Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தளபதி Vs தளபதி - கோபபுரம் ஆன கோபாலபுரம்!

Featured Replies

மிஸ்டர் கழுகு: தளபதி Vs தளபதி - கோபபுரம் ஆன கோபாலபுரம்!

 
 

 

p4c_1515146086.jpg‘‘இப்போதெல்லாம் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால், ‘ரஜினிக்கு ஓட்டுப் போடுவாயா?’ என்றுதான் விவாதித்துக்கொள்கிறார்கள்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் நடந்த சுவாரஸ்யங்கள், நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களுடன் ரஜினி நடத்திய கலந்துரையாடல், கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியுடனான ரஜினியின் சந்திப்பு என அனைத்தையும் கவர் செய்துவிட்டு வந்திருந்தார் அவர்.

‘‘தி.மு.க தலைவர் கருணாநிதியை ரஜினி சந்தித்ததில் என்ன விசேஷம்?’’ என்றோம்.

‘‘கருணாநிதியுடனான ரஜினியின் சந்திப்பு, ‘மரியாதை நிமித்தமானது’ என்று சொல்லப்பட்டது. ஆனால், அந்த விவகாரம் பூமராங்காக மாறிவிட்டது. அந்த நிகழ்வு இரண்டு விஷயங்களை உணர்த்திவிட்டது. ஒன்று, ‘அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அரசியல்வாதிக்கான அனைத்துத் தகுதிகளையும் ரஜினி அடைந்து விட்டார்’ என்பது. மற்றொன்று, ‘நல்ல நண்பர்களாக இருந்த மு.க.ஸ்டாலினும் ரஜினியும் அரசியல் எதிரிகளாக உருமாறத் தொடங்கி யுள்ளனர்’ என்பது.’’

‘‘அப்படியா... அந்த அளவுக்கு என்ன நடந்தது?’’

‘‘நான் சொல்வதை வரிசையாகக் கேளும். அப்போதுதான், அந்த விவகாரத்தின் பின்னால் இருக்கும் அரசியல் புரியவரும். ஜனவரி 2-ம் தேதி, கருணாநிதியைச் சந்திக்க ரஜினி தரப்பிலிருந்து அப்பாயின்ட்மென்ட் கேட்கப்பட்டது. அதை ரஜினி தரப்பு மு.க.ஸ்டாலினிடம் முதலில் கேட்கவில்லை. நேரடியாக, கோபாலபுரத்தைத் தொடர்பு கொண்டு கேட்டனர். அந்தப் புள்ளியிலேயே ரஜினிகாந்த் அரசியல்வாதியாக தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தார்.’’

‘‘ஆரம்பமே விவகாரமாக இருக்கிறதே?’’

p4b_1515146112.jpg

‘‘ஆமாம். சாதாரண நாள்களில் இதுபோல் கோபாலபுரத்தைத் தொடர்புகொண்டு ரஜினி அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தால், கோபாலபுரத்திலேயே நேரம் ஒதுக்கிக் கொடுத்திருப்பார்கள். அந்தத் தகவலைப் பிறகு மு.க.ஸ்டாலினுக்கும் தெரிவிப்பார்கள். அவரும் சந்தோஷமாகக் கேட்டுக்கொள்வார். ஆனால், நிலைமை இப்போது அப்படி இல்லை. ‘தனியாக அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன்’ என்று ரஜினி அறிவித்திருப்பதால், இந்த விஷயத்தில் கோபாலபுரம் ஆட்கள் உஷாராக இருந்தனர். ‘தளபதிதான் இதில் முடிவு செய்ய வேண்டும்; அதனால், நீங்கள் தளபதியிடம் பேசுங்கள்’ எனச் சொல்லிவிட்டனர்.  இதையடுத்து, ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அப்பாயின்ட்மென்ட் கேட்டுள்ளார் ரஜினி.’’

‘‘அப்படியா?’’

