Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் மக்களை விடுத்து ஆயுத வழிபாடு செய்த தவறு

Featured Replies

இது சிவசேகரத்தாரின், தமிழக இதழான புதிய ஜனநாயகத்துக்கென கொடுக்கப்பட்ட பேட்டி. தன் கடும் புலியெதிர்ப்பினை மார்க்சிய கோட்பாட்டுக்களுக்குள்ளும், மார்க்சிய புனைவுகளினூடும் மறைத்து கொள்ள முயன்று, அதில் தோல்வி கண்ட தமிழ் புத்திசீவித்தனத்தின் ஒரு பேட்டி

சிவசேகரம் மீது வைத்திருந்த நல்ல அபிப்பிராயம் அனைத்தும், இந்த புலியெதிர்ப்புப் பேட்டியால் இல்லாமல் போய்விட்டது. பேராசிரியர் என்பதற்கு அப்பால், சிறந்த கவிஞர், சமூக ஆய்வாலார் என்பதால் அவரால் சிறந்த விதத்தில் அலசியிருக்க முடியும். ஆனால் கடும் புலியெதிர்ப்பு அவரின் புலமையை அழித்துவிட்டது. சிங்கள பேரினவாதத்தின் தமிழ் மக்களின் மீதான அடக்குமுறையின் எதிர்வினை தான் புலிகள் என்பதனை ஏற்காமல், எந்தவிதமான மறுவிவாதமும் இன்றி புலிகளிகளை பாசிச இயக்கமாகவும், பயங்கரவாத இயக்கமாகவும் எவ்வாறு அரசும் ஏகாதிபத்தியங்களும் புனைகின்றனவோ அவ்வாறே மீண்டும் மீண்டும் புனைய முனைகின்றார். தமிழ் புத்திசீவிகள் என்று தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் அனைத்தும், மக்களினது பொது அபிப்பிராயத்திற்கு எதிராக கற்பனைவாத உலகில் வாழ்ந்து கொண்டு போராட்டத்திற்கு எதிரான இடத்தில் தம்மை எப்பவுமே நிலைநிறுத்தி வைப்பர். அந்த போலிக்கூட்டத்தின் இன்னொரு அதி மேதாவியின் பேட்டி இது.

இதற்கான காத்திரமான எதிர்வினையாக, புலிகளின் வளர்ச்சியையும் தோல்வியையும் பன்முகப்பரப்பில் வைத்து அலசுக்கூடியவர்களின ஆற்றவேண்டும். அப்படி ஆற்றக்கூடிய எத்தனையோ பேரிருந்தும் மெளனமாக இருப்பதுதான் சிவசேகரம் போன்றோருக்கு வாய்ப்பான சூழலைத் தோற்றுவித்துள்ளது

தமிழக இதழான புதிய ஜனநாயகத்துக்கு இவர் வழங்கிய பேட்டியினை குளோபல்தமிழ்நியூஸ் இணையதளம் மீள தட்டச்சு செய்து வெளியிட்டுள்ளது.

இனி அந்தப் பேட்டி....

======================================================================

இலங்கையைச் சேர்ந்த மார்க்ஸிய இலக்கிய விமர்சகரான சிவசேகரம் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் புதியஜனநாயகம் இதழுக்கு வழங்கிய நேர்காணல் இது, இலங்கையைசை சேர்ந்த புதிய ஜனநாயகக்கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டு வரும் சிவசேகரம் விடுதலைப் புலிகளின் தோல்வி, இலங்கைத் தமிழ் மக்களின் இன்றைய நிலைமை, அதன் எதிர்காலம் குறித்து இதில் பேசியிருக்கிறார்.

புதியஜனநாயகம்: வான்படை வைத்திருக்கும் அளவுக்கு வலிமையான இராணுவ அமைப்பாகக் கட்டமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போது ஏறத்தாழ ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டமும் மாபெரும் பின்னடைவுக்குள்ளாகி விட்டது. இதற்கான புற மற்றும் அகக் காரணங்கள் என்ன?

சிவசேகரம்: மூன்று சிறிய விமானங்கள் வைத்திருந்தது பெரிய விசயம் தான். ஆனாலும் இதை வைத்தே அதை வான்படை என்று சொல்ல இயலாது. இதைவிட வலிமையான விமானப்படை இலங்கை அரசிடம் இருந்தது. மற்றப்படி வலிமையான கடற்படை இன்னபிற ஆயுதங்கள் புலிகளிடம் இருந்தது உண்மை தான். இப்படி இந்த ஆயுத வலிமையை நம்பியதே புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணம். ஆரம்பத்தில் மக்களின் பேச்சைக் கொஞ்சம் கேட்டவர்கள் ஆயுத வலிமை வந்த பிறகு மக்களின் பேச்சைக் கேட்பதில்லை. இது புலிகளுக்கு மட்டுமல்ல, ஆரம்பத்தில் இருந்து எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.

