Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தேகங்களை களைவாரா ‘மாவை’?

Featured Replies

சந்தேகங்களை களைவாரா ‘மாவை’?

-புருஜோத்தமன் தங்கமயில் 

தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை என்பது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்தும் செயன்முறையாக மாத்திரம் இருந்து விடக்கூடாது என்று, சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் சுட்டிக்காட்டி இருந்தார்.   

இதையடுத்து, அவரை அவசர அவசரமாகச் சந்தித்த மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையின் தேவையையும் அதன் செயற்பாட்டு நோக்கங்களையும் குறித்து விளக்கமளித்து இருக்கின்றார்.  

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டமொன்றைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்கிற அடிப்படையில் மாவை சேனாதிராஜா முன்னெடுத்திருந்தார். அந்த முயற்சி மீது, ஆரம்பத்தில் இருந்து சந்தேகங்கள் இருந்தாலும், நினைவேந்தலுக்கு எதிரான தடையை, ஒற்றுமையாகத் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்தன.   

ஆரம்பத்தில், அதில் ஆர்வம் கொண்டிராத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், பொது விடயம் என்கிற அடிப்படையில் பட்டும் படாமலும் தன்னை இணைத்துக் கொண்டது. நீதிமன்றத்தின் தடையுத்தரவுகளைத் தாண்டி, சாவகச்சேரியில் தமிழ்க் கட்சிகளால் உண்ணாவிரதப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடிந்தது.  

எனினும், தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான இந்த ஒற்றுமையும் ஒருங்கிணைந்த செயற்பாடும் தொடர்பிலான முன்னெடுப்பு என்பது, இதயபூர்வமானதா என்கிற கேள்வி பலரிடமும் இருக்கின்றது.   

தமிழ்க் கட்சிகளின் ஒன்றுமை என்பது, கூட்டமைப்பைப் பலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலாக இருந்துவிடக்கூடாது என்று, விக்னேஸ்வரன் குறிப்பிட்டதும், அதன் போக்கிலானதுதான்.  

தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளும் தொடர்பான அணுகுமுறைகள் குறித்து, கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி ஆகிய தரப்புகளுக்கு எதிராகத் தற்போது, மேல் எழுந்துள்ள சில சந்தேகங்களைக் கவனிக்கலாம்.  

1. பொதுத் தேர்தலில் படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ள கூட்டமைப்பு, (குறிப்பாகத் தமிழரசுக் கட்சி), தன்னை மீளக் கட்டமைப்பதற்கான ஒரு யுக்தியாகத் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவைக் கையிலெடுத்து இருக்கின்றது.  

2. கூட்டமைப்புக்கு உள்ளேயே, வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில், தங்களை ஸ்திரப்படுத்துவதற்காகத் தோற்றுப்போனவர்கள் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கை.  

3. மாகாண சபைத் தேர்தல் வரவிருக்கின்ற நிலையில், கூட்டமைப்புக்குள் தோற்றுப்போனவர்கள் அடுத்த தேர்தலுக்காகத் தங்களைத் தயார்படுத்தி, பிரபலம் பெறுவதற்கான முயற்சி.  

மேற்கண்ட மூன்று சந்தேகங்களையும், கூட்டமைப்பும் மாவை சேனாதிராஜாவும் முதலில் களைய வேண்டும். ஏனெனில், பொது நோக்கில் ஒருங்கிணைந்து செயற்படுவது என்று, தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் போது, திறந்த உரையாடலும் உண்மைத்தன்மையும் இருக்க வேண்டும்.   

மாறாக, தேர்தலுக்கான திட்டங்கள் இருக்குமாயின், அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். தமிழ்த் தேசிய கட்சிகளைப் பொது நோக்கங்களுக்காகக் கூட, மீண்டும்  ஒருங்கிணைக்கும் கட்டங்களை இல்லாமல் செய்துவிடும். கண்ணுக்கு முன்னாலேயே, அதற்கான உதாரணங்கள் நிறைய உண்டு.  

