Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் பொன்முடி, மகன் வீடுகள், கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
 
படக்குறிப்பு,

பொன்முடி, தமிழ்நாடு அமைச்சர்

34 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமாக சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி சாலையில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது. இதேபோல், அவரது மகனும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கடந்த ஆண்டு விடுபட்ட அமைச்சர் பொன்முடி மீது சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அண்மைக் காலமாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், மாநிலத்தில் ஆளும் திமுக அரசுக்கும் இடையே நீடிக்கும் மோதல், இவர் வகிக்கும் உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதிலும் எதிரொலித்தது.

செந்தில்பாலாஜிக்கு அடுத்தபடியாக பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடக்கலாம் என்று மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், இன்று அது நடந்திருக்கிறது.

சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் சென்றனர். காலை 7 மணி தொடங்கி பல மணி நேரமாக அங்கே சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வீட்டில் அமைச்சர் பொன்முடி இருக்கிறார்.

பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
 
படக்குறிப்பு,

விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை

அதேநேரத்தில், விழுப்புரத்தில் சண்முகபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடி குடும்பத்தினர் அங்கத்தினர்களாக உள்ள சூர்யா அறக்கட்டளைக்குச் சொந்தமாக, விக்கிரவாண்டி சாலையில் உள்ள பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

விழுப்புரத்தில் அமலாக்கத்துறையைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பாதுகாப்பு படையுடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, விழுப்புரம் என அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத்தூறை சோதனை மேற்கொண்டு வருவதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலங்கள், பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, அலுவலகங்களில் கடந்த மாதம் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, தலைமைச் செயலகத்திலும் சோதனை நடத்தியதைப் போன்று இம்முறையும் நடக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
 
படக்குறிப்பு,

விழுப்புரத்தில் அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர்.

அமைச்சர் பொன்முடி மீதுள்ள வழக்குகள் என்ன?

2006-2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததால் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு சிறப்பு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.

சென்னை சைதாப்பேட்டையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றில் இருந்து நீதிமன்றம் ஏற்கெனவே பொன்முடியை விடுவித்திருக்கிறது

கௌதம சிகாமணி மீதுள்ள வழக்கு என்ன?

ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல், இந்தோனேஷியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் முதலீடு செய்து அதன் மூலம் பல கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளார் என்று கௌதம சிகாமணி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. வெளிநாடுகளில் கௌதமசிகாமணி செய்த முதலீடுகள் மற்றும் அவர் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் லாபம் ஈட்டிய தொகைகளுக்கு ஈடாக 8.60 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துகளை அமலாக்கத்துறை 2020-ம் ஆண்டு 'பெமா' சட்டத்தின் கீழ் முடக்கியது.

அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் இந்த வழக்கில் தான் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமலாக்கத்துறை சோதனைக்கு ஆளான 2-ஆவது அமைச்சர்

தமிழ்நாடு அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கு அடுத்தபடியாக அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியுள்ள 2-வது அமைச்சர் பொன்முடி ஆவார். செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய பின்னர் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்ற நிலை அமைச்சர் பொன்முடிக்கும் வரக் கூடுமோ என்ற யூகங்களும் எழுந்துள்ளன.

அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சிகள் ரத்து

அமலாக்கத்துறை சோதனை காரணமாக அமைச்சர் பொன்முடி இன்று பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த அரசு விழா ரத்தாகியுள்ளது.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா?

பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
 
படக்குறிப்பு,

மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முறை பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/c4nleel2d5ko

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை - அமலாக்கத்துறை அடுத்த அதிரடி

 

  • கருத்துக்கள உறவுகள்

 

"பொன்முடி வீட்டில் ED Raid" - சிக்கிய முக்கிய ஆவணங்கள் ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமலாக்கத்துறை சோதனையின்போது என்ன நடக்கும்? பூட்டை உடைக்கும் அதிகாரம் உண்டா?

