Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதை எனது ‘நெஞ்சில் நின்றவை’ பதிவுகளில் வெளிவந்ததுதான். கோபிசங்கர் எழுதியிருக்கும் ‘தண்டனையே குற்றம்’ https://yarl.com/forum3/topic/301723-தண்டனையே-குற்றம்-t-gobyshanger/ இந்த நினைவை எனக்கு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது

1968, ஒன்பதாவது வகுப்பு.

இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு.

அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள்.

இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்பாக இருந்தது 12வது படித்துக் கொண்டிருந்த மாணவர் தலைவன் ரவி. அவன் நாட்டில் ஒரு சட்டத்தரணியாகி, பருத்தித்துறை நகரபிதாவாக இருந்து சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டான்.

ரவியின் தம்பி சபா எனது வகுப்பில்தான் படித்துக் கொண்டிருந்தான். ஆதலால் இந்த பிரியாவிடை விடயம் எங்களது வகுப்பிலும் தடல் புடலாகப் பேசப்பட்டது.

பிரியாவிடை நிகழ்ச்சிக்கு சில வாரங்களுக்கு முன்னால் அதிபர் தங்கராஜா மாஸ்ரரிடமிருந்து நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாணவர்களிடம் ஒரு குழப்பமான சூழ்நிலை. இதில் முன்ணணியில் செயற்பட்டு வந்த ரவி, சபா இருவருக்கும் தன்மானப் பிரச்சினை.

பாடசாலை பிரியாவிடை செய்வதால் மாணவர்கள் தனியாக பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தத் தேவையில்லை என்பது அதிபரின் வாதம். மாணவர்களிடம் நிதி வசூலித்த பின்னால் நிறுத்த முடியாது என்பது மாணவர் தலைவரது கருத்து. இவர்களுக்கு நடுவில் பாவம் மாணவர்களாகிய நாங்கள்.

பிரியாவிடை நிகழ்ச்சியை மாணவர்கள்தான் நடத்த வேண்டும் என்பதில் ரவி பிடிவாதமாக இருந்தான். அவனுக்குப் பின்னால் சில ஆசிரியர்களும் இருந்தார்கள் என சாடைமாடையாக சிலர் பேசிக் கொண்டார்கள். அதிபர் தங்கராஜா மாஸ்ரரோ அமைதியாக இருந்தார்.

மாணவர்களிடம் வசூலித்த பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென அதிபரிடமிருந்து இறுதி அறிவிப்பு வந்தது. எனக்கு மனதுக்குள் சந்தோசம். பிரியாவிடைக்கு அம்மாவிடமிருந்து பணம் வாங்கியாயிற்று. பணம் திருப்பித் தரப்பட்டால் அதை எனது வேறு தேவைக்குப் பயன் படுத்தலாமென கணக்குப் போட்டுக் கொண்டேன். நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட விசயம் அம்மாவுக்கு எங்கே தெரியப் போகிறது?

கணக்குகள் எப்பொழுதும் சரிவராது. நான் போட்ட கணக்கும் தப்பாகப் போயிற்று.

ஒருநாள் மாணவர் தலைவரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. “அதிபர் தங்கராஜா மாஸ்ரர் எங்களது நிகழ்ச்சியை மறுப்பதால் கச்சேரியிலுள்ள கல்வித் திணைக்களத்தில் இது விடயமாக முறைப்பாடு செய்ய உள்ளோம் ஆகவே நாளை காலை எட்டு மணிக்கு விஞ்ஞான வகுப்பு மாணவர்கள் பாடசாலை முன்னால் கூடவும். போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் போக்குவரத்துக்கான செலவாக ஒரு ரூபா கொண்டு வரவும்”

அநேகமான மாணவர்கள் ரவியின் பின்னால் நின்றார்கள். போதாதற்கு சபா எனது வகுப்பிலிருந்து எல்லோருக்கும் உரு ஏத்திக் கொண்டிருந்தான். ஆகவே இவர்களது பேச்சுக்கு எடுபடுவது தவிர வேறு மார்க்கம் எனக்கிருக்கவில்லை.

முதலில் அம்மா இந்த விடயத்துக்கு ஒத்துவரவில்லை. ஆனாலும் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் பங்கு கொள்வதை அறிந்த பின்னரே ஒரு ரூபா தந்தார், அதுவும் மனமேயில்லாமல்.

