Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினகரன் நகர்வுகள் - செங்‘கோட்டையன்’

Featured Replies

தினகரன் நகர்வுகள் - செங்‘கோட்டையன்’

 

‘எதையோ பறிகொடுத்தது’போலவே எப்போதும் முகத்தை வைத்திருக்கும் செங்கோட்டையன், சமீபகாலத்தில் பறிகொடுத்தவை நிறைய. அதிலும், எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைப்புக்குப் பிறகு அவர் அடுத்தடுத்து பறிகொடுத்தது மூன்று பதவிகளை! இணைப்பையொட்டி அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது, செங்கோட்டையன் வசமிருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை பறிபோனது. அணிகள் பிரிந்திருந்தபோது, ஆளும்தரப்பு வசமிருந்த அ.தி.மு.க பிரிவுக்கு அவைத்தலைவராக இருந்தார் செங்கோட்டையன். இரண்டு அணிகளும் இணைந்து பொதுக்குழுவைக் கூட்டியபோது, மதுசூதனனுக்கு அவைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தார். சமீபத்தில் சட்டசபை கூடுவதற்கு முன்பாக, சட்டசபை அவை முன்னவர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்காக விட்டுக்கொடுத்தார்.

இப்படி விட்டுக்கொடுத்த எல்லாவற்றுக்கும் ஈடாக முதல்வர் பதவியையே செங்கோட்டையனுக்குத் தருவதாகக் கூறி ஓர் அரசியல் சதுரங்க விளையாட்டை ஆரம்பித்துள்ளது தினகரன் தரப்பு. தினகரனின் இந்த நகர்வுகளில் வெல்லப்போவது யார், வீழப்போவது யார் என்பதே விடை தெரியாத பரபரப்பாக இருக்கிறது. ‘கடக ராசியில் பிறந்த செங்கோட்டைய னுக்கு, சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு அரசியலில் ஏறுமுகம்தான்’ என்று ஜோதிடர்கள் சொல்லிவந்த நிலையில், இப்போது அவரை மையமாக வைத்து அரசியல் ஜல்லிக்கட்டு நடக்க ஆரம்பித்துள்ளது. எடப்பாடி அரசைக் கவிழ்த்துவிட்டுச் செங்கோட்டையனை முதல்வராக்கி, கட்சியைத் தன் தலைமையின்கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சியில் தினகரன் இறங்கியுள்ளார்.

P42A_1516103595.jpg

சமீபத்தில் தூத்துக்குடி போயிருந்தபோது, செங்கோட்டையன் பற்றி வருத்தத்துடன் பேசினார் தினகரன். ‘‘இப்போது அ.தி.மு.க-வில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களில் செங்கோட்டையன்தான் சீனியர். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் இருந்துவருபவர். எம்.ஜி.ஆர் மறைந்தபோது ஜா. அணி, ஜெ. அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஜெ.வுடன் வந்த ஆறு பேர்களில் செங்கோட்டைய னும் ஒருவர். திறமையாகப் பணியாற்றும் அவரை இப்போது எடப்பாடியும் பன்னீரும் இணைந்து கட்சியில் ஒதுக்கிவருகிறார்கள். அவை முன்னவர் பொறுப்பிலிருந்தும் நீக்கிவிட்டனர். ஏன் அவரை ஒதுக்குகிறார்கள் எனத் தெரியவில்லை. இது எனக்கு வருத்தமளிக்கிறது’’ என்றார்.

எடப்பாடி பக்கம் இருப்பவர்களில், தினகரன் பாராட்டும் ஒரே நபர் செங்கோட்டையன். தினகரன் சொல்வது மனப்பூர்வமாகவா அல்லது எடப்பாடியையும் செங்கோட்டையனையும் பிரித்தாளும் சூழ்ச்சியா? ‘‘எடப்பாடிக்குப் பெரும் பக்கபலமாக இப்போது இருப்பது கொங்கு மண்டல எம்.எல்.ஏ-க்கள்தான். பெரும்பாலும் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் ஒற்றுமையை உடைத்து, தம்மால் முதல்வராக முடியும் என்ற நம்பிக்கை தினகரனுக்கு இப்போது இல்லை. அதனால், செங்கோட்டையனைத் தன் பக்கம் இழுக்கத் தினகரன் சதி வலை பின்னுகிறார்’’ என்கிறார் எடப்பாடியின் ஆதரவு கொங்கு மண்டல அமைச்சர் ஒருவர்.