அமலாக்கத்துறை சோதனையின்போது என்ன நடக்கும்? பூட்டை உடைக்கும் அதிகாரம் உண்டா?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 17 ஜூலை 2023

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமாக சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீதான சோதனை தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமலாக்கத்துறை எந்த நேரத்திலும் எந்த தனிநபருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தலாமா? சோதனை செய்யும் இடத்தில் அவர்களின் விசாரணை எப்படி நடைபெறும் என்பது தொடர்பான பல கேள்விகள் எழுகின்றன.

அமலாக்கத்துறை இந்தியாவில் மத்திய நிதிஅமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு விசாரணை அமைப்பு. பண மோசடி மற்றும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கான முதன்மையான விசாரணை அமைப்பு என்று அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ வலைதளம் கூறுகிறது.

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும், அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், தனியார் நிறுவனங்களை நடத்துபவர்கள், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றவர்கள் என பலதரப்பட்ட நபர்களிடம் அமலாக்கத்துறை சோதனை செய்வது அவ்வப்போது செய்தியாகின்றது.

அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் பற்றியும் அந்த அமைப்பு செயல்படும் விதங்கள் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி கே.சந்துருவிடம் கேட்டோம்.

''எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், தங்களுக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சோதனை செய்யும் அதிகாரம் கொண்டது இந்த அமலாக்கத்துறை. இந்தியாவில் 1956ல் இருந்துசெயல்பட்டு வரும் அமலாக்கத்துறை முதலில் டெல்லியில் செயல்பட்டாலும், தற்போது மும்பை, சென்னை, சண்டிகர், கொல்கத்தா, டெல்லி ஆகிய ஐந்து இடங்களில் மத்திய அலுவலகங்களைக் கொண்டு செயல்பட்டுவருகிறது. பொருளாதார குற்றங்கள் தொடர்பாக, தனிநபர்கள் யாரை வேண்டுமானாலும் சோதனை செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது,'' என்றார் நீதிபதி சந்துரு.

விழுப்புரத்தில் அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர்.
 
படக்குறிப்பு,

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர்.

அமலாக்கத்துறையின் முக்கிய அதிகாரங்கள் என்ன?

  • பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பொருளாதார குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உண்டு.
  • சட்டவிரோதமான வழிகளில் பெறப்பட்ட சொத்துக்கள், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சோதனை செய்து கணக்கிட்டு, அவற்றை பறிமுதல் செய்யலாம்.
  • பணமோசடி அல்லது பிற பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கலாம்.
  • இந்தியாவின் நிதி அமைப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள நபர்களை சர்வதேச காவல்துறையிடம்(இன்டர்போல்) தகவல் கொடுத்து, அவர்களை கண்டறியலாம்.
  • கால வரையறை இல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பணப்பரிமாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு சோதனை நடத்தமுடியும். ஒரு தனி நபரின் வருமானம் எவ்வளவு, ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளில் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்துள்ளது என்று ஆராயலாம், வருமானத்திற்கான மூலதனம் எது என்று கேட்டு அதற்கான ஆவணங்களைப் பெறலாம்.
  • அமலாக்கத்துறையில் ஒவ்வொரு விசாரணைக்கும் தனி குழுக்கள் அமைக்கப்படும். விசாரணை செய்யும் இடத்தில் கிடைக்கும் நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் போன்றவற்றை மதிப்பீடு செய்வதற்கு அந்த குழுவில் நகைமதிப்பீட்டாளர்கள் இருப்பார்கள். வருமானம், சொத்துக்களை கணக்கிட வருமானவரித்துறை அதிகாரிகள் இருப்பார்கள். ஒவ்வொரு சோதனைக்கும் தேவைப்படும் நிபுணர்களை கொண்டு சோதனையை அமலாக்கத்துறை நடத்தும்.
  • சோதனை செய்யும் இடங்களில் கிடைத்த ஆதாரங்களை வைத்து அமலாக்கத்துறை ஒரு அறிக்கை ஒன்றை தயார் செய்யும். அந்த அறிக்கையின் அடிப்படையில், தனிநபர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.அமலாக்கத்துறை

பட மூலாதாரம்,ANI

அமலாக்கத்துறையின் சோதனையின்போது அனுமதிக்கப்பட்ட அதிகாரங்கள்

பணமோசடி தடுப்புச் சட்டம், 2002ன் கீழ், குற்றத்தின் பதிவுகள் அல்லது வருமானங்கள் வைக்கப்பட்டுள்ளன என்று சந்தேகிக்கப்படும் கட்டடம், இடம், கப்பல், வாகனம் அல்லது விமானத்தில் நுழைந்து தேடுதல் நடத்தலாம்.

