Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணிப்பூர் எப்படி இருக்கிறது? 'இந்தியா' எம்.பி.க்கள் பார்த்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மணிப்பூர் சென்று திரும்பிய தமிழக எம்.பிக்கள்.

பட மூலாதாரம்,HANDOUT

 
படக்குறிப்பு,

சுராசந்த் பூரில் குகிகளைச் சந்தித்த பிறகு ஹெலிகாப்டரில் இம்பால் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் குழு, பிஷ்ணுபூர் என்ற மாவட்டத்தில் உள்ள மொய்ராங் என்ற கிராமத்தில் மெய்தெய்கள் தங்கியிருந்த முகாமுக்குச் சென்றது.

 

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு மெய்தெய், குகி ஆகிய இரு இனங்களைச் சேர்ந்தவர்களுமே அரசின் மீது நம்பிக்கை இழந்திருப்பதாக அங்கு சென்றுவந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அங்கே நிலவரம் எப்படி இருக்கிறது?

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஆய்வுசெய்ய எதிர்க்கட்சிக் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியின் எம்.பிக்கள் குழு, மணிப்பூர் சென்று திரும்பியுள்ளது. மொத்தம் 21 எம்பிக்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவில் தமிழ்நாட்டில் இருந்து தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் ஆகிய இருவரும் இடம்பெற்றிருந்தனர். ஜூலை 29 - 30 ஆகிய தேதிகளில் இந்த எம்பிக்கள் குழு மணிப்பூரில் நிலவரத்தைக் கேட்டறிந்தது.

 

அறுபதாயிரம் பேர் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சம்: கனிமொழி

மணிப்பூர் சென்று திரும்பிய தமிழக எம்.பிக்கள்.

பட மூலாதாரம்,KANIMOZHI/ TWITTER

 
படக்குறிப்பு,

அந்த மக்கள் இந்த விவகாரம் குறித்து என்ன நினைக்கிறார்கள், என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவும் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக சொல்கிறார் எம்.பி கனிமொழி

முதலில் இம்பாலுக்குச் சென்றிறங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் முதலில் குகிகள் தங்கியிருந்த சுராசந்த் பூருக்குச் சென்றனர். அங்குள்ள நிலைமைகள் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசிய கனிமொழி, மெய்தெய், குகி ஆகிய இரு தரப்பினருமே அரசின் மீது நம்பிக்கை இழந்திருப்பதாகத் தெரிவித்தார்.

"கலவரம் தொடங்கிய பிறகு, அவர்கள் நிலைமையைக் கேட்டறிவதற்கு யாருமே சென்று அவர்களைப் பார்க்கவில்லை. எதிர்க்கட்சியில் காங்கிரசைச் சேர்ந்த ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த சிலர் மட்டுமே பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். மூன்று மாதமாக அவர்களுக்கு இணையத் தொடர்பும் கிடையாது. ஆகவே, தங்களை எல்லோருமே மறந்துவிட்டார்கள் என நினைக்கிறார்கள். அவர்களிடம் பேசும்போது இந்த உணர்வும் வருத்தமும்தான் வெளிப்பட்டது.

ஆகவே நாங்கள் உங்களோடு நிற்கிறோம் என்ற நம்பிக்கையை உருவாக்க நினைத்தோம். அதுபோக, அங்குள்ள நிலைமை என்ன, அந்த மக்கள் இந்த விவகாரம் குறித்து என்ன நினைக்கிறார்கள், என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவும் இந்தப் பயணத்தை மேற்கொண்டோம்.

குகி, மெய்தெய் ஆகிய இன மக்கள் மட்டுமல்லாமல் அங்கு வசிக்கும் எல்லாத் தரப்பு மக்களுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 60,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வந்து தங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் பெரும அச்சம் இருக்கிறது" என்கிறார் கனிமொழி.

 

குகிகள் தனி மாநிலமோ, தனியான நிர்வாகமோ கேட்கிறார்கள்: திருமாவளவன்

மணிப்பூர் சென்று திரும்பிய தமிழக எம்.பிக்கள்.

