஒருவரை மோதிக் காயத்தை ஏற்படுத்தியுள்ளார். இதையடுத்து, அப்பிரதேசத்திலுள்ளவர்கள், குறித்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.  

இந்தச் சம்பவமே, கடந்த சில தினங்களாக, சிறுசிறு சம்பவங்களாக இடம்பெற்று வந்து, வௌ்ளிக்கிழமையன்று பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது. பின்னர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் தலையீட்டின் கீழ், வௌ்ளிக்கிழமை நண்பகல் முதல், விசேட அதிரடிப் படைப் பிரிவினரின் பாதுகாப்பு, அப்பிரதேசத்துக்கு வழங்கப்பட்டு, பின்னர் அவர்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.   

image_8a43c0d708.jpg

இதையடுத்தே, கிந்தோட்டைப் பிரதேசத்துக்கு வெளி இடங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட கும்பலொன்று, அன்றிரவு (17) வர்த்தக நிலையங்கள், வீடுகள், பள்ளிவாசல்கள் என்பவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தது.  

இவ்வாறான தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தமை, இது முதற்தடவையல்ல; வரலாற்றைப் பின்னோக்கிச் சென்று பார்த்தோமேயானால், 2001ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற மாவனல்லை இனக்கலவரம், இலங்கையின் முஸ்லிம்கள் மத்தியில் நீங்காத வடுக்களாக உள்ளன. அன்றைய நாள், கறுப்பு மே தினமான அடையாளப்படுத்தப்படுகின்றது.   

இச்சம்பவமும் பெரும்பான்மை இனத்தவர்களின் ஒரு பகுதியினரால் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட கொடூர, வன்முறைச் சம்பவமே என்று, பலராலும் கருதப்படுகின்றது. ஒரு சிகரெட்டுக்காக முழு நகரத்தையும் கொளுத்தி, தமது வன்முறைவெறியைத் தீர்த்த சம்பவமாக, மாவனெல்லைச் சம்பவம் வரலாற்றில் இடம்பெறுகின்றது.   

அதேபோல், பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் அடாவடித்தனமான வார்த்தைகளின் விளைவாக பேருவளை, அளுத்கம நகரம் தீப்பற்றி எரிந்தது. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் தர்கா நகரில், காடையர் கூட்டம் ஒன்று கல்வீசித் தாக்கியதை அடுத்து, கலவரம் வெடித்துக் கிளம்பியது.   

இவ்வாறு, முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டதெனப் பலராலும் கூறப்படும் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை. இத்தகைய சம்பவங்கள், இலங்கையை மாத்திரமல்லாது சர்வதேசத்தின் பார்வையையும் இழுத்துள்ளன.  

image_7ffb0b09a3.jpg

கிந்தோட்டைச் சம்பவம் இடம்பெற்று சில நாட்களுக்குள்ளேயே, நேற்று (20) அதிகாலை, வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த கடைகள், இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.  

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வடக்கில் உள்ள சிறுபான்மையினர், ஆதாரம் இல்லாத அளவுக்குக் கொல்லப்பட்டனர் என்பது, அனைவரால் கூறப்படும் கருத்து. யுத்தம் முடிவடைந்து, சுதந்திரமாக வாழக்கூடிய இத்தருணத்திலும், கண்மூடித்தனமான முறையில், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்பதை, தினசரி பத்திரிகைகளிலும் ஏனைய ஊடகங்களிலும் பார்க்கும் போது, சாதாரண ஒருவராலேயே புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. ஆதாரம் இருந்தும், இதுவரை சம்பந்தப்பட்டோரைக் கைது செய்வதிலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் அரசாங்கம் கண்மூடித்தனமாகவே செயற்பட்டு வருகின்றது என, சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.   

சில நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் இடம்பெற்று வருகின்ற வன்முறைகள் குறைவாகவும் விளைவுகள் குறைவாகவும் காணப்படுகின்றபோதும், அது, எதற்காக ஏற்படுகின்றன என்ற காரணத்தை ஆராய்ந்து பார்த்தால், சில்லறை காரணமாகவே தெரியவருகிறது.  

