Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியாரின் நினைவுதினம்: பகுத்தறிவு பகலவனுக்கு மரியாதை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரின் நினைவுதினம்: பகுத்தறிவு பகலவனுக்கு மரியாதை!

KalaiDec 24, 2022 11:27AM
321763171_693967875607754_87247373960751

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஈரோட்டில் வெங்கடநாயக்கர் – சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு 1879 ஆம் ஆண்டு பிறந்த ஈ.வெ.ராமசாமி, சாதிக்கொடுமை, பெண்ணடிமைக்கு எதிராக போராடியவர். 90 வயது வரை சமூக நீதிக் கொள்கைக்காக குரல் கொடுத்த தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதேபோன்று சென்னை பெரியார் திடலுக்குச் சென்ற மதிமுக தலைவர் வைகோ மரியாதை, மலரஞ்சலி செலுத்தினார்.  

பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டில், பல்வேறு தரப்பினரும் அவரது உருவசிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.  

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைச்சர் சு.முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், மேயர் நாகரத்தினம் ஆகியோர், பெரியாரின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர். 

இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

பெரியார் 49-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து பெரியார் திடல் வரை திராவிடர் கழகத்தினர் அமைதி பேரணி நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக துணைத் தலைவர் கலி பூங்குன்றன், சனாதன சக்திகள் அச்சுறுத்தி வரும் வேளையில் பெரியார் இந்தியா முழுவதும் தேவைப்படுகிறார் என்றார். 

சனாதன சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வோம் எனவும் கலி பூங்குன்றன் தெரிவித்தார். திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 

 

https://minnambalam.com/political-news/periyar-memorial-da-political-leaders-and-volunteers-paid-homage/

 

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார்: புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர்

  • சுனில் கில்னானி
  • வரலாற்றாசிரியர்
17 செப்டெம்பர் 2019
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
பெரியார்: புனிதங்களைச் சுட்டுப் பொசுக்கியவர்

இந்தியாவில் உள்ள பெண்களையெல்லாம் சேர்ந்து ஒரு நாடாக கருதிக்கொள்வோம். இந்திய பெண்கள் குடியரசு என அதனை அழைப்போம். 60 கோடி பேரை கொண்டிருக்கும் அந்த நாடு, உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். 2014ஆம் ஆண்டின் ஐ.நா. மனித உரிமைக் குறியீட்டு தரவரிசையின்படி அந்த நாடு மியான்மருக்கும், ருவாண்டாவுக்கும் இடையில் இருக்கும்.

இந்திய பெண்கள் குடியரசில் குழந்தைகள் சராசரியாக 3.2 ஆண்டுகளே பள்ளிக்குச் செல்வார்கள். கிட்டத்தட்ட மொசாம்பிக் நாட்டின் நிலைதான் இருக்கும். தனிநபர் வருவாயை வைத்துப் பார்த்தால் ஐவரி கோஸ்டும், பாபுவா நியூ கினியாவும் இந்த நாட்டிற்கு மேலே இருக்கும். 2000வது ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மும்மடங்காகப் பெருகியும் இந்திய பெண்களின் நிலை மேம்படவில்லை.

உண்மையில் இந்தியப் பெண்களின் திறமையை இந்த அளவுக்கு நெருக்காத, சுதந்திரமான சூழலோடு ஒப்பிட வேண்டுமென்றால் அதற்கு ஒரு வெளிநாட்டைத் தேட வேண்டியதில்லை.

தென்னிந்திய மாநிலங்களில் வளர்ச்சிக் குறியீடுகளும் சுதந்திரமும் வடஇந்திய மாநிலங்களைவிட நீண்ட காலமாகவே சிறப்பானதாக, வேறுபட்டதாக இருக்கிறது. வட இந்தியாவில் பெரும்பாலான பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் முடிந்துவிடுகிறது. தென்னிந்தியாவில் 15 சதவீதத்திற்கும் குறைவான பெண்களுக்கே 18 வயதுக்கு முன்பாக திருமணமாகிறது.

