Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோதியின் கொழும்புப் பேச்சுக்கள்: டெல்லியின் அணுகுமுறை மாறுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாரதி இராஜநாயகம் மூத்த பத்திரிகையாளர்
 

(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் பார்வைகள். இவை பிபிசி தமிழின் பார்வை அல்ல - ஆசிரியர்)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு மணி நேர இலங்கை பயணம் மிகவும் குறுகியதாக இருந்தாலும், அதிகளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றார்கள் விமர்சகர்கள்.

இலங்கையின் பிரதான அரசியல் தலைவர்கள் மோடியை வரவேற்பதில் காட்டிய ஆர்வமும், அவருடன் நடத்திய பேச்சுக்களும், அமைச்சர் மனோ கணேசன் சொன்னதைப்போல, "தெற்காசியாவின் சௌகிதர்" (பாதுகாவலன்) என்ற நிலையில்தான் மோடி இருக்கியறார் என்பதை உணர்த்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு மோடி அழைத்திருக்கின்றார். ஏப்ரல் 21 தாக்குதல் தெற்காசிய பிராந்திய கள நிலையில், தாக்கம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியில் - இலங்கை குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதுதான் இப்போது ஆராயப்படும் விடயமாகவுள்ளது.

பலம்வாய்ந்த ஒரு அரசாங்கத்தை அமைத்து, ஒரு வார காலத்திலேயே மோதி இலங்கைக்கு பயணம் செய்தது முக்கியமானது. "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை" என்ற அவரது கோட்பாட்டின்படி மாலத்தீவுக்குச் சென்று திரும்பும் வழியிலேயே கொழும்பில் அவர் 'தரித்துச்' சென்றார். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே இந்த பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இலங்கை வந்த முதலாவது உலகத் தலைவர் அவர்தான். கடுமையான பாதுகாப்பு எச்சரிகையையும் மீறி குண்டுத் தாக்குதலுக்குள்ளான கொழும்பு, கொச்சிகடை அந்தோனியார் தேவாலயத்தையும் அவர் சென்று பார்வையிட்டார்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள்

இந்தியப் பிரதமராக இரண்டாவது தடவையாக மோதி பதவியேற்றுக்கொண்ட போது, இலங்கையில் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் முக்கியமாக இரண்டு கேள்விகள் எழுந்தன. ஒன்று - இலங்கைப் பிரச்சினை குறித்த இந்திய அணுகுமுறையில் மாற்றம் வருமா என்பது. இரண்டு - வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கப்போவது யார் என்பனதான் அவை. இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பில் வெளிவிவகார அமைச்சரின் பங்கு முக்கியமானது என்பதால்தான் இவ்விடயமும் ஈழத் தமிழர்களின் அக்கறைக்குரியதாக இருந்தது. வெளியுறவு அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். கட்சி அரசியல் சாராத - பிராந்திய அரசியலை நன்கு தெரிந்த ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டது முக்கியமானது.

மோதிபடத்தின் காப்புரிமை Getty Images

ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் தனிப்பட்ட காரணங்கள் சில மோடிக்கு இருந்தாலும் கூட, அவரது நியமனம் இலங்கை உட்பட அண்டை நாடுகளுக்கு முக்கியமானது. வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரியாக இருந்து அமைச்சராக வந்திருப்பதால், வெளிவிவகாரத்துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நுணுக்கங்களையும் ஜெய்சங்கர் அறிந்துவைத்திருப்பார் என எதிர்பார்க்கலாம்.  முதல் முறை மோதி பிரதமர் பதவிக்கு வந்தபோது, வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டவர் ஜெய்சங்கர். குஜராத் கலவரத்தால் மோதி அமெரிக்கா செல்வதற்கு சில சங்கடங்கள் இருந்தன. மோதிக்கு விசா கொடுக்க அமெரிக்கா மறுத்திருந்தது. அதை எல்லாம் உடைத்து ஜெய்சங்கர்தான் மோதியை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற வைத்தார்.  ஏற்கெனவே, அமெரிக்காவில் இந்தியத் தூதராகப் பணிபுரிந்த அனுபவம் இருந்ததால், அந்த அனுபவத்தின் உதவியுடன் அமெரிக்கத் தரப்பில் பேசி, அந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ஜெய்சங்கர்.

