Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீதிமன்றத்தோடு விளையாடுவதற்கு நிறைவேற்று ஜனாதிபதிக்கு இடமளிக்க முடியாது - இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதியரசர் குழாமை பாராளுமன்றக்குழுவில் விசாரிப்பது நாட்டின் நீதித்துறையை மேலும் பாராதீனப்படுத்தும் - சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

Published By: T. SARANYA

18 MAR, 2023 | 10:39 PM
image

(நா.தனுஜா)

உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்க மறுப்பதும், அதனை பாராளுமன்றக்குழுவில் விசாரணைக்கு உட்படுத்துவதும் ஏற்கனவே நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை ஆபத்தான நிலையிலுள்ள இலங்கைக்கு மிகமோசமானதொரு முன்மாதிரியாகவே அமையும் என்று சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

அதுமாத்திரமன்றி உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவதற்கான நிதி வழங்கப்படுவதை உறுதிசெய்யும்வகையில் உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்குமாறு அந்த ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களுக்கான நிதியை விடுவிக்காமல் இருக்கும் செயற்பாட்டைத் தடுக்கும் வகையில் சட்டமா அதிபர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதியரசர்களால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவு குறித்து பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவில் ஆராயவேண்டுமெனக் கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்தவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். 

அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளின்மீதான அநாவசியமானதும், பாரதூரமானதுமான அத்துமீறல் என்றே நாம் கருதுகின்றோம்.

நீதிமன்றமானது அதன் சொந்த அதிகார வரம்பு மற்றும் திறன்கள் என்பன உள்ளடங்கலாக நியாயத்துவ இயல்பைக்கொண்ட அனைத்து விவகாரங்கள் தொடர்பிலும் கேள்வியெழுப்பும் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றது என்பதே சட்ட ஆட்சியின் அடிப்படைக்கோட்பாடாகும். எனவே உயர்நீதிமன்றம் அதன் அதிகார வரம்பெல்லைக்குள் செயற்பட்டிருக்கின்றதா என்பதை எந்தவொரு அரசியல்சார் தரப்புக்களாலும் தீர்மானிக்கமுடியாது.

அதேவேளை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத்தடையுத்தரவு குறித்து பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பான குழு அதன் விசாரணைகளை முடிவுறுத்தும்வரை தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்கவேண்டாமென சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்டமைப்புக்களிடமும் வலியுறுத்துமாறு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கடந்த 10 ஆம் திகதி பிரதி சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்திருப்பது குறித்து எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம். அதேவேளை உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு எவ்வித இடையூறுமின்ற உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.

உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்க மறுப்பதும், அதனை பாராளுமன்றக்குழுவில் விசாரணைக்கு உட்படுத்துவதும் 'அதிகார வேறாகத்தை' மீறுவதாக அமையும் அதேவேளை, ஏற்கனவே நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை ஆபத்தான நிலையிலுள்ள நாட்டுக்கு மிகமோசமான முன்மாதிரியாகவும் அமைந்துவிடும்.

எனவே உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவதற்கான நிதி வழங்கப்படுவதை உறுதிசெய்யும்வகையில் உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 

அத்தோடு உயர்நீதிமன்ற நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பான குழுவில் விசாரணைக்கு உட்படுத்துவதற்குத் தெரிவித்த இணக்கத்தை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோருகின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/150868

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத்தோடு விளையாடுவதற்கு நிறைவேற்று ஜனாதிபதிக்கு இடமளிக்க முடியாது - இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் 

Published By: NANTHINI

19 MAR, 2023 | 06:05 PM
image

 

(எம்.ஆர்.எம்.வசீம்)

நீதிமன்ற தீர்ப்புக்கு நிறைவேற்று அதிகாரி கீழ்ப்படாவிட்டால், சாதாரண மக்கள் கீழ்ப்படிவார்கள் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? 

அதனால் நீதிமன்றத்துடன் விளையாடுவதற்கு நிறைவேற்று ஜனாதிபதிக்கு எங்களால் இடமளிக்க முடியாது. அதற்கு எதிராக சட்டத்துறை சார்ந்தவர்களாகி, நாங்கள் அதற்கு எதிராக ஒரு சமூகமாக இருந்து குரல் கொடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மாத்தறை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (19) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சட்டத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக பாரிய பிரச்சினைகள் தோன்றி வருகின்றன. இதில் நீதிமன்ற சுயாதீன தன்மைக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தடைகள், நாங்கள் காணும் பிரதான அச்சுறுத்தலாகும். 

நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் சில கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல், நீதிபதிகளை அழுத்தங்களுக்கு உட்படுத்த நிறைவேற்றுத்துறை  முயற்சிக்கிறது. 

துறைசார் தொழில் வல்லுநர்கள் என்ற அடிப்படையில் அதற்கு நாங்கள் எதிராக செயற்பட வேண்டும். நீதிமன்ற சுயாதீனத் தன்மை தொடர்பில் நிறைவேற்றுத்துறை தலையிடுவதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது.

நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும்போது அது தொடர்பில் வேறு முறைமைகளை கையாண்டு நீதிபதிகளை நோவினைப்படுத்த எங்களுக்கு இடமளிக்க முடியாது. 

நீதிமன்ற தீர்ப்புகளுக்கு நிறைவேற்றுத்துறை கீழ்ப்படியாவிட்டால், சாதாரண மக்கள் நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு கீழ்ப்படிவார்கள் என எவ்வாறு நாம் எதிர்பார்க்க முடியும்?

அதனால், இது நிறைவேற்றுத்துறையால் மேற்கொள்ளப்படும் மிகவும் மோசமான முன்மாதிரியாகும்.

அதனால், நீதித்துறை சார்ந்தவர்கள் என்ற வகையில் நிறைவேற்றுத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல்கொடுக்க வேண்டும். எதிர்வரும் ஒரு மாத காலத்துக்குள் அது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். 

நீதிமன்ற நடவடிக்கையில் தலையிட வேண்டாம் என இது தொடர்பாக நிறைவேற்று அதிகாரிக்கு கடந்த வாரம் அறிவித்திருக்கிறோம். ஏனெனில், வரலாற்றில் எப்போதும் நிறைவேற்றுத்துறை முறைகேடாக நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடும்போது சட்டத்தரணிகள் சமூகம் அதற்கு எதிராக உறுதியாக செயற்பட்டிருக்கிறது.

அதனால் நீதிமன்றத்துடன் விளையாடுவதற்கு நிறைவேற்று ஜனாதிபதிக்கு எங்களால் இடமளிக்க முடியாது. 

சட்டத்துறை சார்ந்தவர்களாகி, நாங்கள் அதற்கு எதிராக ஒரு சமூகமாக இருந்து குரல் கொடுக்க  வேண்டும். 

70, 80 காலப்பகுதிகளில் நீதிமன்றங்களுக்கு எவ்வாறான தடைகள் ஏற்பட்டன என்பதை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் இதற்கு இடமளிக்கப்போவதில்லை என நாங்கள் உறுதிபூணுவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/150905

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத்துக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது - ஜி.எல்.பீரிஸ் 

Published By: VISHNU

20 MAR, 2023 | 03:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நீதிமன்றத்துக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது.நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் ஊடாக கருத்துக்களை முன்வைக்க கூடாது என்ற நாகரிகம் கூட அரசாங்கத்திற்கு இல்லை.

நீதிபதிகளின் கௌரவத்தை பாதுகாக்க சட்டத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை  விடுவிக்காமல் இருக்கும் திறைசேரியின் செயற்பாட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றம் கடந்த 03 ஆம் திகதி பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவால் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சியின் உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த பாராளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்தார்.

பிரேம்நாத் சி தொலவத்த முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினைக்கு வலுசேர்க்கும் வகையில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க 'பாராளுமன்றத்தின் சிறப்புரிமை மீறல் தொடர்பில் ஆளும் தரப்பின் பாராளுமன்ற சிறப்புரிமை மீறல் தொடர்பில் பிரச்சினையை முன்வைத்துள்ளார்.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை மீறல் தொடர்பான குழு ஒரு தீர்மானத்தை எடுக்கும் வரை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு சிறப்புரிமை குழு அறிவிக்க வேண்டும்' என பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

ஆளும் தரப்பின் உறுப்பினர்களான தொலவத்த, செஹான் சேமசிங்க ஆகியோரின் வலியுறுத்தலுக்கு அமைய உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைத்து, பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் நீதிபதிகளிடம் விசாரணை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் பல ரிட் மனுக்கல் உயர்நீதிமன்றத்தில் விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒரு விடயத்தை பாராளுமன்ற சிறப்புரிமைக்குள் இருந்துக் கொண்டு விமர்சிக்கவோ அல்லது அந்த வழக்கு தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கவும் கூடாது என்பது உலக நாடுகளில் பின்பற்றப்படும் ஒரு நெறிமுறையாகும்.இந்த அடிப்படை நாகரிகம் கூட அரசாங்கத்திற்கு இல்லை என்பது கவலைக்குரியது.

நீதிமன்றத்துக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு இல்லை.உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடையுத்தரவால் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது,நிறைவேற்றுத்துறையால் ஆக்கிரமிக்கப்பட்ட பாராளுமன்றத்தை நீதித்துறை பாதுகாத்துள்ளது. நிறைவேற்றுத்துறையின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றத்தை மலினப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஆளும் தரப்பின் இளம் உறுப்பினர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற சிறப்புரிமைக்குள் இருந்துக் கொண்டு உயர்நீதிமன்றத்தை விமர்சிக்கும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு உண்டு,நீதித்துறை மற்றும் நீதிபதிகளின் கௌரவத்தை பாதுகாக்க சட்டத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/150975

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.