Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17 Apr, 2025 | 04:24 PM

image

பூமியிலிருந்து தொலைதூரத்திலுள்ள  நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கோளொன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்தும்  கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

பூமியிலுள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள்  இந்த கோளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

இந்த முடிவுகளை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக தரவுகள் அவசியம் என  ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் குழுவினரும் வானியல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.

உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

17 Apr, 2025 | 04:24 PM

image

பூமியிலிருந்து தொலைதூரத்திலுள்ள  நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கோளொன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்தும்  கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

பூமியிலுள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள்  இந்த கோளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

இந்த முடிவுகளை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக தரவுகள் அவசியம் என  ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் குழுவினரும் வானியல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.

உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு  | Virakesari.lk

தயவு செய்து அந்தக் கோளுக்குப் போகக்கூடிய வழிவகைகளைப் பற்றியும் அறியத்தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பூமி தவிர்த்து இன்னொரு தொலைதூர கோளில் உயிர்கள் உள்ளதா? - சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

கே2-18பி கோள், K2-18b planet

பட மூலாதாரம்,CAMBRIDGE UNIVERSITY

படக்குறிப்பு,இங்கு உயிர்கள் இருக்கலாம் என கூறப்படும் கே2-18பி கோளின் சித்தரிப்பு

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பல்லப் கோஷ்

  • பதவி, அறிவியல் செய்தியாளர்

  • 56 நிமிடங்களுக்கு முன்னர்

மற்றொரு நட்சத்திரத்தை சுற்றிவரும், உயிர்கள் வாழக்கூடிய தொலைதூர உலகம் இருப்பதற்கான புதிய, ஆனால் உறுதியற்ற ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கே2-18பி (K2-18b) எனும் கோளின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு, பூமியில் உள்ள எளிய சிறிய உயிரினங்கள் மட்டுமே உற்பத்தி செய்யும் மூலக்கூறுகள் அங்கு இருப்பதற்கான அறிகுறிகளை கண்டுபிடித்துள்ளனர்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் உயிர்களுடன் தொடர்புடைய வேதிப்பொருட்கள் அந்த கிரகத்தில் கண்டுபிடிக்கப்படுவது இது இரண்டாவது முறை. இந்த கண்டுபிடிப்பு மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.

ஆனால், இந்த முடிவுகளை உறுதி செய்ய இன்னும் அதிக தகவல்கள் தேவை என, அந்த ஆய்வுக் குழுவினரும் சுயாதீன வானியல் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

விரைவிலேயே தாங்கள் உறுதியான ஆதாரத்தைப் பெறுவோம் என தான் நம்புவதாக, கேம்பிரிட்ஜ் வானியல் பல்கலைக்கழகத்தில் உள்ள தனது ஆய்வகத்தில் இந்த ஆய்வை வழிநடத்தும் பேராசிரியர் நிக்கு மதுசூதன் தெரிவித்தார்.

"அந்த கோளில் உயிர்கள் இருப்பதற்கான இதுவரையிலான வலுவான ஆதாரமாக இது உள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் இதை உறுதிப்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளது."

கே2-18பி கோள் எப்படிப்பட்டது?

கே2-18பி கோள் பூமியைவிட இரண்டரை மடங்கு பெரிது, பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் அல்லது 700 டிரில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. எந்தவொரு மனிதரும் தன்னுடைய வாழ்நாளில் பயணிப்பதை விட அதிக தொலைவு இதுவாகும்.

சிறிய சிவப்பு நட்சத்திரத்தின் வழியாக இந்த கோள் சுற்றி கடந்து செல்லும்போது, அதன் மீது படும் நட்சத்திரத்தின் ஒளி மூலம், கோளின் வேதியியல் கலவையை ஆய்வு செய்யும் அளவுக்கு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வலுவானது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,பல நூறு டிரில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள கோள்களின் கலவையை ஆய்வு செய்யும் அளவுக்கு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வலுவானது

உயிர்களுடன் தொடர்புடைய குறைந்தது இரண்டு மூலக்கூறுகளின் வேதியியல் அடையாளங்கள் அதன் வளிமண்டலத்தில் இருப்பதாக கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது, அதில் ஒன்று டைமெத்தைல் சல்ஃபைடு (DMS), மற்றொன்று டைமெத்தைல் டைசல்ஃபைடு (DMDS). பூமியில் இந்த வாயுக்கள் கடலில் உள்ள ஃபைட்டோபிளாங்டன் மற்றும் பாக்டீரியாக்கள் மூலம் உற்பத்தியாகிறது.

