Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜூன் 29

இந்தப் பத்தியாளர், ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதியின் தமிழாக்கம் இதுவாகும். இந்தக் கட்டுரையானது, இலங்கைத் தமிழ் மக்கள், சுயநிர்ணய உரிமை கோரலின் வரலாற்றையும் அதன் சூழலையும் சுருக்கமாக ஆராய்கிறது. அத்துடன், ‘சுயநிர்ணய உரிமை’க்கு உள்ளேயும் வெளியேயும் ஆக, இருவகைக் கருத்தாக்கங்களைச் சுருக்கமாக மறுபரிசீலனை செய்கிறது. அத்துடன், இலங்கைத் தமிழ் மக்களின், சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது தொடர்பில், சந்திரசோமா எதிர் சேனாதிராஜா வழக்குத் தீர்ப்பின் அரசமைப்பு சார் முக்கியத்துவத்தை, மதிப்பீடு செய்யவும் முனைகிறது.  

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமை கோரல்  

இலங்கையில், 1976 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், செல்வாக்கு மிகுந்த அரசியல் கூட்டணியாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (TULF), 1976 ஆம் ஆண்டில், தமிழ் மக்களின் ‘சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்’ தமிழ் மக்களுக்காக, ஒரு தனி அரசை ஸ்தாபிப்பதாக அறிவித்தது.  

இந்த அறிவிப்பு, இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில், ஒரு திருப்புமுனையாகும். ஏனெனில், கொலனித்துவத்துக்குப் பிந்தைய இலங்கையில், முதன்முறையாகத் தமிழ் மக்களின் முக்கிய பிரதிநிதிகள், சிறுபான்மை இனத்தின், தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான பிரிவினைக்கான (secession) உரிமைகோரலை விடுத்திருந்தனர்.  

சேர் பொன். அருணாச்சலம், 1921இல் ‘இலங்கை தேசிய காங்கிரஸ்’ இல் இருந்து விலகிய பின்னர், தமிழீழத்தின் ஒன்றுபடுதலையும் ஒற்றுமையையும் ஊக்குவிப்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், அது பிரிவினைக்கான கோரிக்கை என்பதை விட, பெரும்பான்மை மேலாதிக்கத்தின் எழுச்சியின் சூழமைவில், தமிழ் மக்களிடையேயான இனம், தேசியம் சார்ந்த ஒற்றுமைக்கான அழைப்பாகவே அமைந்தது.   

சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில், தமிழ் மக்களின் தலைமைகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் யாவும், சிங்கள-பௌத்த தேசத்தின் பெரும்பான்மை மேலாதிக்கத்தைத் தடுக்கும் பொருட்டிலான அதிகாரச் சமநிலையையும் சிறுபான்மையினம், பெரும்பான்மையினம் ஆகிய சமூகங்களுக்கிடையில் பிரதிநிதித்துவச் சமநிலையையும் பற்றியதாகவே அமைந்திருந்தன.   

இந்தியா, பாகிஸ்தானைப் போல, பிரிவினை (secession) அல்லது பிரிப்பு (partition) ஆகியவற்றுக்கான கோரிக்கைகள், தமிழ்த் தேசத்திடமிருந்து எழவில்லை. சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில், 1976இன் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ வரை, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளாக அதிகாரப் பகிர்வு, சுயாட்சி ஆகியவையே இருந்தன.  

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி முன்வைத்திருந்தாலும், அதிகாரப் பகிர்வு, சுயாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட, ஓர் அரசியல் சமரசத் தீர்வைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வமாகவே இருந்தது.   

2000ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக் கூட, அதிகாரப் பகிர்வு, சுயாட்சி ஆகியவற்றின் அடிப்படையில், ஓர் அரசியல் தீர்வுக்காகச் சமரசம் செய்யத் தயாராக இருந்தது. சுருங்கக் கூறின், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், பல தசாப்தங்களாக நடைபெற்ற பகட்டாரவாரப் பேச்சுவார்த்தைகள், எத்தகைய அரசியல் வடிவத்தை எடுத்திருந்திருப்பினும் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, சுயாட்சி ஆகிய நான்கு அடிப்படைக் கொள்கைகள்தான், எப்போதும் அடித்தளமாக இருந்து கொண்டிருந்தன. 