மக்களை விடுத்து ஆயுத வழிபாடு செய்த இந்தத் தவறு தமிழ் தேசியத்தின் முக்கியமான பலவீனமாக இருந்தது. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் எனப் புலிகள் உத்தரவிட்ட போது அதற்கு மக்கள் சம்மதம் இல்லாமலேயே அமுல்படுத்தினார்கள். தற்போது கிளிநொச்சியிலும் இதேதான் நடந்தது. இப்படி விடுதலைப் போராட்டத்தின் எந்த அம்சத்திலும் மக்களின் பங்களிப்பு இல்லாமலேயே இருந்தது. புலிகள் ஆணையிட்டால் மக்கள் நிதி தர வேண்டும். ஆர்ப்பாட்டங்களுக்கு வர வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பதோ பங்கேற்பதோ செய்ய வேண்டும். எந்தப் பிரச்சினையிலும் மக்களின் கருத்து விருப்பம் கேட்டு நடப்பதில்லை. தாங்கள் ஈழத்தைப் பெற்றுத் தரும் சக்தி எனவும், அதற்கு மக்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதே புலிகளின் செயல்பாடாக இருந்தது. இதனால் மக்களிடமிருந்து போராட்டம் அந்நியப்படத் தொடங்கியது. பிரபாகரன் முடிவெடுத்தால் சரியாக இருக்கும் அவர் என்றைக்குமே தோல்வியடைய மாட்டார் என்பதே புலிகள் மக்களிடம் உருவாக்கிய சிந்தனையாகும்.

புறக்காரணங்களைப் பொறுத்தவரை சீனாவும், இந்தியாவும் ஆயுதங்களை வழங்கியதைக் குறிப்பிடலாம். மேலும் சீனாவின் பெயரைச் சொல்லி இந்தியாவின் பாவத்தைக் கழுவும் போக்கும் இங்கு இருக்கிறது.

கருணாவின் துரோகத்தைப் பொறுத்தவரை அதை ஒரு தனி மனித நிகழ்வாகப் பார்க்க இயலாது. ஏற்கெனவே வடக்கு கிழக்கு குறித்த முரண்பாடுகள் மக்களிடம் நிலவியிருந்தது. யாழ்ப்பாணத்து மக்கள் மட்டக்களப்பு மக்களைக் கீழாகப் பார்க்கும் மனோபாவம் நிலவியது. இன்றைக்கு இது மாறியிருந்தாலும் சாதி ரீதியாகவும் இன்னும் பல அம்சங்களிலும் இது நீடிக்கவே செய்கிறது. இந்த முரண்பாட்டிற்குத் தீர்வுகாணும் வண்ணம் புலிகள் முயலவில்லலை. மாறாக இந்த முரண்பாட்டை வைத்துப் புலிகளை அழிப்பதற்கு இலங்கை இராணுவம் கருணாவை நன்கு பயன்படுத்திக் கொண்டது. கருணா மட்;டும் பிரியவில்லை. அவருடன் ஒரு கூட்டமே விலகிச் சென்றது. இராணுவத்தின் உதவியுடன் கிழக்கில் இருந்த புலித் தலைவர்களை கருணா கும்பல் கொலை செய்தது. மேலும் புலிகளின் போர் உத்திகள், இகசியங்கள் அனைத்தும் கருணா மூலம் சிங்கள் இராணுவத்திற்குச் சென்றன.

எனவே இதனை கருணா என்ற தனிமனிதரை வைத்துப் பார்க்காமல் வடக்கு கிழக்கு முரண்பாட்டின் அடிப்படையிலேயே இந்தத் துரோகத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். புறக்காரணங்கள் எவ்வளவு பாதகமாக இருந்தாலும், அகக் காரணங்களே போரின் முடிவைத் தீர்மானிக்கின்றன. சீனப் புரட்சியில் கூட எதிரி வலிமையாக இருந்த போது செஞ்சேனை பல இடங்களில் பின்வாங்கியது. இது தோல்வி அல்ல: மாறாக தனது சக்திகளைப் பாதுகாத்து எதிரிக்குப் பாதகமான சூழ்நிலையில் தாக்குவது என்ற தந்திரம் தான். புலிகளைப் பொறுத்தவரை எதிரியைக் குறைத்தும் தமது வலிமையைக் கூட்டியும் மதிப்பிட்டார்கள். கிழக்கு மாகாணம் முற்றிலும் வீழ்ந்த பிறகாவது, அவர்கள் தங்களது நிலையைப் புரிந்து கொண்டு தற்காப்பு நிலைக்குப் பின்வாங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்தத் தோல்வியையும் மக்கள் அழிவையும் தவிர்த்திருக்கலாம். புலிகளின் சுத்த இராணுவவாதக் கண்ணோட்டமே இந்த அழிவைத் தேடிக் கொண்டது.