ஒருமுறை கண்காணிக்கப்பட்ட போதே இந்தளவுக்கான வாயு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து தான் ஆச்சர்யப்பட்டதாக பேராசிரியர் மதுசூதன் தெரிவித்தார்.

'ஏராளமான உயிர்கள்'

"பூமியில் இந்த வாயுவின் அளவை விட அக்கோளின் வளிமண்டலத்தில் ஆயிரம் மடங்கு அதிகம் உள்ளதாக நாங்கள் கண்டறிந்துள்ளோம்," என அவர் தெரிவித்தார்.

"எனவே, உயிர்களுடனான தொடர்பு உண்மையாக இருந்தால், இந்த கோளில் ஏராளமான உயிர்கள் இருக்கும்," என்றும் அவர் கூறுகிறார்.

பேராசிரியர் மதுசூதன் மேலும் கூறுகையில், "கே2-18பி கோளில் உயிர்கள் இருப்பதை உறுதிப்படுத்தினால், அது இந்த விண்மீன் திரளில் உயிர்கள் இருப்பது மிகவும் பொதுவான ஒன்று என்பதை உறுதிப்படுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும்," என்றார்.

பிபிசியின் ரேடியோ 5 லைவ் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பேசிய அவர், "அறிவியலுக்கு இது மிக முக்கியமான தருணம், ஆனால் ஒரு உயிரினமாக இது நமக்கும் மிக முக்கியமானது" என்றார்.

"இதிலிருந்து ஒரு உதாரணம் கிடைத்தால், இந்த பிரபஞ்சம் எல்லையற்றதாக இருந்தால், இன்னும் பல கோள்களில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது."

கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் விரிவுரையாளரும் இந்த ஆய்வில் பங்கேற்றவருமான முனைவர் சுபிர் சர்கர், இக்கோளில் கடல் இருக்கலாம் என்றும் அதில் ஏராளமான உயிர்கள் இருப்பதற்கான சாத்தியம் அதிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் பரிந்துரைக்கிறார், எனினும், "இது உறுதியாக தெரியவில்லை," என அவர் விஞ்ஞானிகளை எச்சரிக்கிறார்.

மற்ற கோள்களிலும் உயிர்கள் உள்ளதா என்பதற்கான ஆய்வை தங்கள் குழு தொடர்ந்து மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

இந்த தருணத்தில் "ஒருவேளை", "ஆனால்" என நிச்சயமற்ற சூழல் இருப்பதை பேராசிரியர் மதுசூதனின் குழு வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறது.

ஆய்வு முடிவுகளில் சந்தேகம்

முதலாவதாக, தற்போது கண்டுபிடிக்கப்பட்டது, ஒரு கண்டுபிடிப்பு என கூறும் அளவுக்கான தரத்துடன் இல்லை.

அதற்கு, தங்களுடைய ஆய்வு முடிவுகள் 99.99999% அளவுக்கு சரிதான் என்றும் இது எதிர்பாரா வெற்றி அல்ல என்பதையும் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

இதை அறிவியல் மொழியில் 'ஃபைவ் சிக்மா' (five sigma) முடிவு என்கின்றனர்.

இந்த சமீபத்திய முடிவுகளில் மூன்று சிக்மாக்கள் மட்டுமே உள்ளன அல்லது 99.7% மட்டுமே சரியாக உள்ளது. இது அதிகப்படியானது என தோன்றலாம், ஆனால் அறிவியல் சமூகத்தை சமாதானம் செய்ய இது போதுமானது அல்ல. ஆனால், 18 மாதங்களுக்கு முன்பு அக்குழு அடைந்த ஒரு சிக்மா அல்லது 68% என்பதை விட இது மிகவும் அதிகமானது, அச்சமயத்தில் இதுகுறித்து மிகுந்த சந்தேகம் எழுந்தது.

கே2-18பி கோள், K2-18b planet

படக்குறிப்பு,கே2-18பி கோள் குறித்து பிபிசியின் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது

ஃபைவ் சிக்மா முடிவை கேம்பிரிட்ஜ் குழு அடைந்தாலும், அது அந்த கோளில் உயிர்கள் இருப்பதற்கான முடிவான ஆதாரம் அல்ல என்கிறார், எடின்பரோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஸ்காட்லாந்தின் புகழ்பெற்ற வானியல் ஆய்வாளருமான கேத்தரீன் ஹேமன்ஸ் கூறுகிறார், இவர் அந்த ஆய்வுக்குழுவை சேர்ந்தவர் அல்ல.

