Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.

neduntheevu_kuthirai-5-600x232.jpg?resiz

மரபு உயிரினம் ((Heritage breed)  )

தென் அமெரிக்க கண்டத்தின்  உச்ச நாகரிகத்தை அடைந்திருந்த பழங்குடிகள் இன்காக்கள்.  இன்று பேரு முதலான தென் அமெரிக்க நிலங்களின் ஆதிச்சொந்தக்காரர்கள் அவர்கள் தான். இன்காக்களின் வாழ்வின் வரலாற்று எச்சமாகவும் உலகின் புகழ் பூத்த இடமாகவும் சொல்லப்படுவது இன்காக்களின்  அழகு மிக்க பழையை நகரமான  மச்சு பிச்சு.  பப்பலோ நெடூடா போன்ற இலக்கியகாரர்கள் தொடங்கி  போராளி தோழர் சே குவேரா வரை இன்காக்களின் மச்சு பிச்சு நகரங்களைப்பற்றி கவிதைகள், கட்டுரைகள், குறிப்புக்கள் என்று எழுதியிருக்கின்றனர். சர்வதேச அளவில் தொல்லியல் மற்றும் மரபுரிமை  செல்வாக்குக்கு கொண்ட ஒரு தளமாக மச்சு பிச்சு இருக்கின்றது. சர்வதேச பாதுகாக்கப்பட்ட மரபுரிமைத்தலமாக யுனஸ்கோ அதனை கண்காணிக்கின்றது.  ஆண்டு தோறும் பல லட்சம் பேர் மச்சு பிச்சுவைக்காண வருகின்றனர்.

8479097000_34488d5de5_b.jpg?resize=620%2

 லாமாவும் மச்சு பிச்சுவும்

மச்சு பிச்சு வெறும் நகரம் மட்டுமல்ல  அதனுடைய வரலாற்று மற்றும் தொல்லியல் பெறுமதியும் அதனுடைய இயற்கைச்சூழமைவும் மரபுரிமை சார்ந்த  பெறுமதியைப்பெற்றவை. மலைகள் , இயற்கை வழிபாட்டு அமைப்புக்கள் ,தாவரங்கள் , லாமா போன்ற விலங்குகள் என்று மச்சு பிச்சு ஒரு இயற்கைக்கூட்டு மரபுமைத்தளமாகவும் உள்ளது. இன்காக்களின் மச்சு பிச்சு மலை நகரத்தை கூகுலில் தேடினால்  முக்கால் பங்கு புகைப்படங்களில் லாமா (Llama) எனப்படும் ஒரு வகை ஒட்டகம் கண்களில் தட்டுப்படும். அந்த ஒட்டக இனத்துக்கு அந்த நிலத்தில் ஒரு பெரும் வரலாற்று நிகழ்த்துகை இருக்கிறது. இன்காக்களின் ஆன்மாவோடு இணைந்த வரலாறு அது.  இன்காக்கள் அழிந்த பிறகும் அந்த நிலத்தின் ஆன்மாவை இன்று வரை தாங்கி நிற்பவை லாமாக்கள் தான். பேரு அரசு லாமாக்களை தேசிய  பாதுகாக்கப்பட்ட இனமாகக்கருதுகின்றது. ஏன் ஒட்டு மொத்த உலகுமே மச்சுபிச்சுவையும் லாமாக்களையும் பிரித்துப்பார்ப்பதில்லை. அது ஒரு  மரபு உயிரியாக (Heritage breed)  மாறியிருக்கின்றது.

ஒரு நிலத்தின் உயிரினங்கள் மனிதர்களுக்குரிய அதே உரித்தை அந்த நிலத்தின் மீது கொண்டிருக்கின்றன. அதே போல சிறப்பாக  மனித வாழ்க்கையில் பங்கெடுக்கும்  உயிரினங்கள் அவர்களின் மரபு என்ற  கூட்டு மன உணர்வுக்குள் சென்று தங்கி விடுகின்றன. அவை அடையாளமாகவும் நிலத்தின் தொடர்ச்சியான பங்காளராகவும் மாறிவிடுகின்றன. பொதுவாக ,மரபு உயிரிகளை பின்வரும் வகைப்படுத்தலின் ஊடாக இனங்காணலாம்,

  • இயற்கை நிலையில் அருந்தல் பெறுமானம்.(அழிந்து வரும் ஆபத்து, இயற்கை கூர்ப்பு தேய்வு என்பவற்றினைகருத்தில் கொண்டு)
  • மக்களின் வரலாற்று கதைகளில் பங்கெடுக்கும் தன்மை.
  • மரபு,அடையாளம் போன்ற கூட்டு நனவிலி மனத்தின் நம்பிக்கை.
  • சடங்குகள் , நம்பிக்கைகள் , சமய நிலைகளின் ஊடாக வரும் கலாசார நம்பிக்கைப்பெறுமதி.