‘‘ஸ்டாலினிடம் பேசிய ரஜினி, ‘அப்பாவைப் பார்த்து உடல்நலம் விசாரிக்க வேண்டும்; நாளை (3-ம் தேதி) காலை 8 மணிக்கு கோபாலபுரம் வரலாமா?’ என்று கேட்டுள்ளார். அதற்கு, ‘தாராளமாக வந்து பாருங்கள். ஆனால், காலை 8 மணிக்குத் தலைவர் ஓய்வில் இருப்பார்; அவர் இப்போது கட்சிக்காரர்கள், தலைவர்கள் என யாராக இருந்தாலும், மாலை 6 மணிக்கு மேல்தான் சந்திக்கிறார். அதனால், மாலை 6 மணிக்கு மேல் கோபாலபுரம் வந்துவிடுங்கள். நானும் வந்துவிடுகிறேன். பத்திரிகையாளர்களுக்குச் சொல்ல வேண்டாம். நிறைய கூட்டம் வந்துவிட்டால், அது தலைவருக்கும் தொந்தரவாகப் போய்விடும். வேறுமாதிரியான செய்திகளும் வரும்’ என மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஆனால், நடந்தது எல்லாம் அதற்கு உல்டாதான்!’’

‘‘என்ன நடந்தது?’’

‘‘ரஜினி அப்பாயின்ட்மென்ட் கேட்ட விவரம் மட்டுமே கோபாலபுரத்திலும், மற்ற தி.மு.க மேல்மட்ட ஆட்களுக்கும் தெரியும். ஆனால், ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் அப்பாயின்ட்மென்ட் கொடுத்த விஷயம் தி.மு.க தரப்பில் ஸ்டாலினைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அப்படியிருக்கும்போது, இந்தத் தகவல் 3-ம் தேதி காலை 8 மணிக்கே அனைத்து மீடியாக்களிலும் செய்தியாக வந்தது. அதைப் பார்த்த ஸ்டாலின் அப்போதே அப்செட் ஆகிவிட்டார். ‘மீடியாக்களிடம் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டபிறகும், ரஜினி தரப்பிலிருந்து மீடியாக்களுக்குச் செய்தி போயிருக்கிறதே’ என ஸ்டாலின் வெளிப்படையாக வருத்தப்பட்டுள்ளார். இது முதல் கோணல்!’’

‘‘அடுத்த கோணல் எங்கே ஆரம்பித்தது?’’

‘‘3-ம் தேதி இரவு 7.53 மணிக்கு ரஜினி கோபாலபுரம் வந்தார். இதற்கு முன்பெல்லாம் ரஜினி வரும்போது, கோபாலபுரத்தில் ஸ்டாலின் இருந்தால், வாசல் வரை வந்து வரவேற்பார். ஆனால், இந்தமுறை அவர் வரவேற்பறையை விட்டு வெளியில் வரவில்லை. ரஜினி வந்ததும், கோபாலபுரத்தில் உள்ள வரவேற்பறையில் ரஜினியை அமரவைத்த ஸ்டாலின், சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். ‘நான் கட்சி ஆரம்பிக்கப்போவதால், நம்முடைய நட்பில் எந்த மாற்றமும் இல்லை’ என ரஜினி சொன்னார். அதைக்கேட்டு சிரித்த ஸ்டாலின், ‘அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. எப்போதும்போல் தொடரலாம்’ என்று பதில் சொல்லியுள்ளார். திடீரென்று ரஜினி, ‘மத்திய அரசு  சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் கேட்குமா? ஆர்.கே. நகர் தேர்தலில் பணப்புழக்கத்தைத் தேர்தல் ஆணையம் ஏன் தடுக்கவில்லை’ என்று கேட்டுள்ளார். இதை ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், விளக்கமாகப் பதில் சொன்னார் அவர்.  ‘மத்திய அரசு சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் கேட்க வேண்டும் என்பதில்லை. ஆனால், ஆர்.கே. நகர் தேர்தல் அப்படித்தான் நடந்தது. அவர்கள் பிரஷரில்தான் ஏப்ரல் மாதம் நடக்க இருந்த ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு இரட்டை இலை முடக்கப்பட்டது. பிறகு, இரட்டை இலையை ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிக்குக் கொடுத்துவிட்டு, ஆர்.கே. நகர் தேர்தல் தேதியை அறிவித்தனர். தேர்தல் ஆணையம் நினைத்திருந்தால், இப்போது இடைத்தேர்தலில் புழங்கிய பணத்தைக் கட்டுப்படுத்தி இருக்கலாம்’ என்று சொல்லிவிட்டு, எந்தெந்த வழிகளில் பணம் கொடுக்கப்பட்டது என்பதையும் கதை கதையாகச் சொல்லியிருக்கிறார். அதன்பிறகுதான், கருணாநிதியைச் சந்திக்க ரஜினியை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஸ்டாலின். அங்குதான் இரண்டாவது கோணல் தொடங்கியது.’’

p4a_1515146145.jpg

‘‘அது என்ன?’’

