Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுவடுகள்

Featured Replies

சுவடுகள்

 

 
suvadukal

டேய் சுந்தர் ஓடாதே.. .இங்க வா'' 
பக்கத்து கம்பார்ட்மெண்டில் இருந்து, குரு இருந்த கம்பார்ட்மென்டுக்கு  ஓடி வந்த சிறுவன். பின்னால் ஓடி வந்தவள் லதா மாதிரி இருந்தது. ஒன்பது பத்து வகுப்புகளில் உடன் படித்தவள். மூக்குத்தி மினுங்களோடு அத்தனை மாற்றம் இல்லாமல் அதே சிரிக்கும் முகம். 
கைக்கெட்டும் தூரத்தில் ஓடியவனைப் பிடித்து நிறுத்தி அவளிடம் ஒப்படைத்தபடியே, ""நீங்க... நீ... லதாதானே...?'' என்றான் குரு. 
""ஆமா..நீங்க...?'' 
""ஓ... டென்த் பி செக்ஷன்...''
""குரு.. குருமூர்த்தியா... சுத்தமா அடையாளம் தெரியாம இப்படி குண்டு போட்டிருக்கீங்க...'' என்றவாறு தாவத் தயாராய் இருந்த மகனை இழுத்துப் பிடித்தபடி எதிரில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.   
""என்ன பண்றீங்க இப்போ... எங்களை மாதிரியா... நீங்கல்லாம் நல்லா படிச்ச ஆளுங்களாச்சே... கண்டிப்பா நல்ல வேலையிலதான் இருப்பீங்க...''
""என்ஜினீயரா இருக்கேன்...''
""எங்க...கோயம்புத்தூர்லயா...''
""வேலை சென்னையில்தான்...இங்கே ஒரு ப்ராஜெக்ட் வேலையா மூணு மாசம் இருந்துட்டு திரும்பறேன்...''
""லதா இப்போ எங்க?''
""இவன் அப்பாவுக்கு வேலை கோயம்புத்தூர்லதான்... ஈபி ஆபீஸ்ல... அவரோட தங்கைக்கு அடுத்தவாரம்... சென்னையில் கல்யாணம்...''
குரு அடுத்த கம்பார்ட்மெண்டை எட்டிப் பார்த்தான். 
""அவருக்கு லீவ் கிடைக்கல...நாலு நாள் கழிச்சிதான் வரார்....  நாங்க முன்னாடியே போறம்.'' 

 

