Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா விமர்சனம்: தியா

Featured Replies

சினிமா விமர்சனம்: தியா

தியா
நடிகர்கள் நாக ஷௌர்யா, சாய் பல்லவி, நிழல்கள் ரவி, ஆர்.ஜே. பாலாஜி, ரேகா, வெரோனிகா, ஆர்.ஜே. பாலாஜி, குமரவேல்
   
இசை சி.எஸ். சாம்
   
இயக்கம் விஜய்.
   

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பாக `அன்பான் சின்ஸ்` (Unborn Sins) என்றொரு ஹாலிவுட் படம் வெளியானது. கர்ப்பமாக இருக்கும் பெண், அந்தக் குழந்தை வேண்டாமென கருக்கலைப்புச் செய்துவிடுகிறார்; இறந்துபோன அந்தக் கரு பேயாக மாறி தன் மரணத்திற்குக் காரணமானவர்களைப் பழிவாங்கும் என்பதுதான் அந்தப் படத்தின் கதை. கிட்டத்தட்ட அதுதான் தியாவின் கதை.

கிருஷ்ணாவும் (நாக ஷௌரியா) துளசியும் (சாய் பல்லவி) கல்லூரி நாட்களில் காதலிக்கின்றனர். துளசி கர்ப்பமடைகிறாள்.

இருவருக்கும் கல்யாணம் செய்துவைக்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டாலும் துளசி படித்து முடிக்கும்வரை குழந்தை வேண்டாம் என்றுகூறி, அந்தக் கர்ப்பத்தை கலைக்க வலியுறுத்துகின்றனர். கரு கலைக்கப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கிருஷ்ணாவும் துளசியும் திருமணம் செய்துகொண்ட பிறகு, அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவராக விபரீதமான முறையில் சாகிறார்கள்.

துளசிக்குக் கருக்கலைப்புச் செய்த மருத்துவரும் சாகிறார். பிறகுதான், கருவிலேயே கொல்லப்பட்ட குழந்தை பழிவாங்குகிறது என்பது துளசிக்குத் தெரிகிறது.

அந்தக் குழந்தை, முடிவில் தன் தந்தையையே பழிவாங்க நினைக்கிறது. துளசியால் தன் கருவிடமிருந்து கணவனைக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் மீதிக் கதை.

தியா

சமீபகாலமாக தமிழ்த் திரைப்படங்களில் வரும் பேய்கள், நாம் திரையில் பார்த்துப் பழகிய பேய்களைப் போல அல்லாமல், பல விசித்திரங்களோடு தோன்ற ஆரம்பித்திருக்கின்றன.

கடந்த வாரம் வெளியான மெர்க்குரியில், உயிரோடு இருக்கும்போது பார்வையற்றவராக இருந்த ஒருவர், விபத்தில் இறந்து பேயாக மாறிய பிறகும் பார்வையில்லாமலேயே திரிந்து, பழிவாங்கினார்.

இந்தப் படத்தில் கருவான சில வாரங்களிலேயே கலைக்கப்பட்ட கரு, போஷாக்கான, அழகான குழந்தை பேயாக வளர்ந்துவந்து பழிவாங்குகிறது. கொஞ்சம்விட்டால் பள்ளிக்கூடத்திலேயே சேர்த்திருப்பார்கள் போலிருக்கிறது.

தியா

படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே கொலைகள் நடக்க ஆரம்பித்துவிடுகின்றன என்பதால் துவக்கத்தில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது படம்.

பிரதானமான கதையிலிருந்து பாடல், சண்டை என்று விலகாமல் நேர்கோட்டில் திரைக்கதை செல்வதும் 100 நிமிடங்களிலேயே படம் முடிந்துவிடுவதும் படத்தின் பலம்.

ஆனால், படத்தின் பிற அம்சங்கள் எல்லாமே ஏமாற்றமளிக்கின்றன. படத்தில் வரும் பாத்திரங்கள் இடையில் எந்தவிதமான உணர்வுபூர்வமான பிணைப்பும் இல்லை.

எல்லாப் பாத்திரங்களுமே துண்டுதுண்டாக இருப்பதால், படத்தில் யார் பேயால் கொல்லப்பட்டாலும் யாரும் வருத்தப்படுவதில்லை.

