Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே பதினெட்டு:  ரணில் நினைவு கூர்த்தலைத் தடுப்பாரா? - நிலாந்தன். -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே பதினெட்டு:  ரணில் நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன்.

மே பதினெட்டு:  ரணில் நினைவு கூர்த்தலைத் தடுப்பாரா? - நிலாந்தன். -

மே 18 இம்முறை மிகவும் வித்தியாசமான ஒரு சூழலுக்குள் வருகிறது. எந்த மே மாதம் ராஜபக்சக்கள் நாட்டை சிங்கள மக்களுக்கு வென்று கொடுத்ததாக பிரகடனப்படுத்தினார்களோ, அதே மே மாதம் அவர்களை சிங்கள மக்களை அவர்களுடைய சொந்த தேர்தல் தொகுதிகளில் இருந்து துரத்தியிருக்கிறார்கள். இப்பொழுது மஹிந்த ராஜபக்ச நாட்டின் வடக்குக் கிழக்கில் எங்கேயோ ஒரு படைத் தளத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாக கருதப்படுகிறது.அவர்கள் பாதுகாத்து கொடுத்த தேசமே அவர்களை ஓட ஓட விரட்டுகிறது. அவர்கள் எங்கேயும் தப்பி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி விடாமல் இருக்க நீதிமன்றங்களில் தடையுத்தரவை வாங்கி வைத்திருக்கிறது.

இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முன்னெப்பொழுதும் இடம்பெற்றிராத சம்பவங்கள் கடந்த சுமார் 45 நாட்களுக்கு மேலாக நடந்துவருகின்றன. மார்ச் மாதம் 31 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன் தொடங்கிய ஆர்ப்பாட்டம் அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டது. அதன் விளைவாக கோட்டாபயவை தவிர ஏனைய எல்லா ராஜபக்சக்களும் பதவி விலகிவிட்டார்கள்.

ராஜபக்சக்கள் கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரணிலைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற முற்பட்டார்கள். ஆனால் இப்பொழுது அதே ரணிலை செங்கம்பளம் விரித்துக் கூப்பிட்டு பிரதமராக நியமித்திருக்கிறார்கள். ரணில் விக்ரமசிங்க இப்பொழுது ஆளுங்கட்சியின் பிரதமரா? அல்லது எதிர்க்கட்சிகளின் பிரதமரா? வழமையான நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர்தான் பிரதமராக வரலாம். ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஆளுங்கட்சி உறுப்பினர் அல்ல. எதிர்க் கட்சி உறுப்பினரும் அல்ல. எதிர்க்கட்சியாக அமர்வதற்குக் கூட அவரிடம் ஆசனங்கள் இல்லை. ஒரே ஒரு ஆசனம்தான் உண்டு. அதுவும் தேசியப்பட்டியல் ஆசனம். உலகிலேயே தேசியப்பட்டியல் ஆசனத்தின் மூலம் தனி ஒருவராக தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவர் நாட்டின் பிரதமராக வந்திருப்பது என்பது ஆசியாவின் அதிசயம் மட்டுமல்லை, உலகத்தின் அதிசயமும்தான்.

அவர் ஆளும் கட்சியின் பிரதமரும் அல்ல. எதிர்க்கட்சியின் பிரதமரும் அல்ல. சரியான வார்த்தைகளில் சொன்னால் அவர் தோல்விகளின் பிரதமர். இலங்கைத்தீவின் நாடாளுமன்ற அரசியல் தோல்விகளின் பிரதமர். தோற்றுப்போய் ஒரு ஆசனத்தை கூட வெல்ல முடியாத ஒரு கட்சியின் பிரதிநிதி அவர். ஆனால் நாடாளுமன்றத்தின் தோல்வி அவரை பிரதமர் ஆக்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் தோல்வி அல்லது அவருடைய அரசியல் எதிரிகளின் தோல்வி அவரை தவிர்க்க முடியாதபடி தெரிவு செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் அவருக்கு வெற்றிதான். ஒரேசமயத்தில் அவர் இரண்டு எதிரிகளை வென்றிருக்கிறார். முதலாவது தனது கட்சியின் எதிரியான தாமரை மொட்டை வென்றிருக்கிறார். இரண்டாவதாக உட்கட்சி எதிரியான சஜித்தை வென்றிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அது வெற்றி.ஆனால் அவர் தலைமையேற்றிருப்பது ஒரு தோல்விக்கு. இந்த தோல்வியை அவர் வெற்றியாக மாற்றிக் காட்ட வேண்டும்.