அதன் அண்மைய உதாரணமாக, தமிழ் மக்கள் பேரவையைக் குறிப்பிடலாம். மக்கள் இயக்கமாகத் தன்னை முன்மொழிந்து கொண்டு, விரைவாக எழுந்த பேரவை, ஒரு கட்டத்தில் விக்னேஸ்வரனுக்குக் கட்சியொன்றை ஆரம்பித்துக் கொடுக்கும் நிலைக்குள் சுருங்கியது.   

அது, சிவில் அமைப்புகளையும் அதன் இணக்க சக்திகளையும் பொதுநோக்கில் இணைத்துச் செயற்படலாம் என்கிற நம்பிக்கையைத் தகர்த்தது. சிவில், சமூக அமைப்புகள், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் அழுத்தக் குழுக்களாக நிலைபெற வேண்டும்; அதன் மூலம், தமிழ்த் தேசிய கட்சிகளை வழிப்படுத்த முடியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதைப் பேரவை நீர்த்துப் போகச் செய்தது. அப்படியான நிலையொன்றை நோக்கி, தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை என்கிற செயற்பாடு சென்றுவிட முடியாது.  

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்காக, அவசர அவசரமாகத் தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டன என்று சொன்னாலும், அதில் இணைக்கப்பட்டவர்கள், இணைக்கப்படா -தவர்கள் சார்ந்து, ஆரம்பத்திலேயே சந்தேகமும் எழுந்துவிட்டது.   

அத்தோடு, அந்த ஒருங்கிணைவு என்கிற நிலைப்பாட்டை, யாழ்ப்பாணத்துக்குள் மாத்திரம் சுருக்கிக் கொண்டமையானது, ஒருவித அசூசையான நிலைப்பாட்டை யாழ்ப்பாணத்து வெளியில் ஏற்படுத்தியது.   

வன்னியிலோ, கிழக்கிலோ தமிழ்க் கட்சிகளின் ஒருங்கிணைவு என்கிற நிலைப்பாடு கவனம் பெறவில்லை; அதற்கான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. அது, கிட்டத்தட்ட யாழ்ப்பாணத் தலைவர்கள் தங்களுக்குள்ளேயே பேசி, முடிவெடுத்துச் செயற்படும் விடயமாக வெளித் தெரிந்தது.  

தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள ஏனைய கட்சிகளை இணைக்க முடிந்த மாவை சேனாதிராஜாவால், கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களையோ, நாடாளுமன்ற உறுப்பினர்களையோ பெரியளவில் ஒன்றிணைக்க முடியவில்லை. அது ஒரு கட்டத்தில், தோற்றுப்போனவர்கள் மாத்திரம் சேர்ந்திருக்கும் கூட்டாகவே பார்க்கப்பட்டது. அது, மக்களிடம் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.  

மாகாண சபைத் தேர்தல்கள், அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. அப்படியான நிலையில், பொதுத் தேர்தலில் தோற்றவர்கள், மாகாண சபைத் தேர்தலில் ஆசனங்களைப் பெற்று, வெற்றிபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்கிறார்கள். குறிப்பாக, தமிழரசுக் கட்சிக்குள் அந்த நிலை காணப்படுகின்றது.   

பொதுத் தேர்தலில் மிகமோசமான வேட்பாளர் தெரிவு மூலம், மக்களிடம் தோற்றுப்போன தலைவர்கள், மீண்டும் அவ்வாறான வேட்பாளர் தெரிவொன்றை மாகாண சபை நோக்கியும் நகர்த்துவது போல தெரிகின்றது. அதன்போக்கிலான நடவடிக்கையாக, தமிழ்த் தேசிய கட்சிகளை  ஒருங்கிணைக்கும் முயற்சியாக, அதில் பங்கெடுக்கும் சிலர் முன்னெடுக்கிறார்கள்.   

ஆரம்பக் கட்டச் சந்திப்புகளில், தங்களுக்கிடையிலான உரையாடல்களில் மாகாண சபைத் தேர்தல் வெற்றி- தோல்வி குறித்து உரையாடிய சந்தர்ப்பங்களும் உண்டு. அப்படியான நிலையில், இந்தக் கூட்டு முயற்சிகளில் விக்னேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.  