‘‘மாடிக்குப் போகும்போது ஸ்டாலினிடம், ‘நான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதை அப்பாவிடம் சொல்லலாமா’ என்று ரஜினி கேட்டுள்ளார். ‘ம்... சொல்லுங்கள்’ என்று ஸ்டாலின் அதற்கும் அனுமதித்துள்ளார். அதன்பிறகு, கருணாநிதி-ரஜினி சந்திப்பு நடைபெற்றது. ரஜினியை அடையாளம் கண்டுகொண்ட கருணாநிதி, எதுவும் பேசவில்லை என்றாலும்... அவரைப் பார்த்துச் சிரித்துள்ளார். இதையடுத்து, கருணாநிதியின் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நான் அரசியல் கட்சி தொடங்கப்போகிறேன்’ எனக் கூறியுள்ளார் ரஜினி. அதற்கு, கருணாநிதியிடமிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை. அதன்பிறகு சிறிது நேரம் இருந்த ரஜினி, ‘உடல்நிலை எப்படி இருக்கிறது... எதுவும் தொந்தரவு இல்லையே? என்று கருணாநிதியிடம் கேட்டுள்ளார். அதற்குப் பதில் சொல்லும் நிலையில் கருணாநிதி இல்லை. ஸ்டாலின் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் சொல்லவில்லை. ரஜினியின் எல்லாக் கேள்விகளுக்கும், கருணாநிதியின் உதவியாளர் நித்யாதான் பதில் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு கருணாநிதியிடம் விடைபெற்றுக்கொண்டு கீழே இறங்கிய ரஜினி, ‘அம்மா எங்கே இருக்கிறார்’ என்று ஸ்டாலினிடம் கேட்டு, தயாளு அம்மாளையும் பார்த்து ஆசீர்வாதம் வாங்கினார். அதன்பிறகு கோபாலபுரம் வீட்டை விட்டு வெளியே வந்த ரஜினி பத்திரிகையாளர்களிடம், ‘கருணாநிதி என் நீண்ட கால நண்பர். எப்போதும் புத்தாண்டு அன்று அவரைச் சந்தித்து ஆசி பெறுவேன். அவருக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிவிட்டு, உடல்நலம் பற்றி விசாரித்தேன். அதோடு, நான் அரசியல் கட்சி தொடங்கப்போவதைச் சொல்லி ஆசீர்வாதம் வாங்கினேன்’ என்றார். அதுதான் ஸ்டாலினுக்கு உச்சகட்ட எரிச்சலை ஏற்படுத்தியது.’’

‘‘கருணாநிதியிடம் சொன்னதைத் தானே ரஜினி பேட்டியாகவும் கொடுத்தார். அதில் என்ன பிரச்னை?’’

‘‘கருணாநிதியிடம், ‘நான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன்’ என்ற தகவலை மட்டும்தான் ரஜினி சொன்னார். அவர் பேட்டி கொடுத்ததுபோல், கருணாநிதியிடம் ஆசீர்வாதம் கேட்கவும் இல்லை; கருணாநிதி ஆசீர்வாதம் வழங்கவும் இல்லை. இதில்தான் கொதித்துப் போனார் ஸ்டாலின். உடனடியாக கருணாநிதியின் உதவியாளர் ராஜ மாணிக்கத்தைத் தொடர்புகொண்டு பேசினார் ஸ்டாலின். ராஜமாணிக்கம் என்ன சொன்னாரோ, தெரியவில்லை. ஸ்டாலினும் உடனடியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ‘கருணாநிதியை ரஜினி சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. அரசியல் நாகரிகம், பண்பாட்டின் அடிப்படையில் கருணாநிதி ரஜினியை இன்முகத்தோடு வரவேற்று வாழ்த்தினார். அதைத்தான் ரஜினியும் உங்களிடம் சொல்லி யிருப்பார் எனக் கருதுகிறேன். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது, அவரும் தலைவரிடம் வந்து வாழ்த்துப் பெற்றுவிட்டுத்தான் போனார்’ என்றார். பிறகுதான் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். ‘ஏதோ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிட இயக்கத்தையே அழித்துவிடலாம் என்று ஒரு சிலர் திட்டமிட்டு, பலருடைய தூண்டுதலால் ரஜினி கட்சி தொடங்கியிருப்பதாக ஒரு சித்திரத்தைச் சிலர் உருவாக்கிக் கொண்டிருக் கிறார்கள். தமிழக மண் திராவிட இயக்கத்தின் மண். பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்பட்டது தமிழக மண். யாராலும் திராவிடத்தை அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் தோற்றதுதான் வரலாறு’ எனக் கொந்தளித்தார்.’’