இவ்வாறு தென்னிலங்கையில் நாடாளுமன்றம், ஜனநாயக அரசியலின் நகைக்கத்தக்க நூதனங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், மே18 வருகிறது. இப்போதிருக்கும் அரசியல் நிலவரங்களின்படி தென்னிலங்கை குழம்பிப் போயிருக்கிறது. ஒப்பீட்டளவில் வடக்கு-கிழக்கில் சமூக அமைதி காணப்படுகிறது. ஆனால்தென்னிலங்கை குழம்பிப்போய் இருந்தாலும் அதன் படைக் கட்டமைப்பு அப்படியே பலமாக இருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் படையினரின் பிரசன்னம் அப்படியே இருக்கிறது.

இப்படிப்பட்ட ஓர் அரசியல் சூழலில் தமிழ் மக்கள் மே 18ஐ நினைவு கூரும் பொழுது அதை படைத்தரப்பு தடுக்குமா ? ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் தடுக்குமா? நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தடுப்பாரா? அந்த ஜனாதிபதியை வீட்டுக்கு போ என்று கேட்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மே18 அனுஷ்டிப்பார்களா? அந்த ஆர்ப்பாட்டங்களை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக என்ன நிலைப்பாட்டை எடுக்கும்? கடந்த ஆண்டு நினைவு கூர்தலின்போது சஜித் பிரேமதாச தமிழ் மக்களுக்குச் சாதகமாக அறிக்கை விட்டார். அந்த நிலைப்பாட்டை அவர் இந்த ஆண்டும் புதுப்பிப்பாரா? போன்ற கேள்விகளின் மத்தியில் மே 18 வருகிறது.

கோட்டாபய ஆட்சியின் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்மக்கள் துப்பாக்கியின் நிழலில்தான் நினைவுகூர முடிந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பில் நினைவுகூர்ந்த காரணத்துக்காக பத்துப் பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் நான்கு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின் அண்மையில்தான் விடுவிக்கப்பட்டார்கள். மேலும்.அண்மையில் மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவு தினம் வந்தது. அதை அனுஷ்டிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சில செயற்பாட்டாளர்களின் மீது தடை உத்தரவு வாங்கப்பட்டது.

இப்பொழுது ரணில்விக்கிரமசிங்க வந்திருக்கிறார்.அவர் எதிரிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர். ஆயின்,அவர் நினைவுகூர்தல் தொடர்பாக எப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்? கோட்டா கோ கம கிராமம் தொடர்பாக அவர் எடுத்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகவே அது அமையும் என்று எதிர்பார்க்கலாமா?

அவரும் மைத்திரியும் ஆட்சி புரிந்த காலத்தில் நினைவு கூர்தலுக்கான வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது. நிலைமாறுகால நீதியின் கீழ் நினைவு கூர்தல் அனுமதிக்கப்பட்டது. இம்முறையும் அவ்வாறு அனுமதிக்கப்படுமா?

ரணில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தமிழ் கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியிருக்கும்.இப்போதும் அவருக்குரிய பெரும்பான்மையை உருவாக்குவதற்கு அரசாங்கத்தோடு இணைந்து நிற்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தேவை. எனவே நினைவு கூர்தல் பொறுத்து கடந்த இரண்டு ஆண்டுகளை விட ஒப்பீட்டளவில் அதிகரித்த வெளி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா?

ஏற்கனவே கடந்த வாரத்தில் இருந்து தமிழ் பகுதிகளில் நினைவு கூர்தல் தொடங்கிவிட்டது. முள்ளிவாய்க்கால் நினைவுகளைப் பகிரும் விதத்தில் வெவ்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்படுகிறது.இவ்வாறான செயற்பாடுகளை படையினரும் பொலிசாரும் பெரும்பாலும் தடுப்பதாகத் தெரியவில்லை.எனவே இச்செயற்பாடுகளின் உச்சக்கட்டமாக முள்ளிவாய்க்காலில் மக்கள் கூடி தங்கள் கூட்டுத் துக்கத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளுக்கும் அரசாங்கம் அனுமதிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.

