Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவும்... தமிழ்க் கட்சிகளும்! நிலாந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவும் தமிழ்க் கட்சிகளும்! நிலாந்தன்.

ஜெனிவாவும்... தமிழ்க் கட்சிகளும்! நிலாந்தன்.

கடந்த ஆண்டு ஜெனிவா கூட்டத்துடன் முன்னிட்டு,கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஐநாவுக்கு ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்பின. அக்கூட்டுக் கடிதத்தில் பொறுப்பு கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்று கேட்டிருந்தன.சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறும் கேட்டிருந்தன.சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பொறிமுறையை பொருத்தமான காலவரையறையுடன் உருவாக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தன.

இது நடந்து சரியாக 20 மாதங்கள் ஆகிவிட்டன. மேற்படி கூட்டுக் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்த பல விடயங்களை அதன்பின் வெளிவந்த ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை பிரதிபலித்தது.அது தமிழ்மக்களுக்கு உற்சாகமூட்டும் ஒன்றாகவும் காணப்பட்டது.ஆனால் ஜெனிவா தீர்மானத்துக்குரிய சீரோ டிராப்ட் வெளிவந்த பொழுது அது தமிழ்மக்களுக்கு ஏமாற்றமும் விரக்தியுமளிக்கும் ஒன்றாக காணப்பட்டது.

கடந்த 13 ஆண்டுகளாக நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது. மனித உரிமைகள் ஆணையர்களின் அறிக்கைகள் அரசாங்கத்தை விமர்சிக்கும் போக்குடன் காணப்படும்.ஆனால் ஜெனிவா தீர்மானங்கள் அவ்வாறு அரசாங்கத்தை வெளிப்படையாகவும் கடுமையாகவும் கண்டிக்கும் தொனியில் அமைவதில்லை.இவ்வாறு மனிதஉரிமைகள் ஆணையர்களின் அறிக்கைகளுக்கும் ஜெனிவா தீர்மானங்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி என்பது தமிழ்மக்களைப் பொறுத்தவரை,ஐநாவை நோக்கிக் காத்திருப்பதில் நம்பிக்கையிழக்கப் போதுமான காரணங்களை கொண்டிருக்கின்றது.

இம்முறையும் கடந்தவாரம் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளி வந்திருக்கிறது. அதில் தமிழ்மக்களுக்கு உற்சாகமூட்டும் அம்சங்கள் உண்டு. ஆனால் நிச்சயமாக ஜெனிவா தீர்மானத்துக்கும் அந்த அறிக்கைக்கும் இடையே ஓர் இடைவெளி இருக்கத்தான் போகிறது. ஒருபுறம் இந்த இடைவெளி தமிழ் மக்களுக்கு விரக்தியூட்டுவது.ஆனால் இன்னொரு புறம் அதுதான் உலக அரசியல் யதார்த்தம்.ஏனெனில் ஜெனிவா எனப்படுவது பிரதானமாக அரசுகளின் அரங்கு.அங்கு அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பெரும்பான்மை ஆதரவோடுதான் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். எனவே உறுப்பு நாடுகளின் ஆதரவை பெறுவதற்காக தீர்மானங்கள் நீர்த்துப்போகச் செய்யப்படும் வழமை அங்கு உண்டு.இந்த முறையும் அதுதான் நடக்கப்போகிறது.

இவ்வாறு ஆணையாளர்களின் அறிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் இடையே காணப்படும் பாரதூரமான அந்த இடைவெளிதான் தமிழ்மக்கள் அதிகம் உழைக்க வேண்டிய ஒரு பரப்பு ஆகும்.

