Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடியா, சோனியாவா? மீண்டும் சூடுபிடிக்கும் இந்தியத் தேர்தல் களம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோடியா, சோனியாவா? மீண்டும் சூடுபிடிக்கும் இந்தியத் தேர்தல் களம்

எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:44

பொருளாதார தேக்க நிலைமை பற்றி, அகில இந்திய அளவில், போராட்ட அழைப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது.   

மாநிலங்களின் அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து விவாதித்துள்ள சோனியா காந்தி, இது தொடர்பாகக் காங்கிரஸ் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று, கட்டளை பிறப்பித்திருக்கிறார்.   

நாள்கள் நகர நகர, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி ஆகிய இரண்டும், கடுமையான பிரசாரத்தில் ஈடுபடும் பரபரப்பான காட்சிகள், ‘வெள்ளித்திரை’யில் காணலாம் என்பது போல், தற்போது தேசிய அளவில், அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சோனியா காந்தி தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, இந்தக் காட்சிகள் அரங்கேறும் களம் தயார் செய்யப்படுவதை உணரமுடிகிறது.  

காஷ்மீர், ரபேல், மதவாதம் போன்ற எல்லா விடயங்களிலும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியிடம், படுதோல்வி அடைந்து விட்டது காங்கிரஸ் கட்சி. அதன் தலைவராகப் பணியாற்றிய ராகுல் காந்தி, கடைப்பிடித்த பாதை, கரடு முரடானது என்பதை, 2019 நாடாளுமன்றத் தேர்தலும் அரங்கேற்றி விட்டது.   

அதனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்ட ராகுலுக்குப் பதிலாக, சோனியா காந்தியே தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு அவர், பா.ஜ.கவின் வலையில் விழுந்து விடாமல், வேறு பக்கம் தன் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.   

“எமக்குக் கிடைத்த மக்கள் ஆதரவை, ஒரு போதும் அரசியல் பழிவாங்கலுக்குக் காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியதில்லை” என்று, சோனியா முதலில் குரல் எழுப்பினார். 

இப்போது, மாநிலங்களின் அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்துப் பேசிய பிறகு,  காங்கிரஸை வளர்க்கும் திட்டங்கள் குறித்து விவாதித்த சோனியா காந்தி, “கிடைத்த மக்கள் வாக்குகளை, ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தான வழியில், பா.ஜ.க பயன்படுத்துகிறது” என்று கடுமையாகத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.   

“மாநிலங்களின் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும், சமூக வலைதளங்களை மட்டும் நம்பியிருக்க வேண்டியதில்லை. இனி, மக்கள் பிரச்சினைகளுக்காக, மந்தமாகியுள்ள பொருளாதாரத்தை, மக்களுக்கு விளக்கும் வகையில், தீவிர போராட்டத்தில் ஈடுபட வேண்டும்” என்று சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த போது, கட்சி வளர்ச்சியை முற்றிலும் மறந்தார்கள்.   

அதன் பலனை 2014, 2019 பொதுத் தேர்தல்களில் அறுவடை செய்து விட்டார்கள். தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை, நாடாளுமன்றத்தில் பெற முடியாத தோல்வியை, காங்கிரஸ் கட்சி பெற்றிருப்பதை, சோனியா, ராகுல் ஆகிய இரு தலைமைகளுக்கும் கிடைத்த தோல்வியாகவே பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 

முழுக்க முழுக்க, பா.ஜ.க ஒரு மதவாதக் கட்சி என்ற பிரசாரத்தை மட்டுமே முன்னிறுத்தி, மற்ற எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் கோட்டை விட்ட காங்கிரஸ் கட்சிக்கு, இனி அடுத்து வரும் மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள் மிகப்பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.   

