Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்லெறிந்த அமைச்சர்; 'கற்கால திமுக' என அதிமுக விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்லெறிந்த அமைச்சர்; 'கற்கால திமுக' என அதிமுக விமர்சனம்

தொண்டர் மீது கல்லெறிந்த அமைச்சர்
4 மணி நேரங்களுக்கு முன்னர்

நாற்காலியைக் கொண்டுவர நேரமானதால், நாற்காலி கொண்டுவருபவரை நோக்கி பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் கல்லெறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சியினர் அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மொழிப் போர் தியாகிகளை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க. கூட்டங்களை நடத்திவருகிறது. இந்த ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடக்கும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவிருக்கிறார்.

இதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரில் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் ஐ.சி.எம்.ஆர். அருகே மேடை அமைக்கும் பணி நடந்துவந்தது. இந்தப் பணிகளைப் பார்வையிட மாநில பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் நேற்று வந்திருந்தார். அவருடன் தி.மு.க நிர்வாகிகளும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

அப்போது தானும் மற்ற நிர்வாகிகளும் உட்கார்வதற்கு நாற்காலிகளை எடுத்து வருமாறு அங்கிருந்த தொண்டர்களிடம் கூறினார் நாசர். ஆனால், தொண்டர்கள், மிகக் குறைந்த எண்ணிக்கையில் நாற்காலிகளை எடுத்துவந்ததால் நாசர் ஆத்திரமடைந்தார். உடனே கீழே கிடந்த கல்லை எடுத்து தொண்டர் மீது எறிந்து கூடுதல் நாற்காலிகளைக் கொண்டு வரும்படி கத்தினார்.

 

இதனை அங்கிருந்த ஊடகத்தினர் படம் பிடித்த நிலையில், அவை சமூக வலைதளங்களில் வெளியாயின. இதையடுத்து சமூக வலைதளங்களில் அமைச்சர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி, இந்த விவகாரத்தில் அமைச்சர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது.

"இந்திய வரலாற்றில் எந்த அமைச்சராவது மக்கள் மீது கல்வீசி பார்த்திருக்கிறீர்களா? தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர் நாசர் மக்களை நோக்கி கல் வீசுவதைப் பாருங்கள். நாகரிகமோ, கண்ணியமோ இல்லாமல் மக்களை அடிமைகளைப் போல நடத்துகிறார். இதுதான் தி.மு.க." என விமர்சித்திருக்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டியிருக்கும் மத்திய தொழில்முனைவு, திறன் மேம்பாடு, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்,  "தனது சித்தாந்த அடிப்படைகளில் இருந்து குடும்ப அரசியலில் வீழ்ந்திருக்கும் தி.மு.க.வில் இதுபோன்ற விளைவுகள் தவிர்க்க முடியாதவை" என்று விமர்சித்திருக்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரும் "தட் இஸ் திராவிட மாடல்" என்று கிண்டல் செய்திருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

இந்த வீடியோ வெளியானதும் ட்விட்டரில் பலரும் இந்த சம்பவத்தைக் கேலி செய்து பதிவிட்டிருந்தனர்.

"தம்பி.. எங்க ஹெல்மெட்டோட  கிளம்பிட்ட?

நம்ம  ஆவடி நாசர் பொதுக் கூட்டத்துக்குத்தான்.."  என்று கூறுவதைப் போல ஒருவர் பதிவிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

"நியூசிலாந்து வீரர்கள் பந்து வீச்சில் திணறுவதை பார்த்து அவர்களுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று அண்ணன் ஆவடி நாசர் அவர்கள் பயிற்சி அளித்த போது" என்று கூறி ஒருவர் அந்த வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் இதுபோல சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறை அல்ல. பெரிய பட்டியலே இருக்கிறது.

1. செப்டம்பர் 23: தமிழ்நாட்டில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த குருவிக்கார இன மக்களை நரிக்குறவர் என்ற பெயரில் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகரில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதி தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனை பார்க்க சென்றபோது அமர இருக்கை கூட கொடுக்காமல் அவமதித்துவிட்டதாக குறவர் சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் பரவியதால், எதிர்க்கட்சியினர் இது குறித்து கடுமையாக விமர்சித்தனர்.