ஆனால் அவ்வாறு உழைப்பதற்குரிய ஒரு பொதுவான ஒன்றிணைந்த கட்டமைப்பு எதுவும் தமிழ்மக்கள் மத்தியில் கிடையாது.அதற்குத் தேவையான வெளியுறவுத் தரிசனமும் தமிழ்மக்கள் மத்தியில் கிடையாது. இதுதான் கடந்த 13 ஆண்டுகளாக ஜெனிவாவில் தமிழ்மக்கள் பொருத்தமான வெற்றிகளைப் பெறத்தவறியதற்கு அடிப்படைக் காரணம் ஆகும்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று கட்சிகள் ஒன்றாக கடிதம் எழுதிய பொழுது அது தமிழ்மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. மேலும் அக்கடிதம், மேற்கத்திய நாடுகளினதும் ஐநாவினதும் கவனிப்பை அதிகம் பெற்றது. ஆனால் அக்கடிதத்தை எழுதிய கட்சிகள் தொடர்ந்து ஐக்கியமாக செயல்படவில்லை.கடிதத்தில் அவர்கள் கேட்டிருந்ததுபோல பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்பதற்காக கடந்த சுமார் 20 மாதகாலமாக தாம் முன்னெடுத்த செயற்பாடுகளை மேற்படி கட்சிகள் தமது மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

அவை ரகசியமான செயல்பாடுகள், அவற்றைப் பரகசியப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டு தப்பமுடியாது.ஏனென்றால் பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போவது என்பது ஒரு கூட்டுவிருப்பம் மட்டுமல்ல. அது நடப்பில் உள்ள உலக அரசியல் யதார்த்தத்திற்கு எதிரான ஒரு செயற்பாடு. அவ்வாறு செயல்படுவதென்றால் அதற்கு ஒன்றிணைந்த உழைப்பு வேண்டும்.அதற்கென்று ஒரு கட்டமைப்பு வேண்டும்.வழிவரைபடம் வேண்டும்.ஆனால் தமிழ்க் கட்சிகள் கடந்த 20 மாதகால பகுதிக்குள் இது விடயத்தில் அவ்வாறான கட்டமைப்புகள் எவற்றையாவது உருவாக்கியுள்ளனவா?

இந்தவிடயத்தில் பொறுப்பு கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்பதனை தர்கபூர்வமாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். கடந்த 20 மாத கால பகுதிக்குள் அதை நோக்கி அக்கட்சி என்னென்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்று தமிழ் மக்களுக்கு தொகுத்துக் கூற வேண்டும். இது முதலாவது.

இரண்டாவதாக, கடந்த ஆண்டு கூட்டுக்கடிதத்தில் கையெழுத்திட்ட கூட்டமைப்பு ஸீரோ டிராப்ட் வெளிவந்ததும் கடிதத்தில் தாம் முன்வைத்த கோரிக்கைகளிலிருந்து நடைமுறையில் பின்வாங்கத் தொடங்கியது.அதுவும் அம்மூன்று கட்சிகளின் ஐக்கியம் உடைவதற்கு ஒரு பிரதான காரணம். அதன்பின் கூட்டமைப்புக்குள்ளும் விரிசல்கள் அதிகரித்தன. கூட்டமைப்புக்கு வெளியே வேறு புதிய கூட்டுக்களும் உருவாக்கப்பட்டன.கூட்டுக்கள் இந்தியாவை நோக்கியும் கோரிக்கைகளை முன்வைத்தன. அக்கோரிக்கைகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று கட்சிகளும் ஒன்றாக முன்வைத்த கோரிக்கைகளுக்கு பொருத்தமானவைகளாகவும் இருக்கவில்லை.மேலும் வெவ்வேறு கூட்டுக்கள் வெவ்வேறு கடிதங்களை ஐநாவுக்கும் மேற்கத்திய தூதரகங்களுக்கும் அனுப்பின, தூதுவர்களையும் சந்தித்து வருகின்றன.

இவையாவும் கடந்த 20 மாத காலப் பகுதிக்குள் நடந்தவை. இம்முறை ஜெனீாவா கூட்டத்தொடரை முன்னிட்டு கூட்டமைப்பின் பேச்சாளர் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.குறிப்பாக ஜெனிவா தீர்மானத்தை முன்னகர்த்தும் நாடுகளின் வெளியுறவு கட்டமைப்புகளோடு தான் உரையாடியதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அவர் கடந்த ஜனவரி மாதம் அனுப்பிய கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாகத்தான் அந்த உரையாடல்களை நடத்தினாரா?அல்லது வேறு எந்த அடிப்படையில் அந்த உரையாடலை நடத்தியுள்ளார்? என்பதனை தமிழ் மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.