பொதுவாக இயற்கை அருந்தல் பெறுமானம் உள்ள விலங்குகள் எல்லாம் மரபுரிமைகளுக்குள் சேராதவை, அவை தேசிய பாதுக்காக்கப்படும் இனங்களாக இருக்கும். ஆனால் மரபுரிமைக்குள் வந்து சேரும் உயிரினங்கள் பெரும்பாலும் மனிதனின் கால்நடை வளர்ப்பு அல்லது தொடர்புச்சமுதாயத்தின் தொடர்ச்சியாக மனித வாழ்வோடு பின்னிக்கொண்ட பண்பினைக்கொண்டவை. அபூர்வமாக  சில மனிதர்களுடன் நேரடியாகத்தொடர்பு படா விட்டாலும், மனித நம்பிக்கைகளின், நிலச்சடங்குகளின் வழியாக அவை  மரபுரிமை உயிரினங்களாக மாறும் தன்மையடைகின்றன.

உதாரணமாக  மங்கோலிய மேச்சல் நிலங்களின்  வேட்டைக்காரர்களான ஓநாய்கள் தெய்வ நம்பிக்கையுடன் தொடர்பு கொண்டவையாகவும் குறித்த நிலத்தின் ஆன்மாவையும் சமநிலையையும் பாதுகாக்கும் காவலர்களாக கருதப்பட்டு வந்துள்ளன. மங்கோலிய மேச்சல் நிலங்களின் பழங்குடிகளும், இடையர்கள்களும், நாடோடிகளும் ஓநாய்களை நிலத்தின் தேவதைககாளவே பார்த்தனர்.ஜியாங் ரோங் எழுதிய  ஓநாய் குலச்சின்னம் (Wolf Totem)   நாவல் இலக்கிய அழகியலோடு அதை விபரிக்கின்றது. மங்கோலிய மேச்சல் நிலத்தின் ஓநாய்கள் அழியும் போது மக்களின் வாழ்வும் நிலத்தின் ஆன்மாவும் எப்படி சிதைந்து போனது என்பதை ஜியாங்ரோங் துன்பத்தோடு விபரிக்கின்றார்.

9780143109310.jpg?resize=294%2C450

இவ்வாறு இயற்கையின் நிலத்தின் வாழ்நிலைப்பெறுமதி கொண்ட மரபுயிரினங்கள் குறித்த நிலத்தில் வாழும் மக்களின் அடையாளத்தையும் சரி வாழ்வுரிமையையும் சரி பாதுகாக்கும் வேலையினைச்செய்கின்றன. இன்காகள் அழிந்த பிறகும் கூட அவர்களின் ஆன்ம நினைவுகளைத்தாங்கிக்கொண்டு லாமாக்கள் மச்சு பிச்சுவில் உலாத்தி திரிகின்றன. அவை  மச்சு பிச்சுவின் ஆன்மாக இருக்கின்றன.

நெடுந்தீவும் குதிரைகளும்

மச்சுபிச்சுவில் உலாத்தி திரியும் லாமாக்களைப்போல, மங்கோலிய மேச்சல் நிலங்களில் உலாத்தும் ஓநாய்களைப்போல  இலங்கையின் வடக்கே நெடுந்தீவில் குதிரைகள் இருக்கின்றன. நெடுந்தீவில் இருக்கும் குதிரைகளைப்பொறுத்தவரை அவை ஆயிரம் வருஷத்து வரலாற்றை கொண்டவையா என்பதை உறுதிப்படுத்த இங்கே போதுமான தொல்லியல், வரலாற்று , விஞ்ஞா ருசுக்கள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றன. ஆனால்  இங்கே இருக்கும் பெறுமதி என்பது இப்போதும் குதிரைகள் கண்முன்னே உலவித்திரிகின்றன என்பதுதான். நெடுந்தீவின் அடையாளமாகவும் வரலாற்று நிகழ்தலின் மிச்சக்கதையாகவும், மக்கள் வாழ்வுக்கதைகளின் பங்காளர்களாகவும் இருப்பவை இந்தக் குதிரைகள்.

