Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

மாணிக்கவாசகரின் 'ஐயா'-வும் கம்பனின் 'ஐயோ'- வும்

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

படைப்பாளியான கவிஞன், தன் பாடுபொருளுக்குச் சொற்கள் கிடைக்கப் போதாமையால் கையறு நிலை அடைந்து தவிக்கும்போது பயன்படுத்துவது 'ஐயோ!' என்னும் சொல்.

மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டான மாணிக்கவாசகரின்  காலத்தில் இறைவனைப் பாடும்போது,  மங்கலமான சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்னும் கவிதை மரபு இருந்தது. எனவே, திருவாசகம் - சிவபுராணத்தில் "உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள் ஐயோ! எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!" என்று எழுதவேண்டிய இடத்தில் 'ஐயோ' என்பது அமங்கலமாகக் கருதப்பட்டதால், அச்சொல்லுக்குப் பதிலாக 'ஐயா' என்ற சொல்லை இட்டிருப்பார்.  மணிவாசகரின் திருவாசகத்தில் 'ஐயா' என்று வந்தது என்பதை பல திருவாசக உரையாசிரியர்கள் பலரும் 'ஐயோ' என்ற சொல்லே மங்கல வழக்குக் கருதி 'ஐயா' என்று வந்திருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை.

 மாணிக்கவாசகர் பெருமான் தன் இறையனுபவத்தைச் சாறாகப் பிழிந்து எலும்புருக்கும் தேனாகத் தந்த திருவாசகத்தின் பாயிரமான சிவபுராணத்தில், "இறைவனின் ஆழத்தையும், அகலத்தையும் சொற்களால் காட்சிப்படுத்த முனைந்த அனைத்து வேதங்களும் கையறு நிலையடைந்து, காட்சிப்படுத்த இயலாமல் தோல்வியைத் தழுவின என்கிறார்;  "நுட்பத்திலும் நுட்பமான தன்மையனான இறைவனைக் காட்சிப்படுத்த வேதங்கள் சொற் பயன்பாட்டின் நீள-அகலங்களில் பயணித்து, காட்சிப்படுத்த இயலாமல் சோர்வுற்று, 'ஐயோ! பெருமானே! நினது நுண்ணிய தன்மையை எம்மால் காட்சிப்படுத்த இயலவில்லையே!' என, கழிவிரக்கம் கொண்டு, தோல்வியை ஒப்புக்கொண்டன என்பதைக் குறிக்கவே

 "வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!" - திருவாசகம் :சிவபுராணம்
 என்று குறித்திருப்பார் மணிவாசகப்பெருமான்.

இவ்வரிக்கு உரையெழுதிய பலரும் வேதங்கள் - மறைகள்,  ஐயா என - ஐயனே என்று துதிக்க,  ஓங்கி - உயர்ந்து,  ஆழ்ந்து அகன்ற - ஆழ்ந்து பரந்த,  நுண்ணியனே - நுண்பொருளானவனே என்றே உரை எழுதியுள்ளனர்.

 எதனால் இறைவனது பெருமையை வேதங்களாலும் அறிய முடியாது எனத் திருவாசகம் சொல்கின்றது  என்று சற்று விரிவாக நோக்குவோம்.

 "வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்தும், அகன்றும்,  பற்பல கோணங்களில் ஆராய்ந்து நோக்கியும் இறைவனின் பெருமையைக் கூறச் சொற்கள் போதாமையால் கையறு நிலையை அடைந்தன; அத்தகு பெரிதினும் பெரிய இறைவனோ  மிகமிகச் சிறிய நுண்ணியவற்றிலும் நுட்பமாக நிறைந்துள்ளான். என்ன விந்தை இது!" என்று வியந்து இவ்வரிகளில் சொல்கிறார் மணிவாசகர்.

 "அல்ல! ஈதல்ல! ஈது!” என மறைகளும் அன்மைச்
சொல்லினால் துதித்து இளைக்கும் இச் சுந்தரன்"

 என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணத்தில், "இப்பொருள் இறைவனா?" என்று கேட்டால், "ஆம்" என்னும் வேதம், "இப்பொருளே இறைவனா?" என்று கேட்டால், "அல்ல! ஈதல்ல!! ஈது!!!" என்று பலவாறு மென்மேலும் கூறிக்கொண்டே செல்லும் ஆரிய மறைகளாலும் இறைவனைக் காண முடியாத தன்மையைக் கூறுகிறார். வேதம் அறிவு நூல்; ஆகையால்,  அறிவால் இறைவனைக் காண முடியாது;  அவன் அருளால்தான் காணமுடியும் என்ற பொருள் நயமும், "வேதங்கள் ஐயா(யோ) என ஓங்கி" என்னும் சொற்களில் புதைந்து கிடைக்கிறது.