இத்தனை வருடங்களுக்குப் பிறகு லதாவைப் பார்த்ததைவிட அவள் கணவன் பெயர் என்ன என்பதுதான் குருவின் படபடப்பை அதிகரித்தது.  
அது காதலா தெரியாது. அதுதான் காதலா என்றும் தெரியாது. வகுப்பில் அநேக பையன்கள் கை விரல்களில் ஆங்கில எழுத்துகள் கொண்ட பிளாஸ்டிக் மோதிரங்கள் அணிந்து உலாவிக் கொண்டிருந்தனர். 
எல்லாருடைய  கைகளிலும் இரண்டு மோதிரங்கள் இருந்தன. ஒன்றில் அவன் பெயரின்  முதல் எழுத்து. இரண்டாவதில் அவனுக்குப் பிடித்த பெண்ணின் முதல் எழுத்தாய் இருக்கும். சேர்த்துப் படித்தால் பெரும்பாலும் அவன் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்கள் போலவே இருக்கும்.  உதாரணமாக, கண்ணன் என்பவன் அணிந்திருந்த மோதிரங்களில் "ஓ', "அ' என்று இரண்டு எழுத்துக்கள் இருக்கும். கேட்டால் தன் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்கள் என்பான். ஆனால் அந்த "அ' அமுதாவோ ஆனந்தியோ என்பது அவன் நெருங்கிய நண்பர்கள் வட்டத்திற்கு மட்டும் தெரிந்திருக்கும். அப்படி தனக்குப் பிடித்த பெயரை பொருத்தமாய் தேர்ந்து கொள்வதில் ஒரு சுவாரசியமான விளையாட்டு.
பெரும்பாலும் அந்த மாணவிகளுக்கு இது தெரியாமல் இருக்கும்.  
எட்டாவது வகுப்புக்கு அது கொஞ்சம் அதிகம்தான்.  
அவ்வளவும் விளையாட்டாய் இருந்தவரை எந்த பிரச்னையும் இல்லை. 
விளையாட்டு  ஒரு நாள் வினையானது. 
எப்படி என் ஆள் பெயரை நீ மோதிரமாய் போட்டுக் கொள்ளலாம் என்பதில் ஆரம்பித்தது.  பையன்கள் மத்தியில் இருந்த பிரச்னை, கணக்கு வாத்தியார் கோமதி பார்வைக்கு போனதும்  பெரிய அளவுக்குப் போனது. 
சம்பந்தப்பட்ட இருவரும் ஆபீஸ் ரூமுக்கு அழைக்கப்பட்டு, கொடுக்கப்பட்ட டோஸில், வெளியே வரும்போது இரண்டு பேரின் கண்களும் கலங்கி இருந்தன. கை விரல்கள் காலியாக இருந்தன. 
அதற்கு பிறகு எல்லோரிடமும் மோதிரங்கள் இருந்த சுவடே தெரியாமல் போனது.
அந்த மோதிர விளையாட்டு எல்லாம் தெரிந்திருந்தாலும், குருமூர்த்தியால் இன்றைக்கும் மறக்க முடியாதது, பத்தாம் வகுப்பில் உடன்படித்த அழகேசனின் எழுத்து விளையாட்டுதான். 
வெறும் எழுத்து விளையாட்டா அது? 
""இன்னும் இந்த புக் படிக்கற பழக்கம் இருக்கா?'' என்றாள் லதா குருவின் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்தபடி. 
பத்தாவது படிக்கும் போதே நாவல் சிறுகதை என்று படிப்பான் குரு. எப்போதும் ஏதாவது ஒரு புத்தகம் பைக்குள் இருக்கும். பேருந்தில் பள்ளிக்கு போய்த் திரும்பும்போது கதைப்புத்தகங்களோடு பயணித்தவன் அவர்கள் வகுப்பில் அவன் மட்டுமே. அவன் அண்ணன் நூலகத்தில் இருந்து கொண்டு வரும் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்ததில் படிந்த பழக்கம். 
அவர்கள் படித்தது  கோ எஜுகேஷன் பள்ளி. பெண் பிள்ளைகளிடம் பேச பெரும் கூச்சம் கொண்டவனாக இருந்தான் குரு. 
லதா முதலில் குருவிடம் பேசியது கூட ஒரு புத்தகத்தின் பொருட்டு தான். 
ஒருநாள் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததும் அவசரம் அவசரமாக படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை பைக்குள் நுழைத்தபடி பேருந்தை விட்டு இறங்கினான் குரு. பள்ளியை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தவனை கூப்பிட்டு கீழே தவறி விழுந்ததென்று அவன் புத்தகத்தை நீட்டினாள் லதா. அப்போதைக்கு கொஞ்சமாய் சிரித்து நன்றி சொன்ன குரு அதற்கு பின்னால் பல நேரங்களில் எதிர்ப்பட்ட லதாவிடம் அதே அளவே புன்னகைத்துப் போவான்.
அப்படி ஒரு புன்னகைப் பரிமாற்றம் நடந்த ஒரு பொழுதில் பார்த்த அழகேசன் (அவனும் லதாவும் ஒரே செக்ஷன்) குருவிடம் அவன் காதலை சொல்ல ஆரம்பித்தான். 