‘ஜெயலலிதாவின் சாரதி’எனச்  செங்கோட்டையனைக் கட்சியினர் வர்ணிப்பதுண்டு. ஜெயலலிதா தேர்தல் p42b_1516103605.jpgடூர் போகும்போது, கனகச்சிதமாக ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்து, செங்கோட்டையன்தான் அழைத்துச் செல்வார். பிரச்னைக்குரிய தொகுதி எதுவென்று தேர்ந்தெடுத்து, அதன் தேர்தல் பொறுப்பைச் செங்கோட்டையனிடம்தான் ஒப்படைப்பார் ஜெயலலிதா.

இந்த ஜனவரி 9-ம் தேதியன்று செங்கோட்டையனுக்கு 70-வது பிறந்த நாள். வழக்கம்போல எளிமையாகவே கொண்டா டினார். அமைச்சரவை புரோட்டோகால் லிஸ்ட்டில் நான்காவது ரேங்க்கில் தற்போது இருக்கிறார். 1972-ல்   அ.தி.மு.க-வில் ஐக்கியமானவர் செங்கோட்டையன். 1975-ல் கோவையில் அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற்றபோது, ‘‘கட்சிப் பெயரில் ‘அகில இந்திய’ என்ற வார்த்தைகளைச் சேர்க்கலாமா,  வேண்டாமா?’’ என்கிற சர்ச்சை வெடித்தது. அப்போது செங்கோட்டையன் பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்த உதவினார். இதன்மூலம் எம்.ஜி.ஆரின் நேரடிப் பார்வைக்கு வந்தவருக்கு அதன்பிறகு ஏறுமுகம்தான். 1977-ல் எம்.எல்.ஏ சீட் கிடைத்தது. சட்டசபைத் தேர்தலில் எட்டுமுறை ஜெயித்தவர். எம்.ஜி.ஆர்., 1980-ல் இவரை ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆக்கினார். அ.தி.மு.க-வின்  ஒன்றுபட்ட ஈரோடு மாவட்டச் செயலாளராக 19 வருடங்கள் இருந்தவர். கட்சியில் தலைமைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு பதவிகளை வகித்துவிட்டார். போக்குவரத்துத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலம், விவசாயம், வருவாய்த்துறை, ஐ.டி எனப் பல துறைகளின் அமைச்சராக இருந்து விட்டு,  இப்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருக்கிறார். இனி, அவர் அமர வேண்டியது, முதல்வர் பதவி மட்டும்தான். 

சசிகலா சிறைக்குச் செல்லும்முன், ‘யாரை முதல்வராக நியமிக்கலாம்’ என்கிற பேச்சு வந்தபோது, செங்கோட்டையன் பெயரை அவர் முன்மொழிந்ததாகச் சொல்கிறார்கள். கூவத்தூரில் நடந்த நள்ளிரவு பாலிடிக்ஸில் செங்கோட்டையனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார்.

இவ்வளவு விசுவாசமான செங்கோட்டையனை ஜெயலலிதா கொஞ்சகாலம் விலக்கி வைத்திருந்தார். காரணம், அவரின் நடத்தை பற்றி ஜெயலலிதாவிடம் அவருடைய குடும்பத்தினர் நேரில் புகார் கூறினர். நண்பர் ஒருவருக்காகச் செங்கோட்டையன் விதிகளை மீறி உதவினார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. இதையடுத்து, அமைச்சரவை யிலிருந்தே செங்கோட்டையனை நீக்கினார் ஜெயலலிதா. இப்போது, சசிகலா குடும்பத்தினரின் ‘குட் புக்’கில் செங்கோட்டையன் இடம்பெற்றி ருப்பது காலத்தின் கட்டாயம். ஆனால், முன்பு சசிகலாதான் செங்கோட்டையனுக்கு அரசியல் எதிரியாக இருந்தார்.

இதுபற்றி செங்கோட்டையனை நன்கு தெரிந்த அவரின் நண்பர் ஒருவர் நம்மிடம் பேசினார்.

