Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மையினரை துண்டாடும் சதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மையினரை துண்டாடும் சதி!

-சத்ரியன்

நாடாளுமன்றத்தில் பெற்றுக் கொண்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, தலைகால் புரியாமல் ஆடத் தொடங்கியிருக்கிறது அரசாங்கம்.

மாகாணசபைகளை இல்லாதொழிக்கும் நிகழ்ச்சி நிரல் அதில் முதலாவது.

spacer.png

தற்போதுள்ள மாகாண சபைகளுக்குப் பதிலாக புதியதொரு நிர்வாக அமைப்பை உருவாக்க முனைவது இரண்டாவது.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் அடையாளம், தனித்துவத்தை முற்றாக இல்லாதொழிப்பதில், சிங்கள பௌத்த  பேரினவாதம் மிக சூட்சுமமாகத் திட்டமிட்டுச் செயற்படுகிறது.

காலத்துக்குக் காலம் ஒவ்வொரு தரப்புகள் அதற்கென தலையெடுக்கின்றன. தலைமை தாங்குகின்றன.

தமிழரின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதில், சிங்கள பௌத்த பேரினவாதிகள் ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தார்கள். 

ஆளும்கட்சி எதிர்க்கட்சி வேறுபாடின்றி அதனைக் கொண்டாடினார்கள்.

அதுபோல, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, இந்தியாவின் அழுத்தங்களால் இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகள் ஒன்றிணைந்தே செயற்பட்டார்கள்.

இப்போது சிங்கள பௌத்த அரசாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கையில், தமிழ், மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரை நசுக்குவதற்கான பல்வேறு கட்ட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதில் ஒன்று தான், மாகாண சபைகளையும் இல்லாமல் ஒழித்து அதிகாரப் பகிர்வு கோரிக்கையை வலுவிழக்கச் செய்வது.

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை சிதைப்பதற்காகவே, தற்காலிகமாக இணைக்கப்பட்ட அந்த மாகாணங்களை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக சிங்கப் பேரினவாதம் பிரித்தது.

எனினும், வடக்கு மாகாணம் இன்னமும் தமிழரின் ஆதிக்கம் பெற்றதாகவே இருக்கிறது. 

கிழக்கில் தமிழரின் ஆதிக்கம் குறைக்கப்பட்டிருக்கிறது.

ஆயினும், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்களை பறித்தெடுப்பதற்கு சிங்களப் பேரினவாதம் காலம்காலமாக தன்னால் இயன்றவற்றை செய்து வருகிறது.

ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமுமே, காணி, பொலிஸ் அதிகாரங்களை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை.

13 ஆவது திருத்தச் சட்டத்தில், காணி பொலிஸ் அதிகாரங்கள் இருக்கும் வரையில் தான், அத்தகைய அதிகாரங்களைக் கோரிப் போராட்டங்கள் நடத்தப்படும் என்பதை உணர்ந்துள்ள சிங்களப் பேரினவாதிகள் இப்போது அடுத்தகட்ட செயற்திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதுதான் 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் அதன் மூலமாக மாகாண சபைகளையும் இல்லாமல் ஒழிப்பது.

இதனைச் செய்வதன் மூலம், தமிழர்களின் அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படைக் கட்டுமானத்தை முற்றாக ஒழிக்கலாம் என்று பேரினவாதிகள் திட்டம் போடத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்போது இலங்கையில் ஒற்றையாட்சி முறையே இருந்தாலும், மாகாண சபைகள் என்றொரு எச்ச நிலை அதிகாரப்பகிர்வு கட்டமைப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இது வலுவான அதிகாரப் பகிர்வு கட்டமைப்பாக இல்லாவிடினும், தமிழர்கள் அதனை அடிப்படையாக கொண்டு அப்பால் செல்ல முனைவர்கள் என்ற பயம் பேரினவாதிகளுக்கு இருக்கிறது.

அதனால் அந்தப் பயத்தை இல்லாமல் செய்வதற்கு மாகாண சபைகளை ஒழித்து விடலாம் என்று கணக்குப் போடுகிறார்கள்.

அதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் களமிறக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தான் சரத் வீரசேகர .

அவரை மாகாணசபைகளுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சராக நியமித்திருக்கிறார் ஜனாதிபதி.

இதன் மூலம் மாகாண சபைகள் இருக்கும் வரை அதனை கட்டிப் போட்டு வைக்கலாம் என்று கருதுகிறார் போலும்.

அடுத்து அவரை வைத்தே அதனை ஒழிப்பதற்கும் திட்டம் போடுகிறார்.

ஆனால் அது இலகுவான விடயமல்ல, ஏனென்றால், இந்த மாகாண சபைகளுடன் இந்தியாவும் தொடர்புபடுகிறது.

இந்தியாவே, இதனை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது. தமிழர் பிரச்சினைக்கான தீர்வாக இந்தியா செய்த பரிந்துரைதான் இந்த மாகாண சபைகள்.