முதலில், தேர்தல் இலக்கோடு இருக்கின்ற நபர்களை, இவ்வாறான பொதுநோக்கு முயற்சிகளில் முன்னிறுத்துவதைத் தவிர்த்துவிடுவது அவசியமானது. அதைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் கட்சிகளை ஒருங்கிணைக்க முன்நின்றவராகவும் இருக்கும் மாவை சேனாதிராஜா செய்ய வேண்டும். அதுதான், ஏனைய கட்சிகளிடம் காணப்படுகின்ற சந்தேகங்களைக் களைவதற்கான முதல் வழி.   

மாறாக, அந்தத் தலைவர்களைச் சந்திப்பதாலோ, தொலைபேசியில் உரையாடுவதாலோ பலன் ஏற்பட்டுவிடாது. அத்தோடு, சொந்தக் கட்சிக்குள் அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்காக, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை எனும் செயற்பாட்டைக் கையாள்வதை தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கைவிட வேண்டும்.  

ஒரு செயற்பாட்டை, பொது நோக்கில் முன்னெடுக்கும் போது, சுயநல சிந்தனைகளைத் துறந்துவிட்டு முன்வர வேண்டும். அதுதான், அந்தச் செயற்பாட்டை ஆக்கபூர்வமாக அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதற்கு உதவும். ராஜபக்‌ஷர்கள் என்கிற ‘சர்வாதிகார சிந்தனையாளர்கள்’ ஆட்சியில் ஏறியிருக்கின்ற நிலையில், அவர்களை எதிர்கொள்ளுதல் என்பது, தவிர்க்க முடியாதது.   

அப்படியான நிலையில், எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையினராகக் காணப்படும் தமிழ் மக்களும், அவர்களின் அரசியல் சக்திகளும் ஒருங்கிணைந்து செயற்படுதல் என்பது, மிகவும் அவசியமானது. அதன்போக்கில், தமிழ்க் கட்சிகளின் ஒருங்கிணைவு முக்கியமானது.   

ஆனால், அந்த ஒருங்கிணைவு என்பது, சந்தேகங்கள் களையப்பட்டு, திறந்த மனதுடனான முயற்சியாக நிலைபெற வேண்டும். மாவையும் விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் அதற்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சந்தேகங்களை-களைவாரா-மாவை/91-257434

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஒற்றுமையாக செயற்பட்டுள்ளோம்’ -மாவை. சேனாதிராசா பேட்டி

 
01072015_mavai-696x391.png
 22 Views

தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றியும், தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலுக்காக ஏனைய தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளுடன் இணைந்து போராடி, நினைவு நிகழ்வை முன்னெடுத்தது பற்றியும் இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை. சேனாதிராசா அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேக நேர்காணலை இங்கு தருகின்றோம்.

  1. பத்து தமிழ்க் கட்சிகளை தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுடன் ஒன்றிணைத்திருக்கின்றீர்கள். இந்த ஒற்றுமை, வெறுமனே அவ்வப்போது வரக்கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான ஒன்றாக மட்டும் இருக்கப் போகின்றதா? அல்லது ஒரு அமைப்பு ரீதியானதாக, இதன் செயற்பாடுகள் அமையுமா? இதில் உங்களுடைய திட்டம் என்ன?

பதில்:

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தடை செய்வதற்கான ஏற்பாடுகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் அறிந்திருந்தோம். அந்த வகையில், வடக்கு கிழக்கு முழுவதும் பரவலாக நீதிமன்றங்களின் ஊடாக  எமக்கு எதிராக தடைகளை போட்டு வந்தார்கள். குறிப்பாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் என தனித்தனியாகவும் தடைகளை அறிவித்து வந்தனர்.

