Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும்: சோலை

Featured Replies

தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும்: சோலை

[திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 09:48 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்]

நாம் தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும். இல்லையேல் சிங்கள இனவாத அரசுடன்தான் கைகுலுக்கும். இதுதான் இதுவரை நாம் கண்ட நடைமுறை என்று அரசு தனிமைப்பட்டுத் தவிக்கிறது- இந்தியா என்ன செய்யப்போகிறது? என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் எம்.ஜி.ஆரின் ஆலோசகராக செயற்பட்டவருமான சோலை தெரிவித்துள்ளார்.

குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்டர்" வாரமிருமுறை இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரை:

டெல்லியில் சிறிலங்கா தூதுவரை நமது வெளியுறவுச் செயலாளர் சிவசங்கரமேனன் அழைத்தார். பேச்சுவார்த்தையின் மூலம் ஈழப் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் நிலை என்பதனை எடுத்துரைத்தார். செய்தி வந்தது. இப்படிச் சொன்னது சிவசங்கரமேனன்தானா? நம்ப முடியவில்லை.

எந்த இலங்கைப் பிரச்னையென்றாலும் அங்குள்ள தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தித்தான் நேருவும் இந்திரா காந்தியும் முடிவெடுத்தனர். ஆனால், அதன்பின்னர் ராஜீவ் காந்தி காலத்தில் இந்தியா தடம்புரண்டது. ஈழப் பிரச்சினையில் இந்திரா வகுத்த பாதையிலிருந்து இந்திய அரசு வழுக்குப் பாதையில் அடியெடுத்து வைத்தது.

1987 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை உடன்பாடு ஏற்பட்டது. அதன்பின்னர் ராஜீவ் காந்தி இலங்கை சென்றதும், மரியாதை அணிவகுப்பில் நின்ற ஒரு சிங்கள வெறியன் அவரைக் கொலை செய்ய முயன்றதும் மறக்கக்கூடிய நிகழ்ச்சியா? அதன்பின்னர் இந்திய இராணுவம் ஈழப்பரப்பில் இறங்கியது.

ராஜீவ் காந்தி காலத்தில் இலங்கையில் இந்தியத் தூதராக இருந்தவர்களில் ஒருவர் சிவசங்கரமேனன். இந்திய உளவுத்துறைத் தலைவராக இருந்தவர் எம்.கே.நாராயணன். இன்றைக்கு அதே மேனன் இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர், எம்.கே. நாராயணன் பிரதமரின் பாதுகாப்புத்துறை ஆலோசகர். ரொமேஷ் பண்டாரி என்பவர் இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்தார். சிங்கள இனவாத அரசு அவரது துணைவியாருக்கு விலை மதிப்புமிக்க வைர நெக்லசை வாங்கித் தந்ததாக பிரபல இந்திய ஆங்கில ஏடு எழுதியது.

தீட்சித் என்று இன்னொருவர் தூதுவராக இருந்தார். பிரபாகரனைச் சுட்டுக்கொல்லும்படி யாழ்ப்பாணத்திலிருந்த இந்திய இராணுவத் தளபதிகளை நச்சரித்தார். அமைதியை நிலைநாட்ட வந்திருக்கிறோமே தவிர, பிரபாகரனைச் சுட்டுக்கொல்வற்காக அல்ல என்று தளபதிகள் மறுத்தனர். 'பேச்சுவார்த்தைக்கு பிரபாகரனை அழைத்து வரும்போதே தீர்த்துக்கட்டுங்கள். மேலிடத்து உத்தரவு" என்றார். மறுத்து விட்டனர்.

தனிப்பட்ட எவர்மீதும் குற்றம் கூற வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வுகளை இப்போது நாம் சுட்டிக்காட்டவில்லை. அன்னை இந்திரா காந்திக்குப் பின்னர் அரியணைக்கு வந்தவர்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் ஈழ மக்களின் நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சிங்கள இனவாத அரசு ஈழத் தமிழர்களை அழித்திட அடுத்தடுத்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. அதன் பின்னர்தான் ஈழத்து இளைஞர்கள் போர்க்குணம் கொண்டு புலிப்பாய்ச்சலுக்குத் தயாரானார்கள்.

