Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுக - பாஜக கூட்டணி முறிகிறதா? "எதிர்விளைவு இருக்கும்" - எச்சரிக்கும் அண்ணாமலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக - பாஜக கூட்டணி முறிகிறதா? "எதிர்விளைவு இருக்கும்" - எச்சரிக்கும் அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சி
 
படக்குறிப்பு,

கே. அண்ணாமலை, மாநில தலைவர், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி

52 நிமிடங்களுக்கு முன்னர்

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்துக் கொண்டதை அடுத்து, இரு கட்சிகள் இடையேயான முரண்பாடு முற்றியுள்ளது. தங்களிடமிருந்து ஆட்களை எடுத்து திராவிட கட்சிகள் வளர்வதாக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார். இளைஞர் அணியினர் எடப்பாடியின் படத்தை எரிக்கிறார்கள். முடிவுக்கு வந்ததா கூட்டணி?

பாஜகவிலிருந்து விலகிய அந்த கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மார்ச் 5ஆம் தேதி அந்த கட்சியிலிருந்து விலகினார். அவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

இதற்குப் பிறகு அவர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில், இன்று தகவல் தொழிநுட்ப அணி நிர்வாகி திலீப் கண்ணன், இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளர் ஜோதி, முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் விஜய் ஆகியோர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

 

இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவும் பாஜகவும் தொடர்ந்து இணைந்தே தேர்தல்களைச் சந்தித்து வந்த நிலையில், கூட்டணி கட்சியிலிருந்து விலகியவர்களை அதிமுக சேர்த்துக் கொண்டது குறித்து பாஜகவை சேர்ந்தவர்கள் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர்.

பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி, கூட்டணி கட்சியாக இருந்துகொண்டு அதிமுக இதைச் செய்திருக்கக்கூடாது என விமர்சித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

ஆனால், இரு கட்சிகளின் பிரதான தலைவர்கள் யாரும் கூட்டணி குறித்து ஏதும் சொல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில், இன்று மதுரைக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை, அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, "பாஜகவிலிருந்து ஆட்களை கூட்டிச் சென்றால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் காட்டுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும். இந்த செயலுக்கும் எதிர்வினை இருக்கும்" என தெரிவித்தார்.

இதற்குப் பிறகு, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை மீண்டும் இந்த விவகாரம் குறித்து பேசினார்.

இதையடுத்து, அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் சிலர் ட்விட்டரில் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.

அதிமுக தகவல் தொழிநுட்ப அணியின் செயலரான சிங்கை ராமச்சந்திரன், "நோட்டாவை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக எப்படி எம்எல்ஏக்களை வென்றது?" என பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

அதிமுக வழக்கறிஞர் அணியின் இணைச் செயலரான ஆர்.எம். முருகவேல், "முதிர்ச்சி இல்லாத அரை வேக்காடுகளின் அரசியல் இப்படித்தான் இருக்கும். இது தொடர்ந்து, நாங்கள் நீண்டகாலமாக எதிர்பார்ப்பது. நடந்தால் நல்லது தான்" என்று பதிவிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

இதற்கிடையில், தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், ‘எங்கள் அண்ணன் அண்ணாமலையை கீழ்த்தரமாக விமர்சனம் செய்து பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகியை அதிமுகவில் சேர்த்துக் கொண்டு, கூட்டணி தர்மத்தைப் போற்றத் தவறிய துரோகி எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்ணாமலை

மேலும் எடப்பாடி கே. பழனிசாமியின் புகைப்படத்தை எரித்தும் பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நான்கு பேரைக் காவல்துறை கைது செய்தது.

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் நெருங்கிவந்த நிலையில், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாகச் சந்தித்தன. 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலையும் இரு கட்சிகளுமே இணைந்து எதிர்கொண்டன. இதன் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பா.ஜ.கவிலிருந்து நான்கு பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வாயினர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலிலும் இரு கட்சிகளின் கூட்டணி நீடித்தது.