அதனால் படம் பார்ப்பவர்களுக்கும் அந்த மரணம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. பேய்ப் படம் என்றால் ஏதாவது ஒரு காட்சியிலாவது திடுக்கிட வைக்க வேண்டாமா? அதுவும் இல்லை.

தியா

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து, முதல் படத்திலேயே பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய சாய் பல்லவி இந்தப் படத்தில் சில காட்சிகளைத் தவிர, பெரும் ஏமாற்றமளிக்கிறார்.

நாயகனாக வரும் நாக ஷௌரியா, எப்போதும் குழப்பத்தில் இருப்பதைப்போன்ற முகத்துடனேயே இருக்கிறார். மற்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

சிரிப்பு போலீஸாக வரும் ஆர்.ஜே. பாலாஜியும் காவலராக வரும் குமரவேலும் சிரிக்கவைக்கவில்லையென்றாலும் நடிப்பில் மோசமில்லை.

ஆனால், இவையெல்லாவற்றையும்விட படத்தில் வேறொரு பிரச்சனை இருக்கிறது. கருக் கலைப்புக்கு எதிராக எந்தத் தர்க்கமும் இல்லாத ஒரு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது இந்தப் படம்.

படத்தின் முடிவில் வரும் ஸ்லைடுகளில், 'இந்தியாவில் நடக்கும் கருக்கலைப்புகளில் 56 சதவீதம் பாதுகாப்பற்றவை', 'பிறக்கும் குழந்தை இந்திரா காந்தியாகவோ, அன்னை தெரசாவாகவோ இருக்கலாம்' என்றெல்லாம் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு முன்பே, 19 வயதில் கர்ப்பமடையும் கதாநாயகிக்கும் படத்தின் முடிவில் சொல்லப்படும் இந்தச் செய்திகளுக்கும் என்ன சம்பந்தம்?

தியா

உலகம் முழுவதும் பெண்ணிய இயக்கங்கள் நடத்திய போராட்டங்களே கருக்கலைப்புகளை சட்டபூர்வமாக்கின. இன்னும் பல நாடுகளில் மதவாதிகள் கருக்கலைப்புகளை அனுமதிப்பதில்லை.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இயக்குனர் விஜய் இந்தப் படத்தில் கருக்கலைப்புக்கு எதிராக முன்வைக்கும் கருத்துகள் பிரச்சனைக்குரியவை.

https://www.bbc.com/tamil/arts-and-culture-43929022

  • தொடங்கியவர்

சாய் பல்லவியின் முதல் தமிழ்ப்படம்... பிரேமம் கொள்ளவைக்கிறாரா..!? - ‘தியா’ விமர்சனம்

 
 

தமிழ் சினிமாவில் பால்வாடி பாப்பாக்கள் ஆரம்பித்து பாட்டி, தாத்தாக்கள் வரை எல்லோரையும் பேயாகக் காண்பித்தாயிற்று. இனி வேறு யாரை பேயாக காட்டலாமென பேய்த்தனமாக யோசித்து வெறித்தனமான கதையோடு களமிறங்கியிருக்கிறார்கள் 'தியா' குழுவினர்.  அதாவது, ஒரு கலைக்கபட்ட கரு பேயாகி, வளர்ந்து, ஆனா ஆவன்னா படித்து, வெள்ளை கவுன் போட்டு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வந்து, தன்னை கலைக்கச் சொன்னவர்களை கொலை செய்கிறது. இதுதான் 'தியா' படத்தின் ஒரு வரிக்கதை. பேயின் லிஸ்டில் பேயின் அப்பாவும் இருக்க, அந்தப் பேய் அப்பாவையும் கொலை செய்ததா, அம்மா சாய்பல்லவி என்ன செய்கிறார் போன்ற கேள்விகளுக்கான பதில்தான் மீதிக்கதை.