இலங்கையில் வளர்ந்து வந்த வன்முறை வரலாறு என்பது, முஸ்லிம்களுக்கு எதிராகத்தான் முதலில் தொடங்கியிருந்தது. 1915ஆம் ஆண்டில், அப்போதைய கொலனித்துவ பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகப் பொங்கி எழ வேண்டிய பெரும்பான்மைச் சமூகத்தின் கோபம், அதன் முழு வலிமையையும் சமூக, பொருளாதார கலாசார தளத்தில் வசதியாக மடைமாற்றிக் கொண்டு, சிறுபான்மையினரை, முஸ்லிம்களை, தமது பொது எதிரியாகக் கண்டது என்பது, இலங்கை இனவாதம் காரணமாக இரத்தம் சிந்திய அவலத்தின் தொடக்கமாகும்.  

இலங்கையின் முஸ்லிம்கள் மீதான பெரும்பான்மையினத்தவரின் காழ்ப்புணர்வு என்பது, வர்த்தகப் போட்டியில் ஆரம்பித்தது. இதன் உடனடி விளைவில் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்றால், இதில் சம அளவு தமிழ் வர்த்தகர் மீதும் மையம் கொண்டதன் இரத்த விளைவுகளை, 1983ஆம் ஆண்டு ஜூலைக் கலவரங்கள் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை செல்கிறது.   

இப்படிக் காணப்படும் மோசமானதொரு வரலாற்றின் தொடர்ச்சியே, தற்போது நடைபெறும் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு வித்திட்டவையாகும்.  

image_b974cdd459.jpg

“ஒரு சாதாரண விபத்தால் இவ்வளவு பெரிய கலவரம் அவசியம் தானா?” என்பது, எம்மில் பலரதும் கேள்வியாக எழுகிறது. இனக் கலவரம் ஏற்படுத்துவதற்கு அவசியம் ஏதும் இல்லை என்று எம்மில் பலருக்குத் தோன்றலாம். இது, சிறுபான்மை இனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட வேண்டும் என்ற வெறியின் பின்னணிச் சம்பவம் மட்டுமே. பழி தீர்ப்புக்காக அல்லது நீண்ட காலமாக முஸ்லிம்கள் மீது பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இருக்கும் இனவெறியின் உச்சக்கட்ட செயற்பாடா என்றும் சந்தேகிக்கத் தோன்றுகின்றது.   

கிந்தோட்ட பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை இரவு கேட்ட வெடிச் சத்தத்தையடுத்து, அப்பகுதி அல்லோல கல்லோலப்பட்டு காடையர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அப்பகுதியில் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டது. அத்தருணத்தில் அப்பிரதேசம் மயான பூமியாகவே காணப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் 19 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

சம்பவம் இடம்பெறச் சொற்ப நேரத்துக்கு முன்னர், அதாவது மாலை 4 மணியளவில் விசேட அதிரடிப்படையின் சம்பவ இடத்தை விட்டு அகன்றதன் பின்னர், இரவு 7.30 மணியளவில் இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  

இத்தாக்குதல் சம்பவங்களை வழிநடத்தியவர், பௌத்த மதத்தலைவர் எனத் தெரியவந்துள்ளது. விபத்துச் சம்பவத்தின் போது தாக்குதலுக்குள்ளான இளைஞனின் பகுதியில் உள்ள பிக்கு ஒருவரே, தனது விகாரைக்கு அப்பகுதி மக்களை வருமாறு அழைப்பு விடுத்து, அப்பகுதி மக்களை (கிந்தோட்ட) தாக்க வேண்டும் எனக் கூறியதாக அறியமுடிகின்றது.   

சிறுபான்மை இனத்தவர்கள் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்படும் வன்முறைகளின் பின்னணியில் மதத்தலைவர்கள் காணப்படுவது ஒன்றும், இது முதற்தடவை கிடையாது. 

