Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

 4 நாட்கள்

குடாரப்புத் தரையிறக்கம்: மூன்றாம் நாள் 

எழுதியது கிடைக்கப்பெறவில்லை!

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சமர்க்கள விரிப்புகள்

 4 நாட்கள்

குடாரப்புத் தரையிறக்கம்: நான்காம் நாள் - வழி திறக்கப்பட்டது…

மூலம்: vayavan.com, மார்ச் 31, 2021

 

குடாரப்பில் கடல்வழி தரையிறங்கிய அணிகளுக்கான தரைப்பாதை திறக்கப்பட்டமை ஆனையிறவு முற்றுகை போருக்கான முதல் கட்ட வெற்றி ஆகும்.

இந்த தரைவழிப்பாதை திறக்கப்பட்ட அந்த கணங்களின் உற்சாகத்தையும் மகிழ்வினையும் சொற்களில் வடிக்க முடியாது.

களத்திலும் தளத்திலும் நின்ற போராளிகளுக்கும் களநிலவரங்களை நன்கு அறிந்த பொதுமக்களுக்கும் கால்கள் தரையில் முட்டவில்லை.

வன்னிப் பெருநிலப்பரப்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே அமைந்துள்ள எல்லை ஊரில் தொடங்கி கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி ஆழியவளை, உடுத்துறை, தாழையடி ஊடாக அந்த தரைப்பாதையை ஏற்படுத்தியவர் பிரிகேடியர் தீபன் ஆவார்.

பிரிகேடியர் தீபன் அவர்களின் கட்டளையை ஏற்று சமராடிய படையணிகளாவன,

  1. புலனாய்வுத்துறை  தாக்குதலணி

  2. கடற்புலிகளின் தரைத்தாக்குதல் படையணி

  3. ஜெயந்தன் படையணி

  4. ராதா விமான எதிர்ப்பு அணி

ஆகிய படையணிகளுடன் வேறு சில அணிகளும் களமாடி அந்தச் சண்டையை வென்றனர்.

நீண்ட கடற்கரையோரமாக அமைக்கப்பட்டிருந்த சிறீலங்காப் படைத்துறையினரின் பதின்மூன்று (13) கிலோமீற்றர்கள் நீளமான படைத்துறை வேலிகளையும் தளங்களையும் தங்ககங்களையும் கைப்பற்றி தகர்த்தழித்து தரைப்பாதையை தமிழினத்தின் விறலோன்கள் திறந்தனர்.

விழுப்புண் அடைந்த வீரர்களையும் படுகாயமடைந்த சில பொதுமக்களையும் வன்னியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பக் கிடைத்தமை ஆறுதல் தந்தது.

அஃதே,

முற்று முழுதாக தீர்ந்துவிட்ட மருந்துவ பொருட்களையும் உடனடியாகவே வன்னியிலிருந்து எடுத்துக் கொள்ளவும் முடிந்தது.

நான்காவது நாளாகிய இந்த நாளில் தாழையடி பெருந்தளம் மீட்கப்பட்டு கண்ணிவெடி, பொறிவெடிகள் ஆகியன முழுமையாக அகற்றிடாத அந்த நேரத்தில் எங்களைப் பார்க்க ஜவான் அண்ணர் விரைந்து வந்தார்.

ஆம், இருபத்தொரு (21) ஆண்டுகளுக்கு முன்னர் இதே மார்ச் மாதம் “புலிகளின்குரல்” வானொலிப் பணிப்பாளர் திருமிகு தமிழன்பன் (ஜவான்) அவர்கள் இத்தாவில், நாகர்கோவில் களமுனைகளில் போராளிகளைச் சந்தித்து வாழ்த்துக் கூறி உற்சாகம் ஊட்டினார்.

ஓரிரு தடவைகள் அல்ல பல தடவைகள் பெட்டிச்சமர் நடைபெற்ற பகுதிக்கு வந்தார்.

சமர்களநாயகன் தொடக்கம் சாதாரண போராளிகள், சிறப்பு எல்லைப்படை வீரர்கள் வரை ஒவ்வொரு வரையும் அவர்களின் காவலரண்களுக்கு சென்று சந்தித்து கைலாகு கொடுத்து வாழ்த்தினார்.

“ஊரிலும் புலம் பெயர் நாடுகளிலும் எங்கடை சனம் வெற்றிச் செய்திக்காக பிரார்த்தித்த வண்ணம் இருக்கின்றனர்” என திரு.தமிழன்பன் (ஜவான்) அவர்கள் சொன்ன போது பல போராளிகள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

அஃதே,

களமுனை வீரர்களின் உள்ளத்துச் சிந்தனைகளையும் மக்களுக்குச் சொல்ல வேண்டிய சேதிகளையும் பேட்டிகளாக எடுத்துச் சுடச்சுட பகல் நேர தமிழீழ வானொலியிலும் இரவு நேர புலிகளின் குரல் வானொலியிலும் (VoT) ஒலிபரப்புச் செய்தார்.

திருமிகு தமிழன்பன் (ஜவான்) அவர்களை போலவே விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் திருமிகு காக்கா (சங்கர்) அவர்களும் தொடர்ந்து வந்த நாட்களில் களத்திற்கு வருகை தந்தார்.

இருவருமே நல்லூக்கம் நல்கியதுடன் நின்றுவிடாது அந்த வியன்களத்தை வரலாறாகவும் பதிவு செய்தார்கள்.

காக்கா அண்ணனால் எழுதப்பட்ட அந்த வரலாற்று ஆவணமானது “மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்” எனும் பெயரில் நூல் வடிவில் வெளியீடு செய்யப்பட்டது.

 

 

******

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

 

இதனுள் தரையிறக்கத்தோடான அந்த நான்கு நாட்களில் இரண்டாம் நாளான 27 ஆம் திகதிய சமர்களச் செய்திகளை தொகுத்தளித்திருக்கிறேன். இவை 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நெற்றில் வெளியான செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டவையாகும்.

 

  • நேரம் - தமிழீழ நேரம்

  • தமிழாக்கம்: நன்னிச் சோழன், 10/28/2021

 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4872

27 மார்ச் காலை 9:44 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில், 
தாழையடி மற்றும் மாமுனையில் இருந்த சிறீலங்கா படைத்துறையின் தானைவைப்பு மீது தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஒருங்கமைப்பட்ட தாக்குதலால் யாழ் தென்கிழக்கு கடற்கரைப்பகுதியில் கடும் சண்டை மூண்டுள்ளது. 

அதேநேரம் தாழையடி மீதான இருமுனை வலுவூட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறையில் இருந்த சிறிலங்காப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றுள் ஒரு சேர்படையினர் நாகர்கோவிலில் இருக்கின்ற தானைவைப்பில் இருந்தும் மற்றொன்று புதுக்காடு-மருதங்கேணி வீதி வழியாகவும் ஏ9 வீதிக்கு தெற்காக செல்கின்றனர்.

விடுதலைப்புலிகள் தாழையடிக்கு இரண்டு கிமீ தொலைவாக வடக்கில் உள்ள புன்னையடி வரை முன்னேறி வந்துவிட்டதாக மாமுனை மற்றும் தாழையடி சமர் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமிழ்நெற்றின் வடமராட்சி செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளனர்.