ராஜீவ் காந்தியின் மரணம் சிங்கள இனவாதிகளுக்கும், இங்குள்ள ஈழத்து எதிராளிகளுக்கும் ஆயுதமாகக் கிடைத்தது. அன்னை இந்திராவின் அந்த அருந்தவப் புதல்வனின் இழப்பை ஈடுசெய்ய முடியாதுதான். இன்றைக்கும் நமது இதயங்களில் இரத்தம் கசிகிறது. ஆனால் அதனையே காரணம் காட்டி ஈழத் தமிழினத்தை அழிக்க வேண்டுமா? அதற்குத் துணை போக வேண்டுமா?

நடந்து போன துயர சம்பங்களைக் கடந்து இனி நடக்க வேண்டிய காரியங்களைக் காண்போம் என்ற மனநிலைக்கு அன்னை சோனியாவே வந்திருக்கிறார்.

அன்னை இந்திரா காந்தியைப் பலி கொண்டவன் ஒரு சீக்கியன். அதனைத் தொடர்ந்து ஆத்திரம், ஆவேசத்தில் நடந்த சீக்கியப் படுகொலைகளுக்கு மன்னிப்புக் கேட்டு விட்டோம். ஒரு சீக்கியன் செய்த பாதகச் செயலுக்காக ஒரு இனமே அழிய வேண்டுமா? அதனால்தான் ஒரு சீக்கியரையே நாட்டின் பிரதமராக ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஈழத் தமிழ் இனத்தை அழிக்கின்ற வேலைகளை சிங்கள இனவாத அரசு வெறிகொண்டு வேகப்படுத்தியிருக்கிறது. அதற்காக எத்தனையோ நாடுகளில் ஆயுதம் வாங்கிக் குவித்திருக்கிறது. அந்த ஆயுதங்களால் போரைத் தீர்மானிக்க முடியாது.

ஆனால், இந்திய அரசு சிங்கள இனவாத அரசிற்கு பெரும் சேவகம் செய்திருக்கிறது. ஈழப் போராளிகளின் கடல் நடமாட்டத்தைக் கண்காணிப்பதே இந்திய கடற்படைதான் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதனை சிங்கள கப்பற்படைத் தளபதியே பகிரங்கமாக அறிவித்தார்.

சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ் மண்ணிலேயே பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த அநியாயம் அம்பலமானதும் சிங்களவர்கள் வட மாநிலப் பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

கொழும்பிற்கு அருகிலுள்ள இராணுவ விமானத் தளங்கள் மீது ஈழப் போராளிகளின் சிட்டுக் குருவி விமானங்கள் தாக்குதல் தொடுத்தன. அதனைக் கண்டு சிங்களவன் சீற்றம் கொண்டதைவிட நமது இந்திய அதிகாரிகள்தான் அதிக ஆவேசம் கொண்டனர். எனவே, இந்திய - சிங்கள கூட்டு ரோந்து வேண்டும் என்றன. அப்படிச் சொன்னவரே சிவசங்கர மேனன்தான்.

ஈழத்தில் தினம் தினம் சிங்கள விமானங்கள் குண்டுமாரி பொழிகின்றன. குடியிருப்புக்கள், பள்ளிகள், வயல்கள், கோயில்களை அழிக்கின்றன. குழந்தைகள் காப்பகம் கூட அழிக்கப்பட்டது. அப்போதெல்லாம் நமது இதயங்கள் படபடத்தன. டெல்லி அதிகாரிகளோ அதற்காகக் கண்டனம் கூடத் தெரிவித்ததில்லை. ஆனால் சிங்கள அரசுக்கோ இராணுவத்திற்கோ சேதம் என்றால் எல்லா உதவிகளையும் செய்தனர். இன்றுவரை செய்கின்றனர்.

இதற்கு அவர்களைக் குற்றம் சாட்டக்கூடாது. நாமே குற்றவாளிக்கூண்டில் நிற்க வேண்டும். இங்குள்ள தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. உகாண்டாவில் குஜராத்திகளுக்குச் சோதனையென்றால் கட்சி வேறுபாடின்றி அணிதிரள்கின்றனர். ஜாம்பியாவில் மார்வாடிகளுக்கு ஆபத்து என்றால் மத்திய அரசே குரல் கொடுக்கிறது.