இதன்போது, 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன; கடைகள், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் தீ வைத்து எரிக்கப்பட்டுமுள்ளது. பின்னர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து, இராணுவத்தினர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சம்பவம் இடம்பெற்றதன் பின்னர், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த செய்திகளும் வெளிவந்தவண்ணமுள்ளன. ஒவ்வொரு வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னரும் அரசியல்வாதிகள் நேரில் வந்து பார்த்து, நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கிவிட்டுச் செல்கின்றனர்.   

ஆனால், அவ்வாக்குறுதிகள் வெறும் வாய்ப் பேச்சாகவே காணப்படுகின்றன. அரசாங்கம் என்ற ரீதியில் வழங்கப்படும் உறுதிமொழிகளும் சட்ட நடவடிக்கைகளும் இறுக்கமாக இருந்தால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படும்.  

இந்தப் பிரச்சினைக்குள் ஆரம்பத்திலேயே பொலிஸாரின் தலையீடு இருந்திருந்தால் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், வானொலி செவ்வியொன்றில் குறிப்பிட்டிருந்தார். இவரது கருத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது.  

இவ்வாறான விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கிறது என்றால், அது தொடர்பில் அவசியம் பொலிஸாருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரிந்திருந்தால், அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் தடுத்திருக்க முடியும்.   

ஆனால், அதைப் பொலிஸார் செய்யவில்லை. வன்முறை முற்றிவெடித்ததன் பின்னரே பொலிஸார் வந்துள்ளனர். அதனால் எந்த பிரயோசனமும் இல்லை. இதற்கான முழுப்பொறுப்பையும் பொலிஸாரே ஏற்க வேண்டும் என்று மக்கள் கோபத்துடன் கூறுவதில் காணப்படும் நியாயப்பாட்டையும் ஏற்க வேண்டித் தான் உள்ளது. பொலிஸாரின் அஜாக்கிரதையான செயற்பாட்டின் விளைவாகவே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

கொழும்பிலுள்ள முக்கிய அரசியல்வாதி ஒருவர், அப்பகுதியில் உள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு சம்பவத்தைப் பற்றி விசாரிக்கும்போதுதான், அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றதை அவர் அறிந்தாரெனத் தெரிவிக்கப்படுகின்றது. இதுதான் உயர் பொலிஸ் அதிகாரியின் வினைத்திறனான செயற்பாடா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. 

பொலிஸாரின் முன்னிலையிலேயே வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அது உண்மையாக இருந்தால் பொலிஸாருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  

இவ்வாறான சம்பவங்கள் கடந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி காலத்திலும் இடம்பெற்றது யாவரும் அறிந்த விடயமே. இருந்தாலும் இதை நிறுத்துவதற்காகவே இந்த மாபெரும் அரசியல் மாற்றம், சிறுபான்மை மக்களால் ஏற்படுத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் விடிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.   

இனவாதிகளுக்குச் சட்டத்தை கையில் ஏந்துவதற்கு இந்த அரசாங்கம் சந்தர்ப்பத்தை வழங்கிக்கொண்டுவந்தால், அனைவரும் எதிர்பார்க்கும் சாந்தி, சமாதானம் என்பவற்றை எதிர்பார்க்க முடியாது. அவை எல்லாம் வெறும் கானல்நீராகவும் வாய்ப் பேச்சாகவும் மட்டுமே இருக்கும். இது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்த வேண்டும்.  

தொடர்ந்து அரங்கேறிவரும் இவ்வாறான சம்பவங்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், அமைதியையும் சகஜவாழ்க்கையையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் இத்தகைய சம்பவங்களைக் கவனத்தில் கொள்ளவில்லையா, அல்லது சமாதானத்தையும் சட்டம் ஒழுங்கையும் அமுல்படுத்துவதில் அக்கறையற்றிருக்கின்றார்களா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.  