இங்கிருக்கும் குதிரைகள் மேலே சொன்ன அருந்தல் பெறுமானம் , வரலாற்றுப்பெறுமதி, அடையாள மனநிலை, முதலானவற்றோடு நன்கு பொருந்தியவை. இவை எல்லாவற்றையும் விட சிறப்பானது அவை இன்னும் அங்கே தமது பிழைத்தலை மேற்கொள்கின்றன என்பதுதான்.

இக்குதிரைகள் எப்போதிருந்து இத்தீவில் வாழ்வு முறையை அமைத்தன என்பது பற்றிய வரலாற்றுக்கதைகள், பெரும்பாலும் ஐரோப்பிய காலனிய காலங்களின் இருந்தே கிடைக்கின்றன. ஆனால் தென்னிந்திய சேர, சோழ , பாண்டிய, பல்லவ நாடுகளுக்கு அண்மையில் இருக்கும் ஒரு தீவில் , அதாவது வரலாற்று அடிப்படையில் அரசியல் புவியியல் கேந்திர முக்கியம் வாய்ந்த இடமாக இருந்த தீவில் ஐரோப்பியர்தான் குதிரைகளைக்கொண்டுவந்திருந்தனர் என்று பொத்தம் பொதுவாக முடிவு செய்ய முடியாதென்று வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இன்றுவரை நெடுந்தீவு முழுவதும் குதிரைகளின் வாழ்வியலோடு இணைந்த வரலாற்று எச்சங்கள் அங்கே  குதிரைகள் உலாத்தி திரியும் இடங்களில் நிறையவே தென்படுகின்றன. மேலும் தொல்லியல் அகழ்வுகள் அங்கே செய்யப்பட்டால் இன்னும் பல செய்திகள் மேலெழுந்து வரும். அரசு தொடர்ச்சியா அந்த அனுமதியை வழங்காது இன்னும் தீவை இராணுவ பிரசன்னத்திலேயே வைத்திருக்கின்றது.

குதிரை முதலான விலங்களை மனித வலுவுக்கு மாற்றீடாக பாவிக்கும் பல ஆயிரம் வருடத்தின் மனிதப்பண்பாடு இயந்திர வருகையோடு குறைந்து போனாலும் அதன் தொடர்ச்சியாகவும் சான்றாகவும் இத்தகைய மரபுவிலங்குகள் இருக்கின்றன. அவை கைவிடப்பட்டு ஆபத்துக்கு உள்ளாக இதுவும் ஒரு காரணம் எனலாம்.

நெடுந்தீவின் குதிரைகள் இத்தனை நூறாண்டுகள் கடந்த பின்னரும் கூட  மிகக்கடினமான வறட்சி , பராமரிப்பு இன்மை என்பவற்றிற்கு மத்தியில் இங்கே தங்களுடைய பிழைத்தலை மேற்கொள்கின்றன.

இன்று குதிரைகளின் தன்மையில் இருந்து விகாரப்பட்டு இருக்கும் இவற்றை மட்டக்குதிரைகள் , கோவேறு கழுதைகள் என்றும் பொனிகள் இவற்றை அழைக்கின்றனர். இவை இனக்கலப்பு செய்தவையாக இருக்கின்றன. இவற்றின் இயற்கை கூர்புத்தேய்வையோ , உயிர் நிலைமாற்றத்தையோ தாண்டி அவை நிலத்தில் நடந்து திரியும் அந்த நிலத்தின் மிகநெருக்கமான சொந்தக்காரர்கள் என்றே பார்க்க வேண்டியிருக்கின்றது.

நெடுந்தீவு  நிலத்தின் கடந்த காலம் மீதான வாசிப்பிற்கும் , அடையாளத்திற்கும் இக்குதிரைகள் பிரதிநிதிகளாக இருக்கின்றன. இங்கே இருக்கும் மூத்த பிரஜைகள் தங்களுடைய தீவு பற்றிய ஞாபகங்களில் குதிரைகள் பற்றிய ஏராளம் கதைகளைப் பகிர்கின்றனர்.