அதைவிட முக்கியமாக தன் சொந்த கட்சிக்கு விளங்கப்படுத்த வேண்டும்.ஏனென்றால் அவர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை பிரதிபலிக்கவில்லை என்று அக்கட்சிகள் தெரிவிக்கின்றன.மேலும் அக்கட்சிகள் வேறு ஒரு கூட்டிற்கூடாக கூட்டுக்கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. தவிர,கூட்டமைப்பின் பேச்சாளர் பங்காளிக் கட்சிகளை பிரதிபலிக்கவில்லை என்றால் தன் சொந்தக் கட்சியான தமிழரசு கட்சியையாவது பிரதிபலிக்கிறாரா என்று பார்க்க வேண்டும்.ஏனென்றால் தமிழரசுக் கட்சிக்குள்ளும் அவர் அது தொடர்பாக உரையாடியதாக தெரியவில்லை. எனவே அவர் குறிப்பிட்ட சில நாடுகளின் வெளியுறவுக் கட்டமைப்புக்களுடன் நடத்திய உரையாடல்களில் யாருடைய பிரதிநிதியாக அங்கே போனார்?எந்த வெளியுறவு அணுகுமுறையின் அடிப்படையில் உரையாடலை நடத்தினார்? என்பவற்றை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இது இரண்டாவது.

மூன்றாவது, கடந்த ஆண்டு எழுதப்பட்ட அக்கூட்டு கடிதத்தில் ஒரு விசாரணைப் பொறிமுறை அல்லது சாட்சிகளையும் சான்றுகளையும் திரட்டுவதற்கான ஒரு பொறிமுறை குறித்த கோரிக்கை இணைக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வாதாடியது விக்னேஸ்வரனின் கூட்டைச் சேர்ந்த கட்சிகள்தான். குறிப்பாக சிவாஜிலிங்கம் அந்த கோரிக்கையை விடாப்பிடியாக அழுத்திக் கொண்டேயிருந்தார்.மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் சந்திப்புகளில் ஈடுபட்ட கிழக்கைச் சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் என்னிடம் கேட்டார்..”இவர்கள் ஏன் அந்த பொறிமுறையை பிடிவாதமாக ஆதரிக்கிறார்கள்? அந்த பொறிமுறைக்குள் என்ன இருக்கிறது?” என்று. அவர் அப்படிக் கேட்குமளவுக்கு அந்தப்பொறிமுறையை கூட்டுக்கடிதத்தில் இணைக்க வேண்டும் என்று அக்கட்சியினர் வலியுறுத்தினார்கள்.இப்பொழுது சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிக்கும் ஒரு அலுவலகம் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்துக்குள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அது கடந்த ஆண்டு மூன்று கட்சிகளும் கூட்டாக எழுதிய கடிதத்தில் கேட்டிருந்த ஒரு கட்டமைப்பை போன்றது அல்ல. முதலில் 13 நிபுணர்கள் என்று கூறப்பட்டது. பின்னர் நிபுணர்களின் எண்ணிக்கை எட்டாக குறைக்கப்பட்டுள்ளது.முதலில் அது கடந்த ஆண்டு இயங்கத் தொடங்கி பெரும்பாலும் இந்த ஆண்டுக்குள் அதன் பணியை முடித்துவிடும் என்று கூறப்பட்டது. இப்பொழுது அவ்வாறான கால எல்லைகள் எதைக் குறித்தும் பேசப்படுவதில்லை. அக்கட்டமைப்புக்கு நிதி போதாமல் இருப்பதனால் அதன் செயல்பாடும் வரையறைக்குட்பட்டதாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆண்டு மனிதஉரிமைகள் ஆணையரின் அறிக்கையில் அந்த நிதிப்பற்றாக்குறை பற்றி அவர் சுட்டிப்பாக கூறியுள்ளார்.அதாவது கடந்த ஆண்டு மூன்று கட்சிகளும் கேட்டுக் கொண்டது போல ஏதோ ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.ஆனால் அக்கட்டமைப்பானது,தாம் வலியுறுத்திய கட்டமைப்பைப் போன்றது அல்ல,மிகப்பலவீனமானது என்பதனை ஏன் இந்த மூன்று கட்சிகளும் ஐநா விடமும் உலகசமூகத்திடமும் ஆணித்தரமாக எடுத்துரைத்தனவா?

இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று கட்சிகளும் இணைந்த பொழுது, 2009க்குப் பின் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு முக்கியமான ஒருங்கிணைவாக அது பார்க்கப்பட்டது.அது பின்னர் அசிங்கமான விதத்தில் உடைந்து சிதறியது என்பது வேறுகதை.எனினும் அவ்வாறான ஒருங்கிணைப்பின் விளைவாக ஒரு கூட்டுக்கடிதம் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்டது. இப்பொழுது இருபது மாதங்களின் பின் கூட்டுக்கடிதத்தில் கேட்கப்பட்ட விடயங்களில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன? அல்லது அதை நோக்கி மேற்படி கட்சிகள் எந்தளவுக்கு உழைத்திருக்கின்றன? என்பதனை அக்கட்சிகள் தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஏனென்றால் போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் தமிழ்க்கட்சிகள், முதலில் வாக்களித்த தமது மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.

https://athavannews.com/2022/1298559

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா: இந்த ஆண்டுப் பலன் என்ன ?

நிலாந்தன்

 

spacer.png

ஐநா மனித உரிமைகள் பேரவை எனப்படுவது ஒரு நாட்டுக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் ஆணை அந்தப்பேரவையிடம் கிடையாது.அதை நடைமுறைப்படுத்தும் உபகரணம் எதுவும் அந்தப்பேரவையிடம் கிடையாது. ஒரு நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பதற்கோ,பயன்பொருத்தமான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கோ பேரவையால் முடியாது.மாறாக குறிப்பிட்ட ஒரு நாடு பேரவையோடு இணங்கிச் சென்றால் அந்த நாட்டுடன் இணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அந்த நாட்டின் இணையனுசரணையோடு ஐநா அலுவலர்கள் தொழிற்பட முடியும்.அதன்மூலம் ஒரு தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியும்.அதுதான் 2015 ஆட்சி மாற்றத்தின் பின் நடந்தது. ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஐநா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது.

ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தவரை,ஐநா தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவே நிறைவேற்றப்பட்டன.அவை ஒருவிதத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான மேற்கத்திய வியூகங்களின் பகுதியாகக் காணப்பட்டன.அவை தமிழ்மக்களுக்கு ஆதரவானவை என்ற வெளித்தோற்றத்தை கொண்டிருந்தாலும்,அவற்றுக்குப் பின்னால் இருந்த ராஜதந்திர இலக்கு என்னவென்றால், சீனாவை நோக்கிச் சாயும் இலங்கை அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதுதான். இந்த அடிப்படையில் ராஜபக்சக்களின் காலத்தில் ஐநா தீர்மானங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவை.ஆனால் ரணிலுடைய காலத்தில் 2015ல்  ஐநாவுடன் அவர் இணக்கத்துக்கு வந்தார்.அவ்வாறு இணை அனுசரணை வழங்கி உருவாக்கப்பட்டதுதான் நிலைமாறு கால நீதிக்கான 30/1 தீர்மானம்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க இணை அனுசரணை வழங்கி உருவாக்கிய தீர்மானத்தின் பிரகாரம் கட்டமைப்புசார் மாற்றங்களை செய்யவில்லை. நிலைமாறு கால நீதி இலங்கைததீவில் ஓரழகிய பொய்யாக மாறியது. நாங்கள் ஒரு பரிசோதனை செய்தோம் அதில் தோற்று விட்டோம் என்று சுமந்திரன் வவுனியாவில் வைத்து தெரிவித்தார்.ஏனெனில் கூட்டமைப்பு நிலைமாறுகால நீதியின் பங்காளியாகக் காணப்பட்டது.