"அவ்வளவு உறுதியான ஆதாரம் இருந்தாலும், அந்த வாயு எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி உள்ளது," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பூமியில் இந்த வாயுக்கள் கடல்வாழ் உயிரினங்களால் உருவாகின்றன. ஆனால், மிக நேர்த்தியான தரவுகள் இருந்தபோதிலும், அப்படிப்பட்ட அந்நிய உலகில் அந்த வாயுக்கள்தான் உயிர்கள் இருப்பதற்கான தோற்றுவாயாக இருக்கும் என்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில், இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான விநோதமான விஷயங்கள் நடக்கும். மேலும், இந்த கோளில் அந்த மூலக்கூறுகள் உற்பத்தியாகும் அளவுக்கு என்ன மாதிரியான புவியியல் செயல்பாடுகள் நடக்கின்றன என்பது நமக்கு தெரியாது."

சந்தேகங்களுக்கு ஆய்வுக்குழுவின் பதில்

இதை கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழுவும் ஒப்புக்கொள்கிறது. இக்குழு மற்ற குழுவினருடன் சேர்ந்து டி.எம்.எஸ் மற்றும் டி.எம்.டி.எஸ் ஆகிய வாயுக்கள் உயிரற்ற ஒன்றால் உற்பத்தியாகக் கூடுமா என்பதை ஆய்வகத்தில் பரிசோதித்து வருகின்றனர்.

"இது எதிர்பாரா வெற்றியாக இருக்க 0.3% இருக்க வாய்ப்புள்ளது," என பேராசிரியர் மதுசூதன் கூறுகிறார்.

மற்றொரு கோள் ஒன்றில் உயிர்கள் இருப்பது உண்மையாக இருந்தால் அதை கூறுவது, "மிகப்பெரிய கூற்று," என அவர் பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் தெரிவித்தார். "எனவே அதை நாங்கள் முழுமையாக கவனிக்கவும் ஆராயவும் நினைக்கிறோம், இது எந்தவிதத்திலும் எதிர்பாரா வெற்றியாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதற்கான ஆதாரங்களை திரட்ட விரும்புகிறோம்." என்றார்.

"இது ஒரிரு ஆண்டுகளில் சாத்தியம்" என்று அவர் கூறினார்.

கே2-18பி பற்றிய தரவுகள் குறித்து மாற்று கருத்துக்கள் மற்றும் விளக்கங்களை மற்ற ஆய்வுக்குழுக்கள் முன்வைக்கின்றன. டி.எம்.எஸ் மற்றும் டி.எம்.டி.எஸ் வாயுக்கள் குறித்து மட்டுமல்லாமல், அக்கோளின் கலவை குறித்தும் தீவிரமான அறிவியல் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அக்கோளில் பெரியளவிலான கடல் இருக்கும் என்பதை பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் யூகிப்பதற்கான காரணம், அதன் வளிமண்டலத்தில் அம்மோனியா வாயு இல்லாததுதான். மிகப்பரந்த அளவிலான நீருக்கு அடியில் அம்மோனியா உறிஞ்சப்படும் என்பதுதான் அவர்களின் கருதுகோள்.

கே2-18பி கோள், K2-18b planet

படக்குறிப்பு,இதுகுறித்து இன்னும் ஓரிரு ஆண்டுகளில் உறுதியான ஆதாரங்கள் கிடைக்கலாம் என பேராசிரியர் மதுசூதன் நம்புகிறார்

ஆனால், உயிர்கள் வாழ்வதைத் தடுக்கும் வகையில் அக்கோளில் உருகிய பாறையும் இருக்கலாம் என்றும் விவரிக்கிறார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆலிவர் ஷார்ட்டில்.

"மற்ற நட்சத்திரங்களை சுற்றிவரும் கோள்கள் குறித்து நாம் அறிந்தவை எல்லாம், அதன் வளிமண்டலத்தில் கடந்து செல்லும் சிறு ஒளியின் வாயிலாகத்தான். எனவே, உயிர்கள் இருப்பதற்கான அறிகுறிகளை மட்டுமல்லாமல், மற்ற அனைத்தையும் ஆராய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது," என்றார் அவர்.

