Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லெப். கேணல் தேவன்.!

Last updated Mar 28, 2020

இரவின் இருள் சூழ்ந்த நேரம். படைக் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை அகவை நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்பமே நகர்ந்துகொண்டிருந்தது. வவுனியா படை வல்வளைப்புப் பகுதியிலிருந்து படைக் காவலரணை ஊடறுத்து வன்னி நோக்கி இரகசியமாக அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். படையினரின் காப்பரண் வரிசையைக் கடக்கும்போது சத்தமில்லாமல் கடக்கவேண்டும் அப்போது ஏதும் அறியாக் குழந்தை சத்தமிட்டால் நிலைமை விபரீதமாகிவிடும். அதனால் ஏற்கனவே குழந்தையை ஆழ்ந்து உறங்கச் செய்திருந்தார்கள். ஆனாலும் இராணுவ வேலியைக் கடக்கவிருந்த வேளையில் வெளிச்சத்தைக் கண்டவுடன் குழந்தை விழித்துக்கொள்கிறது. குழந்தை சத்தமிட எத்தனிக்கின்றது. குழந்தையின் வாயைப் பொத்தினார்கள். ஒருவாறு காப்பரணைக் கடந்துவிடுகின்றார்கள்.

தேவனின் போராட்ட வாழ்வு இப்படித்தான் கழிந்தது. தேவன் இந்தப் போராட்டத்திற்காக எத்தனை அர்ப்பணிப்புணர்வுடன் செயற்பட்டான் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு மட்டுமே. அவனது வாழ்வில் தனித்து ஒருவனாய் அல்லாமல் போராளி அல்லாத தனது மனைவியுடனும் குழந்தையுடனும் அவன் சாதித்த சாதனைகள் நிறையவே இருக்கின்றன. தேவனின் போராட்ட வாழ்வு சண்டையில்தான் தொடங்குகின்றது. சண்டையில்தான் நகர்கின்றது. சண்டையில்தான் முடிகின்றது.

1988இல் தன்னைக் களவாழ்வுக்குள் இணைத்துக்கொண்ட நாள்முதல் வீரச்சாவடையும் வரை தேவன் அதிகம் சந்தித்தது சண்டைகளைத்தான். அவனது கன்னிச்சமர் இந்திய படைகதோடுதான். அந்தப் பட்டறிவோடுதான் வவுனியாக் கோட்டத் தாக்குதல் அணிக்குள் ஒருவனாய் தேவன் செயற்பட்டான். இந்தக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணிகள் கோட்ட ரீதியாக பிரிக்கப்பட்டிருந்தன. 1991ஆம் ஆண்டு தேசவிரோதிகள் மீது தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்படுகின்றது. அந்த அணியில் தேவனும் தெரிவுசெய்யப்பட்டிருந்தான். தாக்குதல் நடைபெறவிருந்த இடம் எமக்குப் பாதுகாப்பற்றதும் யாரும் அந்தப் பகுதிக்குப் பெரிய அளவில் செல்ல முடியாததுமான இடமாகும். ஆனால் தாக்குதலை நடாத்தியே ஆகவேண்டும். விடுதலைப்புலிகளின் அணி நகர்ந்துசெல்கிறது. சண்டை தொடங்குகிறது. தேசவிரோதிகளின் முகாம் தகர்க்கப்படுகிறது. வெற்றியோடு அணி தளம் திரும்பியது.

91497170_224891162189998_324031676913444

இந்தச் சண்டையில் தேவன் இதுவரை பெற்றிருந்த கள பட்டறிவை நன்கு பயன்படுத்தினான். அதில் திறமையாகச் செயற்பட்டான். தேவன் ஒரு சண்டைக்காரனாக அறிமுகமாகினான். அவனது சண்டைத்திறனும் அவனது ஆளுமைத்திறனும் அவனை வவுனியாக்கோட்டச் சிறப்புப் பொறுப்பாளர் ஆக்கியது.