எனினும் பருத்தித்துறையில் இருந்த சிறீலங்காப் படை வட்டாரங்கள், விடுதலைப்புலிகள் தமது மாமுனை மற்றும் தாழையடி தானைவைப்புகளை பரம்பிவிட்டனர்(overrun) என்ற செய்தியை அடியோடு மறுத்ததோடு அவ்விடங்களில் சமர் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

அதேநேரம் வேட்டுப்பரிமாற்றத்தில் காயமடைந்த பொதுமக்கள் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளனர். அவர்களின் பெயர் விரிப்பு:

  1. தவஞானம் வதனராசன், 20

  2. வைரவிப்பிள்ளை விஜயகுமார், 36

  3. கேசவஞானம், 52

  4. செபமாலை டேவிட், 9

  5. தேவராசா ராணி, 47

  6. ஜெ.தெரசம்மா, 40

  7. வ.சுபாஜினி, 31

  8. வ.பாக்கியம், 65.

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4873

27 மார்ச் நண்பகல் 12:58 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில், 

விடுதலைப்புலிகள் தாழையடி மற்றும் மாமுனை தானைவைப்புகள் மீதான தாக்குதலை தொடர்ந்ததால் அம்பனில் இருந்த சிறீலங்காப்படையினர் அவர்களின் முகாமினை காலிசெய்து வெளியேறினர். பருத்தித்துறை-மருதங்கேணி வீதியில் உள்ள குடாரப்பு, புன்னையடி, மாமுனை ஆகிய இடங்களில் இருந்த மூன்று சிறுபாலங்களை விடுதலைப்புலிகள் தகர்த்துவிட்டதாக போர் வலயத்தினை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

சிறீலங்காப் படைகளின் மாமுனை முகாமினை புலிகள் முற்றுகையிட்டுள்ளதோடு தாழையடி தளம் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர். தாழையடிக்கு மேற்காக ஒரு கிமீ தொலைவில் உள்ள 'நெல்லியான்' என்ற சிற்றூரில் இருந்து விடுதலைப்புலிகளின் பாரிய சண்டைப் பிரிவுகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

பருத்தித்துறைக்கு தெற்கில் உள்ள சிறீலங்காப் படைகளின் நாகர்கோவில் தளத்தின் முன்னரங்க நிலைகள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் வடமராட்சியில் உள்ள செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதற்கிடையில், கொழும்பில் உள்ள படைத்துறை வட்டாரங்கள் இன்று யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கரையோரத்தில் நடந்த சண்டைகள் பற்றி எதுவும் தெரியாது என்று மறுத்துள்ளன, ஆனால் அதே பகுதியின் செம்பியன்பற்றுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் சண்டைகள் நடந்த தகவல்கள் உள்ளதாக தெரிவித்தன.

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4874

27 மார்ச் பிற்பகல் 3:48 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில், 
ஓயாத அலைகள் மூன்றினை விடுதலைப்புலிகள் மீண்டும் தொடர்ந்திருப்பதாக அவர்களின் இலண்டன் பணிமனையின் செய்திக்குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு அறிக்கையாவது: 

"தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கள் வடமராட்சியின் கிழக்குக் கரையோரப் பகுதியோடான தாழையடி, செம்பியன்பற்று, மருதங்கேணி மற்றும் ஆனையிறவு கூட்டுத்தளத்திற்கு அருகில் உள்ள பளை மற்றும் இயக்கச்சி ஆகியவற்றில் உள்ள சிறீலங்காத் தரைப்படையின் தளங்கள் மீது ஒரே நேரத்தில் பாரிய கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியதால், சிறீலங்காப் படையினர் பலத்த இழப்புகளைச் சந்தித்துள்ளனர்.

ஓயாத அலைகள்-3 என குறியீட்டுப் பெயரிடப்பட்ட விடுதலைப் புலிகளின் தொடர் நடவடிக்கை நேற்று இரவு 9 மணியளவில் வெடித்தெழுந்ததோடு இந்தப் பகுதிகளில் கொடிய தறுகண்மையுடன் தொடர்கிறது. புலிகளின் சிறப்பு அதிரடிப்படை பிரிவுகள் பளையில் உள்ள படைத்துறை வலுவெதிர்ப்பு வேலிகளை உடைத்து ஏ9 நெடுஞ்சாலையை (கண்டி வீதி) துண்டித்ததோடு இயக்கச்சி மற்றும் ஆனையிறவு தளங்களுக்கான நில வழங்கல் பாதையை முற்றுவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கான நுழைவாயிலை பாதுகாக்கும் இந்த இரண்டு கேந்திர தளங்களும் இப்போது புலிகளால் முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

மற்றொரு முன்னேற்றத்தில், புலிகளின் சிறப்பு அதிரடிப்படை பிரிவுகள் பளையில் உள்ள படைத்துறையின் தானைவைப்பு மீது நுழைந்து முக்கிய சேணேவித் தளத்தையும் வெடிமருந்துக் கிடங்கையும் அழித்துள்ளனர். அதில் பதினொரு கனவகை சேணேவிகள் வெடிபொருட்களால் அழிக்கப்பட்டன.

அண்மைய தகவல்களின்படி, விடுதலைப் புலிகளின் அடிபாட்டுப் பிரிவுகள் இயக்கச்சி படைத்தளத்தில் உள்ள சிறீலங்கா படைத்துறையின் வலுவெதிர்ப்பு வேலிகளை ஊடறுத்து உள்நுழைந்துள்ளன. அவர்கள் தெறோச்சி மற்றும் கணையெக்கி எறிகணைகளால் முகாமினை குத்துவதால் இயக்கச்சியில் கடும் சண்டை தொடர்கிறது.

கடலோரப் பகுதியில், புலிகளின் சண்டைப் பிரிவுகள், சிறீலங்காப் படைத்துறையின் வலுவெதிர்ப்பு வேலிகளை அடித்து நொறுக்கி தாழையடியை நோக்கி முன்னேறிவருகின்றன.

யாழ்ப்பாண நுழைவாயிலில் உள்ள பல தானைவைப்புகள் மற்றும் தளங்கள் மீதான விடுதலைப் புலிகளின் அடிபாட்டு பிரிவுகளின் திடீர் மற்றும் தன்னியல்பான தாக்குதல் சிறீலங்காப் படைத்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதோடு குறிப்பிட்ட சில பகுதிகளில் நேற்றிரவு குழப்பமும் சீர்குலைவும் ஏற்பட்டது. சிறீலங்காப் படைத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த நூற்றுக்கணக்கான வீரர்களை படைத்துறை உலங்குவானூர்திகள் மூலம் அகற்ற போராடி வருவதாகவும்  விடுதலைப் புலிகளின் களக் கட்டளையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்."

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4875

27 மார்ச் மாலை 7:30 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில், 
சிறீலங்கா படைத்துறையின் இன்றைய செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளதாவது,

"மேற்கொண்டு இன்று 1530 மணிநேரத்தில் செய்திக்குறிப்புக்கு:

அகற்றல் நடவடிக்கையின் போது பளையின் பொதுப் பகுதியில் பயங்கரவாதிகளின் குழுவோடு படையினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பயங்கரவாதிகள் கணையெக்கி எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக 11 வீரர்கள் கொல்லப்பட்டதோடு 23 பேர் காயமடைந்தனர். பொதுப் பகுதியில் 15க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் இருந்ததை தரைப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முதன்மை வழங்கல் பாதை (ஆனையிறவு-யாழ்ப்பாணம்) இல் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஏற்பட்ட இடைவெளியானது தரைப்படையினரால் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள மாமுனை மீனவ ஊரில் பாதுகாப்புப் படையினரின் கரையோரப் பிரிவினர் பயங்கரவாதிகளின் கணையெக்கி சூட்டுக்கு இலக்காகினர்.