spacer.png

இது 2015 ஆட்சிமாற்றத்தின் பின் நிகழ்ந்தது.அதன்பின் ராஜபக்சக்கள் மறுபடியும் வந்தார்கள்.அவர்களுடைய காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கடந்த ஆண்டு 46/1 தீர்மானத்தின் மூலம் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு- அலுவலகம்- பரிந்துரைக்கப்பட்டது.

இப்பொழுது ரணில் வந்து விட்டார்.தர்க்கத்தின்படி பார்த்தால் இந்தமுறை வரக்கூடிய தீர்மானம் ரணில் விக்ரமசிங்கவின் இணையனுசரணையோடு நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான வாய்ப்புகள் உண்டா?

ஏனெனில் 2015இல் ரணில் ராஜபக்சக்களிற்கு எதிரான ஆட்சி மாற்றத்தின் கருவி  ஆனால்,இப்பொழுது அவர்  ராஜபக்சக்களின் முன்தடுப்பு.அவருடைய வெளிவிவகார அமைச்சர் யார் என்றால்,ராஜபக்சக்களின் தனிப்பட்ட வழக்கறிஞரான அலி சப்ரி.கடந்த திங்கட்கிழமை அலி சப்ரி பின்வருமாறு தொனிப்பட தெரிவித்தார்…இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களின் உண்மையை கண்டறிவதற்காக உள்ளக பொறிமுறை ஒன்று எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும்  என்றும்,ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் பேச்சுவார்த்தைமூலம் இணக்கமொன்றை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால்,2015ஆம் ஆண்டைப்போல இம்முறை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படக்கூடிய வாய்ப்புகள் மிகக்குறைவாகத் தெரிகின்றன.அதற்காக,கடந்தவாரம் வெளிவந்த ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அரசாங்கத்தை விமர்சித்திருப்பதை வைத்து புதிய ஜெனிவாத் தீர்மானத்தைக் குறித்து தமிழ்மக்கள் அதிகம்  எதிர்பார்க்கலாமா?

இந்த இடத்தில் தமிழர்கள் உற்றுக் கவனிக்க வேண்டிய ஜெனிவா யதார்த்தம் ஒன்று உண்டு. என்னவெனில், கடந்த 13 ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைக்கும் ஜெனிவா தீர்மானத்திற்கும் இடையே காணப்படும் இடைவெளிதான்.அது தமிழ்மக்களுக்கு விரக்தியூட்டக்கூடிய ஏமாற்றகரமான ஒரு இடைவெளி.அதுதான் தமிழ்மக்கள் அதிகம் உழைக்க வேண்டிய ஒரு இடைவெளியும்.கடந்த பல ஆண்டுகளாக ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைகள் அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றன.ஆனால் தீர்மானங்கள் அவ்வாறு இல்லை.அதை இன்னும் சரியாகச் சொன்னால்,தீர்மானத்தை பெரும்பான்மை வாக்குகளோடு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பெரும்பாலான நாடுகளை திருப்திப்படுத்தும் விதத்தில் தீர்மானம் நீர்த்துப்போகச் செய்யப்படும் என்பதே ஜெனீவா யதார்த்தம் ஆகும்.அதாவது ஐநா மனிதஉரிமைகள் ஆணையரின் அறிக்கையில் காணப்படும் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலான விமர்சனப் போக்கு ஐநா தீர்மானங்களில் இருப்பதில்லை.இம்முறை தீர்மானத்திலும் அப்படித்தான் அமையும்.

