Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடக்குமா நடராச தாண்டவம்?

Featured Replies

மிஸ்டர் கழுகு - நடக்குமா நடராச தாண்டவம்?

 

ரும்பைக் கடித்தபடி வந்து குதித்த கழுகார், ‘‘கைகளை நீட்டும்’’ என்றபடி கைகுலுக்கி வாழ்த்து சொன்னார். p45b_1516104274.jpg‘‘தினகரன் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் எனச் சென்ற இதழில் எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை எழுதியிருந்தீர். தினகரன் அதை இப்போது வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். கீப் இட் அப்’’ என்றார்.

‘‘தனிக்கட்சி ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கின்றன?’’ என்று கேட்டோம்.

‘‘இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கடைசி நாளான ஜனவரி 12-ம் தேதி தினகரன் பெங்களூரு சென்றிருந்தார். இரட்டை இலைச் சின்னமும் அ.தி.மு.க கட்சியும் தங்களுக்கு  இல்லை என்று முடிவாகிவிட்டதால் அடுத்து என்ன செய்யலாம் என்று சசிகலாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். கட்சி தொடங்க அவர் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம். எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் தினகரன், அநேகமாக ஜனவரி 23-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிடக்கூடும்.’’

p45a_1516104265.jpg

‘‘நடராசன் மறு அவதாரம் எடுத்துவிட்டார்போல?’’ 

‘‘உடல்நிலையை வைத்துக் கேட்கிறீர்களா, அரசியல் நிலைப்பாட்டை வைத்துக் கேட்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆனால், இரண்டிலும் அவர் இப்போது மறு அவதாரம் எடுத்துள்ளார் என்பது நிஜம். உடல்நிலையைப் பொறுத்தவரை, ஆரோக்கியமாகவே இருக்கிறார். காலையில் வாக்கிங் போகிறார். டாக்டர்கள் அறிவுரைப்படி, உணவு மற்றும் ஓய்வுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார். வீட்டில் இது சாத்தியமில்லை என்பதால், ஸ்டார் ஹோட்டலில் இயற்கைச் சூழலில் தங்கியிருந்து ஓய்வைக் கடைப்பிடிக்கிறார். புத்துயிர் பெற்றுள்ளார் நடராசன். இது அவருடைய உடல்நிலை ரிப்போர்ட்.’’

‘‘அரசியலில்?’’

‘‘இதுவரை அரசியலில் அவர் மறு அவதாரம் எடுக்கவில்லை. ஆனால், எடுக்க நினைக்கிறார். அதற்கான அறைகூவலைத்தான் பேட்டிகளில் அவர் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டு வருகிறார். டெல்லியில் பி.ஜே.பி-யுடன் எந்தச் சமரசமும் இல்லை; காங்கிரஸ் கட்சியில் நடராசனுக்கு எப்போதுமே வலுவான தொடர்புகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்தி, சில காய்களை நகர்த்தியுள்ளார் என்று தெரிகிறது. அந்த நம்பிக்கையில் அவர் இருக்கிறார். நடராசனின் திட்டங்கள் எல்லாமே எப்போதும் தொலை நோக்குடையவைதானே. அந்த நம்பிக்கையில்தான், ‘வரும் ஜூன் மாதம் சசிகலாவுடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்’ என்று குறிப்பிட்டார்.’’

‘‘சரி... நடராசனின் இந்த அறிவிப்பை, சசிகலா குடும்பத்தினர் எப்படிப் பார்க்கின்றனர்?’’

‘‘கொஞ்சம் அச்சத்துடன்தான் பார்க்கிறார்கள். காரணம், இதுவரை அரசியலில் நடராசன் குடும்பம் ஆதிக்கம் செலுத்தவில்லை. சசிகலாவின் குடும்பம் மட்டும்தான் ஆதிக்கம் செலுத்தியது. இப்போது நடராசன் அறிவிப்பால், ‘இதென்ன புதுக்குழப்பம்’ என்று சசிகலா குடும்பத்தினர் யோசிக்கின்றனர். நடராச தாண்டவம் நடக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.’’

‘‘இதைத் தினகரன் எப்படிப் பார்க்கிறார்?’’

‘‘தினகரன், ‘இரண்டு தரப்பு குடும்பங்களும் ஒதுங்கிக்கொண்டால்தான் நல்லது’ என்று நினைக்கிறார். அதைக் கணக்குப்போட்டுத்தான் அவர் சசிகலாவின் சகோதரர் திவாகரன், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷ், இளவரசியின் மகன் விவேக் என அனைவரையும் ஒதுக்கிவிட்டார். அதுபோல, நடராசனுடனும் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அனைவரையும் ஒதுக்கிவிட்டு இருந்தால் மட்டுமே, கட்சியை வளர்க்கமுடியும் என்று நினைக்கிறார். நடராசனின் டெல்லி தொடர்புகள் ஏதாவது ஒருவிதத்தில் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்.’’
 
