Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினகரனின் சீக்ரெட் கேம் - புதிய அமைச்சரவை?

Featured Replies

மிஸ்டர் கழுகு: தினகரனின் சீக்ரெட் கேம் - புதிய அமைச்சரவை?

 
 

 

‘‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் வென்றபிறகு ஆளும்கட்சிக்குள் குழப்பங்கள் அதிகமாகின்றன” என்றபடி கழுகார் உள்ளே நுழைந்தார்.

‘‘ஒரே ஒரு எம்.எல்.ஏ-வாக தினகரன் வென்றிருப்பதால் ஆளும் கட்சிக்குள் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது? முதல்வர் எடப்பாடியையும் துணை முதல்வர் பன்னீரையும் அவர் என்ன செய்துவிட முடியும்? அவர்தான் சுயேச்சை உறுப்பினர் ஆச்சே!” என்றோம்.

‘‘சட்டப்படி இன்று அவர் சுயேச்சை உறுப்பினராக இருக்கலாம். ஆனால் ‘அண்ணன்தான் இனி ஆளும்கட்சி’ என்று அவரின் ஆதரவாளர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றி, தினகரனுக்குப் பெரிய அளவில் நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாம். இதுவரை அடக்கி வாசித்தவர் இனி கிளர்ந்து எழப்போகிறாராம். ‘எதையாவது செய்து ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும்’ என்று முன்பு நினைத்தார் தினகரன். அதனால்தான், ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்றெல்லாம் சொல்லிவந்தார். எம்.எல்.ஏ ஆனதும் அவரது மனம் மாறிவிட்டது. ‘எதையாவது செய்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்’ என்று இப்போது நினைக்கிறார். அதற்கான அதிரடிகளில் அவர் இறங்கிவிட்டார்.’’

p44b_1514564205.jpg

‘‘அப்படியா?”

‘‘20 ரூபாய் நோட்டு டோக்கன், ஜெயலலிதா வீடியோ... இந்த இரண்டு அஸ்திரங்களை க்ளைமாக்ஸில் எடுத்து விட்டு ஆர்.கே. நகரைக் கைப்பற்றினார் அல்லவா? அதேபோல, மாயஜாலங்களை அரசியலில் ஏற்படுத்த ரெடியாகிவருகிறார் தினகரன். ‘எடப்பாடியை நீக்குவோம்’ என்று முன்பு 18 பேர் கிளம்பினார்கள் அல்லவா? அதே முழக்கத்துடன் இன்னும்  20 எம்.எல்.ஏ-க்கள் விரைவில் கிளம்பலாம் என்று சொல்லப்படுகிறது. அவர்களைத்தான், ஸ்லீப்பர் செல் என்று தினகரன் சொல்லிவந்தார். இந்த ஸ்லீப்பர் செல்களின் எண்ணிக்கை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிகமாகி விட்டது. அ.தி.மு.க-வில் உள்ள 40   எம்.எல்.ஏ-க்கள் இதுவரை தினகரனைத் தொடர்புகொண்டு, தேர்தலில் ஜெயித்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்களில் 12 அமைச்சர்களும் அடக்கம். ஆக, 66 பேர் டிசம்பர் 28-ம் தேதி நிலவரப்படி தினகரனின் கஸ்டடியில் இருப்பதாக அவருடைய கோஷ்டியினர் சொல்கிறார்கள். ஏற்கெனவே, 18 பேர் தினகரனை ஆதரித்தார்கள். அவர்களைத் தகுதிநீக்கம் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றத்தில் தனக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்று தினகரன் நினைக்கிறாராம். அதனால் உற்சாகமாக சில காரியங்களைச் செய்ய இருக்கிறாராம்!”

‘‘அப்படியானால் தினகரன் தலைமையில் புதிய அமைச்சரவையா?”

p44c_1514564244.jpg

‘‘கலகம் செய்வதற்குத் தயாராகும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையையும் மனநிலையையும் பொறுத்து, தினகரனின் நகர்வுகள் இருக்கும். அதிகப்படியான  எம்.எல்.ஏ-க்கள் வெளிப்படையாக வரத் தயாராக இருந்தால், ‘தினகரனை முதல்வர் ஆக்குவோம்’ என்று கிளம்புவார்களாம். குறைவான எம்.எல்.ஏ-க்கள் என்றால், ‘எடப்பாடியை மாற்றுவோம்’ என்று கிளம்புவார்களாம்.’’