கதவு, பெட்டி, லாக்கர், அலமாரிகளின் சாவிகள் கிடைக்காத பட்சத்தில் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி பூட்டை உடைத்துத் திறக்கலாம். பிரேக் ஓபன்(Break open) என்ற முறையையும் கடைபிடிக்கலாம். அதாவது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனில், அந்த நபருக்கு சொந்தமான இடத்தில் பூட்டை உடைத்து உள்ளே செல்லமுடியும்.

அத்தகைய தேடுதலின் விளைவாக கண்டுபிடிக்கப்பட்ட ஏதேனும் பதிவேடு அல்லது சொத்தை பறிமுதல் செய்யலாம்.

சோதனையின்போது என்ன நடக்கும்?

விசாரணையின் போது, சந்தேகிக்கப்படும் நபர் மற்றும் அந்த இடத்தில், அலுவலகம் அல்லது வீட்டில் உள்ள நபர்கள் வெளியேறமுடியாது.

வீட்டிற்குள் அல்லது சோதனை நடைபெறும் இடத்திற்குள் எந்த புது நபரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அங்குள்ள தொலைப்பேசி இணைப்புகள் துண்டிக்கப்படும். அவர்களின் அலைபேசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். அவரச கால அழைப்புகள் தேவைப்படும் பட்சத்தில், அதிகாரிகளின் மேற்பார்வையில் இருந்து அவர்கள் பேசலாம்.

சோதனை தொடங்கிய நேரம் முதல், அது முடிந்து, அதிகாரிகள் சோதனை முடிந்தது என்று அறிவித்து, கோப்புகளில் கையெழுத்து வாங்கும்வரை சோதனை நடைபெறுவதாக அர்த்தம். அதனால், ஒரு நாள் தொடங்கி பல மணிநேரம், பல நாட்கள் கூட அந்த சோதனை நடக்கலாம். கால வரையறை கிடையாது.

சோதனையில், ஆதாரங்கள் இருப்பதாக தெரியவந்தால், அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது இயக்குநருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி, பின்னர் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்படுவர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார். அதன்பின்னர், நீதிமன்ற காவலில் விசாரணையை தொடங்கலாம்.

 

ஜூன் 14ஆம் தேதி அதிகாலையில் அமலாக்கத்துறை காரிலேயே நெஞ்சுவலியால் துடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

ஜூன் 14ஆம் தேதி அதிகாலையில் அமலாக்கத்துறை காரிலேயே நெஞ்சுவலியால் துடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

முக்கிய சட்டங்களின் கீழ் சோதனை

அமலாக்கத்துறை மூன்று முக்கிய சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு சோதனைகளை நடத்துகிறது. இந்த மூன்று சட்டங்களில் உள்ள சரத்துகளை கொண்டு சோதனை செய்து, ஆதாரங்களைத் திரட்டி, சொத்துக்களை அல்லது பணத்தை மீட்கும் வேலையைச் செய்கிறது. அதேநேரம் சட்டமீறலுக்கான அபராதத்தையும் அமலாக்கத்துறை விதிக்கமுடியும் என்கிறார் நீதிபதி சந்துரு.

அந்த சட்டங்களின் விவரம்:

பணமோசடி தடுப்புச் சட்டம், 2002: இது பணமோசடி செய்வதைத் தடுக்கவும், பணமோசடி செய்வதிலிருந்து பெறப்பட்ட அல்லது சம்பந்தப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும், அதனுடன் தொடர்புடைய விஷயங்களுக்காகவும் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டமாகும். இதன் அடிப்படையில் வருமானத்திற்கான ஆதாரம், பணமோசடி நடந்தது எப்படி என்று சோதனை செய்வதற்கு அதிகாரம் உள்ளது.