‘‘எப்படியோ ரஜினி அரசியலில் முதல் டெஸ்ட்டில் பாஸாகிவிட்டார் என்று சொல்லும்’’ என்றதும், சிரித்தபடி கழுகார் பறந்தார்.

படங்கள்: கே.ஜெரோம்


p4_1515145945.jpg

dot_1515145976.jpg கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுடன் மு.க.ஸ்டாலின் இப்போது சரியாகப் பேசுவதில்லை. சில நாள்களுக்கு முன்பு கோபாலபுரம் வீட்டுக்கு வந்த மு.க.அழகிரியோடு, சண்முகநாதன் அரை மணி நேரத்துக்கும் மேலாக மனம்விட்டுப் பேசியுள்ளார். இந்தத் தகவல் வேறு மாதிரியாக ஸ்டாலின் காதுகளுக்குக் கொண்டு போகப்பட்டதாம். 2004-ம் ஆண்டு அழகிரியைக் கட்சியிலிருந்து நீக்கி கருணாநிதி அறிக்கைவிட்ட பிறகு, அழகிரியுடன் பேசாமல் இருந்தவர் சண்முகநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

dot_1515145976.jpg லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் அறை முதல் மாடியில் இருந்தது. அவர் மறைவுக்குப் பிறகு, அந்த அறை பூட்டியே கிடந்தது. எடப்பாடி- பன்னீர் இணைப்புப் படலத்துக்குப் பிறகு அந்த அறையை இரண்டாகப் பிரித்துள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீருக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிக்கும் பிரத்யேக அறைகளாக இவை மாற்றப்பட்டுள்ளன.

dot_1515145976.jpg வடக்கே கோட்டை இருக்கும் மாவட்டத்து அமைச்சர் ஓசூர் மற்றும் பெங்களூருவில் செய்து வரும் முதலீடு விவரங்கள் பற்றி மாநில உளவுத்துறைத் துல்லியமாக ‘நோட்’ அனுப்பியதாம். அதனால், அவருக்கு ஏகக்கடுப்பாம். ஆர்.கே. நகர் தேர்தலுக்குப் பிறகு தனக்கு வேண்டிய மீடியாக்களிடம், ‘உளவுத்துறை காலை வாரிவிட்டது’ என்று ‘வீர’மாக உளறிக்கொட்டியிருக்கிறார் அந்த அமைச்சர். இந்த விஷயம் முதல்வர் அலுவலகத்துக்குப் போனதாம். அந்த அமைச்சரை அழைத்து, ‘ஏடாகூடமாக வதந்தி பரப்பாதீர்’ என்று எச்சரித்தார்களாம்.

dot_1515145976.jpg டாஸ்மாக் கடைகளையொட்டிய பார்களுக்கான டெண்டர் விடும் விவகாரம் பிரச்னையில் இருக்கிறது. டெண்டர் தொகையைக் குறைக்கச் சொல்லி பார் உரிமையாளர்கள் போராடி வருகிறார்கள். இருந்தாலும், சில ஊர்களில் பார்கள் ஏலம் போய்விட்டது. இன்றைய நிலவரப்படி, தமிழகத்திலேயே அதிக பார் ஏலம் போனது முதல்வர் எடப்பாடியின் சேலம் மாவட்டத்தில்தான்.

dot_1515145976.jpg ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஐந்து பாகங்களைக் கொண்டதாம். முதல் இரண்டு பாகங்களை வெற்றிவேல் வெளியிட்டார். இவற்றையும் சேர்த்து நான்கு பாகங்களை நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனிடம் டி.டி.வி.தினகரன் அளித்துள்ளார். ஐந்தாவது பாகம் மட்டும் சசிகலா வசம் இருக்கிறதாம். அதில்தான், மிக ஆச்சர்யமான காட்சிகள் இருப்பதாக தினகரன் தரப்பினர் சொல்கிறார்கள்.

dot_1515145976.jpg சில நாள்களுக்கு முன்பு, திருவண்ணாமலை கோயிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு, மன்னார்குடி அருகேயுள்ள தனது குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பம் சகிதமாக தினகரன் காரில் கிளம்பிப்போனாராம். மன்னார்குடியில் இருந்த திவாகரனுக்குத் தகவல் போனதும், மதிய விருந்துக்குத் தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டாராம். விருந்துக்குப்பிறகு இருவரும் நீண்ட நேரம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்களாம்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.