புதியஜனநாயகம்: கிளிநொச்சி வீழ்ந்த பிறகு புலிகள் கெரில்லாப் போர் முறைக்கு மாறியிருந்தால், இத்தனை இழப்புக்கள் ஏற்பட்டிருக்காது எனப் பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆயுதப் போராட்டம் நடாத்தி வந்த புலிகள் இந்த மாற்றுப் போர் உத்திக்கு ஏன் மாறிச் செல்லவில்லை. அவர்கள் எதை நம்பி யாரை நம்பி மரபு வழிப் போரை இறுதிவரை தொடர்ந்து நடாத்தி வந்தார்கள்?

சிவசேகரம்: இதற்கான ஒரு பகுதி பதிலை ஏற்கெனவே கூறியிருக்கிறேன். மரபுவழிப் போரோ இல்லை கெரில்லாப் போரோ அது மக்கள் யுத்தமாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும். மக்களைச் சாராமல் கெரில்லாப் போர் முறைக்கு மாறியிருந்தாலும், புலிகளுக்கு எதிரான சக்திகளால் அவர்கள் காட்டிக் கொடுக்கப்படும் அபாயம் உள்ளது.

மக்கள் போராட்டம் தீவிரமாக நடக்கும் போது தான் கெரில்லா யுத்தமும் நடாத்த முடியும். ஓருவேளை மக்களின் பங்கேற்பு இல்லாமல் இருந்திருந்தாலும், கெரில்லாப் போர் முறைக்கு மாறியிருந்தால் கூட இந்த இழப்புக்களைக் கணிசமாகத் தவிர்த்து இருக்கலாம். கூடவே தமது பாதையைப் புலிகள் சுயவிமர்சனம் செய்து கொண்டு அப்படி மாறியிருந்தால் இந்தப் போரின் போக்கு மாறியிருக்கக் கூடும்.

இப்படி அவர்கள் போர் முறையை மாற்றிக் கொள்ளாததற்கு இன்னொரு காரணம், அவர்கள் மேற்கு நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தங்களுடைய ஆதரவாளர்களின் போராட்டம். தேர்தல் காரணமாக ஒரு கௌரவமான பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த முடியும். அதன் மூலம் புலித்தலைமையைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று தவறாக நம்பியதும் ஆகும். அமெரிக்கப் புதிய அதிபர் ஒபாமாவைக் கூட அவர்கள் நம்பினார்கள். இறுதிக்காலத்தில் நோர்வேயையும் அவர்கள் அளவுக்கதிகமாக நம்பினார்கள். இந்தத் தவறான முடிவுகளாலும் அவர்கள் பெரும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.

புதியஜனநாயகம்: பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்கள் போரிட்டு மரணமடைந்தார்களா? அல்லது சரணடைந்தபின் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்களா? இறுதி நாட்களில போர் முனையில் நடந்துது என்ன?

சிவசேகரம்: அவர்கள் போரிட்டு இறந்ததற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. போரிட்;டு இறந்தவர்கள் எல்லாம் கடைசி இரண்டு வாரத்திற்கு முன்பாகக் கொல்லப்பட்டவர்கள். இறுதி நாட்களில் பலரும் சரணடைந்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள். புலிகள் எதிரியிடம் சிக்காமல் இருப்பதற்கு சயனைட் கடிப்பது வழக்கம். இவர்கள் அப்படியும் சாகவில்லை. பிரபாகரனது உடல் காயங்களைப் பார்க்கும் போது குறிப்பாக அவரது தலை வெட்டப்பட்டதைப் பார்த்தால், இது போர்க்காயம் போலத் தெரியவில்லை. அவர் பிடிபட்டுக் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்றே தெரிகிறது. இதேபோல சரணடையச் சென்ற நடேசனும் அவரது மனைவியுடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

புதியஜனநாயகம்: வை.கோ, நெடுமாறன் போன்ற தமிழினவாதிகள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் எனக் கூறுவதன் பின்னணி என்ன?

சிவசேகரம்: இவர்கள் புலிகளின் முகவர்களாக, குரலாகத் தான் தமிழ்நாட்டில் செயல்படுகிறார்கள். வெளிநாடுகளில் இருக்கும் புலிகளின் ஒரு பிரிவினர் இன்னமும் பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறுவதை இவர்கள் ஏற்கிறார்கள். இதன்மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் புலி ஆதரவு மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அரசியல் இலாபம் கருதி இப்படிப் பிரச்சாரம் செய்கிறார்கள் எனக் கருதுகிறேன்.