 

இதன் விளைவாக பல வட இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டால் தென்னிந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் பாதிதான். பெண்களின் கல்வியறிவு, பணியிடத்தில் வேலை பார்க்கும் பெண்களின் சதவீதம் போன்றவையும் வட இந்தியாவோடு ஒப்பிட்டால் அதிகம். இந்தியாவின் முக்கியமான சமூக, பொருளாதார பிளவாக கருதப்படும் வட இந்திய - தென்னிந்திய பிளவுக்கு இந்த வேறுபாடுகளே முக்கியக் காரணம். சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பாகப் பிறந்த, பள்ளிப் படிப்பை முடிக்காத ஈ. வி. ராமசாமி நாயக்கரும் இதற்கு ஒரு முக்கியக் காரணம்.

ராமசாமி நாயக்கர் இந்தியாவில் பிராமண எதிர்ப்புச் செயல்பாட்டாளராகவும் பகுத்தறிவுவாதியாகவும் சமரசங்களற்ற கடுமையான பேச்சாளராகவும் அறியப்பட்டவர். காந்தியின் காங்கிரசில் இணைந்தவர். ஆனால், பிறகு மகாத்மாவின் பெரும் எதிரியாக மாறியவர். 1920களின் மத்தியில் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய ராமசாமி நாயக்கரை அவருடைய தொண்டர்கள் மகத்தான மனிதன் என்ற பொருள்படும் 'பெரியார்' என்ற சொல்லால் அழைத்தனர். மகத்தான ஆத்மா என்ற காந்தியைக் குறிக்கும் சொல்லுக்கு, பதில் சொல்லும்வகையில் இந்தச் சொல் உருவாக்கப்பட்டதாகச் சொல்லலாம்.

பெரியார் ஒருபோதும் தேர்தலில் நிற்கவில்லையென்றாலும் நவீன தமிழ் அரசியலில் ஒரு அழுத்தமான தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். இவருடைய இயக்கத்திலிருந்து தோன்றிய கட்சிகளே 1960களில் இருந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்றன. தேசிய அளவிலும் தமிழ்மொழிக்கு ஆதரவான அவரது குரலும் இந்தி திணிப்பிற்கான அவரது எதிர்ப்பும் 1947க்குப் பிந்தைய இந்தியாவின் மொழி பன்மைத்துவம் குறித்த பார்வையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

பெரியார்: புனிதங்களைச் சுட்டுப் பொசுக்கியவர்

ஜாதி குறித்த இவரது பார்வையே, இந்தியக் குடியரசின் ஆரம்ப நாட்களில் இடஒதுக்கீட்டிற்குக் காரணமாக அமைந்தது. குடும்பத்தில் ஆணே பெரியவன் என போற்றப்பட்ட தேசத்தில், அந்த காலகட்டத்தில் மிக வலுவாக பெண்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர் பெரியார். பெண் விடுதலையைப் பற்றி பேசும்போது ஆண்களிடம் பொதுவாகத் தென்படும், மேலாதிக்க உணர்வின்றி அதைச் செய்தார்.

தங்களைத் தியாகம் செய்யும் பெண்களை கற்புக்கரசிகளாகப் போற்றும் சமஸ்கிருத புராணங்களின் முட்டாள்தனத்தை பெரியார் கேலிசெய்தார். பெண்கள் கல்வி கற்பதையும் காதல் திருமணம் செய்வதையும் அந்தத் திருமணம் ஒத்துவரவில்லையென்றால் விவாகரத்து செய்வதையும் பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பதையும் பெரியார் ஆதரித்தார்.

இதையெல்லாம்விட. பெண்களின் பாலியல் தேர்வையும் கருவுருதல் குறித்த உரிமையையும் அவர் ஆதரித்தார். உரிமைகள் தங்களுக்கு தானாக வழங்கப்படுமென பெண்கள் வெறுமனே காத்திருக்கக்கூடாது என்றார் பெரியார்.

பெண்களுக்கு விடுதலை வேண்டுமென்றால் ஆண்மை அழிய வேண்டுமென ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் பெரியார். 'எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதார்களுக்கு சமத்துவம் கிடைக்குமா என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாய்விட்டாலும் கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்." என்கிறார் அவர்.