ஆனால், இதற்குப் பிந்தைய பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.கவின் சில தலைவர்கள், தமிழ்நாட்டில் தாங்களே பிரதான எதிர்க்கட்சி என்று கூறியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

வேறு சில சமயங்களில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளை வெல்வோம் என்றும் பா.ஜ.கவினர் பேசி வந்தனர். இவையெல்லாம் உரசலை ஏற்படுத்திவந்த நிலையில், தற்போது இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வெளிப்படையாக தங்கள் முரண்பாட்டைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cw0e781xgg6o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அண்ணாமலை ரகசியமாக பேசும் தமிழக அமைச்சர் யார்?" நிர்மல்குமார் குற்றச்சாட்டால் தகிக்கும் பாஜக, அதிமுக

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்
அதிமுக vs பா.ஜ.க. தலைவர்கள் வார்த்தைப் போர்

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் சேர்ந்துள்ள சி.டி.ஆர்.நிர்மல்குமார் முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை திரைமறைவில் மாநில அமைச்சருடன் தொடர்பில் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், அதிமுக, பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் பரஸ்பரம் எதிர்வினை விமர்சனத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த இரு கட்சிகளின் கூட்டணி அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில், கட்சியில் மட்டுமின்றி தமிழ்நாடு அரசியலிலும் சக்தி வாய்ந்த தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வேகம் காட்டி வருகிறார். அதிமுக ஒட்டுமொத்தமாக தன் பின்னே திரள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அதே நேரத்தில், பிற கட்சி நிர்வாகிகளையும் கட்சியில் இணைத்துக் கொள்ள அவர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது

அதன் ஒரு பகுதியாகவே, கூட்டணி கட்சியான பா.ஜ.க.வைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அடுத்தடுத்து அதிமுகவில் அவர் இணைத்துக் கொண்டதாக தெரிகிறது.

பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக பதவி வகித்த சி.டி.ஆர். நிர்மல்குமாரும் அவர்களில் ஒருவர்.

 

காயத்ரி ரகுராமைப் போல சி.டி.ஆர்.நிர்மல்குமாரும் பா.ஜ.க.வில் இருந்து விலகும் போது அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அதேநேரத்தில், நிர்மல்குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்காக சில இடங்களில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பதாகைகளை வைத்திருந்த பா.ஜ.கவினர், அவரது உருவ படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக vs பா.ஜ.க. தலைவர்கள் வார்த்தைப் போர்

அமர்பிரசாத் ரெட்டி, கருப்பு முருகானந்தம் போன்ற பாஜக நிர்வாகிகள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை பகிர்ந்து கொண்டனர்.

அண்ணாமலையும் கூட அதிமுகவை விமர்சிக்க தயங்கவில்லை. "பாஜகவிலிருந்து ஆட்களை கூட்டிச் சென்றால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்ட அவர், இந்த செயலுக்கு எதிர்வினை இருக்கும் என்று எச்சரித்தார்.

அதிமுக - பா.ஜ.க. இடையிலான தற்போதைய முறுகல் நிலைக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்த சி.டி.ஆர்.நிர்மல்குமாரிடம் இது குறித்து பிபிசி தமிழ் பேசியது.

"இது திடீர் முடிவு அல்ல. நன்றாக ஆலோசித்த பிறகே இந்த முடிவுக்கு வந்தேன்" என்று அவர் கூறினார்.

அண்ணாமலை தொண்டர்களை வேவு பார்க்கிறார் என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறித்து கேட்டோம்.

"கூட்டணி கட்சியாக இருக்கும் போதே சமீப காலத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் பா.ஜ.க.வில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அப்போதெல்லாம் அதிமுகவினர் யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபடவில்லை. அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று அதிமுகவினர் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர். ஆனால், தற்போது என்ன நடக்கிறது? எனக்கு எதிராக தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் பா.ஜ.க.வினர் பலரும் தாக்குதல் நடத்துவதுடன், எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தையும் எரித்துள்ளனர்.

இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தாமல் அண்ணாமலை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். நல்ல மனநிலையில் உள்ள ஒருவர் செய்யும் காரியமா இது?" என்று அவர் பதிலளித்தார்.

அதிமுக vs பா.ஜ.க. தலைவர்கள் வார்த்தைப் போர்

பட மூலாதாரம்,CTR.NIRMALKUMAR/ FACEBOOK

 
படக்குறிப்பு,

சி.டி.ஆர்.நிர்மல்குமார்

திரைமறைவில் அமைச்சர் ஒருவருடன் அண்ணாமலை பேரம் பேசுவதாக குறிப்பிட்டிருந்தீர்களே. அது யார்? என்ற கேள்வியை முன்வைத்தோம்.

