tdenrSoopst51 2aLfm0h:6615f6e1m351àg2635flmf 14s1al 195r0g6 ·
"தங்கக்காப்பு"
தங்கப்பன் என்பவன் ஒரு வட்டிக்கடைக்காரன். அவனிடம் அவன் வசிக்கும் நல்லூர் வாசிகள் மட்டுமல்லாமல், சுற்றுப்புற ஊர்களிலும் உள்ளவர்கள் தங்கள் தேவைக்காக ஏதாவது பொருளை அடகு வைத்துப் பணம் வாங்கிப் போவார்கள். அவனது வட்டி விகிதமும் குறைவே. ஆனால், பணத்தை வசூல் செய்வதில் அவன் கறாராக இருப்பான். கடன் கொடுத்தால் அதைத் திருப்பித் தரக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே கடனைக் கொடுப்பான். அவனை யாராலும் ஏமாற்றிவிட முடியாது.
தங்கப்பனிடம் அடிக்கடி கடன் வாங்கிப் போகிறவன் செல்லப்பன் என்ற குடியானவன். அவன் ஒவ்வொரு முறையும் தன்னிடமுள்ள தங்கக் கட்டைக் காப்பை அடகு வைத்துப் பணம் வாங்கிப் போவான். அந்தக் கடனை அடைத்து அந்தக் காப்பை மீட்ட பிறகே, மறுபடியும் கடன் கேட்டு அதே காப்பை அடகு வைப்பான். ஏழை விவசாயி என்பதால் அவனுக்குப் பயிர் செய்ய அடிக்கடி பணம் தேவைப்பட்டது.
ஒருமுறை செல்லப்பன் தன் காப்பைத் தங்கப்பனிடம் அடகு வைத்துப் பணம் கேட்டபோது, அவ்வூர் பொற்கொல்லன் பொன்னுசாமி அங்கே இருந்தான். தங்கப்பன் காப்பை வாங்கிக் கொண்டு அதற்கு ஐம்பது வராகன்கள் (பணம்) கொடுத்து அனுப்பியதை அவன் பார்த்தான். செல்லப்பன் போனதும், அந்த காப்பை வாங்கிப் பார்த்த பொன்னுசாமிக்கு ஒரு உண்மை தெரிந்தது. அது சுத்த தங்கத்தால் ஆனது அல்ல; அதில் சரிபாதி பித்தளை சேர்க்கப்பட்டிருந்தது. அதன் மதிப்பு வெறும் பத்து வராகன்கள் மட்டுமே என அவன் மதிப்பிட்டான்.
"எல்லோரிடமும் கறாராகப் பேசும் தங்கப்பன், செல்லப்பனிடம் ஏமாந்து விட்டானே! இவனுக்குத் தங்கம் பற்றி எதுவுமே தெரியாது போலிருக்கிறது" என்று பொன்னுசாமி நினைத்துக் கொண்டான்.
ஒரு மாதத்திற்குப் பின், பொன்னுசாமி சில பித்தளை நகைகளைச் செய்து அவற்றிற்குத் தங்க முலாம் பூசினான். பிறகு அந்த நகைகளைத் தங்கப்பனிடம் எடுத்துப் போய், "ஐயா! என் மகளுக்குக் கல்யாணம் திடீரென நிச்சயமாகிவிட்டது. எனக்கு உடனடியாக ஆயிரம் வராகன்கள் தேவைப்படுகிறது. ஐயாயிரம் வராகன்கள் பெறுமானமுள்ள இந்த நகைகளை ஈடாக வைத்துக் கொண்டு எனக்குப் பணம் கொடுத்து உதவுங்கள்" என்றான்.
தங்கப்பன் அந்த நகைகளை வாங்கிப் பார்த்து விட்டு, "பொன்னுசாமி! நீயோ பொற்கொல்லன். உனக்கே அசல் தங்க நகைகளுக்கும் போலி நகைகளுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதா? இவை எல்லாம் தங்க முலாம் பூசிய நகைகள். இவற்றின் மதிப்பு பத்து வராகன் கூடத் தேறாது. என்னை ஏமாற்ற முடியாது" என்றான்.
அதைக்கேட்டு பொன்னுசாமி ஆச்சரியப்பட்டான். "ஐயா! நான் உங்களை ஏமாற்றவில்லை. ஆனால் நீங்கள் மகா மட்டமான தங்கத்தால் செய்யப்பட்ட செல்லப்பனின் தங்கக் காப்பிற்கு மட்டும் ஐம்பது வராகன்கள் கொடுத்தீர்களே? அது பத்து வராகன் தானே பெறும்?" என்று கேட்டான்.
அப்போது தங்கப்பன் பலமாகச் சிரித்து, "ஓஹோ! நீ அன்று அந்தக் காப்பைப் பார்த்ததை நினைத்து என்னைத் தங்கம் பற்றி தெரியாதவன் என்று முடிவு கட்டி விட்டாயா? செல்லப்பன் நேர்மையானவன். அவன் அந்தக் காப்பு அசல் தங்கத்தால் ஆனது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அதில் பாதி பித்தளை கலந்திருப்பது எனக்குத் தெரியும். அந்தக் காப்பைச் செய்து கொடுத்தவனும் நீதான் என்பது எனக்குத் தெரியும்!" என்றான்.
தொடர்ந்து தங்கப்பன் சொன்னான்: "அவனிடம் அது நல்ல தங்கக் காப்பு அல்ல என்று நான் கூறிவிட்டால், அவன் தன் தேவைக்குக் கடன் வாங்க என்னிடம் வரமாட்டான். வேறு யாரும் அவனுக்கு அதன் பேரில் கடன் கொடுக்க மாட்டார்கள். அவனிடம் உள்ள ஒரே விலையுயர்ந்த பொருள் அந்தத் தங்கக் காப்புதான். அவன் அதைச் சுத்த தங்கம் என்றே நம்பிக் கொண்டிருக்கிறான். அவன் நம்பிக்கையைத் தகர்க்க வேண்டாம் என்றும், நேர்மையுடன் நடந்து வரும் அவனுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்திலும்தான், பத்து வராகன் கூடப் பெறாத அந்தக் காப்பிற்கு நான் ஐம்பது வராகன்கள் கொடுக்கிறேன்."
அதைக் கேட்ட பொன்னுசாமி திகைத்துப் போனான். இதுவரை தங்கப்பனை ஈவு இரக்கமில்லாத வட்டிக்கடைக்காரன் என்று நினைத்திருந்தான். பண விஷயத்தில் கறாராக இருந்தாலும், ஒரு நேர்மையான மனிதனின் நம்பிக்கையைக் காப்பாற்றத் தங்கப்பன் காட்டிய அந்த நல்ல குணத்தை எண்ணி வியந்தவாறே, தன் போலி நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
~மகிழா. 💃"
-பகிர்வு பதிவு.
🌹"
நன்றி - பட்டாம்பூச்சி சிறுகதை பூங்கா......!
By
suvy ·