Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அச்சுறுத்தும் இலங்கை!

Featured Replies

இலங்கை அரசு ஒரே நேரத்தில் பலமுனைகளில் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது மட்டுமின்றி மனித உரிமை அமைப்புகளின் மீதும் அது தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது சிங்கள அரசின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது ‘சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு’ (IIGEP) என்ற அமைப்பாகும். இந்தக் குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டதுதான். இதன் தலைவராக இருப்பவர் இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி ஆவார்.

ஆள் கடத்தல், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இலங்கை ராணுவத்தின் மீதும், போலீஸ் மீதும் கூறப்பட்டு வருகின்றன. அப்படி கூறப்பட்டவற்றில் நவம்பர் 2005-&க்குப் பிறகு நடந்த பதினாறு சம்பவங்கள் பற்றி விசாரிப்பதற்காக இலங்கை அரசாங் கத்தால் விசாரணை கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. அதில் இலங்கையைச் சேர்ந்த எட்டுப்பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 2006&ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது.

1948&ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை விசாரணை கமிஷன்கள் சட்டப்படி அதிபருக்கு எல்லையற்ற அதிகாரங்கள் உள்ளன. விசாரணை கமிஷனின் உறுப்பினர்கள் யாவரும் அதிபரின் கட்டுப் பாட்டுக்கு உட்பட்டவர்களென்று அந்தச் சட்டம் கூறுகிறது. விசாரணை கமிஷனின் தலைவரது ஒப்புதல் பெறாமலேயே கமிஷனின் உறுப்பினர்களை நீக்கவும், நியமிக்கவும் அதிபருக்கு அதிகாரம் உண்டு. எனவே, அந்தச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த விசாரணை கமிஷன் நடுநிலையாக இயங்க முடியாது என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் முதலிய மனித உரிமை அமைப்புகள் விமர்சித்து வந்தன.

இந்த நெருக்கடியின் காரணமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே இலங்கை அரசின் விசாரணை கமிஷனது நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், கண்காணிக்கவும் சர்வதேச குழு ஒன்று அமைக்கப்படுமென அறிவித்தார். பல்வேறு நாடுகளும் இந்தக் குழுவுக்கான உறுப்பினர்களை பரிந்துரைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ‘‘சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு’’ ஆகும். அதன் தலைவராக இருக்கும் நீதிபதி பி.என்.பகவதியைச் சேர்த்து மொத்தம் பதினோரு பேர் அந்தக் குழுவில் உள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஜீன் டூயி, பங்களாதேஷைச் சேர்ந்த டாக்டர் கமால் ஹ§சைன், சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த ஆன்ட்ரூ மாங்ரோ மாட்டிஸ் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இலங்கை அரசின் விசாரணைக் கமிஷனுடைய செயல்பாடுகளைக் கண்காணிப்பது மட்டுமின்றி ஆவணங்களைப் பார்வையிடவும், சாட்சிகளை விசாரிக்கவும் சர்வதேசக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இடைக்கால அறிக்கையன்றை அந்தக் குழு அதிபரிடம் அளிக்கவேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஜூன் முதல் தேதி சர்வதேசக் குழு தனது இடைக்கால அறிக்கையை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் வழங்கியது. அதை பெற்றுக்கொண்ட பின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக் கள் தமக்கு திருப்தியளிக்கின்றன என்று ராஜபக்ஷே கூறியிருந்தார்.

இலங்கை அரசால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனின் நடவடிக்கைகளைப் பற்றி அந்த அறிக்கையில் சர்வதேசக் குழு தனது அபிப்ராயங்களை விரிவாக எடுத்துரைத்திருந்தது. அந்த அறிக்கையில் சர்வதேசக் குழு எத்தகைய கருத்துக்களை தெரிவித்தது என்ற குழப்பம் மக்களிடம் நிலவிவந்த சூழலில்தான் பகிரங்க அறிக்கையன்றை சர்வதேசக்குழு வெளி யிட்டது.

விசாரணைக் கமிஷனின் நடவடிக்கைகள் பற்றித் தமது கடுமையான அதிருப் தியை சர்வதேசக் குழு அந்த அறிக்கையில் வெளிப்படுத்தி உள்ளது. ‘‘2006&ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டபோதிலும் 2007&ம் ஆண்டு மே மாதம் வரை அது முதற்கட்ட விசாரணைகளைக்கூட நடத்தவில்லை. விசாரணை மற்றும் சாட்சிகளைப் பாதுகாத்தல் முதலிய வற்றுக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப் படவில்லை’’ என்று சர்வதேசக் குழு வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளது. அதுமட்டு மின்றி ‘‘இலங்கையில் தற்போது நடந்து வரும் மனித உரிமை மீறல் களை விசாரிப்பதற்கான அதிகாரமோ, சக்தியோ விசாரணைக் கமிஷனுக்கும் இல்லை. சர்வதேசக் குழுவுக்கும் இல்லை. ஆனால், அத்தகைய அதிகாரம் இந்த அமைப்புகளுக்கு இருப்பதுபோல இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஒரு பொய்யான கருத்தைப் பரப்பி வருகின்றனர்’’ என்றும் அந்த அறிக்கையில் சர்வதேசக் குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