கச்சேரிக்கான பயணம் பாட்டுக்கள் துள்ளளுடன் மகிழ்வாக இருந்தது. கச்சேரி வாசலில் எங்கள் வண்டிகள் மறிக்கப்பட்டன. வாசலிலேயே நாங்கள் கொண்டு போன புகார் வாங்கப்பட்டது. “உடனடியாக எல்லோரும் பாடசாலை திரும்ப வேண்டும்” என கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டோம். தங்கராஜா மாஸ்ரருக்கு கச்சேரியிலும் அதிக செல்வாக்கு இருந்தது பின்னர்தான் தெரியவந்தது. எது எப்படியோ எனது முதல் போராட்டம் மூன்று ரூபாக்கள் நட்டத்துடன் தோற்றுப் போனது.

அடுத்தநாள் வகுப்பறை கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது.

‘நேற்று பாடசாலைக்கு வரரத மாணவர்கள் அதற்கான காரணத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இருந்து எழுத்து மூலமாகப் பெற்று அதிபரிடம் சமர்ப்பித்து அதன் பின்னரே வகுப்பறைக்கு வரவும்’

பாண்டிய மன்னனின் பிரம்படியை விட தங்கராஜா மாஸ்ரரின் பிரம்படி எப்படியிருக்குமென்று அந்த சிவனுக்கே தெரியும். நெருப்பில் சுட்டு நுனி கறுத்திருந்த பிரம்பு நினைவில் வந்து கலக்கியது. எல்லோரையும்விட அதிகமாகக் கலங்கிப் போயிருந்தது ரவியும், சபாவும்தான்.

எல்லோரும் ரவியின் வீட்டில் கூடினோம். தனது மகனால்தான் இவ்வளவும் என்பதை அறிந்து ரவியின் தந்தை எங்களுக்கு உதவ வந்தார். அவர் தங்கராஜா மாஸ்ரரை அவரது இல்லத்தில் சந்தித்து எங்களுக்காக கதைத்துப் பார்த்தார். பாடசாலைக்கு வரமுடியாமற் போனதற்கான காரணத்தை எழுத்து மூலமாக ஒவ்வொரு மாணவரும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் தங்கராஜா மாஸ்ரர் உறுதியாக இருந்தார். சரி ஏதாவது ஒரு காரணத்தை எழுதி கொண்டுபொய்க் கொடுங்கள். பிரச்சினை வராது என்று ரவியின் தந்தை உறுதி தந்தார்.

இது விசயமாக வீட்டில் கேட்டால் அங்கேயும் பூசை நடக்குமென்பதால் நாங்களே கடிதங்களைத் தயாரித்துக் கொண்டோம். எனது அம்மம்மா காலமாகிவிட்டார் என்று எனக்கான காரணத்தைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிக் கொண்டேன்.

அடுத்தநாள் கடிதங்களுடன் மண்டபத்தில் கூடினோம். மண்டபதின் ஒரு வாசலினூடகத்தான் அதிபரின் அறைக்குச் செல்ல வேண்டும். நான்கு நான்கு பேராக உள்ளே அழைத்தார்கள். துணிவுள்ளவர்கள் (இல்லையென்றாலும் இருப்பதாகக் காட்டிக் கொண்டு) முன்னுக்குப் போனார்கள். உள்ளே போனவர்கள் பிறிதொரு வாசலினூடக அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தார்கள். எனது முறை வந்தது உள்ளே போனேன். என்னுடன் சங்கர், முகுந்தன், நடராஜா ஆகியோரும் உள்ளே வந்தார்கள்.

முறிந்து சிதறிய பிரம்புத் துகள்கள் நிலத்தில் இருந்து பயமுறுத்தின. தங்கராஜா மாஸ்ரரைப் பார்க்கும் துணிவில்லை. முகத்தை எவ்வளவு பாவமாக வைத்திருக்க முடியுமோ அப்படி வைத்திருந்தேன். கிளாக்கர் வந்து எங்களிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டார்.

என்ன எழுதியிருக்கு? சிங்கம் கர்ஜித்தது. நாலு பேருக்கும் அம்மம்மா செத்துப் போச்சாம் கிளாக்கர் ஏளனமாகச் சொல்லி விட்டு கடிதங்களை மேசையில் வைத்தார்.