அதேசமயம் அரசாங்கத்துக்கு எதிராக கிராமங்களை அமைத்து போராடும் செயற்பாட்டாளர்கள் தமிழ் மக்களின் நினைவுகூர்தல் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்ற கேள்வி தமிழ் மக்களிடம் உண்டு.

கடந்த வெள்ளிக்கிழமை அக்கிராமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக்  கூறப்படும் ஒரு இளம்பெண்ணும் பௌத்த மத குருவும் கிறிஸ்தவ மத குருவும் இணைந்து ஒரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் புதிய பிரதமரை நோக்கி அவர்கள் கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்கள். அக் கோரிக்கைகளில் தமிழ்,முஸ்லிம் சமூகங்களைப்  பாதிக்கும் விடயங்கள் தொடர்பான ஆழமான கோரிக்கைகள் எவையும் இருக்கவில்லை.அது தொடர்பாக தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் கசப்பான எதிர்வினைகளை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது.

தமிழ் மக்கள் மத்தியில் கோட்டா கோ கம கிராமத்தோடு இணைந்து தமிழ் மக்கள் போராட வேண்டும் என்று கேட்பவர்களை விடவும் அந்தப் போராட்டங்களில் சம்பந்தப்படாமல் விலகி நிற்க வேண்டும் என்று கூறுபவர்களின் தொகைதான் ஒப்பீட்டளவில் அதிகமாகும். தமிழ் அரசியல் பரப்பில் சுமந்திரனைத்தவிர பெரும்பாலானவர்கள் விலகி நிற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தான் கொண்டிருப்பதாக தெரிகிறது. இப்படிப்பட்டதோர் பின்னணியில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஊடகச் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அப்போராட்டக்காரர்கள் மீது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் நம்பிக்கை வைக்க முடியாது என்று கூறும் தரப்புக்களை உற்சாகப்படுத்தியிருக்கின்றன.

மேற்படி ஆகப் பிந்திய நிகழ்வுகளின் பின்னணியில் கோட்டாகோ கம கிராமத்தில் இருப்பவர்கள் மே18ஐ நினைவு கூர்வார்களா என்ற கேள்வி தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பலமாக மேலெழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அந்த உரையாடல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. குறிப்பாக ஆங்கிலத்தில் நிகழும் அவ்வாறான உரையாடல்களில் சிங்கள செயற்பாட்டாளர்களும் பங்குபற்றவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அவர்களில் அநேகர் நினைவு கூர்தலுக்கு ஆதரவாகக் காணப்படுவதாக தெரிகிறது. அப்படிப்பட்ட உரையாடல்கள் தொடர்ச்சியாக நடக்கவேண்டும். தமிழ் மக்கள் தமது போராட்ட நியாயத்தை கோட்டா கோ கமவுக்கு விளங்கப்படுத்த வேண்டும். சிங்கள நடுத்தர வர்க்கம் மிகவும் நொந்து போயிருக்கிறது. யுத்த வெற்றியை ஓர் அரசியல் முதலீடாக வைத்து ஒரு குடும்பம் நாட்டைச் சூறையாடி விட்டது என்ற அபிப்பிராயம் அவர்கள் மத்தியில் பலமாக காணப்படுகிறது. யுத்த் வெற்றியைச் சாப்பிட முடியாது என்பதனை கடந்த சில மாதங்கள் அவர்களுக்கு உணர்த்தி விட்டன. எனவே அவர்களோடு உரையாடலைத் தொடங்க வேண்டிய நேரம் இதுதான். மே  பதினெட்டுத் தொடர்பாக கோட்டா கோ கம கிராமத்தில் இருப்பவர்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பது இனங்களுக்கு இடையிலான உரையாடலைத் தீர்மானிக்கும் ஆகப் பிந்திய  தொடக்கமாக அமையும்.

https://athavannews.com/2022/1281894

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி -நிலாந்தன்!