அதற்கு அவர், "என்னுடன் பயணிக்கும் ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு என் முடிவு குறித்து விளக்கம் அளிக்க வேண்டியே நான் சில விஷயங்களை தெரிவித்திருந்தேன். அதைத் தாண்டி குறிப்பிட்ட அமைச்சர் யார்? என்ன நடந்தது? என்பது குறித்துப் பேசி கூடுதல் தர்மசங்கடங்களை உருவாக்க விரும்பவில்லை. அதைத் தாண்டி, என் மீதான பா.ஜ.க.வினரின் தனிப்பட்ட தாக்குதல்களும் மோசமாக இருக்கலாம் என்பதால் அந்த சங்கடங்களை தவிர்க்க விரும்புகிறேன்" என்றார்.

பா.ஜ.க.வில் மாநில அளவிலான பொறுப்பில் இருந்த சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு அதிமுகவில் இன்னும் பதவி ஏதும் வழங்கப்படவில்லை. அதிமுகவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் வலுவான தலைவராக உருவெடுத்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் செயல்படப் போவதாக அவர் கூறுகிறார்.

அதேநேரத்தில், பா.ஜ.க. நிர்வாகிகளை அழைத்துச் சென்று அதிமுகவை வளர்க்கும் நிலை உருவாகியிருக்கிறது என்ற அண்ணாமலை விமர்சனத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக கண்ணாடி அல்ல, கல் வீசியதும் உடைந்து விழுவதற்கு. அது சமுத்திரம். அதன் மீது கல் வீசினால் கல் காணாமல் போகுமே தவிர சமுத்திரம் அப்படியேதான் இருக்கும்," என்றார்.

அவர் மேலும் "அம்மாவைப் போன்ற தானும் ஒரு தலைவர் என்று அண்ணாமலை தன்னை அழைத்துக் கொள்ளக் கூடாது. செஞ்சிக்கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மனும் கிடையாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இதை புரிந்து கொள்ளலாம்" என்றும் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக vs பா.ஜ.க. தலைவர்கள் வார்த்தைப் போர்

பட மூலாதாரம்,வைகைச்செல்வன்/ TWITTER

 
படக்குறிப்பு,

வைகைச்செல்வன்

பா.ஜ.க. - அதிமுக இடையே சிறுசிறு உரசல்கள் இருந்தாலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் என்று டி.ஜெயக்குமார் கூறினார். நம்முடன் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனும் இதையே பிரதிபலித்தார்.

"பா.ஜ.க. - அதிமுக இடையே இருப்பது தேர்தல் கூட்டணிதான். தேர்தல் அல்லாத மற்ற நேரங்களில் கட்சியை வளர்க்க ஒவ்வொருவருமே ஆசைப்படுவது இயல்புதான். தமிழ்நாட்டில் . 25 நாடாளுமன்ற தொகுதிகளை வெல்வோம், நாங்களே உண்மையான எதிர்க்கட்சி என்பன போன்ற பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுகள் அப்படியான ஆசைகளே. ஆனால், ஆசைக்கும், குறிக்கோளுக்கும் வேறுபாடு இருக்கிறது. குறிக்கோள் என்பது நடைமுறை யதார்த்தம் சார்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் வரும் போது அவர்களிடம் அந்த யதார்த்த அணுகுமுறையை எதிர்பார்க்கலாம்" என்று அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படங்களை பா.ஜ.க.வினர் எரித்தது அநாகரிகம் என்று சாடிய வைகைச்செல்வன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதிர்ச்சியற்ற தலைவராக செயல்படுவதாக விமர்சித்தார்.

சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் அதிமுக தலைவர்களின் விமர்சனங்கள் குறித்து பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜனிடம் பிபிசி தமிழ் பேசியது.

சி.டி.ஆர்.நிர்மல்குமார் கற்பனையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக குறிப்பிட்ட அவர், சுயலாபத்திற்காக ஒரு முடிவை எடுத்துவிட்டு, கட்சி மீது நிர்மல்குமார் பழி போடுவதாக நாகராஜன் கூறினார்.