பழங்கால வீராங்கனைகள், சக்திவாய்ந்த பெண் தெய்வங்கள், குறைந்த மகப்பேறு விகிதம் ஆகியவை ஏற்கனவே இருந்த ஒரு பிராந்தியத்தில் பெரியார் தன் கருத்தை முன்வைத்தார். இவரது கருத்துகள் 20ஆம் நூற்றாண்டில் வட இந்திய மாநிலங்களுக்கும் தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையிலான பிளவை இன்னும் ஆழமாக்கின. முரட்டுத்தனமான இந்த சிலை உடைப்பாளரை, கடுமையான நாவன்மை உடையவரை பற்றி நான் மேலும் மேலும் வாசிக்கும்போது என் மனதில் ஒரு கேள்வி எழுகிறது: இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற ஆளுமைகள் இருந்திருந்தால், இந்தியப் பெண்கள் குடியரசு இன்னும் சிறப்பாக இருந்திருக்குமல்லவா?

'கடவுள் இல்லை... கடவுள் இல்லை...

கடவுள் இல்லவே இல்லை!

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்...

கடவுளை பரப்பியவன் அயோக்கியன்...

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!'

என்ற முழக்கங்களோடுதான் தன் சுயமரியாதைக் கூட்டங்களைத் துவங்குவதை பெரியார் பல தசாப்தங்களுக்கும் மேலாக வழக்கமாகக் கொண்டிருந்தார். கறுப்புச் சட்டை அணிந்து, வழுக்கைத் தலையுடன் பராமரிக்கப்படாத தாடியுடன் உள்ள பெரியாரின் அருகில் ஒரு நாய் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். பிராமணர்கள் நாய் தூய்மையில்லாதது எனக் கருதுவதால் அதனை அவர் தன் அருகில் வைத்திருந்திருக்கக்கூடும். பல வழிகளில் பெரியார் தீவிரமாகப் பேசியவர் என்றாலும், மக்களுக்குப் புரியாத, குழப்பமான மொழியில் பேசியவரில்லை. மதம் மற்றும் ஜாதியில் துவங்கி பகுத்தறிவுக்குப் புறம்பான எல்லாவற்றையும் அவர் கண்டித்தார்.

பெரியார்: புனிதங்களைச் சுட்டுப் பொசுக்கியவர்

பட மூலாதாரம்,ARUNKUMARSUBASUNDARAM

காந்தி பிறந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு பெரியார் பிறந்தார். சென்னை மாகாணத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருந்த நெசவுத் தொழிலுக்குப் பேர்போன ஈரோட்டில் வளர்ந்தார். வர்த்தகர்களும் விவசாயிகளும் அடங்கிய அவரது ஜாதி, ஜாதிப் படிநிலையின்படி ஒரு இடைநிலைச் ஜாதி. வர்த்தகரான அவருடைய தந்தை, சற்று வசதியானவர் என்பது அவருக்கு பாதுகாப்பாக அமைந்தது. நல்ல வீடு, பணியாளர்கள் என்ற சூழலில் வளர்ந்த அவரால், கலகக்காரராக இருக்க முடிந்தது ஆச்சரியமல்ல.

ஆரம்ப காலத்தில் பெரியாரின் தந்தை, அவருக்கு சமஸ்கிருத பாணியிலான வாழ்க்கை முறையைக் கற்றுக்கொடுக்க பல சாதுக்களையும் பிராமண குருக்களையும் நியமித்தார். ஆனால், அவர்களை பெரியார் கேள்விகளால் துளைத்தெடுத்தார். அவர்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்திக்கொண்டனர். அவர்களுடைய போதனைகள் இளம் வயதுப் பெரியாரை வசீகரிக்கவில்லை. ஆனாலும் இந்துக்களின் புனித நகரான காசிக்கு யாத்திரை செல்லுமளவுக்கு பெரியார் இந்துவாகத்தான் இருந்தார். இங்கே நடந்த சம்பவங்கள் அவரது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தன. அதைப் பற்றி அவர் தொடர்ந்து குறிப்பிட்டுவந்தார்.

பிராமணர்களுக்கு தன்னுடைய தந்தை பெரும் விருந்தளித்ததை எதிர்த்து எப்படி காசிக்குப் போனார், அங்கிருந்த பண்டிதர்கள் காசு பிடுங்குவது எப்படி தனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது, பிராமணரல்லாதாரிடம் அவர்கள் எவ்வளவு வெறுப்புடன் நடந்துகொண்டார்கள் என்பதையெல்லாம் அவர் தொடர்ந்து சொல்லிவந்தார். அவருடைய ஜாதியின் காரணமாக காசியிலிருந்த கடைகள் எதிலுமே அவருக்கு உணவு கிடைக்கவில்லை. ஒரு தருணத்தில் இறந்தவருக்காகப் படைக்கப்பட்ட இலையில் எஞ்சியிருந்தை உண்டு, பசியைத் தீர்த்துக்கொண்டார்.