அதேசமயம்,முன்னைய தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட சாட்சிகளையும் சான்றுகளையும் திரட்டுவதற்கான அலுவலகத்தை ஒரு உள்நாட்டுப் பொறிமுறை மூலம் பதிலீடு செய்ய முடியாது.ஏனென்றால் அந்த அலுவலகம் ஏற்கனவே இயங்கத் தொடங்கிவிட்டது.அது ஒரு பலமான அலுவலகம் அல்ல.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று தமிழ்த்தேசிய கட்சிகளும் ஜெனிவாவுக்கு கூட்டாக எழுதிய கடிதத்தில் கேட்டிருந்த பொறிமுறைக்கு நிகரான ஒரு கட்டமைப்பு அல்ல.அது மனிதஉரிமைகள் பேரவைக்கு கீழ்தான் இயங்கும். கடந்த 13 ஆண்டுகளாக மனிதஉரிமைகள் பேரவை தமிழ்மக்களுக்கு எப்படிப்பட்ட நீதியை பெற்றுத் தந்தது என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் அப்பலவீனமான அலுவலகத்தைக்கூட சீனா போன்ற நாடுகள் மேலும் பலமிழக்கச் செய்ததாக புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.அவ்வலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சீனா தலையிட்டு குறைத்து விட்டதாக மேற்படி அமைப்புக்கள்  தெரிவிக்கின்றன. அவ்வலுவகத்துக்கு முதலில் பிரித்தானியாவும் நோர்வேயும் நிதியுதவி வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு விசேஷ நிதியை ஒதுக்காமல், ஐநாவின் பொது நிதி ஒதுக்கீட்டுக்கூடாக அந்த அலுவலகத்தை இயக்க வேண்டும் என்று சீனா போன்ற நாடுகள் வலியுறுத்தியதாக தெரியவருகிறது. இது கடந்த ஆண்டு நடந்தது. ஐநா மனிதஉரிமைகள் பேரவைக்கு ஏற்கனவே நிதிப்பற்றாக்குறை உண்டு.அப்பற்றாக்குறை அவ்வலுவகத்திலும் பிரதிபலித்தது.கடந்த ஆண்டு ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் தன்னுடைய அறிக்கையில் இந்நிதிப்பற்றாக்குறை தொடர்பாக சுட்டிப்பாகக் கூறியுள்ளார்.நிதி போதாமையால்தான் அவ்வலுவலகம் முழு வேகத்தோடும் முழுப் பலத்தோடும் இயங்க முடியவில்லை என்று சுட்டிக் காட்டப்படுகிறது. நிதி போதாமையால் அதன் ஆளணி 13இல் இருந்து 8ஆகக் குறைக்கப்பட்டது. எனினும் அவ்வலுவலகம் இப்பொழுது இயங்குகின்றது.அது சாட்சியங்களையும் சான்றுகளையும் சேகரித்து வருகிறது.அவ்வலுவகத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு அல்லது அவ்வலுவகத்துக்குரிய காரணங்களை வழுவிழக்கச்  செய்யும் நோக்கத்தோடு அலி சப்ரி உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றைக் குறித்து பேசுகிறார்.

ஆனால் உள்நாட்டுப் பொறிமுறை, உள்நாட்டுச் சட்டங்கள், உள்நாட்டின் யாப்பு என்பவை தமிழ் மக்களுக்கு நீதியை வழங்க முடியாதவை என்ற கருதுகோளின் அடிப்படையில்தான் நிலைமாறுகால நீதி என்பது 2015ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது.உள்நாட்டு நீதி போதுமானதாக இருந்தால் ஏன் நிலை மாறுகால நீதி என்ற ஐநா ஏற்பாட்டை குறித்து சிந்தித்திருக்க வேண்டும்?மேலும், ஈஸ்ரர் குண்டு வெடிப்புக்கு நீதி கேட்டு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஏன் ஐநாவிடம் முறையிட வேண்டும்?உள்நாட்டு நீதிக் கட்டமைப்பை அவர் நம்பவில்லை என்பதைத்தானே அது காட்டுகிறது? எனவே உள்நாட்டின் நீதியின் போதாமை காரணமாகத்தான் ஐநாவின் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் அடுத்த கட்டமாக 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் எல்லாவற்றுக்குப் பிறகும் இலங்கை அரசாங்கம் இப்பொழுதும் உள்நாட்டுப் பொறிமுறை குறித்து கனவு காண்கிறது என்றால் அந்த கனவுக்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது? ரணில் விக்கிரமசிங்கவை மேற்கு நாடுகள் கைவிடாது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலா ?அந்த நம்பிக்கை காலப்பொருத்தமுடையது அல்ல என்பதனை மேற்கு நாடுகள் நிரூபித்தால்தான் தமிழ்மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கலாம்.