அகற்றும் பணி தொடர்கிறது."

வடமராட்சி கிழக்கு வட்டாரங்களின்படி, இன்று பிற்பகல் செம்பியன்பற்று - மாமுனை பிரிவில் இடம்பெற்ற வேட்டுப்பரிமாற்றத்தில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பதின்மூன்று பேர் காயமடைந்துள்ளளனர். பளைக்கு வடக்கே ஏ9 முகமாலையில் தரைப்படை அனைத்து போக்குவரத்தையும் திருப்பிவிட்டுள்ளது.   

இதேவேளை, இன்று காலை போர் வலயத்தில் இருந்து வெளியேறிய மாமுனை குடியிருப்போர், அந்த கரையோர ஊரில் உள்ள சிறீலங்காப் படைகளின் தானைவைப்பினை புலிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4876

27 மார்ச் நடுச்சாமம் 11:35 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,

யாழ்ப்பாண மருத்துவமனையில் இருந்து பிறந்த குழந்தையுடன் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினர் பளைக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தாவில் என்ற இடத்தில் சிறீலங்கா தரைப்படையினன் சுட்டதில் உயிரிழந்தனர். ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

முச்சக்கர வண்டியில் குடும்பத்துடன் பயணித்த பெண்ணின் சகோதரி படுகாயமடைந்தார். இணையரின் 4 நாட்களே ஆன குழந்தை காயமின்றி உயிர் தப்பியது.

படுகொலையின்போது காயமடைந்த இளம்பெண்ணையும் கைக்குழந்தையையும் படுகொலையில் இருந்து மீட்டவர்களில் ஒருவரான தமிழ்நெட்டின் யாழ் செய்தியாளர் தெரிவிக்கையில், அந்த குழந்தை மீது இறந்த பெற்றோரின் குருதியும் சதையும் சிதறிக் கிடந்தது என்றார்.

குமாரசாமி சிறீதரன் (40), அவரது மனைவி சிறீதரன் யோகேசுவரி (38) ஆகியோரே சம்பவ இடத்தில் உயிரிழந்தவர் ஆவர். உயிரிழந்த முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் சிவலிங்கம் கணேசலிங்கம் வயது 24 என அடையாளம் காணப்பட்டார்.

புலிகளின் தாக்குதல் பளையிலிருந்து தங்கள் திசையில் திரும்பும் என்ற அச்சத்தில் இத்தாவிலில் பீதியடைந்த சிறீலங்காப் படையினர் முச்சக்கர வண்டியை நிறுத்தி ஊர்தி நோட்டம் செய்யாமல் சுடுகலச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது.

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4877

27 மார்ச் நடுச்சாமம் 11:47 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,

யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவுத் தளம் வரையிலான முதன்மை வழங்கல் பாதையின் ஒரு பகுதியை பளை பகுதியில் இன்று மாலை விடுதலைப் புலிகள் வசப்படுத்தி வைத்துள்ளதாக கொழும்பில் உள்ள சிறீலங்கா படைத்துறைத் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, யாழ் குடாநாட்டில் ஓயாத அலைகள் - 3 தாக்குதலை புலிகளின் புதிய அடிபாட்டுப் பிரிவுகள் தொடர்வதாக புலிகளின் குரல் வானொலி இன்று தனது இரவு செய்தித் தொகுப்பில் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பச்சிலைப்பள்ளி, சோரன்பற்று மற்றும் பளை ஆகிய இடங்களில் உள்ள சிறீலங்கா தரைப்படை நிலைகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும், வடமராட்சி கிழக்கில் கடற்புலிகள் சிறீலங்காக் கடற்படையின் கடற்கலங்களோடு பொருதிவருவதாகவும் புலிகளின்குரல் தெரிவித்துள்ளது.

தற்போது இயக்கச்சி மற்றும் ஆனையிறவில் உள்ள தனது தளங்களுக்கு மற்றொரு வழங்கல் பாதையை பயன்படுத்துவதாக சிறீலங்கா தரைப்படை கூறியது. எவ்வாறாயினும், இயக்கச்சி - ஆனையிறவுப் பகுதிக்கான மாற்று வழங்கல் பாதையாகச் செயற்படக்கூடிய ஏ9 நெடுஞ்சாலையின் மேற்கில் உள்ள மலங்கிய உள்வீதிகள் மற்றும் பாதைகள் கனவகை ஊர்திகள் மற்றும் அதிக போக்குவரத்துக்கு ஏற்றதல்ல என யாழ்ப்பாண வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்போது புலிகள் வசமுள்ள முதன்மை வழங்கல் பகுதியை மீட்பதற்காக ஏ9 நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் படையினர் நடவடிக்கையை ஆரம்பித்ததாக கொழும்பில் உள்ள சிறீலங்காப் படைத்றையின் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்திற்கும் இயக்கச்சி - ஆனையிறவுப் பகுதிக்கும் இடையிலான முதன்மை வழங்கல் பாதையில் ஏற்பட்ட உடைப்பினால் தென்மராட்சிப் பிரிவின் தெற்குப் பகுதியிலுள்ள போர் வலயங்களில் இருந்து படைத்துறையினருக்கு வலுவூட்டல்களை அனுப்புவதிலும் காயமடைந்தவர்களை வெளியேற்றுவதிலும் தளவாடச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக வடக்கின் படைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் வானூர்தி எதிர்ப்புச் சூட்டு அச்சுறுத்தலையும் மீறி உலங்குவானூர்திகள் போர் வலையத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

நேற்று விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்ட பளை சேணேவித்தளத்தில் 130 மி.மீ, 152 மி.மீ மற்றும் 122 மி.மீ தெறோச்சிகள் இருந்ததாக யாழ். சிறீலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பளையில் உள்ள சிறீலங்காத் தரைப்படையின் முக்கிய சேணேவித் தளத்தில் உள்ள சுடுகலன்கள் மற்றும் வெடிமருந்துக் கிடங்கு ஆகியவை அழிக்கப்படுவது ஆனையிறவின் வலுவெதிர்ப்பை மோசமாகப் பாதிக்கலாம், ஏனெனில் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் உள்ள இந்த தானைவைப்பில், புலிகளின் எதிர்காலத்திய முன்னரங்க நிலைகளுக்கு முன்னாலான எந்தவொரு தாக்குதல் செறிவைக் குத்துவதற்குப் பின்பகுதியிலிருந்து போதுமான சூட்டாதரவு வலு இல்லை. 

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

 

இதனுள் தரையிறக்கத்தோடான அந்த நான்கு நாட்களில் மூன்றாம் நாளான 28 ஆம் திகதிய சமர்களச் செய்திகளை தொகுத்தளித்திருக்கிறேன். இவை 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நெற்றில் வெளியான செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டவையாகும்.

 

  • நேரம் - தமிழீழ நேரம்

  • தமிழாக்கம்: நன்னிச் சோழன், 10/28/2021

 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4878

28 மார்ச் நண்பகல் 11:10 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,

சண்டையால் இடம்பெயர்ந்த யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கரையோர ஊர்களைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் பொதுமக்கள் செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் எறிகணை வீச்சு மற்றும் வேட்டுப்பரிமாற்றங்களில் காயமடைந்த இருபது பொதுமக்கள் போர் வலயத்திலிருந்து பண்டுவத்திற்காக அழைத்து வரப்பட்டதாக பருத்தித்துறை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

வடமராட்சி கிழக்கு மற்றும் பளை உட்பகுதிகளில் மேலும் காயமடைந்த பொதுமக்கள் இன்னும் சிக்கியிருக்கலாம் என நேற்றைய சண்டையில் இடம்பெயர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் தெற்குப் பகுதியில் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை தொடர்கிறது என புலிகளின் குரல் தனது காலை செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. சண்டையில் கொல்லப்பட்ட நான்கு புலிவீரர்களின் பெயர்களை வானொலி வழங்கியது.