‘‘எடப்பாடி பழனிசாமி தரப்பு இதை எப்படிப் பார்க்கிறது?’’

‘‘அவர்கள் சசிகலா குடும்பத்தின் மோதல்கள், நடராசனின் மறுபிரவேசம் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளிக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கேற்ப டெல்லியில் வலுவான தொடர்புகளை எடப்பாடி பழனிசாமியும் தொழிலதிபர்களான அவரின் நண்பர்களும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். இன்றைய சூழலில், நடராசனுக்கு டெல்லியில் எந்தச் செல்வாக்கும் இல்லை என்றே அவர்கள் கருதுகின்றனர். வருவதைப் பார்த்துக் கொள்வோம் என்று நினைக்கிறார்கள். இந்த நேரத்தில், காஞ்சி சங்கர மடத்திலும் அதிகாரப்போட்டி பெரிதாக நடக்கிறது. அந்த விவகாரம், இந்த அரசியல் பரபரப்புகளுக்குள் மறைந்துபோயுள்ளது.’’

‘‘அப்படியா... என்ன விவகாரம்?’’

‘‘காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு ஜனவரி 14-ம் தேதி உடல்நிலை சரியில்லை என்று ராமச்சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர். அவர், இரண்டு மணி நேரமாக காரிலிருந்து இறங்கவில்லை. டாக்டர்கள் சுப்பிரமணியன், பாஸ்கரன் ஆகியோர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் இறங்கவில்லை. ‘எனக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது. இவர்கள் என்னை வேண்டுமென்றே மருத்துவமனையில் சேர்க்கப் பார்க்கிறார்கள்’ என்று சொல்லி, கடைசிவரை இறங்க மறுத்துவிட்டார்.’’

‘‘யார் அவரை முடக்க நினைக்கிறார்களாம்?’’

‘‘மடத்தில் இருக்கும் ஜெயேந்திரரின் விசுவாசிகள், ‘இளையவரும் அவருக்கு வேண்டியவர்களும் சேர்ந்து இந்த வேலைகளைச் செய்கிறார்கள்’ என்று சொல்கிறார்கள். திருப்பதியில் காஞ்சி மடத்துக்குச் சொந்தமாக இருக்கும் சொத்துகளை நிர்வகித்து வந்த ஒருவர், நிறைய முறைகேடுகளைச் செய்தார். அவரிடமி ருந்து அந்த நிர்வாகப் பொறுப்பைப் பறித்து விட்டார் ஜெயேந்திரர். அந்த நபரும் இளையவரும் சேர்ந்துதான் நாடகத்தை நடத்துவதாகக் காஞ்சி மடத்தின் பக்தர்கள் கருதுகின்றனர்.’’

‘‘டெல்லி தகவல்கள் ஏதேனும் உண்டா?’’

‘‘இருக்கிறது. அங்கிருந்து பெரிய பிசினஸ் ஆள்களின் நடமாட்டம், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தென்பட்டது. அதே நேரத்தில், தொழில்துறைச் செயலாளராக ஞானதேசிகன் நியமிக்கப் பட்டுள்ளதும் சேர்ந்தே நடந்துள்ளது. தமிழகத்தின் தலைமைச் செயலாளராக ஜெயலலிதா காலத்தில் இருந்தவர் ஞானதேசிகன். பல விவகாரங்களில் சிக்கி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

p45c_1516104297.jpg

ஓ.பி.எஸ் முதல்வரானதும், பிரச்னைகளிலிருந்து ஞானதேசிகன் மீண்டார். ஆனாலும், அவர் அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்துக்கு மாற்றப்பட்டு டம்மியாக்கப்பட்டார். திடீரெனக் கடந்த வாரம் அவர் தொழில்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில், பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமான குஜராத் தொழிலதிபர் ஜெகத் ஷா என்பவர் மதுரை மற்றும் சிவகங்கை பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘எல்லாம் அதானியின் தொழில் சாம்ராஜ்ஜியம் தொடர்பான ஆய்வு’ என்று கிசுகிசுத்தனர்.’’

‘‘துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு, மீண்டும் ஆளும்கட்சி ஏரியாவில் புயலைக் கிளப்பியிருக்கிறதே?’’

‘‘குருமூர்த்தி தன் பேச்சில், ‘தமிழக அரசியலில் ரஜினிக்குச் சிறந்த வாய்ப்பு உள்ளது. பி.ஜே.பி-யும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றமுடியும். நடுநிலை வாக்காளர்கள் என்று சொல்லப்படும் அந்த 16 சதவிகித ஓட்டுகளை ரஜினி பெற வேண்டும். அதைப் பெற்றுவிட்டால், ஆட்சியைப் பிடித்து விடலாம்’ என்றார். ரஜினி போகாவிட்டாலும் ‘துக்ளக்’ விழா ரஜினியைப் பற்றியே இருந்தது’’ என்ற கழுகார் பறந்தார்.