‘சுயநிர்ணயம்’ என்ற கருத்தியல்  

சுதந்திர இலங்கையில், அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் எல்லாமே, தமிழ் மக்களின் சுயாட்சி, சுயநிர்ணய உரிமை ஆகிய கோரிக்கைகளை, விருப்பம் இன்மையுடனேயே அணுகின. இதற்குக் காரணமாக, பிரிவினை என்பதை, சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலின் தவிர்க்க முடியாத விளைவாகக் கருதியமையும் இலங்கையின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில், அரசாங்கங்கள் தீவிரமாக இருந்தமையும் ஆகும்.   

இது, ‘சுயநிர்ணய உரிமை’ என்ற கருத்தியலை, அதன் வெளியகப் பரிமாணத்தில் மட்டும் பொருள் கொள்வதாலும், ‘மக்கள்’ என்ற வார்த்தையை வரையறுப்பதில், ஓர் ஆட்புல ரீதியிலான அணுகுமுறையை எடுத்துக்கொள்வதாலும் ஏற்படுவதாக இருக்கலாம்.  

மக்களின் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியல், அமெரிக்காவின் சுதந்திர அறிவிப்பு, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அரசமைப்புகளின் தோற்றக் காலமளவுக்குப் பழைமையானதெனினும், சுயநிர்ணய உரிமை என்ற நவீன கருத்தியலானது, முறையான ஆளும் அதிகாரம் என்பது, ஆளப்படுவோரின் அனுமதியிலிருந்து பிறக்க வேண்டும் என்ற வில்சோனிய கண்ணோட்டத்திலிருந்து பிறக்கிறது.   

எவ்வாறாயினும், முதலாவது உலக யுத்தத்தைப் தொடர்ந்து, ஐரோப்பாவில் புதிய அரசுகள் தோற்றம் பெற்ற போது, சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலானது, சீரற்றதாகவும் தன்னிச்சையான முறையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்துடன், இது சர்வதேச வழக்கங்களின் அடிப்படையிலான சட்டத்தின் (International customary laws) ஒரு பகுதியாக அங்கிகரிக்கப்பட்டு இருக்கவில்லை.  

1945ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தின் போது, ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 1(2), 55(c) சரத்துகளில், ‘சம உரிமை, மக்களின் சுயநிர்ணய உரிமை (equal rights and self-determination of peoples) ஆகியவற்றின் அடிப்படையிலான தேசங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

ஆயினும், சுயநிர்ணய உரிமை என்பது, கொலனித்துவத்துக்கு உட்பட்ட பிரதேசத்துக்குப் பொருந்தும் வகையில், ‘கொலனித்துவ நீக்கலுக்கான உரிமை’ என்று மட்டுமே கருதப்பட்டதேயன்றி, சிறுபான்மை இனக் குழுக்களுக்கோ, அந்த எல்லைக்குள் உள்ள வேறுபட்ட மக்கள் பிரிவுகளுக்கோ பொருந்துவதாகக் கருதப்படவில்லை.   
இதன் பின்னர், மக்கள்களின் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலானது, 1966 இல், ‘சர்வதேசப் பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை’ (ICESCR), சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகியவற்றில், உரிமையாக முன்வைக்கப்பட்டது. ICESCR, ICCPR இன் பிரிவு 1 (1) இதைப் பின்வருமாறு வழங்கியது. ‘எல்லா மக்கள்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அந்த உரிமையின் மூலம், அவர்கள் தங்களது அரசியல் நிலையை சுதந்திரமாக நிர்ணயிப்பதுடன், அவர்களின் பொருளாதாரம், சமூகம், கலாசாரம் ஆகியவற்றின் மேம்பாட்டை, சுதந்திரமாக முன்னெடுக்க முடியும்’.  