May 15, 2022
 

spacer.png

 

“1939 இல் சேர்ச்சிலிற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே காணப்பட்டது. அவர் எப்படிப் பிரதமரானார்? நெருக்கடி காரணமாகவே அவர் பிரதமரானார்.நானும் அதனையே செய்திருக்கின்றேன்.வரலாற்றைப் படியுங்கள்”.இது ரணில் விக்ரமசிங்க கூறியது. இலங்கை தீவின் ஆறாவது பிரதமராக நியமிக்கப்பட்டபின் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு அவர் கூறிய பதில் இது.உண்மை. வரலாற்றைப் படிக்க வேண்டும்தான். வரலாறு மிகவும் முக்கியம் பிரதமரே. ஆனால் அது புலிகேசி நாயகன் வடிவேலு கூறிய அர்த்தத்தில் அல்ல. ரஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய லெனின் கூறிய அர்த்தத்தில்தான். லெனின் கூறுகிறார் “வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி” என்று.

கடந்த 9ஆம் திகதி அது நிரூபிக்கப்பட்டது.13 ஆண்டுகளுக்கு முன் மகிந்த எந்த நாட்டை சிங்கள மக்களுக்கு வென்று கொடுத்து மண்ணைத் தொட்டு வணங்கினாரோ,அதே நாடு அவரை வடக்கு கிழக்கை நோக்கி துரத்திவிட்டிருக்கிறது.அவருடைய சொந்த ஊரிலேயே,அவருடைய சொந்த தேர்தல் தொகுதியிலேயே,அவருக்கும் அவருடைய வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை.அவரைப் போலவே அவருடைய ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை. அப்படியென்றால் அவர்கள் பெற்றுக்கொடுத்த வெற்றி எங்கே?தேசிய பாதுகாப்பு,தேசிய பாதுகாப்பு என்றெல்லாம் சொன்னார்கள்.ஆனால் அவர்களுடைய சொந்த கிராமத்திலேயே அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விட்டதே? அவரை இரண்டாவது துட்டகைமுனுவாகக் கொண்டாடிய மக்களே கிழட்டு மைனா என்று கூறி ஓட ஓட விரட்டும் ஒரு நிலை ஏன் தோன்றியது? ஏனென்றால் வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி.

எந்தப் பேர வாவியில் அறுபத்தியாறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் அரசியல்வாதிகளை பண்டாரநாயக்கா ஏவிவிட்ட குண்டர்கள் தூக்கி எறிந்தார்களோ, அதே பேர வாவியில் மகிந்த ராஜபக்ச அனுப்பிய குண்டர்களை போராட்டக்காரர்களும் பொதுமக்களும் தூக்கி எறிந்திருக்கிறார்கள்.66 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்களை,சிங்களக் குண்டர்கள் தூக்கி எறிந்தார்கள். இப்பொழுது சிங்கள குண்டர்களை சிங்கள மக்களே தூக்கி எறிந்திருக்கிறார்கள்.”பூமியிலே சூரியனுக்கு கீழே நூதனமானது எதுவுமேயில்லை”.ஏனென்றால் வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி.

உலகிலேயே போலீசாரின் வாகனங்களை பொதுமக்கள் சோதனை செய்யும் ஒரு காட்சி இலங்கைத்தீவில்தான் கடந்த வாரம் இடம்பெற்றது.கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் வழிகள் தோறும் பொதுமக்கள் ஆங்காங்கே நின்று வாகனங்களைச் சோதித்தார்கள். மஹிந்தவோ அவருடைய ஆட்களோ தப்பிச் சென்றால் பிடிப்பதற்காக அந்தச் சோதனை. அந்தவழியாக வந்த போலீஸ் வாகனங்களும் சோதிக்கப்பட்டன.அதுதான் ஆசியாவின் அதிசயம்.