20842138_1620742784637004_36370150102974

இந்த நிலையில் தான், நாம் அனைவரும் இணைந்து குறித்த தடைக்கு எதிராகப் போராட வேண்டும் என முடிவெடுத்தோம். உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செய்யும் உரிமையை தடை செய்யாமல் அங்கீகாரம் வழங்க வேண்டும் எனக் கோரி, தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து, 14 பேர் கையெழுத்திட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதத்தை அனுப்பியிருந்தோம். அவர்களிடமிருந்து பதில் கிடைக்காத காரணத்தினால், இறுதியாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்தோம். அதற்கும் பல தடைகள் போடப்பட்டன. அதையும் மீறி நாம் அந்த போராட்டத்தை சாவகச்சேரியில் முன்னெடுத்தோம். அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு தழுவிய செயற்பாட்டு முடக்க போராட்டத்தை முன்னெடுத்து, அதில் வெற்றி கண்டோம்.

கட்சிகளின் ஒற்றுமையை வரவேற்ற வடக்கு கிழக்கை சோந்த 4 மாவட்ட ஆயர்கள் இணைந்து எமக்கு ஒரு கடிதத்தினை அனுப்பி வைத்தனர். நாம் ஒற்றுமையாக செயற்பட்டுள்ளோம் எனவும், மக்களும் இதையே எதிர்பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்து ஒற்றுமையான செயற்பாட்டை  தொடர்ந்து வழிநடாத்துங்கள் என கோரியிருந்தார்கள். அது உற்சாகமாக இருந்தது. அதன் அடிப்படையில் தமிழ் மக்களின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய மீண்டும் கட்சிகள்  ஒன்று கூடினோம்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஒன்றுபட்டு ஆராய்ந்து, அதன்படி செயற்படுவதாக தீர்மானித்துள்ளோம். இது ஒரு கட்டமைப்பாக செயற்படுவதற்கு குழு அமைத்துள்ளோம்.

unnamed-1.jpg

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கடந்த காலங்களில் இணைந்திருந்த கட்சிகளைத்தான் இப்போது நீங்கள் மீண்டும் இணைத்திருக்கின்றீர்கள். தமிழரசுத் தலைமை மீது அவர்களுக்கு கடுமையான அதிருப்திகள் ஏற்கனவே இருக்கின்றது. அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் வகையில் என்ன செய்யப் போகின்றீர்கள்?

பதில்:

உடனடியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆரம்பத்தில் அனைவரும் ஒன்றுகூடினோம்.   எதிர்காலத்தில் எவ்வாறு இயங்குவது என்பது பற்றித் தான் நாம் கலந்துரையாடினோம். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, அரசியல் தீர்வு, ஜெனீவாத் தீர்மானங்கள் பற்றி ஒன்றாக எதிர் நோக்குவோம் என்ற தீர்மானத்தைத் தான் எடுத்துள்ளோம்.

விமர்சனங்கள் பொதுவானவை. அது தொடர்பான விவாதங்கள் இருந்தாலும், அதற்கும் அப்பால், பொதுமக்களின் நலன் சர்ந்து இயங்குவதற்காக ஒன்றுகூடியுள்ளோம் என்பதே உண்மை. தற்போது சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சி வந்துள்ளது. எனவே அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றே நாம் பேசி வருகிறோம்.

எம்மீதுள்ள விமர்சனங்களுக்கு அப்பால், தமிழ் மக்களின் விடுதலைக்காக ஒன்றாக இருப்பதற்கே நாம் இணைந்துள்ளோம். ஓன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதே எமது நம்பிக்கையும், தேவையுமாக உள்ள காரணத்தினால், எம்மீதுள்ள விமர்சனங்களை சீர்படுத்தி, எதிர்காலத்தில் அவ்வாறு விமர்சனங்கள்  இல்லாமல் செய்து, அனைவருடனும் சேர்ந்து செயற்படுவதே எமது நோக்கம்.

  1. இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை. அனந்தி சசிதரன் வெளிநடப்புச் செய்ததாகச் சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளையும் ஓரணிக்குள் கொண்டு வருவது எப்படிச் சாத்தியமாகும்?

பதில்:

கூட்டங்களுக்கு சமுகமளிக்காதவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டேன். அடுத்து ஏனைய கட்சித் தலைவர்களுடனும் பேசவுள்ளோம்.