தமிழ்நாட்டு அரசியலில் கட்சி மாறுவது என்பது புதிதல்லல, செந்தில்பாலாஜி, நயினார் நாகேந்திரன், முத்துசாமி போன்ற பலரும் கட்சி மாறியவர்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டில் அதிமுக - பா.ஜ.க. கூட்டணியைப் பொருத்தவரை அண்ணாமலையோ, எடப்பாடி பழனிசாமியோ கூறுவதே இறுதியானதாக இருக்கும். மற்ற தலைவர்கள், நிர்வாகிகளின் கருத்துகளோ, சமூக வலைதள பதிவுகளோ கூட்டணியை தீர்மானிக்காது. 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது தேமுதிகவுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்த போதே அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டணி அமைந்து பெரு வெற்றி பெற்றது. அரசியலில் ஒரேயொரு நாளில் எத்தகைய மாற்றங்களும் நடக்கலாம்," என்று அவர் மேலும் கூறினார்.

ஜெயலலிதாவுடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது என்ற டி.ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "ஜெயலலிதா அதிமுகவுக்கு தலைவர் என்பது போல அண்ணாமலை தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு தலைவர். அவர் தன்னுடைய கட்சியில் ஒரு தலைவராக, அனைத்து முடிவுகளையும் மேற்கொள்கிறார். சிறப்பாக செயல்படுகிறார். அதிமுக வங்கக்கடல் என்றால் பா.ஜ.க இந்திய பெருங்கடல் போன்றது" என்கிறார் கரு.நாகராஜன்.

https://www.bbc.com/tamil/articles/ce57le43mjpo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவுடன் கூட்டணி தொடருமா? அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

ஜெயகுமார்
4 மணி நேரங்களுக்கு முன்னர்

பாஜக- அதிமுக இடையேயான கூட்டணி தொடர்கிறது என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப் படத்தை எரித்த பாஜகவினர் மீது அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்று கடந்த மாதம் 23ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அமர்வு தீர்ப்பளித்திருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் நிலவியது.

 

இந்நிலையில் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “திமுக ஆட்சியின் அவலநிலையை மக்களிடம் எடுத்து செல்வது தொடர்பாகவும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை.” என்றார். பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. உரிய நேரத்தில் இதற்கான தேர்தல் நடைபெறும். அது தொடர்பாக கட்சி சார்பில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜகவினர் எரித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறிய ஜெயக்குமார், அத்தகைய செயலில் ஈடுபட்டவர்களை பாஜக மேலிடம் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை நேற்றே தெரிவித்தோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என்றும் நம்புகிறோம் என்றும் கூறினார்.

பாஜகவுடன் அதிமுகவுக்கு மோதல் இல்லை என்றும் தனது பேட்டியின்போது ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

“பாஜக ஐ.டி.விங்கை சேர்ந்த பக்குவப்படாத சிலர் ஒருசில கருத்துகளை தெரிவித்தனர். அதற்கு நாங்களும் பதில் அளித்துவிட்டோம். மற்றபடி கூட்டணி தொடர்கிறது. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியும், தமிழ்நாட்டை பொருத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியும் தொடர்கிறது,” என்றார் அவர்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பட மூலாதாரம்,AIADMK/TWITTER

ஈபிஎஸ் அணியில் ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளர்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் வியாழக்கிழமையன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதற்கிடையே, செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், `ஓ.பன்னிர்செல்வத்திற்கு என்று கட்சியே இல்லை. அவர் கட்சியை நடத்தவில்லை, கடையை நடத்தி வருகிறார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும்` என்று பதிலளித்தார்.

அதிமுக- பாஜக கருத்து மோதலின் பின்னணி என்ன?

பாஜக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த சிடிஆர் நிர்மல்குமார் கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை மீதும் கடுமையான விமர்சனங்களை அவர் வைத்திருந்தார். அதை தொடர்ந்து பாஜக ஐ.டி. விங்கைச் சேர்ந்த பலரும் அதிமுகவில் இணைந்தனர். நிர்மல்குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்காக சில இடங்களில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பதாகைகளை வைத்திருந்த பா.ஜ.கவினர், அவரது உருவ படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமர்பிரசாத் ரெட்டி, கருப்பு முருகானந்தம் போன்ற பாஜக நிர்வாகிகள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை பகிர்ந்து கொண்டனர்.அண்ணாமலையும் கூட அதிமுகவை விமர்சிக்க தயங்கவில்லை. "பாஜகவிலிருந்து ஆட்களை கூட்டிச் சென்றால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்ட அவர், இந்த செயலுக்கு எதிர்வினை இருக்கும் என்று எச்சரித்தார்.