எல்லோரும் கருதுவதைப்போல, இந்த அனுபவங்கள் உடனடியாக அவரது வாழ்வை மாற்றிவிடவில்லை. ஆனால், பிராமணர்களுக்கு எதிராக சிறிய நெருப்பொன்று அவருக்குள் பற்றி எரிய ஆரம்பித்தது. அந்த வயதில்தான் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தார். சுயமாகக் கற்க ஆரம்பித்தார்.

இந்த காலகட்டத்தில் நடந்த ஒரு முக்கியான நிகழ்வை கேம்பிரிட்ஜைச் சேர்ந்த தென்னிந்திய வரலாற்றாசிரியரான டேவிட் வாஷ்ப்ரூக் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, 1880களிலிருந்தே சென்னையிலிருந்த அறிவுஜீவிகள் இந்து நம்பிக்கைகளையும் சடங்குகளையும் நவீன அறிவியல் பார்வையுடன் இணைக்க முடியுமா என்று தீவிரமாக விவாதித்துவந்தனர்.

அந்த காலகட்டத்தில்தான் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக உருவெடுத்த அன்னி பெசன்டின் பிரம்மஞான இயக்கம் பிராமண இந்து மதத்திற்கு ஒரு அறிவியல் ரீதியான பார்வையைத் தந்தது. இது தென்னிந்தியாவில் இருந்த மேல் ஜாதி இந்துக்களுக்கு ஒரு வரமாக அமைந்தது. இனிமேல் அவர்கள் தங்களுடைய சடங்கு சம்பிரதாயங்களையும் ஜாதி அமைப்பையும் ஒரு நவீன பார்வையில் முன்வைத்து வாதாட முடியும்.

பெரியாரைப் பொறுத்தவரை, காப்பாற்றிக் கொள்ள அவருக்கென ஜாதிப் பெருமிதம் ஏதும் இல்லை. அதனால், பகுத்தறிவின் பாதையில் தீவிரமாக நடைபோட ஆரம்பித்தார் பெரியார். 'கடவுளோடு எனக்கு என்ன விரோதம்? அவரை நான் ஒரு முறைகூட சந்தித்ததில்லை என கேலியாக சொல்வார் பெரியார்' என்கிறார் பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிவரும் பேராசிரியர் ஏ.ஆர். வேங்கடாசலபதி.

பெரியார்: புனிதங்களைச் சுட்டுப் பொசுக்கியவர்

பெரியார் பகுத்தறிவுப் பாதையில் இயங்குவதற்கு அவருடைய பொருளாதாரச் சூழலும் உதவியது. பிரமணீயத்திற்கு எதிரான ஒரு மரபை நாம் ஏற்கனவே மகாவீரரிடமும் புத்தரிடமும் பார்த்திருக்கிறோம். அவர்கள், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களில்லை. மாறாக, ஜாதி அடுக்கில் மேல்நிலையில் இருந்ததோடு, செல்வமும் கொண்டிருந்தவர்கள். இருந்தபோதும் இந்தியாவின் மிகப் பழமையான ஜாதிப் படிநிலையை எதிர்த்துப் போராட அவர்கள் முன்வந்தார்கள்.

தன் இருபதுகளிலும் முப்பதுகளிலும் பெரியார் தெருவில் இறங்கி கலகக்குரல் எழுப்புபவராக இல்லை. காசியிலிருந்து அவர் ஊர் திரும்பிய காலகட்டத்தில் உருவாகியிருந்த தேசிய அலையிலும் அவர் ஈர்க்கப்படவில்லை. மாறாக, திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய குடும்பத் தொழிலை விருத்திசெய்து, அதனை கோயம்புத்தூரின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமாக மாற்றினார். அவருடைய நிர்வாகத் திறமையின் காரணமாக 1918ல் ஈரோடு நகராட்சியின் தலைவராகவும் தேர்வுசெய்யப்பட்டார்.