""மாமா... உனக்குத் தெரியுமில்ல... நானும் லதாவும் காதலிக்கிறது?''
நிச்சயமாய் குருமூர்த்தி அதுபற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. எதுவும் சொல்லத்  தோன்றாமல் அழகேசனையே பார்த்துக் கொண்டிருந்தான் குரு.
இடது கையில் முழுக்கை சட்டையின் முன் பகுதியை உயர்த்தி குருவிடம் காட்டினான் அழகேசன். மணிக்கட்டின் மேல் "ஏ எல்' என்று ஆங்கில எழுத்துக்கள் ஏதோ ஒரு கம்பி கொண்டு எழுதப்பட்டு இருந்தது. 
""இன்னா இது... ஏதோ சுடுகம்பி வச்சு எழுதினாப்பில இருக்கு?'' 
""நேத்து லதாவோட மாமன் விஷயம் தெரிஞ்சி அவளை போட்டு அடிச்சிருக்கான்...''
""அதுக்கு...?''
""அவளுக்கு எப்படி வலிச்சிருக்கும்..?'' என்று கன்னத்தை தடவியபடி, மேலே பார்த்தபடி சொன்னான் அழகேசன்.
 படிக்கும்போது என்ன காதல், அதிலும் இதெல்லாம் என்ன என்று என்னென்னவோ தோன்றிய குருவுக்கு, கூடவே எட்டாம் வகுப்பில் நடந்த மோதிர எழுத்து சம்பவங்கள் நினைவில் வந்து போயின. அதெல்லாம் விரல்களில் மோதிரங்களை அணிவதும் பிரச்னை என்றதும் சுலபமாக எந்த சுவடும் இல்லாமல் கழட்டிப் போடப்பட்ட சம்பவங்கள். என்னதான் முற்றிப்போன காதல் என்றாலும், இப்படியா கையில் சுடுகம்பி கொண்டு எழுதத் தோணும்? இதென்ன என்று கேட்டவருக்கு என்ன சொல்லி இருப்பான். குறிப்பாய் அவன் வீட்டில். தன் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்கள் "ஏ எல்' என்று கதை சொல்லி இருந்தாலும் ஏன் சூடு கம்பி கொண்டு எழுதினாய் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லி இருப்பான். சரி, இத்தனையும் எதற்கு நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான்? 
 குருமூர்த்தியின் கேள்விக்கு பதில் அடுத்த நான்காவது நாளே கிடைத்தது. 
 மதியம் விளையாட்டுப் பீரியட். வழக்கம் போல காரிடார் தூண் ஒன்றில் சாய்ந்தபடி மற்றவர்கள் விளையாடும் கிரிக்கெட்டை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த குருவை நோக்கி வந்தான் அழகேசன்.
""ஒரு உதவி பண்ணணும் மாமா...'' 
நாம் என்ன உதவி இவனுக்கு செய்ய முடியும் என்ற பார்வையோடு பார்த்தான் குரு. 
கூடவே லதாவின் அடித்துத் துவைக்கும் மாமா பற்றி அவன் சொன்னது நினைவு வந்தது.  
ஏதோ பெரிய பிரச்னையில் மாட்டிவிடப் போகிறான் என்று சற்று நடுக்கம் கண்ட குருவின் இடது  தோள் மேல் கைவைத்து, ""அடுத்த வாரம் அரையாண்டு பரீட்சை ஆரம்பிக்குது இல்ல'' என்றான்.
அப்பாடா வேற விஷயம் என்று நினைத்தபடி ""ஆமாம்.. படிச்சாச்சா'' என்றான் குரு.
""என்ன விடு மாமு... லதா வீட்ல...எங்க இந்த விஷயத்தால் அவளுக்கு நிறைய பிரச்னை... பாவம்... அவளால சரியாய் படிக்க முடியல...'' 
" என்னடா விஷயம் மறுபடி அங்கேயே வருது' என்று பார்த்த குருவிடம், ""நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?'' என்றான் அழகேசன்.
""நான் என்ன...?'' 
""முடியும் மாமா...லதா கிட்ட சொல்லி உன் பக்கத்துல உட்காரச் சொல்றேன்... அவளுக்குத் தெரியற மாதிரி உன் பேப்பர் பேடை கொஞ்சம் சாய்ச்சு வச்சு எழுதினாப் போறும்''
அது மாதிரியேதான் அந்த அரையாண்டுப் பரீட்சையின் எல்லா தாள்களையும், உள்ளுக்குள் ஒரு பதட்டம் ஓடிக்கொண்டே எழுதினான் குரு. எந்த அளவுக்கு லதாவால் அவனைப் பார்த்து எழுத முடிந்தது என்று தெரியவில்லை. குருவுக்கு இருந்த பதட்டத்தில் அவள் பக்கமே திரும்பவில்லை. 
தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டபோது, சொல்லிக்கொள்ளும்படியாகவே மதிப்பெண்கள் பெற்றிருந்தாள் லதா. 
அதெல்லாம் இவள் நினைவில் இப்போது இருக்குமா? இத்தனை வருடங்களில் மறந்திருக்கலாம். ஆனால். இத்தனைக்கும் காரணமான அழகேசனை?