கடந்த சுமார் 45 நாட்களுக்கு மேலாக தெற்கில் நடந்துவரும் மக்கள் எழுச்சிகளின்போது, இரண்டு தரப்புக்கள் சாட்சிகளாக விலகிநிற்கின்ன்றன. முதலாவது சாட்சி தமிழ் மக்கள்.பெரும்பாலான தமிழ் மக்கள் நடப்பவற்றை விலகி நின்று சாட்சிகளாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் இருந்தும் கொழும்பிலிருந்தும் ஒப்பீட்டளவில் மிகச்சிறு தொகையினர் காலிமுகத்திடலை நோக்கி சென்றார்கள்.ஆனால் பொதுப் போக்கு எனப்படுவது தமிழ்மக்கள் சாட்சியாக நிற்கிறார்கள் என்பதுதான்.

இரண்டாவது சாட்சி,படைத்தரப்பு.நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் தரப்புக்களில் ஒன்று.ஆனால் அது தொடர்ந்தும் சாட்சியாகவே காணப்படுகிறது.படையினரும் போராட்டக்காரர்களும் முட்டிக் கொண்ட சந்தர்ப்பங்கள் மிக அரிது.சில புறநடைகளைத் தவிர பெரும்பாலும் படைத்தரப்பு ஒரு மௌன சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கமும் படைத்தரப்பை போராட்டக்காரர்களுடன் மோதவிடத் தயாரில்லை.போராடும் மக்களும் படைத்தரப்புடன் மோதுவதைத் தவிர்க்கிறார்கள்.குறிப்பாக காலிமுகத்திடலில் குழுமிநிற்கும் புதிய தலைமுறை அதை இயன்றளவுக்கு தவிர்க்கிறது. ராஜபக்ச குடும்பத்தின் மீது அவர்கள் வைப்பது திருட்டு குற்றச்சாட்டுதான். போர்க்குற்றச்சாட்டு அல்ல. அது போர்க் குற்றச்சாட்டாக இருந்தால் அதன் தர்க்கபூர்வ விளைவாக படையினரையும் குற்றவாளியாகக் காணும்.எனவே புதிய தலைமுறையும் அக்குற்றச்சாட்டை தவிர்க்கிறது.போராட்டம் தொடங்கிய புதிதில் இளம் ஊடகவியலாளர்கள் அமைப்பு ஒன்று அவ்வாறு போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் இரண்டு சுலோக அட்டைகளை ஏந்தியிருக்கக் காணப்பட்டது.ஆனால் பொதுப்போக்கு என்னவென்றால் அவர்கள் படைத்தரப்போடு முரண்பட விரும்பவில்லை என்பதுதான்.கோட்டா கோகமாவில் ரணவிரு குடில் ஒன்று உண்டு. அதுவும் படைத்தரப்புடன் மோதலை தவிர்க்க கூடியது.அதாவது கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்கும் புதியதலைமுறை படைத்தரப்புடன் மோதுவதை தவிர்க்கின்றது.

படைத்தரப்பும் தென்னிலங்கையில் போதிசத்துவர்கள் போல நடந்துகொள்கிறது.அவசரகாலச் சட்டத்தின்கீழ் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதி கொண்ட தனிநபர் மற்றும் பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. அரசியல்வாதிகளின் சொத்துக்களை அழித்து நாசமாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களை படைத்தரப்பு எதுவும் செய்யவில்லை.அல்லது படைத்தரப்பு அந்த பகுதிகளுக்குள் வருவதை தவிர்த்தது. ஆர்ப்பாட்டக்காரர்களின் கூட்டுக்கோபம் ஓரளவுக்கு அடங்கத் தொடங்கும்போதே கண்டதும் சுட உத்தரவு வழங்கப்பட்டது. அதாவது மஹிந்த மூட்டிய தீ அவருடைய ஆதரவாளர்களின் சொத்துக்களின் மீது பரவி சேதத்தை விளைவிப்பதை அவருடைய சகோதரர் ஒரு கட்டம் வரையிலும் விட்டுப் பிடித்தார் என்று எடுத்துக் கொள்ளலாமா?ஏனென்றால் “இளவரசர்கள் நண்டுகளை போன்றவர்கள்,தகப்பனைத் தின்னிகள்”என்று சாணக்கியர் கூறியிருக்கிறார்.இங்கேயும் வரலாறு ஒரு கண்டிப்பான கிழவிதான்.