அதனால்தான், முதலில் மஹாராஷ்டிர மாநிலத்தில் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தையை, சோனியா காந்தியே சரத்பவாருடன் தொடங்கியிருக்கிறார்.அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஹரியானா,  மஹராஷ்டிரா மாநிலத் தேர்தல்கள், இந்திய அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெறும் என்பதற்கான முன்னோடி திட்டங்கள் இவை.  

2019 நாடாளுமன்றத் தோல்விக்குப் பிறகு, நடைபெறவுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதோடு, காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்த மாநிலங்கள் இவை என்பதும், வெற்றி பெறும் வலுக் கொண்ட மாநிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆகவே மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சியை, தற்போது வெற்றிப்பாதையில் பயணிக்க வைக்க சோனியாவால் இயலவில்லை என்றால், ‘இனி காங்கிரஸ் பிழைக்காது’ என்ற எண்ணம், அனைத்து வாக்காளர் மத்தியிலும் ஏற்பட்டுவிடும்.   

ஏன், அரசியல் கட்சிகளுக்கும் இந்த எண்ணம் ஏற்பட்டு, ‘இனி காங்கிரஸுடன் கூட்டணி வைத்துப் பயனில்லை’ என்ற முடிவுக்கு வரலாம். இந்த இரட்டை ஆபத்துகளை, சோனியா காந்தி உணர்ந்திருக்கிறார். அதையொட்டியே, சமீபத்தில் மாநிலங்களின் அனைத்துக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும் அழைத்துப் பேசி விட்டு, ‘போராட்ட அழைப்பு’ விடுத்துள்ளார். 

இந்த அழைப்புக்கு ‘வீரியம்’ கிடைக்குமா என்பது கேள்விக்குறி. வழக்குகளிலும் தோல்விகளிலும் சிக்கித் துவண்டு போயிருக்கும் காங்கிரஸ் தலைவர்களில் எத்தனை பேர், இந்தப் போராட்ட அழைப்பைத் தீவிரமானதாக எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்? 

ஒரு பக்கம் திகார் சிறையில், ப. சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் அமலாக்கப்பிரிவால் கைது செய்யப்பட்டு,  அத்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் கமல்நாத்துக்கு எதிராகக் கட்சிக்குள்ளேயே பனிப்போர் வெடித்து, மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சிக்கு, எந்த நேரத்தில் ஆபத்து நேரிடும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.   

காஷ்மீர் பிரச்சினையில், காங்கிரஸ் கட்சியால் போரிட முடியாத அளவுக்குத் ‘தேசபக்தி துருப்புச் சீட்டை’ அக்கட்சிக்கு எதிராக, வெற்றிகரமாக பா.ஜ.க திருப்பி விட்டுள்ளது. ஆந்திராவில், காங்கிரஸ் கட்சி கரைந்து போய் விட்டது.   

உத்தரபிரதேசத்தில், பிரியங்கா காந்தியே காங்கிரஸைப் பொறுப்பேற்றும், அங்கு முதலமைச்சராக இருக்கும் யோகி ஆதித்யநாத்தின் அதிகாரத்தைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. 

இப்படி அடுக்கடுக்கான சோதனைகளில் மாட்டிக் கொண்டுள்ள, மாநில அளவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், சோனியாவின் போராட்ட அழைப்பை ஏற்று, மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.   

ஆனால், சோனியாவின் புதிய போராட்ட அழைப்புக்குப் பின்னணியில், இந்தியாவின் பொருளாதார தேக்க நிலைமை, வலுவான அங்கமாக இருக்கிறது என்பது உண்மை.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இது தொடர்பாக, அரசாங்கத்தைத் தொடர்ந்து குறைகூறி, விமர்சித்து வருகிறார். “பொருளாதார தேக்க நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை, அரசாங்கம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்துப் பொருளாதார தேக்க நிலைமையைப் போக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.  

 பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா கூட, “மன்மோகன் பேச்சைக் கேளுங்கள்; நாட்டு நலனுக்காக, அவரை அழைத்துப் பேசுங்கள்” என்று கூறியிருக்கிறது. நாட்டில் வேலை வாய்ப்பின்மை, வாகன உற்பத்தித் தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைமை, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகிய அனைத்துக்கும் ‘பண மதிப்பிழப்பு’ நடவடிக்கையும் ‘சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டமும்’ தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக் குற்றம் சாட்டி வருகின்றன. ஏன், பொருளாதார நிபுணர்களும் கூட, விமர்சனம் செய்கின்றார்கள். திகார் சிறையில் இருக்கும் சிதம்பரம் கூட, ‘பொருளாதாரத்தைச் சரி செய்ய, என்ன திட்டம் கைவசம் வைத்துள்ளீர்கள்’ என்று தன் குடும்பத்தினர் வாயிலாக, டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருக்கிறார். திகாருக்குச் செல்லும் முன்பு, அவர் கைவிரித்துக் காட்டிய ‘5 சதவீதம்’ என்ற இந்தியப் பொருளாதார வளர்ச்சி பற்றிய ‘விமர்சனம்’ சமூக வலைதளங்களில், உச்ச அளவில் பகிரப்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளால், இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர் மோடியின் அரசாங்கத்துக்கு முதல் நூறு நாளில், மக்கள் மத்தியில் ‘மதிப்பெண்’ குறைந்துள்ளது என்று, எதிர்க்கட்சிகள் நம்புகின்றன.ஆகவேதான் இந்தத் தருணத்தில், பா.ஜ.க அரசாங்கத்துகக்கு எதிரான, போராட்ட அழைப்பை சோனியா காந்தி விடுத்திருக்கிறார்.  

இதைச் சமாளிக்க, பிரதமர் மோடி ஏற்கெனவே தயாராகி விட்டார். பொருளாதார தேக்க நிலைமை இல்லை என்பதைத் தன் அமைச்சர்கள் மூலம், வெளிப்படுத்தி வரும் மோடி, “பயங்கரவாதத்தைச் சமாளிக்க இந்தியாவுக்குத் தெரியும். பசு என்றாலே சிலருக்கு ஷொக் அடிக்கிறது” என்று தனது பிரசார பாதையை வகுத்து விட்டார்.  

 “காஷ்மீரில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியிருக்கிறோம்” என்பதைப் பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் அனைவரும், ஏற்கெனவே பிரசாரத்தை மக்கள் மனதில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார்கள். 

இந்தப் பிரசாரம், காங்கிரஸின் போராட்ட அழைப்பையும் சமாளிக்கும்; ஹரியானா,  மஹாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் கை கொடுக்கும் என்பது பா.ஜ.க தலைவர்களின் கணிப்பாகும்.   

ஆகவே, இந்திய பொருளாதார தேக்க நிலைமை, இரு மாநில தேர்தல்களில், காங்கிரஸின் பிரசார ஆயுதம் என்றால், பயங்கரவாதம், பசு ஆகியவை, பா.ஜ.கவின் பிரசாரமாக இருக்கும் என்பதை, இப்போதே எதிர்பார்க்க முடிகிறது.   

இராமர் கோவில் கட்டப்படுவது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தீவிர விசாரணையில் இருக்கின்ற நேரத்தில், மீண்டும் இந்த ஹரியானா, மஹாராஷ்டிரா தேர்தல் களம், பா.ஜ.கவுக்குச் சாதகமாக இருப்பதற்கான வாய்ப்புகள், நிறைய இருப்பது போலவே தெரிகிறது. 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மோடியா-சோனியாவா-மீண்டும்-சூடுபிடிக்கும்-இந்தியத்-தேர்தல்-களம்/91-238716

 

  • கருத்துக்கள உறவுகள்

எவை நடக்கணும் என்று விரும்பினமோ அவைகள் நன்றாகவே நடக்கின்றன வாழ்த்துக்கள் இரண்டு கட்சிக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.