இதேபோல், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்திருந்தார்.

இதேபோல் ஜெயலலிதாவோடு தன்னை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்திருந்த ஜெயக்குமார், செஞ்சிக்கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மனும் கிடையாது.

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இதை புரிந்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார். மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக அண்ணாமலை வாய் கொழுப்போடு பேசுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/cl5j52w5ywko

  • கருத்துக்கள உறவுகள்

அதிமுக, பாஜக உரசல் தமிழ்நாட்டில் கூட்டணிக் கணக்குகளை தலைகீழாகப் புரட்டிப் போடுமா?

1678342676-7283.jpg&w=&h=&outtype=webp
அதிமுக – பாஜக உறவில் ஏற்பட்டுள்ள உரசல், விரிசலாகி நிரந்தரப் பிரிவாகுமா? அல்லது கடந்து செல்லும் மேகம்போல இந்த கசப்புணர்வு காலவோட்டத்தில் கரைந்து போய், பரஸ்பர தேவைகள் காரணமாக மீண்டும் ஒட்டிக்கொள்ளுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் சூடாக விவாதிக்கப்படும் பொருளாக இருக்கிறது.
 
ஏற்கெனவே, பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது வலுவான குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார். பெண் நிர்வாகியுடனான மோசமான உரையாடல் கசிவு வெளியான நிலையில், அந்தக் கட்சியின் ஓபிசி அணி மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து விலகினார். ஆனால் அவரைப் பாதுகாக்க முயன்றதாக அண்ணாமலை மீது குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்நிலையில், அந்தக் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வு, முந்தைய நிகழ்வுகளைப் போல பாஜகவுக்குள் நிலவும் உள்கட்சி கொந்தளிப்பைக் காட்டுவதாக மட்டும் முடியவில்லை.
 
மாறாக, கூட்டணிக் கட்சியான பாஜக-வில் இருந்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியேறிய நிர்வாகியை ஏற்றுக்கொண்டதன் மூலம் பாஜகவுக்கும், அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி இரண்டு கட்சிகளும் உரசிக் கொள்ளவும் வழி ஏற்படுத்தியுள்ளது.
 
மறுபுறம் திமுகவுடனான தங்கள் உறவு வலுவான கொள்கை உறவு என்பதையும், இந்திய அளவில் திமுக ஒரு கூட்டணியை முன்னெடுக்கவேண்டும் என்பதையும் சமீபத்திய கூட்டம் ஒன்றில் உரத்துச் சொல்லியிருக்கிறார் தொல்.திருமாவளவன். அதே நேரம், சில விஷயங்களை தொடுகோடு போல லேசாக ஆனால், தேவையான அழுத்தத்தோடு சொல்லியிருக்கிறார் அவர்.
 
தமிழ்நாட்டில் போலீஸ் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும், ஆனால், அது பாஜகவின் திட்டங்களுக்கு ஏற்ப செயல்படுவதைப் போலத் தெரிகிறது என்ற ஒரு கருத்தை அவர் வெளியிட்டார். திமுக ஆட்சியில் இருக்கும்போது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் காரை பாஜகவினர் வழிமறிக்க முடிகிறது என்ற கவலையையும் அவர் வெளியிட்டார். அத்துடன், பாஜக – பாமக இருக்கும் இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது என்பதையும் அவர் புதிய அழுத்தத்தோடு சொல்லியிருக்கிறார்.
 
மறுநாளே, தமது பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்று சேர வேண்டிய தேவையை மிகவும் வலியுறுத்திக் கூறியதோடு, காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்று பேசப்படும் கருத்தையும் புறக்கணித்தார். பல வடமாநிலத் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், ஒரு வலுவான தேசிய அணியை உருவாக்குவதற்கான தேவையை வலியுறுத்தியது மட்டுமல்ல, அதற்கான நம்பிக்கையையும், ஊக்கத்தையும் விதைக்கும் வகையில் இருந்தது அந்தப் பேச்சு.
 