 இறைவன் மிக நுட்பமானவன்;  அங்கும் இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். நுண்பொருளுக்குத்தானே   'எங்கும் நிறைந்திருத்தல் தன்மை'யுண்டு. ('வியாபித்தல்' என்று வடமொழி சொல்லும்). அதைக் குறிப்பிடவே "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்றார்.
 
"அண்டங்கள் எல்லாம் அணுவாக,
அணுக்கள் எல்லாம் அண்டங்களாகப்
பெரிதாய்ச் சிறிதாய்ஆயினானும்"

என இறைவனது நுண்மையைப் பரஞ்சோதி முனிவரும் கூறினார்.
 
இறைவனுடைய பெருமையை அறிந்து அவருடைய திருநாமங்களில் மூழ்கியிருப்போருக்கு இங்கேயே வீடுபேறு கிடைக்கும் என்பதை மணிவாசகர் தம் வாழ்வால் உணர்த்தி,  இறைவன் உயிர்களிடத்து எளியனாய் நிற்கும் நிலையை நமக்கெல்லாம் நன்கு உணர்த்தினார்.
 
 'ஐயோ!' என்னும் அமங்கலச் சொல்லை  மங்கல வழக்காக்கிய பெருமை கவிச்சக்கரவர்த்தி கம்பனையே சாரும். கம்பராமாயணத்தில் வரும் ஒரு காட்சி இதற்குச் சாட்சி.
 
தந்தையின் வாக்கைக் காக்க பகவான் இராமச்சந்திரமூர்த்தி பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்கிறான்; இராமபிரான் சீதாபிராட்டியுடனும், இளையபெருமாள் இலக்குவனுடனும் மரவுரி அணிந்து ஒரு பொன்மாலைப் பொழுதில், கானகம் நோக்கிச் செல்கிறான்.
 
"எந்த அணிகலனும் இல்லாமல் மரவுரி தரித்த நிலையிலும், மாலைப்பொழுதின்  தங்கநிறத்தில் மின்னி ஒளிவீசும் கதிரவன், இராமபிரானின் திருமேனியிலிருந்து வீசும் ஒளிக்கு முன்னர்,  தனது பொன்னிற ஒளி ஒன்றுமில்லை என்று நாணி மறைந்துவிட,  'இவளுக்கு இடை என்று ஒன்று உண்டு என்பது பொய்யோ என்று ஐயமடையுமாறு கொடியிடையாளான சீதா தேவியுடனும், இளையபெருமாள் இலட்சுமணனுடனும் இராமபிரான்  கானகம் செல்லுகிறான்" என்று சொல்லவந்த கம்பர், இராமபிரானின் கரியமேனியின் அழகைப் பின்வருமாறு வருணித்து மயங்குகின்றார்:
 
"இராமபிரானின் திருமேனி நிறம் மைபோன்ற கருமை நிறமோ" என்று ஐயுற்றவர், "இல்லை! இல்லை!! கருமையான மை ஒளிவீசும் தன்மை கொண்டதன்று! எனவே மையை பிரானின் திருமேனிக்கு உவமை சொல்வது பொருத்தமன்று" என்று தெளிந்தவர், "இவன் திருமேனி மரகத ஒளிபோன்று பச்சை நிறமோ" என உவமிக்கப் போனவர், "மரகதக்கல் மிகவும் சிறியது என்பதால், அவ்வொப்புமை பெருமானுக்கு ஈடல்லவே!" என்று மயங்கினார் கம்பர்; பின், சற்றே தெளிந்து, "பரந்து விரிந்த அலைகடலைப்போல் நீலநிறமோ" என்று வியந்தவர், "இல்லை! இல்லை!! அலைகடல் உவர்ப்பு என்னும் குற்றம் உடையது! அது எங்ஙனம் எம்பெருமானுக்கு ஒப்பாகும்? எனவே, அதுவும் புறந்தள்ளவேண்டியதே!" என்று துணிந்தார்; பின், உவர்ப்பு என்னும் குற்றமற்றதும், "கருத்து மின்னொளி வீசும் மழைமுகிலோ" என்று உவமித்தவர், சற்றே பின்வாங்கி, "இம்மழைமுகில், மழையாகப் பொழிந்தபின், மறைந்து போகும் குற்றமுள்ளதல்லவா? என்றென்றும் நிலைப்பேறு கொண்ட எம்பிரானுக்கு இம்மழைமுகில் ஒருக்காலும் ஒப்பாகாது" என்று கண்டதும், இனி, எம்பிரானின் வடிவழகை வருணிக்க யாம் ஒப்புமைகூறும்வகையில் தமிழில் சொற்பொருள் காண இயலவில்லையே!  ஐயோ! என்றும் அழியாத வடிவ அழகை  உடைய இவன் அழகை எவ்வாறு வர்ணிப்பேன்?  என்னால் முடியவில்லையே என்னும் பொருள் தொக்கிநிற்க, வார்த்தைகளுக்குள் அடங்காதது இராமபிரானின் வடிவழகு என்று, தன் இயலாமையைப் பதிவிட்டுத் தன் பாடலை முடிக்கிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.
 