"கே2-18பி குறித்த அறிவியல் விவாதம் இன்னும் அந்த கோளின் அமைப்பு குறித்தே உள்ளது."

நாசாவின் ஏமெஸ் ஆய்வு மையத்தை சேர்ந்த டாக்டர் நிக்கோலஸ், இந்த்க தகவல்கள் குறித்து மற்றொரு விளக்கத்தை அளிக்கிறார். எந்தவொரு மேற்பரப்பும் இல்லாத, ஒரு சிறிய வாயு அமைப்பு என பரிந்துரைக்கும் ஒரு ஆய்வை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த இரு மாற்று விளக்கங்களும், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியிலிருந்து கிடைத்தத் தகவல்களுடன் முரணானதாக உள்ளது என, மற்ற குழுக்கள் அதற்கு சவால் விடுக்கின்றனர்.

எச்சரிக்கையுடன் அணுக வேண்டுமா?

பிபிசியின் தி ஸ்கை அட் நைட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேராசிரியர் கிறிஸ் லின்டாட், பேராசிரியர் மதுசூதன் குழு மீது தனக்கு "மிகப்பெரிய மரியாதை" இருப்பதாகவும் ஆனால் அந்த ஆய்வை தான் எச்சரிக்கையுடன் அணுகுவதாகவும் தெரிவித்தார்.

"உயிர்கள் குறித்தத் தேடுதலில் இது (முக்கிய) தருணம் என கூறுவது குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற தருணங்கள் முன்பும் இருந்ததுண்டு," என அவர் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

"இந்த பிரபஞ்சத்தில் என்ன உள்ளன என்பது குறித்து புரிந்துகொள்ள முயற்சிக்கும் பெரும் முயற்சிகளில் ஒன்று," என்றே இந்த ஆய்வு பார்க்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அறிவியலின் மிகப்பெரிய கேள்விகளுள் ஒன்றுக்கு பதிலளிக்க இன்னும் பெரும் வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்பதை பேராசிரியர் மதுசூதன் ஏற்றுக்கொண்டார். ஆனால், தானும் தன்னுடைய குழுவினரும் சரியான வழியில் பயணிப்பதாக நம்புவதாக அவர் கூறினார்.

"இப்போதிலிருந்து பல பத்தாண்டுகள் கழித்து பார்க்கும்போது உயிர்கள் உள்ள மற்றொரு பிரபஞ்சம் அடையக் கூடியதுதான் என்பதை உணர்ந்து, அங்கீகரித்த தருணமாக நாம் இதைத் திரும்பிப் பார்ப்போம்," என்றார் அவர்.

"இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கின்றோமா என்ற அடிப்படையான கேள்விக்கு நாம் பதில் சொல்ல முடியும் என்ற வகையில் இது மிக முக்கியமான புள்ளி."

இந்த ஆய்வு தி ஆஸ்ட்ரோஃபிசிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8epxen8keeo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் இந்த பூமியை அதில் வாழும் உயிரினங்களை காப்பாற்ற ஏதாவது கண்டுபிடியுங்கள். அதன் பிற்பாடு உயிரினங்கள் வாழும் கிரகங்களை கண்டுபிடியுங்கள்.

தினசரி உயிர் அழிவுகள் நடக்கும் காஸாவை பாதுகாக்க வக்கில்லை. அண்ட அகிலத்தில் தண்ணீர் ஆராய்ச்சிகளுக்கு மட்டும் குறைவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

1,127 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் உள்ள கோளில் உயிர் அறிகுறி தெரிந்தது எப்படி? விஞ்ஞானி நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி

K2-18b புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று தெரிய வந்தது எப்படி? நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி

படக்குறிப்பு,வான் இயற்பியல் மற்றும் புறக்கோள் அறிவியல் விஞ்ஞானி பேராசிரியர் நிக்கு மதுசூதன்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.சுபகுணம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

K2-18b.

பூமியை விட இரண்டரை மடங்கு பெரியதும், பூமியிலிருந்து 700 டிரில்லியன் மைல்கள் (சுமார் 1,127 லட்சம் கோடி கி.மீ. ) தொலைவில் அமைந்துள்ளதுமான இந்தப் புறக்கோள்தான் இன்று உலகளவில் பேசுபொருளாக இருக்கிறது. இந்தப் புறக்கோளில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் 99.7% இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அதுவே, இந்தப் புறக்கோள் (சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்) குறித்து இன்று அதிகம் பேசப்படுவதற்குக் காரணம். இந்தப் புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதும் அளவுக்கு அப்படி என்ன கிடைத்தது? இந்தப் புறக்கோளில் என்ன இருக்கிறது?

இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட குழுவை வழிநடத்தியவரும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வான் இயற்பியல் மற்றும் புறக்கோள் அறிவியல் விஞ்ஞானியுமான பேராசிரியர் நிக்கு மதுசூதன், தனது கண்டுபிடிப்புகள் குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். அவரது நேர்காணல் இங்கே.

பேரண்டத்தில் உயிர்களின் இருப்பு

K2-18b புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று தெரிய வந்தது எப்படி? நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கேள்வி: விண்வெளி அறிவியல் மீதும் குறிப்பாக பூமியைத் தாண்டி வாழும் உயிர்களுக்கான தேடல் மீதும் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? உங்கள் இளம் வயதில் இதன் மீது ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது எது?

பதில்: குறிப்பாக விண்வெளி அறிவியல் என்றில்லை. ஆனால், அடிப்படை அறிவியல் மீது மிகவும் ஆர்வமாக இருந்தேன். அணு இயற்பியல், துகள் இயற்பியல் அல்லது நுண் இயற்பியல், வான் இயற்பியல் அனைத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆகவே, இவற்றில் புதிய துறைகள் உருவாக வாய்ப்புள்ளவற்றை பகுப்பாய்வு செய்து கொண்டிருந்தேன்.

அப்படி தேடிக் கொண்டிருக்கும் போது, வான் இயற்பியலில் கருந்துளை பற்றிக்கூட ஆய்வு செய்துள்ளேன். உயர் ஆற்றல் வான் இயற்பியலில் ஆய்வு செய்யத் தொடங்கியிருந்தபோது புறக்கோள்கள் மீதான ஆர்வம் அதிகரித்தது. அப்படித்தான் இந்தத் துறைக்கு மாறினேன்.

கேள்வி: உங்கள் அறிவியல் ஆய்வுப் பயணத்தில், வேற்றுக்கிரகங்களில் உயிர்கள் இருக்கலாம் என்பது பற்றிய பார்வை எப்படி மாறியுள்ளது? அது உண்மையில் இருக்கலாம் என்று எப்போதுமே நம்பினீர்களா?

பதில்: தரவுகளின்படி பார்த்தால், ஆயிரக்கணக்கான புறக்கோள்கள் இருப்பது நமக்குத் தெரியும். பிற நட்சத்திரங்களைச் சுற்றியும் கோள்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை வைத்துப் பார்த்தாலும், அதில் எங்காவது உயிர்கள் இருக்கலாம் என்று கணிப்பது மிக எளிது. அதற்கான ஆதாரம் நம்மிடம் இல்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, சூரிய மண்டலத்திற்கு வெளியே கோள்கள் இருப்பது பற்றி நமக்குத் தெரியாது. சூரிய மண்டலம் தனித்துவமானது என்று மக்கள் கருதினர். வேறு கோள்கள் இல்லை என நினைத்தனர். ஆனால், இப்போது பெரும்பாலான நட்சத்திரங்களைச் சுற்றி கோள்கள் இருக்கலாம் என்று நமக்குத் தெரியும்.

K2-18b புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று தெரிய வந்தது எப்படி? நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

இந்த எண்ணிக்கையை வைத்தே, அதில் எங்காவது உயிர் இருக்கலாம் என யூகிக்கலாம். இன்னும் அதற்கான ஆதாரம் நம்மிடம் இல்லை. ஆனால், இந்தத் துறையில் இதுவரை நான் செய்த ஆய்வுகள், அவதானித்த தரவுகள் அந்த ஊகத்திற்கு வலு சேர்க்கின்றன.

அதுமட்டுமின்றி, நம்மிடம் அதைக் கண்டறிய உதவும் தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. அது மிக முக்கியமான விஷயம். ஒருவேளை பிரபஞ்சத்தில் வேறு எங்காவது உயிர்கள் இருக்கலாம். ஆனால், அதைக் கண்டறியும் தொழில்நுட்பம் இல்லையென்றால், அப்படி யூகிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை. அதற்கு எந்த ஆதாரமும் இருக்காது.