வெளியுறவுத் துறைச் செயலாளர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகுகூட ஜெய்சங்கரை விடவில்லை மோதி. மோதியின் வெளிநாட்டுப் பயணங்களின் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தவர் ஜெய்சங்கரே. வெளியுறவுத் துறை அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய ஜெய்சங்கர், இன்று மோதியின் இரண்டாவது அமைச்சரவையில் அந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கின்றார். அதாவது, மிகச் சிறந்த அதிகாரி. மோதியின் நம்பிக்கைக்கு உரியவர். வெளிவிவகாரத்துறையில் ஆழமான அறிவைக்கொண்டிருப்பவர். இந்த வகையில், எதிர்காலத்தில் இலங்கை குறித்து இந்தியா எடுக்கப்போதும் அணுகுமுறையில், இவருடைய செல்வாக்கு நிச்சயமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதனால், மோதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் இலங்கை குறித்த டெல்லியின் அணுகுமுறை எவ்வாறிருக்கும் என்பதை ஆராயும்போது, ஜெய்சங்கரின் நிலைப்பாட்டையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

இலங்கையும் ஜெய்சங்கரின் அனுபவமும்

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை வகுப்பதில் வெளிவிவகார அமைச்சகமே முக்கியப் பங்காற்றுகின்றது. அதில் கைதேர்ந்த அதிகாரியாக இருந்தவர் ஜெய்சங்கர். இலங்கை விவகாரத்திலும் ஜெய்சங்கர் கைதேர்ந்தவர். 1987 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிகாக்கும் படையின் செயலாளராகவும், அரசியல் ஆலோசகராகவும் பணியாறிய காலம் முதல் இலங்கைப் பிரச்சினை குறித்த நேரடி அனுபவத்தைக் கொண்டிருப்பவர் அவர்.

இலங்கையில் மோதி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்த வாக்கு என்ன? - விரிவான தகவல்கள்

ஜெய்சங்கரின் நியமனம் குறித்து அமைச்சர் மனோ கணேசன் தன்னுடைய முகநூலில் "இலங்கையின் இன அரசியல், இனங்களுக்கு உள்ளே அரசியல், ஆகியவற்றை அறிந்த, கரைத்து குடித்த முன்னாள் வெளிவிவகார செயலாளர், இலங்கையில் பணியாற்றிய தொழில்சார் நிபுணர் என்பவை தனிப்பட்ட முறையில் நானறிந்த உண்மைகள்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். அமைச்சர் குறிப்பிட்டிருப்பது போல ஜெய்சங்கர் இலங்கை விவகாரத்தைக் கரைத்துக் குடித்தவராக இருந்தாலும், இலங்கைப் பிரச்சினையை அவர் எவ்வாறு கையாள்வார் என்ற கேள்வி பிரதானமாக எழுகின்றது.

இந்திய அமைதிப்படையின் காலத்தில் ஜெய்சங்கர் அரசியல் செயலாளராக இருந்தவர். அதனால் அப்போது இடம்பெற்ற பெரும்பாலான சம்பவங்கள் அவருக்குத் தெரியும். குறிப்பாக, விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையிலான மோதல், அதன்பின்னர் இடம்பெற்ற ராஜீவ் காந்தி படுகொலை போன்ற சம்பவங்கள் விடுதலைப் புலிகள் குறித்த ஒரு எதிர்மறையான அபிப்பிராயத்தை அவரிடம் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், இலங்கைத் தமிழரின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை அவருக்கு இருந்தது என்கின்றார் அவருடன் நெருக்கமாகப் பழகிய தமிழ் அரசியல்வாதி ஒருவர். ஆனால், அந்தத் தீர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதில் அவரது கருத்து என்ன என்பது குழப்பமானதுதான்.

