Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் இதயம் உடைத்தாய்...

Featured Replies

bleeding.jpg

அவன் அந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவனுக்கு அங்கு எல்லாமே புதுமையாக இருந்தது. அழகாகவும் இருந்தது. எதையுமே புதிதாக பார்க்கும்போது அப்படித்தான்.. அவன் தன்னுடைய சொந்தபந்தங்கள், நெருங்கிய நண்பர்கள் என எல்லோரையும் பிரிந்தே அந்த வேலைக்காக வந்திருந்தான். அந்தப் பிரிவு அவனுடைய மனதில் ஒரு நிரந்தரமான வெறுமையை உருவாக்கி இருந்தது. இருந்தபோதும் அவன் தானும் தன்னுடைய வேலையுமாக ஒரு குறுகிய வட்டத்தினுள் புதைந்து போனான்.

அவனுடைய வாழ்க்கையில் நிகழ்ந்து விட்டிருந்த இழப்புகள், சோகங்கள், வலிகள் மட்டுமே அவனுக்கு இப்போது துணையாக இருந்தன. சிலவேளைகளில் தான் தன்னுடைய சொந்த ஊரை, குடும்பத்தினரை, நண்பர்களை விட்டு வெகுதூரம் விலகி சென்று விட்டதாக அவன் கற்பனை செய்துகொண்டான். வாழ்க்கையை பற்றிய எந்தவொரு இலக்குகளோ இலட்சியங்களோ இப்போது அவனிடம் இல்லை. நிர்மானுஷ்யமான ஒரு இருண்ட மயான வெளியில் அவனுடைய வாழ்க்கை தொலைந்து போனதாய் அவன் நம்பத்தொடங்கியிருந்தான்.

அவன் தன்னுடைய அலுவலகத்தை நேசித்தான். நேர்த்தியாக, அழகாக பராமரிக்கப்பட்ட அந்தப் புறச்சூழல் அவனைக் கவர்ந்தது. கொஞ்சங்கொஞ்சமாக அவனுக்கு அந்த அலுவலகத்தில் நண்பர்கள் கிடைத்தார்கள். அவனுடைய வாழ்க்கையில் மெதுவாக தென்றல் வீசத்தொடங்கியது. அவன் அந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து அவனுடைய நடவடிக்கைகளை அவதானித்து வந்த அவள் ஒருநாள் மெதுவாக அவனிடம் வந்தாள். இருவரும் மனம்விட்டுப் பேசினார்கள். இருவருக்குள்ளும் ஒரு புரிந்துணர்வு இருந்தது. நாளடைவில் அவர்களுக்கிடையில் ஒரு இதமான நேசம் உருவாகியிருந்தது. அவர்கள் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டிருந்தார்கள். அவள் தன்னுடைய விருப்பங்கள், இரசனைகள், பேராசைகள் பற்றி சொன்னாள். தன்னுடைய காதலை, காதலனைப் பற்றிச் சொன்னாள். அவன் தன்னைப் பற்றிச் சொன்னான். தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்து விட்ட சம்பவங்களை சொன்னான். அவள் கவலைப் பட்டால் அவனுக்கு வலித்தது. அவனை சீண்டினால் அவள் கோபப் பட்டாள்.

கண்டவுடன் பார்வையை சுண்டி இழுக்கும் அழகி இல்லையென்ற போதும், அவளை அவனுக்குப் பிடித்திருந்தது. அழகென்பது பார்க்கும் பார்வையிலேயே உள்ளது. அதற்கு எந்தவொரு அளவுகோலும் கிடையாது. சிலவேளைகளில் புறஅழகு அகஅழகை தின்று விடும். அதுவே இன்னும் சிலவேளைகளில் அகஅழகு புறஅழகை வென்று விடும். அழகை இரசிக்கத் தெரியாத எவரும் இந்த அழகிய பூமியில் வாழத் தகுதி இல்லாதவர்கள் என்பதில் அவனுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. ”இரசிகர்களே இல்லாத பரதம், சங்கீதம், சிற்பம், சித்திரம் என்பவற்றால் என்ன பிரயோஜனம்? உயிரினங்களே இல்லாத வனாந்தரத்தில் வஸந்த காலத்தில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குவதனால் என்ன பிரயோஜனம்? பாலைவனத்தில் பெளர்ணமி இரவில் பூர்ண சந்திரன் பால் நிலவைப் பொழிகிறதே, அதனால் என்ன உபயோகம்?”க‌ல்கி