இப்போது கிடைத்துள்ள ஆய்வு முடிவு முக்கியமானது. இது மிகப்பெரிய தருணம். மனித வரலாற்றில் முதன்முறையாக, ஒரு குறிப்பிட்ட கோளில் உயிர் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய உதவும் திறன் நம்மிடம் இருக்கிறது. அதன் உதவியுடன் ஒரு கோளை ஆய்வு செய்து, உயிர் இருப்பதற்கான சில குறிப்புகளைக் கண்டறிந்துள்ளோம்.

இத்தகைய ஆய்வை இன்னும் அதிகமாக புறக்கோள்களில் செய்வதன் மூலம், பூமியைத் தாண்டி உயிர்கள் இருப்பதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடிக்கலாம். அது இரு ஆண்டுகள், பத்து ஆண்டுகள் அல்லது இருபது ஆண்டுகளில் என எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், அந்தச் சூழல் நமக்கு முன்பு இருக்கவில்லை. அதை ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகவே நான் பார்க்கிறேன்.

K2-18b புறக்கோளில் உயிர்கள் வாழும் அறிகுறி தெரிந்தது எப்படி?

K2-18b புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று தெரிய வந்தது எப்படி? நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,K2-18b புறக்கோள்

கேள்வி: K2-18b புறக்கோளுக்கு வருவோம். பூமியைத் தாண்டி உயிர்கள் இருப்பதை உறுதி செய்ய இந்தக் குறிப்பிட்ட புறக்கோள் உதவும் என்பதில் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?

பதில்: அறிவியல் கோணத்தில், கண்டிப்பாக ஆதாரங்கள் வேண்டும். ஆகவே, இப்போது அதை மிக உறுதியாகக் கூற முடியாது. இப்போதுள்ள தரவுகளும், நாங்கள் ஏற்கெனவே வெளியிட்ட கடந்த பல ஆண்டு கால ஆய்வில் கிடைத்த அனைத்து தரவுகளும், எங்களுக்கு அளிக்கும் விளக்கம், இந்தப் புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்பதே. உயிர் வாழ ஏதுவான பெருங்கடலும், அதில் உயிர்களும் இருக்கலாம் என்பதே.

இப்போதைக்கு அதுதான் சரியான விளக்கமாக உள்ளது. ஆனால், நாம் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். இது உறுதியல்ல, ஆரம்பக்கட்ட ஆய்வுகள்தான். மேலதிக ஆய்வுகள் உண்மை அப்படியல்ல எனவும் கூறலாம். ஆனால், சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அது உண்மையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கேள்வி: K2-18b புறக்கோளில் உயிர்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான (99.99994%) ஆதாரங்களை திரட்ட என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? பூமியைத் தாண்டி உயிர்கள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்கும் பயணத்தில் நாம் இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம்?

பதில்: நமக்கு இப்போது கிடைத்துள்ள தரவுகளே இதுவரை கிடைக்காத ஒன்றுதான். துகள் இயற்பியலில் ஹிக்ஸ் போசானை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பெரிய பெரிய கண்டுபிடிப்புகள், மிகவும் நுண்ணிய அளவில் கண்டறியப்படுவதன் ஊடாகவே தொடங்குகின்றன. இயற்பியலின் பல பிரிவுகளிலும் இதே கதைதான். இங்கு அப்படித்தான் நடக்கிறது.

இப்போதுள்ள தொழில்நுட்பங்களின் வாயிலாக சிறு ஆதாரம் கிடைத்துள்ளது. அது மேலும் அதிகமாக ஆய்வு செய்யத் தூண்டுகிறது. ஆகவே கூடுதலாக கவனம் செலுத்துகிறோம். இப்படியாக முழு திறனையும் பயன்படுத்தும்போது, காலப்போக்கில் சிக்மா ஃபைவ் (99.99994%) அளவுக்கான ஆதாரம் கிடைக்கும்.

ஆரம்பத்தில் நாங்கள் டைமெதைல் சல்ஃபைடு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால், இன்னும் கூடுதல் நேரம் வேண்டுமென்று சொல்லியிருப்போம். ஆனால், 2023இல் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இந்தப் புறக்கோளை 1-5 மைக்ரான் என்ற அளவில் கண்காணித்த சிறிது நேரத்திலேயே, முதல் முறையாக கரிம மூலக்கூறுகள் அடங்கிய வேதிமங்களைப் பார்த்தோம். இது ஆச்சர்யமாக இருந்தது.