கேரளாவில் உள்ள கோட்டயம் தற்போது இந்தியாவின் மிகவும் முற்போக்கான இடங்களில் ஒன்று. எழுத்தறிவு விகிதம் இங்கே 90 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே இது புகையிலை இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த மாவட்டத்தின் வைக்கம் நகரில் மிகப் பழமையான சிவன் கோவில் ஒன்று ஊரின் மையத்தில் அமைந்திருக்கின்றது. இந்தக் கோவிலை நம்பூதிரி பிராமணர்கள் நிர்வகித்துவந்தனர். நாற்பதை நெருங்கிக் கொண்டிருந்த பெரியாரை அந்தக் கோவிலுக்குச் செல்லும் சாலைகள்தான் அரசியலை நோக்கி நகர்த்தின.

இந்த மகாதேவர் கோவிலுக்குள் மட்டுமல்ல, அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளிலும் தாழ்த்தப்பட்டோர் நுழையக்கூடாது என நம்பூதிரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இது பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்தது. திருவிதாங்கூர் மாகாணத்தில் 1920களின் துவக்கத்திலேயே கோவில்களில் நுழைய எல்லா இந்துக்களையும் அனுமதிக்க வேண்டுமெனக் கோரி தாழ்த்தப்பட்டோர் இயக்கங்கள் போராடிவந்தன. இல்லாவிட்டால் தாங்கள் கிறிஸ்தவ மதத்திற்கோ, இஸ்லாத்திற்கோ மாறிவிடுவதாக அவர்கள் கூறினர். இந்த இயக்கத்தின் மையப்புள்ளியாக வைக்கம் கோவில் உருவெடுத்தது. 1924வாக்கில் காந்தி இதில் ஈடுபட ஆரம்பித்தார். தீண்டாமை குறித்த ஒரு போராட்டத்தை முதன்முதலாக அவர் துவங்கியது அப்போதுதான்.

பெரியார்: புனிதங்களைச் சுட்டுப் பொசுக்கியவர்

பட மூலாதாரம்,TWITTER

அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் உயர் பதவிகளில் பிராமணரல்லாத வெகு சில தமிழ்த் தலைவர்களே இருந்தது காங்கிரஸ் கட்சிக்கு சங்கடத்தை உருவாக்கியிருந்தது. பிராமணர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் கட்சி என்ற பெயரை உடைக்க, புதிய தலைவர்களை அந்தக் கட்சித் தேடிக்கொண்டிருந்தது. செல்வம்மிக்க, தன்னம்பிக்கைமிக்க பெரியார், வைக்கம் போராட்டத்திற்கு சற்று முன்பாக கட்சியில் சேர்க்கப்பட்டார்.

வைக்கம் போராட்டத்தை வழிநடத்த அப்போது காங்கிரசிற்கு ஒரு பிராமணரல்லாத தலைவர் தேவைப்பட்டார். பெரியார் சரியாக அந்தப் பாத்திரத்தில் பொருந்தினார்.

மிகுந்த நம்பிக்கையுடனேயே தேசிய அரசியலில் ஈடுபட்டார் பெரியார். தன்னைப் போலவே இடைநிலைச் சாதியைச் சேர்ந்த காந்தி, பிராமண ஆதிக்கத்தில் உள்ள காங்கிரஸ் தலைமைக்கு எதிராக இருப்பார் எனக் கருதினார் பெரியார். தேசியவாதத்தையும் ஜாதிச் சமத்துவ நிலையையும் இணைக்க முடியும் என அவர் கருதினார்.

ஆனால், வைக்கம் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளைத் திறந்துவிட்டால் போதும் என்பதுதான் காந்தியின் பார்வையாக இருந்தது. கோவிலுக்குள் அனைவரையும் அனுமதிக்க வேண்டுமென்ற போராட்டக்காரர்களின் கோரிக்கையை பெரியார் ஆதரித்தார். இந்தப் போராட்டத்தில் அவர் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரியார் சிறையில் இருக்கும்போது காந்தி, நம்பூதிரி பிராமணர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தாழ்த்தப்பட்ட ஜாதியினர் 'அவர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மாவை அனுபவிக்கின்றனர்' என அங்கிருந்த பிராமணர்களில் ஒருவர் சொன்னார். காந்தி அதை ஏற்றுக்கொண்டார். ஆனாலும், "கடவுளின் இடத்தை எடுத்துக்கொண்டு, அவர்களது தண்டனையை அதிகரிக்க நாம் யார்?" என்று கேள்வியெழுப்பினார்.