கடந்த கால கசப்பான  சம்பவங்கள் தெரிந்திருந்தாலும், அதற்குத் தீர்வுகளை காண்பதுடன், ஒன்றாக செயற்பட வேண்டிய அவசியத்தை தமிழ் மக்கள் கோரியுள்ளார்கள். அதன் அவசியத்தை புரிந்து நாம் ஒன்றுபட வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

  1. இந்தியப் பிரதமர் மோடியுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உட்பட ஏனைய விடயங்களில் இந்தியாவினால் அழுத்தம் கொடுக்க முடியும் என நீங்கள் நம்புகின்றீர்களா?

பதில்:

இலங்கையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்தியாவுக்கு கடமைப் பொறுப்பு உள்ளது.  அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அர்த்தமுள்ள வகையில் அரசியல் தீர்வைக்  கொண்டு வருவது தொடர்பாகவும், இனப்பிரச்சினைத் தீர்வு குறித்தும் மோடி பேசியுள்ளார். அத்துடன்  ஜனநாயக உரிமைகள் தொடர்பில் பேசியுள்ளமையும் தமிழ் மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா அயல்-நட்பு நாடகவும், பல உடன்பாடுகளை எம்முடன் செய்துகொண்ட  நாடாகவும் இருப்பதால், இனப்பிரச்சினை,  பொருளாதரப் பிரச்சினை என்பவற்றில் தலையீடு செய்து, தீர்வு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களுடன் நாம் இது தொடர்பில்  தொடந்து பேச வேண்டியும் உள்ளது. அப்போதுதான் எமக்கான தீர்வு சாத்தியமாகும்.

  1. இன்றைய சூழலில் இந்த அரசு கொண்டுவரப்போகும் அரசியலமைப்பு, தமிழ் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்க்கும் என நம்புகின்றீர்களா? இல்லையெனில், உங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்?

பதில்:

நம்பிக்கை தரும் எனக் கூற முடியாது. அது பாராளுமன்றில் வரும்போது எவ்வாறு உருவாக்கப் பேகிறார்கள் என்பதை பொறுத்துத்தான் அரசுடன் பேச முடியும். ஓன்றுபட்டு எமது கருத்தை முன்வைப்போம். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த அரசு பெரும்பான்மையினரின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. குறித்த பெரும்பான்மையைப் பயன்படுத்தி  அவர்கள் இனப்பிரச்சினையைத் தீர்க்க நினைத்தால், தீர்க்க முடியும் என்ற எடுகோளை சர்வதேசத்துக்கு முன்னால் கூற விரும்புகிறோம். அத்துடன் வரவிருக்கும் அரசியலமைப்பில் கட்டாயம் அரசியல் தீர்வு உள்ளடக்கப்பட வேண்டும் என்றும்  தெரிவித்து வருகிறோம்.

IMG_7676.jpg

6.இன்றைய சூழலில் ஈழத் தமிழ்த்தேசிய அரசியல் இராசதந்திர நகர்வுகள் எத்தகைய மூலோபாய, தந்திரோபாய திட்டங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்?

பதில்:

எமது  பிராந்தியத்தின் முக்கியத்துவம் கருதி, அயல் நாட்டு இராஜதந்திரிகள் பேச்சுக்களை முன்னெடுத்து வருகிறார்கள்.  மனித உரிமை பேரவைத் தீர்மானம் கடந்த வருடங்களை விட தற்போது  மற்றமடைந்துள்ளது. குறித்த தீர்மானம் எவ்வாறு எமக்கு  உதவியாக இருக்கப் போகிறது என்ற கேள்விகளுக்கு மத்தியில், உலக அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள், நிபுணத்துவம் வாய்ந்தவர்கள், எமது தமிழ் கட்சித் தலைவர்கள் மற்றும்   சர்வதேச சமூகத்துடன் நாம் பேச வேண்டும். அவர்களுடன் எந்தவகையான மூலோபாய, தந்திரோபாய நடவடிக்கைகளை செயற்படுத்தலாம் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். எதிர்காலத்தில் அவர்களின் கருத்துக்களை சரியாக திட்டமிட்டு  செயற்படுத்தினால்தான் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்பது எமது நம்பிக்கை.

 

https://www.ilakku.org/நாம்-ஒற்றுமையாக-செயற்பட/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.