"இணைப்புக்கு அழுத்தம் கொடுக்க முடியாது"

இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் தருவதை தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு ஜெய்சங்கரிடம் இருந்தது என்ற கருத்தை தமிழ் கட்சி ஒன்றின் பிரதிநிதி முன்வைக்கிறார். மூன்று  வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த ஜெய்சங்கர், தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுக்களின் போது இந்தத் தோரணையைக் காணமுடிந்தது. இந்தப் பேச்சுக்களின் போது, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். "இலங்கை - இந்திய உடன்படிக்கையின் படி வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தது. அந்த இணைப்பை மீண்டும் ஏற்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்பதுதான் அவரது கோரிக்கை.

இலங்கையில் மோதி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்த வாக்கு என்ன? - விரிவான தகவல்கள்

இதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், "இணைப்பை இந்தியா வலியுறுத்த முடியாது. 1987 க்குப் பின்னர் எவ்வளவோ காரியங்கள் நடந்தேறிவிட்டன. மீண்டும் கடந்த காலத்துக்குச் செல்ல முடியாது. காலத்துக்குக் காலம் வரலாறு புதிய வாய்ப்புக்களைத் தருகிறது. அதனைத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் இறுதியில் தமிழர்கள் எதனையும் பெற முடியாத நிலையே ஏற்படும்" எனத் தெரிவித்திருந்தார். அதாவது அரசாங்கம் தருவதை தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், இந்தியா இவ்விடயத்தில் எதனையும் செய்யும் நிலையில் இல்லை என்பதும்தான் டெல்லியின் நிலைப்பாடாக அப்போது அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயல்பாடுகள் அப்போது நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. "2016 இல் தீர்வு கிடைக்கும்" என்ற கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அப்போது வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அந்த நிலையில்தான் - இலங்கை அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வைக் கொடுக்கப் போகிறது என்ற நம்பிக்கையில், ஜெய்சங்கர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

மாற்றமடைந்துள்ள அரசியல் கள நிலை

அப்போதிருந்த நிலை இப்போது இல்லை. அரசியலமைப்பாக்க முயற்சிகள் கைவிடப்பட்டுவிட்டன. அடுத்த தேர்தல்களுக்கு முன்னர் அந்த முயற்சிகள் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அதனைவிட, இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர்  வெளிப்படும் ஐ.எஸ். அமைப்பின் ஊடுருவல், இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகியிருக்கிறது. வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுடைய பெரும்பான்மையைக் கொண்ட தனியான ஒரு மாகாணமாக இருந்திருந்தால், ஐ.எஸ். தொடர்பான அச்சுறுத்தல்களைத் தவிர்த்திருக்க முடியும் என்ற கருத்து இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிலரிடம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் கள நிலை தமக்குப் பாதகமானது என்ற கருத்து இந்திய இராஜதந்திர மட்டத்தில் காணப்படுவதாக அவர்களுக்கு நெருக்கமான சில வட்டாரங்கள் சொல்கின்றன. அதாவது, ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர் இந்தியத் தரப்பின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. "வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களுடைய கட்டுப்பாட்டில் அந்த மாகாணம் இருந்தால், இவ்வாறான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்காது. எதிர்காலத்திலும் அச்றுத்தல்களைத் தவிர்க்க இணைப்பு அவசியம் என்பதை மோடி அரசுக்கு உணர்த்த வேண்டும்" என தமிழ்ப் புலமையாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

மோதியின் கொழும்புப் பேச்சுக்கள்: டெல்லியின் அணுகுமுறை மாறுமா?படத்தின் காப்புரிமை Getty Images