தீவில் குதிரைகளை அடைத்து வைப்பதற்கான லாயங்களும் , குதிரைகளைப் பராமரிக்கும் மூலிகை தொட்டிகளும் இன்னும்காணப்படுகின்றன.  நெடுந்தீவில் இருக்கும் மூலிகைத்தொட்டிகளும் சரி, லாயங்கள் , கல்வேலியடைப்புக்களும் சரி தனித்தனியான தன்மையுள்ள குதிரைகளோடு தொடர்புடைய தொல்லியல் மர்புரிமைகளாக இனங்காண வேண்டியன.  இங்கிருக்கும் பெருக்கமரங்கள் குதிரைகளின் உணவு , மூலிகைத் தேவைகளுக்காக கொண்டு வரப்பட்டதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர். சிலர் வெடியரசன்  எனப்படும் தீவின் வரலாற்று கதைகளில் , நம்பிக்கைகளில் கூறப்படும்  மன்னன் காலத்தில் இருந்தே குதிரைப்பயன்பாடு இருந்து வந்ததாக குறிப்பிடுகின்றனர். குதிரைகள் வர்த்தகம் , பொதிசுமத்தல் , போர் என்பவற்றுக்குபயன்படுத்தபட்டதாகவும் வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Cp9vS1FUsAAqhbb.jpg?resize=620%2C372

ஐரோப்பியருக்கு பிறகு நிலச்சுவாந்தார்கள் , சிலகுடும்பங்கள்தங்கள்தேவைகளுக்காககுதிரைகளைபராமரித்துபயன்படுத்தி

வந்ததாகஅறிகின்றோம்.அத்தோடுஅரசாங்கம்இக்குதிரைகள்திரியும்தரவைகள் , காடுகள் , மேய்சல்நிலங்களைஅடையாளப்படுத்திஅவற்றை

“விலங்குகள்சரணாலயமாக ” அறிவித்துள்ளது .

அத்தோடு பிரதேசசபை , கடற்படை , மற்றும் மக்கள் இணைந்து தொட்டிகள் நீர்நிலைகளை அமைத்து இக்குதிரைகள் பசிதாகத்தால் இறப்பதை கட்டுப்படுத்த முயற்சிகள்செய்கின்றனர்.  மீண்டும் இந்தக்கோடையில் குதிரைகள் தொடர்ச்சியாக இறக்கத்தொடங்கியதை அறியமுடிகின்ற. தொட்டிகளில்  முறையாக தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. தீவில் ஏற்கனவே நீர்ப்பிரச்சினை இருக்கின்றது. ஆயினும் குதிரைகளைப்பராமரிக்க  அரசும்,மக்களும் முன்வரவேண்டும். மச்சு பிச்சுவில் பசுமைமிக்க இடத்தில் லாமாக்கள் சுதந்திரமாக மேய்ந்து நீரருந்திக்கொண்டு  அரச பராமரிப்பில்  உலவுகின்றன, இவை இன்னும் ஆயிரம் வருடங்கள் அங்கே

இன்காக்களின் கதைகளக்காவிக்கொண்டு திரியத்தான் போகின்றன.

MG_8234.jpg?resize=620%2C348

  கோடைக்காக கட்டப்பட்ட தொட்டிகள்

MG_8225.jpg?resize=620%2C348

ஆனால் நெடுந்தீவின் குதிரைகள் செத்து மடியத்தொடங்கிவிட்டன, வறட்சியும் நீரின்மையும் மத்திய கோட்டுக்கு கீழே வாழும் மக்களையும் குதிரைகளையும்  வாட்டியெடுக்கின்றது. நிலத்தையும் மக்களையும்  அவர்களின் நம்பிக்கையையும் வாழ்வு அடையாளத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசினது கடைமையேயாகும். அது மட்டுமன்றி  மக்களும்  தங்களுடைய அடையாளமாக, தங்களுக்கு மிக நெருக்கமான உறவாக அவர்களின் நிலத்தின் உயிரினங்களைப்பார்க்க வேண்டியிருக்கின்றது.