அவன் தன்னுடைய கவலைகளை மறந்து போனான். தனக்கு முன்னே விரிந்து கிடந்த தடைகளே இல்லாத வாழ்க்கையை இரசித்தான். உலகமே அவனுக்கு வர்ணஜாலங்களை காட்டும் வானவில்லைப் பிழிந்து வைரத்தில் குழைத்து வண்ணமயமாய் செதுக்கிய ஜொலிக்கும் பந்தாய் தெரிந்தது. அவர்களுடைய நட்பு நல்லவிதமாய் போய்க்கொண்டிருந்தது. அவளுடைய காதலனும் அவனுக்கு நல்ல நண்பனாகியிருந்தான்.

காலம் வேகமாய் கடந்து கொண்டிருந்தது. இதனிடையே அவனால் அவளுடைய செய்கைகளில் மாற்றத்தை உணரமுடிந்தது. அவளுடைய பார்வை ஏதோவொரு வகையில் தன்மீது சந்தேகத்துடன் பதிவதாகவே அவன் உணரத்தொடங்கினான். அவளுடைய நடவடிக்கைகள் அதற்கு வலுச்சேர்ப்பதாகவே இருந்தன. அவளுடைய காதலனுடைய மறைமுகமான பேச்சுக்களையும் அவன் அவதானிக்கவே செய்தான். இருந்தபோதும் எதையும் புரிந்து கொண்டதாய் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே அவன் நடந்து கொண்டான். பெண்களிடமுள்ள ஒரு விபரீதமான பழக்கமொன்று, ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று சோதித்துப் பார்ப்பது, அது கணவனானாலும் சரி, காதலனானாலும் சரி, வேறு எவனாயிருந்தாலும் சரி.

இது நாளடைவில் அவர்களிடையே அடிக்கடி சண்டைகளை உருவாக்கியது. அவனைக் கெட்டவனாகக் காட்ட அவள் படாதபாடு பட்டாள். அவளாகவே வலிய வந்து ஏதாவது செய்து விட்டு அவனுடைய மறுசெய்கைகளை அவதானிக்கத் தொடங்கினாள். இதனுடைய பிரதிபலிப்புகளை அவளுடைய காதலனுடைய பேச்சுக்களில் அவன் கண்டுகொண்டான். அவளுடைய நோக்கத்தைப் புரிந்து கொண்ட அவன், இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் எதுவரை என்று பார்த்து விடுவது என்று முடிவெடுத்தான். அவள் விரித்த வலையில் அவன் சிக்கிக்கொண்டதாய் அவள் நம்பும்படி அவன் நடந்து கொண்டான். எது எப்படியிருந்த போதும் அவர்களிடையே இருந்த ஆழமான நேசம் வெறும் வேசமாய் மாறியிருந்தது. அவன் கொஞ்சங்கொஞ்சமாய் உடைந்துபோய் சில்லுச் சில்லாக சிதறத் தொடங்கியிருந்தான்.