இவ்வொளிக்காட்சியைக் சொற்காவியமாக்கித், துள்ளலோசையில் துள்ளும் கலிப்பாவில் கம்பனின் சொல்லோவியத்தைக் காணுங்கள்:
 
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய,
பொய்யோ! எனும் இடையாளொடும், இளையானொடும் போனான் -
‘மையோ! மரகதமோ! மறிகடலோ! மழைமுகிலோ!
ஐயோ! இவன் வடிவு!’ என்பது ஓர் அழியா அழகு உடையான்!  - கம்பராமாயணம்: 1926.

     
இப்போது, “வேதங்கள் ‘ஐயா(யோ)’ என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!” என்னும் திருவாசகத்தில், மணிவாசகரின் கவியுள்ளம் தெளிவாக விளங்குகிறதா? வேதங்கள் இறைவனின் நுண்ணிய தன்மையை விளக்க ஆழ்ந்து சென்றும், அகன்று சென்றும் விளக்க முயன்று, “ஐயோ! எம்மால் முடியவில்லையே!” என்று நாணி ஒதுங்கின என்னும் பொருளிலேயே மணிவாசகர் சொன்னது உள்ளங்கை நெல்லிக்கனி.
 
ஆனால், இறைவன் சிவபெருமான், உயிர்களுக்காக அவனே ஆகமம் ஆகி நின்று, வழிகாட்டி, ஆட்கொள்ளுவான் என்பதை “ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!” என்று மணிவாசகப் பெருமான் சொல்வதால், திருமுறைகளின் வழிகாட்டுதல்படி, சைவசமயத்துக்கு ஆகமமே முதல் பிரமாணம்; வடவேதம்  அன்று என்பதுவும் இங்கு தெளிவாகின்றது.
 
 கம்பனிடம் இருந்து, “ஐயோ” என்னும் சொல் மங்களம் என்னும் தகுதியைப் பெற்றுவிட்டது என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதிலும், தற்காலக் கவிஞர்களுக்கு “ஐயோ”வை விட்டுவிட்டுக் காதல் கவிதையே எழுத வாராது என்றே நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக,  திரைப்பாடலாசிரியர் யுகபாரதியின்

– ஐயோ! ஐயோ! ஐயோடா ஐயையோ!
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயையோ!- (திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதி,  எம்.குமரன், s/o மகாலட்சுமி திரைப்படம்),

ஒரு சான்று.
 இந்தப்பாடலின் சந்தத்திலேயே, “வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறைய...” என்று பாடிப்பாருங்கள். கன கச்சிதமாகப் பொருந்திவராவிட்டால் என்னைக் கேளுங்கள்.  மாணிக்கவாசகரின் திருவாசகம் - கம்பனின் கவிச்சுவை - யுகபாரதியின் பாடல் என்று தமிழின் நயம் நயந்து நம்மை இன்சுவையில் நனைக்கின்றது என்றால் மிகையன்று!

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா/ ஐயோ நல்ல விளக்கம், ஐயா. நமது பழக்கத்தில் ஒருவர் மரணித்து விட்டால் உடன் வரும் வார்த்தை ஐயோ! ஐயோ ! என நெஞ்சில் அடித்து அழுவார்கள். பிதாவை ஐயா என்று அழைக்கும் வழக்கம் எங்கள் தலை முறையுடன் முடிந்து விட்டது என்று நினைக்கின்றேன். பெரியோர்களை இப்பவும் மரியாதையுடன் ஐயா என்று கூப்பிடும் பழக்கம் உண்டு.

 பல  திரைப்பட  பாடல்களில் வார்த்தைகளுக்கு வறுமை வந்து விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை : பேராசிரியர் ஐயா தமிழின் நயத்தால் நம்மைச் சுண்டிச்சுண்டி இழுக்கின்றார் ஐயோ......!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.