‘‘எடப்பாடியும் தினகரனும் ஒன்று சேர்வதற்கான மூவ் தொடங்கிவிட்டதாக சிலர் சொன்னார்களே?’’

‘‘அது டெல்லி ஆட்சியாளர்கள் செய்ய இருக்கும் காரியம் என்று சொல்கிறார்கள். ‘இன்றைய சூழ்நிலையில், எடப்பாடியிடம் ஆட்சி இருக்கிறது; தினகரனிடம் கட்சி இருக்கிறது’ என்று பி.ஜே.பி மேலிடம் நினைக்கிறது. எனவே, ‘இரண்டு தரப்பும் ஒன்றுசேர்ந்தால் எப்படி இருக்கும்’ என்ற யோசனை அவர்களுக்கு வந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

ஆர்.கே. நகரில் தினகரன், மதுசூதனன் ஆகிய இருவரும் வாங்கிய வாக்குகளைக் கூட்டினால், ஒரு லட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேல் வருகிறது. பதிவான ஓட்டுகள், ஒரு லட்சத்து 78 ஆயிரம். ஆக, ஒன்றுபட்ட அ.தி.மு.க-வை மக்கள் ஆதரிக்கிறார்கள் என பி.ஜே.பி-யினர் கணக்குப் போடுகிறார்கள். ஒன்றுபட்ட அ.தி.மு.க-வுடன்    பி.ஜே.பி கூட்டுச் சேர்வது லாபம் எனவும் நினைக்கிறார்கள். அதற்காக ஒரு சமரச ஃபார்முலா உருவாக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.’’

p44d_1514564182.jpg

‘‘என்ன அது?’’

‘‘ஒரு முதல்வர், இரண்டு துணை முதல்வர்கள் என்பது அந்த ஃபார்முலா. முதல்வராக எடப்பாடி தொடர்வார்; துணை முதல்வராக பன்னீரும் தினகரனும் இருப்பார்கள். தனக்கு ஆதரவு அதிகம் இருப்பதாக தினகரன் பேசினால், அவரை முதல்வராக்கிவிட்டு இரண்டு துணை முதல்வர்களாக எடப்பாடியும் பன்னீர் செல்வமும் இருப்பார் களாம். இப்படிச் செய்யும் போது, தமிழக அரசு பெரும்பான்மை இல்லாததுபோல உள்ள சூழல் தவிர்க்கப்படும் என நினைக்கிறார்கள். ஆனால், தினகரன் இந்த டீலுக்கு ‘நோ’ சொல்லிவிட்டாராம்; எடப்பாடி, பன்னீர் ஆகிய இருவருக்கும் எந்தப் பதவியும் தரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம். இப்போதைய அமைச்சர்கள் சிலரும் மிரட்டப்படுவதாகத் தகவல். ‘ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது முன்னணி அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள்மீதான குற்றச்சாட்டு குறித்து வெளிப்படையாகப் பேசிய ஆடியோ கேசட் எங்களிடம் இருக்கிறது. தேவைப்பட்டால் வெளியிடுவோம்’ என்று மீடியாக் களிடம் திவாகரன் கூறியிருக்கிறார் அல்லவா? அது, அமைச்சர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அதனால் அமைச்சர்கள் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.”

‘‘இதெல்லாம் எடப்பாடிக்குத் தெரியாதா?’’

‘‘தெரியாமல் என்ன... பன்னீர் மீண்டும் வந்து இணைந்தபிறகு, அவரின் ஆதரவாளர்களில் பலரைத் தன் பக்கம் இழுத்துவிட்டார் எடப்பாடி. அந்தச் சாமர்த்தியம் இப்போதும் உதவும் என நம்புகிறார். அதனால்தான் அடுத்தடுத்து பலரையும் நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு, கத்தியைச் சுழற்றுகிறார். தினகரன் செல்வாக்குப் பெறுவது தனக்குத்தான் முதல் ஆபத்து என்பது பன்னீருக்கும் தெரியும். அதனால் அவரும் கூடசேர்ந்து வாளேந்தியி ருக்கிறார். இதற்கிடையே எடப்பாடி யைப் பற்றி நல்லவிதமாகச் சிலர் தினகரனிடம் பேச ஆரம்பித் திருப்பதாகவும் சொல்கிறார்கள்.’’

‘‘அதற்கு தினகரன் என்ன சொன்னாராம்?’’