என்ன நடக்கிறது என்று பார்த்தால் எமக்கே குழப்பாக உள்ளது. இதை தடுத்திருக்க முடியும் என இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்களே கூறி, இந்த அரசாங்கத்தைக் குறை கூறுகிறார்கள். இது தொடர்பில் பொலிஸார் சரியான புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் இச்சம்பவத்தை நிச்சயம் தடுத்திருந்திருக்கலாம்.   என்றால், என்ன பிரச்சினை? விரும்பியே இவ்வாறான சம்பவங்கள் உருவாக்கப்படுகின்றனவா? ஏதாவது ஒரு நோக்கத்துக்காக அல்லது ஏதாவது ஒரு திசைதிருப்பலுக்காக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா? அல்லது மனதில் இருக்கும் வன்மத்தைப் போக்குவதற்காக, நேரடியாகச் சொல்வதற்கு தைரியம் இல்லாமல் துவேசத்தால் நடத்தப்படுகின்றனவா? இந்த மாதிரியான பல கேள்விகள், எமது மனதில் உள்ளன. இதற்கு விடை என்று கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியே.    

ஆனால், எமக்கான நோய்களாக இருக்கட்டும், மனிதர்களுக்கிடையிலான பிரச்சினைகளாக இருக்கட்டும், “வருமுன் காப்பது” என்பது தான், மிகவும் உசிதமான முறையாகும். ஒவ்வொரு முறையும் வன்முறை இடம்பெற்ற பின்னர், அது தொடர்பாக ஆராய்வது என்பது, எவ்விதத்திலும் சிறப்பான செயற்பாடாக இருக்க முடியாது. எனவே, இப்படியான வன்முறைகள் தொடர்ந்தும் ஏற்படுகின்றமைக்கு என்ன காரணம் என்பதைப் பற்றி ஆராய்வது அவசியமானது.

image_8e1c88818e.jpg

யுத்தம் நடைபெறும் காலத்தில், தமிழ் மக்களே, கடும்போக்குவாதிகளின் இலக்குகளாக இருந்தனர். தற்போது யுத்தம் முடிவடைந்த பின்னர், முஸ்லிம்கள் இலக்குவைக்கப்படுகின்றனர் என்ற பார்வை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இலக்குவைப்பதற்கென்று ஏதாவது ஓர் இனப்பிரிவினர் தேவைப்படுகின்றனர் என்று, ஒரு பகுதியினர் எண்ணுவதற்கான காரணம் என்ன?

இப்படியான மோசமான செயற்பாடுகளை, பொது பல செனா, இராவண பலய போன்ற ஒரு சில அமைப்புகள் மீதும், ஒன்றிணைந்த எதிரணி போன்ற, கடும்போக்குவாதத்தை ஊக்குவிக்கும் அரசியல் பிரிவுகள் மீதும் சுமத்திவிட்டு, இலகுவாகப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள முடியும். ஆனால், கடும்போக்கு அமைப்புகள், மக்களிடத்தில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதைக் கண்டறிவது அவசியமானது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், மஹிந்த ராஜபக்‌ஷவாலும் அவரது சகோதரரும் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தவருமான கோட்டாபய ராஜபக்‌ஷ அவரோடு இணைந்தவர்களாலும் தான், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்முறைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இப்போது யார் மீது குற்றஞ்சாட்டுவது? 

ஆகவே, மஹிந்த ராஜபக்‌ஷவோ அல்லது கோட்டாபய ராஜபக்‌ஷவோ, இதில் பிரச்சினை கிடையாது. மாறாக, ஏற்கெனவே காணப்படும் நோயின் குணங்குறிகளாகத் தான் அவர்கள் காணப்பட்டனர். நோய்க்கான குணங்குறிகளை இல்லாது செய்வதென்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட அதிகம் முக்கியமாக, நோயைக் குணப்படுத்தல் காணப்படுகிறது.

அந்த நோயைக் குணப்படுத்தும் நம்பிக்கையில் தான், மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க என்ற, இணை வைத்தியர்களை, சிறுபான்மையின மக்கள் தேர்ந்தெடுத்தனர். பொருளாதாரப் பிரச்சினைகள், நம்பிக்கையிழப்புகள் எல்லாம் ஒருபக்கமாக இருக்க, மக்களின் இருப்பையே கேள்விக்குட்படுத்தும் பாரிய பிரச்சினைகளையாவது, அவர்கள் குணப்படுத்த வேண்டும் என்பது தான், எதிர்பார்ப்பாக உள்ளது.