பட மூலாதாரம்,THOL THIRUMAVALAVAN/ TWITTER

 
படக்குறிப்பு,

சம்பந்தப்பட்ட காவல்துறையினரைக்கூட இதுவரை இடைநீக்கம் செய்யவில்லை. இந்த நிலையில் தங்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என அங்குள்ள மக்கள் கேட்பதாக சொல்கிறார் திருமாவளவன்

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கான முகாம்களில் குடும்பம் குடும்பமாக தங்கியிருந்த நிலையில், சுராசந்த் பூரில் ஒரு தனியார் கல்லூரியில் தங்கியிருந்தவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்தது.

"இம்பாலில் சென்று இறங்கியவுடன் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உட்பட பலர் எங்களை வரவேற்றார்கள். அவர்கள் மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அவர்களுடைய இனத்தின் பாணியில் நெய்யப்பட்ட சால்வையை அணிவித்தார்கள். ஆனால், நாங்கள் சுராசந்த் பூரில் இறங்கியவுடன் அந்த சால்வைகளை அகற்றச்சொல்லிவிட்டார்கள். அந்த அளவுக்கு இரு தரப்பிற்கும் இடையில் வெறுப்பு வேரோடிப் போயிருக்கிறது. பிறகு அந்த மக்களைச் சென்று சந்தித்தோம்.

பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண்ணின் தாயாரை எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் பார்த்தோம். பாதிக்கப்பட்ட பெண்ணை பெண் எம்பிக்கள் மட்டும் சென்று சந்தித்தார்கள்.

மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர் படிப்பவர்கள் இனி இம்பாலில் படிக்க முடியாது. படிப்பைத் தொடர உதவ வேண்டும் என்று கேட்டார்கள். குகிகளைப் பொறுத்தவரை இனிமேல் மெய்தெய்களுடன் சேர்ந்து வாழ முடியாது எனக் கருதுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை தனி மாநிலமோ, தனியான நிர்வாகமோ கேட்கிறார்கள்" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.

வீடியோவில் இடம்பெற்ற பெண்ணின் தரப்பினர் முழுமையாக நம்பிக்கை இழந்திருப்பதாகக் கூறுகிறார் கனிமொழி.

"அவர்களது மன நிலை மிக மோசமாக இருந்தது. தங்களைக் காப்பாற்ற வேண்டும் என காவல்துறையிடம் கேட்டால், அவர்களே அந்த வன்முறைக் கும்பலிடம் பிடித்துக் கொடுத்ததை அவர்களால் இப்போதுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதையெல்லாம் தாண்டி இந்த விவகாரத்தை மிக துணிச்சலோடுதான் எதிர்கொள்ள வேண்டுமென அந்த மக்கள் கருதுகிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட காவல்துறையினரைக்கூட இதுவரை இடைநீக்கம் செய்யவில்லை. இந்த நிலையில் தங்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என கேட்கிறார்கள்" என்கிறார் அவர்.

 
மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஆய்வுசெய்ய எதிர்க்கட்சிக் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியின் எம்.பிக்கள் குழு, மணிப்பூர் சென்று திரும்பியுள்ளது.

பட மூலாதாரம்,HANDOUT

 
படக்குறிப்பு,

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஆய்வுசெய்ய எதிர்க்கட்சிக் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியின் எம்.பிக்கள் குழு, மணிப்பூர் சென்று திரும்பியுள்ளது.

என்ஆர்சியை செயல்படுத்தக் கோரிய மெய்தெய் மக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு மெய்தெய், குகி ஆகிய இருதரப்பையும் சந்தித்திருக்கிறது. ஆனால், இருதரப்பினரிடமும் இருந்த பரஸ்பர நம்பிக்கை மோசமடைந்திருக்கிறது என்கிறார் கனிமொழி. மேலும், அவர்கள் எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லையென்றும் அமைதியையே எதிர்பார்ப்பதாகவும் அவர் சொல்கிறார்.