பரீட்சையில்தான் பார்த்து எழுதுவார்கள் என்று சொல்வார்கள். கடிதத்தில் உள்ள காரணத்தையும் பார்த்து எழுதியதை அன்றுதான் பார்த்தேன்.

தங்கராஜா மாஸ்ரர் கிளாக்கரை நோக்கி கண் அசைத்தார். சுவரைப் பார்த்தபடி நால்வரும் நிறுத்தப் பட்டோம். குனிந்து கால் பெருவிரலை கைகளினால் பிடிக்கும் வண்ணம் பணிக்கப்பட்டோம்.

நாலுபேருக்கும் ஒரே அம்மம்மாவா? வேறை வேறையா?

தங்கராஜா மாஸ்ரர் கேட்பது கேட்டது. அதுக்குப் பிறகு எதுவுமே நினைவில்லை. சுளீர், சுளீர் என்று பிற்பக்கத்தில் பிரம்பின் இரண்டு இழுவைகள். தண்ணீரில் இருந்து வெளியில் போட்ட மீன் கூட என்னளவுக்குத் துள்ளியிருக்காது.

வகுப்பறைக்கு வந்தால் எனக்கு நாலு, எனக்கு மூன்று , எனக்கு இரண்டு என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். பேசும் நிலையில் நானில்லை. மூன்று ரூபா கொடுத்து இரண்டு சுளீர் வாங்கிய கெட்டித்தனத்தைப் பற்றி பேச என்னயிருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

கலெக்ஷன் காசுக்கு என்ன நடந்தது ரவி ...சபாவிடமா ? இனிய பள்ளி நினைவுகளை மீட்பதில் ஒரு சுகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2025 at 16:34, நிலாமதி said:

கலெக்ஷன் காசுக்கு என்ன நடந்தது ரவி ...சபாவிடமா ?

அதை பொன்னம்பலம் மாஸ்டரிடம் கொடுத்தோம். அவர் அந்தப் பணத்தை பாடசாலை வாசிகசாலைக்கு புத்தகங்கள் வாங்குவதற்குத் தந்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2025 at 06:23, Kavi arunasalam said:

1968, ஒன்பதாவது வகுப்பு.

1968இல் நானும் 9வது வகுப்பே.

அதை Prep என்று சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2025 at 06:23, Kavi arunasalam said:

எனக்கு மனதுக்குள் சந்தோசம். பிரியாவிடைக்கு அம்மாவிடமிருந்து பணம் வாங்கியாயிற்று. பணம் திருப்பித் தரப்பட்டால் அதை எனது வேறு தேவைக்குப் பயன் படுத்தலாமென கணக்குப் போட்டுக் கொண்டேன்.

ஆட்டைய போடுறதில நீங்க நம்மாள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

ஆட்டைய போடுறதில நீங்க நம்மாள்.

அந்த வயதில் அநேகமானவர்கள் உங்களை, என்னைப் போலவே இருந்திருப்பார்கள். கடைக்கு பொருட்களை வாங்கி வரும்படி அனுப்பினால் அதிலும் ஏதாவது அமுக்குவதுண்டு.

“இண்டைக்கு சந்தையிலே ஏதும் வாங்க வேணுமோ?” என்று கேட்டாலே போதும், “பெடியனுக்கு ஏதாவது காசு தேவைப் படுது” என்று அம்மாவுக்குப் புரிந்து விடும். என்ன ஒரு ஜம்பத்தைந்து சதம் இருந்தால் போதும். ஒரு மெட்னி ஷோ பாத்து விடலாம். அதுக்காக கீரையில் இரண்டு சதம் மீனில் பத்து சதம்… என்று கணக்குப் போட்டு எவ்வளவு சிரமத்தின் மத்தியில் காசு சேர்த்திருக்கிறேன்.

இப்போ எல்லாம் கணக்குப் போடுவதில்லை. அம்மா மாதிரி மனைவி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை . ......... இப்போதெல்லாம் மாணவர்களுக்கு அடிக்க முடியாது , அன்று நாங்கள் அடி வாங்காத நாளை எண்ணிவிடலாம் . ........ ! 😁

பகிர்வுக்கு நன்றி கவிஞரே ........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.