பிரபாகரன் உடல் பலகோணங்களில் வெளியிடப்பட்டும் நம்ப முடியாதவர்கள் யார் இருக்க முடியும்? இவர்கள் பிரபாகரன் இறந்ததை அறிவிப்பதற்கு ஏன் அஞ்சுகிறார்கள். வெளிநாடுகளில் புலிகள் திரட்டியிருக்கும் கோடிக்கணக்கான டொலர் பணம் இப்போது பிரபாகரன் உயிரோடு உள்ளதாகக் கூறும் பிரிவினரிடம் உள்ளது. பிரபாகரன் இறந்து விட்டார் என்று சொன்னால், இந்தப் பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என மக்கள் கேட்பார்கள். அதைத் தவிர்க்கவே இவர்கள் பிரபாகரன் இறந்ததை மறுக்கிறார்கள். பிரபாகரன் மீண்டும் வரும் போது போர் செய்வதற்கு இந்தப் பணம் தேவைப்படும் என்று சொல்லலாமல்லவா? அரசியலுக்கு அப்பாற்பட்டு இப்படியும் ஒரு காரணம் உள்ளது. இதனால் இறந்து போன பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட இவர்கள் தடுக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

புதியஜனநாயகம்: ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் சந்தித்திருக்கும் இப்பின்னடைவு பற்றி ஈழத்தில் வாழும் தமிழர்களும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும் ஒரேமாதிரியான கருத்தினைக் கொண்டுள்ளார்களா?

சிவசேகரம்: இல்லை என்று தான் நினைக்கிறேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தனி ஈழம் என்ற கருத்திற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை சுயநிர்ணயத்திற்குக் கொடுக்கவில்லை. சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் அவர்கள் சமஷ்டி என்று பேசியிருந்தாலும் அடிப்படையில் தனிஈழம் என்ற கண்ணோட்டத்தில் தான் சிந்தித்து வந்தார்கள். இலங்கையைப் பொறுத்தவரை சுயநிர்ணயம் பற்றிய பேச்சுக் கூடுதலாக இருந்து வந்தது. குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்கும் மக்கள் மத்தியில் தனி ஈழம் குறித்த கருத்து வலுவாக இருந்தது என நான் நம்ப மாட்டேன். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை என்பதன் பொருள் தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு சுயாட்சி அதிகாரம் என்பதைத் தெரிந்து வைத்திருந்தார்கள். இது தான் அவர்களுடைய யதார்த்தமாக இருந்தது. இரண்டு பிரிவினருக்கும் இந்தப் போரின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது.

புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் அவர்கள் எதிர்பார்த்திருந்த ஈழம் தோல்வியடைந்து விட்டபடியால் அவர்களுடைய சிந்தனை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதாக இருந்தது. ஈழத்தில் இருந்த மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினை வேறு. அவர்களுக்கு அடிப்படை மனித உரிமை, வாழும் உரிமை, அரசியல் உரிமை இவையெல்லாம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இதை வெளிப்படுத்துவதற்கான ஊடகச் சுதந்திரம் கூட இல்லை. புலம் பெயர்ந்தவர்கள் ஒரு கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள். எடுத்துக்காட்டாக சமாதானப் பேச்சுவார்த்தையின் போது புலிகள் சமஷ்டி அதிகாரத்திற்கு உடன்பட்டார்கள் என்றதும் ஈழத்திலும் மக்கள் அதனை ஏற்றார்கள். ஆனால் புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு இருந்தது.

புதியஜனநாயகம்: நாடு கடந்த தமிழீழம் என்றெல்லாம் அறிவிக்கப்படும் சூழ்நிலையில், புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தமிழ் தேசியவாதத்தினைக் கட்டியெழுப்பும் வாய்ப்புக்கள் உள்ளனவா?

சிவசேகரம்: முன்பு சொன்னதைப் போல பிரபாகரன் இறந்து விட்டார் இறக்கவில்லை என்று இறந்த கட்சி இறவாத கட்சி என்று இரு பிரிவுகளாக புலம் பெயர்ந்த ஆதரவாளர்களிடம் பிளவு உள்ளது. இதில் இறந்து விட்டார் என்ற பிரிவு தனது அரசியல் சுயலாபத்திற்காக இந்த நாடு கடந்த ஈழத்தை அறிவித்திருக்கிறது என்று தான் நான் பார்க்கிறேன். இப்படி ஒரு முன்மாதிரி வேறு எந்த விடுதலை இயக்கத்தாலோ அல்லது ஆக்கிரமிப்புக்குட்பட்ட நாடோ செய்ததில்லை. 1970ஆம் ஆண்டு கம்போடியாவில் ஒரு இராணுவப் புரட்சி மூலம் சிகாணுக் ஆட்சி பறிக்கப்படுகிறது. அதையடுத்து அவர் சீனாவில் தனது நாடு கடந்த அரசை அறிவிக்கிறார். அப்போது கம்போடியாவில் அவருக்கென்று விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் இருந்தன. ஆனால் இலங்கையில் அப்படி ஒரு சதுர அங்குல நிலம் கூட இல்லாமல் புலம் பெயர்ந்தவர்கள் அதுவும் மேலை நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் இப்படி அறிவிப்பதை நான் ஒரு கேலிக் கூத்தாகத் தான் பார்க்கிறேன். இதனை எந்த முக்கியத்துவமும் இல்லாத அரசாங்கங்கள் கூட அங்கீகரிக்காது என்பதே என் கருத்து. மேலும் தற்போது கே.பி. கைது செய்யப்பட்ட பிறகு இதன் நம்பகத் தன்மை கேள்விக்குறியாக இருக்கிறது. இப்படிப்பட்ட கருத்து புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள படித்தவர்கள், வழக்கறிஞர்கள், செல்வந்தர்கள் ஊடாகப் பரப்பப்படுகிறது. இங்கே வைகோ, நெடுமாறன் ஆடும் நாடகத்தைப் போன்றே இதுவும் ஒரு நாடகமாகத் தான் எனக்குத் தெரிகிறது.

