Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

இரவில் டோர்ச் லைட் டின் வெளிச்சம் கூட தயங்கி தயங்கி நகரும் கடும் இருள் நிறைந்த வளவு. இலுப்பை மரங்களின் உச்சியில் தங்கி தூங்கும் வெளவால்களின் எச்சங்களால் நிறைந்திருக்கும் சிறு காடு போன்றது  இந்த வளவு. பகலில் ஆடுகளுக்கு குழை வெட்டுவதற்காக மட்டும் சிலர் வந்து போனாலும், பலர் உள் நுழையவே அஞ்சும் தோற்றத்துடன் உள்ள இந்த வளவின் மண்ஂணுக்குள் புதைக்கப்பட்ட பெண் போராளிகளின் ஆவிகள் இரா காலங்களில் நாவல்மரங்களில் மீதேறி இருந்து தமக்குள் அரட்டுவதை கேட்ககூடியதாக இருப்பதாகவும் திகில் நிறைந்ததாகவும் சப்தங்களால் நிறைந்து இருப்பதகாவும் அயல் சனங்களால் சொல்லப்படும் பெரும் வளவு இது.

அதன் மூலையில் என் சிறு குடில் . 

கொழும்புத்துறை வீதியில், கணக்கர் சந்திக்கு அருகில் இருக்கும் இந்த வளவுக்குள் நீண்டு செல்லும் ஒழுங்கையின் முடிவில் இருக்கும் இந்த காட்டு வளவின் மூலைக்குள் இரவில் நான் மட்டும் தனியாக நடந்து என் குடிலுக்குள் வரும் போது ஒரு போதும் நான் ஆவிகளின் சத்தங்களையோ அல்லது அயல் சனங்களால் சொல்லப்படும் எந்த பேய்களையுமோ பார்த்ததில்லை. இலுப்பை மரங்களின் இலைகளை சாப்பிட்டு விட்டு மந்தமாக அதே வளவுக்குள் படுத்து கிடக்கும் சில ஆடுகளை மட்டும் எப்பவாவது சில நாட்கள் பார்த்து இருக்கின்றேன். மற்றப்படி இந்த வளவு என் வாழ்வு.

என் பெயர் கோசலை. எனக்கு வயது எத்தனை என்று தெரியாது. எப்ப பிறந்தேன், எங்கு வளர்ந்தேன் என்று நினைவில்லை. மஸ்கெலியாவில் இருந்து ஆத்தையுடன் இந்த ஊருக்குள் வந்த எனக்கு கோசலை என்று பெயர் மட்டுமே சொந்தமாக இருந்தது. பின் 5 பிள்ளைகள் ஒவ்வொருவரால் பிறந்து எனக்கு என்று ஒரு குடும்பம் ஆனது. பின் அந்த ஐந்து பிள்ளைகளும் ஒவ்வொரு வீடுகளில் வேலைக்கு வீட்டுக்கார முதலாளிகாளால் கவரப்பட எஞ்சியது இந்த குடிலும் இரவில் சத்தம் போடும் வெளவால்களும் மட்டுமே

நான் நல்ல கறுப்பு, 

என்னை தொட்டு நெற்றியில் வைத்தால் போதும் கருப்பு பொட்டு உன் கலரில் இருந்தே வந்து விடும் என்று சொல்லும் அளவுக்கு நான் கருப்பு. ஆனால் நெற்றியில் ஒரு சிவப்பு பொட்டு வைத்து விட்டால் "அடியே உன்னை அடிக்க இந்த ஊரில் ஒரு அழகியும் இல்லையடி' என்று ஊரில் இருக்கும் பெண்கள் தம் வாயாலேயே சொல்லும் அளவுக்கு என் அழகு கூடிவிடும்.