2. ஜூலை 9: விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் உதவி கேட்டு மனு கொடுக்க வந்த பெண்ணை, அந்த மனு வைக்கப்பட்டிருந்த கவரால் தலையில் அடித்தார். அந்த பெண்ணை அமைச்சர் தலையில் அடிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதற்குப் பிறகு, அமைச்சர் தன் உறவினர் என்றும் அவர் தன்னைத் தலையில் அடிக்கவில்லை என்றும் அந்தப் பெண்ணே ஊடகங்களில் மறுப்பு தெரிவிக்கும் காட்சிகளும் வெளிவந்தன.

3. செப்டம்பர் மாதம் ஒரு தி.மு.க. கூட்டத்தில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "உங்க குடும்ப கார்டுக்கு 4 ஆயிரம் ரூபாய். கொடுத்தாரா? இல்லையா? வாங்குனீங்களா? வாயை திறங்க... 4 ஆயிரம் ரூபாய் வாங்குனீங்களா... இப்ப பஸ்ஸுல எப்படி போறீங்க. இங்கிருந்து கோயம்பேடு போனும்னாலும், வேற எங்க போனும்னாலும் ஓசி, ஓசி. ஓசி பஸ்ஸுல போறீங்க" என்று கூறினார். இது மிகப் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது. பல இடங்களில் பெண்கள் பேருந்துகளில் ஏறி, தங்களுக்கு கட்டணப் பயணச் சீட்டு அளிக்க வேண்டும் என்று கேட்ட வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, "விளையாட்டா சொன்னதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கலாமா?" என்று கேட்டார்.

4. செப்டம்பர் 21: விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கு திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று பேசினார். அதோடு நிறுத்திக்கொள்ளாமல், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முகையூர் ஒன்றியக் குழுத் தலைவரைப் பார்த்து, 'ஒன்றியக் குழுத் தலைவரே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்' என்று கூறியதோடு, அந்தப் பெண்ணைப் பார்த்து, "ஏம்மா…நீ எஸ்.சி தானே" என்று கேட்டார். அதற்கு அந்த பெண் தலைவர் ஆமாங்க என்று பதில் சொன்னார். அமைச்சரின் செயல்பாடு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

5. இதே செப்டம்பர் மாதத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய துரைமுருகன், "அதே மாதிரி எங்களுக்குக் கொடுக்குறேன்னீங்களே ஆயிரம், அது எங்கன்னு கேக்குறீங்களா? அதுவும் சில்லரை மாத்திக்கிட்டிருக்கோம். சீக்கிரம் கொடுத்துடுவோம். கவலைப்படாதீங்க.. உங்கம்மாளுக்கும் ஆயிரம், பொண்ணுக்கும் ஆயிரம். இரண்டாயிரம் கொடுக்கும் ஒரே ஆட்சி இந்த ஆட்சிதான்" என்றார். இதுவும் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது.

6. திருப்பத்தூர் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளுக்கான டெண்டர் விடுவதில் பிரச்சனை எழுந்த போது, அதைப் பற்றிப் பேசவந்த ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், "உங்களுக்குப் பிரச்சனை வந்தால், நான்தான் வந்து உக்காருவேன். திருப்பத்தூர் எம்.எல்.ஏ. வந்து உக்காருவானா? அந்தாளு என்ன செய்கிறார் என்று உங்களுக்குத் தெரியாது. 40 சதவீதம் உங்களுக்கு, 60 சதவீதம் எங்களுக்கு என முடிச்சுக்கிருவோம்" என்றார். இந்த பேச்சு வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால், அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு பரப்பட்டதாகச் சமாளித்தார் வில்வநாதன்.

இந்த நிகழ்வுகளையும் அதனால் ஏற்பட்ட விமர்சனங்களையும் கண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த அக்டோபர் மாதம் நடந்த தி.மு.க. பொதுக் குழுவில் பேசும்போது,  கட்சியினர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் தன்னைத் தூங்கவிடாமல் செய்வதாகக் கூறியிருந்தார். இப்போது மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் நடந்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cxwkzew8l4vo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுவெளி ஒழுக்கம்: திமுக அமைச்சர்கள் சிலர் இப்படி நடந்து கொள்வது ஏன்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி,பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
அமைச்சர் நாசர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

திமுக மூத்த அமைச்சர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் மீது கடுமையாக நடந்துகொள்ளும் சம்பவங்களும் “என்னையே தூங்க விடாமல் செய்கின்றன” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டது போன்ற பேச்சுக்களும் தொடர்ந்து வருகின்றன. 