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம், 1999 (FEMA): அந்நியச் செலாவணி சட்டங்கள் மற்றும் பொருளாதார சட்ட மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கும், சட்டத்தை மீறியதாக தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் மீது அபராதம் விதிக்கும் பொறுப்பு அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம், 2018 (FEOA): இந்தியாவிலிருந்து தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யமுடியும்.

https://www.bbc.com/tamil/articles/c97vexq0ypyo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை: வழக்கின் பின்னணி என்ன?

பொன்முடி
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை திங்கள்கிழமை தனது சோதனைகளை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சென்னை, விழுப்புரம் உட்பட நான்கு இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையின் ஏழு அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனைக்கான காரணங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.

செம்மண் குவாரி வழக்கு

எனினும், 2012ம் ஆண்டு பதியப்பட்ட செம்மண் குவாரி குறித்த வழக்குகள் உடன் தொடர்புடையதாக இந்த சோதனைகள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான செம்மண் எடுத்து, தமிழ்நாடு சிறு கனிம சலுகைச் சட்டத்தை மீறியதாக 2012ம் ஆண்டு வழக்கு பதிவு செயப்பட்டது.

2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த க.பொன்முடி, கனிமவளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் , விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் பூத்துறை என்ற இடத்தில் செம்மண் எடுப்பதற்கு உரிமம் வழங்கியதில் சட்ட விதிமீறல்கள் இருப்பதாக பொன்முடி மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் தனது மகன், மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவாக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக, 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்த போது, அவரது மகன் கவுதம சிகாமணி, மற்றும் ராஜ மகேந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு செம்மண் குவாரியின் உரிமத்தை வழங்கியுள்ளார். இதில் விதிமீறல்கள் இருப்பதாக வானூர் தாசில்தார் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குவாரியில் 20 அடி ஆழத்துக்கு மட்டுமே செம்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 90அடி ஆழம் வரை செம்மண் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

தமிழ்நாடு சிறு கனிம சலுகைச் சட்டட்தின் பிரிவு 36 அ, சுரங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் பிரிவு 4, ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

செம்மண் குவாரி அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆழமாக இருந்ததால் அதிக வளங்கள் சட்டத்துக்கு புறம்பாக சுரண்டப்பட்டுள்ளன என்பது குற்றாச்சாட்டாகும். 2007ம் ஆண்டு முதல் ஏற்பட்ட தொடர் சட்ட விதிமீறல்கள் காரணமாக, 2.64 லட்சம் லோடு லாரி செம்மண் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு 28.37 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவரது மகன் கவுதம சிகாமணி, தற்போது கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர், இந்த வழக்கில் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபராகும். இந்த வழக்கில் 2012ம் ஆண்டில் பொன்முடி கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு தடை வழங்க முடியாது- நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும் இதுவே.

இந்த நீதிமன்றத்தின் முன் இருக்கும் வழக்கு விசாரணையை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி, வழக்கில் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஜூன் 19ம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,

அளிக்கப்பட்ட அனுமதியை மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் இதுவரை கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை வைத்துப் பார்க்கையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்,வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்றங்களை செய்திருப்பதற்கான முகாந்திரம் இருக்கலாம் என தோன்றுகிறது என நீதிபதி தெரிவித்தார்.

மேலும், ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 19 (3) (c) வின் படி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்.

இந்த வழக்கின் விசாரணையை தள்ளுபடி செய்யக் கோரி அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரத்தில் அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்.
 
படக்குறிப்பு,

விழுப்புரத்தில் அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்.

கவுதம சிகாமணி மீது அமலாக்கத்துறை சோதனை

2020ம் ஆண்டு அமலாக்கத்துறை கவுதம சிகாமணிக்கு சம்பந்தமான இடங்களில் நடத்திய சோதனைகள் மூலம் 8.6 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவை அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்துக்கு விரோதமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் தற்போது அமலாக்கத்துறையின் சோதனைகள் நடைபெறுகின்றன.

