'தனிச்சின்னம் தான்.. உதயசூரியன் வேண்டாம்' : திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் என்ன?
பட மூலாதாரம்,MNM/Facebook
கட்டுரை தகவல்
விஜயானந்த் ஆறுமுகம்
பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
"2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பத்து தொகுதிகளில் போட்டியிட்டோம். 2021 சட்டமன்றத் தேர்தலில் நெருக்கடி இருந்ததால் ஆறு இடங்களைப் பெற்றோம். இந்தமுறை வலிமைக்கேற்ப ஒதுக்க வேண்டும் எனக் கூறிவிட்டோம்" என்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி.
'தி.மு.க கூட்டணியில் ஒதுக்க உள்ள இரு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூறுகின்றனர். இதனைக் கட்சித் தலைமை ஏற்கவில்லை' என, மக்கள் நீதி மய்யம் கூறுகிறது.
'ஆறு தொகுதிகளுக்குக் குறைவாகப் பெற மாட்டோம்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. கூட்டணியை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக, த.வா.க அறிவித்துள்ளது. அந்தவகையில், தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறதா?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு ஒருமாத காலம் அவகாசம் இருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் தி.மு.க தலைமை கவனம் செலுத்தி வருகிறது.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
'அதே எண்ணிக்கை வேண்டாம்' - மார்க்சிஸ்ட்
பட மூலாதாரம்,CPM/Facebook
படக்குறிப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- தி.மு.க இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடையாமல் உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டதால் அதே இடங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்குவதற்கு தி.மு.க முன்வந்தது.
இதனை அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஏற்பதற்கு மறுத்துவிட்டார். "கடந்தமுறை போட்டியிட்டதை விட கூடுதலாக கொடுக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. தி.மு.க தலைவரிடம் பேசிவிட்டு சொல்வதாகக் கூறியுள்ளனர்" என செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
"நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சி அல்ல" எனக் கூறிய பெ.சண்முகம், "அதிக கட்சிகள் இருக்கும்போது சிலவற்றைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளோம். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனக் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு இடங்களை ஒதுக்குவதற்கு தி.மு.க தலைமை முன்வராததால் நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகளுடன் இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நிறைவடையாமல் உள்ளது.
'பேரம் பேச வேண்டாம்' - திருமாவளவன்
தற்போது வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இரண்டு முறை தி.மு.க தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
முன்னதாக, 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பத்து இடங்களில் அக்கட்சி போட்டியிட்டது. இதனை முன்னிறுத்தியே அதிக தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டு வருகிறது.
இதைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி, "தொகுதி எண்ணிக்கை குறித்து தி.மு.கவிடம் கூறவில்லை. பல கட்சிகள் வந்துள்ளதை உணர்ந்துள்ளோம். அதேநேரம், எங்கள் கட்சியின் வலிமைக்கேற்ப ஒதுக்குமாறு கூறியுள்ளோம்" என்கிறார்.
"இடங்களைக் குறைத்துக் கொள்ளுமாறு தி.மு.க கூறவில்லை" எனக் கூறும் ரவிக்குமார், "பேரம் பேச வேண்டாம் என வி.சி.க தலைவர் கூறிவிட்டார். முதலமைச்சரிடம் பேசிவிட்டு தொடர்பு கொள்ள உள்ளதாக தி.மு.க தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் கூறியுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
"இந்த விவகாரத்தில் தி.மு.கவுக்கு வி.சி.க தரப்பில் நெருக்கடியைக் கொடுக்கவில்லை. அனைவருக்கும் கொடுத்து முடித்துவிட்டு எங்களுக்குக் கொடுக்குமாறு கூறினோம். எங்கள் வளர்ச்சியை அவர்களும் உணர்ந்துள்ளனர்" என அவர் தெரிவித்தார்.
"அதேநேரம், தி.மு.க கூட்டணியில் அதிக எதிர்பார்ப்புடன் இருக்க முடியாது. மக்கள் நீதிமய்யம், தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ உள்பட பல்வேறு கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது" என்கிறார், ரவிக்குமார் எம்.பி.