‘மக்கள்களின் சுயநிர்ணய உரிமை’ பற்றிய மேற்குறித்த சரத்து, குறித்த உரிமையின் நோக்கம், அரசியல் நிலை, மக்கள்கள் என்ற சொற்றொடர்களின் பொருள்கள், பல கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.   

இதில், அரசியல் நிலை என்பது, ஓரரசு தொடர்பிலான உள்ளகம், வெளியகம் ஆகிய நிலைகளை உள்ளடக்கி இருந்ததா என்பதும், முக்கிய கேள்வியாக உருவெடுத்தது. சுயநிர்ணய உரிமை என்பதைப் பொருள்கோடல் செய்த, ‘நட்புறவுகள் பற்றிய பிரகடனம் (Declaration of Friendly Relations), மக்களின் தொடர்ச்சியான சுயநிர்ணய உரிமையை ஆமோதித்தாலும், சம உரிமைகள், மேற்குறித்த மக்கள்களின் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுக்கு அமைவாகத் தங்களை நடத்தும், அதனடிப்படையில் தமது பிராந்தியத்தின் அனைத்து மக்களையும் இன, மத, நிற வேறுபாடின்றிப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்தைக் கொண்ட இறையாண்மையையும் சுயாதீனத்தையும் கொண்டமைந்த நாடுகளின் ஆட்புல ஒருமைப்பாட்டையோ அரசியல் ஒற்றுமையையோ முற்றிலுமாகவோ, பகுதியாகவோ சிதைக்கும் எந்தவொரு செயலையும் அங்கிகரிப்பதாகவோ, ஊக்குவிப்பதாகவோ எதுவும் கருதப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

அத்துடன், ஒவ்வோர் அரசும், இன்னோர் அரசின் தேசிய ஒற்றுமை, ஆட்புல ஒருமைப்பாட்டுக்குப் பகுதியளவில் அல்லது மொத்தமாக இடையூறு விளைவிப்பதை நோக்கமாகக் கொண்ட, எந்தவொரு நடவடிக்கையில் இருந்தும் விலகியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. இது, மக்கள்களின் சுயநிர்ணய உரிமை, இறையாண்மையுள்ள அரசுகளின் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான இழுபறிப் போரைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.  

சுயநிர்ணய உரிமையைச் செயற்படுத்துவதிலும், இந்த மக்கள்களின் சுயநிர்ணய உரிமை, இறையாண்மையுள்ள அரசுகளின் ஆட்புல ஒருமைப்பாடு என்ற முரண்பட்ட நலன்களைச் சமாதானப்படுத்துவதிலும், சுயநிர்ணய உரிமையின் வெளியக, உள்ளகப் பரிமாணங்கள் என்ற வேறுபாடு, முக்கியத்துவம் பெறுகின்றன.  

மக்கள்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான சட்டபூர்வமான நிலையை எடுத்துரைத்ததில், கியூபெக் மாநிலத்தின் பிரிவினை தொடர்பிலான குறிப்பிடல் வழக்கில், கனடிய உச்சநீதிமன்றம் பின்வருமாறு பதிவு செய்கிறது. “சர்வதேச சட்டத்தில், அங்கிகரிக்கப்பட்ட மூலாதாரங்கள், சுயநிர்ணய உரிமையானது பொதுவாக உள்ளகச் சுயநிர்ணய உரிமை மூலம் நிறைவேற்றப்படுவதாக நிறுவுகிறது. அதாவது, ஒரு மக்கள் கூட்டம் அதன் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாசாரம் ஆகியவற்றின் மேம்பாட்டை, ஏற்கெனவே இருக்கும் அரசின் கட்டமைப்புக்குள் முன்னெடுத்தலைச் சுட்டுகிறது. வெளிப்புற சுய உரிமையானது, மிகத் தீவிரமான சந்தர்ப்பங்களில் மட்டுமே எழுகிறது. அப்போதும் கூட, கவனமாக வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மட்டுமே அது எழுகிறது”.  