அந்த எதிர்பார்ப்பை, அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இது, அரசாங்கம் என்ற வகையில் அதன் பொறுப்பு என்பது ஒருபக்கமாக இருக்க, உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் ரீதியாகவும், அரசாங்கத்துக்கு முக்கியமானது.

கடும்போக்கு வாக்காளர்களின் வாக்காளர்களை நம்பி, தேர்தலில் களமிறங்குவதற்கு அரசாங்கம் திட்டமிடுமாயின், வேறு தூரத்துக்குச் செல்லவில்லை. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல்களில், அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதியும், அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவ்வரசாங்க உறுப்பினர்களும் எப்படி வென்றார்கள் என்பதை நினைத்துக் கொண்டாலே போதுமானது.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எதிர்பார்ப்பை-நசுக்கியதா-நல்லாட்சி/91-207608

  • தொடங்கியவர்
கழுதைக்கு வாழ்க்கைப்பட்ட கதை
 

அறுவடையைப் பார்க்க, வயல் வெளிக்கு வருகின்ற விவசாயி போலதான், ஒவ்வொரு முறையும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் நடந்து முடிந்த பிறகு, சேதங்களைப் பார்ப்பதற்காக, ஆட்சியாளர்கள் களத்துக்கு வந்து போகிறார்கள்.  

கிந்தோட்டயில் முஸ்லிம்களின் 66 வீடுகள், 26 கடைகள், இரண்டு பள்ளிவாசல்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கி, தீவைக்கப்பட்ட பிறகுதான், பிரதம மந்திரியும் பாதுகாப்பு அமைச்சரும் சம்பவ இடங்களுக்கு வந்து, “குற்றவாளிகள் பாரபட்சமின்றித் தண்டிக்கப்படுவார்கள்” என்கிற, மாமூலான வார்த்தைகளை, உறுதிமொழியாக வழங்கி விட்டுச் சென்றிருக்கின்றனர்.  

image_0ba085933e.jpg

கிந்தோட்டயில், இப்படியொரு வன்முறை நடக்கப் போகிறது என்பதை விளங்கிக் கொண்டு, அவசரப் பொலிஸ் தொலைபேசி இலக்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் அங்குள்ள முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அறிவித்திருந்த போதும், அந்த மக்களைப் பாதுகாப்பதற்கான எந்தவித ஏற்பாடுகளும், உரிய தருணத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.   

முஸ்லிம்களின் சொத்துகள் அடித்து நொறுக்கி, தீவைத்து எரிக்கப்பட்ட பின்னர்தான், பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் களத்தில் இறக்கி விடப்பட்டிருந்தனர்.  
அளுத்கம முதல் கிந்தோட்ட வரையில் முஸ்லிம்களுக்கெதிராக நடத்தப்பட்ட வன்முறைகளில், இப்படித்தான் நடந்து வருகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள பேரினவாதத் தாக்குதல்களில், முறையான திட்டமிடல்களும் சில பொதுத்தன்மைகளும் காணப்படுகின்றமை கவனத்துக்குரியதாகும்.  

கிந்தோட்டயில், கடந்த 13ஆம் திகதியன்று நடந்த வாகன விபத்தொன்றின் நீட்சியாகவே, இந்தக் கலவரங்கள் நடந்திருக்கின்றன. சிங்கள இளைஞன், செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளொன்று, முஸ்லிம் பெண் மீதும் அவரின் பிள்ளை மீதும் மோதியது. இதன்போது, விபத்தை ஏற்படுத்தியவர் அங்கிருந்து தப்பியோட, மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக அங்கு வந்த அவரின் நண்பரை, அங்கிருந்த முஸ்லிம்கள் தாக்கியதாக அறிய முடிகிறது.   