புலிகளின் குரலின்படி, ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் அண்மைய கட்டத்தில் வீரச்சாவடைந்த புலிவீரர்கள்-

1.இசையரசன் (யாழ்ப்பாணம், சண்முகம் சந்திரகுமார்)
2.விசும்பன் (மட்டக்களப்பு, நடராஜா ரஜனிகாந்த்)
3.நிலவன் (யாழ்ப்பாணம், புஷ்பராஜா சிவகுமார்)
4.தங்கலட்சுமி (யாழ்ப்பாணம், மனோகரன் சுதர்ஷினி)

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4879

28 மார்ச் நண்பகல் 11:59 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,
பாதுகாப்பு அமைச்சின் செயற்பாட்டுத் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பளைக்கு கிழக்கே பொதுப் பகுதியில் சண்டை தொடர்ந்தது. மாமுனைப் பிரிதளமும் நேற்றிரவும் கடும் சூட்டுக்கு உள்ளானது. பாதுகாப்புப்படைக் கட்டளையாளரின் அறிவுறுத்தலின் பேரில் செம்பியன்பற்றுக்கு வடக்கே ஆயத்தப்படுத்தப்பட்ட மாற்று நிலைக்குத் திரும்ப இழுத்துச்(அப்படியே) செல்லப்பட்டது.

பளைக்கு அருகில் உள்ள சுடுகலன் நிலையில் ஏற்பட்ட தீ நேர்ச்சியால் மூன்று சேணேவி சுடுகலன்கள் சேதமடைந்துள்ளன. (அப்படியே) பழுதுபார்ப்பதற்காக இந்த சுடுகலன்கள் மீண்டும் பலாலிக்கு இழுக்கப்பட்டன.

வத்திராயனில் பயங்கரவாதிகள் தொடர்ந்து முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் மற்றும் அப்பகுதியில் அகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் மீது கணையெக்கிகளால் சுட்டனர். இந்த தாக்குதலின் போது பயங்கரவாதிகள் பயன்படுத்திய தகரியை பாதுகாப்புப் படையினர் தகர்த்தனர்.

பாதுகாப்புப் படையினரில் ஒரு அதிகாரி மற்றும் 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 6 அதிகாரிகள் மற்றும் 152 பேர் காயமடைந்தனர்."

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4881

28 மார்ச் நடுச்சாமம் 11:50 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,

தற்போது யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கரையோரத்தில் மாமுனையில் நிலைகொண்டுள்ள விடுதலைப் புலிகள், வன்னியிலிருந்து கடல் வழியாக கொண்டுசெல்லப்பட்ட தமது பெரும் எண்ணிக்கையிலான சிறப்புப் பிரிவினர், தாழையடி தளம் மற்றும் வத்திராயனில் உள்ள அதன் முன்னரங்க நிலைகள் மீதான தாக்குதலைத் தொடர்வர் எனத் தெரிவித்தனர்.

இன்று காலை அப்பகுதிக்கு வருகை செய்த தமிழ்நெற் செய்தியாளர், விடுதலைப் புலிகள் மாமுனை முகாமிலும், கரையோரத்தில் உள்ள அதன் பிரிதளத்திலும் இன்று புலிக்கொடி ஏற்றியதாக தெரிவித்தார்.

மாமுனையில் அழிக்கப்பட்ட சிறிலங்கா தரைப்படை தளத்தில் சுமார் 12 சிறிலங்கா தரைப்படை வீரர்களின் சடலங்கள் சிதறிக் கிடப்பதாக அவர் கூறினார். வீழ்ந்த முகாமில் இருந்து தப்பிய சுமார் இருபது தரைப்படையினர் கொண்ட போர் வலயத்திலிருந்து வெளியேற முற்பட்ட பேருந்து மீது புலிகள் தாக்குதல் நடத்தியதில் அனைவரும் கொல்லப்பட்டதகாவும் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, ஆயிரத்தி ஐந்நூறுக்கும் மேற்பட்ட புலிகள், பெரும்பாலும் பெண் போராளிகள், இன்று கடல் வழியாக மாமுனை பொதுப் பகுதிக்கு நகர்ந்துள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் தாழையடிக்கு முன்னால் உள்ள சிற்றூர்களில் சிறீலங்கா வான்படையின் கிபிர் வகை தாரை வானூர்திகள் குண்டுவீசின. செம்பியன்பற்றில் பொதுமக்களுக்கு சொந்தமான ஆறு வீடுகள் இன்று கிபிர் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக தமிழ்நெற்றின் வடமராட்சி கிழக்கு செய்தியாளர் தெரிவித்தார்.

நாகர் கோவிலில் உள்ள சிறீலங்கா தரைப்படையின் நோட்டச் சாவடி வழியாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சண்டையிலிருந்து தப்பித்து பருத்தித்துறையில் தஞ்சம் புகுந்துள்ளதாக தமிழ்நெற்றின் வடமராட்சி கிழக்கு செய்தியாளர் இன்று பிற்பகல் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தீவின் ஏனைய பகுதிகளுக்கும் எழுதுமட்டுவாளுக்கும் பளைக்கும் இடையில் உள்ள முதன்மை நெடுஞ்சாலையான ஏ9க்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் இருந்து புலிகள் இயங்கி வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனையிறவுக்கான வழங்கல் பாதையான ஏ9 நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாக சிறீலங்கா தரைப்படையின் மூத்த கட்டளையாளர் ஒருவர் கூறினார்.

புலிகளின் குரல் தனது இரவு செய்தி ஒலிபரப்பில், லெப். தரநிலையில் உள்ள மூவர் உட்பட பதினொரு போராளிகள், ஓயாத அலைகள் நடவடிக்கையின் கடைசி கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவடைந்ததாக கூறியது.

இதேவேளை, சிறீலங்கா வான்படையின் ஆளில்லா வான்வழி ஊர்தி ஒன்று இன்று பலாலியில் இயந்திரக் கோளாறு காரணமாக தரையிறங்கியதில் பலத்த சேதமடைந்துள்ளது.

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

 

இதனுள் தரையிறக்கத்தோடான அந்த நான்கு நாட்களில் நான்காம் நாளான 29 ஆம் திகதிய சமர்களச் செய்திகளை தொகுத்தளித்திருக்கிறேன். இவை 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நெற்றில் வெளியான செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டவையாகும்.