இந்த அழகில் விழுந்தவர்கள் எல்லாம் ஒரு சில மணித்தியாலங்களில் தம் பசி தீர்த்த பின் சில சில்லறைகளை வீசி விட்டு விலகிச் சென்று விட மீண்டும் எனக்காக காத்திருப்பது இந்த வளவும் என் குடிலும் தான்.

சிவனே என்று இரவில் வந்து ஒரு தலையணையை என் குடிலில் இருக்கும் மண் நிலத்தில் போட்டு விட்டு படுத்தால் அப்படி ஒரு நித்திரை வரும். நான் நித்திரை கொண்டால் எவராலுமே எழுப்ப முடியாது. ஆனாலும்
இக் குடிலில் இருந்து ஐந்து நூறு அடிகள் எடுத்து வைத்தால் இருக்கும் பெரிய வீட்டில் இருந்து வேலைக்காரியாக இருக்கும் என் பத்து வயது மகள் அடி வாங்கி அலறும் சத்தத்தில் மட்டும் எப்படி விளிக்கின்றேனோ தெரியவில்லை. 

நாளைக்கு காலையில் எழும்பி வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற நினைவுடன் படுத்து விடியவே எழும்புகின்றேன்.எனக்கென்று மன்றாட ஒன்றும் இல்லையென்றாலும் என் ஐந்து பிள்ளைகளும் இப்படியே அடி வாங்கி சாகாமல் என்றாவது ஒரு நாள் கலியாணம் கட்டி நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நேர்த்தி வைக்கவாவது நான் ஒவ்வொரு செவ்வாயும் வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு போகின்றவள்.

ஒரு நாளாவது அம்மன் எண்ட நேர்த்தியை காதால கேட்காமலா விடுவாள். 

விடியவே எழும்பிட்டன். வளவின் இன்னொரு மூலையில் இருந்து காட்டுக் கிணற்றில் வாளி போட்டு குளித்து விட்டு காலம்பற 6 மணிக்கு போய் கணக்கர் சந்தியில் நிற்கின்றேன். கொஞ்ச நேரத்தில் வான் பஸ் வரும்.

இந்த காலையில் சைக்கிளில் ரியுசன் கிளாசுக்கு சில பிள்ளைகள் சைக்கிளில் போய்க் கொண்டு இருக்கின்றனர். அதில் கொஞ்சம் வளர்ந்த பெடியங்களும் போவதால் அந்த பெடியன் எனக்கு அருகில் வரும் மட்டும் அவனை நான் கவனிக்கவில்லை. 

கிட்ட வருகின்றான். 

அவனை எங்கோ பார்த்து இருக்கின்றேன் என யோசித்து அவன் யார் என்றதை நினைவுபடுத்த முன் அவன் என்னை நெருங்கிவிட்டான். 

அவன் யார் என நினைவுக்கு வருகின்றது. இனி ஓட முடியாது. ஏதாவது சொல்லி அனுப்பிவிடலாம். அம்மாளாச்சி மேல அடிச்சு சத்தியம் செய்தால் என்னை விட்டு விடுவான்.

அவன் விடவில்லை

அருகில் வந்தவன் "நீங்கள் எவ்வளவு சொல்லியும் திருந்தவில்லை" என்று சொல்கின்றான்.

பிஸ்டலை இடுப்பில் இருந்து எடுக்கின்றான்.

என் நெற்றியில் வைக்கின்றான்.

எனக்கு நல்ல வடிவாக இருக்கும் பொட்டில் துப்பாக்கி முனை அழுத்துகின்றது

வெடி வைக்கின்றான்

என் தலை சிதறுகின்றது

பின் மண்டை வழி வெளியே வந்த மூளை சிதறி சின்னஞ்சிறு துண்டுகளாக அருகில் இருக்கும் வேலிக் கதியால் எங்கும் மஞ்சளும் வெளுப்பும் நிறைந்த நிறத்தில் போய் ஒட்டிக் கொள்கின்றது.