ஆனால், அந்தக் கோளின் வளிமண்டலத்தில் அவை அதிகமாக இருப்பதுவே அவற்றை எளிதாக நாங்கள் கண்டறியக் காரணம். அதோடு, மிகவும் சிறிய அளவில் டைமெதைல் சல்ஃபைட் இருப்பதற்கான தரவுகள் கிடைத்தன. அது மிகச் சிறிய சிக்னலாக இருந்தது. அது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு இல்லையென்றாலும், எங்களை மேற்கொண்டு ஆய்வு செய்யத் தூண்டுவதற்கு போதுமானதாக இருந்தது.

பிறகு நாங்கள் மீண்டும் ஆய்வு செய்தோம். இந்த முறை 5-10 மைக்ரான் என்ற அளவில் வைத்து புறக்கோளை அவதானித்தோம். அதன் மூலம் சிக்மா த்ரீ(Sigma Three) அளவுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒரு கோளை தொலைநோக்கியில் ஆராயும்போது, அதில் உயிர் இருப்பதற்கான அடையாளம் தென்படுமென்று நான் கனவில்கூட நினைத்துப் பார்த்தது இல்லை.

ஆகவே, நாம் ஏற்கெனவே கணிசமான ஆதாரங்களைப் பார்க்கிறோம் என்பதால் இதுவே முக்கியமான முன்னேற்றம்தான். இதோடு, இனி வரும் நாட்களில் இந்தத் தரவுகளை மேலும் வலுவாக உறுதி செய்ய முடிகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள இரண்டு அல்லது மூன்று அவதானிப்புகளை மேற்கொள்வோம். அதற்கு வெகு காலம் எடுக்காது, ஒரு சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்.

மீத்தேன் வாயுவுக்கும் உயிர் இருப்புக்குமான தொடர்பு

K2-18b புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று தெரிய வந்தது எப்படி? நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி

பட மூலாதாரம்,CAMBRIDGE UNIVERSITY

படக்குறிப்பு,K2-18b புறக்கோள்

கேள்வி: K2-18b கோளில் டைமெதைல் சல்ஃபைட், டைமெதைல் டைசல்ஃபைட் அபரிமிதமாகக் காணப்படுகிறது. நீங்களும் உங்கள் ஆய்வுக் கட்டுரையில், வருங்காலத்தில் இதை மீத்தேன் அதிகமுள்ள வளிமண்டல மாதிரிகளின் மூலம் பரிசோதனைகளைச் செய்து பார்க்கவுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். உயிர்கள் இல்லையென்றால் மீத்தேன் உற்பத்தி தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என்பது நமக்குத் தெரியும். இதன் அடிப்படையில் பார்க்கும்போது, 99.99994% நிச்சயமாக உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளது என்ற யூகத்திற்கு வர முடியுமா?

பதில்: இதுவொரு சுவாரஸ்யமான கருத்து. நிச்சயமாக மீத்தேன் உற்பத்தி உயிர்களின் இருப்புடன் பூமியில் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்தக் கோளிலும்கூட அங்கு வாழக்கூடிய உயிர்கள் மீத்தேன் உற்பத்திக்குக் காரணமாக இருக்கலாம். மீத்தேன் இருப்பு என்பது நிச்சயமாக சிக்மா 5 அளவுகோலை எட்டுவதற்கான ஆதாரம்தான். அதில் சந்தேகமே கிடையாது. இருந்தாலும், நாங்கள் அதை இன்னும் வலுவாக உறுதி செய்துகொள்ள முயல்கிறோம்.

நாம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், இந்தப் புறக்கோளுடைய வளிமண்டலத்தின் பெரும்பகுதி, பூமியில் இருப்பதைப் போன்ற நைட்ரஜன் மிகுதியுடைய ஒன்றல்ல. மாறாக, அது ஹைட்ரஜன் மிகுதியாகக் கொண்ட வளிமண்டலம். அவ்வளவு ஹைட்ரஜன் இருக்கும்போது, உயிர்களே இல்லாமல் வேறு காரணிகளின் மூலமாகவும் கூட மீத்தேன் உற்பத்தி செய்யப்பட வாய்ப்பு இருக்கலாம்.

ஆகவே, அத்தகைய உயிர்களற்ற காரணியால் உற்பத்தியான மீத்தேனை, உயிர்கள் இருப்பதற்கான சான்றாகக் கருதிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இதன் காரணமாகவே, உயிர்கள் இருந்தால் நிச்சயமாக மீத்தேன் உற்பத்தி இருக்கும் என்றாலும், மீத்தேன் இருப்பதாலேயே இந்தக் குறிப்பிட்ட புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று சொல்லிவிட முடியாது.