சமீபத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கைகொடுக்க வந்த தொண்டர்களை வேகமாக தடுத்து நிறுத்தும் வீடியோ வெளியானது. கடந்த வாரத்தில் திருவள்ளூரில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், ஒரு நாற்காலியை மட்டும் எடுத்துவந்த நிர்வாகியை நோக்கி கல் வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சம்பவங்களை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்திய வரலாற்றில் மக்கள் மீது கல் எறியும் அமைச்சரை பார்த்திருக்கிறீர்களா?” என்றும் “மக்களை தாக்குவதற்கு திமுக அமைச்சர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருப்பார்கள் போல தெரிகிறது” என்றும் விமர்சித்திருந்தார்.

 

 

இதற்கு நடுவில், ஜன. 28 அன்று சேது சமுத்திர திட்டம் குறித்து திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, “திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீது யாரேனும் கை வைத்தால் அவரின் கையை வெட்டுவேன், எனக்கு அதற்கான பலம் இருக்கிறது” என பேசியது சமீபத்திய சர்ச்சையானது,

இதற்கு முன்பும் இத்தகைய சர்ச்சை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தம்மைச் சந்திக்க வந்த நரிக்குறவர் சமூகத்தின் பிரதிநிதியை வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அவமதித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதேபோல, இலவச பேருந்து சேவை குறித்தும் திமுக துணை பொதுச் செயலாளரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான க. பொன்முடி பேசிய காணொளிகளும் வைரலாகி விமர்சனத்திற்குள்ளாயின.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்

பட மூலாதாரம்,FACEBOOK

 
படக்குறிப்பு,

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன்

இதைத்தொடர்ந்து, செப்டம்பர் மாதம் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “மத்தளத்திற்கு இருபக்கமும் அடி என்பது போல் என் நிலைமை இருக்கிறது. கட்சியினர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் என்னைத் தூங்கவிடாமல் செய்கிறது. நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி விடக்கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண்விழிக்கிறேன்” என பேசியிருந்தார்.

அவருடைய இந்த பேச்சுக்குப் பின்பும் அமைச்சர்கள் இப்படி நடந்துகொள்வதும் பேச்சுக்களும் தொடர்வது ஏன்? 

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"மிக சாதாரணமான சம்பவங்கள்"

திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் இந்த கேள்வியை முன்வைத்தோம். 

“இந்த சம்பவங்கள் எல்லாம் மிகச் சாதாரணமானவை. எதிர்க்கட்சியினர் இதனை பெரிதுபடுத்துகின்றனர். அரசியல் - தத்துவார்த்த ரீதியாக அவர்களால் எங்களுடன் மோத முடியவில்லை. பள்ளியில் பாடங்களை கவனிக்காத மாணவர் மீது ஆசிரியர் சாக்பீஸ் எறிவார், குடும்பத்திலும் பிரச்னை என்றால் டிவி ரிமோட்டை தூக்கி எறிவோம். அதுபோன்றுதான் இவையும். இவை ஒழுங்கீனமான, அருவருக்கத்தக்க செயல்கள் அல்ல. அதற்காக ஒரு கட்சியையே குறை சொல்லக்கூடாது. 

குறிப்பிட்ட காலத்திற்கு வேண்டுமானால் இதனை பேசலாம். ஆனால், மக்கள் இதனை பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அமைச்சர்கள் தங்கள் கட்சி தொண்டர்களிடம் தான் அப்படி நடந்துகொள்கின்றனர். கட்சிக்காரர்களை நாங்கள் சமாதானம் செய்துகொள்வோம். இவையெல்லாம் சிறிய பிணக்குகளே,” என தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் இத்தகைய காணொளிகளை காணும் இளைய தலைமுறையினர் இடையே திமுக மீது எதிர்மறை எண்ணத்தை இவை ஏற்படுத்தாதா, கட்சிக்குப் பின்னடைவாக இருக்காதா என கேட்டபோது, “இன்றைக்கு இருக்கும் இளைஞர்களுள் பகுத்தறிவுடன் சிந்திப்பவர்களாக இருக்கின்றனர். அவர்கள் இதனை பெரிதுபடுத்தமாட்டார்கள்.

