கொழும்பில், ஈரான் கப்பல் விவகாரம்
--- --- ---
*அநுரா அல்ல, ரணில் ஜனாதிபதியாக இருந்தாலும் அதையே செய்திருப்பார்!
*டில்லி தமிழர் பக்கம் முழுமனதோடு இல்லை என்ற உண்மையை இனிமேலாவது ஏற்றுக் கொள்ளுங்கள்...
*மிலிந்த மொறகொடவில் இருந்து ரில்வின் வரை...
--- --- ---
மிலிந்த மொறகொட இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக, அதாவது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரின் அதிகாரங்களுடன், 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை பதவி வகித்திருந்தார்.
கோட்டாபய, ரணில் ஆகியோர் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது இவர், தூதுவராக இருந்தார்.
அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மாநிலங்களுக்குச் சென்று. ஈழத்தமிழர் விவகாரத்தை, இலங்கையின் உள்ளக விவகாரமாக மாற்றும் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டவர்.
அத்துடன் ---
தென்னிந்தியாவின் பெருங்கற்கால (Megalithic) வரலாறுகளை மேற்கோள் காண்பித்து ஆயிரம் ஆண்டு காலம் என்று கூறி, வரலாறுகளை திரிபுபடுத்தி சிங்களவர்கள் - ஆரியர்கள் என்ற இரு இனமும் இரடடையர்கள் (Twin civilization) அதாவது ”இரட்டை நாகரிகம்” என வரலாற்றை மாற்றியவர், இந்த மிலிந்த மொறகொட.
2009 இல் இறுதிப் போர் நடைபெற்ற போது இந்தியா, ஈழத்தமிழர் பக்கம் சென்றுவிடாமல், மிலிந்த மொறகொட உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவை உருவாக்கி, போரில் தமிழர்களைப் பாதுகாப்பது மற்றும் மனிதாபிமான பணிகள் பற்றிய தகவல்களை வழங்கிக் கொண்டிருந்ததாக, மகிந்தவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க ஆங்கில இணையம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார்.
இவை பற்றி எல்லாம் எனது அரசியல் பத்தி எழுத்துக்களில் நான் பல தடவை சுட்டிக்காட்டி வருகிறேன்.
அக் கட்டுரைகள் இப்போதும் பொருந்துகின்றன. கூர்மை இணையத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் சஞ்சீவி ஞாயிறு இதழில்களிலும் உண்டு. எனது முகநூலிலும் பார்க்கலாம்.
அன்று மிலிந்த கையாண்ட அதை அணுகுமுறையை இன்று அநுர அரசாங்கமும் கையாளுகின்றது.
அதன் காரண - காரியத்தோடு தான் இப் படத்தை இன்று மீள்பதிவு செய்தேன்.
கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், சிங்கள தலைவர்கள், வடக்கு கிழக்குத் தமிழர் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நின்று தான் செயற்படுவர் என பல ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறேன்.
ஊடகங்களுக்கு வழங்கிய பல நேர்காணல்களிலும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். நான் மாத்திரமல்ல வேறு சில அரசியல் பத்தி எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர்.
ஆனால் --
தமிழ்த் தேசிய கட்சிகளின் உறுப்பினர்கள், தேர்தல் அரசியல் நோக்கில் மாத்திரமே ஒன்றினைவது அல்லது அப்படியான தோற்றத்தைக் காண்ப்பிக்கின்றனர்.
ஆனால், இந்தியாவை எப்படி கையாள்வது, குறிப்பாக காங்கிரஸ் அரசாங்கம் தான் பிரச்சினைக்குரியது. ஆனாலும், பாஜாக அரசாங்கத்தை அணுகுவது பற்றிய உத்தி ஒன்றை வகுத்திருக்கலாம் அல்லவா? ஆனால் பொருத்தமான பரிசோதனை செய்யப்படதாக தெரியவில்லையே? இப்போது காலம் கடந்து விட்டதே?
ஆனால் சிங்கள தலைவர்கள், ஜேஆர் காலத்தில் இருந்து, இன்றைய அநுர வரையும் புவிசார் அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து ஒருமதித்த குரலாகக் கையாண்டு வருகின்றனர்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கொழும்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு துணிவோடு நேர்காணல் வழங்கிய பின்னர் தான், டில்லியில் மிலிந்த தூதுவராக பதவியேற்றிருந்தார்.
மிலிந்த எடுத்து வைத்த அதே அடியைத் தான், ரில்வின் சில்வா சென்ற மாதம் இந்தியாவுக்கு சென்று இன்னும் ஒருபடி மேலே காய் நகர்த்தியிருக்கிறார்.
அதேவேளை, இதே மிலிந்ததான், 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சு நடைபெற்றபோது, உலகம் எல்லாம் சென்று, தமிழர்களின் போராட்டம் ”இனவாதம்” ”பயங்கரவாதம்” என்று கூறி இராஜதந்திரப் பிரச்சாரம் செய்தவர்.
ஆகவே --
2009 ஆம் ஆண்டு புவிசார் அரசியலும், 20026 ஆம் ஆண்டு உருவாகியுள்ள புவிசார் அரசியல் பதற்றமான சூழலும், இலங்கைக்குச் சாதகம் தான்.
ஈரான் கப்பல் விவகாரத்தை அநுர கையாண்ட விதம் முட்டாள் தனமானது என சில விமர்சனங்கள் வருகின்றன.
ஆனால் --
இந்திரா காந்தி காலத்தில் இருந்து புதுடில்லி, கையாளும், இரட்டைத் தன்மையான சர்வதேசக் கொள்கைக்குள் (Dual International Policy) புகுந்து கொண்டு தான், இலங்கை சீவியம் நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். (இரட்டை சர்வதேசக் கொள்கை என்பது புவிசார் அரசியல் சூழலைப் பொறுத்து)
இந்திரா காந்தி காலத்தில் இருந்து, டில்லி முழு மனதோடு தமிழர் பக்கம் இல்லை என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ளுங்கள். மலையகத் தமிழர் விடத்திலும் இந்தியா ஒப்பாசாரமான தலையசைப்புத் தான்.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0b7rQtxsCbX5VCgouPij4QhUnKt2yo2fq96hhFXneu86dcJ3PDkxKTmUpPXjVPgYbl&id=1457391262&mibextid=wwXIfr
By
ஈழப்பிரியன் ·