இதையடுத்து தாக்கப்பட்ட சிங்கள நபர், தனது நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு, தன்னைத் தாக்கிய முஸ்லிம் இளைஞர்களைத் தாக்கியிருக்கிறார். இதன் பின்னர், குறித்த முஸ்லிம் இளைஞர்கள், தம்மைத் தாக்கிய சிங்கள இளைஞர்களின் வீடு தேடிச் சென்று தாக்கியதாகவும், அவர்களின் வீடுகளைச் சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

மேற்படி அடிபிடிகளில், யார் சரி, யார் பிழை என்கிற கேள்விகள் ஒருபுறமிக்க, ஒரு விபத்துத் தொடர்பில் இரண்டு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை, எப்படி இனங்களுக்கிடையிலான ஒரு பிரச்சினையாகவும் கலவரமாகவும் மாறியது என்கிற கேள்வி முக்கியமானது.  

கிந்தோட்ட வன்முறைகள் நடந்து கொண்டிருந்த போது, அன்றைய தினம் அதிகாலை 1.30 மணியளவில் களத்துக்குச் சென்றிருந்தார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன். அதன் பின்னர், அவரின் ஊடகப் பிரிவினர் அனுப்பி வைத்த செய்தியில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சில விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.   

அதாவது, இந்த நாசகாரச் செயல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்னணியில் அங்குள்ள பௌத்த மதகுரு ஒருவர் இருந்துள்ளார் என்றும், இதற்காக அங்குள்ள விகாரையொன்று பயன்படுத்தப்பட்டதாகவும் கிந்தோட்ட முஸ்லிம்கள் தன்னிடம் கூறினர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்ததாக, அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.   

மேலும், இந்த வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்காக வெளியிடங்களிலிருந்து ஆட்களை, குறித்த மதகுரு வரவழைத்திருந்ததாகவும் அங்குள்ள முஸ்லிம்கள் தன்னிடம் சுட்டிக்காட்டியதாகவும் குறித்த செய்தியில் அமைச்சர் ரிஷாட் கூறியிருந்தார்.  

முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளின் போது, அவற்றின் பின்னணியிலும், முன்னணியிலும் அநேகமாகப் பௌத்த மதகுருக்கள் இருந்திருக்கின்றனர் என்பது கசப்பான உண்மையாகும். மேலும், வன்முறைகளைத் திட்டமிடுவதற்கும், அதற்கான ஆட்களைத் திரட்டுவதற்குமான இடமாக, பல சமயங்களில் விகாரைகள் இருந்துள்ளன என்பதும் இங்கு கவனிப்புக்குரியது.  

கிந்தோட்டயில் நடந்தது, தற்செயலானதொரு வன்முறையாகத் தெரியவில்லை. வாகன விபத்தொன்றின் போது, ஏற்பட்ட முறுகலைக் காரணமாக வைத்து, மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டிருந்த ஒரு வன்முறை அங்கு அரங்கேற்றப்பட்டதாகவே பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.  

சில வருடங்களாக முஸ்லிம்கள் மீதான வன்முறைகளின் போது, அவர்களின் சொத்துகள் மற்றும் வியாபார நிலையங்கள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டு வருகின்றமையைப் போலவே, கிந்தோட்டயிலும் முஸ்லிம்களின் 26 கடைகள் தாக்கப்பட்டிருக்கின்றன. 

வாகனங்கள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டிருக்கின்றன. இந்தத் தாக்குதல்களுக்காக பெற்றோல் குண்டுகளை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை வைத்து, இந்த வன்முறைகள் திட்டமிடப்பட்டவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  

image_e279adcc7c.jpg

ஒவ்வொரு முறையும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இவ்வாறு நடைபெற்று, சொத்துகள் அழிவடைந்த பின்னர், நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதப் பயனும் ஏற்பட்டதில்லை; ஏற்படப் போவதுமில்லை.   