இத்தகைய சம்பவங்களை மட்டும் வைத்து அவர்கள் மதிப்பிடுவதில்லை. முதலமைச்சரின் நடவடிக்கைகளை அவர்கள் பார்க்கின்றனர், விழிப்புணர்வுடனேயே இருக்கிறார்கள். நாம் பேசும் ஆக்கபூர்வமான கருத்துகளே காலத்திற்கும் நிற்கும். இத்தகைய சிறுசம்பவங்கள் நிலைத்திருக்காது. எனினும், இச்சம்பவங்கள் சிறிய சேதத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.

திமுக தலைவர்கள் மட்டுமின்றி, அதிமுக, பாஜக தலைவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் செய்தியாளர் சந்திப்புகளில் கோபத்துடன் நடந்து கொள்ளும் சம்பவங்களும் உண்டு. 

எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, அந்த பதவியில் ஆர்.பி. உதயகுமாரை நியமிக்க வேண்டும் எனக்கோரி, கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, நிர்வாகி ஒருவரை எடப்பாடி பழனிசாமி ஒருமையில் பேசி கோபத்தை வெளிப்படுத்தினார்.

அதேபோன்று, அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, தலித் சிறுவன் ஒருவரை தனக்கு காலணி மாட்டிவிடுமாறு கூறியது, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை கடுமையான முறையில் விமர்சித்தது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

பாஜகவிலும் இதே போக்கு சில நிகழ்வுகளில் பதிவாகியிருக்கிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர் சந்திப்புகளில் நிருபர்களை எதிர் கேள்வி கேட்கும் விதமும் கோபத்துடன் அவர்களை அணுகும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

“குரங்கு மாதிரி ஏன் என்னையே சுற்றிவருகிறீர்கள்?” என செய்தியாளர்களை பார்த்து அவர் கேள்வி கேட்டதும் சர்ச்சையாகியிருந்தது. 

இவை குறித்து அதிமுக, பாஜகவை சேர்ந்தவர்களிடம் பேசினோம். 

"யார் செய்தாலும் தவறுதான்"

பா. வளர்மதி

பட மூலாதாரம்,FACEBOOK

 
படக்குறிப்பு,

பா. வளர்மதி

அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “அந்தந்த கட்சி தலைவர்கள்தான் இத்தகைய நிகழ்வுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளோ, பேச்சோ யார் செய்தாலும் தவறுதான். நான் செய்தாலும் தவறானதுதான். யாரும் இதனை சரி என சொல்ல மாட்டார்கள்” என தெரிவித்தார்.

இதனால், குறிப்பிட்ட தலைவர்கள் சந்திக்கும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் இம்மாதிரியான விமர்சனங்களை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மக்கள் இத்தகைய சம்பவங்களை தவறாகத்தான் நினைப்பார்கள். நான் அரசியலில் இருக்கிறேன், நான் கொஞ்சம் அடாவடியாக நடந்துகொண்டால் என்னைப் பார்த்து முகம் சுழிக்கத்தானே செய்வார்கள். அதனை யாரும் சரியென்று சொல்ல மாட்டார்கள். கட்சியை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதிமுகவில் பலமுறை எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து அறிவுறுத்தியிருக்கிறார். மக்கள் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொள்ளக் கூடாது என கூறியிருக்கிறார்” என தெரிவித்தார்.

"கேள்வி கேட்பதில் தவறில்லை"

குஷ்பு

பட மூலாதாரம்,KUISHBU

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு திமுக அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து கூறுகையில், “ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் தைரியத்தில்தான் இப்படி செய்கின்றனர். நாம் என்ன செய்தாலும் மக்கள் நமக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என எண்ணுகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள், மக்களுக்காக சேவை செய்பவர்கள். அவர்கள் அப்படி நடக்கக்கூடாது” என தெரிவித்தார்.

அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இத்தகைய முறையில் நடப்பது குறித்து கேள்வி எழுப்பியபோது, “பத்திரிகையாளர்கள் எங்களை கேள்வி கேட்டால், அவர்களுக்கு பதில் கொடுப்பதற்கோ அல்லது அவர்களிடம் கேள்வி கேட்பதற்கோ உரிமை உண்டு. ஜனநாயகத்தில் அதற்கு இடம் உண்டு. அண்ணாமலை கேள்வி கேட்டதில் எந்த தவறும் இல்லை. கட்சியில் இதற்கு எந்த எதிர்வினையும் இல்லை. அவர் துணிச்சலாக பேசுவதை நாங்கள் பலமாக கருதுகிறோம். அவர் பயப்படாமல் கேள்வி கேட்கிறார்” என தெரிவித்தார்.

அதிமுக, பாஜகவில் உள்ள தலைவர்கள் இவ்வாறு நடந்துகொள்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுகவின் மூத்த தலைவர்கள் இவ்வாறு நடந்துகொள்வது காலப்போக்கில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்கிறார், பத்திரிகையாளர் மணி.

“அண்ணாமலை என்ன வேண்டுமானாலும் பேசுவார், இழப்பதற்கு அவரிடம் எதுவும் இல்லை. ஆனால், திமுக ஆட்சியில் இருக்கிறது. இப்படி நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக்கூறுகிறார் மணி. 

“அதிமுக ஆட்சிக்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் அதிகமாக இல்லை. ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சுகள், நிகழ்வுகள் தான் நடைபெற்றன. இவ்வளவு தொடர்ச்சியான சம்பவங்கள் இல்லை. திமுகவிலும் முந்தைய ஆட்சிக்காலத்தில் அப்படியில்லை” என்றார்.

விரக்தியின் வெளிப்பாடா?

மேலும் அவர் கூறுகையில், “இத்தகைய சம்பவங்கள் அதிகமாகியிருப்பது உண்மைதான். சமூக வலைதளங்களால் அதிகம் பரப்பப்படுகிறது என்பதும் உண்மைதான். இவை மிகவும் அவலமானது.

“தூக்கமற்ற இரவுகளைக் கழிக்கிறேன்” என முதலமைச்சர் கூறியும் ஏன் இவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்பது புரியவில்லை. தேர்தல் சமயத்தில் இத்தகைய பேச்சுகளை பெரிதுபடுத்தத் தேவையில்லை. தேர்தல் அல்லாத காலத்தில் இப்படி பேசுவதுதான் சிக்கல். புதிய அமைச்சர்களைவிட மூத்த அமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள் இப்படி நடந்துகொள்வதுதான் புதிதாக இருக்கிறது. முகம் அறியாதவர்கள் இப்படி பேசுவது பிரச்னையில்லை. 

இதன்மூலம் முதலமைச்சருக்குத்தான் அதீதமான பிரச்னைகளை இவர்கள் கொண்டுவருகின்றனர். கட்சியில் நிலவும் விரக்தியால் இவ்வாறு நடந்துகொள்கிறார்களா என்பது புரியவில்லை. கட்சிக்குள், ஆட்சியில் அவர்கள் விரும்பியவை நடக்கவில்லை என்ற விரக்தியால் இப்படி நடந்துகொள்ளலாம். அவர்களின் செயல்பாடுகளை சுற்றி இருப்பவர்களே முகம் சுழிக்கிறார்கள். அரசின் மீது அதிருப்தியில் இருப்பவர்களுக்கு இது கேலிபொருளாக மாறும். திமுக மூத்த அமைச்சர்கள் தங்களையும் கேலிபொருளாக மாற்றிக்கொள்கின்றனர். காலப்போக்கில் இவை வெறுப்பையே ஏற்படுத்தும். முதலமைச்சர் மீண்டும் தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். மரபார்ந்த எதிரிகளுக்கு வாய்ப்புகளை வழங்கிவிடக் கூடாது” என தெரிவித்தார் பத்திரிகையாளர் மணி. 

https://www.bbc.com/tamil/articles/c3gnglnk5k2o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.