‘‘தினகரன் கறாராக, ‘எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவை ராஜினாமா செய்வதாக கவர்னருக்கு கடிதம் கொடுக்க வேண்டும். என்னை சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வுசெய்ய வேண்டும். அதன்பிறகு யார் யார் அமைச்சர்கள் என்பதை நாம் உட்கார்ந்து பேசுவோம்’ என்று தினகரன் சொல்லி அனுப்பிவிட்டதாக ஒரு தகவல் பரவியிருக்கிறது.’’

‘‘அதை எப்படி எடப்பாடி ஏற்பார்?’’

‘‘அது தினகரனுக்கும் தெரியும். ‘என்னிடம் ஒப்படைக்காவிட்டால் எப்படிப் பறிப்பது என்று எனக்குத் தெரியும்’ என்பதுதான் தினகரனின் சபதம்.”

‘‘டெல்லி இதை ஏற்குமா?’’

‘‘எடப்பாடியையும் பன்னீர்செல்வத்தையும் ஆடிட்டர் குருமூர்த்தி விமர்சித்ததைப் பார்த்திருப்பீரே? இதை இரண்டுவிதமாகச் சொல்கிறார்கள். ‘இந்த இரட்டையரின் தலைமையை பி.ஜே.பி விரும்பவில்லை. அதன் விளைவுதான் இது’ என்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினரோ, ‘இது மேட்ச் ஃபிக்சிங் மாதிரியான விவகாரம்’ என்கிறார்கள்.’’

‘‘தினகரனைக் குறிவைத்து ஆர்.கே. நகர் தேர்தலுக்குப் பிறகு - அதாவது டிசம்பர் 26-ம் தேதிகூட ஐ.டி ரெய்டுகள் நடந்தனவே?”

‘‘இதைப் புதிய ரெய்டு என்று கருத முடியாது. பழைய நடவடிக்கையின் தொடர்ச்சிதான் இது. ‘இதை ரெய்டு என்றே சொல்லக்கூடாது’ என்கிறார்கள். பி.ஜே.பி-க்கு எதிரான எண்ண ஓட்டத்தில் இருப்பவர்தான் தினகரன் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், அவரை வளைத்துவிடலாம் என டெல்லியிடம் சில பிரமுகர்கள் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்களாம். ‘இரட்டை இலை இருந்தும் எடப்பாடி தரப்பால் ஜெயிக்க முடியவில்லை; இரட்டை இலை இல்லாமலே தினகரன் ஜெயிக்கிறார். யாருடன் கைகோக்க வேண்டும் என்பது இப்போது புரிகிறதா’ என அவர்கள் டெல்லியில் கேட்கிறார்களாம். தினகரனும் தன்மீதான வழக்குகளிலிருந்து தப்பிக்க பி.ஜே.பி-யுடன் கைகோக்கலாம்.”

p44_1514564142.jpg

‘‘நீர் சொல்வது மாதிரி நடந்தால் அமைச்சரவையிலும் அதிரடி மாற்றங்கள் இருக்குமே?”

‘‘ஆளுங்கட்சியில் கொங்கு மண்டலத்துக்காரர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தைப் பார்த்துப் பிற மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பசை மிக்க பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை, உள்ளாட்சி, மின்சாரம், போக்குவரத்து போன்றவற்றை அவர்களே வைத்துள்ளார்கள். இந்தத் துறைகளை மற்ற சமூக எம்.எல்.ஏ-க்களுக்குப் பகிர்ந்து தருவதாக தினகரன் சொல்கிறார். தினகரன் மிகவும் கோபமாக இருப்பது எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி ஆகியோர் மீதுதான். அவர்களை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டாராம். அதற்கு அடுத்தகட்டமாக அமைச்சர்கள் வீரமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், காமராஜ், மணிகண்டன், வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு, சரோஜா ஆகியோர் தினகரனின் லிஸ்டில் உள்ளனராம்.”

‘‘மற்றவர்கள்..?”