1925ல் திருவிதாங்கூரின் புதிய மகாராணி ஒரு ஏற்பாட்டிற்கு வந்தார். அதாவது, கோவிலைச் சுற்றியுள்ள சாலைகள் சிலவற்றில் எல்லோரும் செல்லலாம். ஆனால், பிரதான வாயிலுக்குள் பிராமணர்கள் மட்டுமே செல்லலாம் என்பதுதான் அந்த ஏற்பாடு. 1936வரை ஒடுக்கப்பட்ட ஜாதியினர் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த அனுமதிக்கப்படவில்லை.

வைக்கத்தின் ஆச்சாரக் கோட்டையில் ஒரு ஓட்டையை ஏற்படுத்தியதால், காங்கிரசைப் பொறுத்தவரை வைக்கம் சத்தியாகிரகம் ஒருவகையில் வெற்றிதான். ஆனால், பெரியாரைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய ஏமாற்று வேலை. காந்தி, ஒடுக்கப்பட்ட ஜாதியினரை விற்றுவிட்டார் எனக் கருதினார் பெரியார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரசை விட்டு விலகினார். காந்தியை அவர் மன்னிக்கவேயில்லை. தன் குடும்பச் சொத்தைவைத்து சுய மரியாதை இயக்கத்தை துவங்கினார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட திராவிட மொழிகளைப் பேசும் தென்னிந்தியாதான் அவரது களமாக இருந்தது. அவருடைய செயல் திட்டங்கள் பல சமயங்களில் காந்தியின் செயல்திட்டங்களுக்கு மாறானதாக இருந்தது.

(கட்டுரையாளர் புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியர். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் இயக்குனர். அரசியல் துறை பேராசிரியர். நவீன இந்தியாவை உருவாக்கிய மகத்தான ஐம்பது ஆளுமைகளின் வரலாற்றைச் சொல்லும் இவருடைய Incarnations: India in 50 Lives புத்தகத்தில் பெரியார் குறித்து எழுதப்பட்ட, Sniper of the sacred Cow கட்டுரை தமிழில் இங்கே வழங்கப்படுகிறது. Allen Lane ஆங்கில நூலை வெளியிட்டது. இந்தப் புத்தகத்தை தமிழில் சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. இந்தக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்)

https://www.bbc.com/tamil/india-49718507

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்
 
மொழியின் பெருமை அது எளிதாகக்
கற்றுக்கொள்ள கூடியதாக இருக்க
வேண்டும். பண்டிதமொழி  என்று சொல்லாதபடி
பாமரரும் எளிதில் படிக்கும்
நிலை இருக்கும்போதுதான்
மொழி வளர்ச்சியடையும்.
 
எழுத்து அமைப்பில் ஒரு வரன்முறையும்
ஒழுங்கும் இருந்தால் பிறமொழியினரும்
எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.
 
 
கல்வி அறிவு பெற்றவர்கள் மட்டுமே படிக்கலாம்
என்ற நிலை இருந்தால் மொழி எப்படி
வளர்ச்சி அடையும்?
 
மொழி என்றும் இளமையோடு இருப்பதற்கு
புதிய தகவல் தொழில் நுட்பத்திற்கு
ஈடு கொடுக்கும் வகையில் அவற்றிற்கு
உகந்த தமிழ்மொழியாக்கச் சொற்கள்
பயன்பாட்டிற்கு வர வேண்டும்.
 
இது மொழி ஆய்வாளர்கள் அனைவரும்
ஒத்துக்கொள்ளும் கருத்து.
 
இதனை அனைவரும் அங்கங்கே சொல்லிச்
சென்றாலும் அதற்கான முன்னெடுப்பைக்
கையிலெடுக்கும் துணிச்சல் யாருக்கும்
வரவில்லை. இந்தக் கருத்துக்கள் யாவும்
பெரியாரின் கவனத்திற்கு வந்தபோது
அதில் இருக்கும் உண்மையைப்
புரிந்து கொண்டார் .
பெரியார்  எழுத்துச்சீர்திருத்தத்தின்
அவசியத்தை உணர்ந்தார்.
 