தேவனின் சிந்தனைகள் எப்போதும் சண்டைகளைப் பற்றியே இருக்கும். போராளிகளுடன் எப்போதும் அதைப்பற்றியே கதைத்துக்கொண்டிருப்பான். அப்போது பெரிய அளவில் தாக்குதல் மேற்கொள்வதைவிட சிறு சிறுதாக்குதல்களே மேற்கொள்ளப்பட்ட காலம். படைக் காவலரண்கள் முகாம்கள் அமைந்திருக்கும் இடங்களை வேவு பார்ப்பது, பார்க்கப்பட்ட வேவுத் தகவல்களின் படி தாக்குதல்களை மேற்கொள்வதுதான் தேவனின் பணியும் பொழுதுபோக்கும். எப்படியாவது கிழமைக்கு ஒரு தாக்குதலாவது மேற்கொள்ளவேண்டுமென ஏராளமான பொழுதுகளை அதற்கே செலவுசெய்தான்.

தேவனின் சமராற்றலை வெளிப்படுத்திய மற்றொரு தாக்குதல் இது. 1992ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா பிரப்பமரப் பகுதியில் சிறிலங்கா படை கவசஊர்திகளுடன் முன்னேற்ற நகர்வொன்றை மேற்கொண்டது. உடனடியாகவே முன்னேறிவரும் படையினரை வழிமறித்து அடித்து விரட்டுவதற்குத் தேவன் தலைமையிலான அணி களம் விரைகின்றது. சண்டை தொடங்குகின்றது. சிங்களப் படைகள் தங்கள் கவசஊர்திகளிலிருந்து தானியங்கித் துப்பாக்கிகளால் தாக்கினார்கள். தேவன் தனது அணியைச் சாதுரியமாய் நகர்த்தினான். சிங்களப்படைகளைச் சுற்றி வளைக்கின்றான். சிங்களப் படை திகைப்படைந்து பவள் கவசஊர்தி ஒன்றைக் கைவிட்டுவிட்டு ஓட்டம் எடுத்தது. தேவனின் திறமையான வழிநடத்தல் சண்டையை வெற்றியாக்கியது. பவள் கவசவாகனத்தில் இருந்த L3 ஆயுதம் கழற்றியெடுக்கப்பட்டது. வன்னிமாவட்டத்தில் முதல் முதல் L3 ஆயுதத்தைக் கைப்பற்றியது தேவன்தான். அன்றைய நாளில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாய் பதிவாகியது. சண்டை நடந்த இடத்திலிருந்து பவள் கவசஊர்தியைக் கொண்டுவர முடியாதிருந்ததால் அது தகர்க்கப்பட்டது.

 

இப்படியாகத் தேவன் சென்ற சண்டைகள் எல்லாம் வெற்றியாய்த் தான் முடிந்தன. ஏனெனில் அதற்காய் அணுவணுவாய் உழைத்தான. வேவு பார்ப்பதிலிருந்து தாக்குதல் நடாத்தும் வரை எல்லாவற்றிற்கும் அவன் நிற்பான். எதையுமே தான் நேரில் நின்று உறுதிப்படுத்தினால் தான் அவனிற்கு நிறைவு வரும். அன்றைய நாட்களில் இப்போது போன்று முழுமையான கட்டுப்பாட்டுப்பகுதிகள் என்று இருந்தது குறைவு. படையினர் எமது பகுதிக்குள் ஊடுருவி வருவார்கள். அந்தச் செய்தி அறிந்து உடனேயே அணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு களம் விரையும். சிங்களப் படைகள் அடிவாங்கியபடி பின்வாங்கிவிடும். அதேபோல் எங்களது அணிகளும் நீண்டதூரம் கால்நடையாகச் சென்று தாக்குதல் நடாத்தி எதிரிக்குச் சேதத்தை விளைவித்துவிட்டு தளம் திரும்புவர். இந்த நீண்டதூரப் பயணங்களில் எல்லாம் தேவன் முன்னணியில் செல்வான். சண்டைகளில் அதிகம் சாதிப்பான்.