சர்வதேசக் குழுவின் இந்த அறிக்கை இலங்கை அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது. 2006&ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘ஆக்ஷன் கோந்தர் லா ஃபேம்’ என்ற தொண்டு நிறுவனத் தின் பதினேழு ஊழியர்கள் இலங்கையில் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையில் சுனாமி நிவாரணப் பணிகளைச் செய்து கொண்டிருந்த அந்த ஊழியர்களை வரிசையாக நிற்க வைத்து சிங்கள ராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டனர். திரிகோணமலை மாவட்டம் மூதூரில் நடந்த அந்தப் படுகொலை சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்வதேச நெருக்குதலின் காரணமாகவே ராஜபக்ஷே, விசாரணைக் கமிஷனை அமைத்தார். அதன் பின்பும் விமரிசனங்கள் தொடர்ந்ததால் சர்வதேசக் குழுவையும் ஏற்படுத்தினார். அவற்றை அமைத்ததன் மூலம் சர்வதேச அமைப்புகளின் வாயை மூடிவிடலாம் என்பதுதான் ராஜபக்ஷேவின் திட்டம். விசாரணைக் கமிஷன் அமைத்ததாகவும் இருக்க வேண்டும், உண்மைகள் வெளிப்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு ஏற்படுத்தப்பட்டவைதான் இந்தஅமைப்புகள்.

சர்வதேச அளவில் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்ததன் மூலம் தமது அரசின் நடவடிக்கைகளுக்கு அந்த நாடுகளின் ஒப்புதலும் இருக்கிறது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ராஜபக்ஷே முயற்சித்தார். அதைத்தான் இப்போது நீதிபதி பி.என்.பகவதி அம்பலப்படுத்தி உள்ளார்.

சர்வதேசக் குழுவின் பகிரங்க அறிக்கை வெளியானதும் ஆத்திரமடைந்த சிங்கள அரசு நீதிபதி பகவதியைக் கடுமையாக விமர்சித்தது.

இலங்கையின் அட்டர்னி ஜெனரல், ‘‘சர்வதேசக் குழு தனது வரம்பை மீறிவிட்டது’’ எனக் கடுமையாக விமர் சித்தார். அதைத்தொடர்ந்து ஜூன் பதினைந்தாம் தேதி சர்வ தேசக் குழு தனது இரண்டாவது பகிரங்க அறிக்கையை வெளி யிட்டது. விசாரணைக் கமிஷன் முறையாக செயல்படாததற்கு அட்டர்னி ஜெனரல் அலுவலகமே காரணம் என்று குறிப்பிட்டிருந்த நீதிபதி பகவதி தேசிய, சர்வதேசிய சட்டங்களுக்குப் புறம்பான முறையில் அட்டர்னி ஜெனரலின் அணுகுமுறை உள்ளது என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தார். நீதிபதி பகவதி தலைமையிலான குழுவில் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறுநாடுகளின் பிரதிநிதிகள் இருப்பதால் இந்தப் பிரச்னை பெரிதாகி விடாமல் கட்டுப்படுத்தும் விதமாக ராஜபக்ஷே தலையிட்டு சமாதான கடிதமொன்றை நீதிபதி பகவதிக்கு எழுதியிருக்கிறார். இதனிடையே சர்வதேச குழுவின் இடைக்கால அறிக்கையை ஆய்வு செய்ய ராஜபக்ஷே இன்னொரு கமிட்டியை நியமிக்கப்போகிறார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவையெல்லாம் சர்வதேச சமூகத்தை ஏய்ப்பதற்கு சிங்கள அரசு ஆடும் நாடகங்கள்தான் என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

இலங்கை விவகாரம் குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்து முக்கியமான அறிக்கைகளை வெளியிட்டு வரும் ‘இன்டர்நேஷனல் க்ரைசிஸ் குரூப்’ என்ற அமைப்பு ஜூன் பதினான்காம் தேதி வெளியிட்ட அறிக்கையிலும் இலங்கை அரசின் விசாரணை கமிஷன் பற்றி கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் ஆதரவோடு நடத்தப்படும் படுகொலைகள் ஜனநாயகத்துக்கு சவாலாக உள்ளன. சர்வதேச சமூகம் வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் மேலும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கும் அந்த அறிக்கை, ஐ.நா. சபையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற சர்வதேச நாடுகள் முன்வர வேண்டுமென்றும் வற்புறுத்தியுள்ளது.