எனவே, மேற்குறித்த விடயங்களின் அடிப்படையில், சர்வதேச சட்டங்களின் கீழ், மக்கள்களின் சுயநிர்ணய உரிமை என்பதன் நுணுக்கமானதும் வரையறுக்கக் கடினமானதுமான பொருள்கோடலை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கும் போது, மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை (ஒரு மக்கள் கூட்டம், தமக்குரிய அரசியல், பொருளாதாரம், ஆட்சியைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை) தொடர்ச்சியான உரிமையாகப் பரவலாக அங்கிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, மக்களின் வெளியகச் சுயநிர்ணய உரிமை (பிரிவினை கொலனித்துவ சூழமைவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவோ, மிகக் கொடுமையான மனித உரிமை) மீறல்கள் நிகழ்த்தப்படும் மிகக்குறுகிய சந்தர்ப்பங்களின் போது, அதற்கான தீர்வாகவும் மட்டும் அங்கிகரிக்கப்படும் ஒன்றாகிறது எனலாம்.  

மக்கள்களின் சுயநிர்ணய உரிமையானது, இலங்கையில் எவ்வாறு பொருள்கொள்ளப்படுகிறது, இந்தப் பொருள்கோடல் சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கின் தீர்ப்புடன் என்ன மாற்றத்தைச் சந்தித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, மேற்சொன்ன கருத்தியல் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.  

இந்தக் கட்டுரையின் அடுத்த பகுதி, இலங்கையில் மக்கள்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் அதில், சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கு ஏற்படுத்தியிருக்கும் முக்கிய தாக்கம் பற்றியும் ஆராயும்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையின்-அரசமைப்புச்-சட்டத்தில்-சுயநிர்ணய-உரிமை/91-252562

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை: கணிசமான முன்னேற்றம்

image_6018218e15.jpg

சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கு  

இலங்கையின் அரசமைப்பானது, இலங்கை ஒரு ‘சுதந்திரமான, இறையாண்மை, கொண்ட ஜனநாயக சோசலிச குடியரசு’ என்றும், இலங்கை ஓர் ‘ஒற்றையாட்சி அரசு’, ‘இறையாண்மை மக்களிடையே உள்ளது; அது அழியாதது’ என்றும் பிரகடனம் செய்கிறது.   

இந்தப் பிரகடனங்கள், இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிப்படியேறிய அரசாங்கங்களால் புனிதத்தன்மையுடனும் பேரார்வத்துடனும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே, இலங்கை அரசமைப்புக்குச் செய்யப்பட்ட ஆறாவது திருத்தத்தின் மூலம், இலங்கை அரசமைப்பின் 157அ சரத்தினூடாக, ‘இலங்கையின் ஆட்புலத்துக்கு உள்ளாகத் தனியரசொன்று தாபிக்கப்படுவதற்கு, ஆளெவரும் இலங்கைக்குள் அல்லது இலங்கைக்கு வௌியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு அளித்தல், ஆக்கமளித்தல், ஊக்குவித்தல், நிதியுதவுதல், ஊக்கமளித்தல், பரிந்துரைத்தல் ஆகாது’ என்ற ஏற்பாடும், ‘அரசியற்கட்சி, வேறு கழகம், ஒழுங்கமைப்பு எதுவும், இலங்கையின் ஆட்புலத்துக்கு உள்ளாகத் தனி அரசொன்றைத் தாபித்தலைத் தனது இலக்குகளில், குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டிருத்தலாகாது’ என்ற ஏற்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டது.   

சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கில், மனுதாரர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக் கோரலானது, பிரிவினைக் கோரிக்கைக்கு ஒப்பானதாகும் என்றும், ஏனெனில் ‘சுயநிர்ணய உரிமை என்பது, ஒரு சுதந்திர அரசை அடைவது. சுயநிர்ணய உரிமை கொண்ட மக்கள், சுதந்திரமாக வேறோர் அரசின் ஒரு பகுதியாக, இணைந்துகொள்ள விரும்பினால், அவர்கள், தங்கள் விருப்பப்படி பிரிந்து செல்லும் உரிமையைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்பதாகும்.   