இதே தகவலை சனிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், "கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிடக் கூடாது. பெரியளவில் தொகுதிகளை பெற முடியாத சூழலில் உள்ளோம்" எனக் கூறினார்.
"கூடுதல் தொகுதிகள் கிடைக்குமா என்பது இரண்டொரு நாளில் தெரிந்துவிடும்" எனக் கூறிய திருமாவளவன், "கட்சியின் நலன் எவ்வளவு முக்கியமோ அதற்கு மேல் கூட்டணியின் நலன்கள் முக்கியமானவை" என்கிறார்.
இன்றைய அரசியல் சூழல்களை கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
வெளியேறும் வேல்முருகன்?
பட மூலாதாரம்,Velmurugan.T/Facebook
தி.மு.க கூட்டணியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், இந்தமுறை கூட்டணியை மறுபரிசீலனை செய்யும் முடிவில் உள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதுகுறித்துப் பேசிய அவர், "பத்து முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தி.மு.க தலைமையிடம் மனு கொடுத்தேன். அதை நிறைவேற்றுவது குறித்து எந்தப் பதிலும் வரவில்லை. கூடுதல் இடங்களையும் தரவில்லை" எனக் கூறினார்.
கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக வேல்முருகன் குறிப்பிட்டார்.
முன்னதாக, வன்னியர் 10.5 சதவீத இடஒதுக்கீடு, சுங்கச்சாவடிகளை அகற்றுதல், மாநில மக்களுக்கே 90 சதவீத வேலைவாய்ப்பு உள்பட பத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேல்முருகன் மனு கொடுத்திருந்தார்.
தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஓரிரு நாள்களில் வேல்முருகன் அறிவிக்க உள்ளதாக அக்கட்சித் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.
'நின்றால் டார்ச்லைட்.. இல்லாவிட்டால்'
பட மூலாதாரம்,MNM/Facebook
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றது. தேர்தலில் அக்கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கப்படவில்லையென்றாலும் ராஜ்யசபா இடத்தை ஒதுக்க உள்ளதாக தி.மு.க அறிவித்தது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு இரண்டு தொகுதிகளை தி.மு.க ஒதுக்க உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இவ்விரு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க வலியுறுத்துவதாகத் தகவல் வெளியானது.
வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அன்று சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஓட்டலில் இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விவாதித்துள்ளார்.
"தி.மு.க கூட்டணியில் கோவை தெற்கு, மயிலாப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இவற்றில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூறுகின்றனர். இதைப் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என்கிறார், ம.நீ.மவின் மாநில நிர்வாகி ஒருவர்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அவ்வாறு போட்டியிட விரும்பினால் ம.நீ.ம.வில் இருந்து விலகி தி.மு.க உறுப்பினராக வேண்டும். அப்போது தான் போட்டியிட முடியும்" எனக் கூறுகிறார்.
"இதனால் கட்சியின் அடையாளம் தொலைந்துவிடும்" எனக் கூறிய அவர், "கடைசியில் ஒரு தொகுதியிலாவது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தி.மு.க தரப்பில் கூறுகின்றனர்" என அவர் தெரிவித்தார்.
கட்சி நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசும்போது, "இந்த தேர்தலில் மதவாத சக்திக்கு இடம் கொடுக்கக் கூடாது. டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவோம் அல்லது தேர்தலில் நிற்காமல் இருப்போம்" எனப் பேசியதாகவும் அந்த நிர்வாகி தெரிவித்தார்.
கூட்டணி தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கமல் பேசும்போது "இந்தக் கூட்டணி நாட்டுக்குத் தேவை. அதனால் தான் கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்" எனப் பதில் அளித்தார்.
சின்னம் தொடர்பான பிரச்னை குறித்து, மக்கள் நீதிமய்யத்தின் செய்தி தொடர்பு மாநில செயலாளர் முரளி அப்பாஸிடம் கேட்டபோது, "கூட்டத்தில் இருப்பதால் பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தமா?