எனவே, உதயநிதி டெல்லியில் பிரதமர் மோதியை சந்தித்த நிகழ்வு, திருமாவளவன் உரை ஆகியவற்றுக்குப் பிறகு ஏற்பட்ட சந்தேக மேகங்களை துடைக்கும் வகையில் உறுதியான அரசியல் செய்தியை அளித்தது ஸ்டாலின் உரை. ஆனால், போலீஸ் குறித்து திருமாவளவன் வெளியிட்ட கவலை, பாமக குறித்து அவர் குறிப்பிட நேர்ந்தது ஆகியவை விளக்கம் பெறாத கேள்விகளாகவே உள்ளன. அதிலும் குறிப்பாக, பாமக திமுகவை நெருங்க விரும்புகிறது என்ற பார்வை பரவலாகப் பகிரப்படும் நிலையில், இந்தக் கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
1678342694-0494.jpg&w=&h=&outtype=webp
அதிமுக – பாஜக உறவு முடிவுக்கு வருமானால், பாமக எங்கே இருக்கிறதோ அதற்கு நேரெதிரான இடத்தைத் தேர்வு செய்யும் வாய்ப்பு விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடைக்கும். பாமக தனித்து விடப்பட்டாலோ, பாஜக அல்லது அதிமுகவுடன் சேர்ந்தாலோ விடுதலைச் சிறுத்தைகள் தங்கள் திமுக உறவை தொடர்வதில் சிக்கல் ஏற்படாது என்பது வெளிப்படையான புரிதல்.
 
இந்நிலையில், அதிமுக – பாஜக உரசல் எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்று மூத்த பத்திரிகையாளரும், அதிமுக விவகாரங்களை கூர்ந்து கவனிப்பவருமான தராசு ஷ்யாமிடம் கேட்டோம்.
 
“அதிமுக பாரதிய ஜனதா இரண்டு கட்சிகளுக்கும் இடையே உறவு விரிசல் விட்டுவிட்டது,” என்று கூறியே அவர் தமது உரையாடலைத் தொடங்கினார்.
 
“2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இது தெரிந்தது. அப்போது அதிமுகவின் மூத்த தலைவர்கள் பொன்னையன், அன்வர் ராஜா போன்றோர் பாரதிய ஜனதாவை எதிர்த்து பேட்டிகள் கொடுத்தனர். ஆனாலும் அதிமுகவுக்கு ஆட்சியில் நீடிக்க வேண்டிய நிர்பந்தம், அப்போது நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது பத்தாவது வெற்றி பெற வேண்டும் என்கிற நிலை இருந்தது.
 
எனவேதான் தேசிய அளவில் பியுஷ் கோயல் வரை வந்து பேசி 5 சீட்டுகள் பெற்று பாஜ அதிமுகவுடன் கூட்டணி கண்டது. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்த அந்த கூட்டணி தேனி ஒரு தொகுதியை தவிர வேறு எங்கும் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும் கூட்டணி இல்லை.
 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இரட்டை இலை பெற்று, உட்கட்சி போட்டி வேட்பாளர் இல்லாமல் போட்டியிட்டால் திமுகவை தோற்கடிக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி பாஜக மேலிடத்தில் கூறினார். அது தப்பு கணக்கானது.
 
எனவே தான் அண்ணாமலை இடைத்தேர்தல் முடிவு பற்றி கருத்து தெரிவிக்கும் போது எடப்பாடி முடிவை விமர்சித்தார். அது முதல் இதுவரை உரசல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஜெயக்குமார் மாதிரி இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட்டணி இருப்பது போலப் பேசுகிறார்கள். ஆனால் தொலைக்காட்சிகளில் பேசுபவர்கள் பாஜக-வை கடுமையாக தாக்குகிறார்கள். குறிப்பாக அண்ணாமலையின் தலைமையை கேள்விக்குரியதாக மாற்றுகிறார்கள். அதிமுகவின் அதிகாரபூர்வமான செய்தித் தொடர்பாளர்கள் வெளிப்படையாகவே பொது வெளியில் கருத்துத் தெரிவிக்கிறார்கள்,” என்று கூறினார் ஷ்யாம்.
மேலும் இது பற்றிக் கூறிய அவர் “இந்த நிலையில் அதிமுக பாரதிய ஜனதா கூட்டணி தொடர் புள்ளியா முற்றுப்புள்ளியா என்கிற சஸ்பென்ஸ் மட்டுமே நீடிக்கிறது. தலைவர்கள் கைகுலுக்குவதால் மட்டும் அரசியல் கூட்டணி வெற்றி பெறாது. தொண்டர்கள் கைகுலுக்கி தேர்தல் பணிகளில் ஒருங்கிணைப்பு தேவை. அது அதிமுக பாஜக கூட்டணியில் இல்லை,” என்றார்.
 