மக்கள் உயிரினங்களை தமது வாழ்க்கை தேவைக்கு பயன்படுத்ததொடங்கி பல ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன.  முன்பிருந்தே  மக்களுக்கும் விலங்குகளுக்கும் இயற்கையின் சாட்சியான ஒரு ஒப்பந்தம் இருந்தது , பரஸ்பர வாழ்வினைத்தாங்கிக்கொள்ளும்

ஒப்பந்தம் அது. இயற்கை நிலையில் மனித வாழ்வு இருக்கும் போது செய்யப்பட்ட ஒப்பந்தம் அது. அதன் தொடர்ச்சி நவீன உலகில் வேகமாக அறுந்தது. அதுவே மனித குலத்துக்கு சாபமாக எதிர்த்திரும்பியது.

தமக்கு நெருக்கமான , தமது வாழ்வின் அடையாளமாக இருப்பதை குறித்த நிலத்தின் மக்கள் பாதுகாக்க தவறும் போது மக்கள் தங்களையே இழக்க நேரிடும். எப்படி மங்கோலிய மேச்சல் நில ஓநாய்களை நவீன இயந்திரப்புரட்சியும், காடழிப்பும் , நில அக்கிரமிப்பும், போரும் இல்லாது அழித்த போது மேச்சல் நிலமே மெல்ல மெல்ல அழிந்து போனதோ அதைப்போல நிலத்தின் சக பங்காளரான மரபுயிரினங்களை நாம் இழக்கும் போதும் நம்முடைய இருப்பையும் இழந்து போவது உறுதி.

IMG_8156.jpg?resize=620%2C348

           குதிரைக்கு வைத்தியம் செய்யும் மூலிகைத்தொட்டிகள்

இலங்கையின்  பேரின பின்னணிக்கு வெளியே இதர இனங்கள் மீதான இனவாத அழிப்பு அவர்களின் சகலவிதமான மரபு அடையாளங்கள் மீதும் நிகழ்தப்பட்டிருக்கின்றது ;நிகழ்ந்துகொண்டும் இருக்கின்றது. பெரும்பாலும் கலாசார மரபுரிமைகளின் மீது  நிகழ்த்தப்படும் இத்தாக்குதல் இயற்கை மரபுரிமைகளைப்பொறுத்தவரை குறைவாக இருக்கின்றது. எனினும்  பெரும்பான்மை இனத்தவரின் மரபுரிமைகளை பாதுக்காக்கும் அரசு சிறுபான்மையினங்களின் நிலத்தில் நிலவும் மரபுரிமைகளை கடைநிலைக்கு தள்ளிக்கொண்டே இருக்கின்றது. பின் –போர்ச்சூழலில் எஞ்சியிருக்கும் மரபுகளை  மீள கட்டுவதையும் பாதுகாப்பதையும் இப்போது நிகழ்த்தவேண்டியிருக்கின்றது. நெடுந்தீவைப்பொறுத்தவரை  தொடர்ச்சியாக அங்குள்ள யாழ்ப்பாணத்தின் மிக முக்கிய தொல்லியல் வரலாற்றையும் மரபுரிமை தளத்தையும் கொண்ட  கூறுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக அங்குள்ள குதிரைகள் மிக வேகமாக அழிந்துகொண்டிருக்கின்றன. அங்குள்ள மேச்சல் வெளிகளில் அரசு போட்டிருக்கும் குதிரைகள் பாதுக்காக்கப்பட்ட உயிரினங்கள் என்ற உரிமை கோரும் பலகைகள் துருப்பிடிக்கத்தொடங்கி விட்டன. பலகை மட்டுமல்ல அதில் உள்ள அரத்தமும் அழியத்தொடங்கிவிட்டது. செத்துக்கிடக்கும் குதிரிகளின் என்புகளில் வழியும் தசையில் மக்களின் இருப்பும் வழிந்து அழிந்தபடியிருக்கின்றது.