பட மூலாதாரம்,Stalin/Facebook
மக்கள் நீதி மய்யம் வரிசையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு சிறிய கட்சிகளை தி.மு.க தலைமை வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் அக்கட்சி போட்டியிட உள்ளது.
மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு இடங்களிலும் அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகளை தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. இவற்றில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது.
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இதேபோன்ற பிரச்னை உள்ளதா?" என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் எங்கள் சின்னத்தில் போட்டியிடுவோம்" எனக் கூறிய அவர், "தே.மு.தி.கவுக்கு முரசு சின்னம் பறிபோய்விட்டது. அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்களா எனத் தெரியவில்லை" என்கிறார்.
தே.மு.தி.க நிர்வாகிகளிடம் தி.மு.க தரப்பு இன்னமும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதியிடம் பிபிசி தமிழ் பேசியது.
"நாங்கள் போட்டியிடக் கூடிய தொகுதிகள் குறித்த விவரங்களை இன்னும் பேசவில்லை. இரண்டொரு நாளில் இதுதொடர்பாக பேசுவோம்" என்று மட்டும் பதில் அளித்தார்.
'அடையாளம் போய்விடும்... ஆனால்?'
ஆனால், உதயசூரியன் சின்னத்தில் சிறிய கட்சிகளை போட்டியிட வைப்பதன் பின்னணியில் வேறு சில காரணங்கள் உள்ளதாகக் கூறுகிறார், மூத்த ஊடகவியலாளர் ஜென்ராம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தலுக்குப் பிறகான சூழல்களை மாற்றியமைக்கும் முயற்சியில் பா.ஜ.க தரப்பில் ஈடுபட்டால் அதனைத் தவிர்க்கவே அதிக இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது" என்கிறார்.
ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தொகுதிகளைவிட கூடுதல் தொகுதிகளைக் கேட்டால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"இதனால் சிறிய கட்சிகளுக்கான அடையாளம் போய்விடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை" எனக் கூறும் ஜென்ராம், "தேர்தல் களத்தில் உதயசூரியன், இரட்டை இலை ஆகிய சின்னங்கள் பிரபலமாக உள்ளன. அடுத்ததாக, கை சின்னமும் தாமரை சின்னமும் உள்ளது" என்கிறார்.
மாம்பழம், பானை சின்னம் போன்றவை சில மாவட்டங்களில் பிரபலமாக உள்ளதாகக் கூறும் அவர், "இவற்றைத் தாண்டி சிறிய கட்சிகளின் புதிய சின்னங்களுக்கு வாய்ப்பளிப்பதில் சிக்கல்கள் உள்ளன" எனக் கூறுகிறார்.
தேர்தல் முடிவில் பெரும்பான்மை கிடைக்காமல் போவதைத் தவிர்க்கும் வகையில் இப்படியொரு நடைமுறையை தி.மு.க மேற்கொள்வதாகக் கூறும் ஜென்ராம், தேர்தலில் போட்டியிடுவது என்று இல்லாமல் உறுதியாக வெற்றி பெறுவது என்ற மனநிலையில் தி.முக. உள்ளது" என்கிறார்.
'அழுத்தங்கள் உள்ளன' - ஆர்.எஸ்.பாரதி
தி.மு.க அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "எங்கள் கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளன. அதற்கேற்ற வகையில் அழுத்தங்களும் உள்ளன" எனக் கூறினார்.
ஒரு சில கட்சிகளுக்கு மட்டும் இடங்களை ஒதுக்க வேண்டியுள்ளதாகக் கூறிய ஆர்.எஸ்.பாரதி, "அதுவும் விரைவில் முடிந்துவிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேசி முடிவெடுக்கப்படும். வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி குறித்து நான் பதில் அளிக்க முடியாது" என்கிறார்.
"வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக அனைத்து பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டுவிடும். தொகுதிப் பங்கீட்டை நாங்கள் மட்டுமே தொடங்கியுள்ளோம். அதற்கான பணிகளை எதிர்க்கட்சிகள் தொடங்கவில்லை. அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை" எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cy01gd3kp4ko
By
ஏராளன் ·