 
"மொழியின் சிறப்பே அதைச் சுலபமாகக் கற்றுக்
கொள்ளக்கூடியதாகவும் புதியவற்றை அறிந்துகொள்ள உதவியாகவும் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கு
அனுமதிப்பதாகவும் இருக்க வேண்டும் "என்று
தன் கருத்தை முன்னெடுத்து வைத்தார் பெரியார்.
 
 பன்னிரண்டு உயிர் எழுத்துகளுக்குள்
இருக்கும் ஒலி மற்றும் வடிவ வேறுபாடுகளைக்
கவனியுங்கள்.
அஆ
இ ஈ
உ ஊ 
எ  ஏ
ஐ 
ஒ  ஓ
 
இவற்றுள் ஐயும் ஔவும்
தனித்து நிற்பது போல
தெரிகிறதல்லவா!
 
அ, ஆ ,இ, ஈ , உ, ஊ ,எ , ஏ என்று
எழுதிக்கொண்டே வரும்போது
இடையில் ஐ என்று ஒலியும்
ஒழுங்கு முறையும் சற்று
பிசகுவது போல் தெரிகிறதல்லவா!
அடுத்து ஒ , ஓ என்கிறோம்
மறுபடியும் ஔ என்ற எழுத்து வந்து
ஒரு தடங்கலாக இருப்பதுபோல் உள்ளது.
 
எழுத்துகளுக்குள் உள்ள ஒற்றுமை
வேற்றுமைகளைப் பற்றி 
பெரியார் ஆராய்ந்தார்.
 
ஐ மற்றும் ஔ ஆகிய இரண்டு
எழுத்துகளோடு ஒத்துப் போகாமல்
தனித்து நிற்பது போன்ற நிலை
நெருடலாக இருப்பதாக உணர்ந்தார்.
 
எனவே அவர்
ஐ  என்பதை  அய் எனவும்
ஔ என்பதை அவ் 
எனவும் எழுதினால் படிப்பதற்கும்
எளிது. எழுதுவதற்கும்  எளிது
என்று நினைத்தார்.
அதனைத் தன் பத்திரிகையில் பயன்படுத்தினார்.
அதாவது ஐயா என்பது பெரியாரியச்
சிந்தனையாளர்களால் அய்யா என்று
எழுதப்பட்டது.
ஔவை என்பது அவ்வை என்று
எழுதப்பட்டது.
 
இதே போன்று உயிர்மெய் வருக்க
எழுத்துகள் எழுதும்போது 
 ணகர, றகர, னகர வருக்க எழுத்துகள் 
 எழுதும்போதுமட்டும்
 மற்ற வருக்க எழுத்துகள் எழுதுவது போன்ற
 ஒழுங்குமுறை இல்லாதிருந்தது.
 
 இதனால் புதிதாக மொழியைப் படிப்பவர்க்கு
 சிரமம் ஏற்பட்டது. அச்சு வார்ப்புகளிலும்
இதற்கென தனி அச்சு வார்க்க வேண்டியிருந்தது.
இதனால் ஈ. வெ. ரா. பெரியார் அவர்கள்
இந்த எழுத்துகளை எல்லா எழுத்துகளையும்
எழுதுவது போன்ற ஒரு ஒழுங்குமுறைக்குள்
கொண்டுவர வேண்டும் என்று நினைத்தார்.
 
அதற்கான தனி வடிவம் தயாரிக்கப்பட்டுப்
பயன்படுத்தப்பட்டது. 
 
தமது பத்திரிகைகளில் அந்தப் புதிய வடிவிலான
எழுத்துகளைப் பயன்படுத்தி அச்சிட்டார்.
அவரது கருத்து காலப்போக்கில் ஏற்றுக்
கொள்ளப்பெற்றது.அரசும் பெரியாரின்
எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்டு
அரசாணை வெளியிட்டது.
ஆனால் ஐ, ஔ ஆகிய
இரு எழுத்துகளுக்கும் மாற்றாக
பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட 
அய், அவ் என்ற எழுத்துகளுக்கு அரசு
அங்கீகாரம் வழங்கவில்லை.
 