புதியஜனநாயகம்: மலையகத் தமிழர், முஸ்லீம்கள், சிங்கள மக்கள் ஆகியோர் 25 ஆண்டு கால ஆயுதப் போராட்டத்தையும், அதன் முடிவையும் எப்படிப் பார்க்கிறார்கள்?

சிவசேகரம்: மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரை புலிகளின் போராட்டத்தோடு பெரிய முரண்பாடு இல்லை. பொதுவில் இந்தப் பேராட்டத்தை அனுதாபத்தோடு தான் பார்த்தார்கள். அந்த அளவில் இந்தத் தோல்வி அவர்களிடம் ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.

தென்னிலங்கையில் வாழும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் புலிகள் போராடுவது தமக்குப் பாதுகாப்பானது என்றே கருதினார்கள். தற்போது புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு சிங்களப் பேரினவாதத்தால் தமக்கு அபாயம் ஏற்படலாம் என அஞ்சுகிறார்கள். வடக்கு கிழக்கு முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் புலிகள் மற்றும் ஏனைய விடுதலை இயக்கங்களின் அராஜகங்களால் பாதிக்கப்பட்டவர்கள். பள்ளிவாசல் படுகொலை, கிராமங்களில் படுகொலை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றம் எனப் பல விசயங்களைச் சொல்லலாம். இவர்கள் புலிகள் தோற்றது நல்லது என்றே நினைக்கக் கூடும். ஆனால் சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் இது தமிழ் தேசிய இனத்தின் மீதான சிங்களப் பேரினவாதத்தின் வெற்றி என்று அவர்களில் சிலர் உணர்கிறார்கள். அப்படிச் சில தலைவர்கள் பேசவும் செய்கிறார்கள். அவர்களில் சந்தர்ப்பவாதிகளும் உண்டு.

மலையகம், முஸ்லிம் மற்றும் வடக்கு கிழக்குக் கட்சிகளை அரசாங்கம் தனது நோக்கத்திற்காகப் பிளப்பதும், பேரம் பேசுவதும் கூட நடக்கிறது. சிங்கள மக்களைப் பொறுத்தவரை இந்தப் போர் ஒரு கௌரவப் பிரச்சினை. இதுவரை தங்கள் மீது செய்யப்பட்ட அவமானங்கள் தற்போது கழுவப்பட்டதாக அவர்கள் உணர்கிறார்கள். தேசியவாதத்தின் தவிர்க்க முடியாத விளைவு இது. ராஜபக்சவும் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார். தமிழ் மக்கள் மீது தாங்கள் வெற்றி பெற்றதாகவும் அவர்கள் கருதுகிறார்கள். இதைவைத்து அரசாங்கம் பல அடக்குமுறைச்சட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. இறுதியில் இந்தப் போக்கு சிங்கள மக்களுக்கே எதிராக வரும். அப்போது சிங்கள மக்களும் இந்த அரசின் பாசிசப் போக்கை உணரக் கூடும். சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் பிரச்சினையைப் பேசினாலே அவர்களைச் சிங்களப் புலி என அவதூறு செய்யும் வழக்கம் இருந்தாலும், ஒரு சிலர் அப்படி வேலை செய்கின்றனர். அதனால் சிறையும் சென்றிருக்கின்றனர். தற்போது தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சி கூட சிங்களப் பத்திரிகையாளரால் தான் வெளியிடப்பட்டது. இத்தகைய சக்திகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால் தமிழ் தேசிய இனவாதத் தலைவர்கள் இப்படிப்பட்ட சக்திகளைக் கண்டு கொள்வது கிடையாது.

புதியஜனநாயகம்: சிங்கள மக்கள் ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை ஏற்றுக் கொண்டதற்கு சிங்களப் பேரினவாத மனோபாவத்தைக் காரணமாகக் கூறலாம். ஆனால் சிங்கள மக்கள், சிங்கள இராணுவத்தால் பத்தாயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கூட எதிர்த்துக் கலகத்தில் இறங்கவில்லையே ஏன்?