 

  • நேரம் - தமிழீழ நேரம்

  • தமிழாக்கம்: நன்னிச் சோழன், 10/28/2021

 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4882

29 மார்ச் பிற்பகல் 3:18 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,

ஏ9 நெடுஞ்சாலையில் (கண்டி வீதி) ஆனையிறவு மற்றும் இயக்கச்சியில் உள்ள சிறீலங்கா தரைப்படையின் கூட்டுத்தளங்களுக்கான முதன்மை வழங்கல் பாதை யாழ்ப்பாணத்தில் எழுதுமட்டுவாளுக்கும் பளைக்கும் இடையில் துண்டிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா படைத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி யாழ்ப்பாணத்தில் வெளியாகும் தமிழ் நாளிதழான உதயன், திங்கட்கிழமை தொடக்கம் விடுதலைப் புலிகளால் ஊடறுக்கப்பட்டு துண்டெடுக்கப்பட்ட இடைவெளியை இணைக்கும் முயற்சியில் தரைப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

எழுதுமட்டுவாளுக்கும் பளைக்கும் இடைப்பட்ட ஏ9 ஊரான இந்திரபுரத்தில் முதன்மை வழங்கல் பாதையின் ஒரு பகுதியை புலிகள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், பளைக்கு வடக்கே இத்தாவிலுக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் அண்மையில் சீர்செய்யப்பட்ட ஆனைவிழுந்தான் சிறுபாலத்தை வெடிக்கச் செய்துள்ளதாகவும் வடக்கின் சிறீலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்பாணத்திற்கும் ஆனையிறவு மற்றும் இயக்கச்சியில் உள்ள பாரிய தானைவைப்புகளுக்கும் இடையிலான தொடர்பை பேணுவதற்காக, ஏ9க்கு மேற்கே புலோப்பளை ஊடாக உள்ள உள்வீதியை சிறீலங்கா தரைப்படை தற்போது பயன்படுத்துகிறது. 1993 இல் கிளாலியைக் கைப்பற்றுவதற்காக சிறீலங்கா தரைப்படையால் தொடங்கப்பட்ட 'யாழ்தேவி நடவடிக்கை' என்ற பெருங்குறிக்கோள்கொண்ட தாக்குதல் இந்தப் பாதையில்தான் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் கிளாலிக்கு தெற்கே யாழ்ப்பாண நீரேரியின் கரையோரத்தில் வன்னி நிலப்பரப்பில் இருந்து போராளிகளை தரையிறக்கியுள்ளதாகவும், அங்கிருந்து தரைப்படை நிலைகளை கறங்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், புலிகள் மேற்கொண்ட பல முயற்சிகளை படையினர் முறியடித்ததாக சிறீலங்கா தரைப்படை கூறியது.

போரின் காரணமாக பளையில் தடுத்திருந்த அலுவலர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, சிறீலங்காத் தரைப்படையினர் இந்த ஊரில் இல்லை என்றும், குடியிருப்பாளர்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்ததால் அது வெறிச்சோடி காணப்பட்டது என்றும் கூறினார்.

இன்று காலை முதல் ஏ9 வீதியில் மிருசுவிலுக்கு அப்பால் எவரையும் படையினர் செல்ல விடுவதில்லை என அப்பகுதிக்கு சென்ற தமிழ்நெற்றின் யாழ்.செய்தியாளர் தெரிவித்தார். நேற்றுவரை முகமாலைவரை மக்கள் செல்ல படையினர் அனுமதித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4883

29 மார்ச் பிற்பகல் 4:16 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,

யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கரையோரத்தில் தாழையடியில் உள்ள சிறீலங்காப் படைத்தளம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் விடுதலைப் புலிகளால் பரம்பப்பட்டது. மருதங்கேணியில் உள்ள சிறீலங்கா தரைப்படை முகாம் மீது புலிகள் தாக்குதல் நடத்தி வருவதாக இன்று சண்டையில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் தெரிவித்தனர். இன்று மாலைக்குள் முகாம் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இப்பகுதியின் செயற்பாடுகளை வழிநடத்தும் புலிகளின் களக் கட்டளையாளர் ஒருவர் குடியிருப்பாளர்களிடம் தெரிவித்தார்.

தாழையடி பகுதியில் நேற்று இரவு முதல் இடம்பெற்ற கடும் சண்டையில் பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக இன்று மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட காயமடைந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கடும் சண்டை காரணமாக அவர்களில் பெரும்பாலானோர் பண்டுவத்திற்காக வரமுடியவில்லை.

புலிகள் வன்னியில் இருந்து கடல் வழியாக செம்பியன்பற்று மற்றும் மாமுனைக்கு நூற்றுக்கணக்கான போராளிகளை ஏற்றிச் செல்வது தொடர்கிறது. கிராமியப்படை மற்றும் எல்லைப்படைகளை உள்ளடக்கிய புலிகளின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள்படைப் பிரிவுகளும் அவர்களின் நடவடிக்கையின் படையேற்பாட்டு பணிகளுக்காக நகர்த்தப்பட்டுள்ளனர்.

மருதங்கேணி சந்தியில் உள்ள தரைப்படை முகாம் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகளும் முடுக்கி விடுகின்றனர் என இன்று போர் வலயத்திலிருந்து வெளியேறிய பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது ஏ9 மற்றும் யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கடற்கரைக்கு இடைப்பட்ட வீதியில் உள்ள ஒரு கேந்திர சந்தியாகும்.

சண்டையில் கொல்லப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினரின் உடல்கள் தாழையடியில் சிதறிக் கிடப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களின் கூற்றுப்படி நேற்றிரவு நடந்த சண்டையில் புலிகளின் பெண் சண்டை உருவாக்கங்களும் வலுத்த இழப்புகளைச் சந்தித்தன.

இதற்கிடையில், சிறீலங்கா வான்படையின் கிபிர் தாரை வானூர்திகள் தாழையடி மற்றும் மருதங்கேணி ஊர்கள் மீது தொடர்ந்து குண்டுகளை வீசியது. சிறீலங்கா கடற்படையின் சுடுகலப் படகுகளால் கரையோரப் பகுதியும் தாக்கப்பட்டதாக இன்று அங்கிருந்து தப்பிவந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

நாகர் கோவிலில் உள்ள சிறீலங்கா தரைப்படைத் தளம் கடுமையான கணையெக்கி தாக்குதலுக்கு உட்பட்டுள்ளதாக பருத்தித்துறையில் உள்ள படைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4884

29 மார்ச் பிற்பகல் 4:36 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,
தாழையடி-மருந்தங்கேணி-செம்பியன்பற்று கூட்டுத்தளத்தினை விடுதலைப் புலிகள் புதன்கிழமை கைப்பற்றியதில் 100க்கும் மேற்பட்ட சிறீலங்கா தரைப்படையினர் கொல்லப்பட்டும் 25 விடுதலைப் புலிகளும் வீரச்சாவடைந்ததாகவும் அவர்களின் இலண்டன் பணிமனையின் செய்திக்குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு அறிக்கையாவது: 

"வடமாராட்சியின் கிழக்குக் கரையோரப் பகுதியில் இருந்த தாழையடி-மருதங்கேணி-செம்பியன்பற்று படைத்தளமான மிகப் பெரிய மற்றும் நன்கு வலுப்படுத்தப்பட்ட படைத்தளம், இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அடிபாட்டுப் படைகளிடம் வீழ்ந்ததால் சிறீலங்கா தரைப்படை பெரும் தோல்வியைச் சந்தித்தது. 

நேற்று தாழையடி கடற்கரைக்கு அருகில் ஒரு கடற்கரை தலையை நிறுவிய விடுதலைப் புலிகளின் சேர்படையினரான சிறப்பு புலி அதிரடிப்படைகள், நேற்று இரவு தள முகாமிற்குள் நுழைந்து சிறிலங்கா படையினருக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தினர்.

கடுமையான சண்டை வெடித்தெழுந்ததோடு 12 மணி நேரத்திற்கும் மேலாகவும் தொடர்ந்தது. புலிகளின் தாக்குதலின் முரட்டுத்தனத்தால் கறங்கிய படையினர் இறுதியாக இன்று மதியம் 1 மணியளவில் முற்றிலும் சீர்குலைந்து வெளியேறினர். கூட்டுப் படைத்தளத்தினுள் 1500 நன்கு பயிற்சி பெற்ற படையினர் தங்கியிருந்தனர்.