ஆனால், இந்தக் கோளில் கண்டறியப்பட்ட டி.எம்.எஸ்-இன் (டைமெதைல் சல்ஃபைட்) இருப்பு அதிலிருந்து வேறுபட்டது. அதிக அளவில் வளிமண்டலத்தில் அது காணப்படுவது, உயிர்கள் இல்லாமல் சாத்தியமில்லை. இருந்தாலும், திறந்த மனதுடன் வேறு காரணங்களும் இருக்கக்கூடுமா என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.

K2-18b புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று தெரிய வந்தது எப்படி? நிக்கு மதுசூதன் பிபிசி தமிழுக்கு பேட்டி

பட மூலாதாரம்,NASA

கேள்வி: டைமெதைல் சல்ஃபைடோ அல்லது டைமெதைல் டைசல்ஃபைடோ நேரடி மீத்தேன் அல்ல. மாறுபட்ட வடிவத்தில் நடக்கக்கூடிய மீத்தேன் உற்பத்திதானே! அதோடு, ஹைட்ரஜன் மிகுதியாகக் கொண்ட வளிமண்டலம் என்பதால், உயிர்களற்ற வேறு காரணங்களால்கூட இந்த வேதிமங்கள் உற்பத்தி ஆகியிருக்கலாம் அல்லவா?

பதில்: ஆம். இந்த வேதிமங்களை உயிர்களற்ற சூழலில் குறைந்த அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆனால், இந்தப் புறக்கோளில் இவற்றின் அளவு அதீதமாக உள்ளது. அங்கு இந்த வேதிமங்கள் பூமியில் இருப்பதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. இவ்வளவு பெரிய உற்பத்தி உயிர்கள் இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை என்பதுதான் விஷயம். கோட்பாட்டு ஆய்வுகள், இந்த அளவுக்கு இவை இருக்க வேண்டுமெனில், அதற்கு குறைந்தபட்சம் 20% உற்பத்தியேனும் உயிர்களிடம் இருந்து வர வேண்டும் எனக் கூறுகின்றன.

அதனால்தான், இதைச் சரியான பாதையாகக் கருதுகிறோம். இருந்தாலும், நமக்குத் தெரியாத விஷயங்களும் இருக்கின்றன. எனவே வேறு புதிய சாத்தியங்களும் இருக்கலாம் என்ற கோணத்திலும் இதை ஆராய வேண்டியுள்ளது.

கேள்வி: நீங்கள் வேறு ஏதேனும் புறக்கோள்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்களா? இதேபோன்ற பிற ஹைஷன் கோள்களின் வளிமண்டலங்களுடன் இதன் தரவுகளை ஒப்பிடுவது இந்த வாயுக்களின் உயிரியல் மற்றும் உயிரியல் அல்லாத உற்பத்திக் காரணிகளை வேறுபடுத்திப் பார்க்க உதவுமா?

பதில்: நிச்சயமாக உதவும். வேறு சில கோள்களிலும் அத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். அதில் சிலவற்றின் தரவுகள் கைவசம் உள்ளன. அவற்றையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இன்னும் வெளியிடப்படவில்லை என்பதால் அவை குறித்து விரிவாகப் பேச இயலாது.

கேள்வி: ஒருவேளை, K2-18b புறக்கோளில் உயிர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்த உயிர்கள் பூமியில் உள்ள உயிர்களை ஒத்த அடிப்படையைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளதா அல்லது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்குமா?

பதில்: அங்கு என்ன மாதிரியான உயிர்கள் இருக்கலாம் என்பது குறித்து நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், பூமியில் வாழக்கூடிய எளிய, நுண்ணிய உயிர்கள் இந்த வேதிமங்களை உற்பத்தி செய்வதால், அதேபோன்ற நுண்ணுயிர்களே இந்தப் பெருங்கடல்சூழ் புறக்கோளிலும் இருக்கக்கூடும் என்று நாம் யூகிக்கலாம்.

ஆனால், அதைத் தாண்டி எப்படியான உயிர்கள் இருக்கலாம் என்பதைக் கணிப்பது சாத்தியமில்லாதது. இப்போதைக்கு அதில் எந்தக் கருத்தையும் நம்மால் கூற முடியாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/ce826w24588o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.