சிவசேகரம்: இந்த இனப்படுகொலையைச் சிங்கள மக்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பதிலே எனக்கு ஐயம் இருக்கிறது. ஏனென்றால் பெரும்பாலான சிங்கள மக்களுக்கு இப்படி ஒரு இனப்படுகொலை நடந்ததே தெரியாது. இறுதி நாளில் 20000 பேர் கொல்லப்பட்டதை மறுத்துத் தான் சிங்கள ஊடகங்கள் எழுதின. ஆனால் இந்த அரசாங்கம் சிங்களப் பேரினவாதப் பிரச்சாரத்தைச் செய்வதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. முள்கம்பி முகாமில் தமிழ் மக்களை வைத்திருப்பதற்கு கண்ணிவெடி தான் காரணம் என்ற அரசின் பிரச்சாரத்தைக் கூட அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இதனாலேயே சிங்கள மக்கள் தமிழ் மக்களை வெறுக்கிறார்கள் என்று சொல்ல இயலாது என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் கொழும்பில் இரு பிரிவு மக்களும் சேர்ந்து வாழ முடியாது. அந்த நிலை வரவில்லை.

ஆனால் சிங்கள மக்கள் பேரினப் பெருமிதத்தில் இருக்கிறார்கள் என்னும் அதேசமயம் அது இனவெறுப்பாக மாறவில்லை. புலிகள் சிங்கள மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாதம் கூட இந்தப் பெருமித உணர்வுக்குக் காரணமாக இருக்கலாம். சிங்கள மக்கள் புலிகளால் கொல்லப்பட்ட போது எந்தத் தமிழினத் தலைவரும் அதனைக் கண்டிக்கவில்லை என்பதையும் இங்கே பார்க்க வேண்டும். தமிழ் மக்கள் மீதான தாக்குதலைச் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் சக்திகள் சிறுபான்மை என்றாலும் அவை இருக்கத் தான் செய்கின்றன. இவர்களைச் சிங்களப் புலி என அரசு கைது செய்வதும் நடக்கிறது.

சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டது குறித்துப் பார்த்தோமானால், அது மக்களிடையே ஒரு எதிர்ப்பைத் தோற்றுவிக்காததற்குக் காரணம் ஜே.வி.பியின் பயங்கரவாதம். அரசாங்கம் ஜே.வி.பியின் பயங்கரவாதத்தை முறியடித்து விட்டது என்றே மக்கள் பார்த்தார்கள். அந்தக்காலத்தில் ஜே.வி.பி. மிக மோசமாக நடந்து கொண்டது. அப்போது ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள் என்றால் அதில் 25 வீதம் ஜே.வி.பி செய்த கொலைகளாகும். ஜனநாயகவாதிகள். இடதுசாரிகள், இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் தமிழர்களின் உரிமைகளை ஆதரித்தவர்கள் போன்றோரைத் தான் அரசியல் எதிரிகள் என்று ஜே.வி.பி. கொலை செய்தது. கொல்லப்பட்டவர்கள் எல்லாம் அரசு ஆதரவாளர்கள் அல்ல. அரசு நடத்திய கொலைகள் முடிந்த பிறகு இந்தப் பிரச்சினை மனித உரிமை மீறல் என்று மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. அதில் இப்போதைய அதிபர் ராஜபக்சவும் உண்டு.

1994 இல் யு.என்.பி. அரசு கவிழ்ந்தததற்கு இந்தப் படுகொலைகள் ஒரு காரணமாகும். 1971 ஜே.வி.பி கலவரத்தை அரசு ஒடுக்கிய போது குத்துமதிப்பாக பத்தாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். அதைக்கண்டித்து கவிதை, கதை, நாடகம் என இலக்கியத்தில் பரவலாக வெளிப்பட்டது. அந்த நிலை 90களில் இல்லை. அதற்கு அரசியல் கருத்துக்களைப் பேச முடியாது என்ற அச்சநிலையே காரணம். அதையும் மீறி ஒரு சிங்களப் பாடகி அரச கொலைகளைக் கண்டித்துப் பாடியிருக்கிறார்.

புதியஜனநாயகம்: இந்தியாவில் காஷ்மீர், மணிப்பூர், அசாம், நாகலாந்து ஆகிய மாநிலங்களில் விடுதலைப் போராட்டங்கள் பல்வேறு குழுக்களால் நடத்தப்பட்டு வருகின்றன. அத்தேசிய இனமக்கள் ஈழ மக்களின் போராட்டத்தில் இருந்து கற்றுக் கொள்ளக் கூடிய படிப்பினைகள் பற்றிக்; கூற முடியுமா?