அதே நேரம் பாஜக தனித்து போட்டியிட்டாலும் அந்தக் கட்சியால் சில இடங்களில் வெல்ல முடியும் என்றும், அந்தக் கட்சி வேறுசில கட்சிகளை சேர்த்துக்கொண்டு வானவில் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.
 
“பாஜக தானே தனியாக கூட்டணி அமைத்து 2014 தேர்தலில் புதுச்சேரி உட்பட மூன்று இடங்கள் பெற்றது. அதே பார்முலாவில் ஐந்து அல்லது ஆறு இடங்கள் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
 
2019 மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் மூன்றாவது இடம் பெற்ற டிடிவி தினகரன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பாமக, ஜான் பாண்டியன் புதிய நீதி கட்சி ஆகியோரை இணைத்துக்கொண்டு தனி கூட்டணி அமைக்கும் எண்ணமும் பாஜகவுக்கு இருக்கிறது. இறுதி முடிவு டெல்லி கையில்.
 
எனவே தான் அண்ணாமலை கிளை மேலாளர் மட்டும்தான் என்று அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள். இந்த நிலையில் கூட்டணி நீடித்தாலும் இரண்டு கட்சிகளுக்கும் எந்த பயனும் இல்லை” என்றார் ஷ்யாம்.
 
ஒரு வேளை அதிமுக கூட்டணி உரசல் நிரந்தரப் பிளவாக மாறிவிட்டால், பாஜக வேறு பெரிய கூட்டணியைத் தேட முயலுமா என்று கேட்டபோது, பாஜக தனியாக ஒரு வானவில் கூட்டணியை அமைக்கும் என்று தெரிவித்தார் அவர்.
 
பாஜக முன் இருக்கும் வாய்ப்புகள்
“மேலே குறிப்பிட்ட டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், ஓபிஎஸ் போன்ற தலைவர்களுக்கு அவரவர் பகுதிகளில் செல்வாக்கு உண்டு. மொத்தமாகப் பார்த்தால் இப்படி 7-8 தொகுதிகள் வருகின்றன. அவர்களோடு பாஜக இணைந்து கூட்டணி அமைத்தால் சில வெற்றிகள் சாத்தியம்தான் என்று கூறிய ஷ்யாம்,
 
அதேபோல எடப்பாடி பழனிசாமிக்கும் அவரை சார்ந்த சில தலைவர்களுக்கும் மேற்கு மண்டலத்தில் செல்வாக்கு இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணியில் இல்லாமல் போனால் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் அதிமுகவுக்கு வரலாம். அப்படி பார்த்தாலும் சில தொகுதிகளில் அதிமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போதைக்கு எல்லாமே மனக்கணக்குதான். வெற்றிக் கணக்காக முடியுமா என்பது காலத்தின் பதில்” என்றார் அவர்.
 
இது அண்ணாமலையின் அணுகுமுறை சிக்கல் மட்டும்தானா, மத்திய பாஜகவே இந்த அணுகுமுறையை கடைபிடிக்க விரும்புமா? தமிழ்நாட்டில் அதிமுக போன்ற ஒரு பெரிய கட்சி, இயல்பான கூட்டணி என்று பார்க்கப்படும் கட்சியை விட்டு விலகி இது போன்ற சிறிய சக்திகளுடன் கூட்டணி வைக்கும் சோதனை முயற்சியை இந்த தேர்தலில் பாஜக நினைத்துப் பார்க்குமா? பாஜக கூட்டணியை விரும்பும்பட்சத்தில் அதை நிராகரிக்கும் வலிமை அதிமுக தலைமைக்கு இருக்குமா? என்ற கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.
 
“மத்திய பாரதிய ஜனதா தலைவர்களோடு அண்ணாமலைக்கு நெருக்கம் அதிகம் எனவே அவர் தன்னிச்சையாக முடிவெடுக்கவில்லை என்பது என் கருத்து” என்றார் அவர்.
 