இப்போது தமிழகம் ஈழத் தமிழர்களுக்காக அணிதிரள்கிறது. முதல்வர் கூட்டிய சர்வகட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் மத்திய அரசும் சோம்பல் முறிக்கிறது. அரசியல் மாச்சரியங்களால் இதயங்களைக் கருக்கிக் கொண்டவர்கள் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டு தனிமைப்பட்டு வருகிறார்கள். அவர்களைப் பற்றி கவலை கொள்ளாது இப்போது உருவாகி இருக்கும் ஒற்றுமை வலிமை பெற வேண்டும். அந்த வலிமைதான் இந்திய அரசை அசைக்கும். ஈழத் தமிழர்களுக்குக் கரம் கொடுக்கும். ஈழத்துக் கதிரவனை மறைக்கும் கார்மேகங்கள் கலையும்.

அங்குள்ள தமிழர்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க இலங்கை அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று செய்தி வந்தது. அடுத்து நமது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புவிற்குப் பயணம். ஆஹா! இனி ஈழத்தின் கிழக்கு வெளுத்துவிடும் என்று நம்பினால் ஏமாந்துவிடுவோம். அதே சமயத்தில் அவர்களுடைய முயற்சியைப் பாராட்டுகிறோம்.

தமிழகத்தில் ஈழப் பிரச்னை எதிரொலிக்கும் போதெல்லாம் நமது பிரதமர்கள் சிங்கள இனவாத அரசிற்கு வேதாந்தம் சொல்வார்கள். இதற்கு முன்னர் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர்களாக இருந்த நரசிம்மராவ், நட்வர்சிங் போன்றவர்கள் கொழும்பிற்குப் பயணம் போய் வந்திருக்கின்றனர். அதனால் என்ன பலன் ஏற்பட்டது?

இராமேஸ்வரத்திற்கு அப்பால் இந்தியக் கடலில் மிதக்கும் நமது போர்க் கப்பல்கள் இடம் மாற வேண்டும். அதனை நமது பிரதமர் செய்தால்தான் நம்பிக்கை பூக்கும். இந்திய ஆயுதங்கள் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் எல்லோருக்கும் நிம்மதி பிறக்கும்.

ஈழப் போராளிகளை எதிர்த்து சிங்கள இராணுவம் போர் புரிவதை நாம் விமர்சிக்கவில்லை. ஆனால் போராளிகளுடன் போர் என்ற பெயரால் எத்தனை ஆயிரம் அப்பாவி ஈழத்து மக்கள் மடிந்திருக்கிறார்கள்?

ஈழப் போராளிகளின் பாசறைகள் தாக்கப்படுவது பற்றி நாம் கவலை கொள்ளவில்லை. ஆனால் லட்சோப லட்சம் தமிழ் மக்களை சிங்கள இனவாத அரசு அநாதைகளாக அகதிகளாக கண்ணீரும் கம்பலையுமாக அலையவிட்டுக் கொன்று குவிப்பதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.

நாம் தொடர்ந்து விழித்திருந்தால் இந்திய அரசு இன்னும் கொஞ்சம் அசையும். இல்லையேல் சிங்கள இனவாத அரசுடன்தான் கைகுலுக்கும். இதுதான் இதுவரை நாம் கண்ட நடைமுறை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

தேவை கருதி இணைக்கப்படுகின்றது

நன்றி தமிழ்ப்பிரியன்

இலங்கை ஈழப் பிரச்சினை உச்சத்தை அடைந்துள்ள நிலையில் பதிவுலகில் அதைப் பற்றி பலரும் எழுதி வருகின்றனர். ஈழ மக்களின் துயர் துடைக்க வேண்டி எழுந்த தமிழக மக்களின் குரல்கள், வைகோ போன்றவர்களால் சிறிது சிறிதாக வேறு பக்கம் திசை திருப்பப் பட்டு வருகின்றது. இப்போது புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என மாறிக் கொண்டு இருப்பது தெளிவாக தெரிகின்றது.

தின்மலம், இந்து போன்ற நாளேடுகள் வழக்கம் போல் தமது புத்தியை தீவிரமாகக் காட்டத் துவங்கியுள்ளன. மேல் மட்ட மக்களின் கரங்களில் இந்த பத்திரிக்கைகள் இருப்பதால் அதுவே தமிழகம் முழுவதும் பரவத் துவங்கி விட்டது. இந்த நிலையில் புலிகள் அடுத்த செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த ஒரு எழவும் விளங்காதவனின் பார்வையில் தர விழைகிறேன்.