மண்டையில் இருந்து வெளியேறிய இரத்தம் ஒரு சிறு தீவென விரைய, அதில் கிளைத்த இன்னொரு சிறு இரத்த தீவு எதையோ தேடி அலைந்தவாறு நீள்கின்றது.

தன்னை கொல்ல சொன்ன அறம் ஏன் தன்னை மட்டும் ஏன் கொல்கின்றது என்று நியாயம் கேட்பதற்காக அது விரைகின்றது போல...

என் இறுதி மூச்சு நிற்கும் முன்னர் என்னைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல கிடக்கு. 

அது எனக்காக அல்ல... 

நியாயம் தேடி விரைந்து கொண்டு இருக்கும் என் இரத்தத்தின் நீட்சி அமைதியடைய.

-தொடரும்
 

  • கருத்துக்கள உறவுகள்

அறம் என்பது??

மேலும் அறிய ஆவல்

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னே ஒரு அருமையான திறப்புக்களம் ! வடிவான எழுத்து. தொடர வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா வர முன் கொழும்பில் வசித்த காலத்தில் பலதும பத்துமாக தினமுரசு என்று ஒரு பத்திரிகை வரும். அதில் அனேகமாக இப்படியான கதைகள் தான் வரும்.அப்படித்தான் இவற்றை படிக்கும் போதும் இருக்கிறது.இருந்தாலும் நன்று தொடருங்கள்.

  • தொடங்கியவர்

பகுதி 2: தேவபிரானும் அம்மாளாச்சியும்

பெருஞ்சுழலாக பாலைவனப் புயல் வீசி தணிந்து இருந்தது. ஆயினும் புழுதி இன்னமும் சரியாக அடங்கவில்லை. பொழுது மம்மலாகவும் புழுதி படந்தும் இருந்தது.

தேவபிரான் தன் வெள்ளை அங்கி உடல் முழுதும் தவழ நடந்து வருகின்றார்.கண்களில் கருணை ஒளி அந்த மம்மல் வெளிச்சத்தில் இரண்டு வெள்ளிப்பூக்களாக மின்னுகின்றன. பூக்களின் வாசனையை ஒத்த நிறம் பாலை எங்கும்  கமழத் தொடங்குகின்றது. கருணை கொண்ட நெஞ்சத்தானின் கூரிய பார்வை நெடிய கோடொன்றை மண்ணில் வரைந்து செல்கின்றது.

அவளை அவர்கள் விரட்டி வருகின்றனர். 

எல்லோரின் கைகளிலும் அவளை கொல்வதற்காக கற்கள். 

அவளை நோக்கி கற்களை வீசிக் கொண்டே விரட்டுகின்றனர்.

சிலர் வீசும் கற்கள் அவளுக்கு மிக நெருக்கமாக விழத் தொடங்குகின்றன. அவள் பயத்தில் அலறியபடியே அந்த பாலை எங்கும் அங்குமிங்கும் ஓடுகின்றாள். கால்கள் துவளத்தொடங்குகின்றன. உடல் தளர்கின்றது. அவளுக்கும் விரட்டுகின்றவர்களுக்குமான இடைவெளி குறையத் தொடங்குகின்றது. அவர்கள் எறியும் கற்கள் அவளின் மேல் விழப் போகும் அளவுக்கு அவளுக்கும் அவர்களுக்குமான இடைவெளி மிகவும் சுருங்குகின்றது. 

இனி ஓடுவதற்கு தெம்பும் இல்லாமல் சரிந்து விழ போனவள் தேவபிரானை காண்கின்றாள்.

அவர் கால்களில் வீழ்கின்றாள். கண்ணீர் அவர் கால்களை நனைக்கின்றன.

அவளை நோக்கி கொல்வதற்காக விரட்டி வந்தவர்கள் தேவபிரானை கண்டவுடன் விரட்டுவதை நிறுத்துகின்றனர்.