தங்கள் வருமானத்துக்காக நடத்தி வந்த வியாபார நிலையங்கள் எரிக்கப்பட்ட பின்னர், மீளவும் அவற்றை ஆரம்பத்திலிருந்து கட்டியெழுப்புவதென்பது பலருக்கு முடியாத காரியமாகும். மேலும், இந்த வன்முறையினால் ஏற்பட்ட உளப் பாதிப்புகளிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெழுவதற்கும் நீண்ட நாட்களாகும்.   

ஆனால், குற்றம் புரிந்தவர்கள் இரண்டு வாரங்களிலோ அல்லது இரண்டு மாதங்களிலோ, பிணையில் வெளியே வந்து விடுவார்கள். கடந்த காலங்களில், இவ்வாறான வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டதாக எந்தவித செய்திகளுமில்லை.  

கிந்தோட்ட வன்முறையில் ஈடுபட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 19 பேர் கைது செய்யப்பட்டு, இம்மாதம் 30ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.  

இது இவ்வாறிருக்க, சம்பவ தினத்தன்று பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அங்குள்ள முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் உடைத்ததாக கிந்தோட்ட முஸ்லிம்கள் குற்றம்சாட்டுகின்றனர்.   

சம்பவம் நடைபெற்ற மறுநாள், கிந்தொட்டப் பிரதேசத்துக்குச் சென்றிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அங்குள்ள முஸ்லிம் மக்களைச் சந்தித்துப் பேசியபோது, “விசேட அதிரடிப்படையினர் எனது வீட்டை உடைத்தார்கள்; அதை நான் நேரடியாகக் கண்டேன்” என்று, பாதிக்கப்பட்ட நபரொருவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், இது குறித்துத் தான் எந்த இடத்திலும் சாட்சி கூறுவதற்குத் தயாராக உள்ளதாகவும், அந்த நபர் தெரிவித்திருந்தார்.  

முஸ்லிம்கள் மீது, பேரினவாதிகள் தாக்குதல் மேற்கொண்ட அநேகமான தருணங்களில், பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள், குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தமையும் கவனத்துக்குரியதாகும்.   

வன்முறையாளர்கள் அட்டூழியங்களைப் புரிந்த போது, பொலிஸார் கண்டும் காணாமல் இருந்தனர் என்றும், பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் சேர்ந்து, வன்முறையாளர்களுடன் அட்டூழியங்களைப் புரிந்தார்கள் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்திருந்தார்கள்.  

‘வேலியே பயிரை மேயும்’ இந்த அரக்க குணம் ஆபத்தானதாகும். அரசாங்கப் படையினராகச் செயற்பட வேண்டியவர்கள், சிங்களப் படையினராக நடந்து கொள்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு, முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் அச்சுறுத்தலானதாகும்.   

ஆனாலும், அளுத்கம தொடக்கம் கிந்தோட்ட வரையில் நடைபெற்ற முஸ்லிம்கள் மீதான பேரினவாதத் தாக்குதல்களின் போது, வன்முறைக்குத் துணை போனார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தர் அல்லது படை வீரர் மீது, முறையான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.   

அப்படியென்றால், “வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றமையானது, வெறும் கண்துடைப்பான உறுதிமொழி என்பதா என எழுகின்ற கேள்விகள் நியாயமானவையாகும்.   

ஆட்சியாளர்களின் இவ்வாறான உத்தரவாதங்கள் மீது, முஸ்லிம்கள் இப்போது நம்பிக்கையிழந்து விட்டனர். முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இவ்வாறான பேரினவாதத் தாக்குதல்களை ஆட்சியாளர்கள் உள்ளுக்குள் இரசிக்கின்றனரா என்கிற சந்தேகம் கூட, முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமையை இங்கு பதிவு செய்தேயாக வேண்டியிருக்கிறது.  

கிந்தோட்ட வன்முறைகளை நடந்திராமல் தடுத்திருப்பதற்கான அவகாசம் பொலிஸாருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இருந்திருக்கிறது. மேலும், குறித்த வன்செயல்களை ஆரம்பத்திலேயே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய இயலுமைகளும் பொலிஸாருக்கு இருந்திருக்கின்றன.   