யாழ் குடாநாட்டின் நுழைவாயிலில் உள்ள படைத்துறை அரணிருக்கைகளில் (Stronghold) ஒன்றான இந்த முக்கிய தள முகாமின் வீழ்ச்சி வடமராட்சிக்கும் தென்மராட்சியின் சில பகுதிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இந்தச் சமரில் 100க்கும் மேற்பட்ட சிறீலங்காப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். சண்டையில் 25 புலிவீரர்களும் வீரச்சாவடைந்தனர்.

புலிகள் தள முகாமில் இருந்து ஏராளமான படைக்கலன்கள் மற்றும் கணைகளையும் மீட்டுள்ளனர்.

இதற்கிடையில், தனிமைப்படுத்தப்பட்ட ஆனையிறவு மற்றும் இயக்கச்சி தள முகாம்களுக்கான முக்கிய வழங்கல் பாதையான ஏ9 நெடுஞ்சாலையில் (கண்டி வீதி) புலிகள் துண்டித்துள்ள பளை பகுதியில் விடுதலைப் புலிகளின் அடிபாட்டுப் பிரிவுகளுக்கும் சிறீலங்கா படைத்துறைக்கும் இடையில் இன்று மூன்றாவது நாளாக தீவிர சண்டை தொடர்கிறது. 

கடுமையான தளவாடச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்தப் பகுதியில் ஆழ கால்பதித்திருக்கும் புலிகளின் அதிரடிப்படைகளை வெளியேற்ற சிறீலங்காப் படைத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது."

 

 

 

====================================================

 

 

 

இதனுள் தரையிறக்கத்தோடான அந்த நான்கு நாட்களில் நான்காம் நாளான 29 ஆம் திகதிய சமர்களச் செய்திகளை தொகுத்தளித்திருக்கிறேன். இவை 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உதயன் நாளேட்டின் முதலாம் பக்கத்தில் வெளியான செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டவையாகும்.

 

 

மூலம்: https://noolaham.net/project/560/55972/55972.pdf

 

மூன்றாவது நாளாக நேற்றும் பளைப்பகுதியில் கடும் சண்டை!
கண்டி வீதியை இணைக்க படையினர் தீவிர முயற்சி

 

யாழ்ப்பாணம்‌.மார்ச்‌ 29 

வடமராட்சி கிழக்கு ஊடாக கடந்த ஞாயிறன்று பெரும்‌ தாக்குதல்‌ ஒன்றைத்‌ தொடக்கி பளைப்‌ பகுதிவரை முன்னேறி உள்ள புலிகளின்‌ அணிகளுக்கும்‌ படையினருக்கும்‌ இடையே மூன்றாவது நாளாக நேற்றும்‌ கரும்‌ சண்டை இடம்பெற்றது. பளைப்‌ பகுதியில்‌ துண்டிக்கப்பட்ட நிலையில்‌ உள்ள கண்டி வீதிப்‌ பகுதியை மீண்டும்‌ கைப்‌பற்றப்‌ படையினர்‌ தொடர்ந்து தீவிர முயற்சியில்‌ ஈடுபட்டதாக இராணுவ வட்டாரங்கள்‌ தெரிவித்தன. 

நேற்றுவரை இடம்பெற்ற சண்டையில்‌ தமது தரப்பில்‌ இரு அதிகாரிகள்‌ உட்பட 50 படையினர்‌ உயிரிழந்ததாகவும்‌ 9 அதிகாரிகள்‌ உட்‌பட 94 படையினர்‌ காயமடைந்துள்‌தாகவும்‌ பாதுகாப்பு அமைச்சின்‌ நடவடிக்கைத்‌ தலைமையகம்‌ தெரிவித்தது. படைத்தரப்பில்‌ மேலும்‌ 172 பேர்‌ சிறு காயங்களுக்கு உள்‌ளாகி இருப்புதாகவும்‌ புலிகள்‌ தரப்‌பில்‌ 150 பேர்வரை பலியாகியுள்ளதாகவும்‌ அறிவிக்கப்பட்டது. 

பளைக்கு அருகே இத்தாவில்‌, இந்திரபுரம்‌, முகமாலை ஆகிய பகுதிகளில்‌ படையினருக்கும்‌ விடுதலைப்‌ புலிகளுக்கும்‌ இடையில்‌ நேற்‌றும்‌ சண்டை தொடர்ந்து இடம்பெற்‌றது.

அந்தப்‌ பகுதி ஷெல்‌ சத்தங்களால்‌ அதிர்ந்த வண்ணம்‌ இருந்ததாக அண்டிய பிரதேச மக்கள்‌ தெரிவித்தனர்.

விமானங்களும்‌ ஹெலிகளும்‌ இந்தப்‌ பகுதியில்‌ பறந்த வண்ணம்‌ இருந்தன.

பளைக்கு அருகே வண்ணாங்‌கேணியில்‌ படையினரின் டீசல்‌ பவுஸர்‌ ஒன்று புலிகளின்‌ தாக்குதலுக்கு இலக்காகி நேற்று முன்றினம்‌ இரவு முழுவதும்‌ எரிந்து கொண்டிருந்தது. அதனால்‌ அந்தப்‌ பகுதி புகைமண்டலமாகக்‌ காட்சியளித்ததாக அப்பகுதி மக்கள்‌ தெரிவித்தனர்.

கண்டிவீதியில் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை கைப்பற்றப்‌ படையினர்‌ தொடர்ந்து நடவடிக்கையை மேற்கொண்டு வீதியின் பெரும் பகுதியை மீட்டுள்‌ளதாகவும்‌ - 

துண்டிக்கப்பட்ட வீதிப்‌ பகுதி முழுவதும் எந்நேரமும் தம்வசமாகும் என்றும் - 

படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

பளையில் வெட்டுக்காடு என்ற இடத்தில் படையினர் தேடுதல்களை நேற்று மேற்கொண்டதாகவும் விடுதலைப்புலிகளின் எதிர்த் தாக்குதல்கள் அந்தப் பகுதியில் இருக்கவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத்‌ தலைமையகம்‌ நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


(ஐ-3-7-8)

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடிபாட்டுச் செய்திகள்

 

இதனுள் தரையிறக்கத்திற்குப் பிறகான 30 ஆம் திகதி வெளியான சமர்களச் செய்திகளை தொகுத்தளித்திருக்கிறேன். இவை 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நெற்றில் வெளியான செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டவையாகும்.

 

  • நேரம் - தமிழீழ நேரம்

  • தமிழாக்கம்: நன்னிச் சோழன், 10/28/2021

 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4885

30 மார்ச் அதிகாலை 1:29 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,

தாழையடியை தளமாகக்கொண்டிருந்த சிறீலங்கா தரைப்படையின் அதிசிறப்பு 53 ஆவது படைப்பிரிவின் ஒரு படைத்தொகுதி மற்றும் 14 கிலோமீற்றர் வரை பரவியிருந்த அதன் வலுவெதிர்ப்புகள் இன்று(29/3/2000) விடுதலைப் புலிகளால் பரம்பப்பட்டதாக புலிகளின் குரல் தனது இரவுச் செய்தியில் தெரிவித்துள்ளது.

தாளையடி, மருதங்கேணி மற்றும் செம்பியன்பற்றின் ஒரு பகுதியை உள்ளடக்கிய முதன்மை தளமானது மூன்று நாட்கள் புலிகளின் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்குப் பின்னர் வீழ்ந்ததாக வானொலி கூறியது.