இந்தச் சண்டைக்காரன் சுயவிருப்பின் பெயரில் சிறிதுகாலம் இயக்கத்திலிருந்து விலகியிருந்தான். 1997ஆம் ஆண்டு தேவனுக்கு திருமணம் நடக்கிறது. சுசித்திரா என்ற பெண்ணை அவன் தனது துணைவியாக்கிக்கொண்டான். இந்த நாட்களில் வவுனியாவில் இரணைஇலுப்பைக்குளத்தில்தான் தேவன் குடும்பம் வசித்துவந்தது. 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள படை இந்தப் பகுதிகளில் முன்னகர்வுகளை மேற்கொண்டு எமது நிலங்களை வல்வளைத்துக் கொண்டிருந்தது. சிங்களப் படைகளால் வல்வளைக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்த மக்களுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. படையினரால் இனங்காணப்படுவோர் தினமும் படை முகாமிற்கு வந்து கையெழுத்திடுமாறு மிரட்டப்பட்டனர்.

இந்த மிரட்டல்கள் தேவனுக்கு கடும் சினத்தையும் அதேவேளை படையினர் மீது நகைப்பையும் ஏற்படுத்தியது. எத்தனை களங்களுள் படையினரைச் சின்னாபின்னமாக்கி, சடலங்கள் ஆக்கிய அந்தச் சண்டைக்காரனுக்கு இந்த மிரட்டல்கள் எம்மாத்திரம்?. கையில் ஆயுதம் இல்லாமல் அவன் வீட்டில் இருந்தாலும் எத்தனை களங்களைக் கண்டு எத்தனை போராளிகளோடு உறவாடி அந்த நினைவுகளை மனசுக்குள் சுமந்த அவன் முடிவெடுக்கின்றான். எந்த நிலைவரினும் படையினரிடம் மண்டியிடுவதில்லையென்று. அன்றிலிருந்து தேவனின் தலைமறைவு வாழ்க்கை தொடங்குகின்றது.

அப்போது அவனிற்கும் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. அவன் தலைமறைவாகினாலும் அவனிடம் தற்பாதுகாப்பிற்கு ஆயுதமும் இருக்கவில்லை. தொடக்கத்தில் அவன் வைத்திருந்தது கத்தியொன்றைத்தான். போராளிகளுடன் தொடர்பை மேற்கொள்ள அவன் முயற்சித்தபோதும் தொடர்புகள் கிடைக்கவில்லை. தேவன் ஆயுதம் ஒன்று கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தான். அவனது முயற்சிக்கு ஒரு “சொட்கண” கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு ஆயுதம் ஒன்றைக் கைப்பற்ற அவன் முயற்சித்துக் கொண்டிருந்த போது போராளிகளின் தொடர்பு அவனுக்குக் கிடைத்தது.

தேவன் தலைமறைவானதுமே சிங்களப் படையினர் அவனைத் தேடினார்கள். தேவனின் வீட்டிற்குச் சென்று அவனது மனைவியை மிரட்டினார்கள். இராணுவத்தின் தொல்லை அதிகரித்ததால் அவளும் அவளது குழந்தையும் தேவனுடன் சேர்ந்து தலைமறைவா கினார்கள். ஒரு குழந்தை யுடன் தலைமறைவு வாழ்க்கை என்பது எத்தனை கடினமானது. ஒவ்வொரு இரவுகளும் அவர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தன. ஆனால் அந்த நெருக்கடி களுக்குள்ளாலும் தேவனின் திட்டங்களிற்கு அவள் ஒத்துழைப்புக் கொடுத்தாள்.

வவுனியாவிற்குள் சென்ற போராளிகள் தேவனின் விருப்பத்தைத் தங்கள் தலைமையகத்திற்குத் தெரிவித்து அனுமதி பெற்று அவனை இணைத்துக்கொண்டார்கள். தேவன் வவுனியாவின் ஊர்களையெல்லாம் நன்கறிவான். அந்த ஊர்களின் ஒவ்வொரு சந்துபொந்துகளும் அவனுக்கு நன்கு பரிச்சயமானவை. தாக்குதலுக்கான வேவுகள் பார்க்கப்பட்டன. எதிரி வல்வளைத்த பகுதிக்குள் மறைந்து வாழ்ந்தபடி எதிரிக்குத் தொல்லைகொடுக்கத் தொடங்கினார்கள். எப்போதும் எந்தக் கணத்திலும் எதிரியால் உயிர் அச்சுறுத்தல் இருந்தபோதும் அவனது மனைவியும் குழந்தையும் தலைமறைவு வாழ்க்கையையே வாழ்ந்தனர். தலைமறைவு வாழ்க்கையின் அத்தனை கடினங்களையும் சிலகாலம் அவர்கள் அனுபவித்தனர்.