புலியெதிர்ப்பு என்பது இந்தியா, இலங்கை இரு நாடுகளிலும் இருக்கிறது. இந்தியாவில் தமிழகத்தின் சில பகுதி மக்கள், மற்றும் ஈழ விவகாரங்களைப் பற்றி அறியாத இந்தியாவின் மற்ற பகுதி மக்களிடமும் புலியெதிர்ப்பு உள்ளது. அதே போல் இலங்கையில் எடுத்துக் கொண்டால், அங்கும் தமிழ் முஸ்லிம்களிலும், மலையக மக்களிடமும், இன்னும் புலிகளை எதிர்க்கக் கூடிய குழுக்களிலும், புலிகளிடம் இருந்து விலகி வந்த குழுக்களிடமும் புலியெதிர்ப்பு உள்ளது.

முதலில் ஈழத்தைப் பொறுத்தவரை புலிகள் என்பது ஒரு தவிர்க்க இயலாத சக்தியாக மாறி விட்டது. இதை ஈழத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் ஒத்துக்கொள்கின்றனர். புலிகளின் முதல் கடமை ஈழத்தில் உள்ள தமிழர்களை ஒன்றிணைப்பது. சிங்கள அரசில் பங்கு வகிக்கும் முஸ்லிம்கள் புலிகள் அழிக்கப்படுவதை என்றும் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் புலிகள் அழிக்கப்பட்டால் சிங்கள வெறியாட்டத்தின் அடுத்த குறி முஸ்லிம்கள் தான் என்பது அவர்களுக்குத் தெரியும். அதே போல் பிள்ளையான், கருணா போன்றவர்கள் துரோகம் செய்ததாக கூறினாலும் அவர்கள் வந்த பாதை மறக்க இயலாதது. அவர்களுக்கும் உள்ளே சுதந்திர தமிழீழம் தான் ஓடிக் கொண்டு இருக்கும்.

இரண்டாவது இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிடம் ஈழப் பிரச்சினையின் தீவிரத்தை உணர வைப்பது. இந்திய அரசியல் கட்சிகள் ராஜீவ் கொலையை மறக்க வில்லை. அந்த வரலாற்றுத் தவறை விட்டு அவர்களை வெளியே கொண்டு வர வேண்டிய முயற்சிகளில் ஈடுபட வேண்டியது புலிகளின் முக்கிய பணிகளில் ஒன்று. இது நிகழ்ந்தால் தான் புலிகள் மீதான தடையை நீக்க உதவி கிடைக்கும். இந்த சூழலில் வைகோ இருந்திருக்க வேண்டும். வைகோ என்ன செய்திருக்க வேண்டும் என்பதை பெட்டிச் செய்தியில் காண்க.

மூன்றாவதாக தாங்கள் மேற்கொண்ட சமாதான முயற்சிகளையும், அதை துச்சமாக தூக்கி எறிந்த சிங்கள அரசின் அலட்சியத்தையும் உலக நாடுகளுக்கு உணர்த்த வேண்டும். நார்வே போன்ற நாடுகளின் உதவியால் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அதை சிங்கள அரசு உடைத்து தாக்குதல்களை தீவிரப் படுத்தியது.

இலங்கைப் பிரச்சினையை பொறுத்த வரை இந்தியாவின் தலையீடு இல்லாத எந்த தீர்வும் நடப்பது சாத்தியமில்லாதது. புவியியல் ரீதியாக இந்தியாவின் தலையீடு சாத்தியமானது அவசியமானதும் ஆகும். தமிழர்களின் முதல் கட்ட குரலுக்கு பாசில் ராஜபக்சே டெல்லி வந்தது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக உணவுப்பொருட்களும், மருந்துப் பொருட்களும் வர இருப்பது ஆறுதல் அளிக்கின்றது.

ஆனால் இந்த ஆறுதலான விடயங்கள் எல்லாம் ஒரு தற்காலிகமே.. இன்று மகிந்தா போய் அந்த இடத்தில் கோத்தாபாய அமரவும் கூடும். அப்போது இப்படிப் பட்ட வெறித்தனமான தாக்குதல்கள் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்டால் அன்று மீண்டும் இந்த சினிமாக்காரர்களும், அரசியல் வாதிகளும் கூடுவார்களா என்பது கணிக்க இயலாத ஒன்று.