ஏனென்றால், ஒரு ‘மக்கள்’ தங்கள் அரசியல் நிலையை, முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே நம்பகமான வழி, அவர்களின் பொருளாதார, சமூக, கலாசார மேம்பாட்டைக் கட்டுப்படுத்த ஒரே வழி, ஒரு சுதந்திர அரசாகும். ஆகையால், பிரிந்து செல்வதற்கான உரிமை என்பது, சுயநிர்ணய உரிமையின் ஓர் அங்கமாகும்.   

இருப்பினும், சுயநிர்ணய உரிமையைப் பெற்ற மக்கள், தாம் விரும்பும் சந்தர்ப்பத்தில் பிரிவினைக்கான உரிமையைப் பயன்படுத்தாது இருக்கலாம். ஆகவே, மனுதாரர்கள் உயர்நீதிமன்றிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியானது, தனது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையூடாக, அரசமைப்பின் 157அ சரத்தை மீறியுள்ளது என்று அறிவிக்கக் கோரியிருந்தனர்.   

இலங்கை உயர்நீதிமன்றம், ‘மக்களின் சுயநிர்ணய உரிமை’ என்ற கருத்தை ஆராய்ந்தது; இது இரண்டாவது முறையாகும். ஆனால், இந்த முறை, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்ற குறிப்பிட்ட சூழலில், உயர்நீதிமன்றம் இதை ஆராயத் தலைப்பட்டது.  

இலங்கையின் அரசமைப்பும் மக்கள்களின் சுயநிர்ணய உரிமையும்  

2008ஆம் ஆண்டு, சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (ICCPR) ஏற்பாடுகளுடன், இலங்கையின் அரசமைப்பின் ஏற்பாடுகள் பொருந்திப்போகிறதா என்று அறிய, இலங்கையின் ஜனாதிபதி உயர்நீதிமன்றிடம் அதன் கலந்தாய்வு நீதியதிகார வரம்பின் கீழான அபிப்பிராயத்தை வேண்டிய குறிப்பொன்றை அனுப்பியிருந்தார்.   

இதன்படி, இலங்கையின் உயர் நீதிமன்றமானது, மக்கள்களின் சுயநிர்ணய உரிமை என்பதை ஆராய்ந்திருந்தது. Centre for Policy Alternative (Guarantee) Ltd and Three Others (In the matter of a Reference under Article 129(1) of the Constitution) ([2009] 2 SLR 389) என்ற இந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயமானது, அன்றைய பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவால் வழங்கப்பட்டது. அவரோடு மற்றைய நான்கு நீதியரசர்கள் இணங்கியிருந்தார்கள்.  

குறித்த அபிப்பிராயமானது, சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் முதலாவது சரத்து பிரகடனம் செய்யும், ‘சுயநிர்ணய உரிமை’யை கொலனித்துவ நீக்க காலத்துக்குரிய, ஐ.நா பொதுச் சபையின் தீர்மானம் 2625 (XXV)இன் அடிப்படையில், பொருள்கோடல் செய்திருந்தது.   

குறித்த அபிப்பிராயமானது, ‘மக்களின் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலானது, கொலனித்துவநீக்கச் சூழலில் மட்டுமே பொருந்தும் என்பதுடன், ஒரு சுதந்திர அரசின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில், அதைப் பயன்படுத்தவோ, விளக்கவோ முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தது.   

குறித்த வழக்கில், ‘உள்ளக சுயநிர்ணய உரிமைக்கான சட்டரீதியான அங்கிகாரத்துக்காக’ வேண்டுகோள் விடுத்த 01, 02 தலையீட்டு மனுதாரர்களுக்கான சட்டத்தரணி சமர்ப்பித்ததைக் கருத்தில் கொண்ட உயர்நீதிமன்றம், இலங்கை குடியரசின் அரசமைப்பின் 3 வது பிரிவின் படி, இலங்கையின் இறையாண்மை மக்களிடையே உள்ளது; அது மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்பட முடியாதது. ஆகவே, ஒட்டுமொத்த மக்களிடமே இறையாண்மை உள்ளது. எனவே, எந்தவொரு குழுவோ, மக்களின் மொத்தத்தின் ஒரு பகுதியோ, சுயநிர்ணய உரிமைக்குத் தனி உரிமை இருக்க வேண்டும் என்று வாதிட முடியாது என்று உயர்நீதிமன்றம் அபிப்பிராயம் வழங்கியிருந்தது.   