விடுதலைப் புலிகளின் சண்டை உருவாக்கங்கள் வேம்படி வழியாக நகர்ந்து, 53 ஆவது படைப்பிரிவின் வலுவெதிர்ப்பைத் தாக்கி உடைத்துக் கொண்டிருக்கின்றன என்றும் கூறியது.

கடற்புலிகள், 19 சிறிலங்கா கடற்படை தாக்குதல் கலங்கள், இசுரேலிய கிபிர் தாரை வானூர்திகளின் குண்டுவீச்சு, தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் கடற்கரையில் இருந்து தரைவரை உள்ள சிறீலங்கா தரைப்படை தானைவைப்புகளில் இருந்து கடல் நோக்கி வரும் கனதியான சுடுகல சூடுகள், பாரிய சண்டை உருவாக்கங்கள் மற்றும் ஏந்தனங்களுக்கு நடுவில் சமராடினர்.

யாழ்ப்பாணத்தின் தென்கிழக்கு கரையோரத்தில் தரையிறக்கப்பட்ட புலிவீரர்கள், சிறிலங்கா தரைப்படையின் வலுவெதிர்ப்புனூடாக ஊடுருவி ஏ9 வழியே முகமாலையை வந்தடைந்ததாக புலிகளின் குரல் தெரிவித்திருந்தது.

53 ஆவது படைப்பிரிவின் அதிரடிப்படை பிரிவுகளும், வான்-நடமாட்ட படைத்தொகுதியும் (Air-mobile brigade) தென்கிழக்கு கடற்கரையில் கடுமையான தடுப்பாற்றலை (புலிகளுக்கு) வழங்குவதற்காக தங்களை நிலைநிறுத்தியதாக வானொலி கூறியது.

விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் தென்மராட்சிப் பகுதியில் உள்ள சிறிலங்கா தரைப்படையின் சேணேவித் தளங்களை இலக்காகக் கொண்டிருந்தன. இன்று சாவகச்சேரிக்கு அருகிலுள்ள தம்புத்தோட்டத்தில் சிறீலங்காவின் 11 நீண்ட தூர சேணேவிகளையும், தாமரைக்குளத்தில் நான்கு சேணேவிகளையும் புலிகளின் சிறப்புப்படைப் பிரிவினர் வெற்றிகரமாக வெடிக்கச் செய்துள்ளதாக புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள தரைப்படையின் வலுவெதிர்ப்பை புலிகளின் சண்டை உருவாக்கங்கள் உடைத்து செல்வதாகவும், புலிகளின் நிலைகளை தாண்டி ஏ9 வழியாக முகமாலையை அடைந்த போது நேற்றுமுதல் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் கடுமையான சண்டை இடம்பெற்றதாகவும் வானொலி தெரிவித்துள்ளது.

சண்டையில் கொல்லப்பட்ட சிறீலங்கா தரைப்படை வீரர்கள் மற்றும் தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட படைத்துறை ஏந்தனங்கள் குறித்து புலிகள் சரியான கணக்கு எடுக்கவில்லை என்றும் புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

53 ஆவது படைப் பிரிவானது சிறீலங்கா தரைப்படையின் சிறந்த சண்டையிடுதல் பிரிவாகும், இது சிறப்புப்படைகள், ஒரு வான் நடமாட்ட படைத்தொகுதி, இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படைப் பிரிவு போன்றவற்றை உள்ளடக்கியது, இந்தப் பிரிவு அமெரிக்க சிறப்புப்படைகளின் பயிற்சி மற்றும் ஆலோசனைகளைப் பெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

 

 


 

 

மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4889

30 மார்ச் மாலை 7:10 மணியளவில் வெளியிடப்பட்ட செய்தியில்,
ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகளுடனான சண்டையில் 5 அதிகாரிகள் உட்பட 80 சிறிலங்கா தரைப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 31 அதிகாரிகள் உட்பட 613 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது, வியாழக்கிழமை பிற்பகல் ஒரு செய்திக்குறிப்பில்.

முழு அறிக்கை பின்வருமாறு:

"படையினர் ஏ9 வீதியில் (கண்டி-யாழ்ப்பாணம்) புதிதாக நிறுவப்பட்ட நிலைகளில் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். எமது சேணேவிகள், சிறீலங்காக் கடற்படை மற்றும் வான்படை ஆகியவை வெற்றிலைகேணிக்கு வடக்கே கிழக்கு கடற்கரையோரத்தில் பொதுப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட பயங்கரவாத இலக்குகளோடு பொருதுகின்றன.

பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையால் அவர்கள் இழப்புகளைச் சந்தித்துள்ளதோடு அவர்களின் ஊர்திகள் மற்றும் படகுகள் சில அழிக்கப்பட்டுள்ளன என்று கண்காணிக்கப்பட்ட புலிகளின் தொடர்பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. சங்குப்பிட்டி மற்றும் நாகதீவைத்துரை (அப்படியே) பொதுப் பகுதிகளில், ஏராளமான படகுகள் நங்கூரமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறை சுட்டிக்காட்டியுள்ளதோடு சேணேவிகள் அவற்றோடு பொருதுகின்றன.

அதனைத்தொடர்ந்து படையினர் அப்பகுதியில் இருந்து கடுமையான புகை மேகத்தை அவதானித்தனர், இது சேணேவித் தாக்குதலால் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது, இதனால் படகுகள் சேதமடைகின்றன.

மோதல் தொடங்கியதில் இருந்து 05 அதிகாரிகள் மற்றும் 80 படையினர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். 15 அதிகாரிகள் மற்றும் 203 படையினர் காயமடைந்துள்ளனர். 16 அதிகாரிகள் மற்றும் 379 படையினர் சிறு காயங்களுக்குள்ளாகி பலாலி படைய மருத்துவமனையில் பண்டுவம் பெற்று வருகின்றனர்."

சிறீலங்காப் படைத்துறையின் அறிக்கையானது பூநகரிக்கு கிழக்கே உள்ள நாகதேவன்துறையை நாகத்தீவைத்துறை என்று தவறாகக் குறிப்பிடுகிறது என்பதை கவனமெடுக்குக.

எவ்வாறாயினும், குடாநாட்டின் தென்கிழக்கு கரையோரப் பகுதியில் இருந்து வெளியேறிய பொதுமக்கள், திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்த முகாம்களிலும் அதனைச் சூழ நடந்தச் சமரில் கொல்லப்பட்ட சிறிலங்கா தரைப்படை வீரர்களின் நூற்றுக்கணக்கான சடலங்களை தாங்கள் பார்த்ததாகக் கூறினர்.

அவர்களின் உடல்கள் புலிகளால் அடையாளம் காணக்கூடிய நிலையில் மீட்கப்பட்டு, அத்தகைய சூழ்நிலையில் கொல்லப்பட்ட படையினர் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சிறீலங்காப் படைத்துறையிடம் ஒப்படைக்கப்படாவிட்டால், சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சகத்தால் 'நடவடிக்கையில் காணாமல்போனார்' என வகைப்படுத்தப்படுவர்.

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முடிவுரை

 

இத்தோடு குடாரப்புத் தரையிறக்கம் தொடர்பான அனைத்துத் தகவலும் என்னால் இயன்றளவிற்கு ஆவணப்படுத்தப்பட்டு நிறைவடைகின்றன. எதிர்காலத்தில் எனக்கு தரையிறக்கம் தொடர்பான புதிய தகவல்கள் கிடைக்குமாயின் இக்கட்டை இற்றைப்படுத்துவேன் என்பதையும் இங்கே அறிவித்துக்கொள்கிறேன்.