இலங்கை அரசுக்கு சர்வதேச அரங்கில் தற்போது மேலும் ஒரு நெருக்கடியும் ஏற்பட்டிருக் கிறது. அமெரிக்க அரசைச் சேர்ந்த ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க அதிபருக்கு இலங்கைப் பிரச்னை தொடர்பாகக் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். இலங்கையில் மீண்டும் போர் மூண்டதற்குப் பிறகு ஆயிரக்கணக்கானோர் கொல் லப்பட்டுள்ளதையும் சுமார் மூன்று லட்சம் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக இடம் பெயர்ந் திருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜூன் இருபத்தெட்டாம் தேதி அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்த மேலும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வற்புறுத்தியுள்ள அந்த உறுப் பினர்கள் அமெரிக்க அரசு, இதில் தலைமைப் பாத்திரம் வகிக்க வேண்டுமெனவும் வற்புறுத்தியிருக்கிறார்கள்.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி அமெரிக்கா கவலை தெரிவித்திருப்பது ஒருவிதத்தில் நல்லதென்றபோதிலும் அதை வேறுவிதமாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு அரசாங்கத்தைத் தனது பிடிக்குள் முழுமையாகக் கொண்டுவர ‘மனித உரிமை மீறல்கள்’ என்ற ஆயுதத்தை அமெரிக்கா பயன்படுத்தும் என்பது வரலாறு. இலங்கை அரசு சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவோடு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளது. ‘‘புதிய கொள்வனவுகள் மற்றும் மாற்றுச் சேவைகள் ஒப்பந்தம் The new Acquisition and Cross Servicing Agreement)’’ என்ற அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் அமெரிக்கப் படைகள் தமது நாட்டில் வந்து தங்குவதற்கும், கடற்படைக் கப்பல்கள் தமது நாட்டுத் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கும் இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அமெரிக்காவிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் இலங்கைக்கு வழங்கப்பட அந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது. ஏற்கெனவே பிலிப்பைன்ஸ் நாட்டை அமெரிக்கா தனது ராணுவ தளமாகப் பயன்படுத்துவதற்கு இப்படியான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் அரசு 1992&ல் கையெழுத்திட்டதே காரணம். அதேபோன்ற நிலை இப்போது இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் வைத்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுதியுள்ள கடிதத்தைப் பார்த்தால், இலங்கையில் அமெரிக்க தலையீடு இனி அதிகரிக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அது இந்திய நலனுக்கு நல்லதா என்ற கேள்வி முக்கியமானதாகும்.

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியாவும் தோழனாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இலங்கையில் நடந்துவரும் அமெரிக்கத் தலையீடுகள் பற்றி இந்திய ஆளும் வர்க்கம் கவலைப்படாது. ஆனால், இதுபற்றி இடதுசாரிகளும் மௌனம் காப்பது வியப்பளிக்கிறது. இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு வழங்கப்பட வேண்டுமா அல்லது அங்கே கூட்டாட்சி நீடிக்க வேண்டுமா என்ற பழைய பிரச்னையை பற்றி மட்டுமே இந்திய இடதுசாரிகள் இப்போதும் பேசிக்கொண்டுள்ளனர். தற்போதைய அமெரிக்க ராணுவ விஸ்தரிப்புக் கொள்கையின் பின்னணியில் ஈழத்தமிழர் பிரச்னையை அணுகுவதற்கு அவர்கள் முன்வரவேண்டும். அமெரிக்க அணுசக்தி போர் கப்பல் நிமிட்ஸை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள், அதேபோல இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளையும் எதிர்த்து களமிறங்க வேண்டும். இந்தியாவின் வடக்கிலும், கிழக்கிலும் குவிந்துள்ள அவர்களது கவனம் தெற்கு நோக்கியும் திரும்ப வேண்டும். அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்கு ஈரான் பிரச்னையைக் காட்டிலும் ஈழப் பிரச்னையே சரியான களம் என்பதை இந்திய இடதுசாரிகள் இனியாவது புரிந்துகொள்வார்களா?

ரவிக்குமார் எம் எல் ஏ

நன்றி : ஜூனியர் விகடன்

நன்றி ஜூனியர் விகடன்,

இருந்தாலும் அமெரிக்காவை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு ஈழப்பிரச்சனை நல்ல களம் என்று கூறுகிறீர்கள்.

அமெரிக்காவை எதிர்ப்பதை விட இந்திய இடதுசாரி கட்சிகள் தமிழருக்கு தனிநாடுதான் தீர்வு என்று கூறிவிட்டால் அமெரிக்காவின் சிறிலங்கா மீதான இராணுவ பிரசன்னத்தை நிறுத்தலாம். அதைவிட்டு ஆக்கபூர்வமான திட்டத்தை வைக்காமல் அமெரிக்காவை எதிர்த்து கோசமிடுவதால் அழியப்போவது மீதமிருக்கும் ஈழத்தமிழர்கள் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.