‘‘மற்றவர்கள்மீது தினகரன் கொஞ்சம் கருணையுடன் இருப்பதாகச் சொல்கிறார்கள். செங்கோட்டையன், எம்.சி.சம்பத், கருப்பணன், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், செல்லூர் ராஜு, கே.பி.ராஜேந்திர பாலாஜி, சிவகங்கை பாஸ்கரன், ஸ்ரீரங்கம் வளர்மதி, பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோரின் பதவிக்கு ஆபத்து இல்லையாம். மதில் மேல் பூனை என்கிற லிஸ்ட்டில் பாண்டியராஜன், ராஜலட்சுமி, பெஞ்சமின், நிலோபர் கஃபில் ஆகிய நால்வர் வருகிறார்கள். அவர்களுக்கும் பிரச்னை இருக்காது. தினகரனின் புதிய அமைச்சரவைப் பட்டியலில் பழனியப்பன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், ரெங்கசாமி, டாக்டர் முத்தையா, மாரியப்பன் கென்னடி ஆகியோருடன் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த என்.ஜி.பார்த்திபன் அல்லது ஆம்பூர் பாலசுப்பிரமணியன்... என்று பெரும் பட்டியல் வாசிக்கப்படுகிறது” என்றபடி கழுகார் பறந்தார்.

அட்டை ஓவியம்: ஹாசிப்கான்
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு


p44a_1514564046.jpg

dot_1514564067.jpg சென்னையில் பிரபலமான பாம்பன் சுவாமிகள் கோயிலின் சொத்துகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை. இந்த நிர்வாகத்தை அரசு ஏற்க வேண்டும் என்றும், ஏற்கக்கூடாது என்றும் இரு தரப்பினர் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இதுதொடர்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து பல நாட்கள் ஆகிவிட்டன. அதில் சொல்லப்பட்டதை உடனடியாக செயல்படுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், களத்தில் இறங்கினாராம். ஆனால், அவருக்கு திடீர் முட்டுக்கட்டைப் போடுகிறாராம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர். வளைந்துகொடுக்காத அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி விரைவில் தூக்கியடிக்கப்படலாம் என்கிறார்கள். ‘‘அப்படி ஏதாவது நடந்தால், திரைமறைவில் நிகழ்ந்தவற்றை மீடியாவில் அம்பலப்படுத்துவோம்’’ என்று அதிகாரிகள் கொதிக்கிறார்கள்.

dot_1514564067.jpg முதல்வர் டேபிளுக்கு வந்த மூன்று ஃபைல்களில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கையெழுத்துப் போடவேண்டிய இடத்தில், முதல்வர் எடப்பாடி கையெழுத்துப் போட்டிருந்தாராம். அதிகாரிகள் வேறு ஃபைல்களை ரெடி செய்து மீண்டும் முதல்வரிடம் கையெழுத்து வாங்கினார்களாம்.

dot_1514564067.jpg உடல்நிலை சரியில்லாமல் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விடுமுறையில் இருக்கிறார். அவருக்குப் பதிலாக நிதித்துறை செயலாளர் சண்முகம் பொறுப்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சியின் நிச்சயமற்ற நிலையைப் பார்த்து மிரண்டுபோயிருக்கிறாராம் கிரிஜா. அதனால், உடல்நலம் தேறி மீண்டும் தலைமைச் செயலாளர் பதவியில் உட்கார விருப்பம் இல்லையாம்.

dot_1514564067.jpg திருப்பதியில் உயர் பதவியில் உள்ள ஒருவர் அடிக்கடி சென்னைக்கு விசிட் அடிக்கிறார். இங்கே, அவரை வரவேற்று உபசரிப்பதற்கு ஸ்பெஷலாக ஒரு பிரமுகர் இருக்கிறாராம். இவர் வைத்ததுதான் சட்டமாம். திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் அவர் தங்குவதற்கென்று அறைகள் உண்டாம். அங்கே தங்காமல், நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் போய் தங்குகிறார். திரும்பிப் போகும்போது, அலுவலக விஷயங்களில் ஏராளமான குறைகளைச் சுட்டிக்காட்டிவிட்டுப் போகிறாராம். அதனால், அவர்மீது கடுப்பில் இருக்கிறார்கள் தேவஸ்தான ஊழியர்கள்.

dot_1514564067.jpg 2ஜி தீர்ப்புக்குப்பின் கனிமொழியிடம் நிறைய மாற்றங்கள். அதிக உற்சாகத்துடன் தொண்டர்களிடம் உரையாடுகிறார். சமீபத்தில் டெல்லி போனபோது, விமானநிலையம் அருகில் தன் ஆதரவாளர் ஒருவரது பிறந்தநாள் விழா போஸ்டரைப் பார்த்தவர், உடனடியாக அவரின் செல்போன் நம்பரை வாங்கி, போனிலேயே வாழ்த்து சொன்னார். அந்தத் தொண்டர் நெகிழ்ந்துவிட்டார்.

https://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.