அரசு ஆணைப்படி,
 
ண, ல , ள , ற , ன என்ற ஐந்து எழுத்துகளும்
ஆ , ஐ , ஒ , ஓ  என்னும் நான்கு எழுத்துகளுடன்
இணைந்து வரும் எழுத்துகளான...
 
ணா
ணை
ணொ 
ணோ
 
லை
ளை
 
றா
றொ
றோ
 
னா
 னை 
 னொ 
 னோ
 
என்னும் பதின்மூன்று எழுத்துக்களின்
புதிய வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 
இது பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்
எனப்பட்டது.
tamil%252Beluthu.gif

 

http://www.mumbaitamilteacher.com/2021/09/blog-post_18.html?m=1

 
 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரூ.100 கோடியில் சிலை: பெரியார் தடியால் அடித்திருப்பார் – சீமான்

919190.jpg

”தந்தை பெரியாருக்கு நீங்கள் ரூ.100 கோடியில் சிலை வைத்தால், அந்த தடியால் அடித்தே உங்களைக் கொன்றுவிடுவார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 49ஆவது நினைவு நாளை ஒட்டி இன்று (டிசம்பர் 24) நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பெரியார் சிலையை வைத்து எப்படி பெரியாரின் புகழை பரப்புவீர்கள். பெரியார் கருத்தியலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கருத்தியலை பரப்ப திராவிடம் என்ற பெயர் வேண்டியது இல்லை. அதற்கு அவரது கருத்துக்களே ஏராளம் உள்ளது.

hundred crore ruppees periyar statue seemaan answer

வல்லபாய் படேலுக்கு 3000 கோடியில் சிலை வைத்தற்கும் பெரியாருக்கு 100 கோடியில் சிலை வைத்ததற்கும் என்ன வேறுபாடு உள்ளது.

தன்மீது வீசப்பட்ட செருப்புகள், பெயர் வைத்தால் காசு, படம் எடுத்தால் காசு, வீட்டிற்கு சாப்பிட வந்தால் காசு என்று வசூலித்து அவற்றை சேமித்து, பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் பெரியார்.

அப்படிச் சேர்த்த பணத்தில் வந்தததுதான் பெரியார் திடல் என்ற அறக்கட்டளை. அத்தகைய எளிய மகனுக்கு நீங்கள் ரூ.100 கோடியில் சிலை வைத்தால், அந்த தடியால் அடித்தே உங்களைக் கொன்றுவிடுவார். பெரியாரை அவமானப்படுத்துவதா, இல்லை பெருமைபடுத்துவதா?

நான் இறந்ததும் நூறு கோடியில் சிலை வைப்பார்கள் என நினைத்து போராடினாரா? முன்னோர்கள் போராடியது எல்லாம் சிலை வைப்பார்கள், மாலை போடுவார்கள் என்றா போராடினார்கள். வல்லபாய் படேல் சிலையைப் பெரிதாக வைத்துவிட்டீர்கள். சிங்கப்பூரில் சென்று கேளுங்கள். 

யார் எனக் கேட்பார்கள். காந்தி, அம்பேத்கரை தெரியும். அவர்கள்தான் இந்தியாவின் அடையாளம். சிலை புகழ் சேர்க்காது. சிந்தனைதான் புகழ் சேர்க்கும்” என்றார்.

 

https://minnambalam.com/political-news/hundred-crore-ruppees-periyar-statue-seemaan-answer/

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

“பெரியார் சிலையை வைத்து எப்படி பெரியாரின் புகழை பரப்புவீர்கள். பெரியார் கருத்தியலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கருத்தியலை பரப்ப திராவிடம் என்ற பெயர் வேண்டியது இல்லை. அதற்கு அவரது கருத்துக்களே ஏராளம் உள்ளது.

யார் யாழை வாசிக்கிறார்களோ இல்லையோ, சீமான்  அல்லது அவருக்கு சொல்லும் நிலையில் இருப்பவர்கள் வாசிக்கிறார்கள்😀.

நல்ல மாற்றம்….மிக தாமதமான மாற்றமா? தெரியவில்லை (விஜை இறங்கும் காலம் நெருங்கி விட்டது என நினைக்கிறேன் - அவர் இறங்கும் போதே இந்த அரசியல் நிலைப்பாட்டில்தான் இறங்குவார் என நினைக்கிறேன்).

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.