"அவர்களிடம் சொல்வதற்கு தீர்வு ஏதும் கிடையாது. ஒரு அமைதியான சூழலை உருவாக்கி, எல்லோரையும் அழைத்துப் பேசி, ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென நினைக்கிறார்கள். யாரும் அவர்கள் முன்பு வாழந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லத் தயாராக இல்லை. வீடே எரிந்துவிட்ட நிலையில், இனிமேல் அங்கு சென்று எப்படிப் பாதுகாப்பாக இருக்க முடியுமென நினைக்கிறார்கள்.

இரு தரப்பினரிடையேயும் காயங்கள் ஆறாமல் இருக்கிறது. ஒருவர் மீது ஒருவருக்குக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அரசாங்கத்தின் மீதே நம்பிக்கை இல்லாத சூழலில், தங்களுக்கு எதிராக நிற்கிறார்கள் என்று கருதக்கூடிய மக்கள் மீது எப்படி நம்பிக்கை இருக்கும்?

காவல் நிலையத்திலிருந்து ஆயுதங்கள் எடுக்கும் அளவுக்கு சூழல் இருக்கிறது. அரசாங்கம் இந்த வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கு எதையும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்ற உணர்வு இருக்கிறது. இதெல்லாம் மாற வேண்டுமானால், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இப்போது மேற்கொண்டிருக்கும் அமைதி நடவடிக்கைகளுக்கு முதல்வரை தலைவராக நியமித்திருக்கிறார்கள். எந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் அவர் மீது நம்பிக்கை இல்லை. பல இடங்களில் போராட்டங்களில் அமர்ந்திருப்பவர்கள் "முதல்வரைக் காணவில்லை", "அமைச்சர்களைக் காணவில்லை" என எழுதப்பட்ட பதாகைகளைப் பிடித்தபடிதான் அமர்ந்திருக்கிறார்கள்.

சுராசந்த் பூரில் குகிகளைச் சந்தித்த பிறகு ஹெலிகாப்டரில் இம்பால் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் குழு, பிஷ்ணுபூர் என்ற மாவட்டத்தில் உள்ள மொய்ராங் என்ற கிராமத்தில் மெய்தெய்கள் தங்கியிருந்த முகாமுக்குச் சென்றது.

"அங்கு ஆங்கிலத்தில் ஒரு பெண் சிறப்பாகப் பேசினார். எங்களைத்தான் முதலில் சந்தித்திருக்க வேண்டும் என்றார் அவர். மேலும் குகிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். குகிகள் மியான்மரிலிருந்து வந்தவர்கள்; கசகசா செடியை வளர்க்கிறார்கள் என்றார்கள். குகி தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றெல்லாம் சொன்னார். என்ஆர்சியை செயல்படுத்த வேண்டும் என்றார். எல்லோரும் குகி இன பெண்கள் மட்டும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதுவதாகவும் தங்கள் இனப் பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார் அவர்" என்கிறார் திருமாவளவன்.

 

இரு தரப்பினரிடையேயும் நம்பிக்கையின்மை வேறோடிப் போயிருக்கிறது: திருமாவளவன்

மணிப்பூர் சென்று திரும்பிய தமிழக எம்.பிக்கள்.

பட மூலாதாரம்,THIRUMAVALAVAN/TWITTER

 
படக்குறிப்பு,

தன்னைப் பொறுத்தவரை, இருவேறு நாடுகளுக்குச் சென்றுவந்ததைப் போல இருக்கிறது என்கிறார் திருமாவளவன்

குகி இனத்தினருக்கு மட்டுமல்ல, மெய்தெய் இனத்தினருக்குமே மத்திய அரசு மீதும் மாநில அரசு மீதும் நம்பிக்கை இல்லை. அவர்களும் கைவிடப்பட்டதாகத்தான் நினைக்கிறார்கள். மெய்தெய் தரப்பினருக்கு இட ஒதுக்கீடு அளித்ததில் ஆரம்பித்த பிரச்சனை, அதையெல்லாம் தாண்டி எங்க சென்றுவிட்டது. எந்தத் தரப்பிற்கும் ஆதரவாக இல்லாமல், அரசு பேச்சு வார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என அந்த மக்கள் கருதுகிறார்கள்" என்கிறார் கனிமொழி.