ஆனால், இவை எதுவும் நடைபெறவில்லை எனப் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் கூறுகின்றனர். கிந்தோட்டயில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றிருந்த அமைச்சர் ஹக்கீமிடம் அந்தப் பகுதி மக்கள், “பொலிஸார் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; அதுவும் காலி பொலிஸார் மீது, அறவே நம்பிக்கையில்லை” என்று தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.  

ஒரு நாட்டில், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் மீது, தமக்கு நம்பிக்கையில்லை என்று, அதே நாட்டின் ஒரு மக்கள் பிரிவினர் கூறுவதென்பது வெட்கக் கேடான விடயமாகும். கிந்தோட்ட விவகாரத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பக்கச்சார்பின்றி பொலிஸார் நிறைவேற்றியிருந்தால், அவர்களுக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டு எழுந்திருக்க முடியாது.  

இன்னொருபுறம், காலத்துக்குக் காலம், முஸ்லிம்கள் மீது இவ்வாறான பேரினவாதத் தாக்குதல் நடப்பதும், அதன் பின்னர், அங்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் செல்வதும் அறிக்கைகளை விடுவதுமாக இருந்தால், இதற்கு என்னதான் முடிவு என்கிற கேள்வி, முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.   

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சிங்கள இனவாதச் செயற்பாடுகளுக்கு, எந்தவகையிலும் குறைவில்லாமல், நல்லாட்சியிலும் அட்டூழியங்கள் நடந்து வருகின்றன. தம்மீதான பேரினவாதச் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி விழும் என்கிற எதிர்பார்ப்புகளுடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்து, நல்லாட்சியைக் கொண்டு வந்த முஸ்லிம்கள், ‘பேயைத் துரத்தி விட்டு, பிசாசுக்கு வாழ்க்கைப்பட்டு விட்டோமோ’ என கவலைப்படும் நிலை உருவாகியுள்ளது.  
இது இவ்வாறிருக்க, இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான பேரினவாதத் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்துமாறு, ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அருகதைகளை, அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இழந்து விட்டமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் ஆயிரம் அளுத்கம மற்றும் கிந்தோட்ட சம்பவங்கள் நடந்தாலும், ஆட்சியிலிருந்து முஸ்லிம் தலைவர்கள் வெளியேறப் போவதில்லை.மஹிந்த ஆட்சியில் பேரினவாதிகள் தலைவிரித்து ஆடுகின்றனர் என்பதற்காக, மைத்திரிக்கு முஸ்லிம்கள் வாக்களித்தார்கள். ஆனால், இந்த ஆட்சியிலும் நிலைமை அதுபோலதான் இருக்கிறது. அப்படியென்றால், இனித் தமது அடுத்த நகர்வு அல்லது தெரிவு எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்து, முஸ்லிம் சமூகம் தீவிரமாக யோசிக்காமல் இருக்க முடியாது.  

தமிழர்களின் அரசியலிலுள்ள ஒற்றுமையும் சோரம் போகாத்தன்மையும் முஸ்லிம் அரசியலுக்கும் வந்து சேரும் வரை, இந்தத் துயரம் நீண்டு கொண்டேயிருக்கும்.  
எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும், முஸ்லிம் அரசியலின் ‘சொரணை’யற்ற தன்மையைச் சிங்களப் பேரினவாதம், மிக நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது.   

முஸ்லிம்கள் மீதான அளுத்கம தாக்குதலின்போது, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஆட்சியாளர்களுக்கு படிப்பினையூட்டும் வகையிலான முடிவுகளை அப்போது எடுத்திருந்தால், அதற்குப் பிறகு, முஸ்லிம்கள் மீது கைவைக்கும் பேரினவாதத்தின் படலம் இந்தளவு நீண்டிருக்காது. ‘கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைபட்டே ஆக வேண்டும்’ என்பார்கள். அது உண்மைதானோ?   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கழுதைக்கு-வாழ்க்கைப்பட்ட-கதை/91-207609

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.