உயர்நீதிமன்றத்தின் இந்த அபிப்பிராயமானது, கொலனித்துவநீக்க சூழலுக்கு மட்டுமே, சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலை மட்டுப்படுத்துகிறது. மேலும், சுயநிர்ணய உரிமைக்கு, குறிப்பிட்ட அரசமைப்பு அல்லது சட்டரீதியான அங்கிகாரம் தேவையில்லை என்றும் உரைக்கிறது.  

இவ்வாறு உரைப்பதன் மூலம், குறித்த அபிப்பிராயத்தில், சுயநிர்ணய உரிமையைத் தொடர்ச்சியான உரிமையாக அங்கிகரிக்கத் தவறிவிட்டது. மேலும், இந்த அபிப்பிராயத்தின படி, ஓர் அரசின் இறைமையும் ஆட்புல ஒருமைப்பாடும் ‘மக்கள்களின் சுயநிர்ணய உரிமைக்கு’ போட்டியான கருத்தியல் என்ற தோற்றப்பாடும் உருவாகிவிடுகிறது.   

இதைவிடவும், சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ‘மக்கள்கள்’ என்ற பன்மையை, இந்த அபிப்பிராயம் மறைமுகமாக மறுக்கிறது. அத்துடன், இலங்கை மக்களை மொத்தமாக, ஒரே ஒற்றைத் தன்மையில் ‘இறையாண்மை’ என்ற கருத்தியலுடன் இணைத்துக் கருதுகிறது. இதன் விளைவாக, மறைமுகமாக சிறுபான்மையினத் தேச மக்களின் ‘உள்ளக சுயநிர்ணய உரிமை’ என்ற கருத்தை நிராகரிக்கிறது.   

மேலும், இந்த அபிப்பிராயமானது, 1970ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நா பொதுச் சபையின் தீர்மானம் 2625 (XXV)இற்குப் பிறகு, சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியல் தொடர்பில் ஏற்பட்ட மாற்றங்களை, நீதித்துறை, புலமைத் தளத்தில் சுயநிர்ணய உரிமை தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றங்களைக் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.  

தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையும் சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கும்  
சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கில், பிரதம நீதியரசர் பிரியசத் டெப், மற்றைய இரண்டு நீதியரசர்களின் இணக்கத்துடன் வழங்கிய தீர்ப்பானது, உயர்நீதிமன்றத்தின் முந்தைய ‘சுயநிர்ணய உரிமை’ தொடர்பான சுருக்கமான அபிப்பிராயத்துடன் ஒப்பிடும்போது, மக்களின் சுயநிர்ணய உரிமை குறித்து, ஒரு குறிப்பிட்ட பார்வையை முன்வைக்கிறது.   

அத்துடன், உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலை, அங்கிகரிப்பதாக அமைகிறது. குறித்த தீர்ப்பில், பிரதம நீதியரசர் டெப், ‘க்யூபெக்’ பிரிவினை குறிப்பு மனுமீது, கனடிய உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்மானத்தை மேற்கோள் காட்டி, ‘மக்கள் தங்களின் தற்போதைய அரசின் கட்டமைப்புக்குள் சுயநிர்ணயத்தை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றும், ‘மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது அதன் எல்லைக்குள் வாழும் மக்கள்களை, சமத்துவத்தின் அடிப்படையில், பாகுபாடின்றி, அதன் உள்ளக ஏற்பாடுகளில் சுயநிர்ணயக் கொள்கையை மதிக்கும் அரசாங்கத்தைக் கொண்ட அரசானது, சர்வதேசச் சட்டத்தின் கீழ், தனது ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும், அதன் ஆட்புல ஒருமைப்பாட்டை ஏனைய அரசுகள் அங்கிகரிக்கும் உரிமையைக் கொண்டுள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.   