தன்னைப் பொறுத்தவரை, இருவேறு நாடுகளுக்குச் சென்றுவந்ததைப் போல இருக்கிறது என்கிறார் திருமாவளவன். "ஒரே மாநிலத்தில் உள்ள இரு இடங்களுக்குத்தான் சென்றோம். ஆனால், இருவேறு நாடுகளுக்குச் சென்றுவந்ததைப் போல இருக்கிறது. அந்த அளவுக்கு இரு தரப்பினரிடையேயும் நம்பிக்கையின்மை வேறோடிப் போயிருக்கிறது. மத்திய - மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணம் இருக்கிறது" என்கிறார் அவர்.

மக்களைச் சந்தித்த பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆளுநர் அனுசூயா உய்கியைச் சந்தித்தி, தாங்கள் கண்டறிந்தவை குறித்துத் தெரிவித்திருக்கிறது. ஆளுநரும் மிகவும் கவலையடைந்தவராக காணப்பட்டதாகவும் இங்குள்ள இனக்குழுக்களின் தலைவர்களிடம் அரசு பேசினால்தான் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்ததாகவும் சொல்கிறார் கனிமொழி.

 

சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மணிப்பூர் வழக்கு

இதற்கிடையில், கடந்த ஜூலை 28ஆம் தேதி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. அந்தப் பிரமாணப் பத்திரத்தில் பின்வரும் தகவல்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, மணிப்பூர் வழக்கு சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உத்தரவிடும்படியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஆறு மாதங்களுக்கு வழக்கை முடிக்க உத்தரவிடும்படியும் உச்ச நீதிமன்றத்தைக் கோரியிருக்கிறது.

பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக நடத்தப்பட்ட விவகாரத்தில் இதுவரை ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, பாதுகாப்பு வழங்குவது கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்வது போன்றவற்றைச் செய்வதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய ஆயுதக் காவல் படையில் 124 கூடுதல் கம்பனிகள், ராணுவத்தினர் ஆகியோர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மூத்த பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தலைமையில் பாதுகாப்புப் படைகளுக்கான ஒருங்கிணைந்த கட்டளை மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் முதல் இனக் கலவரங்கள் நடந்துவருகின்றன. குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60,000 பேர் தாங்கள் வசித்துவந்த பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cjlwwwl4l9yo

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஏராளன் said:

மத்திய ஆயுதக் காவல் படையில் 124 கூடுதல் கம்பனிகள், ராணுவத்தினர் ஆகியோர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மூத்த பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தலைமையில் பாதுகாப்புப் படைகளுக்கான ஒருங்கிணைந்த கட்டளை மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது

55 ஆயிரம் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனராம்.

  • கருத்துக்கள உறவுகள்

வேறு என்ன? இன்னும் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. மோடி எண்ணெய் ஊற்றுகிறார் , முதலமைச்சர் நெருப்பு வைக்கிறார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூர்: எல்லை வகுத்து பிளவுபட்டு இருக்கும் மெய்தேய், குக்கி பகுதிகள் - கள நிலவரம்

மணிப்பூர் - மெய்தேய், குக்கி

பட மூலாதாரம்,MANISH JAIN/EPA-EFE/REX/SHUTTERSTOCK

கட்டுரை தகவல்
  • எழுதியவர், திவ்யா ஆர்யா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் செல்போனின் இடையூறு இல்லாமல் நீல வானத்தை பார்க்கவும், வீசும் காற்றில் உள்ள புத்துணர்ச்சியை உணரவும் உங்களால் முடியும்.

மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கிய குக்கி மற்றும் மெய்தேய் சமூகங்களுக்கு இடையேயான கலவரத்தைத் தொடர்ந்து என் மனதில் நிலவும் இடைவிடாத வன்முறை பயம் மற்றும் குழப்பங்களுக்கு முற்றிலும் மாறாக இம்பாலில் ஒரு நிசப்தமான சூழல் நிலவுகிறது.