இதை நான் பல காலமாக எழுத வேண்டும் என்று அவா கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் நோர்மண்டி தரையிறக்கத்தினைப் பற்றி வாசிக்கும்போதும் அதைப் பார்க்கும்போதும் எனக்கு குடாரப்புத் தரையிறக்கம் ஞாபகம் வருவதோடு அதை நாம் ஆவணப்படுத்தவில்லையே என்ற ஏக்கமும் எழுவதுண்டு. இதனால் அதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற கனவு பிறந்தது. ஆனால் அதை ஆவணப்படுத்த எம்மிடம் எந்தவொரு ஆதாரங்களோ தகவல்களோ இல்லாமையால் மிகுந்த கவலை கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் எனக்கு 'வேருமாகி விழுதுமாகி' என்ற புத்தகம் கிடைத்தது. அதை வாசித்த போது அதனுள் தரையிறக்கம் பற்றி அதை ஆவணப்படுத்தும் அளவிற்கு போதிய தகவல்கள் இருப்பதை அறிந்து கொண்டேன். கையோடு அதனை ஒரே மூச்சில் ஆவணப்படுத்த வேண்டும் என்று எண்ணி எனது கனவையும் நனவாக்கிக் கொண்டேன். 

எமது வரலாறுகளை நாம் சிதறு துண்டுகளாக எழுதி வைத்தால் அவை அழிந்து போய்விடும். ஓத்துவான தகவல் கொண்ட எல்லாவற்றையும் ஒரே ஆவணமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய நம்பிக்கை;கொள்கை. அப்படி எழுதுவதால் எம்மால் அதனை இலகுவாக காக்க முடிவதோடு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அதனை கடத்தலாம். எமது தீவில் 2700 ஆண்டுகளுக்கு(அநுராதபுரத் தமிழ்ப் பானையோடு) மேலாக நாம் வசித்து வந்தாலும் எமக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன நடந்தது என்பது தொடர்பான தொடர் வரலாறுகள் இல்லை. இதே இழிநிலை இனிமேலும் தொடரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். அதனால்தான் இவ்வாறு என்னால் இயன்றளவு எமது சமர்க்கள வரலாறுகளை ஆவணப்படுத்துகிறேன், எனக்குத் தெரிந்த முறையில்!

 

நன்றி

 

 

"தனியரசானதும் தமிழுன்னைப் பாடிடும்

தாய்மனம் குளிர்ந்திடும் பார்...

எங்கள் சந்ததி தன்னது

பங்கினைச் செய்தது

என்றது மகிழ்ந்திடும் பார்..."

-->அலையின் வரிகள் இறுவெட்டின் 'ஓடாதே ஓடாதே' பாடலிலிருந்து...

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பின்னிணைப்பு-1

பாடல் வரிகள்

 

 

இதற்குள் 2000ம் ஆண்டு மார்ச் 24ம் திகதி வெற்றிலைக்கேணியிலிருந்து கடலேறிச்சென்று குடாரப்பில் சாமம் மட்டில் தரையிறங்கி, அங்கிருந்து நகர்ந்து சென்று இயக்கச்சி சேணேவித்தளம், மற்றும் தாமரைக்குளம் சேணேவித்தளம் ஆகியவற்றிலிருந்த சேணேவிகளை அழித்த தரைக்கரும்புலிகளின் மறத்தின் நினைவாய் வெளியிடப்பட்ட பாடலின் வரிகள் உள்ளன.

 

தேசமே, எங்கள் தேசமே!
மண்ணில் வீசும் வாசமே!

மௌனமாய் தங்கள் மூச்சையே நிறுத்திய வேங்கைகளே!
உன்னத விடுதலைக்காய் தன்னுயிர் தந்தவரே!

வானமும் உம்மைத் தேடுதே, இங்கு வா!
தேசமும் உம்மைத் தேடுதே, இங்கு வா!

நிலவும் தூங்க, கடலும் சாய, வீரம் எழுந்தது!
வெற்றிலைக்கேணி பிரியும் நேரம் வேர்கள் அழுதது - கருவேங்கை சிலிர்த்தது!

ஆழமாய்க் காதலித்த தாயகத்திலே ஆள வந்தோர் ஆட்லறியை அறுத்தெறுந்தீரே!
ஆந்திரா, சத்தியா, மலர்விழி தணலாகி தாமரைக்குளத்தை மீட்டிரே!
பெரும் சரித்திரம் படைத்து சென்றீரே!

கண்ணிவயலில் கால்கள் தவழ்ந்து கண்டி வீதி கடந்தாரே!
குடலறுத்து உயிர்குடிக்கும் கடுமலையாய் கனகரகம்
எரிமலையின் உச்சியிலேறி பகைமுடித்த தனுசனவன்
எரிமலையின் உச்சியிலேறி பகைமுடித்த சுதாசினியே
தேசத்தின் சுடரொளியாய் தெரியுதெங்கள் ஈழத்திலே!

 

 

 

 

====================================================

 

 

 

இதற்குள் 2000ம் ஆண்டு மார்ச் 26ம் திகதி கட்டைக்காட்டில் ஒன்றுகூடி அங்கிருந்து உழுபொறிகள் மற்றும் ஏனைய ஊர்திகள் மூலம் வெற்றிலைக்கேணி கோவிலடியையடைந்து அங்கிருந்து மாலையில் கடலேறிச்சென்று குடாரப்பில் மார்ச் 26ம் திகதி சாமம் முதல் மார்ச் 27ம் திகதி காலை 10 மணி வரை மேற்கொள்ளப்பட்ட தமிழர் வரலாற்றுச் சிறப்புமிக்க "குடாரப்புத் தரையிறக்கம்" தொடர்பாகவும் அதற்கு முன்னர் நடைபெற்ற கட்டம் மூன்றின் போது மேற்கொள்ளப்பட்ட புல்லாவெளி தரையிறக்கம் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட பாடலின் வரிகள் உள்ளன.

 

ஆனையிறவுத் தளம்...

ஆனையிறவுத் தளம் அதிர்ந்து வீழவே 
ஆணை பிறந்தது அலை மூன்றில் - புலி
தானை வென்றதென தகவல் மிதந்து வர 
தலைகள் நிமிர்ந்தனவே புவிமன்றில்

வான்-தரை-கடல் வழிச் சமரிலே - முன்
வரிப்புலி இழப்பினை ஏன் கண்டான்?
ஏனிது என்பதன் விடைகண்டு - தலைவன்
ஏவிய கடற்புலி செயம்கொண்டான்

தரையிறக்கினார் கடற்புலிகள் - பகை
தலையிறக்கினார் தமிழ்ப்புலிகள்
கரையிறக்கினார் கடற்புலிகள் - கடற்கலம் 
தரையிறக்கினார் கரும்புலிகள்

கடாரம் வென்ற படை போலும் - புலி 
கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி.
குடாரப்பு, புல்லாவெளி கரைகளிலே - சென்று 
குதித்த புலிகளின் கதைகேளும்

(தரையிறக்கினார் கடற்புலிகள்)

கடல்வழி வான்வழி பகைப்படைகள் - வர
கதைகளை முடித்தனர் கடற்புலிகள்
தடைகள் தாண்டினர் புயற்புலிகள் - வெற்றி 
தந்துவிட்டோடினர் நரிப்படைகள்

(தரையிறக்கினார் கடற்புலிகள்)

********

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

உலக புகழ் பெற்ற இந்த தாக்குதல் பற்றிய தகவல்களுக்கு நன்றி நன்னி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.