சிவசேகரம்: அவர்கள் எல்லோரும் பிரிவினைக்காகத் தான் போராடுகின்றனர் என்று என்னால் சொல்ல இயலாது. ஏதோவொரு சுயநிர்ணய உரிமைக்காகத் தான் போராடுகிறார்கள். நாகலாந்தில் கூட பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயாட்சியை வழங்கினால் இந்தப்பிரிவினை விசயம் ஒரு காலத்தில் இல்லாமல் கூடப் போகலாம். நாகலாந்து பிரிய வேண்டுமா இல்லையா என்பது அம்மக்கள் எடுக்க வேண்டிய முடிவு. பிரிவினைக்காகப் போராடுகிறார்கள் என்பதல்ல பிரச்சினை. அது மக்கள் போராட்டமாக இருக்கிறதா என்பதே முக்கியமானது. மாறாக அது ஆயுதம் ஏந்திய சில குழுக்களின் போராட்டமாக மட்டும் இருந்தால், புலிகளுக்கு நடந்தது தான் அவர்களுக்கும் நடக்கும்.

புதியஜனநாயகம்: நாட்டினை மேலும் தீவிரமாக மறுகாலனியாக்குவதற்கும், அரசினைப் பாசிச மயமாக்குவதற்கும் சிங்கள ஆளும் வர்க்கமும், சிங்களப் பேரினவாத ஓட்டுக்கட்சிகளும் இந்தப் போரையும், தமிழினப்படுகொலைகளையும் எப்படிப் பயன்படுத்தி வருகின்றன?

சிவசேகரம்: இந்தப் போருக்குப் பிறகு இலங்கை அரசுக்கும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவிற்குமிடையே சில முரண்பாடுகள் உள்ளன போலத் தோன்றும். ஏனென்றால் மேலை நாடுகள் சடங்குக்காக மனித உரிமை, தமிழ் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று பேசுகிறார்கள். இந்த விமர்சனங்களை ஏற்றுக் கொண்டால் சிங்களப் பேரினவாத உணர்வு புண்படுமென்பதால் அரசாங்க அதிகாரிகள் மிகவும் திமிரோடு ஐநா சபையோ அமெரிக்காவோ இதில் தலையிடுவதற்கு உரிமை இல்லை என்றெல்லாம் பேசுகிறார்கள். வெளித் தோற்றத்தில் முரண்பாடுகள் இருப்பது போலத் தோன்றினாலும் நடைமுறையில் 180 கோடி டொலர் கடன் கேட்கப்பட்டதற்கு 250 கோடி டொலர் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கிறது. இந்தப் போர் நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ள நிலையில் ஏகாதிபத்தியங்கள் இலங்கையை மேலும் தம் பிடிக்குள் கொண்டு வரும் எல்லா நடவடிக்கைகளையும் செய்து வருகின்றன. அதேநேரம் இலங்கை அரசு புலிகளை அடக்கிவிட்டதோடு நின்று விடாமல் இராணுவத்தை மேலும் பலப்படுத்தப் போகின்றது. புலிகள் இல்லாத நிலையில் இந்த இராணுவம் யாரை எதிர்த்துப் போரிடப் போகிறது? நாளை பாசிச அரசுக்கு எதிராக வரும் எழுச்சியை அடக்கவே இந்த இராணுவம் பயன்படப் போகிறது. இந்த அரசு அரசு எந்திரத்தை மேலும் பலப்படுத்தி வருகிறது. அது ஏகாதிபத்திய நலன்களுக்காகவும் பயன்படப் போகிறது.

புதியஜனநாயகம்: வடக்கில் வசந்தம் கிழக்கின் விடியல் என்ற பெயரில் ராஜபக்ச அரசால் முன்வைக்கப்படும் திட்டங்கள் எந்தவகையில் ஈழத் தமிழரின் நலன்களுக்கு உரிமைகளுக்கு எதிராக உள்ளன?

சிவசேகரம்: எல்லா அரசியற் கட்சிகளையும் சிதைத்து அரசாங்கக் கூட்டணியின் கீழ் கொண்டு வருவதற்காகவே இவை உதவுகின்றன. கிழக்கில் பிள்ளையானும் வடக்கில் டக்ளஸும் அரசாங்கச் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெல்கிறார்கள். இதன் மூலம் இனம், மதம் முதலானவற்றின் பெயரில் எந்தக்கட்சியும் இருப்பதை ஒழிக்கவே இந்த அரசு முயல்கிறது. தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் தங்களது நலனுக்காகக் கட்சி நடத்த முடியாது என்பதே அரசின் நோக்கமாக இருக்கிறது. வடக்கின் வசந்தமோ கிழக்கின் விடியலோ மக்களுக்கு எந்த நலனையும் கொண்டு வரப் போவதில்லை. இவை அரசு எந்திரத்தைப் பலப்படுத்துவதற்குத் தானே ஒழிய மக்களுக்கானதல்ல.