அவர் அவளை வாஞ்சையுடன் கண்களில் இருந்து கருணை பெருக்கெடுக்க தொட்டுத் தூக்கின்றார்.

விரட்டி வந்தவர்கள் தேவபிரானை நோக்கி "இவள் ஒரு பாவி. பிற ஆடவருக்கு தன் உடலை விற்கின்ற பாவத்தை புரிகின்றவள். மரணதண்டனைக்குரியவள் " என்கின்றனர்.

தேவபிரான் அவர்களை நோக்கி "நல்லது, அப்படியே அவளுக்கு தண்டனை கொடுங்கள் ஆனால் உங்களில் எவர் எந்தப்பாவமும் செய்யவில்லையோ அவரே முதல் கல்லை அவள் மீது வீசட்டும்" என்கின்றார்.

விரட்டிவந்தவர்கள் தயங்கி நிற்கின்றனர். தம்மில் பாவங்கள் செய்யாத எவரும் இல்லை என்று உணருகின்றனர். 

தேவபிரான் அவளின் பாவத்தை மன்னிக்கின்றார். தேவபிரானுடன் சேர்ந்து விரட்டி வந்தவர்களும் அவளை மன்னிக்கின்றனர். அவளை மன்னிப்பதுன் மூலம் தங்கள் பாவங்களையும் கழுவுகின்றனர்.

அவள் விடுதலை அடைகின்றாள். 

***********************************

கணக்கர் சந்தியில் இருந்து பாசையூர் கடலை நோக்கி செல்லும் வீதியில் சற்று தூரம் கழிந்த பின் இரண்டு குளங்கள் உள்ளன. தண்ணீர் இருக்கும் காலங்களில் டோபி மார் வந்து உடுப்பு தோய்ப்பினம். குளங்களில் கொண்டு வந்த உடுப்புகளை தோய்த்து குளத்தின் கரைகளில் விரித்துப் போட்டு காயவைப்பினம். குளத்தின் நீரும் காயவைத்த உடுப்புகளின் விதம்விதமான நிறங்களும் அந்த இடத்தை வண்ணமயமாக்கும்.

வண்ணான் குளம் என்று அழைக்கப்படும் இக் குளங்களில் தண்ணி இல்லா காலங்களில் சின்ன பெடியல் வந்து பட்டம் விடுவினம். பாம்புப் பட்டமும், கழுகுப் பட்டமும் ஒன்றாக பறக்கும். பட்டங்களில் கட்டப்பட்டு இருக்கும் பாட்டு கசட்டில் இருந்து அறுத்து ஒட்டப்பட்டு இருந்த 'விண்' அடுத்தடுத்த ஊர்கள் வரைக்கும் கேட்கும்.
இக் குளங்களை கடந்து போனால், பெரும் விளையாட்டு மைதானம். அதையும் கடந்து போனால் பாஷையூர் புனித அந்தோணியார் கோயில் இருக்கும். அதன் பின்னால் சற்று தூரத்தில் இருக்கும் பாசையூர் கடலில் இருந்து வீசும் காற்று அந்தோணியாரை கோயில் எங்கும் நிறைந்திருக்கும் மெழுகுவர்த்தி வாசனையுடன் கலந்து ரம்மியமாக வீசும்.

அந்தோணியார் ஆலயத்தில் ஒவ்வொரு முறையும் பாதிரியார் தேவபிரான் அந்த பெண்ணை மன்னித்து விட்ட கதையை சொல்லும் போது எனக்குள் கண்ணீர் கசியத் தொடங்கும். என்னை அவர்கள் விரட்டி வருவதை கற்பனை செய்யத் தொடங்குவேன். விரட்டியவர்களில் என்னை தொட்டு பசியாறியவர்களும், பசியாக நான் இருக்கும் போது உணவு கொடுக்காதவர்களும், வீரமாகாளி அம்மன் கோவில் பூசகரும். சின்ராசும், மணியத்தாரும், ஜேக்கப்பும், பாக்கியம் அக்காவும், பரிசுத்த மலரும் நிற்பினம். எல்லாரது கைகளிலும் கற்கள் இருக்கும். செங்கலடி வீட்டில் கட்டிமுடிக்கப்படாத பகுதியில் இருந்து எடுத்த கொங்கிரீட்டும் இருக்கும். அவர்கள் என்னை கொல்ல நெருங்குகையில் தேவபிரான் வருவார். என்னை காப்பாற்றுவார். நான் விடுதலை அடைவேன்.