இந்தக் கடினங்களைத் தாங்கியபடி தேவன் நடாத்தவிருக்கும் தாக்குதலுக்கு அவனது துணைவியும் குழந்தையும் வேவு பார்த்துக்கொண்டிருந்தனர். அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு படைக் காப்பரண்கள் அமைந்திருக்கும் இடம், அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள், அங்கு நிலைகொண்டுள்ள படையாட்களின் எண்ணிக்கை போன்ற விடயங்களை அவதானித்து வந்து தேவனிற்குக் கொடுப்பாள். போராளிகள் சேர்த்த வேவுத் தகவல்களோடு இந்தத் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு அதன் பின் தாக்குதல் நடக்கும்.

இரணைஇலுப்பைக் குளத்தில் தேவனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இப்படித்தான் வேவு பார்க்கப்பட்டது. தாக்குதல் நடைபெறவிருந்த அன்றைய நாள் காலையும், தேவனின் மனைவி வேவு பார்த்துக்கொடுத்தாள். வேவுத் தகவல்களின்படி அங்கு காப்பரண் அமைத்திருந்த சிங்களப் படைகள் மீது அதிரடித்தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. திட்டத்தின்படி தாக்குதல் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. ஐந்து படையினர் கொல்லப்பட்டனர். நான்கு துப்பாக்கிகளும் இதர பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இதேபோல தட்சணாமருதமடுப் பகுதியில் குளத்தில் குளிப்பதற்கு வரும் படையினர் மீது தேவன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் நான்கிற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்படி தட்சணாமருதமடு, முள்ளிக்குளம், மடு, பாலம்பிட்டி என பல பகுதிகளிலும் தேவனின் தாக்குதல்கள் நடைபெற்றன.

தேவனுடன் சண்டைக்குச் செல்வதென்றால் போராளிகள் போட்டிபோட்டுக்கொண்டு முன்வருவார்கள். ஏனெனில் தேவனில் அத்தகைய நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அவன் சண்டைகளைத் திட்டமிடும்போது இழப்புக்கள் இல்லாமல் எப்படி வெற்றிகரமாகத் தாக்குதலை நடத்தமுடியுமோ அப்படிச் செய்யக்கூடிய வகையில் நன்கு திட்டமிடுவான். களத்தில் முதலாளாய் தானே நிற்பான். நிலைமைகளுக்கு ஏற்றவாறு முடிவெடுத்துச் சமர்க்களங்களைச் சாதுரியமாய் வழிநடத்துவான். எந்தப் போராளியும் தேவனுடன் சண்டைக்குப் போவதென்றால் சம்மதித்துப் போய்விடுவான். தேவன் அத்தகைய சாதனைகளைச் சண்டையில் சாதித்திருக்கின்றான்.

துணிந்தவனே சமரில் வெற்றியடைவான். தேவன் துணிந்தவன். அதனால் வெற்றிகளுக்குச் சொந்தக்காரனாகினான். தேவனின் துணிவிற்கு அவனால் மேற்கொள்ளப்பட்ட “கிளைமோர்” தாக்குதல் ஒன்று சான்று பகர்கின்றது.