அவ்வாறான ஒரு தீர்வை இல்லாமல் செய்யும் போது இந்தியாவைப் பகைக்க நேரிடும்.

அவ்வாறு செய்யாமல், அதனை நிறைவேற்றுவதற்கே, மாகாண சபையை வெள்ளை யானை என்று வர்ணித்த மிலிந்த மொறகொடவை புதுடெல்லிக்கான தூதுவராக நியமிக்கவிருக்கிறார் ஜனாதிபதி.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரித்து, அதற்கு இருந்த சிறப்புரிமைகளை இல்லாமல் செய்தது போன்று, தாங்களும் செய்யப் போகிறோம் என்ற ஒரு காரணத்தை இந்தியாவிடம் முன்வைத்தால், புதுடெல்லி அதிகார வர்க்கம் வாயை மூடிக் கொள்ள வேண்டியிருக்கும்.

அவ்வாறான ஒரு நகர்வைத் தான் தற்போதைய அரசாங்கம் பின்பற்றுகிறது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை, மக்களின் ஆணை போன்றவற்றைக் கொண்டு இந்த காரியத்தை நிறைவேற்ற முனைகின்றன பேரினவாத குழுக்கள்.

இவர்களின் அடுத்த திட்டம் இன்னும் ஆபத்தானது, தற்போதுள்ள ஒன்பது மாகாண சபைகளையும் இல்லாமல் ஒழித்து விட்டு,  பண்டைய காலத்தில் இலங்கையில் இருந்ததைப் போன்ற மூன்று நிர்வாக அலகுகளை உருவாக்குவதே அந்த திட்டம்.

ருகுணு ரட்ட, ரஜ ரட்ட, மலய ரட்ட ஆகிய பண்டைக்காலத்தில் இருந்ததைப் போன்ற நிர்வாக அலகுகளை உருவாக்க வேண்டும் என்ற யோசனை சிங்கள பௌத்த பேரிவாதிகளால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த யோசனை சரத் வீரசேகரவிடமே முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவர் அதனை ஆராய்ந்து வருவதாக கூறியிருக்கிறார்.

இது குறித்து இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை ஆலோசனையாக மாத்திரமே இருக்கிறது என்பதை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசும் உறுதி செய்திருக்கிறார்.

இலங்கையை ஒற்றையாட்சிக் குடியரசு என்றவர்கள், மாகாணசபைகளே தேவையில்லை அவையெல்லாம் வெள்ளை யானை என்றவர்கள்- ஏன் மூன்று நிர்வாக அலகுகளை உருவாக்க வேண்டும் என்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

இந்த மூன்று அலகுகளை உருவாக்குவதன் மூலம், தமிழரின் கைகளில் எந்தவொரு மாகாணமும், அல்லது நிர்வாக அலகும் இல்லாமல் செய்யப்படும்.

வடக்கும் கிழக்கும் தனித்தனியாக துண்டாடப்படும்.

தமிழரின் பெரும்பான்மை எந்த மாகாணத்திலும் இல்லாமல் செய்ய்யப்படும்.

வடக்கும், திருகோணமலையின் வடக்கும் அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் வேறு சில பகுதிகளும் ரஜ ரட்டக்குள் வந்து விடும்,

கிழக்கு ருகுணு ரட்டவுக்குள் சென்று விடும்.

மலையகம் மலய ரட்டவுக்குள் சிக்கி விடும்.

மொத்தத்தில், தமிழ், முஸ்லிம்களை தனித்தனியாக மூன்று அரசுகளுக்குள்ளேயும் சிறுபான்மையினராக முடக்குவதே இந்த திட்டம்.

சிறுபான்மையினரின் தாயக கோட்பாட்டை நிராகரித்து, அவர்களிடம் அதிகாரங்கள் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி இது.

இதனை செய்ய முனையும் போது, இந்தியாவினால் அவ்வளவாக எதிர்க்க முடியாது. 

ஏனென்றால், இந்தியா முன்வைத்த மாகாண சபை முறைமாற்றப்படாது. 9 சபைகள் 3 ஆக குறையும். 

எனவே இந்தியா அதிக எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாது,

ஆனால், மாகாண சபையை வெள்ளை யானை என்றவர்கள், இதற்காக ஒதுக்கப்படும் நிதி வீண் என்றவர்கள், ஏன் மீண்டும் 3 அலகுகளை உருவாக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாது.

சிங்களப் பேரினவாதிகள் தமிழரை ஒடுக்குவதற்கு இதுபோன்ற வழிகளை இன்னும் இன்னும் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.

ஏனென்றால், அவர்களிடம் இப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. 

அதனை வைத்துக் கொண்டு அவர்கள் ஆட்டம் போடுகிறார்கள். அந்தப் பலம் இருக்கும் வரை அவர்களின் ஆட்டத்தை அடக்க முடியாது
 

https://www.virakesari.lk/article/90330

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.