நம்மிடம் காலநிலை பற்றிய கரிசனையோ அல்லது காலநிலையை கையாள்வது தொடர்பான முகாமை நிலைகளோ மிக மோசமான நிலையிலேயே இருக்கின்றது, நிலவும் வெப்பத்தையும் சரி மழைவீழ்ச்சி நிலப்பயன்பாடு  காடழிப்பு காட்டு உற்பத்தி என்பவை தொடர்பில் அரசும் சரி மக்களும் சரி விழிப்புணர்வற்றே இருக்கின்றோம் இன்று குதிரைகளும்  நாளை மனிதர்களும் இதற்கு பலியாகப்போகின்றோம், காலநிலை முகாமைத்துவமும் இயற்கை சமநிலையும் பேணப்பட்டால் எத்தகைய வறட்சியையும் சமாளிக்க கூடிய நிலமும் தேசமும் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் அக்கறையீனமும் விழிப்புணர்வற்ற மனிதர்களாகவும் இருக்கும் போது தொடர்ச்சியாக குதிரைகளுடன் சேர்ந்து நம்மையும் பலிகொடுக்க வேண்டித்தான் இருக்கப்போகின்றோம். மரபுரிமைகளில் இயற்கை மரபுரிமைகளையும் சரி ஏனைய மரபுரிமைகளையும் சரி காலநிலையில் இருந்து பாதுகாக்க மேலைத்தேச நாடுகளில் பொருத்தமான அமைப்புக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் நம்முடைய தேசங்கள் காலநிலை ,பற்றிய உறுத்துணர்வற்றே இருக்கின்றோம்.

19601198_945676048906887_57816087324614319702370_945675805573578_85045172089685019702152_945676068906885_761017733426299

நெருந்தீவு என்னும் கடல் நடுவே இருக்கும் தீவில் மக்களுக்கு ஒரு தனித்துவமான வாழ்வு இருக்கின்றது என்றால், அவர்கள் அதனை வாழ்வதற்குரிய உரித்தை உடையவர்கள் என்றால் அதே உரித்தும் வாழ்வுத்தேவையும் அங்குள்ள குதிரைமுதலான உயிரினங்களுக்கு இயற்கை நிலையிலேயே கிடைக்கின்றது. ஆனால் அவற்றை அழிந்து போக விடுதல் என்பது மக்களின்  வாழ்வையும் சேர்த்து காவுகொள்ளும் என்ற போது அவற்றை பாதுக்காக வேண்டிய கடமை சகல மக்களுக்கும் இருக்கின்றது. நெடுந்தீவுக்கும் அதன் மக்களும்மும் ஒரு பெருத்த வாழ்வுத்தொடர்ச்சியின் ஆன்மா இருக்கின்றது என்றால் அது குதிரிகளிடம் தான் இருக்கும்.

-யதார்த்தன்

உசாத்துணைகள்

01.குணபாலன்.கா, தீவகம்  வாழ்வும் வளமும்,1994.

02.சிவசாமி.வி ,தீவகம்  ஒரு வரலாற்று நோக்கு.

03.ஊர்காவற்றுறை பிரதேசசபை உள்ளூராட்சி வார சிறப்பு மலர், 2003.

04. பத்மநாதன்.சி, இலங்கைத்தமிழர் தேசவழமைகளும் சமூக வழமைகளும்.

05.பத்மநாதன்.சி,இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள்.

  1. சிவப்பிரகாசம்.மு.சு, விஸ்னுபுத்திர வெடியரசன் வரலாறு, 1988.
  2. சிற்றம்பலம்.சி.க, யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு, 1993.

8.புஸ்பரட்ணம்.ப, தொல்லியல்நோக்கில் தமிழர் பண்பாடு,2003.

9.இந்திரபாலா.கா ,இலங்கையில் தமிழர், 2000.

10.இந்திரபாலா.கா,யாழ்ப்பாணத்து கல்வெட்டுக்கள், சிந்தனை வெளியீடு,1969.

  1. சசிதா குமாரதேவன், வட இலங்கை மரபுரிமைச்சின்னங்களும் அவற்றின் பாதுகாப்பும்.

12.சு. சிவநாயக மூர்த்தி , நெடுந்தீவு மக்களும் வரலாறும்.2013

  1. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE
  2. http://www.sustainabletable.org/1383/heritage-animal-breeds-and-heirloom-crop-varieties
  3. https://livestockconservancy.org/index.php/heritage

 

http://yatharthan.com/2017/07/16/இறந்து-தசை-வடியும்-நெடுந/

நெடுந்தீவின் துயரத்தை பதிவுசெய்த இந்த ஆக்கம் வேதனைமிக்கதாக உள்ளது.. மச்சுபிச்சுவில் இன்காக்களின் வரலாறு லாமாக்கள் ஊடாக தொடர்கின்றது ஆனால் இறந்து கிடக்கும் இக்குதிரைகளைப் பாரக்கும் போது நெடுந்தீவின் ஆன்மாவும் வரலாறும் சேடமிழுக்கின்றதை உணரமுடிகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.