இப்பொழுது ரணில் ஒரு தற்கொலைப் படை மாலுமியாக மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை பொறுப்பெடுத்திருக்கிறார்.அவருடைய வயதைப் பொறுத்தவரை இதுதான் அனேகமாக அவருடைய கடைசி ஆட்டம். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள். அதிலிருந்து தப்பியோட முயல்வார்கள். ராஜபக்சவின் தோல்விக்கு தாமும் பங்காளிகளாக மாற ஏனைய கட்சிகள் தயாராக இல்லை.அதனால்தான் பொருத்தமான இடைக்கால ஏற்பாட்டை ஏற்படுத்த முடியாமல் இருந்தது.இப்போது ரணில் துணிச்சலாக அந்தக் கப்பலை பொறுப்பெடுத்திருக்கிறார்.அவரை தெரிந்தெடுத்ததன் மூலம் கோத்தாபய தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாத்திருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். தமது சொந்த தேர்தல் தொகுதியில் தங்க முடியாமல் ஓடி ஒளிக்கும் அரசியல்வாதிகளை பாதுகாப்பதற்கு ரணில் தேவைதான்.தமிழ்ப்பகுதிகளில் ஒளித்துக்கொண்டிருக்கும் ராஜபக்சக்களை தலைநகரத்துக்கு மீண்டும் கொண்டுவர ரணில் தேவைதான். ஆனால் இந்த இடத்தில் ரணிலுக்கு பதிலாக ஒரு அணில் இருந்தாலும் அது ஒரு சிங்கள பௌத்த கொயிகம அணிலாக இருந்தால்,அதுவும் ராஜபக்சக்களைப் பாதுகாக்கும்தான்.அதுவும் ராஜபக்சக்களின் மீது திருட்டுக் குற்றச்சாட்டைத்தான் சுமத்தும். போர்குற்றச்சாட்டை அல்ல.

2018இல் யாரைக் கவிழ்த்து மஹிந்த, பின்கதவின் மூலம் உள்ளே நுழைய முற்பட்டாரோ இப்பொழுது அவரிடமே தனது பதவியைக் கொடுத்துவிட்டு தமிழ் பகுதியில் தஞ்சமடைந்திருக்கிறார். மகிந்த ராஜபக்சவின் நண்பராகிய ஒரு தமிழர் சில நாட்களுக்கு முன் முகநூலில் பின் வருமாறு பதிவிட்டிருந்தார்” அறுபத்தி ஒன்பது லட்சம் வாக்குகளை பெற்றவர் கடற்படை முகாமில் இருக்கிறார். இரண்டு லட்சம் வாக்குகளை பெற்றவர் அலரி மாளிகையில் இருக்கிறார்” என்று.ஏனெனில் வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி.அவள் அப்படித்தான் தீர்ப்பு வழங்குவாள்.

யுத்தமானது இலங்கைத்தீவின் இரண்டு பாரம்பரியக் கட்சிகளையும் சிதைத்து விட்டது.மிக மூத்த கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி முழுத்தோல்வி அடைந்த நிலையில் தேசியப் பட்டியல் ஆசனத்தின்மூலம் ரணில் நாடாளுமன்றத்திற்கு வந்தார். ஒரே ஒரு ஆசனம்.அதுவும் தேசிய பட்டியல் ஆசனத்தை வைத்திருக்கும் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவது ஆசியாவின் அதிசயந்தான்.அது நாடாளுமன்ற அரசியலின் தோல்வியைக் காட்டுகிறது.தமிழ் மக்களுடனான யுத்தம் இலங்கை தீவின் பாரம்பரிய கட்சிகளை மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் ஆன்மாவையே சிதைத்து விட்டது.ஏனென்றால் வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி

ரணில் ஒரு வலிய சீவன். ஒரு கல அங்கியான அமீபாவைப் போல ஒரு பக்கம் நசுக்க இன்னொரு பக்கத்தால் நெளிந்து,சுளித்துக் கொண்டு வருவார். இப்பொழுது வந்துவிட்டார்.அவருக்கு இரட்டை வெற்றி. முதல் வெற்றி,அரசியல் எதிரிகளான ராஜபக்சக்களே அவரை செங்கம்பளம் விரித்து வா என்று அழைத்தது.இரண்டாவது வெற்றி,உட்கட்சி எதிரியான சஜித் பிரேமதாசவைக் கீழேதள்ளியது.ஆனால்,நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்கு ரணிலும் ஒரு காரணம்தான்.