படம்: கே.குணசீலன்


p45d_1516104311.jpg

* முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ‘கிரிவலப் பிரமுகர்’மீது சக ஊழியர்கள் ஏகக் கடுப்பில் இருக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்கள் பற்றி ஆட்சி மேலிடத்திடம் கோள் மூட்டுவாராம் அவர். இதனால் பல அதிகாரிகளும் தேவையில்லாமல் திட்டு வாங்குகிறார்களாம். 

* பொங்கலை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பரிவுத்தொகை தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. அரசு ஊழியர்களில் (தர ஊதியம் ) 4,600 ரூபாய்க்குமேல் வாங்குபவர்களுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திருந்து பரிவுத்தொகை என்கிற பெயரில் 1,000  ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. பென்ஷன்தாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் நேரத்தில் அதை அரசு நிறுத்திவிட்டது. இதனால், அரசு ஊழியர்கள் கடுப்பில் இருக்கிறார்கள்.

* குட்கா விவகாரத்தில் தொடர்புடைய சென்னை போலீஸின் மத்திய குற்றப்பிரிவு, உளவுத்துறை ஆகிய இரண்டிலும் அந்தக் காலகட்டத்தில் கோலோச்சிய இரண்டு முக்கிய அதிகாரிகளின் வருடாந்திரப் பணி செயல்பாடு ஃபைலில் ‘சுழித்து’விட்டாராம் அப்போதைய கமிஷனர் ஜார்ஜ். அவர் சுழித்த விவரங்களைத் தீர விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது வருமானவரித் துறை.

* மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்திய முழுவதும் உள்ள மாநிலங்களின் உயர் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளை டெல்லியில் ஒரு கூட்டத்துக்கு வரச் சொல்லியிருந்தார். பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் ஆகிய நாள்களில் கூட்டம். பண்டிகை நாள்களைச் சுட்டிக்காட்டிய அதிகாரிகள், ‘இதை டெல்லிக்குச் சொல்லி மாற்றுத் தேதியில் நடத்தச் சொல்லுங்கள்’ என்று சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மத்திய அரசுக்கு ‘ஆமாம் சாமி’ தலையாட்டும் அரசு இது. அதனால், அவர்கள் ‘நோ’ சொல்லிவிட்டனர். வேறு வழியில்லாமல், குறிப்பிட்ட நாள்களில் டென்ஷனுடன் டெல்லிக்கு அதிகாரிகள் சென்று திரும்பினர்.


ஏமாந்த வர்த்தகர்கள்!

2017 ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி அமலுக்கு வந்தது. அதற்குமுன்பு வாட் வரி கட்டி வாங்கிய பொருள்களுக்கான வரியை அரசிடமிருந்து திரும்பப்பெற முடியாமல் தவித்து வருகிறார்கள் இந்தியா முழுக்க உள்ள பல வியாபாரிகள். ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வருவதற்குமுன்பு வாட் வரி, நுழைவு வரி, கலால் வரி என மூன்று வரிகள் இருந்தன. இந்த மூன்று வரிகளும் ஜி.எஸ்.டி-யாக மாறியபின், ‘ஏற்கெனவே செலுத்திய வாட் வரியைத் திரும்பப்பெற ட்ரான்1 என்கிற படிவத்தைப் பூர்த்தி செய்து தரவேண்டும்’ என்று சொன்னது மத்திய அரசு. அதற்கு, செப்டம்பர் மாதம் வரை அவகாசம் கொடுத்தது. பிறகு வணிகர்களின் கோரிக்கையை ஏற்று, ‘டிசம்பர் மாதம் முடிவதற்குள் அந்தப் படிவத்தைத் தாக்கல் செய்யலாம்’ என்றது. இங்குதான் பிரச்னை வந்தது. படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கான கடைசித் தேதி டிசம்பர் 31 என ஜி.எஸ்.டி இணையதளத்தில் அறிவித்துவிட்டு, ‘டிசம்பர் 29தான் கடைசித் தேதி’ என நோட்டிஃபிகேஷனில் சொல்லிவிட்டது. இந்தத் தேதி குழப்பத்தால் பலரும் படிவத்தைத் தாக்கல் செய்ய முடியாமல் போனது. ‘‘பல ஆண்டுகள் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை முடங்கிக் கிடக்கிறது. ஜனவரி 18-ம் தேதி நடக்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுத்து, இந்தக் குழப்பத்தைத் தீர்க்க வேண்டும்’’ என்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.