தியா

நாயகன் கிருஷ்ணாவாக, ஆந்திர தேசத்து ஹீரோ நாக சௌர்யா நடித்திருக்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார். என்ன,  படத்தில் அவருக்கு சிவில் இன்ஜினியர் கதாபாத்திரம்! 'சந்திரமுகி' பிரபு, 'பொம்மாயி' சுதீப் என பேய் படத்தில் வரும் ஹீரோக்கள் பெரும்பாலும் சிவில் இன்ஜினியராகவே இருப்பதுதான் என்ன டிசைன் என தெரியவில்லை. நாயகி துளசியாக சாய்பல்லவி. தமிழ்சினிமாவுக்கு அறிமுக நடிகையாக இப்படம் நல்லதொர் ஆரம்பம். சின்ன சின்ன முகபாவனைகள் மூலம் அவ்வளவு எளிதாக உணர்ச்சிகளைக் கடத்துகிறார். சிரிக்க, அழ, கோவப்பட அத்தனைக்கும் படத்தில் இடமிருக்கிறது, அட்டகாசமாக செய்திருக்கிறார். கிட்டதட்ட ஒட்டுமொத்த படத்தையும் தனி ஆளாக தூக்கி சுமந்திருக்கிறார் என்றுகூட சொல்லலாம்.   வெல்கம் டு தமிழ் சினிமா சாய் பல்லவி! இந்த எனர்ஜியை மட்டும் என்னைக்கும் விட்றாதீங்க.

 ஆர்.ஜே.பாலாஜி காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அவரை அந்த காக்கி காஸ்ட்யூமில் பார்த்தாலே சிரிப்பு வருகிறது. மேலும், கிடைத்த கேப்பில் எல்லாம் கவுன்டர்களை போட்டு மென்மேலும் சிரிக்க வைக்கிறார். 'தெறி', 'வேதாளம்', 'விஸ்வரூபம்' வரிசையில் ஆர்.ஜே.பாலாஜியின் டிரான்ஸ்ஃபர்மேஷனும் பேசப்படும். குமரவேல், நிழல்கள் ரவி, சந்தானபாரதி, ரேகா, வெரோனிகா அரோரா, படத்தொகுப்பாளர் ஆண்டனி, ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா என பலரும் படத்தில் தலைக்காட்டியிருக்கிறார்கள்.

இதுதான் படத்தின் கதை, கதை இப்படித்தான் நகரப்போகிறது, நகரும் கதை இப்படித்தான் முடியப்போகிறது என படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திலேயே சொல்லிவிடலாம். இதுதான் 'தியா'வின் மிகப்பெரிய மைனஸ். சஸ்பென்ஸ், சர்ப்ரைஸ், ட்விஸ்ட், திகீர், திருப்புமுனைகள் என எல்லாவற்றுக்கும் கதையில் இடம் இருக்கிறது. ஆனால், அப்படிபட்ட சமாச்சாரங்களே படத்தில் இருக்கக்கூடாது என்பதில் மும்முரமாக அமர்ந்து திரைக்கதை எழுதியதுபோல் தெரிகிறது. பாத்ரூம் குழாயை திறந்துவிடுவது, வெள்ளை டிரஸ் அணிவது என தமிழ் சினிமாவின் பேய்களுக்கென்றே உண்டான சில குணாதிசயங்கள் இந்த பேய்க்கும் உண்டு. ஆனால், ஆண்டுகள் செல்ல செல்ல பேய்க்கும் வயசாகும் என்பதெல்லாம் புது புரளியாக இருக்கிறது. அதிலும், கலைக்கப்பட்ட கரு வளர்ந்து பழிவாங்குகிறது எனும் கதையின் கருவே தலைசுற்ற வைக்கிறது. எந்த ஃப்ரேமிலும் தியாவாக வரும் சிறுமியின் நிழலை காட்டாததது சிறப்பு.

தியா

நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு வேற லெவல். ஒவ்வொரு ஃப்ரேமும் கோணமும் டெக்னிக்கலாக படத்தின் தரத்தை கூட்டியிருக்கிறது. கார் விபத்து நடக்கும் காட்சியில் நீரவ்வின் கேமராவும் சீ.ஜியும் இணைந்து மிரட்டியிருக்கிறது. சாம்.சிஎஸ்ஸின் பின்னணி இசை படத்தோடு ஒன்றி பயணித்திருக்கிறது. ஆண்டனியின் படத்தொகுப்பில் குறையொன்றுமில்லை. நன்றாக நடித்துமிருக்கிறார் மனிதர். விஜய் - அஜயன் பாலா கூட்டணியில் வசனங்கள் நிறைவு. 

 

சாதாரண 'பேய் பழிவாங்கல் கதை'தான், திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்து, காட்சிகளையும் புதுமையாக எழுதியிருந்தால் 'தியா' நிச்சயம் ரசிகர்களால் கொண்டாடபட்டிருப்பாள். 

https://cinema.vikatan.com/movie-review/123528-diya-movie-review.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.