நாட்கள் மிகவேகமாய் நகர்ந்து கொண்டிருந்தன. அன்று அலுவலகம் முடிந்தபின் வேறுஒரு நண்பரை பார்க்கச் செல்வதாய் அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். அலுவலகம் முடியும் நேரம் நெருங்கியது. அவர்கள் புறப்பட ஆயத்தமானார்கள். இலேசாக தயாராகி வந்த அவன் அவளை தேடிச் சென்றான். ஓய்வறையில் உடை மாற்றுவதற்கு மாற்றுடையை கையில் எடுத்து விட்ட அவள் அப்படியே அசையாமல் நின்று விட்டாள். அவள் உடை மாற்றித்தான் வரப்போகிறாள் என்பதை எதிர்பார்த்திராத அவன் அவளுடைய மாற்றத்தை கவனிக்கவில்லை. வழமைபோலவே ஆசையுடன் கதைபேசிக் கொண்டிருந்தவன் அவள் ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டதையும் கையில் மாற்றுடை வைத்துக் கொண்டிருப்பதையும் அப்போதுதான் கவனித்தான். அவள் உடைமாற்றப் போகிறாள் என்பது மண்டையில் உறைத்த மறுகணமே அவன் அந்த அறையைவிட்டு வெளியேறி விட்டான்.

இவ்வளவுக்கும் அவன் இருமுறை அவளை அழைத்து விட்டுத்தான் அறைக்குள் நுழைந்தான். அவள் உடைமாற்றப் போகிறாள் என்றால் அறையை பாதி திறந்த நிலையில் விட்டிருக்கக் கூடாது. அதை சாத்திவிட்டிருக்க வேண்டும். இன்னும் அதை தாழிட்டிருக்க வேண்டும். அல்லது அவன் இருமுறை அழைத்தபோது உடைமாற்றப் போகிறேன் என்றோ, இப்போது உள்ளே வராதே என்றோ குரல் கொடுத்திருக்க வேண்டும். இதில் எதையுமே செய்திராத அவள் இன்னொன்றை மட்டும் சரியாகச் செய்தாள். அவள் செய்கையின் விளைவுகளை அன்றிரவே அவளுடைய காதலன் வார்த்தைகளில் அவன் கண்டுகொண்டான். அவை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல் அவனை துடிதுடிக்க வைத்தது. ஆயிரம் சம்மட்டிகள் கொண்டு அறைந்து பூமிக்குள் புதைத்து விட்டதாய் அவன் உணர்ந்தான். அவனுடைய இதயத்தை யாரோ ரோஜா முட்கள் கொண்டு கீறிக்கிழித்து இரத்தம் சொட்டுவதாய் வலியை உணர்ந்தான். விராட ராஜனால் காயப்பட்ட யுதிஷ்டிரனது நெற்றியிலிருந்து சொட்டிய இரத்தத்தை திரெளபதி பொற்கிண்ணத்தில் ஏந்தினாளே, அதுபோல அவனுடைய இதயம் கிழிந்து சொட்டிய இரத்தத்தை ஒரு பித்தளை கிண்ணத்திலாவது ஏந்துவதற்கு யாருமே அங்கிருக்கவில்லை. அவனது மனம் ஊமையாய் அழுதது. சொட்டிய இரத்தத்தில் குழித்த அந்த வெள்ளைரோஜா இதழ்கள் நனைந்து சிவந்து சிகப்புரோஜா ஆகியது, அவனுடைய அன்பை, பாசத்தை, நேசத்தை பறை சாற்றுவதுபோல...

Edited by தமிழ்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

அழகான் எழுத்து நடை. கதை பகுதியில் பதிவிடுங்கள். மேலும் பல பதிவுகள தரவும்,

அடிக்கடி பதிவிடவும் என் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

அழகான் எழுத்து நடை. கதை பகுதியில் பதிவிடுங்கள்.

ந‌ன்றி.. த‌வ‌றுத‌லாக‌ இங்கே ப‌திவிட‌ப்ப‌ட்டுவிட்ட‌து. ப‌திவை அழிக்க‌வோ, வேறு ப‌குதிக்கு மாற்ற‌வோ முடிய‌வில்லை. ஏதாவ‌து வ‌ழியிருந்தால் தெரிய‌ப்ப‌டுத்துங்க‌ள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.