இந்த மௌனத்தை நீங்கள் அமைதி என்று தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.

மணிப்பூரில் செல்போன் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், எப்போது, எந்த மூலையில், எந்த சமூகத்தினர் வீட்டை எரித்தனர், போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, எந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நம்மை எச்சரிக்க எந்த வசதியும் அங்கு கிடையாது.

மணிப்பூர் - மெய்தேய், குக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

எரிந்து காணப்படும் மால்

ஒரு நாளைக்கு தாங்கும் அளவுக்கு மட்டுமே செல்போனின் பேட்டரியில் சார்ஜ் இருந்தது. பெரும்பாலான நேரங்களில் அதன் ஸ்கிரீனை அணைத்தே வைத்திருந்தேன்.

இம்பாலின் தெருக்களில் பகல் நேரங்களில் ஒரு சில வாகனங்கள் செல்கின்றன, சந்தையில் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது ரோந்து செல்லும் போலீஸ் வாகனம் சூழல்நிலை இயல்பாக இருக்கிறது என்பது போன்ற மாயை ஏற்படுத்துகிறது.

முற்றிலும் எரிந்து சாம்பலான நிலையில் உள்ள மிகப் பெரிய கட்டிடத்தை கடந்து நாங்கள் சென்றோம். இந்த கட்டிடம் முன்பு வணிக வளாகமாக இருந்துள்ளது. தற்போது அதன் உள்ளே இருந்த கடைகள் எல்லாம் எரிந்துவிட்டன. பள்ளி கட்டிடங்களும் இதே நிலையில்தான் உள்ளன. மே மாதம் வெடித்த வன்முறையின் இருண்ட அடையாளங்களாக அவை உள்ளன.

பல இடங்களில் நிவாரண முகாம் என்று பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில அரசாங்கத்தாலும், சில அரசியல் கட்சிகளாலும், சில சமூக அமைப்புகளாலும் உருவாக்கப்பட்டுள்ளன.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள்ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி கற்கவும் வாய்ப்பு இல்லை.

மணிப்பூர் - மெய்தேய், குக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முகாமில் தங்கியுள்ளவர்கள்

மெய்தேய்- குக்கி சமூகத்தினர் இடையே ஏற்பட்டுள்ள பிளவு

பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்தேய் சமூகத்தினருக்கும் வன்முறைக்கு பிறகு மலைப்பாங்கான இடங்களுக்கு சென்றுவிட்ட குக்கி சமூகத்தினருக்கும் இடையே ஆழமான பிளவு தோன்றியுள்ளது. பள்ளத்தாக்கிற்கும் மலை சார்ந்த பகுதிகளுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் தற்போது கள யதார்த்தமாக உள்ளது.

இம்பால் பள்ளத்தாக்கு மெய்தேய் சமூகத்தினரின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது. பெரும்பாலான முக்கிய பள்ளிகள்-கல்லூரிகள்-பல்கலைக்கழகங்கள், அரசு வேலைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் தலைநகரிலேயே இருப்பதால் குக்கி சமூகத்தினரும் இங்கு வாழத் தொடங்கினர்.

தற்போது வன்முறைக்கு பிறகு அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கை விட்டு மலைப் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள சில கிராமங்களில் வசித்துவந்த மெய்தேய் சமூகத்தினர் அங்கிருந்து வெளியேறி இம்பாலில் உள்ள நிவாரண முகாம்களில் வசிக்கத் தொடங்கியுள்ளனர்.

மணிப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இம்பால் பள்ளத்தாக்கைச் சுற்றி ஒரு எல்லை வரையப்பட்டுள்ளது. மெய்தேய் சமூகத்தினர் மலைகளுக்குச் செல்ல முடியாது, குக்கி சமூகத்தினர் பள்ளத்தாக்குக்கு வர முடியாது.