ஜெனிவாவில் இலங்கையை மையப்படுத்தி கடந்த சில ஆண்டுகளாக சீனா ஒருவித நிழற்போர் நிலைமையை தோற்றுவித்திருக்கிறது.அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டுவரும் நாடுகள் ஒருபுறம், சீனாவும் உட்பட அரசாங்கத்துக்கு ஆதரவான நாடுகள் இன்னொருபுறம்.இதில் சீனா கடந்த ஆண்டு தெளிவாக வெளிப்படையாக தான் அரசாங்கத்தின் பக்கம் என்பதை அறிவித்து விட்டது.இந்த முறையும் கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் ருவிற் பண்ணிய செய்தியின்படி சீனா அரசாங்கத்தோடுதான் நிற்கும்.

ஏற்கனவே சான்றுகளையும் சாட்சிகளையும் திரட்டுவதற்கான அவ்வலுவகத்துக்குரிய நிதியை தந்திரமாக குறைத்தது சீனா போன்ற நாடுகள்தான் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு.இப்பொழுது சீனா வெளிப்படையாகவே இலங்கை அரசாங்கத்தின் பக்கம் நிற்கின்றது. இப்படிப்பட்ட ஒரு ஜெனிவாக் களத்தில் இந்தியா என்ன நிலைப்பாட்டை எடுக்கும்?

கடந்த ஆண்டு இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.ஒரு நாட்டுக்கு எதிராகத் தீர்மானம் வரும்பொழுது வாக்கெடுப்பைத் தவிர்ப்பது என்பது நடுநிலையானது போலத் தோன்றலாம்.ஆனால் ஜெனீவாவில் அரசாங்கத்துக்கு ஆதரவான நாடுகள் குறைவாக இருக்கும் ஒரு பின்னணியில் வாக்களிக்காமல் விடுவது என்பது அரசாங்கத்தை பாதுகாக்காமல் விடுவதுதான்.

ஆனால் தமிழ்மக்கள் அதைவிட வெளிப்படையாக இந்தியா தங்கள் பக்கம் நிற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.கடந்த 9 மாதங்களாக இலங்கைக்கு அதிகம் உதவிய நாடு இந்தியா. அந்த உதவியை ரணில் விக்கிரமசிங்க உயிர் மூச்சு என்று வர்ணித்தார்.சிங்களபௌத்த அரசுக்கட்டமைப்புக்கு உயிர் மூச்சை வழங்கிய இந்தியா தமிழ் மக்களின் விடயத்தில் தெளிவான,வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும். கிழக்கில் சீனா ஆழமாக தன் கால்களை பதித்து வருகிறது.வடக்கிலும் சீனா அவ்வாறான முன்னேற்பாடுகளில் இறங்கியிருக்கிறது.இவ்வாறான ஒரு பின்னணியில் ஜெனீவாவில் சீனா அரசாங்கத்தின் பக்கம் நிற்கும்பொழுது, இந்தியா யாருடைய பக்கம் நிற்கிறது என்பது தமிழ்மக்களைப் பொறுத்தவரை முக்கியமானது.ஏனெனில் கடந்த 13 ஆண்டுகளாக எந்த நாடு தங்கள் பக்கம் நிற்கிறது அல்லது நிற்கவில்லை என்பதனை தமிழ்மக்கள் நிறுத்துப்பார்க்கும் ஒரே அனைத்துலக அரங்காக ஜெனிவாதான் காணப்படுகிறது.

 

http://www.nillanthan.com/5638/

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.