மேலும், சர்வதேச நீதிமன்றம் கொசோவோ தொடர்பில் வழங்கியிருந்த அபிப்பிராயத்தில், நீதிபதி ட்ரின்டேட் தனது வேறான அபிப்பிராயத்தில் குறிப்பிட்டிருந்ததன் படி, சுயநிர்ணய உரிமையின் உள்ளக, வௌியகப் பரிமாணங்களை மீளுணர்த்தியதுடன், சுயநிர்ணய உரிமையானது கொலனித்துவநீக்க காலத்தையும் தாண்டி, வலிதாகும் கருத்தியல் என்பதையும் மேற்கோள் காட்டியிருந்த பிரதம நீதியரசர் டெப், “சுயநிர்ணய உரிமைக்கு, ஓர் உள்ளகப் பரிமாணம் உள்ளது என்பது தெளிவாகிறது. அதில் நாட்டுக்குள் உள்ள ஒரு ‘மக்களின்’ நன்மைக்காக, அது நாட்டுக்கு உள்ளாகப் பயன்படுத்தப்படலாம். ஆகவே, சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையானது, ஒரு தனி அரசுக்கான கோரிக்கையாக அமையாது. ஏனெனில், சில நேரங்களில் இந்த உரிமையானது ஏலவே உள்ள அரசின் எல்லைக்குள், உள்ளக ரீதியில் பயன்படுத்தப்படுகிறது” என்று தீர்ப்பளித்திருந்தார். இது, இலங்கை அரசமைப்புச்சட்ட வரலாற்றில், ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.   

இலங்கையின் உயர்நீதிமன்றம், முதன்முறையாக ‘உள்ளக சுயநிர்ணய உரிமை’ என்ற கருத்தின் செல்லுபடியாகும் தன்மையையும் அது, இலங்கையின் அரசமைப்புக்கும் ஏற்புடையதாக அமைவதையும் சந்தேகத்துக்கு இடமின்றி அங்கிகரித்தது.  

மேலும், நீதிபதி பிரயசத் டெப், தனது தீர்ப்பில், பிரதிவாதிகள் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) தரப்பில் செய்த ‘சுயநிர்ணய உரிமைக்கான சர்வதேச சட்டத்தின் கீழ்’ குறித்த உரிமைக்கு உரித்துடையவர்களாக இருப்பது ‘மக்கள்கள்’ தான், மேற்கூறிய சர்வதேச உடன்படிக்கைகளின்படி தமிழ் மக்கள் ஒரு தனித்த ‘மக்கள்’. எனவே, தமிழ் மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு”, என்ற சமர்ப்பணத்தை எந்தவொரு மறுப்பும் கண்டனமும் குழப்பமும் இல்லாமல், தனது தீர்ப்பில் மீளக்குறிப்பிட்டு இருந்தமையை, தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை, உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவே கருதலாம். இதுவும் குறித்த தீர்ப்பின் இன்னொரு முக்கிய மைல்கல்லாகும்.  

ICCPR, ICESCR ஆகிய சர்வதேச உடன்படிக்கைகள் குறிப்பிடும் ‘மக்கள்கள்’ என்ற பதத்துக்கான பொருள்கோடல் மிக நீண்டகாலமாக தொக்கிநிற்கும் ஒன்றாகவே இருந்தது.  

‘மக்கள்’ என்றால் யார் என்பதற்கான பொருள்கோடல், பல தசாப்தங்கள் கழித்து, 1990இல் கிடைத்தது. 1990ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) மக்களின் உரிமைகள் பற்றிய கருத்தியல் கற்கைகள் தொடர்பிலான தௌிவுறுத்தல்களுக்காகச் சர்வதேச நிபுணர்களின் சந்திப்பை நடத்தியிருந்தது.  