‘‘ஓ.பன்னீர்செல்வத்தைக் கட்சியில் வளர்த்துவிட நினைத்த சசிகலா, செங்கோட்டையனை எதிரியாக நினைத்தார். செங்கோட்டையன் குடும்பத்தினரைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி, ஜெயலலிதாவிடம் வெறுப்பைத் தூண்டிவிட்டார். ‘எனது பெயரைக் கெடுத்துவிட்டார் சசிகலா’ என்றே செங்கோட்டையன் புலம்பித் தவித்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அமைச்சரவை அமைக்கப்பட்டபோது, ‘பழையவர்களே தொடரட்டும். புதியவர்கள் வேண்டாம்’ என்றே சசிகலா சொன்னார். செங்கோட்டையனைப் புதிதாகச் சேர்க்கவிடவில்லை. பன்னீர் பிரிந்து சென்றபிறகு புதிதாக அமைச்சரவை அமைக்கப்பட்டபோது, கொங்கு மண்டல அமைச்சர்களான வேலுமணியும் தங்கமணியும்தான் செங்கோட்டையனுக்காக வாதாடினார்கள. அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் அப்போது பன்னீர் அணிக்குச் சென்றதைச் சுட்டிக்காட்டி, காலியாக இருந்த பள்ளிக்கல்வித் துறைக்குச் செங்கோட்டையனை நியமிக்க வைத்தார்கள். இதையெல்லாம் செங்கோட்டையன் மறந்துவிட முடியுமா? ‘செங்கோட்டையனைப் பிரித்தால், கொங்கு மண்டல அ.தி.மு.க-வினர் பிளவுபட்டுவிடுவார்கள்’ என்பது தினகரனின் கணக்கு. பெயருக்கு ஓரிரு மாதங்கள் செங்கோட்டையனை முதல்வர் பதவியில் உட்கார வைத்துவிட்டு, பிறகு அவரை ஒதுக்கி
விட்டுத் தாம் முதல்வராக அமர்வதுதான் தினகரனின் திட்டம். செங்கோட்டைய னுக்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை’’ என்கிறார் அவர்.

p42c_1516103624.jpg

‘செங்கோட்டையனின் மனநிலை என்ன’ என்று விசாரித்தோம். தினகரன் அணியினர் பல்வேறு வி.ஐ.பி-க்கள் மூலம் செங்கோட்டையனுக்குத் தூது விட்டிருக்கிறார்கள். ‘‘அரசியலில் நேரத்துக்குத் தகுந்தமாதிரி மாறும் பச்சோந்தியாக நான் இருக்கமாட்டேன். சசிகலா குடும்பத்திடம் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. இப்போது இங்கு நான் கௌரவமாக, சந்தோஷமாக இருக்கிறேன். இதுவே எனக்குப் போதும். இதுதான் என் முடிவு. இனி என்னிடம் யாரும் தூது வராதீர்கள்’’ என்று அவர்களிடம் கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பிவிட்டாராம். 

இருந்தாலும், தினகரன் கோஷ்டியினர் செங்கோட்டையனுக்கு வலைவிரிப்பதை நிறுத்தவில்லை. செங்கோட்டையன் பெயரை முன்னிலைப்படுத்தியே பல எம்.எல்.ஏ-க்களையும் தங்கள் பக்கம் வசப்படுத்த நினைக்கிறார்கள். ‘‘முதல்வர் நாற்காலியை விரும்பாத அரசியல்வாதி யாராவது உண்டா? செங்கோட்டையனுக்குக் கோட்டையை ஆளும் ஆசை இருக்கிறது. அதை நாங்கள் உணர்ந்துவிட்டோம். அவரை இழுப்போம். எடப்பாடி பக்கம் இருக்கும் எல்லோரும், தட்டமுடியாமல் எங்கள் பக்கம் வருகிற காலம் விரைவில் வரும். அதுவரை காத்திருப்போம்’’ என்கிறது தினகரன் தரப்பு. 

செங்கோட்டையன், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பதவியில் அமர்வாரா, மாட்டாரா? அவர் எடுக்கப்போகும் முடிவில்தான் அவரின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.