கடந்த காலத்தில் பொன்முடி மீது வழக்குகள்

பொன்முடி

ஊழல், சொத்து குவிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு வழக்குகள் கடந்த காலங்களில் அமைச்சர் பொன்முடி மீது போடப்பட்டுள்ளன.

1996-2001ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, சென்னை சைதாப்பேட்டை ஶ்ரீநகர் காலனியில் 3ஆயிரத்து 630 சதுர அடி அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து 2004ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கிலிருந்து பொன்முடியும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒன்பது பேரும் சிறப்பு நீதிமன்றத்தால் இரண்டு வாரங்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் 2011ம் ஆண்டு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 1.36 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமானத்துக்கு மீறி குவித்ததாக பொன்முடி மீதும் அவரது மனைவி மீதும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கிலிருந்து வேலூர் நீதிமன்றம் அவரையும் அவரது மனைவியையும் கடந்த மாதம் விடுவித்தது.

ஆனால் செம்மண் குவாரி வழக்கு விசாரணைக்கு தடை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது அமலாக்கத்துறை சோதனையும் விசாரணையும் தொடர்கின்றன.

விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனையிட்டபோது
 
படக்குறிப்பு,

விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனையிட்டபோது

இந்த வழக்கில் சாட்டப்பட்டிருக்கும் குற்றங்களுக்கு ஆதாரங்கள் இல்லை என திமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணன் கூறுகிறார். “இந்த வழக்கில் 2012ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிறகு மீண்டும், சி வி சண்முகம் சட்டத்துறை அமைச்சராக இருந்த போது, 2020ம் ஆண்டு மறு விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட நிலம், கவுதம சிகாமணியின் சொந்த நிலமாகும். இந்த நிலத்தை இதற்கு முன்னால் வைத்திருந்தவர்களால் எடுக்கப்பட்டவையும் சேர்த்து தப்பாக கணக்கிடப்பட்டுள்ளது. எந்த வழக்காக இருந்தாலும் இரவு 3 மணி வரை விசாரணை செய்ய வேண்டிய அவசியம் என்ன? 72 வயதான அவரை மாலை வீட்டுக்கு அனுப்பி அடுத்த நாள் விசாரணைக்கு வர சொல்லலாமே.” என்று தெரிவித்தார்.

தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பண மோசடி வழக்குகள் தண்டிப்பதற்கு அல்லாமல் மிரட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்.

மேலும், மாநில அரசின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மத்திய அரசின் அமைப்புகள் பண மோசடி வழக்குகளாக பதிவு செய்கின்றன. இதனால் அந்த வழக்குகளில் நேரடியாக கைது செய்வது உள்ளிட்ட சில நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள முடிகிறது என்கிறார் அவர்.

“ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டால் பல நடைமுறைகளை ஒவ்வொரு கட்டத்திலும் பின்பற்றப்பட வேண்டியிருக்கும். ஆனால் பண மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் போது அதன் அணுகுமுறை வேறு விதமாக இருக்கும். தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பண மோசடி வழக்குகளை தண்டிப்பதற்கு அல்லாமல் மிரட்டுவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால், காவல்துறையினர் முன் கொடுக்கப்படும் வாக்குமூலம் இந்திய சாட்சிச் சட்டம் பிரிவு 25-ன் கீழ் ஏற்றுக் கொள்ளப்படாது. ஆனால் பண மோசடி வழக்கில் அது ஏற்றுக்கொள்ளப்படும். அந்த வாக்குமூலத்தை பொய் என கூற விரும்பினால் அதை நிரூபிப்பது குற்றம் சாட்டப்பட்டவரின் பொறுப்பாகும்.” என்கிறார் கே.எம்.விஜயன்.

https://www.bbc.com/tamil/articles/cg6ek4k9dpgo

  • கருத்துக்கள உறவுகள்

பொன்முடி யோக்கியமாக இருந்தாலும் ED வருமா?

எனக்குப் பிடித்த தமிழக அரசியல்வாதிகளில் பழ. கருப்பையாவும் ஒருவர்.
ஊழல் அரசியல்வாதிகளைப்  பற்றி அவரின், காட்டமான கருத்துக்களை கேட்டுப் பாருங்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.