நாட்டுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது ஒரு இடைக்கால ஏற்பாடு. அது ஒரு ஸ்திரமான ஏற்பாடாக இருந்தால்தான் பொருளாதாரத்தைத் திட்டமிடலாம். ஐ.எம்.எப் போன்றவற்றை அணுகலாம்.எனவே ஒரு இடைக்கால ஏற்பாடாகத்தான் ரணில் உள்ளே வந்திருக்கிறார். அதன்மூலம் அவர் தன்னை நிரந்தரமாக்க முயற்சிப்பார்.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல அவர்,வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.இலங்கைத்தீவைப் போன்று பொருளாதார நெருக்கடிகளை அனுபவித்த அர்ஜென்டினா கிரேக்கம் ஆகிய நாடுகளில் அரசாங்கங்கள் அடிக்கடி மாறின.நிதியமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். நாடு மறுபடியும் நிமிர்ந்து நிற்க பல மாதங்கள் எடுத்தன.

உதாரணமாக,கிரேக்கத்தில் ஐந்துஆண்டுகளுக்குள் எழு தடவைகள் அரசாங்கம் மாறியது.அர்ஜென்டினாவில் ஐந்து தடவைகள் அரசாங்கம் மாறியது. ஐந்து தடவைகள் நிதியமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள்.பசில், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டபொழுது அவருக்கு எழு தலைகள் என்று அவருடைய ஆதரவாளர்கள் படங்கட்டினார்கள்.ஆனால் அவரால் எந்த மந்திர மாயத்தையும் செய்ய முடியவில்லை.முடிவில் சிங்களமக்கள் அவரை காகம் என்று கூறி இகழ்ந்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.பசிலுக்கு பின்வந்த நிதியமைச்சர்,அலி சப்ரி. அவர் பதவியேற்ற உடனேயே அதனை வேண்டாம் என்று கூறிவிட்டார். எனினும் அவருடைய ராஜினாமாவை கோட்டாபய ஏற்றுக்கொள்ளவில்லை. ரணில் இப்பொழுது பொறுப்பெடுத்திருப்பது ஒரு தோல்வியை.அதை வெற்றியாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் தோல்வியோடு ஓய்வுபெற வேண்டியிருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ரணில் தேசியப்பட்டியல்மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.அவருடைய முதலாவது உரையிலேயே அவர் சுட்டிக்காட்டிய விடயம் ஐ.எம்.எஃப்ஐ நோக்கிப் போகவேண்டும் என்பதுதான்.இப்பொழுது அவர்தான் பிரதமர்.அவர் மேற்கின் செல்லப்பிள்ளை.இந்தியாவும் அவரோடு சுதாகரிக்கும்.எனவே மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை பத்திரமாக கரை சேர்ப்பதா அல்லது கப்பலோடு சேர்ந்து மூழ்கி விடுவதா என்பது அவருடைய தலைமைத்துவத்தில்தான் தங்கியிருக்கிறது.அவர் பதவியேற்றபின் அவரை ஆசீர்வதித்த ஒரு பிக்கு அவருடைய முகத்துக்கு நேரே கூறியதுபோல இந்த ஆபத்தான விளையாட்டில் அவர் தோற்பாராக இருந்தால் பேர வாவியில் யானைகள் குளிக்க வேண்டி இருக்கும். அதாவது மஹிந்த அனுப்பிய குண்டர்களை மக்கள் பேர வாவிக்குள் தூக்கி எறிந்ததைப் போல யானைக் கட்சியையும் தூக்கி எறிவார்கள் என்று அந்த பிக்கு எச்சரித்திருந்தார். உண்மைதான் ஏனென்றால் வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி.
 

https://globaltamilnews.net/2022/176687

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.