அந்தோணியார் கோவில் பிரசங்கத்தின் பின்னரும் இந்தக் கதை என் நெஞ்சுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும். என்னையும் கற்களால் எறிந்து கொல்லுவினமா என்று லேசாக பயம் வரும். ஆனாலும் தேவபிரான் அப்படி செய்ய விடமாட்டார் என எண்ணம் வரும் போது பயம் கலைந்து விடும். நானே வெள்ளை அங்கி அணிந்து சின்ராசுவையும், ஜேக்கப்பையும் மன்னித்து இரட்சிப்பதாக சிலவேளைகளில் இரவின் நடுச்சாமத்தில் கனவு வரும். கடைவாயிலில் மெல்லிய புன்னகை அந்த நித்திரையிலும் ததும்ப நிம்மதியாக உறங்கிப் போவேன். 

போன இரவும் அப்படி ஒரு கனவும் தேவபிரானும் சின்ராசுவும் கனவில் வந்து போயினர். ஆனால் இது தான் கடைசியாக காணும் கனவு என்று நினைத்து இருக்கவில்லை.

கணக்கர் சந்திக்கு பஸ் பிடிக்க அந்த காலையில் நான் வருவேன் என்று அந்த பெடியனுக்கு எப்படி தெரியும் என தெரியவில்லை. ஒவ்வொரு செவ்வாயும் நான் வருவது அவனுக்கு தெரிந்து இருக்கலாம்.

அவர்கள் அறியாமல் காற்று கூட வீசாது என்று கிளி அக்கா அடிக்கடி சொல்வது உண்டு. 

மூன்று கிழமைக்கு முன் ரத்வத்தையுடன் சேர்ந்து கொடி ஏற்றினவர்களில் தொக்கையரும் இருந்தவர் என்று அவர்கள் அறிந்து அவர் வீட்டில் இரவு புட்டுச்சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது சுட்டுக் கொன்றனர் என்றும், அவர் இரத்தம் வழிந்த புட்டுக் கோப்பையை மகள் கழுவாமல் அப்படியே வைத்திருக்கின்றாள் என்றும் கிளி அக்கா சொல்லும் போதும், அவர்கள் தொக்கையர் போன்றவர்களை தான் கொல்வார்கள் என்று இருந்து விட்டேன்.

இன்று அந்த பெடியன் என் நெற்றியில் துப்பாக்கி வைக்கும் போது கூட எப்படியும் என்னை விட்டுவிடுவார்கள் என்று நம்பிக்கொண்டு இருந்தேன். 

அவன் என்னை விடாவிட்டால் கூட, தேவபிரான் வந்து என்னை விடுவிப்பார் என்று நம்பிக்கொண்டு நின்றேன். 

வெள்ளை அங்கியுடன் வந்து என்னை மீட்டு பெடியனை தடுத்துவிடுவார் என்று நம்பிக்கொண்டு நின்றேன். 

தேவபிரான் வராவிடினும் அம்மாளாச்சியாவது என்னை காப்பாற்றுவார் என்று நினைத்தேன்

ஆனால்

தேவபிரானும் வரவில்லை
அம்மாளாச்சியும் வரவில்லை
சாவு மட்டுமே என்னை ஆட்கொள்கின்றது.

-தொடரும்

Edited by நிழலி
எழுத்துப்பிழை திருத்தம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.