“இப்படி இந்த உறவு பிளவை நோக்கிச் செல்வது, அதிமுக, பாஜக இரண்டுக்குமே நிம்மதியைத் தருமா? இல்லை யாராவது ஒருவர் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா... அல்லது இருவருமா” என்று அவரிடம் கேட்டபோது,
 
“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மாதிரி ஒற்றை தொகுதிக்கான தேர்தல் என்றால் திமுக கான்சன்ட்ரேட் செய்ய முடியும். 2024 மக்களவைத் தேர்தல் வரும்போது ஆட்சி மீது அதிருப்தி அதிகமானால் அது தங்களுக்கு லாபம் தரும் என்பது அதிமுகவின் கருத்து. அதற்குள் முக்கிய வாக்குறுதிகளையாவது திமுக நிறைவேற்ற வேண்டும். அதற்கும் மத்திய அரசு நிதி வேண்டும். கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு உதைக்கிறது”என்கிறார் ஷ்யாம். இது திமுக பாஜக ஒன்றை ஒன்று நெருங்கும் நெருக்கடியைத் தருமா என்று கேட்டபோது, 2024க்கு அது அந்த வாய்ப்பு இல்லை என்றார் அவர்.
 
திமுக நிலை மாறுமா?
 
 
இந்த கேள்வியை மற்றொரு மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான பாரதி தம்பியிடம் முன்வைத்தோம். “அப்படி ஒருபோதும் திமுக யோசிக்காது. கடந்த காலத்தில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், அப்போது இருந்ததைவிட இப்போது தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்புணர்வு அதிகம். அப்படி ஒரு கூட்டணியை விரும்பினால்கூட அந்த முடிவை எடுப்பது திமுகவுக்கு சாத்தியமாக இருக்காது.
 
அரசியல் கணக்கும், சமூக நெருக்கடியும் அந்த இடத்தை நோக்கிச் செல்ல திமுகவை அனுமதிக்காது. அவர்களே விரும்பினாலும்கூட. ஆனால், திமுக-வுக்குள் இருந்து வரும் தகவல்கள், அந்தக் கட்சி பாஜக எதிர்ப்பை அடிப்படை அரசியலாக வைத்தே தங்கள் அரசியலையும், தேர்தல் உத்திகளையும் வகுப்பதாக காட்டுகின்றன. எனவே திமுக – பாஜக உறவு ஏற்படுமா என்ற கேள்வியை உலவ விடுவதே, திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிதான்” என்றார்.
 
எடப்பாடி பழனிசாமியால் பாஜகவைப் பகைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியுமா, இந்த உரசலை எப்படிப் புரிந்துகொள்வது, இந்த மோதல் போக்கு தேர்தல் வரை நீடிக்குமா என்று கேட்டபோது, “ஓபிஎஸ் போல அல்லாமல், எடப்பாடி பழனிசாமிக்கு பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் கொஞ்சம் இருக்கிறது.
 
அது கொள்கை வழியான எதிர்ப்பு அல்ல. ஆனால், கீழே அடிமட்டத்தில் இருந்து வந்து தலைமையைக் கைப்பற்ற முடிந்திருப்பது, பணபலம், தமது கவுண்டர் சாதி தரும் ஆதரவு ஆகியவை இந்த துணிச்சலை அவருக்கு தந்திருக்கும். ஆனால், பாஜகவை பொருத்த வரை அதிமுகவுடன் மோதலை நீடிப்பது அவர்களது விருப்பமாக இருக்காது. பெரிதும், இது அண்ணாமலையின் அணுகுமுறை காரணமாக கூட்டணிக்குள் எழுந்துள்ள நெருக்கடியாகவே தெரிகிறது. எனவே, தலைமை ஒருவேளை அவரை அழைத்து கண்டித்து, நிலைமையை சரி செய்ய முயலக்கூடும்” என்றார்.
 
பாஜக - திமுக நெருங்க வாய்ப்பில்லை என்பதுதான் ஷ்யாம், பாரதி தம்பி இருவரும் கூறும் கருத்தும். அவர்கள் இதை வெவ்வேறு புரிதல்களில் இருந்து கூறுகிறார்கள் என்பது வேறு. அதே நேரம், பாஜக – அதிமுக உறவு நிரந்தர விரிசலாக முடியுமா என்பதில் இரு வேறு கருத்துகளே நீடிக்கின்றன. அது பாஜக சாம பேத தான தண்டங்களை பிரயோகித்து அதிமுக உறவை தக்க வைக்க விரும்புமா, அதை அதிமுக தாக்குப் பிடித்து நிற்க முடியுமா என்ற இரண்டு கேள்விகளுக்குமான விடைகளைப் பொறுத்தே இருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.