மணிப்பூர் - மெய்தேய், குக்கி
 
படக்குறிப்பு,

எரிந்த நிலையில் காணப்படும் வாகனம்

மணிப்பூரில் முஸ்லிமாக இருப்பது பாதுகாப்பானது

மெய்தேய் மற்றும் குக்கி சமூகத்தினரிடையே உள்ள இந்த இடைவெளியை இரு சமூகங்களுடனும் நட்பு அல்லது பகை இல்லாதவர்களால் மட்டுமே கடக்க முடியும்.

இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மெய்தேய் சமூகத்தினர் வசிக்கும் பகுதி மற்றும் கிறிஸ்தவர்கள் அதிகளவு வசிக்கும் குக்கி சமூத்தினர் வசிக்கும் பகுதிக்கும் இடையே பயணம் செய்யும் மக்கள் இஸ்லாமிய வாகன ஓட்டிகளின் உதவியை அதிகம் நாடுகின்றனர். மணிப்பூரில் முஸ்லிமாக இருப்பது பாதுகாப்பானது.

குக்கி பகுதி மக்களை சந்திக்க முதல்வர் பிரேன் சிங் இதுவரை செல்லவில்லை. அவர் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மணிப்பூரை பூர்வீகமாக கொள்ளாத ஆளுநர் அனுசுயா உகே மெய்தேய் மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளிலும் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்றுள்ளார். அவர் பயணிக்கும் வாகனங்களின் ஓட்டுநர்களும் பள்ளத்தாக்கு மற்றும் மலையின் எல்லையில் மாற்றப்படுகிறார்கள்.

மணிப்பூர் - மெய்தேய், குக்கி
 
படக்குறிப்பு,

பகலில் வாகன நடமாட்டம் உள்ளது

மேசைக்கு அடியில் வெடிகுண்டு

குக்கி மற்றும் மெய்தேய் சமூகங்களுக்கு இடையிலான எல்லை என்பது ஒரு கோடு அல்ல, இது பல கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். மெய்தேய் பகுதியிலிருந்து வெளியேறுவதற்கும் குக்கி பகுதிக்குள் நுழைவதற்கும் இடையே உள்ள இந்த தூரத்தில் பல சோதனைச் சாவடிகள் உள்ளன.

முதல் சோதனைச் சாவடியில் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், கடைசி சோதனைச்சாவடியில் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இடையில் ராணுவம் மற்றும் காவல்துறையினரை உள்ளடக்கிய சோதனைச் சாவடிகள் உள்ளன.

அப்பகுதி மக்கள் சாக்கு மூட்டைகள், சில இடங்களில் கம்பிகள், பெரிய குழாய்கள் கொண்டு வழிகளை அடைத்துள்ளனர். சோதனைச் சாவடியில் நின்று கொண்டிருப்பவர்கள் ஆயுதங்களையும் வைத்துள்ளனர்.

வாகனத்தில் ஆயுதம் உள்ளதா என சோதனைச்சாவடியில் சோதனை செய்யப்படுகிறது. வாகன ஓட்டுநரிடம் அடையாள அட்டை கேட்கப்படுகிறது. அவரது ஜாதி - மதம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. எல்லை தாண்டுவதற்கு அவருக்கு உரிமை உள்ளதா இல்லையா என்பதை இந்த தகவலை வைத்து முடிவு செய்கின்றனர்.

இருபுறமும் எல்லைகளில் ஆயுதங்களுடன் அந்தந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அமைத்துள்ள சோதனைச் சாவடிகள் வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. அரசு இருந்தும் இல்லாமல் உள்ளது என்பதற்கு இந்த சோதனைச்சாவடிகளே சாட்சிகளாக இருக்கின்றன.

கிராமத்தில் வசிப்பவர்கள், நகரத்தில் வசிப்பவர்கள் என அனைவரிடமும் ஆயுதங்கள் உள்ளன. அவை மலிவான விலையில் கிடைக்கின்றன. தங்களின் பாதுகாப்பிற்காக வீடுகளிலும் அலுவலகங்களிலும் அவர்கள் ஆயுதங்களை வைத்துள்ளனர்.