புதியஜனநாயகம் இதழில் வந்த இந்தச் செவ்வி GTN ஆல் தொகுத்து கணனித் தட்டச்சு செய்து மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

(தொடரும்)

மூலத்தின் இணைப்பு: இங்கே அழுத்தவும்

இதை சொல்பவர் ஒரு மாக்சியவாதி என்பது சிரிப்பைதான் வரவளைக்கிறது... இவர்கள் மக்களின் விடுதலையை சுயநிர்ணயத்தின் மூலம் அடைகிறார்களாம்...

எந்த அடிப்படையில் சுய நிர்ணயம்...?? அரசு ஒத்து கொள்ளும் எந்த ஒப்பந்தமும் கிளித்து எறியப்பட மாட்டது என்பதுக்கு யார் உறுதி தருவார்...???

புலிகள் ஆயுதங்களை நம்பியது தவறு என்கிறார்.... சரி... மக்களின் ஆதரவை திரட்ட, விளிப்புணர்வு ஊட்டி வேறு திசையில் பயணிக்க வைக்க வேண்டியது எண்றால் அதை செய்யாமல் இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்...

புலிகள் உக்கிரமாக போராடும் போது அரசுக்கு எதிராக ஒரு கொடியை கூட தூக்க முயலாதவர்கள், மக்கள் ஆதரவு அடித்தளமே இல்லாதவர்கள் தான் இண்று தாங்கள் எல்லாம் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதாக சொல்லி கொள்கிறார்கள்...

பெரும்படையோடு இந்தியர்கள் வந்த போது புலிகளை ஒடுக்க முடியவில்லை... மக்கள் தங்களுக்கு சார்பாக மாற்றவும் முடியவில்லை.. அதுக்கு பதிலாக அடக்கு முறைகளையே அந்த படைகள் கையாண்டு புலிகளின் கொள்கையை நியாய படுத்தியும் இருக்கிறார்கள்... புலிகள் இந்தியர்களை எதிர்த்து சரிதான் என்பது ஒட்டு மொத்த தமிழர்களும் உணரும் வண்ணம் பின்னர் இந்திய படைகள் மிலேச்ச தனமாக நடந்து புலிகளின் தூரநோக்குக்கு சாட்ச்சி சொன்னது...

புலிகள் எதை செய்தார்களோ அவை எல்லாமே தமிழ் மக்களில் விருப்புக்கு அமையவே நடந்தது... ஆனால் மக்களின் பங்களிபுடன் அல்ல, அதுதான் தவறுகளுக்கான காரணம்......

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் எதை செய்தார்களோ அவை எல்லாமே தமிழ் மக்களில் விருப்புக்கு அமையவே நடந்தது... ஆனால் மக்களின் பங்களிபுடன் அல்ல, அதுதான் தவறுகளுக்கான காரணம்......

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஆயுதங்களை நம்பியது தவறு என்கிறார்.... சரி... மக்களின் ஆதரவை திரட்ட, விளிப்புணர்வு ஊட்டி வேறு திசையில் பயணிக்க வைக்க வேண்டியது எண்றால் அதை செய்யாமல் இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்...

அதை செய்யாமல் இவர்கள் இன்றும் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்..

புதியஜனநாயகம்: பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்கள் போரிட்டு மரணமடைந்தார்களா? அல்லது சரணடைந்தபின் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்களா? இறுதி நாட்களில போர் முனையில் நடந்துது என்ன?

சிவசேகரம்: அவர்கள் போரிட்டு இறந்ததற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. போரிட்;டு இறந்தவர்கள் எல்லாம் கடைசி இரண்டு வாரத்திற்கு முன்பாகக் கொல்லப்பட்டவர்கள். இறுதி நாட்களில் பலரும் சரணடைந்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள். புலிகள் எதிரியிடம் சிக்காமல் இருப்பதற்கு சயனைட் கடிப்பது வழக்கம். இவர்கள் அப்படியும் சாகவில்லை. பிரபாகரனது உடல் காயங்களைப் பார்க்கும் போது குறிப்பாக அவரது தலை வெட்டப்பட்டதைப் பார்த்தால்இ இது போர்க்காயம் போலத் தெரியவில்லை. அவர் பிடிபட்டுக் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்றே தெரிகிறது. இதேபோல சரணடையச் சென்ற நடேசனும் அவரது மனைவியுடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அப்ப கடைசி இரண்டு வாரங்களும் இராணுவம் புலிகளோடை கிளித்தட்டு விளையாடிக்கொண்டிருந்ததா?

தங்களுடைய வக்கிரமமான ஆசைகளுக்காக தங்களது மூளைகளைக்கூட இழக்கத் தயாராக இருப்பார்கள் சிலர்.

கடைசி நாட்களில் இருபதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக அனைத்துலக ஊடகங்களே சொல்லும்போது..... இவர்கள்.....

Edited by bara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.