 

""என்ன பதிலே காணோம்? நினைவு எங்கேயோ இருக்கா... மாறி இருக்கு?''
""நம்ம பள்ளிக்கூட டேஸ் எல்லாம் எவ்ளோ நல்லா இருந்துச்சு இல்ல... லதாவுக்கு கூட படிச்ச கிளாஸ்மேட்ஸ் யார் கூடவாவது டச் இருக்கா?''
""சுத்தமா இல்ல...உங்களுக்கு?'' 
""நம்ம பாஸ்கர், பாபு ஞாபகம் இருக்கா? ரெண்டு பேரோட அப்பப்ப போன்ல பேசறது உண்டு...'' 
""என்ன பண்றாங்க ரெண்டு பேரும்...''
""பாஸ்கர் எல்.ஐ.சி. ஏஜெண்டா இருக்கான். பாபு பார்மசி வச்சிருக்கான்''
சுந்தருக்கு அவர்கள் பேச்சு போரடித்தது. ஜன்னல் ஓரம் போய் உட்கார்ந்து கொண்டு, வரிசை வரிசையாய்ப் போகும் மரங்களையும் மின் கம்பங்களையும் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.
""லதாகிட்ட ஒன்னு கேட்கலாமான்னு தெரியல...'' 
""என்ன கேட்கப் போறீங்கன்னு தெரியும்... கேளுங்க.''
""சுந்தரோட அப்பா பேரு''
""ரவிச்சந்திரன்''
""அப்ப.. அழகு?.. அந்த காதல்...? பத்தாவதுக்கு அப்புறம் நான் பாலிடெக்னிக் படிக்க போனதுல என்ன நடந்ததுன்னு தெரியாது.. என்ன நடந்தது?''
""எப்படா எக்ஸôம்ஸ் முடியும்னு காத்திருந்தமாதிரி, அடிச்சி புடிச்சி அடுத்த ஆறேழு மாசத்துல இவருக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. நம்ப முடியுதா?  நீங்க  நம்ம பிரெண்ட்ஸ் எல்லாம் படிச்சிட்டிருந்தபோது எனக்கு கல்யாணம் முடிஞ்சாச்சு. கல்யாணம் ஆன கையோட கோயம்புத்தூர் வந்துட்டோம்''
""அழகு பத்தி ஏதாவது தகவல் உண்டா?''
""எனக்கு எப்படித் தெரியும்? அதுவும் கோயம்புத்தூர் வந்து யாரு சொல்லப் போறா?''
ஜன்னல் ஓர வேடிக்கை போரடித்ததில் எழுந்து வந்து லதாவின் பக்கத்தில் உட்கார்ந்தபடி, ""இது யாரும்மா?'' என்று அவர்கள் பேச்சுக்கு நடுவே புகுந்தான் குட்டி பையன்.  
""இதுவா...இப்போ உன் கிளாஸ்மேட் மீனா இருக்கால்ல...அதுமாதிரி இவர் என்னோட கிளாஸ்மேட்''
""இந்த அங்கிளோட பேசிக்கிட்டிரு, நான் பப்பு ரெடி பண்றேன்'' என்று சொல்லிவிட்டு அவள் கம்பார்ட்மென்டுக்கு போனாள் லதா.
சுந்தரை அழைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்ட குரு, ""உன் பேர் என்ன?'' என்றான் அவன் கன்னத்தை தட்டியபடி. 
""மை நேம் இஸ் சுந்தரம்'' 
""நைஸ் நேம்... விச் ஸ்டாண்டார்ட் யூ ஆர் ஸ்டடியிங்?''
""யூ கே ஜி'' 
""நல்லாப் படிப்பியா...'' 
""ஓ..தோ வர்றேன்'' என்று பக்கத்து கம்பார்ட்மென்டுக்கு ஓடிப்போய் அவன் ஸ்கூல் பேக்கை எடுத்து வந்தான். 
உள்ளே கைவிட்டு ஒரு புத்தகத்தை எடுத்து அவன் வரைந்த படங்கள் என்று ஒவ்வொன்றாய் குருவிடம் காட்டினான். 
ஒவ்வொரு படத்திற்கும் குருவிடம் இருந்து ஒரு பெரிய "ஆகா... வெரிகுட்...' அவனுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. 
உள்ளே கைவிட்டு இன்னொரு புத்தகம் எடுத்தான். 
""அட.. இன்னொன்னா... எங்க காட்டு'' குருவின் குதூகலம் சுந்தரத்தையும் பற்றிக்கொள்ள, புத்தகத்தின் எல்லா பக்கங்களையும் காட்டினான் சுந்தரம்.
கொஞ்ச நேரம் கழித்து, ""சுந்தரம் வாடா சாப்பிடலாம்'' என்று அழைத்தாள் லதா. 
இருக்கையில் சிதறி இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து பைக்குள் திணிக்க ஆரம்பித்தான் சுந்தரம். அவனுக்கு உதவ குருமூர்த்தி எடுத்துத் தந்த ஒரு புத்தகத்தின் மீதிருந்த லேபிளை அப்போதுதான் பார்த்தான்.
"அழகுசுந்தரம்' என்று அதில் எழுதியிருந்தது.

 

 

http://www.dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே தலை சுத்தலாய் இருக்கு..... காதலர்களின் பெயர்கள் எல்லாம் இப்படித்தான் சுத்துது போல.....!  ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.