தலைநகர் இம்பாலில், ஒரு நபர் தனது மேசைக்கு அடியில் இருந்த வெடிகுண்டை மிக எளிதாகக் எடுத்துக் காட்டினார்.

தற்காப்புக்காக இதனை வைத்துள்ளதாக அவர் கூறினார். அருகில், அவரது சிறுமிகள் பொம்மை துப்பாக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

மணிப்பூர் - மெய்தேய், குக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்த கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர். எரிந்த கட்டிடங்களில் தற்போது ராணுவ வீரர்கள் வசித்து வருகின்றனர்.

வன்முறை குறித்த அச்சம்

எல்லைகளில் மட்டுமே அதிகப்பட்ச பதற்றம் நிலவுகிறது. இம்பால் பள்ளத்தாக்கின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் மலைகளுக்குச் செல்லும் சாலைகளின் இருபுறமும் எரிந்த வீடுகளும், உடைந்த வாகனங்களும் சிதறிக் கிடக்கின்றன.

இந்த கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர். எரிந்த கட்டிடங்களில் தற்போது ராணுவ வீரர்கள் வசித்து வருகின்றனர்.

ஒவ்வொரு மாலை வேளையிலும், இரு சமூகத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தொடங்குகிறது.

சில சமயங்களில் மக்கள் கொல்லப்படுவதும், சில சமயங்களில் காலியாக கிடந்த கடைகள் தீப்பிடித்து எரிகின்றன. காய்கறிகள், பழங்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் நடமாட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை அச்சத்தின் மத்தியில், மணிப்பூர் அரசு எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளையும் அரசு அலுவலகங்களையும் திறக்க அறிவுறுத்தியுள்ளது.

இம்பால் பள்ளத்தாக்கில் சில பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன, ஆனால் மிகச் சில பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

மலைப் பகுதிகளில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தன்னார்வலர்கள் அங்குள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று கல்வி கற்பிக்கிறார்கள், ஆனால் வீடு இல்லாதபோது படிப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கிறது.

மணிப்பூர் - மெய்தேய், குக்கி

பட மூலாதாரம்,REUTERS

வேலை செய்யாவிட்டால் சம்பளம் கிடையாது என்று அரசு உத்தரவிட்ட பிறகு, மெய்தேய் சமூகத்தினர் மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பள்ளத்தாக்கில் உள்ளன. இதனால் தங்களால் வேலைக்கு செல்ல முடியாது என்று குக்கி சமூகத்தினர் கூறுகின்றனர்.

இரு சமூகத்தினருக்கும் இடையே பிரிவினையின் கோடு மிகவும் ஆழமாக மாறியுள்ளதால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வாழ்க்கை, வேலைகள், வணிகம் ஆகியவற்றை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதற்கு பதில் காண முடியவில்லை.

சூரியன் மறைந்தவுடன் எல்லா இடங்களும் வெறிச்சோடிவிடுகின்றன. மணிப்பூரில் இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

அங்கு இருட்டு என்பது இரவில் மட்டுமல்ல. மனக்கசப்பு, வெறுப்பு போன்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன, அமைதியைப் பற்றி பேசுபவர்கள் தங்கள் சமூகமே தம்மீது கோபப்பட்டு விடுமோ என்று பயப்படுகிறார்கள்.

மொபைல் இணையச் சேவை துண்டிக்கப்பட்டிருந்தாலும் இரு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ அனைவரின் செல்போனில் உள்ளது.

வை-ஃபை மூலமும், இணையம் இல்லாமல் வீடியோக்களை அனுப்பும் செயலிகள் மூலமும் இது தொடர்பான வீடியோக்கள் பரவுகின்றன.

அதனுடன் கோபமும், சோகமும், அநீதி உணர்வும் பரவுகிறது. மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பிளவு எல்லையை தடையின்று கடப்பது இவை மட்டுமே.

https://www.bbc.com/tamil/articles/cndk85jz56eo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.