இந்த நேரத்தில் சில தெளிவான அறிவிப்புகளே மேற்குறிப்பிட்டவர்களை திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்பது. புலிகள் அமைப்பு என்பது தமிழீழ மக்களின் விடுதலைக்காகவே அன்றி ஆட்சி செய்யும் நோக்கத்துக்கு அல்ல. இதுவரை இரத்தம் சிந்திய ஒவ்வொரு தமிழ் வீரனும் தன்னுடைய இரத்தத்தில் சுதந்திர ஈழம் மலரும் என்றே நம்பினான். இப்போது இருக்கும் ஒவ்வொரு வீரனும் நம்புகின்றான்.

சுதந்திர தமிழீழம் கிடைக்கும் பட்சத்தில், ஆயுதங்களை கைவிட்டு, நாட்டில் சாதாரண குடிமகனாக மாறி விடத்தயாராக இருக்க வேண்டும். சில காலம் அமைதியை விரும்பும் வேற்று நாட்டு படைகளின் கண்காணிப்பில் இலங்கை மற்றும் ஈழம் இருக்க ஒத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உலக நாடுகளை இந்த பிரச்சினையின் பக்கம் இழுக்கலாம். இந்தியாவிலும் புலியெதிர்ப்பு என்பது குறையத் தொடங்கும்.

அதே போல் முஸ்லிம்கள், மற்றும் மலையக மக்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்றும், சுதந்திர ஈழத்தின் தலைமை என்பது அனைத்து தரப்பு மக்களும் இணைந்து தேர்ந்தெடுக்கும் ஒரு தலைமை தான் என்று அறிவிப்பதன் மூலம் அனைத்து ஈழ மக்களையும் ஒன்றிணைக்க இயலும். இது போன்ற அரசியல் சார் முன்னெடுப்பு நடவடிக்கைகள் மூலம் ஈழ மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.

இதை புலித் தலைவர் பிரபாகரனே அறிவிப்பு செய்வதன் மூலம் நம்பிக்கை பெருகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. புலிகள் மீது இருந்த கசப்பு கிழக்கு பகுதி மக்களிடம் வெகுவாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிள்ளையானும், கருணாவும் இன்னும் உயிருடன் இருப்பது இந்த சமாதான போக்கின் நம்பிக்கையை மேலும் மெருகேற்றியுள்ளது.

மனிதர்கள் அனைவரும் ஒருநாள் மரணித்தை சுகித்தே தீர வேண்டும். இந்த காரணத்தினாலேயே தமது உயிரையும் மதிக்காமல் தாய் நாட்டுக்கு உயிரைத் தியாகம் செய்கின்றனர். அதனால் தான் கழுத்தில் சயனைடு குப்பியைத் தொங்க விடுகின்றோம். உயிரையே மயிராக மதிக்கும் போது பதவியும், தலைமையும் சுதந்திர தமிழீழத்திற்கு முன் துச்சம் என காட்ட வேண்டும்.

தமிழர்களின் உணர்வு சரியான விதத்தில் பயன்படுத்தப்பட்டு, அது இந்தியாவின் அரசியல் தலைமையை நெருக்கி, பல தலைமுறைகளாக நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் ஈழ தமிழர்களின் வாழ்வில் ஒளி துலங்க வைக்குமா? அல்லது உணர்வு திசை திருப்பப்பட்டு குழாயடிச்சண்டை போல் தொண்டை வற்றியதும் நீர்த்துப் போய் விடுமா? காலம் தான் பதில் சொல்லும். காத்திருக்கின்றோம்.

சிங்களத்தீவினிற்கோற் பாலம் அமைப்போம் என்ற முண்டாசு கவிஞனின் கனவு நிறைவேறும் நாளுக்காக காத்திருக்கும்

தமிழ் பிரியன்.

தீபாவளி கலகலப்போடு ஒரு "சுப முடிவுச்" செய்தியை அரங்கேற்றி விவகாரத்தை மூடிவிடுவது தான் திட்டம் போல் உள்ளது. அதற்காகவே சந்திப்புகளிற்கான திகதிகளும் தெரிவு செய்யப்பட்டிருக்கும்.

தீபாவளி கலகலப்பு முடிந்து தமிழ்நாடு ஈழத்தை மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வளவு எளிதாக இந்த முறை தீயை அணைக்க முடியாது குறுக்ஸ்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.