இது குறித்து கருத்து வெளியிட்ட தமிழ்க் கட்சி ஒன்றின் பிரமுகர், "இப்போதுள்ள நிலைமைகளை தமிழர் தரப்பு நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்" என்பதை வலியுறுத்தினார். மூன்று விடயங்களைச் சுட்டிக்காட்டி தன்னுடைய கருத்துக்கு அவர் வலுசேர்க்கிறார். "பலமான பாஜக ஆட்சி இந்தியாவில் அமைந்திருக்கிறது. ஐ.எஸ். தாக்குதல் அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல். பலமான முறையில் சீனா இலங்கையில் தன்னுடைய முதலீடுகளை மேற்கொண்டு உறவுகளை வலுப்படுத்திவருகின்றது. அவற்றின் புலனாய்வு அமைப்புக்களும் இலங்கை வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறான நிலையில் இந்தியாவினுடைய பாதுகாப்பையும் பலப்படுத்தும் வகையில், தமிழர் தரப்பின் நலன்களையும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழர் தரப்பு செயற்பட வேண்டும்" என்பதுதான் அவரது கருத்து.

நீண்டகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை டில்லிக்கு அழைக்காத மோடி, இப்போது அவர்களை மீண்டும் அழைத்திருக்கின்றார். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் களநிலை மாற்றங்கள் இந்திய அணுகுமுறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதற்கான எதிர்வுகூறலாக இது இருக்கலாம். எதிர்வரும் டிசம்பரில் ஜனாதிபதி தேர்தலும், அடுத்த வருட நடுப்பகுதிக்குள் பொதுத் தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை விடயத்தில் அதிரடியாக இந்தியா எதாவது செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது என்றாலும்கூட, இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான நிலையை மறுதலிக்க முடியாது என தமிழ்க் கட்சி ஒன்றின் தலைவர் குறிப்பிடுகிறார். 

https://www.bbc.com/tamil/sri-lanka-48601875

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தியா மேற்குலகின் பார்வையில் இலங்கை ஒரு Failing state தோற்கும் அரசாக தென்பட ஆரம்பித்துள்ளது. ஆனால் சீனா ரஸ்ஸ்சியா அணி நாடுகள் இலங்கையை  வெற்றிபெறும்  அரசாக காண்கின்றது. இது தமிழரைப்பொறுத்து முக்கிய தருணமாகும்.

மாறக்கூடிய  அரசியலில் மாற்றங்களை காத்திருந்து கைநழுவ விடாமல் பயன்படுத்த வேண்டும்.  21/19ன் பின்னர் உருவாகிவரும்  சூழலை வெற்றிகரமாக பயன்படுத்துவது என்பது  எல்லா விமர்சனங்களோடும் இந்திய மேற்குலக அங்கீகாரம்பெற்ற  சம்பந்தரை பலப்படுத்தி முன் நகர்த்துவதுதான்.   மறு பக்கத்தில் சம்பந்தர் ஏனைய அரசியல் கட்சிகளையும் பிரமுகர்களையும் புல்ம்பெர்ந்த தமிழர் அமைப்புகளையும் தங்கள் குடையின்கீழ் கொண்டுவரும் முயற்ச்சியை இனியாவது ஆரம்பிக்க வேண்டும். மலையக தமிழ்த் தலைவர்களை அரவணைத்து பூரண ஆதரவை பெறுதல் வேண்டும். முஸ்லிம் தலைவர்களோடு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பேச வேண்டும். சாத்தியமான சிங்கள ஜனநாயக சக்திகளின் ஆதரவையும் கோரிப் பெற வேண்டும். போகும் வழி தொலைவு. சுமை பெரிது.    

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்காக பாடுபடுபவர்களாயின் இந்தியா, சர்வதேசத்தை பயன்படுத்தி அழுத்தங்களை வழங்கி தீர்வுகளுக்கு முயன்றிருக்கலாம். இவையள் இலங்கை அரசுக்கு நோகாமல் அரசியல் செய்பவர்கள்.
சம்பந்தர் ஐயா சரிப்பட்டு வரமாட்டார், அதிசயம் ஏதும் நடந்தால் மக்களுக்கு நன்மையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.