அந்தச் சந்திப்பின் அறிக்கையானது, ‘மக்கள்’ என்ற பதத்தைப் பின்வருமாறு வரையறுத்தது. ‘மக்கள்’ எனப்படுவோர், பின்வரும் பொதுவான அம்சங்கள் சிலவற்றையோ அல்லது, எல்லாவற்றையோ அனுபவிக்கும் தனிப்பட்ட மனிதர்களைக் கொண்ட குழு ஆகும்.   

(அ) பொதுவான வரலாற்றுப் பாரம்பரியம்.  
(ஆ) இனம் (race or ethnicity) என்றதோர் அடையாளத்தைக் கொண்டிருத்தல்.  
(இ) கலாசார ஒருமைத் தன்மை.   
(ஈ) மொழி ஒற்றுமை.  
 (உ) மதம், கருத்தியல் இணைப்பு.  
(ஊ) ஆட்புல இணைப்பு.  
(எ) பொதுவான பொருளாதார வாழ்க்கை.   

மேலும், குறித்த குழுவானது, ஒரு குறித்த எண்ணிக்கையைக் கொண்டதாக அமைய வேண்டும். எனினும், அவ்வெண்ணிக்கை பெரியதாக இருக்கத் தேவையில்லை. ஆயினும், இது ஒரு மாநிலத்துக்கு உள்ளான, தனிநபர்களின் ஒன்றியத்தை விடப் பெரியதாக இருக்க வேண்டும். குறித்த குழுவுக்குத் தாம், ஒரு மக்கள் என்று, அடையாளப்படுத்தும் விருப்பு இருக்க வேண்டும்; அல்லது, தாம் ஒரு மக்கள் என்ற பிரக்ஞை இருக்க வேண்டும்.   

குறித்த குழுவானது, அதன் பொதுவான குணாதிசயங்களை வெளிப்படுத்துவதற்கான, தமது அடையாளத்தை, வௌிப்படுத்துவதற்கான நிறுவனங்களை, வேறு வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது, மேற்குறிப்பிட்ட அம்சங்களில் சிலவற்றையேனும் கொண்டிருக்கும் தனிமனிதர்களின் குழுவானது, அந்தக் குழு சாதாரண ஒரு சங்கத்தைவிட, அதிக மக்கள் தொகையைக் கொண்டிருப்பதுடன், அந்த மனிதர்களின் குழு, தம்மைத் தனித்ததொரு மக்களாக அடையாளப்படுத்தும் விருப்பையும் அந்த அடையாளம் தொடர்பான பிரக்ஞையையும் கொண்டிருப்பதுடன், அதற்கான நிறுவனங்கள், அதனை வௌிப்படுத்துவதற்கான வேறு வழிமுறைகளைக் கொண்டிருந்தால், அந்தத் தனிமனிதர்களின் குழு, தனித்ததொரு ‘மக்கள்’ என்று கருதப்படும்.  

சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கின் தீர்ப்பில், இந்த அம்சங்கள் கருத்திலெடுக்கப்பட்டு இன்னும் விரிவாக அலசப்பட்டிருந்தால், அது மேலும் சிறப்பாகவும், தௌிவானதொரு நிலைப்பாட்டை உறுதியாக வௌிப்படுத்தும் தீர்ப்பாகவும் அமைந்திருக்கக்கூடும்.   

ஆயினும், தமிழ் மக்கள் ஒரு தனித்த ‘மக்கள்’; அவர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு என்ற கருத்தைப் பிரதிவாதிகளின் சமர்ப்பணத்தை மீளவுரைப்பதன் மூலம், குறித்த தீர்ப்பு வலியுறுத்தி இருந்தது.   

எது எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டு, உயர்நீதிமன்றம் ‘சுயநிர்ணய உரிமை’ தொடர்பில் அளித்திருந்த அபிப்பிராயத்திலிருந்து சந்திரசோம எதிர் சேனாதிராஜா தீர்ப்பு, கணிசமான முன்னேற்றமாக அமைந்திருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையின்-அரசமைப்புச்-சட்டத்தில்-சுயநிர்ணய-உரிமை-கணிசமான-முன்னேற்றம்/91-252846

Edited by உடையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.