கவசஊர்திகளில் சுற்றுக்காவல் செய்யும் படையினர் மீது “கிளைமோர்” தாக்குதலுக்கு இடம் பார்க்கப்பட்டு நாளும் குறிக்கப்பட்டது. தேவன் தெரிவுசெய்த இடம் தாக்குதலை நடாத்துவதற்கு முற்றிலும் சாதகமற்ற இடம். தாக்குதலில் சின்னப் பிசகு நடந்தாலும் தாக்குதலுக்குச் செல்லும் அத்தனைபேரும் சந்தேகத்திற்கு இடமின்றி அந்த இடத்திலேயே எதிரியால் கொல்லப்படக்கூடும். இதனால் இந்த இடத்தைத் தெரிவுசெய்யவேண்டாமெனப் போராளிகள் அவனிற்கு ஆலோசனை கூறினார்கள். அந்த இடத்தில் சிறு சிறு பற்றைகளே இருந்தன. எழுந்து நின்றால் எதிரியால் உடனடியாகவே இனங்காணப்படக்கூடிய சாத்தியம் அதிகம் இருந்தது. தேவனிற்கு இவையெல்லாம் சின்னப் பிரச்சினைகள். இந்தத் தாக்குதலை இந்த இடத்தில்தான் நடாத்தவேண்டும் என அவன் உறுதியாய் நின்றான். “கிளைமோர்” வெடிக்கவைக்கும் ஆழியை இயக்கும் பொறுப்பையும் தானே எடுத்துக்கொண்டான். அவனுடன் சென்ற போராளிகளை நிலையெடுக்கச் செய்துவிட்டு சிறு பற்றை மறைவில் இருந்தபடி ஊர்தியை அவதானித்து கிளைமோரை வெடிக்கவைத்தான். பதட்டம் இல்லாமல் அந்தச் சிறுபற்றைக்குள் இருந்தபடி படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை அவதானித்தான். இந்தத் தாக்குதலில் 18மேற்பட்ட சிங்களப் படைகள் கொல்லப்பட்டனர்.

91401491_535121477139672_209370269028974

தேவனின் வெற்றிகரமான இந்தத் தாக்குதல்களால் எதிரி சினமடைந்தான். தேவனை எப்படியாவது கொன்றுவிடவேண்டுமென்று அலைந்துதிரிந்தான் எதிரி. ஒருநாள் தேவனின் குடும்பம் மறைவிடம் ஒன்றில் இருந்தபோது சிறிலங்கா படை சுற்றிவளைத்துக்கொள்கின்றது. தேவனின் குழந்தை பச்சைச் சீருடையுடன் வருவது போராளிகள் என நினைத்து அவர்களை நோக்கிச் சென்றது. நிலைமை இப்போது விபரீதமாகிவிட்டது. குழந்தையை விட்டுவிட்டு இருவரும் தப்பிக்கமுடியாது. உடனடியாகவே முடிவெடுக்கின்றனர். தேவனை ஓடித்தப்புமாறு சொல்லிவிட்டு மனைவி படையினருக்குத் தன்னை வெளிக்காட்டிக்கொள்கின்றாள். சிறிலங்கா படை அவளை அடித்துத் துன்புறுத்தியது. தேவன் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு மிரட்டியது. அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. அவளது தாயை அழைத்துத் தேவனிடம் இனி இவளை அனுப்பவேண்டாம் என சொல்லி ஒப்படைத்தார்கள்.

தேவன் இப்படி பல நெருக்கடிகளைச் சந்தித்தான். அவனது களவாழ்விற்குள் ஒரு பொழுதில் அரவம் தீண்டி கடும் உபாதைக்கு உட்பட்டான். இனி தப்பமுடியாது என்று எண்ணும் அளவிற்கு நிலைமை விபரீதமாக இருந்தது. தேவனிற்குப் பாம்பு கடித்த செய்தி படையினரின் காதுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. தேவன் இனி செத்துவிடுவான் என மகிழ்ச்சிக்கொண்டாட்டம் போட்டார்கள். ஆனால் தேவன் தப்பிவிட்டான்.

தேவனை எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நடவடிக்கை ஒன்றிற்காக வருமாறு பணிப்பு வந்தது. ஆனால் தேவன் அதை மறுத்துவிட்டான். இயக்கத்திலிருந்து சிறிதுகாலம் தான் ஒதுங்கியிருந்ததால் சண்டைகளில் நிறையச் சாதித்தபின்னரே தான் வருவேன் என அடம்பிடித்தான். எனினும் அவன் கட்டாயம் வரவேண்டும் என மீள வலியுறுத்திய பின்னரே விடுதலைப்புலிகளின் வன்னித்தளம் நோக்கி வருகின்றான். 1999ஆம் ஆண்டின் 10 மாதம் தேவனின் குடும்பம் இரவோடு இரவாக எதிரியின் காவலரணூடாக பல இடர்களைத் தாண்டி வன்னித்தளம் வந்தடைந்தது.

பின்பும் அதிக நாட்களை வவுனியா படை வல்வளைப்புப் பகுதியிலேயெ கழித்தான். படையினருக்குத் தொல்லைகொடுக்கும் பல தாக்குதல்களை அங்கிருந்தபடி மேற்கொண்டான். தேவனிற்கு எப்போதும் பிடித்தது சண்டைதான். அதற்கேற்றபடியே தனக்குக் கீழிருக்கும் போராளிகளை வழிநடத்துவான். அவனது குடும்பம் வன்னிக்கு வந்தபின் அவர்களுக்குப் பாதுகாப்புக் கிடைத்ததால் தனது நேரம் முழுவதையும் போராளிகளுடனேயே செலவு செய்யவிரும்பினான். வீட்டிற்குச் சென்றாலும் “அங்க என்னபாடோ தெரியாது” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவான்.

“உங்கட சேவைக்காலம் காணும்தானே” என்று கேட்டால் “நான் சண்டைபிடித்து வீரச்சாவுதான் அடையவேண்டும் அதுதான் என்ர விருப்பம்” என்று சொல்லுவான். “அப்பிடி நடக்காட்டி என்ர பிள்ளையள் வளர்ந்த பிறகு நான் அவயளுக்குச் சண்டை பழக்கி அவையும் சண்டை பிடிக்கத் தொடங்கினாத்தான் நான் சண்டையில இருந்து ஓய்வு பெறலாம்” என்று சண்டையைப் பற்றியே கதைத்துக்கொண்டிருப்பான்.

இந்திய படைக் காலத்திலிருந்து இற்றைவரை பல சண்டைக்களங்களைத் தேவன் சந்தித்திருக்கின்றான்படை நகர்வு முறியடிப்புக்கள், பதுங்கித் தாக்குதல்கள், காவலரண் மீது தாக்குதல்கள், தேச விரோதிகள் மீதான தாக்குதல், கடற்புலிகள் அணியில் சிறிதுகாலம் இருந்தபோது கடற்சண்டை என இதுவரை 55இற்கும் மேற்பட்ட களங்களைச் சந்தித்துச் சாதனை படைத்தவன் தேவன். இந்த நீண்ட களச் சாதனைகளின்போது பலமுறை அவன் விழுப்புண் அடைந்திருக்கின்றான். அவனது உடலெங்கும் காயத்தழும்புகள் சாட்சியமாய் இருக்கிறது. தலையில், தோள்மூட்டில், நெஞ்சுப் பகுதியில், மூச்சுப் பையில், தொடையில், காலில் என உடலின் பல்வேறு பகுதிகளிலும் விழுப்புண் தழும்புகள். இந்த விழுப்புண்களை அவன் ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.

தன் தாய்நாட்டிற்காகத் தான் மட்டுமல்லாது போராளி அல்லாத தன் மனைவியோடும், குழந்தையோடும் தேவன் அதிகம் சாதித்த மாவீரன். ஒரு போர் வீரன். களத்தில் சண்டையிடுவதற்கு குடும்பம் ஒரு சுமையல்ல. அது துணையென்று நிரூபித்தவன் தேவன். இறுதி நாட்களில் அவன் மணலாறு மாவட்டத்தில் பகுதிப் பொறுப்பாளராகக் கடமையாற்றினான். தன் பணியைச் சரிவர நிறைவேற்றுவதில் இங்கும் கடுமையாய் உழைத்தான்.

இந்த வீரன்தான் 29.03.2007 அன்று மணலாற்றுப் பகுதியில் எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வித்தாகிப் போனான். வித்துக்கள் புது வீரியத்தோடு முளைவிடும். அந்த வீரியம் இந்தத் தேசத்தை எப்போதும் காத்துநிற்கும்.

நினைவுப்பகிர்வு:- புரட்சிமாறன்.
வெளியீடு : விடுதலைப்புலிகள் (பங்குனி, சித்திரை 2007) 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

https://www.thaarakam.com/news/119864

 

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.